சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 23, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 104

ந்த சீனக்கப்பலில் அவர்கள் ஏற ஏணி இறக்கப்பட்டது. தேவும் அந்த மீனவனும் சூட்கேஸுடனும், சாக்கு மூட்டைகளுடன் ஏறினார்கள். கப்பலின் கேப்டன் தேவைக் கூர்ந்து பார்த்தான். கேப்டனுக்குப் பின்னால் இரண்டு பேர் துப்பாக்கிகளுடன் தயாராக நின்றிருந்தார்கள். கேப்டனுக்கு லீ க்யாங் அனுப்பி இருந்த படத்தில் தேவ் கோட்டு சூட்டுடன் இருந்தான். இந்த மீனவ வேடத்தில் இருப்பவன் அவன் தானா என்று வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்து விட்டுத் திருப்தி அடைந்த பின் தான் கேப்டன் சின்னதாய் புன்னகை செய்து விட்டு ”வாருங்கள்” என்றான்.

தேவ் அவனது எச்சரிக்கை உணர்வைத் தவறாக எண்ணவில்லை. அவனே அப்படித்தான் எச்சரிக்கையுடன் இருப்பவன். தேவ் தங்களை அழைத்து வந்த மீனவனிடம் பணம் வைத்த உறையை நீட்டினான். ”இதில் ஒரு லட்சம் இருக்கிறது” என்றான்.

முன்பே அவனுக்கு முன்பணம் ரூ25000/- தரப்பட்டு இருந்தது. எனவே பேசியபடி மீதம் ரூ75000/- அல்லவா வர வேண்டும் என்று மீனவன் குழம்பிய போது “பரவாயில்லை. வைத்துக் கொள்” என்று தேவ் புன்னகையுடன் சொன்னான். அவன் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு ஏணியில் இருந்து இறங்கினான்.

அவன் படகு போவதையே பார்த்துக் கொண்டு சிறிது நின்று விட்டு தேவ் திரும்பினான். இரண்டு பேர் அந்த சாக்கு மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு கப்பலின் ஒரு தனி அறைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். அந்த அறை ஓட்டல் அறை போல சகல வசதிகளுடன் இருந்தது. பின்னாலேயே வந்த கேப்டன் ”என்ன தேவை என்றாலும் எண் ஏழு அழுத்துங்கள்.. என்னிடம் பேச வேண்டியிருந்தால் எண் ஒன்றை அழுத்துங்கள். நாளை காலை பார்ப்போம். இரவு வணக்கம்” என்று அங்கிருந்த இண்டர்காமை காண்பித்து ஆங்கிலத்தில் சொல்லி விட்டுப் போனான். சாக்கு மூட்டைகளைத் தரையில் கிடத்தி விட்டு அந்த ஆட்களும் போய் விட்டார்கள்.

கதவைத் தாளிட்டுத் திரும்பிய தேவ் இரு சாக்குமூட்டைகளையும் பிரித்து சிறுவர்களை அங்கிருந்த இரு கட்டில்களில் ஒன்றில் படுக்க வைத்து விட்டு தன் சூட்கேஸை இன்னொரு கட்டிலில் வைத்து அதிலிருந்து உடைகள் எடுத்து உடைமாற்றிக் கொண்டு திரும்பின போது மைத்ரேயன் கட்டிலில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அதிர்ந்து போன தேவைப் பார்த்து புன்முறுவல் பூத்த மைத்ரேயன் “தண்ணீர் வேண்டும்” என்று கேட்டான்.

தேவுக்கு இது கனவா, நனவா என்ற சந்தேகம் வந்து விட்டது. கண்களை ஒரு முறை கசக்கிக் கொண்டு மூடித் திறந்து விட்டு அங்கே மேசையில் வைத்திருந்த புதிய தண்ணீர் பாட்டில்களில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்ட மைத்ரேயன் அதைக் குடிக்க ஆரம்பித்தான். இந்தப் பையனும் ஏதோ கனவு பிரமையில் இருக்க வேண்டும். அது தான் இப்படி நடந்து கொள்கிறான் என்று நினைத்துக் கொண்ட தேவ் அவனை வினோதமாய் பார்த்தான்.

மைத்ரேயன் எழுந்து போய் அந்தத் தண்ணீர் பாட்டிலை மேசையில் அதே இடத்தில் வைத்து விட்டு மறுபடி கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

தேவ் மயக்க ஊசியை இந்தச் சிறுவனுக்குப் போட்டு விடுவது தான் நல்லது என்று நினைத்த மாத்திரத்தில் மைத்ரேயன் சொன்னான். “ஊசி எல்லாம் போட வேண்டாம். நான் கத்தவோ, இங்கேயிருந்து தப்பிக்கவோ போவதில்லை.....”

தேவ் அதிர்ந்து போனான். இவனால் மனதில் உள்ளதைப் படிக்கவும் முடிகிறது. யோசிக்கையில் ’காரில் இவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது பிரமை அல்ல’ என்ற எண்ணம் வந்து போனது. பின் ஏன் இவன் எதுவும் செய்யாமல் அங்கிருந்தே அமைதியாக வந்தான் என்று தேவ் திகைத்தான். மைத்ரேயன் கட்டிலில் பத்மாசனத்தில் அமர்ந்தபடியே தியானம் செய்ய ஆரம்பிக்க தேவ் தூங்காமல் அவனையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அப்படியே தூங்கிப் போனான். எத்தனை நேரம் தூங்கி இருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை. பேச்சு சத்தம் கேட்டு கண்விழித்தான். கண்விழித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அப்படிப் படுத்திருந்தபடியே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டான்.

கௌதம் அழுகையுடன் கேட்டான். “நாம் எங்கே இருக்கிறோம்...?”

“ஒரு கப்பலில்....”

“நம்மைக் கடத்திக் கொண்டு வந்து விட்டார்களா... ஏன்?”

“என்னை ஏதோ அவதாரம் என்று நினைத்துக் கடத்துகிறார்கள். கூட இருந்ததால் உன்னையும் கடத்தி விட்டார்கள்....”

”அவதாரம் என்றால் கும்பிடத்தானே வேண்டும். ஏன் கடத்துகிறார்கள்?” கௌதம் குழப்பத்துடன் கேட்டான்.

”அவர்களைத் தான் கேட்க வேண்டும்.”

கௌதம் அழ ஆரம்பித்தான். “எனக்கு வீட்டுக்குப் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும்....”

”உஷ்ஷ்... அழாதே. அழுதால் அந்த ஆள் மயக்க ஊசி போட்டு மயங்கச் செய்து விடுவார். அவர் சூட்கேஸில் இரண்டு பாட்டில் மயக்க மருந்து இருக்கிறது....”

தேவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உண்மையாகவே அவன் சூட்கேஸில் இரண்டு பாட்டில் மயக்க மருந்து இருக்கிறது... எப்படித் தெரியும். தூங்கிக் கொண்டிருக்கும் போது சூட்கேஸைத் திறந்து பார்த்து விட்டானா, இல்லை....

கௌதம் அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டான். “உனக்கு பயமாய் இல்லையா?”

“இல்லை. நீ இது வரை கப்பலில் போயிருக்கிறாயா?”

”இல்லை. ”

”நாம் அழாமல் முரண்டு பிடிக்காமல் சமர்த்தாக இருந்தால் அந்த ஆள் நம்மை வெளியே கூட்டிக் கொண்டு போயும் காட்டுவார்.... நாம் இந்தக் கப்பலில் ஏதாவது விளையாடவும் செய்யலாம்.”

கௌதம் ஆனந்தம் அடைந்து மறுபடி அது தணிந்து கவலையுடன் கேட்டான். “அப்படியானால் வீட்டுக்குப் போவது எப்போது?”

“கூட்டிக் கொண்டு போக உன் அப்பா வருவார்”

திடீரென்று கௌதமுக்கு அண்ணன் வருண் முன்பு சொல்லி இருந்தது நினைவுக்கு வந்து உற்சாகமாகச் சொன்னான். “ஆமாம் அண்ணா சின்னதாய் இருந்த போது அவனையும் கடத்திக் கொண்டு போய் விட்டார்களாம். எங்கப்பா போய் கூட்டிக் கொண்டு வந்து விட்டதாய் சொல்லி இருக்கிறான். எங்கப்பா ஒரு சூப்பர்மேன்...”

”அவர் வரும் வரை நாம் ஜாலியாய் இருக்கலாம் சரியா?”

“சரி....... எனக்கு பசிக்கிறது”

தேவுக்கு தலை சுற்றியது.



க்‌ஷயும், ஆசானும் உளவுத்துறை அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு அதிகாரி சில நாட்களுக்கு முன்னாலேயே புதுடெல்லிக்கு “கோயமுத்தூரில் சில புகழ்பெற்ற தனியார் துப்பறியும் நிறுவனங்களின் ஒற்றர்கள் கணிசமான அளவில் கூடி இருக்கிறார்கள்” என்ற தகவல் கிடைத்திருக்கிறது என்றும் அதை அவர்கள் கோயமுத்தூருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்ததாகவும் சொல்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அந்த மின்னஞ்சல் இங்கு வந்து சேர்ந்த போது பணியில் இருந்த அதிகாரி இப்போது மாயமாக மறைந்து போய் விட்டார் என்று வருத்தத்தோடு சொல்லி முடித்த போது எதிரிகள் காய்களை மிக புத்திசாலித்தனமாக நகர்த்தி இருக்கிறார்கள் என்பது அக்‌ஷய்க்குப் புரிந்தது.

இன்னும் மைத்ரேயன் கௌதம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எங்கோ அவர்கள் ஒளித்து வைக்கப்ப்பட்டிருக்கவும் கூடும் என்ற ஒரு கருத்தும் உளவுத்துறையில் இருந்தாலும் அக்‌ஷய் அதை நம்பவில்லை. வேகமாக அவர்கள் இலக்கை நோக்கிப் போக என்ன செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்றே அவனுக்குத் தோன்றியது.... அக்‌ஷய் நீண்ட யோசனைக்குப் பின் சொன்னான். “எனக்கு ஒரு உதவி வேண்டும்?”

“சொல்லுங்கள்”

“என் எதிர் வீட்டில் குடியிருந்த சேகர் எங்கிருக்கிறான் என்பது தெரிய வேண்டும். அவனிடம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது” அவன் அமைதியாகச் சொன்ன விதத்தில் அந்த மனிதனுக்கிருந்த ஆபத்தை அங்கிருக்கும் அனைவரும் உணர்ந்தார்கள்.



“இந்தப் பையன்கள் நிஜமாகவே கடத்தப்பட்டவர்கள் தானா, இல்லை நீங்கள் ஆள் மாறி இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டீர்களா?” கேப்டன் தன் சந்தேகத்தை வெளிப்படையாகவே தேவிடம் கேட்டு விட்டார்.

தேவ் கப்பலின் மேல் தளத்தில் மிக உற்சாகத்துடன் ஆடிக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்களைப் பார்த்தபடியே சொன்னான். “என் இத்தனை வருட அனுபவத்தில் நானும் இது போல் பார்த்ததில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.”

அந்த சரக்குக் கப்பலில் இருந்த சில மாலுமிகளும் அந்தப் பையன்களை சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சிறுவர்களின் உற்சாகம் அவர்களையும் தொற்றிக் கொண்டது போல் இருந்தது.

தேவ் கேட்டான். “நாம் எப்போது கராச்சி போய் சேருவோம்”

“இதே வேகத்தில் போனால் மூன்று நாளில் போய் விடலாம்.” கேப்டன் சொன்னார்.

‘இந்த மூன்று நாளுக்குள் எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருக்க வேண்டும்’ என்று தேவ் நினைத்துக் கொண்டான்.

அவன் அன்று காலை எழுந்தவுடனேயே மைத்ரேயன் தன் நண்பனுக்காகவும் அவனிடம் பேசினான். “என்னை மாதிரியே இவனும் சமர்த்தாய் பிரச்னை இல்லாமல் இருப்பான்... நீங்கள் இவனுக்கும் மயக்க ஊசி போடத் தேவையில்லை. சரியா?”

தேவ் தலையசைத்தான். மைத்ரேயன் சொன்னான். “இவனுக்குப் பசிக்கிறதாம்....”

கௌதம் நன்றாகச் சாப்பிட்டாலும் மைத்ரேயன் அளவாகவே சாப்பிட்டதை தேவ் கவனித்தான். சாப்பிட்டு விட்டு கப்பலின் மேல் தளத்திற்குச் செல்ல சிறுவர்கள் ஆசைப்பட்டார்கள். சின்ன தயக்கத்துக்குப் பிறகு அவன் அவர்களை அழைத்துப் போனான். சுட்ட வெயில் அந்தச் சிறுவர்களின் உற்சாகத்தைக் குறைத்து விடவில்லை. மதியம் சாப்பிட்டும் விளையாட ஆரம்பித்தார்கள். மாலை ஆகி இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மெல்ல மாலுமிகளும் விளையாட்டில் சேர்ந்து கொண்டார்கள்....

கேப்டன் அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னான். “எனக்கென்னவோ அந்த திபெத் பையன் மாயக்காரன் போல தெரிகிறது....”

தேவுக்கு அதை மறுக்கத் தோன்றவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்


(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)



7 comments:

  1. அண்ணா..
    சூப்பர்ப். . .

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. Fantastic sir. Maithreyan character is progressing superbly.

    ReplyDelete
  3. சிறுவர்களின் உற்சாகத்தில் நாங்களும் கலந்து கொண்டது போல உள்ளது

    ReplyDelete
  4. சுஜாதாJune 23, 2016 at 6:42 PM

    அருமை கணேசன் சார். நாங்களும் கப்பலில் இருக்கிறோம். பரபரப்பு தாங்காமல் என் கணவரிடம் உடனடியாக புக் வாங்கி வரும்படி சொல்லி இருக்கிறேன். வாங்கி வரா விட்டால் நாளை சமையல் இல்லை என்று பயமுருத்தி இருக்கிறேன். ஞாயிறு வரை டைம் கேட்டிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ சுஜாதா என் சகோதரனை பட்டினி போடாதே, அவன் எழுத்தாளரை வைவான்

      Delete
  5. This novel is so good that we couldn't wait for Thursday evenings. We couldn't guess what will happen. I wish success for this unique novel.

    ReplyDelete