சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 12, 2015

இறந்த மூன்று நாளில் உயிர்த்தெழுந்த பாபா!

மகாசக்தி மனிதர்கள் - 39 


பொதுவாக மக்கள் விரும்பும் இந்த உலக சவுகரியங்களையும், செல்வத்தையும், படாடோபத்தையும் ஷிரடி சாய்பாபா கடைசி வரை விரும்பவில்லை. துறவிகளும் சாதுக்களும் தங்கள் வாழ்க்கையில் பகட்டும், படாடோபமும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அவர் கூறுவார். துவாரகமயி என்று இந்துப் பெயரால் அழைக்கப்பட்டு அவர் கடைசி வரை வாழ்ந்த மசூதியில் ஆரம்ப நாட்களில் ஒரு நாற்காலியில் கூட அவர் அமர்ந்ததில்லை, கட்டிலில் கூட அவர் படுத்ததில்லை. சாக்குத்துணியில் மட்டுமே அமர்ந்தும் படுத்தும் வசித்த அந்த மகானை அப்படியே தொடர அவரது பக்தர்கள் அனுமதிக்கவில்லை.


கடவுளாகவே அவரை நினைக்க ஆரம்பித்து விட்ட அவரது பக்தர்கள் அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தார்கள், தலையில் கிரீடம் வைத்தார்கள். தங்களுக்குப் பிடித்தபடியெல்லாம் தங்கள் பாபாவைப் பார்க்க ஆசைப்பட்ட பக்தர்களின் செய்கைகள் அவரைப் போன்ற ஒரு சன்னியாசிக்குப் பெரும் தொந்தரவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் தன் மீது திணிக்கப்பட்ட படாடோபத்தை எல்லாம் அவர் தன் பக்தர்களுக்காக சகித்துக் கொண்டார்.


இந்த நேரத்தில் இதற்குச் சில வருடங்கள் முந்தைய அவர் அனுபவங்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது பாபாவின் உயர்விற்கு நல்ல எடுத்துக்காட்டை அளிக்கும். ஷிரடியில் ஒரு பைத்தியக்கார பக்கிரி என்று அவர் நம்பப்பட்ட காலத்தில் சில சிறுவர்கள் அவர் மீது கற்கள் வீசி அலைக்கழித்தது உண்டு.  அந்தச் சிறுவர்களிடம் கூட அவர் கடுமையாக நடந்து கொண்டது இல்லை. பெரியவர்கள் பலர் அவரை எள்ளி நகையாடியதுண்டு. அவர்கள் மீதும் அவர் சினம் கொண்டதில்லை. அனைவர் மீதும் அன்பு செலுத்தி நல்லதே செய்து வந்தார்.


இப்படி பைத்தியக்காரராக இழிவுபடுத்தப்பட்ட போதும் சரி, பிற்காலத்தில் கடவுளாகக் கொண்டாடப்பட்ட போதும் சரி அன்பையும் அருளையும் மட்டுமே காட்ட முடிந்த ஷிரடி பாபாவின் குணாதிசயம் கம்பன் இராமனை வர்ணிப்பதைத் தான் நமக்கு நினைவுபடுத்துகிறது.


அசோக வனத்தில் சீதை இராமனைப் பற்றி எண்ணி உருகுவதாகப் பாடப்படும் பாடல்களில் மிக அழகான பாடல் ஒன்று உண்டு.

"மெய்த்திருப்பதம் மேவென்ற போதிலும்
இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்
சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்"

அரச பதவியை ஏற்றுக் கொள் என்று முந்தைய தினம் சொன்ன போதும் சரி, இந்த நாட்டையே துறந்து நீ காட்டுக்குப் போ என்ற போதும் சரி சித்திரத்தில் வரைந்த செந்தாமரையின் மலர்ச்சி இராமனின் முகத்தில் இருந்த்தை சீதை நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடல் அது. அதாவது சாதாரண செந்தாமரையில் மலர்ச்சி இருக்கும், வாட்டமும் இருக்கும். ஆனால் சித்திரத்தில் வரைந்த செந்தாமரையில் மட்டுமே மாறாத மலர்ச்சி இருக்கும் என்பதை அழகான உவமையுடன் கம்பர் கூறுவார்.


பக்தர்கள் அவருக்காக ஒரு வெள்ளிப் பல்லக்கும், வெள்ளிக் குதிரைகளும் கூட செய்து அதை துவாரகமயிக்குள் கொண்டு வர முற்பட்ட போது மட்டும் ஷிரடி சாய்பாபா அதை அனுமதிக்கவில்லை. அதனால் அந்த வெள்ளிப் பல்லக்கும், குதிரைகளும் துவாரகமயியின் வெளிப்புறத்திலேயே வைக்கப்பட்டன. சில நாட்கள் கழித்து யாரோ அந்த வெள்ளிக் குதிரைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

அதை மிகுந்த வருத்தத்துடன் பக்தர்கள் அவரிடம் தெரிவித்த போது சிறிதும் வருத்தமோ, அதிர்ச்சியோ காட்டாமல் “திருடர்கள் ஏன் அந்தப் பல்லக்கைத் திருடிக் கொண்டு போகவில்லை” என்று விளையாட்டாக பாபா கேட்டார். இது போன்ற விலை உயர்ந்த படாடோபப் பொருள்களுக்கு பாபாவின் மனதில் எந்த அளவு முக்கியத்துவம் இருந்தது என்பதைக் காட்டுகிறது அல்லவா?


அதே போல உணவின் சுவையிலும் ஷிரடி பாபா பெரிய அக்கறை காட்டவில்லை. ஆரம்ப காலங்களில் வீடுகளில் மிஞ்சியதைத் தான் ஷிரடி மக்கள் அவருக்கு உண்ணக் கொடுத்தார்கள். அவரை மகானாகவும், கடவுளாகவும் எண்ண ஆரம்பித்த பிறகு அப்படிப் பழைய உணவை அவருக்கு அளிக்கவில்லை என்றாலும் எல்லா நேரங்களிலும் அந்த உணவு சுவையாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா? சிலர் தங்களுக்குச் சமைத்து சாப்பிடும் உணவே ருசியில்லாமல் இருப்பதுண்டு. அதையே பாபாவுக்கும் கொண்டு வந்து தருவதில் அவர்கள் மீது குற்றம் காண முடியாது. எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் எந்த முக சுளிப்பும் இல்லாமல் உண்பது பாபாவின் வழக்கமாக இருந்தது.


கர்மவினைகளின் பலனை அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது என்று சான்றோர் சொல்வதுண்டு. தன் பக்தர்களின் கர்மவினைகளின் பலன்களைத் தான் ஏற்றுக் கொண்டு பக்தர்களை ஷிரடி பாபா காத்த நிகழ்ச்சிகள் அவர் காலத்து ஆட்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஒரு முறை துவாரகமயியில் எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் ஷிரடி பாபா திடீரென்று கையை விட்டு சுட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் பதறிப் போய் காரணம் கேட்ட போது தன் பக்தனான கொல்லன் ஒருவனுடைய குழந்தை அவன் வீட்டில் நெருப்பில் விழுந்து விட்டதாகவும் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற அந்த நெருப்பின் சூட்டைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும் பாபா சொன்னார். பாபாவின் காயத்தைப் பார்த்து வருந்திய பக்தர்களிடம்  “என்னுடைய காயத்தை இறைவன் குணப்படுத்தி விடுவார்” என்று சொல்லி விட்டார். பின்பு விசாரித்த போது வேறொரு ஊரில் அவரது பக்தன் கொல்லன் ஒருவனது பட்டறையில் அவன் குழந்தை தீயில் விழுந்து  விட்டதாகவும், அது பெரிய காயமின்றி தப்பித்து விட்டதாகவும் தெரிய வந்தது. இப்படி தன் பக்தர்களின் நலனையே பெரிதாக நினைத்து தன் நலனை அதிகம் பொருட்படுத்தாமல் பாபா வாழ்ந்தார்.

1886 ஆம் ஆண்டு ஒரு நாள் தன் சீடனான மல்சபதி (Mahlsapathy) என்பவரை அழைத்து “நான் அல்லாவிடம் போகிறேன். மூன்று நாட்கள் இந்த உடம்பைப் பத்திரமாகக் காத்து வா. நான் திரும்ப வந்தால் இந்த உடலைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன். ஒருவேளை அப்படி வராவிட்டால் மூன்று நாள் கழித்து இந்தப் பிணத்தை அந்த வேப்ப மரத்தின் அருகே புதைத்து விடு” என்று சொல்லி வேப்ப மரத்தைக் காண்பித்த ஷிரடி பாபா மறு கணம் அப்படியே மல்சபதியின் மீது சாய்ந்தார். பாபாவின் மூச்சு நின்று போனது. உடல் சில்லிட்டுப் போனது. உடலின் நிறமும் மாறிப் போனது. ஷிரடி பாபா இறந்து விட்டார் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது.

ஷிரடி பாபாவின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த மல்சபதி அவரைப் புதைக்கச் சம்மதிக்கவில்லை. அரசு அதிகாரிகளும், போலீஸாரும் வந்தும் கூட அவர் மூன்று நாட்கள் கழித்தும் பாபா இந்த உடலுக்குத் திரும்பா விட்டால் தான் புதைக்க சம்மதிப்பேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அவர்களுக்கோ இறந்தவர் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பெறுவார் என்று நம்பக் கஷ்டமாக இருந்தது. ஷிரடி பாபாவின் சக்திகளைப் பற்றி அவர்கள் முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் எந்த சக்தியும் மரணத்திற்குப் பின் மீண்டும் ஒருவரை உயிர்பெற விடாது என்று பகுத்தறிவு அவர்களுக்குச் சொன்னது. ஆனால் மல்சபதியும் மற்ற பக்தர்களும் பாபா கூறியபடி மூன்று நாட்கள் காத்திருப்பதில் உறுதியாய் இருந்தார்கள்.

ஷிரடி பாபாவின் உடல் துவாரக மயியில் மல்சபதி மேற்பார்வையில் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாளின் இறுதியில் பாபாவின் உயிரற்ற உடலில் திடீரென்று கை விரல் ஒன்று அசைந்தது. அருகே இருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் விழித்தன. ஷிரடி பாபா எழுந்து உட்கார்ந்தார்.

பரமஹம்ச யோகானந்தரின் குருவான ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் அப்படி இறந்த சில நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்து யோகானந்தரிடம் சில மணி நேரங்கள் உரையாடிக் கொண்டிருந்தார் என்பதை முன்பு பார்த்திருக்கிறோம். ஆனால் உயிர்த்தெழுந்த ஷிரடி பாபா அதன் பிறகு 32 ஆண்டுகள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார் என்பது தான் பேராச்சரியம்!

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 15-05-2015

1 comment:

  1. இது உண்மையா ❓.பரமானந்தன்.

    ReplyDelete