சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 25, 2015

நாற்பது நாட்களில் யோகியின் அற்புதம்!

மகாசக்தி மனிதர்கள்-24
லாகூரில் புதைக்கப்படும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்பே யோகி ஹரிதாஸ் அதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்திருந்தார். அந்த நாட்களில் வெறும் பால் ஆகாரம் மட்டுமே சாப்பிட்டு வந்த அவர் புதைக்கப்படும் நாளில் அதையும் தவிர்த்து விட்டார். அந்த நாளில் சுமார் முப்பது கஜ நீள, மூன்று அங்குல லினன் துணியை விழுங்கி மறுபடி வெளியே உருவி எடுத்து தன் வயிற்றை சுத்தப்படுத்தி துடைத்து எடுத்துக் கொண்டார். இந்த வகை தயார்ப் படுத்திக் கொள்ளும் நிலை மற்றவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றக் கூடும். ஆனால் ஹத யோகிகள் தங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் பல விதங்கள் அவர்களுக்கு உதவுவதாகவே உள்ளன.
அன்றைய நாள் யோகி ஹரிதாஸ் தன் தாடியை நீக்கி சவரம் செய்து கொண்டு வந்திருந்தார். மகாராஜா ரஞ்சித்சிங்கின் சேவையில் இருந்த சில பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் யோகி ஹரிதாஸின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள். நீராகாரம் மட்டுமே சில நாட்கள் உட்கொண்டு வந்ததால் யோகி ஹரிதாஸ் பலவீனமாகவே தோன்றினார்.  யோக ஆசன நிலையில் நிமிர்ந்து நேராக அமர்ந்த அவர்  தன் நாக்கை தொண்டைக் குழியில் மடித்து வைத்து, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டார். பின் மூச்சை நிறுத்திக் கொண்டார். அவர் உடலின் துவாரங்கள் பஞ்சாலும் மெழுகாலும் அடைக்கப்பட்டன. அவர் உடல் லினன் துணியால் சுற்றப்பட்டு பின்னர் நான்கு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு மரப் பெட்டியில் வைக்கப்பட்டது.
மகாராஜா ரஞ்சித் சிங் யோகி ஹரிதாஸால் ஏமாற்றாமல் இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட முடியாது என்று நம்பினார் என்று கேப்டன் ஆஸ்போர்ன் தெரிவிக்கிறார். அதனால் மகாராஜா ரஞ்சித் சிங் இந்த நிகழ்ச்சிக்கு ஏமாற்றவே முடியாதபடி பிரத்தியேக முயற்சிகள் மேற்கொண்டிருந்தார். முதலாக அந்த மரப்பெட்டியைத் தன் கையாலேயே ஒரு பெரிய வலுவான பூட்டைக் கொண்டு மகாராஜா பூட்டினார்.
அந்த மரப்பெட்டியை லாகூர் அரண்மனையை அடுத்த ஒரு பெரிய தோட்டத்தில் சில அடிகள் ஆழத்தில் தோண்டி இருந்த ஒரு குழியில் இறக்கி வைத்து விட்டு பிறகு மண்ணால் மூடினார்கள். மூடிய மண்ணில் தண்ணீர் ஊற்றி சில பார்லி விதைகளை அந்த மண்ணின் மீது தூவினார்கள். அந்த இடத்தைச் சுற்றி செங்கல் சுவர் அறை ஒன்று முன்பே எழுப்பப்பட்டிருந்தது. அந்த அறையைப் பூட்டினார்கள். அந்தப் பூட்டில் தன்னுடைய முத்திரையைப் பதித்து மகாராஜா ரஞ்சித் சிங்கே மூடினார்.  பூட்டிய அந்த அறைக்கு வெளியே பகலில் நான்கு காவலாளிகளும், இரவில் எட்டு காவலாளிகளும் காவலுக்கு இருத்தப் பட்டார்கள். இரண்டிரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை காவலாளிகள் மாற்றப்பட்டார்கள். இருபத்தி நாலு மணி நேரமும் காவல் இருந்தது. அந்தக் காவல் நாற்பது நாட்களும் நீடித்தது.
இந்த ஏற்பாட்டில் எந்தவித ஏமாற்று வேலையும் நடைபெற வாய்ப்பே இருக்கவில்லை. மூச்சை சில நிமிடங்கள் நிறுத்துவதே முடியாத காரியம் என்கிற போது மூக்கின் துவாரங்கள் கூட மூடப்பட்ட ஒருவர் சில மணி நேரங்கள் கூட உயிர் பிழைக்கவே வாய்ப்பில்லை. அதில் ஏதாவது தில்லுமுல்லு இருந்தால் கூட மூடப்பட்டிருந்த மரப்பெட்டியில், அதுவும் மண்ணில் புதைக்கப்பட்ட மரப்பெட்டியில் உயிர்வாழ்வது முடியவே முடியாத காரியம்.
அந்த மரப்பெட்டியில் இருந்து தப்பித்து மேலே வருவதும் அசாத்தியமானது. அப்படி எதாவது நிகழ்ந்தால் மேலே விதைக்கப்பட்டிருந்த பார்லிச் செடி அரும்புகள் அகற்றப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டு விடும். அதையும் தாண்டி வெளியே வர வாய்ப்பே இல்லை. மகாராஜா ரஞ்சித் சிங்கே தன் முத்திரையை வைத்துப் பூட்டியிருந்த அந்த செங்கல் கட்டிட அறையை விட்டு வருவதும், அங்கு எப்போதுமே காவலுக்கு இருந்த நான்கு அல்லது எட்டு காவலாளிகள் கண்களில் மண்ணைத் தூவித் தப்பிப்பதும் நடக்கவே முடியாத காரியம். எனவே நாற்பது நாட்கள் கழிந்த பின் யோகி ஹரிதாஸின் பிணத்தைத் தான் வெளியே எடுக்கப் போகிறோம் என்பதில் மகாராஜாவுக்கு சந்தேகம் இருக்கவில்லை.
நாற்பது நாட்கள் வேகமாக நகர்ந்தன. புதைந்திருந்த யோகியை மறுபடி வெளியே எடுக்கும் நாள் வந்ததும் மகாராஜா ரஞ்சித் சிங்கும் மற்றவர்களும் பரபரப்பானார்கள். மகாராஜா ரஞ்சித் சிங் யானையின் மீதேறி அந்தத் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் பிரிட்டனின் பிரதிநிதியான இருந்த சர் க்ளாட் வாட்டும், புதைக்கும் போது உடன் இருந்த பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேய மருத்துவர்களும், அரசவையின் முக்கியஸ்தர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். பொது மக்களும் பெருமளவு வந்திருந்தனர். அனைவருக்கும் யோகி ஹரிதாஸ் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பதை அறிய பேராவல் இருந்தது.
மகாராஜா ரஞ்சித்சிங் தன் முத்திரை பூட்டில் இப்போதும் இருக்கிறதா என்று முதலில் பார்த்தார். இருந்தது. பின் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே சென்றார்கள். யோகி புதைக்கப்பட்ட இடத்தில் பார்லி செடிகள் நன்றாகவே முளைத்திருந்தன. மண்ணைத் தோண்டி பெட்டியை எடுத்து அந்தப் பெரிய பூட்டையும் கழற்றினார்கள். வெள்ளை நிற லினன் துணியால் சுற்றியிருந்த யோகியின் உடலை வெளியே எடுத்தார்கள். பிணம் போலவே சில்லிட்டு கட்டை போல் ஆகி இருந்த உடல் தோற்றத்தில் அவர்கள் வைத்தது போலவே இப்போதும் இருந்தது.  சவரம் செய்து மழித்திருந்த யோகி ஹரிதாஸின் முகம் இப்போதும் வழுவழுவென்றே இருந்தது.
மருத்துவர்கள் யோகி ஹரிதாஸின் உடலைப் பரிசோதித்தார்கள். இதயத் துடிப்போ, நாடித்துடிப்போ இருக்கவில்லை. உடல் சில்லிட்டுப் போயிருந்தாலும் தலையில் மூளைப்பகுதியில் மட்டும் வியக்கத்தக்க வகையில் லேசான வெப்பம் இருந்தது.
யோகி ஹரிதாஸின் சீடன் ஒரு யோகியின் உடலை வெந்நீரால் குளிப்பாட்ட ஆரம்பித்தான். சில்லிட்டு கட்டை போல ஆகி இருந்த உடலின் இறுக்கம் தளர ஆரம்பித்தது. கை கால்களைத் தேய்க்கும் பணியில் சீடன் ஈடுபட்டான். திகைப்பில் ஆழ்ந்திருந்த மகாராஜா ரஞ்சித் சிங்கும், சர் களாட் வாட்டும் யோகியின் இரு கைகளையும் ஆளுக்கொருவர் தேய்க்கும் வேலையை மேற்கொண்டார்கள்.  உடலில் வெப்பம் தங்க ஆரம்பித்தது.
பின் சீடன் யோகியின் மூக்கிலும் காதிலும் அடைத்திருந்த பஞ்சையும் மெழுகையும் அகற்ற ஆரம்பித்தான். பின் கத்தி முனையைக் கவனமாக யோகியின் உதடுகளுக்கு இடையே வைத்து கஷ்டப்பட்டு வாயை இடது கையால் திறந்து மடிந்து கிடந்த யோகியின் நாக்கை விரித்து வைத்தான். நாக்கு மறுபடியும் மடிந்து கிடந்த பழைய நிலைக்கே போய் விட்டது. இப்படியே சில முறை ஆனது. மிகவும் பொறுமையுடன் சீடன் முயன்று ஒருவழியாகத் தன் முயற்சியில் வெற்றியடைந்து நாக்கை இயல்பான நிலைக்குக் கொண்டு வந்தான்.
யோகியின் கண்களில் சீடன் நெய்யை வைத்துத் தேய்த்து அவருடைய தலையில் ஏதோ ஒரு மருந்துக்கட்டியை வைத்து பல முறை தேய்த்தான். கடைசியில் யோகியின் உடல் பயங்கரமாக ஒரு முறை சிலிர்த்து நடுங்கியது. யோகி லேசாக மூச்சு விட ஆரம்பித்தார். சீடன் யோகியின் வாயில் சிறிது நெய்யை விட்டு அவரை மெல்ல விழுங்க வைத்தான். யோகி பழைய நிலைக்கு மெல்ல வர ஆரம்பித்தார்.
மருத்துவர்கள் பரிசோதிக்கையில் யோகியின் நாடித் துடிப்பு லேசாக கேட்க  ஆரம்பித்தது. ஆனால் யோகி இன்னமும் பலவீனமாகவே இருந்தார். இதை எல்லாம் மிகுந்த வியப்புடன் மகாராஜா ரஞ்சித்சிங்கும், சர் க்ளாட் வாட்டும் மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தனர்.
யோகி ஹரிதாஸ் பலவீனமான குரலில் மகாராஜாவைப் பார்த்துக் கேட்டார். “இப்போதாவது என்னை நம்புகிறீர்களா மகாராஜா?
“பூரணமாக நம்புகிறேன் என்று கூறிய மகாராஜா ஒரு முத்து மாலையையும், ஒரு ஜதை தங்க கைக்காப்புகளையும் யோகி ஹரிதாஸுக்கு அணிவித்ததோடு பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்தினார்.  
இந்தப் பரிசோதனை நிகழ்ச்சி சர் க்ளாட் வாட் மற்றும் கேப்டன் ஆஸ்போர்ன் ஆகிய இருவர் அருகில் இருந்து பார்த்து எழுதியதால் உலக அளவில் மிகவும் பேசப்பட்டது. லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலகிராஃப் என்ற பிரபல பத்திரிக்கையும் இந்த நிகழ்ச்சி பற்றி விரிவாகவே 1880ஆம் ஆண்டு எழுதியது. உயிர் வாழ்தல் என்பதை சில காலம் நிறுத்தி வைத்துப் பின் தொடர முடியும் என்பதை யோகிகளால் அல்லாமல் வேறு யாரால் செய்து காட்ட முடியும்?
-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 27.02.2015 

Thursday, May 21, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 47


 க்‌ஷய் வீட்டிற்கு எதிர் மாடியில் குடிவந்திருப்பவன் பகல் பொழுதுகளில் வெளியே வருவதைக் கூடுமான அளவு தவிர்த்தான். இருட்டிய பின் வெளியே சென்று வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு வேகமாக அவன் வீடு திரும்புவான். அப்போது கூட எதிர்ப்படும் நபர்களை அவன் நேருக்கு நேர் பார்ப்பதையோ அவர்களுடன் பேசுவதையோ அவன் தவிர்த்தான். கீழ் வீட்டில் குடியிருக்கும் வந்தனாவின் குடும்பத்தினரே கூட அவனிடம் பேச முடியவில்லை.

வந்தனாவின் தாய் ஜானகிக்கு வாயை மூடிக் கொண்டிருப்பது போல் ஒரு பெருங்கஷ்டம் வேறில்லை. அதனால் வீட்டு வேலைகளை வேக வேகமாக முடித்து விட்டு பேசும் வேலையை சிரத்தையுடன் அவள் செய்வாள். பேசுவதற்கு இன்னார் தான் வேண்டும் என்ற பிடிவாதம் எல்லாம் அவளிடம் இல்லை. கிழவிகளில் இருந்து மூன்று வயதுக் குழந்தைகள் வரை ஏதாவது ஒரு ஜீவன் அவளுக்குப் பேசக் கிடைத்தால் போதும். அப்படிப்பட்டவளுக்கு மாடி வீட்டில் வசிக்கும் சினிமாக்காரரிடம் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாதது பெரிய குறையாகவே இருந்தது. தன் கணவன் மாதவனிடம் அவள் ஆச்சரியப்பட்டாள்.  “இந்தக் காலத்தில் பெண்களே கூட குனிந்த தலை நிமிராமல் தெருவில் நடப்பதில்லை. நம் மாடி வீட்டுக்காரர் ஏன் இப்படி இருக்கிறார்? தெருவில் மட்டுமல்ல இங்கே மாடி ஏறும் கூட அவர் நிமிர்ந்து நடக்க மாட்டேன்கிறார்?

“கொஞ்சம் நிமிர்ந்தால் கூட உன்னை மாதிரி ஆள்கள் என்ன சினிமா, என்ன கதை, யார் நடிகர்கள், எப்போது படம் வெளியீடு என்று கேட்க ஆரம்பித்து விடுவீர்கள். பிறகு அவருக்கு கதை எழுத எங்கே நேரம் கிடைக்கப் போகிறது? அதனால் தான் அவர் தலையே நிமிர்வதில்லை போல இருக்கிறதுஎன்று சொல்லி விட்டு அவள் பதில் சொல்லும் முன் சாமர்த்தியமாக மாதவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.

குளியலறைக் கதவை முறைத்து விட்டுத் திரும்பிய ஜானகி சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்த வந்தனாவைப் பார்த்துக் கோபப்பட்டாள். “என்னடி சிரிப்பு?

அதற்கும் மேல் வந்தனா தாயிடம் திட்டு வாங்கி இருப்பாள். வருண் அந்த நேரமாக அங்கே வந்து அவளைக் காப்பாற்றினான். வருணும் வந்தனாவும் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு கதைக்க ஆரம்பித்தார்கள்.

மாடி வீட்டு ஆள் தன் படுக்கை அறை ஜன்னலில் காதை வைத்துக் கீழே அவர்கள் பேசுவதைக் கேட்க முயன்று கொண்டிருந்தான். எங்கு நின்று காதைக் கூர்மையாக்கினால் கீழ் வீட்டில் எங்கு பேசுவதைக் கேட்கலாம் என்பது இந்த இரண்டு நாட்களில் அவனுக்கு அத்துபடி ஆகியிருந்தது. இது வரை கீழ் வீட்டில் பேசியதை எல்லாம் அவன் பெரும்பாலும் கேட்டிருக்கிறான். அவர்கள் பேச்சில் எதிர் வீட்டைப் பற்றிய தகவல் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிவது தான் அவன் உத்தேசம். ஆனால் கீழ் வீட்டு அம்மாள் தேவையே இல்லாமல் வேறு எதை எதையோ பற்றி தான் அதிகம் பேசி இருந்தாள். நேற்று எதிர்வீட்டு ஆள்கள் மிக நல்ல மாதிரி, மாமியார் மருமகள் நல்ல அன்னியோன்னியம், வருண் தங்கமான பையன் என்கிற மூன்று அபிப்பிராயங்கள் மட்டும் தான் அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து அவனுக்குக் கிடைத்தது. அனாவசியமாகவே அதிகம் பேசிக் கொண்டிருக்கும் அந்த அம்மாளை அந்த ஆள் இது வரை விவாகரத்து செய்யாதது அந்த ஆளின் பொறுமையைத் தான் காட்டுகிறது என்று அவன் நினைத்தான்.

இப்போது வருணும் வந்தனாவும் பேசிக் கொண்ட ஆரம்பப் பேச்சுகள் எல்லாம் அவர்கள் கல்லூரியைப் பற்றியும் அவர்கள் ஆசிரிய ஆசிரியைகள் பற்றியும் தான் இருந்தது. பின் சிறிது இடைவெளிக்குப் பின் வந்தனா வருணின் தந்தையைப் பற்றிக் கேட்டதும் மாடி வீட்டு ஆசாமி உடம்பெல்லாம் காதானான்.

வந்தனா கேட்டாள். “உங்கப்பா எந்த ஊருக்குப் போயிருக்கிறார்?

வருணிடம் இருந்து உடனடியாகப் பதில் வரவில்லை. அவனுக்கு அவளிடம் உண்மையைச் சொல்லவும் முடியவில்லை. பொய் சொல்லவும் மனமில்லை. கடைசியில் பொய்யும் அல்லாமல் முழு உண்மையும் அல்லாமல் சொன்னான். “நேபாள் போயிருக்கிறார்”. இந்தியாவில் இருந்து அவன் அப்பா நேபாள் அல்லவா முதலில் போனார்?

உன் அப்பா எப்படி? உன் அம்மா மாதிரியே நன்றாகப் பேசுவாரா இல்லை அமைதியான ஆளா?

வந்தனா ஏன் இவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று வருத்தப்படுகிற அளவு வருண் தந்தையின் புகழ் பாட ஆரம்பித்தான். மிக மிக நல்லவர், வல்லவர், அன்பு மயமானவர் என்றெல்லாம் அவன் சொல்லிக் கொண்டு போன போது மாடிவீட்டு ஆசாமிக்கு காதில் இரத்தமே வழிந்து விடுவது போல் இருந்தது. அந்த மிக நீண்ட பேச்சின் ஒட்டு மொத்த சாராம்சம் அவனுடைய தந்தையைப் போல உலகத்தில் யாருடைய தந்தையும் இருக்க முடியாது என்பது தான்.

மாடி வீட்டு ஆளுக்கு வருண் “நேபாள் போயிருக்கிறார்என்று சொல்ல எடுத்துக் கொண்ட இடைவெளி நேரம் அது பொய் என்பதை உறுதியாகச் சொன்னது. ஏன் இவன் பொய் சொல்கிறான்? அந்த ஆள் எங்கே போயிருப்பான்?......  கீழ் வீட்டில் பேசுவதை ஒட்டுக் கேட்பது போல எதிர் வீட்டில் பேசுவதை ஒட்டுக் கேட்க முடிந்தால் எத்தனையோ நன்றாய் இருக்கும். பைனாகுலரில் ஆட்களின் நடவடிக்கைகளைத் தான் கண்காணிக்க முடியுமே தவிர பேசுவதைக் கேட்க வழியில்லையே! 



புத்த பிக்கு தன் அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போயிருந்தார். அதனால் யாரும் திடீரென்று வந்து விடுவார்களோ என்று அக்‌ஷயும், மைத்ரேயனும் பயப்படத் தேவை இருக்கவில்லை. இருவரும் சும்மா அமர்ந்திருந்தாலும் அக்‌ஷய் பார்வை மைத்ரேயன் மீதே கூர்மையாகப் பதிந்திருந்தது.

மைத்ரேயன் “என்னஎன்பது போல அக்‌ஷயைப் பார்த்தான்.

“புத்த பிக்குவின் விரல் வீக்கத்தை நீ எப்படி குணப்படுத்தினாய்?”  அக்‌ஷய் கேட்டான்.

“நான் ஒன்றும் குணப்படுத்தவில்லை. அது தானாகவே குணமாயிருக்கிறது.மைத்ரேயன் சொன்னான். அக்‌ஷய்க்கு அவன் சொன்னதை நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. புத்த பிக்கு தன்னைக் குணப்படுத்தியது மைத்ரேயனே என்று மிக உறுதியாக நம்பினார். நான்கு நாட்களாகக் குறையாமல் இருந்த வீக்கமும், வலியும் திடீரென்று குறைய வேறு காரணமே இல்லை என்று அக்‌ஷயிடம் சொல்லி இருந்தார். அது இவன் சொல்வது போல காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்குமோ?

மைத்ரேயன் வெகுளித்தனமாக அக்‌ஷயைப் பார்ப்பதைக் கவனித்த போது அக்‌ஷய்க்கு இவன் நடிக்கிறானோ என்கிற சந்தேகமும் வந்தது. புத்த பிக்கு பரவசத்துடன் வணங்கி நின்ற போது பசிக்கிறது என்று சொன்னது கூட அவர் பூஜிக்க ஆரம்பிப்பதைத் தவிர்க்க திசை திருப்பியதாக இருக்கலாம்.

அக்‌ஷய் மெல்ல கேட்டான். “ஒரு ஆள் இந்த மடாலயத்திலேயே உன்னைக் கொல்ல முயன்றானே அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

“ஒன்றும் நினைக்கவில்லை

“ஏன்?

“அந்த ஆளைப் பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும்?” லேசான ஆச்சரியத்தோடு அவன் கேட்டான்.

அக்‌ஷய்க்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவனைப் பற்றிக் கூட ஏன் நினைக்க வேண்டும் என்று மைத்ரேயன் கேட்டது நடிப்போ, அலட்சியமோ, அகங்காரமோ இல்லை என்பதை மட்டும் அக்‌ஷயால் அந்தக் கணத்தில் உணர முடிந்தது.   இவனுடைய எதிரிகள் இவன் உடலை மட்டுமல்ல எண்ணத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்பதே அவனுக்குப் பேராச்சரியமாக இருந்தது. மனித இயல்புகளை ஆழமாக அறிய முடிந்த அவனுக்கு இது மனித இயல்பே அல்ல என்று உறுதியாகக் கணிக்க முடிந்தது. இவன் நிஜமாகவே தெய்வீகப் பிறவியே என்று தோன்ற ஆரம்பித்தது. இவனை ஒருமையில் நினைப்பதும், பேசுவதும் கூட சரியல்ல என்றும் தோன்றியது. அதே நேரத்தில் அவனுடைய பிள்ளைகளைப் போல இரவில் ஒட்டிக் கொண்டு படுக்கும் அந்தச் சிறுவனை போதிசத்துவரே என்று அழைப்பதும் அன்னியமாய் பட்டது.

அக்‌ஷய்க்கு அவனிடம் நேரடியாகவே ஒரு கேள்வி கேட்டு அவன் பதிலைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. மெல்ல மைத்ரேயனைக் கேட்டான். “நான் ஒரு கேள்வி கேட்டால் மழுப்பாமல் பதில் சொல்வாயா?

“கேளுங்கள்

“நீ கௌதம புத்தரின் மறு அவதாரமா?

“நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?அவன் பதில் கேள்வி கேட்டான்.

“தெரியாது

“பின் எனக்கு மட்டும் நான் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தேன் என்பது எப்படித் தெரியும்?

அக்‌ஷய் பேச்சிழந்து போனான்.



வாங் சாவொ சம்யே மடாலயத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். வரும் வழியில் இருந்த சிறு ஊர்களில் தன் ஜீப்பை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் அக்‌ஷய், மற்றும் மைத்ரேயன் புகைப்படங்களைக் காட்டி கேள்வி கேட்டிருந்தான். ஓரிருவர் அவர்களில் அக்‌ஷயை அடையாளம் கண்டு கொண்டார்கள்.  ஒரு ஜீப்பில் அவனைப் பார்த்த விவரங்களைச் சொன்னார்கள். 


அவர்கள் பார்த்த மைத்ரேயன் புத்த பிக்கு ஆடையில் இருந்ததால் அவர்களுக்கு அவனைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அக்‌ஷயுடன் லாஸா விமான நிலையத்தில் வந்திறங்கிய புத்தபிக்குச் சிறுவன் படத்தைக் காட்டி அவர்கள் பார்த்தது அவனையா என்று கேட்ட போது அந்தச் சிறுவனாக இருக்கலாம் என்று சொன்னார்கள். வாங் சாவொ அவர்கள் கருத்தால் பாதிக்கப்பட்டு விடவில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும் போது அந்தச் சிறுவன் ஏறத்தாழ மைத்ரேயனைப் போலவே தெரிவான் என்பது உண்மையே!

வாங் சாவொவிற்கு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. லீ க்யாங் உத்தேசமாகச் சொன்னது நூறு சதவீதம் சரியே. மைத்ரேயனும் அந்த போலி பிக்குவும் சம்யே மடாலயம் போயிருப்பது நிச்சயம். இது புரிந்தவுடன் வாங் சாவொவின் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறியது. உடனடியாக அலைபேசியில் ஒரு நபரைத் தொடர்பு கொண்டு முப்பது ஆட்களை  துப்பாக்கிகளுடன் சம்யே மடாலயத்திற்கு அனுப்பி வைக்கச் சொல்லி  விட்டு வாங் சாவோ மிக வேகமாக சம்யே மடாலயம் வந்து சேர்ந்தான்.



(தொடரும்)

என்.கணேசன்

(பயணம் செல்ல இருப்பதால் புத்தம் சரணம் கச்சாமி 48 அடுத்த வியாழன் (28-5-2014) அன்று பதிவேறாது. அதற்கும் அடுத்த வியாழன் 
(4-6-2014) அன்று பதிவேறும். வாசகர்கள் பொறுத்தருள்க!)


Monday, May 18, 2015

மண்ணில் புதைந்தும் மரணமில்லாத யோகி!



23.மகாசக்தி மனிதர்கள் 


ன் உடலை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் ஒரு ஹத யோகியால் வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு பல உதாரணங்களை வரலாறு ஆதாரபூர்வமாக பதிவு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சராசரி மனிதன் செய்ய முடியாததைச் செய்து காட்டி இருக்கிறார்கள். அந்தப் பதிவுகளில் ஒரு சிறப்பான இடம் யோகி ஹரிதாஸுக்கு உண்டு. இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடநாட்டின் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த யோகி. இவரால் பல நாட்கள் உணவு நீரின்றி மட்டுமல்ல நிலத்தடியில் புதைந்திருக்கவும் முடியும். இந்த யோகியைப் பற்றி இந்தியர்களும், மேலை நாட்டவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

முக்கியமாய் ஜேம்ஸ் ப்ரெய்ட் (James Braid )  என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவரும் விஞ்ஞானியுமானவர் தன் சமகாலத்தவரான யோகி ஹரிதாஸ் பற்றி எழுதியுள்ளார். அவர் நவீன ஹிப்னாடிசத்தின் தந்தையாக மேலை நாடுகளில் கருதப்படுபவர். அவர் 1850 ஆம் ஆண்டு எழுதிய Observations on Trance or Human Hibernation நூலில் யோகி ஹரிதாஸ் 3, 10, 30 மற்றும் 40 நாட்கள் உயிரோடு புதைந்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் முதல் மற்றும் கடைசி சுவாரசியமான நிகழ்வுகளை விரிவாக இங்கே பார்ப்போம். 1828 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு பகுதியில் அப்பகுதி கனவான் ஒருவரிடமிருந்து பிரிட்டிஷ் மேஜரிடம் ஒரு வித்தியாசமான விண்ணப்பம் வந்தது.  அப்பகுதியில் ஒரு யோகி உயிரோடு ஒன்பது நாட்கள் புதைந்தும் இறக்காமல் எழும் பரிசோதனை ஒன்றை நடத்திக் காட்ட அனுமதியை அந்தக் கனவான் கேட்டிருந்தார். 

அது போன்ற அமானுஷ்யங்களில் நம்பிக்கை இல்லாத மேஜர் உடனடியாக அதற்கு அனுமதி தரவில்லை. ஆனாலும் மிலிட்டரி ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு பகுதியில் அவர்கள் மேற்பார்வையிலேயே ஒரு பரிசோதனை நடந்தால் அதன் நம்பகத்தன்மை உறுதிப்படும் என்று நம்புவதாக அந்தக் கனவான் தொடர்ந்து வற்புறுத்தவே இறுதியில் அந்த மேஜர் அனுமதி தந்தார். அதே சமயம் இந்தப் பரிசோதனையில் எந்த தில்லுமுல்லும் நடக்காமல் இருக்க தன்னுடைய வீரர்களையே காவலுக்கும் நிறுத்த உத்தரவிட்டார்.

யோகி ஹரிதாஸைப் புதைக்கும் நிகழ்ச்சி சுமார் ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில் நடந்தது. சுமார் மூன்று முதல் நான்கு அடிகள் வரை வெட்ட வெளியில் குழி தோண்டி, யோகி ஹரிதாஸை சவப்பெட்டியில் வைக்காமல் ஒட்டகத்தின் தோலால் சுற்றி வைத்துப் புதைத்தார்கள். அவரைப் புதைத்து விட்டு மறுபடியும் மண்ணைப் போட்டு மூடினார்கள். புதைத்த இடத்தில் காவலுக்கு தன் படையில் இருந்த முகமதிய வீரர்களை மேஜர் நிறுத்தினார். காவலுக்கு இந்து வீரர்களை நிறுத்தினால் அவர்கள் அந்த யோகிக்கு சாதகமாக இருந்தார்கள் என்று பரிசோதனையின் மீது சிலருக்கு சந்தேகம் வரலாம் என்பதால் அவர் அப்படி செய்தார். ஆனால் அவர்கள் ஏதாவது செய்து பரிசோதனையைக் குழப்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளூர் ஆட்கள் சிலரும் அந்த இடத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அதனால் என்னேரமும் ராணுவ வீரர்களும், உள்ளூர் மக்களும் அந்த இடத்தில் இருந்தார்கள்.

மூன்று நாட்கள் இப்படி நகர்ந்தன. ஆனால் புதைக்கப்பட்ட ஆள் இறந்து போவது உறுதி என்று அந்த பிரிட்டிஷ் மேஜருக்குத் தோன்றியதால் இந்த சூழ்நிலை அது வரை இல்லாத ஒரு புதிய அச்சத்தை அவருக்கு ஏற்படுத்தியது. அப்படி அந்த யோகி இறந்தால் உள்ளூர் மக்களுக்கும் முகமதிய வீரர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கலவரமாக அது மாறினால் மேலிடத்தில் தான் அனாவசியமாக விசாரணைக்கு உள்ளாக வேண்டும் என்று அவர் பயந்தார். ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூட நீதிமன்றத்தில் தண்டனைக்குள்ளாகலாம் என்கிற அளவுக்கு அவரது சிந்தனை ஓடியதால் ஒன்பது நாட்கள் தந்திருந்த அனுமதியை அவர் மூன்றாவது நாளிலேயே விலக்கி விட்டார். அவருடைய அனுமதியைக் கோரிய கனவான் கண்டிப்பாக அந்த யோகியின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் முன்பு கொடுத்த அனுமதியை விலக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டார். இது போல் பல முறை அந்த யோகி அபாயத்திற்கு உட்படாமல் புதைக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னார்.  ஆனால் அந்த மேஜர் அனாவசியமாக ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாததால் அவர் கோரிக்கையை ஏற்கவில்லை.  உடனடியாக அந்த மண்ணைத் தோண்டி யோகியின் உடலை வெளியே எடுக்க உத்தரவிட்டார். அப்படியே நூற்றுக் கணக்கானவர்கள் முன்னிலையில் உடல் வெளியே எடுக்கப்பட்டது.

அந்த பிரிட்டிஷ் மேஜர் உடலைத் தொட்டுப் பார்த்தார். உடல் சில்லிட்டு கட்டையாகப் போயிருந்தது. நினைத்தபடியே அந்த யோகி இறந்து விட்டாரே என்று மேஜர் பயந்து போனார். ஆனால் யோகி ஹரிதாஸின் சீடர்கள் அப்படி பயப்படவில்லை. அவர்கள் சாவகாசமாக வந்து அந்த யோகியின் தலை, கண்கள், நெஞ்சு, கை கால் பகுதிகளை நீவ ஆரம்பித்தார்கள். முக்கியமாக நெஞ்சுப்பகுதியில் ஏதோ ஒரு லேகியத்தால் நீவினார்கள்.  கால் மணி நேரம் எந்த ஒரு முன்னேற்றமும் மேஜருக்குத் தெரியவில்லை. பின்னர் யோகியின் உடலில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. ஒரு மணி நேரத்தில் யோகி புதைக்கப்படும் முன் இருந்த நிலைக்கே திரும்ப வந்து விட்டார். மேஜர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

இந்தப் பரிசோதனை நம்பிக்கை இருந்தவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற இரு சாராரின் முன்னிலையிலும் நடந்து சம்பவத்தின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அது மூன்று நாட்கள் மட்டுமே நடந்து முடிந்ததால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு அதில் முழுத் திருப்தி ஏற்பட்டிருக்கவில்லை. ஒன்பது வருடங்கள் கழிந்து 1937 ஆம் ஆண்டு யோகி ஹரிதாஸை நாற்பது நாட்கள் வரை புதைத்து பரிசோதிக்கும் சந்தர்ப்பம் வந்தது.

பஞ்சாபின் மகாராஜாவாக இருந்த ரஞ்சித் சிங்கிடம் யோகி ஹரிதாஸைப் பற்றி சொல்லப்பட்டது. நாற்பது நாட்கள் வரை கூட அவரால் மண்ணில் புதைந்து இருக்க முடியும் என்று சொன்ன போது மகாராஜாவுக்கும் அந்த பிரிட்டிஷ் மேஜரைப் போலவே நம்பிக்கை வரவில்லை. மகாராஜாவின் மேற்பார்வையிலேயே அந்தப் பரிசோதனையை நடத்த யோகி ஹரிதாஸ் முன் வந்தார். மகாராஜா ரஞ்சித் சிங் அந்தப் பரிசோதனையை லாகூரில் நடத்த அனுமதி வழங்கினார். ஆனால் அவர் இதில் ஏதாவது ஏமாற்று வேலை இருப்பதை தான் அறிய நேர்ந்தால் கடுமையான தண்டனையும் உறுதி என்றும் அச்சுறுத்தினார். யோகி ஹரிதாஸ் அதற்குச் சம்மதித்தார்.

நாற்பது நாட்கள் லாகூரில் யோகி ஹரிதாஸ் மண்ணில் புதைந்திருந்த நிகழ்ச்சியை மகாராஜா ரஞ்சித் சிங்கின் அரசவையில் பிரிட்டனின் பிரதிநிதியாக இருந்த சர் க்ளாட் வாட் (Sir Claude Wade) என்பவரும் கேப்டன் ஆஸ்போர்ன் (Hon. Capt. Osborn) என்ற மற்றொரு ஆங்கிலேயரும் நேரடியாக கண்டு அது பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

நடப்பது நாற்பது நாட்கள் என்ற நீண்ட கால புதைந்திருத்தலாக அந்த நிகழ்வு இருந்ததால் அதற்கு யோகி ஹரிதாஸ் தன்னை சில நாட்கள் முன்பிருந்தே கவனமாக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது. அவர் எப்படி தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார் என்பது துவங்கி அந்த நிகழ்வு எப்படி நடத்தப்பட்டது என்பதை முடிவு வரை நேரடியாகக் கண்டு சின்னச் சின்ன விவரத்தையும் விடாமல் அவர்கள் இருவரும் எழுதியிருப்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.   

என்.கணேசன்
நன்றி தினத்தந்தி 20-2-2015

                               

Thursday, May 14, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 46

 ந்த புத்த பிக்குவின் கோரிக்கையை ஏற்று அவர் ஓய்வறையில் தங்குவது நல்லது தானே என்று அக்‌ஷய் நினைத்த போதும் தன் நிபந்தனைகளை அவன் அவரிடம் வெளிப்படையாகவே தெரிவித்தான். 

“புத்த பிக்குவே. நாலாபக்கமும் மைத்ரேயருக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பது நீங்கள் அறியாததல்ல. இவரைப் பத்திரமாக திபெத்திலிருந்து அழைத்துப் போகும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். அதனால் நான் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க விரும்புகிறேன். எங்காவது ஒரு அறையில் தங்குவதாக இருந்தால் அது தனியறையாகவும் அதைத் தாளிட்டு நாங்கள் இருவர் மட்டுமே உள்ளே இருக்க முடிந்ததாகவும் இருந்தால் ஒழிய அங்கு தங்க நான் விரும்பவில்லை....

புத்த பிக்கு சிறிதும் தயங்காமல் சொன்னார். “அப்படியே தங்குங்கள் அன்பரே. என் ஓய்வறையில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள். அதற்கு வெளியே உள்ள வரவேற்பறையில் நான் தங்கிக் கொள்கிறேன். அதற்கும் வெளியே உள்ள வராந்தாவில் என் பிரதான சீடன் தங்கிக் கொள்வான். எந்த ஆபத்தும் எங்கள் இரண்டு பேரைத் தாண்டாமல் தங்களை நெருங்க முடியாது

அக்‌ஷய் அந்த புத்த பிக்குவுக்கு மனதார நன்றி தெரிவித்தான். “மிக்க நன்றி. அதிகபட்சம் இரண்டு நாட்கள் மட்டுமே தங்குவோம் பிக்குவே. இந்த இரண்டு நாட்களுக்கு அதிகமாக எங்கள் பொருட்டு நீங்கள் அசௌகரியத்தைச் சந்திக்க நேரிடாது.

எத்தனை நாட்கள் தங்கினாலும் எனக்கு மகிழ்ச்சியே. நீங்கள் தங்க சம்மதித்ததற்காக நான் தான் தங்களுக்கும் மைத்ரேயருக்கும் நன்றி சொல்ல வேண்டும் அன்பரேஎன்று குரல் தழுதழுக்கச் சொன்ன புத்த பிக்கு இருவரையும் தலையைத் தாழ்த்தி வணங்கினார். அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் வழக்கம் போல தனக்குச் சம்பந்தமில்லாத பேச்சை பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அசுவாரசியமாய் நின்று கொண்டிருக்கும் சிறுவனைப் போல நின்று கொண்டு இருந்தான்.

“வாருங்கள் செல்லலாம்என்று சொன்ன புத்தபிக்கு டார்ச் விளக்குடன் முன்னால் செல்ல மைத்ரேயனைத் தனக்கு முன்னால் இருத்தி அக்‌ஷய் பின் தொடர்ந்தான். ஐந்தாம் தளத்தின் படிகளில் கீழ் இறங்குகையில் கீழே புத்தபிக்குவின் பிரதான சீடன் நின்று கொண்டிருந்தான். அவன் மைத்ரேயனை பிரமிப்பு நிறைந்த பார்வையில் பார்த்து வணங்கினான். அவன் கையிலும் சிறிய டார்ச் விளக்கு இருந்தது. புத்தபுக்கு, மைத்ரேயன், அக்‌ஷய் முன் செல்ல கடைசியாய் அவன் சென்றான். தங்கள் காலடி சத்தங்கள் அல்லாமல் வேறெதாவது சத்தம் கேட்கிறதா என்று மிகவும் கவனமாக அக்‌ஷய் காதுகளைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான். நல்ல வேளையாக அப்படி எந்த சத்தமும் கேட்கவில்லை.

புத்த பிக்குவின் ஓய்வறைக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். பிரதான சீடன் வெளியிலேயே நின்று கொண்டான். மற்றவர்கள் உள்ளே நுழைந்தார்கள். புத்த பிக்குவின் அறை ஓரளவு வசதியாகவே இருந்தது. குளிரைத் தடுக்க நெருப்பு மூட்டும் பகுதி, புனித நூல்கள் நிறைந்த ஒரு புத்தக அலமாரி, இரண்டு மரக்கட்டில்கள் இருந்தன.  நெருப்பு உள்ளே இன்னும் எரிந்து கொண்டிருந்ததால் அவர் அறையில் இதமான வெப்பம் நிறைந்திருந்தது.   

கட்டில்களில் பெரியதாக இருந்த கட்டிலை மைத்ரேயனுக்காக புத்த பிக்கு தயார்ப்படுத்தினார். துவைத்த புதிய படுக்கைத் துணிகளை எடுத்து பயபக்தியுடன் அவர் படுக்கையில் பரப்பியதைப் பார்க்கும் போது அக்‌ஷய் முகத்தில் சிறியதாய் புன்முறுவல் தவழ்ந்தது. அவரைப் பொருத்த வரை அக்‌ஷய் இரண்டாம் பட்சமே!

மைத்ரேயன் புத்தபிக்குவின் இடது கையில் விரல்கள் பெரிதாக வீங்கி இருந்ததைக் கவனித்து திடீரென்று கேட்டான். “ஏன் உங்கள் விரல்கள் வீங்கி இருக்கின்றன?

அவன் வாயிலிருந்து அவர் கேட்ட முதல் சொற்கள் அவை. அவன் கரிசனத்தோடு கேட்டதால் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேச்சு வராமல் சிறிது தடுமாறிப் பின் சொன்னார். ஒரு கட்டை கை மேல் விழுந்து விட்டது. அதனால் தான் வீக்கம் போதிசத்துவரே!

“வலிக்கிறதா?என்று கேட்டபடியே மைத்ரேயன் அவர் கைவிரல்களின் வீக்கத்தைத் தடவினான். புத்தபிக்கு அவன் தொட்டதில் சிலிர்த்துப் போனார். அவர் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அந்தக் கணத்தில் அங்கு பக்தனுக்கும், பக்தனது பகவானுக்கும் இடையில் அந்நியமாய் அக்‌ஷய் தன்னை உணர்ந்தான்.

மைத்ரேயனின் இன்னொரு முகமா இது என்று யோசிக்கையில் அவன் வீட்டில் தாய் கண்ணீரைத் துடைத்த காட்சியும் அக்‌ஷய் நினைவுக்கு வந்தது. மைத்ரேயன் தானாக மென்மையாக நடந்து கொண்ட அபூர்வ தருணங்கள் அவை. ஆனால் ஒரு கணம் தான் அந்த அசாதாரண தருணம் நீடித்தது. புத்த பிக்கு பரவசத்துடன் மறுபடி அவனை வணங்க, மைத்ரேயன் உடனடியாக வந்து அக்‌ஷய் அருகில் நின்று கொண்டான்.   

புத்த பிக்கு அவனைப் புன்னகையுடன் பார்த்து விட்டு அடுத்ததாக இன்னொரு கட்டிலையும் அக்‌ஷய் உறங்குவதற்காகத் தயார்ப்படுத்த ஆரம்பித்தார். பின் வெளியேறும் முன்பு இருவரைப் பார்த்தும் சொன்னார். “என்ன தேவைப்பட்டாலும் என்னை அழையுங்கள். நான் வெளியறையில் தான் இருப்பேன்.

அக்‌ஷய் மட்டும் தலையசைத்தான். அவர் சென்று விட்டார். அக்‌ஷய் அந்த அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டான். மைத்ரேயனை பெரிய கட்டிலில் படுக்க வைத்து விட்டு சிறிய கட்டிலுக்கு நகர யத்தனிக்கையில் மைத்ரேயன் அக்‌ஷயிடம் சின்ன புன்னகையுடன் சொன்னான். “நீங்கள் இங்கேயே என்னுடன் படுத்துக் கொள்ளுங்கள். அது தானே எனக்கு பாதுகாப்பு

மைத்ரேயனுக்குத் தன் பாதுகாப்பில் பெரிதாய் அக்கறை இருக்கவில்லை என்று அறிந்திருந்த அக்‌ஷய் அவனைப் புன்னகையுடன் பார்த்தான். சரி என்று அவனுடனேயே படுத்துக் கொண்டான். மைத்ரேயன் அவனை ஒட்டிப் படுக்கையில் அக்‌ஷய்க்கு மறுபடி அவனுடைய மகன்கள் நினைவுக்கு வந்தனர். அதற்கு மேல் அவனுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை. அவனுக்கிருந்த கடும் களைப்பும், அப்போதைய பாதுகாப்பான சூழ்நிலையும் அவனை உடனடியாக உறங்க வைத்தன. ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனான்.

காலையில் அவன் கண் விழிக்கையில் மைத்ரேயன் அருகில் இருக்கவில்லை. அதிர்ந்து போய் அவன் எழுந்து பார்க்கையில் மைத்ரேயன் அந்த அறையின் மத்தியில் ஆழமான தியானத்தில் அமர்ந்திருந்தான். வெளியே இருந்து சூரிய கிரணங்கள் அவன் மீது விழுந்து கொண்டிருந்தன. எப்போது இவன் எழுந்தான்? எத்தனை நேரமாய் இப்படி தியானத்தில் இருக்கிறான் என்று யோசித்தபடி அக்‌ஷய் அவனையே கூர்ந்து பார்த்தான். இந்த உலகையே மறந்து வேறு ஒரு உலகத்தில் பிரவேசித்து விட்டவனாய் மைத்ரேயன் தெரிந்தான். அசாதாரண அமைதியும் சாந்தமும் அந்த முகத்தில் பரவி இருந்தன.  

தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த அக்‌ஷய்க்கு மைத்ரேயன் தீட்டா அல்லது டெல்டா அலைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கக்கூடும் என்று தோன்றியது. இந்தச் சின்ன வயதிலேயே இது சாத்தியமாவது சாதாரணமானவர்களுக்கு வாய்க்கக் கூடியதல்ல. அந்த சிந்தனையில் அவன் இருக்கையில் ஜன்னல் வழியே புத்த பிக்கு தெரிந்தார். அவர் மைத்ரேயனைப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.  

அவருடைய அறையை அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு அவர் வெளியே இருந்து அப்படி பார்ப்பது அவனுக்கே பாவமாக இருந்தது. அக்‌ஷய் உடனடியாக எழுந்து சென்று கதவைத் திறந்தான். தாழ்ந்த குரலில் அவருக்குக் காலை வணக்கம் சொன்னான். புத்த பிக்கு அவனிடம் தன் இடது கை விரல்களைக் காண்பித்தார். நேற்றிரவு விரல்களில் அதிகமாய் தெரிந்த வீக்கம் இப்போது சுத்தமாய் இருக்கவில்லை. அக்‌ஷய் ஆச்சரியத்துடன் பார்த்தான். உணர்ச்சி வசப்பட்டிருந்த அவருக்குப் பேச முடியவில்லை. பயபக்தியுடனும் பரவசத்துடனும் உள்ளே சென்று மைத்ரேயன் முன் மண்டியிட்டு வணங்கினார். அவன் கண் விழித்துப் பார்க்கும் வரை எழவில்லை.

சில நிமிடங்கள் கழித்து கண் விழித்த மைத்ரேயன் அவரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “எனக்குப் பசிக்கிறது



ட்லாண்டா விமான நிலையத்தை இன்னும் இருபது நிமிடங்களில் அடைந்து விடுவோம் என்று விமானத்தில் அறிவித்தார்கள். மாரா சோம்பல் முறித்து நிமிர்ந்து உட்கார்ந்தான். திபெத்திலிருந்து கிளம்பி அமெரிக்கா வந்து  விட்டாலும் மனம் என்னவோ திபெத்திலும், மைத்ரேயன் மீதுமே இருந்தது. இப்போதும் அவன் அங்கேயே இருப்பானா, இல்லை வேறெங்காவது சென்றிருப்பானா? சம்யே மடாலயத்தில் இருக்கும் அவனுடைய ஆட்கள் மைத்ரேயன் மடாலயத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை மட்டும் சில மணி நேரங்களுக்கு முன் தான் உறுதிப்படுத்தினார்கள்.

“முடிந்தால் அவன் உடனடியாக உங்களை நெருங்க முடியாத தூரத்தில் இருந்து கண்காணியுங்கள். முடியா விட்டால் அதுவும் வேண்டாம்.....என்று அவன் சொல்லி இருந்ததைப் பின்பற்றிய அவர்களுக்கு மைத்ரேயனின் பாதுகாவலன் நெருங்க முடியாத தூரம் எது என்பதை யூகிக்க முடியவில்லை. அதனால் மைத்ரேயனைப் பின் தொடராமல் விட்ட அவர்கள் நள்ளிரவு நேர தங்கள் சிறப்பு வழிபாட்டின் போது மேல் தளங்களில் நடமாடும் சத்தம் லேசாகக் கேட்டது என்று மாராவுக்குத் தெரிவித்திருந்தார்கள்.

மாரா தன் ஆளிடம் கேட்டான். “உங்கள் இன்றைய பூஜையின் போது வழக்கமான நம் அலைகளை மட்டும் உணர்ந்தீர்களா? இல்லை எதிரலைகளையும் உங்களால் உணர முடிந்ததா?

மாரா தன் ஆட்களிடம் என்றுமே ஒன்றை மட்டுமே எதிர்பார்ப்பவன். அது உண்மை. உண்மை எவ்வளவு கசப்பாகவும், கடூரமாகவும் இருந்தாலும் சரி அதையே தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அவன் உண்மை அல்லாத தகவல்களைத் தெரிவிப்பவர்களை தண்டிக்கும் விதம் கொடூரமானது. அதனால் அவன் ஆள் தயக்கத்துடன் சொன்னான். “எதிரலைகள் மட்டும் அங்கு பரவலாக இருந்தன. நம் சக்தி அலைகளைத் தொடர்பு கொள்வதற்கே நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வேண்டி இருந்தது.... அது முடிந்த போதும் நம் அலைகள் பலவீனமாகவே இருந்தன

அந்தச் சிறுவன் தான் மைத்ரேயன் என்பதில் கொஞ்ச நஞ்சமாய் இருந்த சில்லறை சந்தேகமும் மாராவுக்கு விலகின.  அரை மணி நேரத்திற்கும் குறைவாய்  அங்கிருந்த போதும் அங்கே பல காலம் நிலவிய பழைய அலைகளை பலவீனமாக்கி எதிரலைகளைப் பரப்ப முடிந்த அவன் மைத்ரேயனே! ஆனால் அவனால் முழுவதுமாக அவர்களது அலைகளை ஒழித்து விட முடியவில்லை. அவர்களது அலைகள் பலவீனமாக இருந்த போதும் ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் தொடர்பு கொள்ள முடிகிறதென்றால் மைத்ரேயனும் தன் சக்திகளின் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறான் என்று அர்த்தம். மாராவுக்கு அது நல்ல செய்தியாகவே தோன்றியது.

அட்லாண்டா விமான நிலையத்தில் இறங்கிய பிறகு அவன் ஆவலோடு எதிர்பார்த்திருந்த போன் கால் வந்தது. மாராவைப் போலவே அந்த ஆளும் அவன் குரலைக் கேட்டவுடனே எந்த பூர்வாங்கமும் இல்லாமல் விஷயத்தைச் சொன்னான்.

“அவன் உங்கள் தேசத்து ஆள். மும்பையில் பெரிய தாதாவாக ஒரு காலத்தில் இருந்த நாகராஜனின் மகன். அவன் சித்தர்களிடமும், சாவலின் கோயிலிலும், திபெத்திலும் பல வித்தைகள் கற்றுக் கொண்டவன். காற்றைப் போல வேகமாக இயங்கக்கூடியவன், மின்னலைப் போல தாக்கக்கூடியவன் என்றெல்லாம் மும்பையின் கடத்தல்காரர்களில் பழைய ஆட்கள் நினைவுபடுத்திச் சொல்கிறார்கள். அமானுஷ்யன் என்ற பட்டப்பெயரும் அவனுக்கு இருப்பதாகத் தெரிகிறது. வர்மக்கலையில் அவன் நிபுணன் என்கிறார்கள். நம் ஆளைத் தாக்கியது போல அவன் அக்காலத்தில் பலரைத் தாக்கி கோமாவில் ஆழ்த்தி இருக்கிறான். இது அவனது சிறப்பு முத்திரையாகத் தெரிகிறது. தாக்கியவர்களில் சிலரை அனாயாசமாக சரி செய்தும் இருக்கிறான். திடீரென்று சுமார் பத்து பன்னிரண்டு  வருடங்களுக்கு முன் மும்பையில் இருந்து மாயமாக மறைந்திருக்கிறான்....

மாரா கடைசியில் “சரிஎன்று சுருக்கமாகச் சொல்லி அலைபேசியை அணைத்தான். அடலாண்டா விமான நிலையத்தை விட்டு அவன் வெளியேறுகையில் மைத்ரேயனுடன் சேர்ந்து அமானுஷ்யன் என்ற அந்தப் பொருத்தமான வித்தியாசமான பெயருடையவனும் அவன் எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்
  

Monday, May 11, 2015

அந்தரத்தில் படுத்த யோகி!


22. மகாசக்தி மனிதர்கள்

ரு யோகியால் இயற்கையின் பல விதிகளைத் தன்வசப்படுத்தி ஜெயிக்க முடியும். அதற்கான எத்தனையோ உதாரணங்களை இது வரை பார்த்து விட்டோம். இனி புவி ஈர்ப்பு விசையை வென்று அந்தரத்தில் மிதக்க முடிந்த யோக சக்தியைப் பார்ப்போம்.

அந்தரத்தில் மிதப்பது இந்திய யோகிகளுக்கு மட்டும் முடிந்த சக்தி அல்ல. அந்த சக்தி கொண்டவர்களைப் பற்றிய உதாரணங்களை ஐரோப்பா, ஆசியா கண்ட நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் நம்மால் பார்க்க முடியும். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் அவிலாவைச் சேர்ந்த புனித தெரசா ஆழ்ந்த இறை நிலை அனுபவங்களின் போது தரையில் இருந்து சுமார் ஒன்றரை அடி மேலே அந்தரத்தில் மிதப்பார் என்றும் அப்படியே சுமார் அரை மணி நேரம் அந்தரத்தில் இருப்பார் என்றும் கண்டவர்கள் கூறியிருக்கிறார்கள். அதே போல பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த திபெத்திய குரு மிலாரெப்பாவும் அந்தரத்தில் மிதக்கவும் நடக்கவும் முடிந்தவர் என்று சொல்கிறார்கள். சீன ஷாவொலின் பிக்குகளில் சிலரும் குறுகிய காலத்திற்கு புவி ஈர்ப்பு சக்தியை வெல்ல வல்லவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த குறிப்பிட்ட சக்தி பரவலாக உலகின் பல பகுதிகளில் குறிப்பிட்ட சிலரிடம் இருந்திருக்கிறது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் ஒரு யோகி, அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு யோகி இந்த மகாசக்தியைப் பெற்றிருந்தார். அவர் பலர் முன்னிலையில் அந்தரத்தில் படுத்த காட்சியை ஒரு ஆங்கிலேயர் புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்துடன் செய்தி ஒரு பிரபல இங்கிலாந்துப் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது. அந்த சுவாரசியமான நிகழ்ச்சியை இனி பார்ப்போம்.

அந்த யோகியின் பெயர் சுப்பையா புலவர். (அவரைப் புகைப்படம் எடுத்த ஆங்கிலேயர் அவரை சுப்பையா புல்லவர் (Subbayah Pullavar) என்று குறிப்பிட்டதால் அப்படியே அந்தப் பெயரையே ஆங்கிலப் பத்திரிக்கையும் பயன்படுத்தி இருக்கிறது. தமிழ் யோகி என்பதால் சுப்பையா புலவர் என்பதே அவரது சரியான பெயராக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றுகிறது).

யோகி சுப்பையா புலவர் அந்தரத்தில் சிறிது நேரம் இருக்க முடிந்தவர் என்றும் அவர் அப்படி 1936 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி ஒரு பொது இடத்தில் இருந்து காட்டுவார் என்றும் கேள்விப்பட்ட போது பி.டி.ப்ளங்கெட்ட் (P. T. Plunkett) என்ற பிரிட்டிஷ் தேயிலைத் தோட்டக்காரருக்கு ஆச்சரியமும் சந்தேகமும் ஒருசேர ஏற்பட்டன.  மிகுந்த ஆர்வத்துடன் காமிரா சகிதம் அந்த நாள் அந்த இடத்தை அடைந்தார்.

அந்த இடத்தில் சுமார் 150 பேர் நிகழ்ச்சியைக் காண நண்பகல் வேளையில் குழுமி இருந்தனர். மேகங்கள் இல்லாமல் ஆகாயம் தெளிவாக இருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏமாற்றுவேலை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை பி.டி.ப்ளங்கெட்ட் கண்டார். சுப்பையா புலவரின் சீடர்கள் முதலில் அந்த இடத்தில் ஒரு கூடாரம் எழுப்பினார்கள். பின் கூடாரத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்தார்கள். தண்ணீர் தெளித்த இடத்தைத் தாண்டி செருப்புக் காலோடு உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தார்கள்.

சற்று நேரத்தில் சுப்பையா புலவர் வந்தார். அவர் கருத்த நிறத்தோடு உயரமாகவும் மெலிந்த உடல்வாகோடும் இருந்தார். எல்லோரும் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் சுப்பையா புலவர் கூடாரத்திற்குள் நுழைந்து சில நிமிடங்கள் மறைவாக இருந்தார். அதன் பிறகு அவரது சீடர்கள் கூடாரத்தை அவிழ்த்து விட்டார்கள். சுப்பையா புலவர் பூமியிலிருந்து சில அடிகள் உயரத்தில் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்தார். ஒரு கையில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த அவர் மறு கையை ஒரு கம்பின் நுனியில் வெறுமனே வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பில் அவர் எந்த பலமும் பிரயோகிக்காமல் இருந்தது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கம்பை துணி சுற்றி மூடி இருந்தார்கள்.

பி.டி.ப்ளங்கெட்டும் மற்ற பார்வையாளர்களும் பிரமித்துப் போனார்கள். பி.டி.ப்ளங்கெட்ட் உட்பட அனைவரும் சுப்பையா புலவர் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்த காட்சியைக் கூர்ந்து கவனித்தார்கள். அனைவரும் படுத்துக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பல கோணங்களில் பார்த்தார்கள். எந்த தில்லுமுல்லும் அவர்களுக்குப் புலப்படவில்லை. சுப்பையா புலவரைத் தாங்கிப் பிடிக்க கண்ணுக்குத் தெரியாத மறை பொருள்கள் எதுவும் கூட இல்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய அங்கிருந்தவர்களுக்கு அனுமதி தரப்பட்டது. பரபரப்புடன் பி.டி.ப்ளங்கெட்டும் மற்றவர்களும் அருகில் சென்றே மேலேயும் கீழேயும் கூர்ந்து பார்த்தார்கள். கம்பின் மீது அவர் வைத்திருந்த கையையும் ஆராய்ந்தார்கள். அந்தக் கம்பில் சுப்பையா புலவர் சிறிதாவது பலத்தைப் பிரயோகித்திருந்தால் அருகிலிருந்து பார்க்கும் அவர்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. அப்படி பலம் பிரயோகித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பலத்தில் குறுக்கே நீண்ட நேரம் படுப்பதும் சாத்தியமில்லை. பி.டி.ப்ளங்கெட்ட் அவரைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.   

நான்கு நிமிடங்கள் அப்படியே இருந்து அனைவரையும் சுப்பையா புலவர் ஆச்சரியத்தில் மூழ்க வைத்த பின் அந்த அனைவரையும் அந்த வட்டத்திற்கு வெளியே போகச் சொன்னார்கள். அனைவரும் தங்கள் பழைய இடங்களுக்குச் சென்று அமர்ந்து கொள்ள சுப்பையா புலவரின் சீடர்கள் பழையபடி சுப்பையா புலவரைச் சுற்றி கூடாரத்தை எழுப்பினார்கள். கூடாரத்தின் உள்ளே சுப்பையா புலவர் அந்தரத்திலேயே ஊசலாட ஆரம்பித்த்து சூரிய வெளிச்சத்தின் உதவியால் கூடாரத்துணி வழியாக பி.டி.ப்ளங்கெட்டுக்கு மங்கலாகத் தெரிந்தது. கடைசியில் அப்படியே சுப்பையா புலவர் தரையில் சரிந்தார்.  பழையபடி கூடாரம் கலைக்கப்பட்டது. சுப்பையா புலவர் கட்டையைப் போல ஒருவித ஆழ்தியான நிலையில் படுத்திருந்தார்.

அவரது கைகால்களை மடக்க முயன்ற சீடர்களுக்கு அது எளிதில் முடியாமல் போக அவர்கள் பார்வையாளர்களை உதவிக்கு அழைத்தார்கள். பார்வையாளர்கள் முயன்றும் கட்டை போல் விறைத்திருந்த அவரது கைகால்களை மடக்க முடியவில்லை. கடைசியில் சுப்பையா புலவரின் முகத்தில் சீடர்கள்  நீரைத் தெளித்தார்கள். பின் அவர் கை கால்களைத் தேய்த்து சூடாக்கிய பின் அவர் பழைய நிலைக்குத் திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியை The Illustrated London News என்ற இங்கிலாந்துப் பத்திரிக்கை பி.டி.ப்ளங்கெட்டின் புகைப்படங்களுடன் பிரசுரித்தது. அமானுஷ்ய நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள பலரையும் அந்தச் செய்தி ஈர்த்தது. அந்தத் தெளிவான புகைப்படங்கள் அந்த நிகழ்ச்சியில் தில்லு முல்லு எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. காரணம் 1936 ஆம் ஆண்டு காலத்தில் எல்லாம் புகைப்படம் எடுப்பதே அரிதானதாக இருந்ததால் புகைப்படங்களில் போலியான மாற்றங்கள் செய்யும் நவீன நுட்ப வித்தைகள் ஆரம்பித்திருக்கவில்லை.

சொல்லப்போனால் புகைப்படங்கள் மூலமாகத் தான் சில போலி தந்திரங்களை அடையாளம் கண்டார்கள். உதாரணத்திற்கு கயிறு வித்தை (Rope Trick) என்ற அக்காலத்தில் பிரபலமான வித்தையைச் சொல்லலாம். இந்த வித்தையில் கயிறு ஒன்றை வித்தை காட்டுபவர் எல்லோரிடமும் காட்டி அது கயிறுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளச் சொல்வார். பிறகு கயிறை உதறி கம்பு போல் நிற்க வைத்து வித்தை காட்டுபவர் கம்பில் மேலேறி நுனிக்குச் செல்வார். இது பார்ப்பவர்களை நம்ப வைக்கும் ஒரு வகை ஹிப்னாடிச வித்தை. இந்தக் காட்சியைப் படமெடுத்துப் பார்த்தால் கயிறு தரையிலேயே விழுந்து கிடக்கும். வித்தை காட்டுபவர் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பார். இதைப் பலர் படமெடுத்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் புகைப்படங்கள் எடுத்த பின்னும் காட்சிகள் பார்த்தபடியே பதிவாகி இருந்தது அனைவரையும் நம்ப வைத்தது.

துரதிர்ஷ்டவசமாக பி.டி.ப்ளங்கெட்ட் மூலம் அந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தி தவிர சுப்பையா புலவர் பற்றிய வேறு எந்தத் தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை.  இனி அடுத்த வாரம் இன்னொரு பிரமிக்க வைத்த யோகியைப் பார்ப்போமா?

-என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி 13-02-2015

Thursday, May 7, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 45


றைவாகவே நின்றிருந்த போதும் மைத்ரேயனைத் தன் பின்னால் நிற்க வைத்துக் கொண்ட அக்‌ஷய், வரும் ஆளுக்காகத் தயாராகக் காத்திருந்தான். விளக்கொளி சம்யே மடாலயத்தின்  ஐந்தாம் தளத்தை அதிகமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்து காலடி ஓசையும் தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. முடிவில் பெரிய டார்ச் விளக்கை ஏந்தி வரும் ஆள் வெளிப்பட்டார். வந்தவர் சுமார் ஐம்பது வயதிருக்கக்கூடிய புத்த பிக்கு!

“இந்தத் தளத்தில் இருக்கிறீர்களா போதிசத்துவரே?என்று தாழ்ந்த குரலில் அவர் கேட்டார்.

அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். இந்தக் கேள்வி எனக்கல்ல என்பது போல் மைத்ரேயன் நின்றாலும் அவன் கண்களில் சிறு புன்னகை தவழ்ந்து மறைந்ததை மங்கிய விளக்கொளியில் அக்‌ஷயால் பார்க்க முடிந்தது. வந்திருந்த புத்த பிக்குவின் தோற்றமும் மைத்ரேயன் புன்னகையும் சேர்ந்து அவர் எதிரியாய் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவித்த போதும் அக்‌ஷய் எச்சரிக்கையை தளர்த்தி விடவில்லை.

“பிக்குவே, நீங்கள் அங்கேயே நிற்பது தான் தங்களுக்கு நல்லதுஎன்று அமைதியான குரலில் எச்சரித்தான்.

பிக்கு தன் கையிலிருந்த விளக்கை குரல் வந்த திசைக்குத் திருப்பினார். அக்‌ஷயும் அவன் பின்னால் மைத்ரேயனும் தெரிந்தார்கள். பிக்கு அப்படியே மண்டியிட்டார். “மகா புத்தரின் அவதாரமான மைத்ரேயருக்கு என்னுடைய இதயபூர்வ வணக்கங்கள்.  உடனிருக்கும் பிக்குவுக்கும் என் வணக்கங்கள்

இப்படி ஒவ்வொருவராக மைத்ரேயனை அடையாளம் காண ஆரம்பிப்பதை அக்‌ஷயால் பொறுக்க முடியவில்லை. அவன் மெல்ல சொன்னான். “புத்தபிரான் காட்டிய வழியில் பயணிக்கும் சாதாரண யாத்திரீகர்கள் நாங்கள். தவறுதலாக எங்களில் ஒருவரை அவரது அவதாரமாகவே நினைத்து விட்டீர்கள் போல இருக்கிறது.

பிக்கு மைத்ரேயனையே பார்த்துக் கொண்டு அக்‌ஷய்க்குப் பதில் சொன்னார். “சூரியனை அடையாளம் காண பிரத்தியேக சூட்சுமப் பார்வை தேவையில்லை அன்பரே. சொல்லும் போதே அவர் முகத்திலும் குரலிலும் பரவசம் தெரிந்தது.  பின் அக்‌ஷயைப் பார்த்து கேட்டார். “நான் அவர் அருகில் வந்து பேசலாமா?

அக்‌ஷய்க்கு அவர் இந்த இரவு நேர அமைதியில் தொலைவில் நின்று கொண்டு பேசி சம்யே மடாலயத்தில் மற்றவர்கள் கவனத்தைக் கவர்வதை விட அருகில் வந்து மேலும் தாழ்ந்த குரலில் பேசுவது நல்லது என்று தோன்றியது. அது மட்டுமல்லாமல் அவரது உத்தேசத்தையும் அறிந்து கொள்வது முக்கியமாகத் தோன்றியது. அதனால் மெல்ல சொன்னான். “நான்கு அடி தூரத்தில் வந்து பேச அனுமதிக்கிறேன். அதையும் கடந்து நெருங்க முயற்சித்தால் உங்கள் உயிருக்கு நான் உத்திரவாதம் தர முடியாது பிக்குவே

மைத்ரேயர் காலத்தில் நீண்ட ஆயுளோடு வாழ்வது பாக்கியம் என்று நினைக்கிறேன். கழுத்து திருகி படுத்த படுக்கையாவதையோ, உயிரை இழப்பதையோ நான் விரும்பவில்லை அன்பரேஎன்று சொன்ன பிக்கு எழுந்து மெல்ல நடந்து வந்து அவன் சொன்ன தொலைவில் நின்று இந்தத் தொலைவு சரிதானா என்பது போல அக்‌ஷயைப் பார்த்தார்.

அக்‌ஷய் தலையசைக்க அங்கேயே மண்டியிட்டு கைகளைக் கூப்பி, தலையைத் தாழ்த்தி மைத்ரேயனை வணங்கிய பிக்கு பின் மைத்ரேயனைப் பார்த்து குரல் தழுதழுக்க சொல்ல ஆரம்பித்தார். எத்தனையோ நாட்கள் இந்த மடாலய எல்லையில் உங்களைப் பார்த்திருக்கிறேன் மைத்ரேயரே. இந்தப் பகுதியில் இருக்கும் பாழடைந்த கட்டிடங்களிலும், தூரத்து பாறைகளிலும் வந்தமர்ந்த நீங்கள் இந்த மடாலயத்திற்குள் இதற்கு முன் ஒருமுறையும் நுழையவே இல்லை. அருகில் சென்று பேசக்கூடாது, அது உங்களை அடையாளம் காட்டி விடலாம் என்று எங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் அருகே வந்து காணும் பாக்கியம் இது நாள் வரை கிடைக்கவில்லை. தூரத்தில் இருந்தே ரகசியமாய் வணங்குவதோடு நான் திருப்தி அடைந்திருக்கிறேன்.  நீங்கள் சென்ற பின் யாரும் பார்க்காத நேரங்களில் நீங்கள் நடந்த காலடி மண்ணை எடுத்து பத்திரப்படுத்தி இருக்கிறேன். நீங்கள் அமர்ந்திருந்த பாறைகளில் அமர்ந்து ஆசுவாசம் அடைந்திருக்கிறேன். ஆனால் நீங்களே இப்படி ஒரு நாள் நம் தர்மப்படி ஆடை அணிந்து கொண்டு இந்த மடாலயத்துக்குள் நுழைவீர்கள், அருகில் இருந்து பார்க்கவும், பேசவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..... இந்த ஒரு கணத்திற்காகவே நான் தவமிருந்து பிறவி எடுத்திருக்கிறேனோ என்னவோ எனக்கு விளங்கவில்லை. என்னை ஆசிர்வதியுங்கள் மைத்ரேயரே.

கண்களில் தாரை தாரையாக நீர் வழிய தலை தரையில் தொட மீண்டும் பிக்கு மைத்ரேயனை வணங்கினார்.  அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். இது போன்ற சமயங்களில் சாதாரணமாக ஒரு சிறுவன் உணரக்கூடிய கூச்சமோ, திகைப்போ, ஆச்சரியமோ அவனிடம் தென்படவில்லை. இது போன்ற வணக்கங்களை அனுதினமும் பெறக்கூடிய ஒருவரைப் போல அவன் தென்பட்டான். அவன் திபெத்தியக் கிழவருக்கோ, மாராவின் ஆளிற்கோ காட்டிய அலட்சியம் இப்போது அவனிடம் தென்படவில்லை. எங்கோ வேடிக்கை பார்க்காமல் அந்த பிக்குவையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான் என்றாலும் அந்தக் கண்ணீரும், உருக்கமான பேச்சும் எந்த விதத்திலும் அவனைப் பாதித்தது போலத் தெரியவில்லை. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.  

புத்த பிக்கு நிமிர்ந்து மைத்ரேயனைப் பார்த்து சொன்னார். “தர்மத்தை நிலை நிறுத்தப் பிறந்தவரே. இந்த மடாலயம் உங்களுடையது. உங்களுக்குச் சேவை செய்ய நாங்கள் பலர் இருக்கிறோம். அப்படி இருக்கையில் யாரோ ஆதரவற்றவர் போல எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த தளத்தில் இந்தக் கடுங்குளிரில் நீங்கள் தங்கி இருப்பது எனக்கு வேதனையைத் தருகிறது. தலாய் லாமா அறையிலேயே கூட நீங்கள் தங்கிக் கொள்ளலாம் என்றாலும் அப்படித் தங்குவது ரகசியமாக இருக்காது என்பதால் நீங்கள் இந்த அடியவன் ஓய்வறையிலாவது வந்து தங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது என் பேராசை என்று நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள்

மைத்ரேயன் எதையும் தீர்மானிப்பது நானல்ல இவர் தான் என்பது போல அக்‌ஷயைப் பார்த்தான். அதைக் கவனித்த புத்த பிக்கு கெஞ்சும் முகபாவனையுடன் அக்‌ஷயைப் பார்த்தார். அக்‌ஷய் அவரது கோரிக்கைக்குப் பதில் அளிக்காமல் அந்தப் பிக்குவைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான். “இங்கு உங்கள் ஆள்கள் எத்தனை பேருக்கு இவரை அடையாளம் தெரியும்

“நானும் என் பிரதான சீடன் ஒருவனும் மட்டுமே இவரை அறிவோம் அன்பரே

“இப்போது நீங்கள் இங்கு வந்து பேசிக் கொண்டிருப்பது மற்றவர் கவனத்தைக் கவர்ந்திருக்காது, யாரும் ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

“இங்கு வரும் மாடிப்படிகளின் முதல் படியில் என் பிரதான சீடன் நின்று கொண்டிருக்கிறான். யாராவது சந்தேகப்படும்படி வந்தாலோ, தென்பட்டாலோ அவன் எனக்கு சங்கேத ஓலியில் தெரிவிப்பான் அன்பரே. மைத்ரேயருக்குக் காத்திருக்கும் ஆபத்தை அறியாதவர்கள் அல்ல நாங்கள்.

இவரைத் தாக்க வந்தவன் மடாலய ஊழியர் என்று கேள்விப்பட்டேன்அக்‌ஷய் தன் பார்வையின் கூர்மையைக் குறைக்காமல் சொன்னான்.

பிக்கு ஒரு கணம் தலையைத் தாழ்த்தி விட்டு நிமிர்ந்து பார்த்து வருத்தத்துடன் சொன்னார். “இந்த மடாலயத்தில் வேலை பார்க்க ஆட்கள் கிடைப்பது சுலபமாக இல்லை அன்பரே. இங்கு கிடைக்கும் கூலி பெரிதாக இல்லை. பெரிய கூலி கொடுக்கும் வசதியான நிலையில் நாங்களும் இல்லை. இது புனிதமான இடம், சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்கிற மனப்பான்மை கொண்ட சிலர் வருகிறார்கள். அப்படிக் கிடைக்கிற ஊழியர்களை வைத்துக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையிலேயே இந்த மடாலயம் உள்ளது. வருகின்றவர்களின் இதயத்தைத் துளைத்து எண்ணங்களை அறிகிற சக்தி யாருக்கு உள்ளது அன்பரே

அக்‌ஷய்க்கு அவர் சொன்னதில் தவறு காண முடியவில்லை. சில நிபந்தனைகளுடன் ஓரிரண்டு நாட்கள் அந்த பிக்குவின் அறையில் ரகசியமாய் தங்க முடிந்தால் நல்லது தானே என்று அவனுக்குத் தோன்றியது.



லீ க்யாங்  மைத்ரேயனைப் பற்றி வாங் சாவொ அனுப்பி இருந்த குறிப்புகளைப் பதினோராவது முறையாகப் படித்தான். இதற்கு முன் உளவுத்துறை ஆட்கள் அனுப்பி இருந்த குறிப்புகளைக் காட்டிலும் வாங் சாவொ அனுப்பி இருந்த குறிப்புகள் மைத்ரேயனின் தனிப்பட்ட குணாதிசயங்கள் குறித்த கூடுதல் தகவல்களைக் கொண்டிருந்தன. வாங் சாவொ லீ க்யாங் எதையெல்லாம் அறிய ஆவலாய் இருப்பான் என்பதை அறிந்து அதை எல்லாம் விரிவாகவே விளக்கி அனுப்பி இருந்தான்.     

இப்போது மைத்ரேயனை லீ க்யாங் மனக்கண்ணில் ஓரளவு பார்க்க முடிந்தது. ஆனாலும் முழுமையாக மனதில் தெளிவாகச் சித்தரித்துக் கொள்ள முடியவில்லை. மைத்ரேயனின் புகைப்படத்தைக் கூர்மையாக மேலுமொரு முறை கவனித்தான். ஏதோ பகல்கனவில் ஆழ்ந்திருந்த மந்தபுத்திச் சிறுவன் போலத் தான் அந்தப் புகைப்படத்தில் மைத்ரேயன் தெரிந்தான். அவனது ஆசிரியர்கள் சிலரும், அக்கம்பக்கத்தினர் சிலரும், அவனை மந்தபுத்திக்காரன் என்றே கருத்தும் தெரிவித்திருந்தார்கள். வாங்சாவொ தன் கருத்துகள் சிலவற்றை அடிக்கோடிட்டுக் காட்டி இருந்தான்.

“அந்த சிறுவன் யாரிடமும் சண்டை போட்டதில்லை. யாரிடமும் கோபித்துக் கொண்டதில்லை. அவன் அழுது யாரும் பார்த்ததில்லை. வாய் விட்டுச் சிரித்தும் பார்த்ததில்லை. அதிக பாசம் காட்டியவனாகவும் தெரியவில்லை. மடாலயம் எதற்கும் போனதில்லை. யாரையும் வணங்கியதுமில்லை.....

இப்படி இல்லை இல்லை என்ற வகையிலேயே மைத்ரேயனை வர்ணிக்க முடிந்த வாங் சாவொவுக்கு மைத்ரேயனிடம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடிந்த குணாதிசயங்கள் எதுவும் அந்தக் குறிப்பில் எழுத முடிந்திருக்கவில்லை.

மைத்ரேயனாக நடிக்கத் தேர்ந்தெடுத்திருந்த டோர்ஜேயை லீ க்யாங் நினைத்துப் பார்த்தான். வயதைத் தவிர எந்த விதத்திலும் இருவரிடமும் எந்த ஒற்றுமையையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உலகம் டோர்ஜேயைத் தான் மைத்ரேயன் என்று நம்பும். மைத்ரேயனை புத்தரின் அவதாரமாக ஏற்றுக் கொள்ள யாருக்கும் எளிதாக இருக்காது. இந்த எண்ணமே அவனுக்கு ஓரளவு திருப்தியை அளித்தது.

ஆனால் மைத்ரேயனிடம் இருக்கும் சரக்கு என்ன என்று தெரியாத வரை அவன் தலை மேல் தொங்கும் கத்தியாகவே இருப்பான் என்றும் லீ க்யாங்குக்குத் தோன்றியது. அவனைப் பற்றியும் தெரியவில்லை. அவனுக்குத் துணையாக இருக்க தலாய் லாமாவும், ஆசானும் ஏற்பாடு செய்திருந்த இந்திய உளவுத்துறை ஆள் பற்றியும் எதுவும் தெரியவில்லை என்பது லீ க்யாங்கால் சகிக்க முடியாததாக இருந்தது. வித்தியாசமான பெயருடைய அல்லது பட்டப்பெயருடைய இந்திய உளவுத்துறை ஆட்கள் பற்றிய் விவரங்களை ரகசிய கோப்புகளில் படித்துப் பார்த்து விட்டான். யாருமே லாஸா விமான நிலைய காமிராவில் பதிந்த அந்த மர்ம மனிதனாக இருக்க வாய்ப்பில்லை என்பது அவன் கணிப்பாக இருந்தது.....

மறுபடி வாங் சாவொ குறிப்புகளில் ஆழ்ந்து போன லீ க்யாங் கடைசியில் வாங் சாவொவிற்குப் போன் செய்தான். வாங் சாவொ எதிர்பார்த்திராத ஒரு கேள்வியைக் கேட்டான்.

“அவன் பயப்படுவானா?

வாங் சாவொ சிறிது யோசித்தான்.  

லீ க்யாங் சொன்னான். நீ அவனைப் பற்றி சொல்லி இருக்கும் எல்லாமே மகாமந்த புத்திக்காரனிடமும் ஓரளவு இருக்கலாம் வாங் சாவொ. ஆனால் மந்தபுத்திக்காரன் கூட பயத்தை விட்டொழித்தவனாக இருக்க முடியாது. உலகில் பயம் போல் பிரதானமாய் மனிதனை இயக்கும் அல்லது செயலிழக்க வைக்கும் உணர்ச்சி வேறெதுவும் இருக்க முடியாது என்பதால் தான் கேட்கிறேன்

வாங் சாவொ மெல்ல சொன்னான். “அதைக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எதுவும் இதுவரை அமைந்திருக்கவில்லை. அதனால் தெரியவில்லை

லீ க்யாங் சொன்னான். “அவன் பயத்துக்கு அறிமுகமாகாதவனாக இருந்தால் அவனுக்கு அதை அறிமுகப்படுத்த வேண்டியது நமக்கு கடமையாகிறது வாங் சாவொ

வாங் சாவொ புன்னகைத்தான். லீ க்யாங் எதிரியாக இருப்பது சைத்தானே எதிரியாக இருப்பது போலத்தான். அவன் அறிமுகப்படுத்தும் பயம் யாராலும் தாங்க முடிவதாக இருக்காது.

லீ க்யாங் கேட்டான். “அவர்கள் இருவரும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி ஏதாவது துப்பு கிடைத்ததா?

“இல்லை சார்

லீ க்யாங் சொன்னான். “மைத்ரேயனைக் காப்பாற்றப் போயிருக்கும் இந்தியன் சில நாள் புனித ஸ்தலங்களுக்குப் போய் விட்டு வருவதாகத் தான் திபெத்திற்கு விசா கேட்டிருக்கிறான். அந்த நகல் பையனை திபெத்தில் விட்டு விட்டு அசல் மைத்ரேயனை அழைத்து வருவது தான் அவன் திட்டம். அதனால் அவன் பெயருக்கு புனித ஸ்தலங்களுக்கு அந்தச் சிறுவனை அழைத்துப் போய்க் கொண்டிருக்கலாம். அது போன்ற இடங்களில் அவனைத் தேடு...... எதற்கும் முதலில் சம்யே மடாலயத்துக்குப் போ. அது தான் சேடாங் நகருக்குப் பக்கத்தில் இருக்கும் மிக முக்கிய புனித ஸ்தலம்

(தொடரும்)
என்.கணேசன்