சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 13, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 56





அறிந்ததை சோதித்துப் பாருங்கள்-டெலிபதி

ஆழ்மன சக்திகள் பற்றி ஆதாரபூர்வமான நிகழ்வுகளை ஆரம்பத்தில் பார்த்தோம். பிறகு அந்த ஆழ்மன சக்திகளை அடைய உதவும் வழிகளில் தியானம் துவங்கி பல வகைப் பயிற்சிகளையும் பார்த்தோம். ஆழ்மன சக்திகளைப் பெற உதவும் உணர்வு மற்றும் மனநிலைகளையும், அதைப் பெறத் தடையாக இருக்கக்கூடிய மனநிலைகளையும் பார்த்தோம். கடந்த சில வாரங்களில் ஆழ்மனதைப் பலப்படுத்துபவை எவை, பலவீனப்படுத்துபவை எவை என்றும் பார்த்தோம். இது வரை அறிந்தவற்றை எல்லாம் பயன்படுத்தி நம்மாலும் அந்த சக்திகளைப் பயன்படுத்த முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் கடைசிக் கட்டத்திற்கு இப்போது வந்திருக்கிறோம்.

ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அறிந்து கொள்வது வேறு. அதை உணர முடிவது வேறு. அறிந்து கொள்வதற்கு அறிந்தவர்களும், தகவல் சாதனங்களும் உதவ முடியும். ஆனால் உணர்வது என்பது தனிமனித அனுபவமே. அதற்கு மற்றவர்களோ, சம்பந்தப்பட்ட தகவல்களோ உதவ முடியாது. இந்த உண்மை மற்றெல்லா விஷயங்களையும் விட அதிகமாக ஆழ்மன சக்திகளுக்கு பொருந்தும்.

அறிய உதவும் தகவல்கள், வரைபடங்கள் போன்றவை. ஒரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கும். ஆனால் அந்தத் தகவலை எந்த அளவுக்கு ஒருவன் பயன்படுத்துகிறான், அங்கு போக எந்த அளவு முயற்சி செய்கிறான், அவன் போகும் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அந்த தனிமனிதனையே சார்ந்தது. அதைப் பொறுத்தே அவன் அந்த இடத்திற்குப் போய் சேர்வதும், சேராதிருப்பதும் தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு இது வரை சொல்லப்பட்ட பயிற்சிகள், தகவல்கள் எல்லாம் வரைபடங்கள் போன்றவையே. அந்தப் பயிற்சிகளை எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள், செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதில் பெறும் வெற்றியின் அளவும் இருக்கும். இதில் சில பயிற்சிகள் சுவாரசியமில்லாதவையாக இருக்கலாம். சில பயிற்சிகள் கடினமானதாக இருக்கலாம். சில பயிற்சிகள் பொருளில்லாதவையாகக் கூடத் தோன்றலாம். ஆனாலும் அதை விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் செய்வது மட்டுமே முடிவில் ஆழ்மன சக்திகளை அடைய வழி செய்யும்.

ஆனால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆர்வம் உறுதியானதாக இருந்தால், அது காலப்போக்கில் வடிந்து போகாததாக இருந்தால் அது ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான அனைத்தையும் உங்களைச் செய்ய வைக்கும். அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து, உங்களுக்குத் தெரிந்த வகையில் விடாமல் பயிற்சிகளும் செய்து வந்திருந்தால் அந்த சக்திகளை ஓரளவாவது நிச்சயமாக நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதை சோதித்துப் பார்க்கும் வழிகளைப் பார்ப்போம்.

முதலில் ‘டெலிபதி’ எனப்படும் ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளால் அல்லாமல் செய்திப் பரிமாற்றம் செய்யும் சக்தியைப் பார்ப்போம். மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தி இயல்பாகவே அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருக்கும். எதையும் சொல்லியே தெரியப்படுத்திப் பழகி விட்டதால் சொல்லாமல் உணரும் சக்தியைப் பெரும்பாலும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். பொதுவாக ஏதோ சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டும் இது நம்மிடையே எழுகிறது.

ஆதிசங்கரர் சன்னியாசம் வாங்குகையில் அவர் தாய் ஆர்யாம்பாள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவரிடம் அவருடைய மரண காலத்தில் கண்டிப்பாக வந்து சேர்வதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து தந்தார். அதே போல ஆர்யாம்பாள் மரணத் தருவாயில் மகனை நினைக்க உடனடியாக ஞான திருஷ்டியால் ஆதிசங்கரர் உணர்ந்து தாயிடம் விரைந்து சென்றார் என்று படித்திருக்கிறோம். இது தான் டெலிபதி என்று சொல்லலாம்.

இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்ததை நான் அறிவேன். எங்கள் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தையுடன் மிகவும் பாசமாக இருப்பவர். வெளியூரில் வேலை கிடைத்ததால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு நாள் தன்னுடன் தங்கி இருந்த தோழியுடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டு சென்ற அவர் கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் காரணம் தெரியாமல் சோகமயமானார். திடீரென்று விக்கி விக்கி அழ ஆரம்பிக்க அந்தத் தோழி காரணம் கேட்டார். ஆனால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. ”ஏனோ அழுகை அழுகையாய் வருகிறது” என்று சொல்லி தொடர்ந்து அழுதார். சிறிது நேரம் கழித்து இருவரும் ஹாஸ்டலிற்குத் திரும்பினார்கள். ஹாஸ்டலுக்கு வந்த போது அவரது தந்தை மாரடைப்பால் காலமானார் என்று சிறிது நேரத்திற்கு முன் போனில் தகவல் வந்ததைத் தெரிவித்தார்கள். அந்தக் காலத்தில் இந்தக் காலத்தைப் போல செல் போன் வசதி இல்லாத காரணத்தால் வீட்டார்கள் லேடீஸ் ஹாஸ்டலிற்குப் போனில் தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தந்தைக்கு மாரடைப்பு வந்த சமயத்தில் தான் காரணம் தெரியாமல் அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. தந்தைக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே எல்லை இல்லாத பாசம் இருந்தது என்பதைத் தவிர ஆழ்மன சக்தி, டெலிபதி போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி இருவரும் அறியாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி உணர்ச்சிகளின் உச்சக்கட்டங்களிலும், அவசரமான கட்டங்களிலும் மிகவும் நெருக்கமான நபர்களுடன் நாம் அரைகுறையாக உணர முடிகிற விஷயங்களை இயல்பான நேரங்களிலும் கூட வார்த்தைகளில்லாமல் தெளிவாக உணர முடியும் என்பது ஆழ்மன சக்திகளை அடைந்தவர்களின் அனுபவம். இந்த டெலிபதி உங்களுக்கு கைகூடி வருகிறதா என்பதை இனி சோதித்துப் பாருங்கள்.

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால்
அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.

முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.

இனி அடுத்த ஆழ்மன சக்திகளைப் பரிசோதிக்கச் செல்லலாமா?

மேலும் பயணிப்போம்...

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: விகடன்

6 comments:

  1. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் - இவ்வகையான நிகழ்வுகளை பல முறை சந்தித்துள்ளேன்.

    ReplyDelete
  2. அந்தப் பெண் விசயத்தில், தன் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பழமொழியை ஒப்பு நோக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

    டெலிபதியை சோதிப்பதற்கு நீண்ட பொறுமையும், அதிக ஈடுபாடும் கொண்டிருக்க வேண்டும். மிக சிரம்மான காரியமாகத் தெரிகிறது.

    ReplyDelete
  3. முதல் நாளிலேயே அடுத்த நாள் சமையலில் குழம்பு இதுதான்,பொறியல் இதைச் செய் என்று மனைவியிடம் சொல்ல நினைத்து மறந்து விட்டு,.....

    அடுத்த நாள் பார்த்தால் நாம் நினைத்த குழம்பும் பொறியலும் கண்முன்......

    பலநூறுமுறை இது போல் பல அனுபவங்கள்...!!!!

    ReplyDelete
  4. நல்லா இருக்கு ...

    ReplyDelete
  5. nanum enathu thayarum sumar 20 warudangal pesavillai, aanal en thayar erakkum tharuvaayil maalaiyil erakkum poothu en Manam Padai Paduthiyathu, enna ninaithargalo, marunal kaalai erantha sethi vanthathu

    ReplyDelete