சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, November 18, 2008

சிக்கனம் Vs கஞ்சத்தனம்

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். சம்பவம் நடந்த இடம் அமெரிக்காவா இங்கிலாந்தா என்று சரியாக நினைவில்லை. ஒரு நகரத்தில் வயதான மகாகஞ்சன் ஒருவன் வீட்டில் இறந்து போனான். அவன் இறந்து போனதையே வீட்டில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த பின்பு தான் கண்டுபிடித்தார்கள். கதவை உடைத்துக் கொண்டு போய் பிணத்தை எடுத்திருக்கிறார்கள். போஸ்ட் மார்ட்டத்தில் அவன் குளிர்தாங்காமல் இறந்து போயிருக்கிறான் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவனுடைய வீட்டில் ஹீட்டர் இருந்திருக்கிறது. ஆனால் அவன் அதை மிகக்குறைவாகவே உபயோகித்திருக்கிறான். வேடிக்கை என்னவென்றால் அவன் படுக்கைக்கு கீழ் லட்சக்கணக்கான பணம் இருந்திருக்கிறது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு அவன் ஒரு பணக்காரன் என்பதை நம்பவே முடியவில்லையாம். தெருக்களில் பலரும் வீசி விட்டுப் போயிருந்த பொருட்களை அவன் சேகரித்து வருவதைக் கண்டிருந்த அவர்கள் பாவம் ஏழை என்றே நினைத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை படுக்கையின் கீழ் வைத்திருக்கும் அவனுக்கு உயிர் வாழத் தேவைக்கான அளவு கூட ஹீட்டர் உபயோகிக்க மனம் வரவில்லை. இவன் ஏழையா, பணக்காரனா?

சிக்கனம் மிக முக்கியமானது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கை சீரான முறையில் செல்ல சிக்கனம் மிக அவசியம். அது இல்லா விட்டால் எத்தனையோ தேவையானவற்றை அவர்கள் இழந்து விட நேரிடும். "ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை போகாறு அகலாக்கடை" என்றார் திருவள்ளுவர். வருமானம் அளவானதாக இருந்தாலும் பரவாயில்லை செலவுகள் அதை மீறி போய் விடாத பட்சத்தில் என்கிறார். இன்னொரு இடத்தில் அளவறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி திடீரென்று இல்லாமல் போய் விடும் என்று எச்சரிக்கிறார்.

தேவையில்லாததற்கெல்லாம் செலவு செய்பவர்கள் அவசியமானதற்குக் கூட செலவு செய்யப் பணமில்லாமல் அவதிப்படுவதை நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். க்ரெடிட் கார்டுகளை வைத்துக் கொண்டு இப்போதே பணம் தர வேண்டியதில்லையே என்ற அலட்சியத்தில் ஆடம்பரப் பொருள்களை வாங்கி விட்டு பின் மாதாந்திர செலவுக்கும் மருத்துவச் செலவுக்கும் பிறரிடம் கையேந்தி நிற்பதையும் நாம் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதை அழகாக பாமா விஜயம் திரைப்படத்தில் "வரவு எட்டணா செலவு பத்தணா" பாட்டில் கவிஞர் கூறுவார். எனவே சிக்கனத்தின் தேவை பற்றி இன்னொரு கருத்து இருக்க முடியாது.

ஆனால் சிக்கனமாக இருப்பதாக நினைத்து கஞ்சனாக இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல? ஆரம்பத்தில் நாம் கண்ட கஞ்சனைப் போல ஒரு முட்டாள் யாராவது இருக்க முடியுமா? தேவைக்கான செலவையும் செய்ய மறுப்பவன் சிக்கனம் என்ற நல்ல பண்பிலிருந்து நழுவி கஞ்சத்தனம் என்ற முட்டாள்தனத்திற்கு தள்ளப் படுகிறான்.

ஏராளமாக சொத்து சேர்த்தும் ஒரு டீ வேறு யாராவது வாங்கித் தரமாட்டார்களா என்று தேடும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ செல்வம் இருந்தும் வீட்டில் உணவுக்குக் கூட சரிவர செலவு செய்யாமல் மற்றவர்கள் தரும் விருந்தில் இனி இப்படியொரு சந்தர்ப்பம் வருமோ வராதோ என்ற சந்தேகத்தில் எல்லா பதார்த்தங்களையும் அள்ளி அள்ளி விழுங்கும் பரிதாபத்திற்குரிய கஞ்சர்களையும் பார்த்திருக்கிறேன். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று பட்டினத்தார் பாடினார். இப்படி இருக்கையில், இருக்கும் செல்வத்தை இவர்கள் எதற்காக இப்படி கஷ்டப்பட்டு அடைகாக்கிறார்கள்?

ஒரு செல்வநிலையில் இருப்பவனுக்கு சிக்கனமாக இருப்பது இன்னொரு மேல்மட்ட செல்வநிலையில் இருப்பவனுக்கு கஞ்சத்தனமாக ஆவதுண்டு. அடிமட்ட நிலையில் இருந்து கஷ்டப்பட்டு மேலுக்கு வந்தவர்கள் ஆரம்ப கஷ்டகாலத்தில் சிக்கனமாக இருந்தது போலவே செல்வச் செழிப்பிலும் நடந்து கொள்ளும் போது கஞ்சன் என்ற பட்டத்தை அடைவதுண்டு. ஆனால் தெளிவாகச் சொல்வதென்றால் பணம் இருந்தும் அவசியமானதற்கும் செலவு செய்ய மறுப்பது தான் கஞ்சத்தனம். பணம் இருந்தும் ஆடம்பர அனாவசிய செலவுகளைச் செய்யாமல் இருப்பது தான் சிக்கனம். இந்த வரைமுறையின் படி சிக்கனமாக இருங்கள்;கஞ்சத்தனமாக இருந்து விடாதீர்கள்.

-என்.கணேசன்

3 comments:

  1. one of my teachers told me -
    spend as much as you want but never waste. that is the difference.

    ReplyDelete