என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 16, 2015

கங்கையில் மிதந்தும் மூழ்கியும் வாழ்ந்த யோகி!

11. மகாசக்தி மனிதர்கள்


ந்திய யோகிகளின் அபூர்வ சக்திகளின் வெளிப்பாட்டிற்கு இன்னொரு உதாரணம் த்ரைலங்க சுவாமி (Trailanga Swami ). தெலங்க சுவாமி மற்றும் கணபதி சுவாமி என்ற பெயர்களாலும் அறியப்படுகிற அவர் கிபி 1607 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் விஜயநகரம் பகுதியில் பிறந்து 1887 ஆம் ஆண்டு காசியில் சமாதி அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 280 ஆண்டு காலம் வாழ்ந்த அவரைப் பற்றி பரமஹம்ச யோகானந்தர் தன் “யோகியின் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை அவருடைய சீடர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் உமாச்சரண் முக்கோபாத்யா (Umacharan Mukhopadhay) என்ற சீடர் வங்காள மொழியில் எழுதிய வாழ்க்கை வரலாறு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அது பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

பெற்றோரின் மறைவுக்குப் பின் தன் நாற்பதாவது வயதில் துறவறம் பூண்ட த்ரைலங்க சுவாமி பின் மயானங்களிலேயே தங்கி சுமார் இருபதாண்டு காலம் கடும் சாதகம் புரிந்து அபூர்வ சக்திகள் பெற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பின் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று அந்த இடங்களிலும் தவ வாழ்க்கையைத் தொடர்ந்து தன் அபூர்வ சக்திகளை மேலும் வலிமையாக்கிக் கொண்டு உயர்ந்த மெய்ஞானத்தையும் பெற்ற அவர் கடைசியில் 1737 ஆம் ஆண்டு வாரணாசி சென்றடைந்தார். பின் அங்கேயே  150 ஆண்டு காலம் வாழ்ந்து சமாதியான அவர் வெளிப்படுத்திய மகாசக்திகளை இங்கே பார்ப்போம்.  

த்ரைலங்க சுவாமி யாசகம் செய்து உண்பதில்லை என்று உறுதியோடு இருந்ததால் ஆரம்ப கால துறவு வாழ்க்கையில் பல வாரங்கள் தொடர்ந்து பட்டினி கிடந்தவர். தனிமையில் அவர் அதிக காலம் கழித்தவர் என்பதால் அவரைத் தேடிச் சென்று கண்டுபிடித்து உணவளித்தவர்கள் ஆரம்ப காலங்களில் மிகவும் குறைவு. பருமனான உடல்வாகு கொண்டவராக இருந்த போதும் அவருக்கு உணவு அத்தியாவசியமாக இருந்ததே இல்லை. சில சமயங்களில் விஷ உணவுகளையும் உண்டு எந்த எதிர்விளைவுகளும் இல்லாமல் அவர் இருந்ததுண்டு.

முன்னூறு பவுண்டுகள் (136 கிலோகிராம்) எடைக்கும் கூடுதல் எடை கொண்ட அவர் கங்கையில் நாட்கணக்கில் மிதந்தபடி இருந்ததை அந்நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் கண்டிருக்கிறார்கள். அதைச் சிலர் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். சில நாட்கள் கங்கையின் மேற்பரப்பில் அமர்ந்திருப்பாராம். சில நாட்கள் தொடர்ந்து மூழ்கி இருப்பாராம். அதே போல கொளுத்தும் வெயிலில் ஆடைகள் எதுவுமில்லாமல் நிர்வாணமாகவே பாறைகளில் அவர் நாட்கணக்கில் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் படுத்துக் கிடப்பதும் உண்டாம். அந்தக் காட்சிகளை நேரில் கண்டிருந்த பலர் பரமஹம்ச யோகானந்தரின் காலத்தில் உயிரோடிருந்ததாக அவர் தன் “ஒரு யோகியின் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.  

ஒரு யோகி தன் தவ அமைதியில் ஆழ்ந்து கிடக்கும் போது அற்புதங்களைப் படைத்துக் காட்டும் வல்லமையைப் பெற்று விடுகிறார். இயற்கையின் விதிகளில் பலவும் யோகசக்தியின் முன் வலுவிழந்து போகின்றன என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே நல்ல உதாரணம். அப்படி இல்லை என்றால் 136 கிலோ எடைக்கும் அதிகமான ஒரு மனிதர் கங்கையில் நாட்கணக்கில் மிதக்க முடியுமா? கங்கையில் மூழ்கி மூச்சு முட்டாமல் நாட்கணக்கில் இருக்க முடியுமா? பல வாரங்கள் தொடர்ந்து உண்ணாமல் இருந்தும் உடலில் எந்த பலவீனத்தையும் உணராமல் இருக்க முடியுமா?

போலிகளையே அதிகம் கண்டிருந்ததால் உண்மையான யோகியையும் அடையாளம் காணத்தவறிய ஒரு போக்கிரி,  த்ரைலங்க சுவாமியை போலி சாமியார் என்று நினைத்தான். அவருடைய உண்மை சொரூபத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட நினைத்தான்.  வீட்டு சுவருக்குப் பூச என்று வாங்கியிருந்த சுண்ணாம்பைத் தண்ணீரில் நன்றாகக் கலக்கி எடுத்துக் கொண்டு வந்த அவன் அதை மோர் என்று சொல்லி த்ரைலங்க சுவாமிக்கு குடிக்க போலித்தனமான பயபக்தியுடன் கொடுத்தான்.

த்ரைலங்க சுவாமி அதை அமைதியாக வாங்கிக் குடித்தார். அந்த சுண்ணாம்புத் தண்ணீர் அவரையும் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக அந்த போக்கிரியின் வயிறு அந்த சுண்ணாம்புத் தண்ணீரைப் பருகியது போல எரிய ஆரம்பித்தது. தரையில் விழுந்து புரண்டு துடித்துக் கொண்டே “வயிறு கடுமையாக எரிகிறது. என்னை மன்னித்து விடுங்கள் சுவாமிஎன்று கதறினான்.  

த்ரைலங்க சுவாமி பெரும்பாலும் மௌனத்தையே அனுசரிப்பவர். ஆனால் தன் மௌனத்தைக் கலைத்து அந்த போக்கிரியிடம் அன்று சொன்னார். “எனக்கு சுண்ணாம்புத் தண்ணீரைத் தந்த போது என் உயிர் உன் உயிரோடு சம்பந்தப்பட்டது என்று நீ அறியவில்லை. ஒவ்வொரு அணுவிலும் இறைசக்தி இருப்பது போல என் வயிற்றிலும் இறைசக்தி இருப்பதை நான் உணர்ந்து நான் என்னைத் தற்காத்துக் கொண்டிருக்கா விட்டால் சுண்ணாம்புத் தண்ணீர் என் உயிரைப் பறித்திருக்கும். நீ செய்கின்ற கர்மவினையின் பலன்கள் பூமராங்க் போலக் கண்டிப்பாகத் திரும்பவும் உன்னிடத்திற்கே வரும் என்பதை இனியாவது நினைவில் வைத்துக் கொள். அடுத்தவர்க்கு தீங்கு செய்வதைத் தவிர்தன் தவறை உணர்ந்த பிறகு அந்தப் போக்கிரிக்கு வலி குறைய ஆரம்பித்தது.



த்ரைலங்க சுவாமி ஆடை ஏதும் அணியாமல் வாரணாசியில் திரிந்து கொண்டிருந்தது போலீஸாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சில மணி நேரங்களில் அவர் மறுபடியும் வாரணாசி வீதிகளில் சென்று கொண்டிருந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே சென்று சிறையைச் சோதனையிட்டார்கள். அவரைப் பூட்டி வைத்திருந்த சிறை அறையின் கதவு அப்போதும் பூட்டப்பட்டே இருந்தது. பூட்டிய சிறையில் இருந்து அவர் எப்படி தப்பித்திருக்க முடியும் என்று மூளையைக் கசக்கி யோசித்தும் போலீஸாருக்கு விடை கிடைக்கவில்லை.

மறுபடியும் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார் அவர் அறைக்கு வெளியே ஒரு காவலாளியையும் கண்காணிக்க நிறுத்தி வைத்தார்கள். அவரையே கண்காணித்துக் கொண்டிருந்த காவலாளி இரவில் சற்று கண்ணயர்ந்து பின் விழித்துப் பார்க்கையில் சிறையின் கூறையில் த்ரைலங்க சுவாமி நடந்து கொண்டிருந்தார். போலீஸார் அவரைக் கைது செய்வதில் எந்தப் பலனும் இல்லை என்பதை உணர்ந்து பின் அவரைக் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டார்கள்.

த்ரைலங்க சுவாமியின் அருகே சென்று அவரால் தொடப்பட்ட ஒருசில நோயாளிகளின் நோய் அவர் தொட்ட மாத்திரத்திலேயே குணமாகி விட அந்தச் செய்தி வேகமாக மக்களிடம் பரவ ஆரம்பத்தது. அதனால் வாரணாசி மக்கள் அல்லாமல் அக்கம்பக்க ஊர்களில் இருந்தும் பலரும் அவரைக் கண்டு செல்ல வர ஆரம்பித்தார்கள். பலரது நோய்கள் குணமாகின.

த்ரைலங்க சுவாமிகளின் யோகசக்தி வெளிப்பாடுகள் குறித்து அவரது சீடர்களும், நேரில் கண்டவர்களும் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் கட்டுக்கதைகள் அல்ல உண்மையை அடிப்படையாகக் கொண்டவையே என்று ராபர்ட் ஆர்னெட் (Robert Arnett) என்ற இக்கால அமெரிக்க எழுத்தாளர் தன் ஆய்வுக்குப் பிறகு கூறியுள்ளார். அவர் “திரை விலக்கப்பட்ட இந்தியா” (India Unveiled) என்ற நூலை எழுதியவர். 25 வருட காலத்திற்கும் மேலாக இந்தியாவின் கலை, கலாச்சாரம், மதம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

இந்த அளவுக்கு த்ரைலங்க சுவாமி மகாசக்திகளைப் பெற்றிருந்தது நம் போன்ற இக்கால மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் யோக சக்திகளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தவர்கள் ஆச்சரியப்படுவதில்லை. சுவாமி சிவானந்தர் த்ரைலங்க சுவாமியின் சக்திகளை “பூதஜயாஎன்ற யோகசக்தி வகையில் சேர்க்கிறார். பஞ்சபூதங்களையும் ஜெயித்திருக்கும் யோகசக்தி அது. ‘அந்த சக்தியை முழுமையாகப் பெற்றிருந்தவனை நெருப்பு சுடாது, தண்ணீர் மூழ்க வைக்காதுஎன்கிறார் அவர்.

(தொடரும்)
என்.கணேசன் 
நன்றி: தினத்தந்தி – 21.11.2014



2 comments:

  1. நல்ல பகிர்வு...
    அறியத் தந்தீர்கள் அண்ணா...

    ReplyDelete
  2. இதவரை நான் அறிந்திடாத புதிய செய்தியாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி...

    மலர்

    ReplyDelete