சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 31, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 92


ருணின் காதல் பிரச்னை என்ன என்று சஹானாவிடம் அக்‌ஷய்க்கு இரவு உறங்கப் போகும் முன் தான் கேட்க முடிந்தது.

“தெரியவில்லை. வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது வந்தனா வீட்டுக்குப் போவான். அந்தப் பெண்ணும் ஒரு தடவையாவது நம் வீட்டுக்கு வருவாள். திடீர் என்று எல்லாம் நின்று விட்டது. என்னடா பிரச்னை என்று கேட்டால் எரிந்து விழுகிறான்... உங்களிடம் ஏதாவது சொன்னானா?”

“அவளைப் பற்றிப் பேச வேண்டாம் என்று மட்டும் சொன்னான்.”

அக்‌ஷய் சொன்னதை சஹானாவால் நம்ப முடியவில்லை. எந்த விஷயமானாலும் வருண் அக்‌ஷயிடம் சொல்லாமல் இருப்பவன் அல்ல. தந்தையாக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பனாகவும் அக்‌ஷயை அவன் நினைத்தான். அக்‌ஷயிடமே சொல்ல முடியாத விஷயமாய் இருந்தால் அது சொல்ல முடியாத மிகப்பெரிய பிரச்னையாகவே இருக்க வேண்டும்.... அவளுக்கு வருத்தமாக இருந்தது.

கணவனிடம் வந்தனாவின் குடும்பத்தார் ஆரம்பத்தில் எவ்வளவு அன்பாக அவர்களுடன் பழகினார்கள் என்பதை வருத்தத்துடன் நினைவுகூர்ந்தாள். “அப்படிப்பட்டவர்கள் இப்போது பேசுவது கூட இல்லை. சின்ன வயதுக்காரர்கள் சண்டையில் பெரியவர்கள் ஏன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பது எனக்குப் புரியவே மாட்டேன்கிறது. வந்தனாவின் அம்மா என்னைப் பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார். வந்தனா இந்தப்பக்கமே பார்ப்பதில்லை. அவள் அப்பா கொஞ்சம் பரவாயில்லை. நேருக்கு நேர் பார்த்தால் லேசாகவாவது புன்னகை செய்கிறார்......”

“என்ன விஷயம் என்று நேரடியாக நீ அவர்களிடமே போய்க் கேட்டிருக்கலாமே?” அக்‌ஷய் கேட்டான்.

“பார்த்தவுடனே முகத்தைத் திருப்பிக் கொள்கிறவர்களிடம் எப்படிப் போய் கேட்பது. ஒரே ஒரு தடவை வந்தனாவிடம் பேசப்போனேன். அந்தப் பெண் ஏதோ தொத்துவியாதிக்காரி நெருங்குவது போல ஓட்டம் பிடித்தாள்... பிறகு நானும் விட்டு விட்டேன்....”

வருத்தப்பட்ட மனைவியை அணைத்துக் கொண்ட அக்‌ஷய் அதற்கு மேல் அது பற்றிப் பேசவில்லை. அவனுக்கு சஹானா கிடைத்தது போல் ஒரு நல்ல நேசம் மிகுந்த மனைவி எதிர்காலத்தில் வருணுக்கும் வர வேண்டும் என்று ஆசைப்பட்டான். அந்தக் காதல் உண்மையாக இருந்தால் காலம் போகப் போக காதல் தேய்வதற்குப் பதில் ஆழப்படும் என்பது அவன் சொந்த அனுபவம். சேகர் தன் கூரிய கவனிப்பில் உணர்ந்ததில் தவறிருக்கவில்லை. இன்றும் சஹானா அக்‌ஷயிடம் ஆரம்ப பாதிப்புகளையே ஏற்படுத்துகிறாள்....

மனைவியை முத்தமிட்ட அவன் அவளை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றான்....


ருணுக்கு மைத்ரேயன் பெருந்தொந்தரவாகத் தோன்றியது. இது நாள் வரையில் அந்த அறை அவனுடையதும், கௌதமுடையதுமாக மட்டும் இருந்தது. ஆனால் மைத்ரேயன் வரவுக்குப் பின் அந்த அறை மைத்ரேயனுடையதுமாக மாறி விட்டது. கௌதம் மிக மகிழ்ச்சியுடன் தன் கட்டிலை மைத்ரேயனுடன் பகிர்ந்து கொண்டான். கௌதம் படுத்தவுடன் உறங்கியும் விட்டான். ஆனால் மைத்ரேயன் உறங்காமல் கட்டிலில் பத்மாசனம் போட்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து தியானத்தில் மூழ்கினான்.

எதிர் கட்டிலில் அவன் தியானம் செய்து கொண்டிருக்கும் போது வருணுக்குத் தூக்கம் வரவில்லை. இது என்ன பூஜை அறையா? என்று மனதில் விமர்சித்தான். எப்போதுமே அப்பாவின் ஒரு பக்கத்தில் கௌதம் உட்கார்ந்தால் மறுபக்கம் வருண் உட்கார்வான். இப்போது அந்த இடத்தை மைத்ரேயன் பிடித்துக் கொண்டது வருணுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இப்போது அறையிலும் பங்கு....

அவனைப் பார்த்தாலே ஆத்திரமாக இருந்ததால் வருண் கண்களை மூடிக் கொண்டு உறங்க பலவந்தமாக முயற்சித்தான். தூக்கத்திற்குப் பதிலாக அழைக்காமல் வந்தனா வந்தாள். புன்னகைத்தாள். பழைய நினைவுகளைக் கொண்டு வந்தாள். மனம் வலிக்க வைத்தாள். எல்லாம் அந்தக் கேவலமான மனிதன் உயிரோடு திரும்பி வந்ததால் தான்.... சேகரைப் பற்றி நினைத்ததுமே மனம் கொதித்தது. அப்பாவிடம் வாய் விட்டுச் சொல்லக்கூட முடியாத நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து விட்டானே பாவி....

கோபத்துடன் கண்களைத் திறந்த போது மைத்ரேயன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது இரவு விளக்கின் மங்கலான ஒளியில் தெரிந்தது. அவன் மனதில் ஓடியதை எல்லாம் படித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. சேகரைப் பற்றி, அதற்கு முன் வந்தனாவைப் பற்றி, அதற்கும் முன் மைத்ரேயனைப் பற்றி எண்ணியதெல்லாம் கூட...

”அவன் இருக்கையில் நீங்கள் என்ன நினைத்தாலும் சரி, அதைச் சொல்லாமலேயே தெரிந்து கொண்டு விடுவான்...” என்று அப்பா எச்சரித்தது இப்படித் தோன்ற வைக்கிறதா இல்லை, நிஜமாகவே இவனுக்குத் தெரிகிறதா என்று சந்தேகத்துடன் அந்த மெல்லிய ஒளியில் மைத்ரேயனை வருண் கூர்ந்து பார்த்தான். மைத்ரேயன் அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான். வருணுக்கு உடல் சில்லிட்டது.....


தே நேரம் எதிர் வீட்டில் இருந்த சேகரும் உறக்கம் வராமல் மைத்ரேயன் நினைவிலேயே இருந்தான். அந்தக் கூரிய பார்வை அவன் நினைவில் இப்போதும் இருந்தது. ’அந்தப் பையன் சூனியக்காரனோ? கூடுதல் சக்தி படைத்தவனோ? இல்லை அவன் ஜன்னல் தாண்டி சாதாரணமாய் பார்த்தது அரண்டு போயிருந்த எனக்கு அப்படித் தோன்றி விட்டதா?’ என்று கேட்டுக் கொண்டவன் மேலும் யோசித்து விட்டு ‘நான் அரண்டு போனதே அவன் அப்படிப் பார்த்துத் தானே’ என்று குழம்பினான். அந்த ஒரு கணம் பார்த்த அந்தச் சிறுவன் அப்புறம் அவன் பக்கமே பார்க்கவில்லை. ஆனாலும் கூட சேகர் அந்தப் பார்வையை உணர்ந்த வண்ணமே இருந்தான். அந்தப் பார்வையே அவனை ஒட்டிக் கொண்டது போல இருந்தது. ஒரு சின்னப் பொடியனைப் பார்த்து ஏன் இப்படி பயப்படுகிறோம் என்று தன்னையே திட்டிக் கொண்டு தைரியமாய் பைனாகுலர் வழியாகப் பார்த்தான். அவர்கள் எல்லாரும் அந்த ஹாலில் இருந்து செல்லும் வரை பார்த்தான். கடைசி வரை அந்தச் சிறுவன் அந்தப்பக்கமே பார்க்கவில்லை.

இரவு உறங்க முயற்சித்தாலும் அந்தப் பார்வையே அவன் மனதில் வந்து நின்றது. என்னக் கொடுமையிது என்று எழுந்து உட்கார்ந்த போது அவன் அலைபேசி அடித்தது. அழைத்தது அவனுடைய சகா தான்.

“எங்கே இருக்கிறாய்?” அவன் சகா கேட்டான்.

“கோயமுத்தூரில் தான். நீ?”

“நான் மைசூர் பக்கம் பைலகுப்பேயில் தான் இருக்கிறேன். எங்களுக்கு அந்தத் திபெத்தியக் கிழவர் இன்னும் வேலை வைத்திருக்கிறார்....”

சேகர் சின்ன எரிச்சலுடன் சொன்னான். “திபெத் நேபாளில் இருந்து எல்லாம் கிளம்பி இங்கே வந்து நம் உயிரை எடுக்கிறார்கள். இங்கே கூட ஒரு பொடியன் இருக்கிறான். நேபாளம் போல் இருக்கிறது. பார்க்க வித்தியாசமாய் இருக்கிறான். நம்மையும் வித்தியாசமாய் பார்க்கிறான்....”

அவன் சகா ஒரு கணம் தாமதித்து விட்டு மெல்லக் கேட்டான். “அந்தப் பையனுக்கு வயது எத்தனை இருக்கும்?”

”பத்து இருக்கும். ஏன் கேட்கிறாய்?”

“அந்தத் திபெத்திய கிழவரோடு ஒரு பத்து வயதுப் பையனை சம்பந்தப்படுத்தி தான் இங்கே பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பையனைத் தேடித் தான் அந்தக் கிழவரை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அது தான் கேட்டேன்....”

சேகர் மூளை வேகமாக வேலை செய்தது. இந்தப் பையன் அவர்கள் தேடும் பையனாக இருக்கலாமோ? பார்க்க நேபாளம் என்று நினைத்ததே வருண் அந்த ஆள் நேபாள் போயிருப்பதாய் ஆரம்பத்தில் வந்தனாவிடம் சொல்லி இருந்ததால் தான். சேகர் வாய்விட்டுச் சொன்னான். “அந்தப் பையன் நேபாளியாக இல்லாமல் திபெத்தியனாகக் கூட இருக்கலாம்... இங்கே அவனைக் காவல் காத்துக் கொண்டு கூட சிலர் நிற்கிறார்கள்.....”

சகா பரபரப்பாகச் சொன்னான். “காவல் காக்கிறார்களா? அந்தப் பையனின் புகைப்படத்தை அனுப்பி வையேன்....”

“இப்போது கைவசம் இல்லை.... நாளை அனுப்பி வைக்கிறேன்..... அந்தப் பையனை எதற்காகத் தேடுகிறார்கள் தெரியுமா?”

“சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவனைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் நமக்கு லட்சக்கணக்கில் கிடைக்கும் என்று தலைவர் சொல்கிறார். எதற்கும் நீ முடிந்தால் காலையிலேயே எனக்கு அவன் புகைப்படம் அனுப்பி வை..... அவன் தானா என்று பார்த்து விடுவோம்.”

லட்சக்கணக்கில் என்று கேள்விப்பட்ட பிறகு சேகரின் தூக்கம் முழுவதுமாகத் தொலைந்து போனது. மறுநாள் காலை வரை காலம் அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. அவ்வப்போது எழுந்து போய் ஜன்னல் வழியே எதிர் வீட்டு இருட்டைப் பார்த்தான். இருட்டில் அந்தக் கண்கள் தன்னைப் பார்ப்பது போல உணர்ந்தான். மெல்லப் பின்வாங்கினான். அந்தப் பையனும் அந்த இருட்டில் ஒளிந்து கொண்டு தன்னைக் கண்காணிக்கிறானோ?

ஒருவழியாக விடிந்தது. ஜன்னல் திரையைப் போட்டு விட்டு ஒரு இடுக்கில் இருந்து எதிர்வீட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தான். ஹாலில் போக்குவரத்து தெரிந்தது. மரகதமும், சஹானாவும் தான் அங்குமிங்கும் போனார்கள்.... அந்தச் சிறுவனும் கௌதமும் காலை எட்டு மணிக்கு ஹாலில் தென்பட்டார்கள். ஆனால் பையனை சரியாகப் படம் எடுக்க முடியவில்லை. காலை ஒன்பதரை மணிக்கு விளையாட அவன் கௌதமுடன் வெளியே வந்த போது சேகர் அவசரமாகவும் ரகசியமாயும் இரண்டு புகைப்படங்களை எடுத்தான். அவன் எடுத்த இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் அந்தச் சிறுவன் காமிராவையே பார்த்துக் கொண்டிருந்தான். சேகருக்கு வியர்த்தது. அங்கிருந்து அவன் எதிர்வீட்டு மாடியைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே. ஏன் பார்க்கிறான்....

கௌதமுடன் அவன் போய் விட்டான். காவலில் இருந்த மூன்று பேர் அவர்களைப் பின் தொடர்ந்ததை சேகர் கவனித்தான். அவசர அவசரமாய் அந்தச் சிறுவன் காமிராவையே பார்க்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தான்.



ரண்டு மணி நேரத்தில் சீன உளவுத்துறைக்கு அந்தப் புகைப்படம் போய்ச் சேர்ந்தது. உளவுத்துறை அதிகாரி ஒருவன் அந்தப் புகைப்படத்தோடு லீ க்யாங்கை சந்தித்தான். “நாம் தேடும் சிறுவன் இவன் தானா என்று கேட்கிறார்கள்?

அந்தப் புகைப்படத்தைக் கையில் வாங்கிய லீ க்யாங்குக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. அந்தப் புகைப்படத்தில் இருந்த மைத்ரேயன் அவனையே பார்த்தான். எந்த உணர்ச்சியும் இல்லாத ஆழமான பார்வை! இது வரை பார்த்த புகைப்படங்களில் இருந்த மந்தப் பார்வை இதில் இல்லை.

நிமிர்ந்து உட்கார்ந்த லீ க்யாங் கேட்டான். “இவன் இப்போது எங்கிருக்கிறான்?”

(தொடரும்)

என்.கணேசன்

7 comments:

  1. சுஜாதாMarch 31, 2016 at 7:10 PM

    கணேசன் சார் என்ன இந்த மாதிரி இடமாய் தொடரும் போடுகிறீர்கள். மாராக்கு மட்டுமல்லாமல் லீ க்யாங்குக்கும் மைத்ரேயனை காட்டிக் கொடுத்து விட்டீர்கள். அடுத்த வியாழன் வரை எப்படி காத்திருப்பது?

    ReplyDelete
  2. Wow super. Now is AKshay+Maithreyan Vs Li kyaang and Maraa. Sema.

    ReplyDelete
  3. I am waiting for Akshai's action :)

    ReplyDelete
  4. என்னங்க நடக்குது இங்க. ..? நாம இன்னும் ஒரு வாரம் வரை காத்திருக்கனுமா....? டென்ஷன் பண்றீங்க கணேசன் அய்யா

    ReplyDelete
  5. உங்கள் நீ நான் தாமிரபரணி நூலை இப்போது தான் படித்து முடித்தேன். மனம் நிரைவாக இருக்கிறது. நிஜமாகவே ஒரு காவியம் தான். கேரக்டர்கள் அருமை. என்றும் மனதில் நிற்பார்கள். இதே போல் இந்த நாவலையும் புத்தகமாக போட்டால் நன்ராய் இருக்கும்.

    ReplyDelete
  6. Sir, why you did not give this story to aanatha Vigadan or other magazine? It would have gone to more and more people...

    ReplyDelete