சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 11, 2016

யோகியின் அருளும், தத்துவமும்!


மகாசக்தி மனிதர்கள் - 55

ருணாச்சலம் சில ஊர்களைக் கடந்து ராஜமன்னார்குடியை அடைந்தார். அங்கு ராஜகோபால சுவாமி சன்னிதியில் அமர்ந்து அவர் தியானத்தில் ஆழ்ந்து விட கீழ்ஜாதிக்காரன் அந்தக் கோயிலில் அமர்வது தவறு என்று சொல்லிய அர்ச்சகர் அவரை அங்கிருந்து போய் விடச்சொன்னார்.

எழுந்த அருணாச்சலம் “நீயும் தீட்டு உடையவன். கோபாலன் திருமேனியைத் தீண்டும் தகுதி உனக்கில்லைஎன்று சொல்லி விட்டு அங்கிருந்து போய் விட்டார். அவர் போன சிறிது நேரத்தில் அர்ச்சகரிடம் ஓடி வந்து ஒருவன் “உங்கள் மனைவி குளிக்கப் போன குளத்தில் தவறி விழுந்து இறந்து விட்டார்என்ற தகவலைத் தெரிவித்தான். அர்ச்சகர் மனம் பதைத்து தன் வீடு நோக்கி விரைந்தார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு பேராச்சரியமாக இருந்தது. சற்று முன்பே தீட்டு பற்றித் தெரிவித்துப் போனவர் சாதாரணமானவராக இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அவர்கள் வெளியே வந்து தேடிய போது அருணாச்சலம் அந்த ஊரை விட்டே போயிருந்தார்.

அவர் ஒரு முறை நீடாமங்கலத்திற்குச் சென்று அங்கே ஆற்றங்கரையில் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவன் ஆற்றில் குளிக்க வந்திருந்தான். பெரிய நாகம் ஒன்று படம் எடுத்து சீறிக்கொண்டு அவனை நோக்கி வர அவன் பயந்து போய் வேகமாக ஓடி அருணாச்சலம் அருகே வந்து விழுந்தான்.  கண் விழித்துப் பார்த்த அவர் சீறி வரும் நாகத்தைப் பார்த்துக் கையமர்த்தி “நல்ல பிள்ளையைத் தீண்டாதேஎன்று சொல்ல நாகம் அப்படியே ஒரு கணம் நின்று பின் அமைதியாகிப் பணிந்து திரும்பிப் போய் விட்டது.   

 இப்படி சென்ற சில இடங்களில் ஏதாவது ஒரு அற்புதச் செயல் புரிந்த அருணாச்சலம் மற்ற இடங்களில் எதுவுமே பேசாமல், எந்த யோக சக்தியையும் வெளிப்படுத்தாமலும் இருப்பதுண்டு. பெரும்பாலான நேரங்களில் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் அவர், விழித்திருக்கும் சில நேரங்களில் சாந்தமே வடிவமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுண்டு. பசி ஏற்பட்டால் யாரிடமும் பிட்சை கூடக் கேட்காமல் எங்காவது வெளியே கொட்டப்பட்டிருக்கும் உணவை எடுத்து உண்டு விட்டு மறுபடி அமைதியாக அமர்ந்திருப்பார். பல இடங்களில் அவரை மக்கள் பைத்தியமாகவே நினைத்தார்கள்.

அவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்றழைக்கப்பட ஆரம்பித்தது ஒரு சம்பவத்திற்குப் பின்பு தான். அந்தச் சம்பவத்தைப் பார்ப்போம்.

சித்தூர் ஜில்லாவில் சோமநாத முதலியார் என்ற பிரபல செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலி மட்டுமல்லாமல், வெறும் கஞ்சியைத் தவிர அவர் வயிறு வேறெதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. உப்பு, புளி, காரம் எல்லாமே அவர் வயிற்றுக்கு எதிரிகளாய் இருந்தன.  செல்வந்தர் என்பதால் அவருக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல வைத்தியர்களின் பலவிதமான வைத்திய முறைகளையும், மருந்துக்களையும் பயன்படுத்திப் பார்க்க முடிந்தது. ஆனால் எந்த வைத்தியத்திலும், மருந்திலும் அவருடைய கடும் வயிற்று வலி குணமாகவில்லை. மாறாக நாளுக்கு நாள் வலி கூடிக் கொண்டே போனது.

இனி வைத்தியத்தை நம்பிப் பலனில்லை, இறைவனே கதி என்ற மனநிலைக்கு வந்த சோமநாத முதலியார் சிதம்பரத்திற்குச் சென்றார். தில்லை நாதனே ஒரு வழி காட்ட வேண்டும் என்று சிதம்பரம் திருக்கோயிலில் இரண்டு நாட்கள் தங்கி விரதம் இருந்தார். அங்கும் நோய் அதிகமானதே தவிர குறையவில்லை. இனி இந்த வயிற்று வலியோடு வாழ முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. நீயே கதி என்று இறைவனிடமே வந்து அடைக்கலம் புகுந்த பிறகும் இறைவனே சோதித்தால் இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைத்த அவர் அந்தக் கோயிலிலேயே உயிரை விட முடிவு செய்தார்.

கோயிலிற்கு வெளியே சென்று நன்றாகத் தீட்டிய கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு இரவு நேரப் பூஜையின் போது மறுபடி நுழைந்த அவர் பூஜை முடிந்த பின் ஒரு தூண் மறைவில் ஒளிந்து கொண்டார். பூஜை முடிந்து அனைவரும் போய், அர்ச்சகரும் கோயிலைப் பூட்டிக் கொண்டு கிளம்பியவுடன் நடராஜர் சன்னிதிக்கு வந்தார். ஐயனே, நான் படும் துன்பங்களைக் கண்டும் அதைப் போக்க அருள் புரியாமல் இருக்க எனக்குக் காரணம் விளங்கவில்லை. நீயே என்னைக் கைவிட்ட பிறகு நான் இனி எங்கு போக முடியும்? என்னால் இந்த வலியுடன் வாழ முடியவில்லை. என்னை உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்என்று வேண்டி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொள்ளத் துணிந்தார்.

அந்த நேரத்தில் இறைவனின் சன்னிதியிலிருந்து அசரீரி கேட்டது. “அன்பனே. உன் நோய்க்கு நிவர்த்தி இங்கு கிடைக்காது. நீ திருவாரூர் சென்று தட்சிணாமூர்த்தியைப் பிரார்த்தித்தால் உன் நோய் அங்கு குணமாகும். அதனால் நீ உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்

மெய்சிலிர்த்துப் போன சோமநாத முதலியார் அதிகாலை கோயில் திறக்கப்படும் வரை காத்திருந்து, கோயில் திறந்த பின்னர் யாரும் அறியாமல் வெளியேறி திருவாரூர் விரைந்தார். திருவாரூரில் தியாகராஜப் பெருமான் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் ஆராதனை செய்து அர்த்த ஜாமம் வரை பிரார்த்தனை செய்தபடி இருந்தார். ஆனால் அப்போதும் அவர் வயிற்று வலி குறையவில்லை. அவர் மனம் உடைந்து போன போது அங்கும் அசரீரி கேட்டது. “நாம் சொன்ன தட்சிணாமூர்த்தி இதுவல்ல. இந்த ஊரில் நிர்வாணமாய் ஒரு துறவி திரிகிறான். அவனிடம் செல்.

உடனே ஊரில் நிர்வாணமாகத் திரியும் துறவியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்து கடைசியில் ஒரு வீட்டு வாசலில் கிடந்த இலையில் எஞ்சி இருந்த உணவை சில நாய்கள் சூழ சாப்பிட்டுக் கொண்டிருந்த அருணாச்சலத்தை சோமநாத முதலியார் கண்டார். அவரே தான் தேடி வந்த மகான் என்பதை உள்ளுணர்வால் அறிந்த சோமநாத முதலியார் அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.

அருணாச்சலம் அவரைப் பார்த்தவுடன் தன் கையில் வைத்திருந்த அன்னத்தை எடுத்து அவர் வாயில் ஊட்டி “உன்னை நடேசன் அனுப்பினானாஎன்று கேட்டார். தில்லை அம்பல நடராஜர் அனுப்பி வந்ததை இந்த மகான் அறிந்து வைத்திருக்கிறாரே என்று எண்ணி வியந்தவராய், ஊட்டப்பட்ட அன்னத்தை விழுங்கிய அந்தக் கணமே அவருடைய நெடுநாள் நோய் இருந்த அறிகுறியே இல்லாமல் அவரை விட்டு விலகியது. அதன் பின் என்ன சாப்பிட்டாலும் அவர் குடல் ஏற்றுக் கொண்டது. ஜீரணசக்தி முழுமையாகத் திரும்பக் கிடைத்தது. முற்றிலும் நோய் குணமான பின்னும் அருணாச்சலத்தை விட்டு விலக மனமில்லாத பக்தராய் மாறி விட்ட சோமநாத முதலியார், அசரீரியாய் கேட்ட பெயரான “தட்சிணாமூர்த்தி சுவாமிகள்என்றே அருணாச்சலத்தை அழைத்து வணங்க ஆரம்பித்தார். சுவாமிகள் உண்டு மிச்சம் வைத்த உணவையே உட்கொண்டு வாழ ஆரம்பித்தார். போவோர், வருவோரிடம் எல்லாம் தன் அனுபவத்தைச் சொல்லி பிரபலப்படுத்தியதால் மற்றவர்களும் “தட்சிணாமூர்த்தி சுவாமிகள்என்றே அருணாச்சலத்தை அழைக்க ஆரம்பித்தார்கள்.

குறைவாகப் பேசினாலும் அவ்வப்போது தத்துவார்த்தமான பேருண்மைகளை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சொல்லி உணர்த்துவதுண்டு என்பதை பைத்தியம் குணமடைந்து உபதேசம் வேண்டி நின்ற பெண்ணிடம் உபதேசித்த சம்பவத்தில் பார்த்தோம். சுவாமிகள் காரைக்காலுக்குச் சென்றிருந்த போது மஸ்தான் சாகிப் என்ற ஒரு முகமதியப் பெரியவர் கேட்ட கேள்விக்கும் அப்படியே பொருள் பொதிந்த பதில் அளித்தார்.

மஸ்தான் சாகிப் சுவாமிகளிடம் கேட்டார். “நீயும் நானும் எப்படி இருந்தால் எங்கும் நிறைந்த ஒரு பொருளாக இருக்கலாம்?

நீ, நான், அது, இது என்னும் சுட்டு இறந்து நின்றால் எங்கும் நிறைந்த பொருளாக இருக்கலாம் என்று பதில் அளித்து விட்டு சுவாமிகள் அந்த ஊரை விட்டுச் சென்றார்.

எல்லாரும், எல்லாமும் பரம்பொருளின் அங்கமே. நீ, நான், அது, இது என்று நாம் தான் வேறுபடுத்திப் பார்க்கிறோம். அப்படி வேறுபடுத்தி சுட்டிக் காட்டுவது முடிந்து போகுமானால், பிரித்துப் பார்க்கும் மனோபாவம் இல்லாமல் போகுமானால், பின் எங்கும் நிறைந்திருப்பதாய் நாம் காண்பது அந்தப் பரம் பொருளையே அல்லவா?

என்னவோர் உயர்ந்த சிந்தனை!

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 4.9.2015

  

3 comments: