சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 30, 2023

சாணக்கியன் 85

 

ங்கு அவன் சென்றதற்கான உத்தேசம் என்ன என்று ஆச்சாரியர் கேட்டவுடன் ஆம்பி குமாரன் மேற்பூச்சு பூசாமல், சுற்றி வளைக்காமல் கேட்டான். “உங்களையும், உங்கள் இயக்கத்தையும் பொருத்த வரை என் நிலை என்ன? நீங்கள் என்னை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

 

சாணக்கியர் அவனிடமிருந்து இந்த நேரடிக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆம்பி குமாரன் நிறையத் தான் மாறியிருக்கிறான். அவர் அமைதியாகச் சொன்னார் ”ஆம்பி குமாரா. அலெக்ஸாண்டரை இங்கு வரவழைத்தவன் என்று உன்னை எடுத்துக் கொண்டால் நீ எங்கள் நண்பன் அல்லவே அல்ல. நீ முன்பு போல் பேச வந்திருந்தால் நான் இதைச் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் நீ மனம் மாறி வந்திருப்பதால் உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன்.”

 

அவர் சொன்னது கசப்பாக இருந்தாலும் ஆம்பி குமாரன் ஆச்சாரியரின் இந்த நேரான பேச்சில் திருப்தி அடைந்தான். நாம் மாறும் போது அடுத்தவர்களும் அதற்கேற்றாற் போல் மாறி விடுகிறார்கள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படிப் பேசுகிற ஆச்சாரியர் தான் இப்போது அவனுக்குத் தேவை. எத்தனையோ காலம் போலித்தனமாக அவரிடம் நடந்து கொண்டிருக்கிறான். அவர் அந்தக் கலையில் ஆயிரம் மடங்கு வல்லவராக இருப்பதை அனுபவபூர்வமாக அவன் கண்டிருக்கிறான். அவர் மனதில் என்ன உள்ளது என்பதை அனுமானத்தில் அறியும் அளவு அவன் எப்போதும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ள முடியாது. இந்த மனிதரை இப்படி அணுகுவது தான் அவனுக்கு நல்லது என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

 

அவன் சொன்னான். “எனக்குப் புரிகிறது ஆச்சாரியரே. புருஷோத்தமனிடம் எனக்கிருந்த வெறுப்பினால் அலெக்ஸாண்டருக்கு நட்புக்கரம் நீட்டினேன். அலெக்ஸாண்டருடன் சேர்ந்து புருஷோத்தமனை எதிர்த்து வெல்ல ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டது நடந்த போதும் நான் எதிர்பார்த்தது நடக்காமல் புருஷோத்தமனும் அலெக்ஸாண்டரின் நண்பனானான். என்னைச் சுற்றி எல்லாமே மாறி விட்ட போதிலும் நான் பழைய நிலையிலேயே இருக்கிறேன். இப்போது ஞானோதயம் வந்திருக்கிறது. ஆனால் நடந்தது எதையும் மாற்றும் சக்தி எனக்கில்லை. பல இடங்களில் நீங்களும் உங்கள் புரட்சிப்படையும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இதையெல்லாம் எதிர் கொள்ள அலெக்ஸாண்டர் திரும்பி வருவானா என்று தெரியவில்லை… அவன் வராத பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குக் குழப்பமாய் இருக்கிறது.”

 

சாணக்கியர் சொன்னார். ”அலெக்ஸாண்டர் இங்கு திரும்பிவர மாட்டான் ஆம்பி குமாரா. அவன் வருவதாக இருந்தால் இரண்டு சத்ரப்களை அவசரமாக நியமித்திருக்க மாட்டான். அதனால் இனி இங்குள்ள போக்கை நீயும் யூடெமஸுமே தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டால் நாங்கள் உங்களை எதிரிகளாகவே எண்ணிச் செயல்பட வேண்டியிருக்கும் ஆம்பி குமாரா

 

“உங்கள் வெளிப்படையான பேச்சுக்கு நன்றி ஆச்சாரியரே நானும் வெளிப்படையாகவே உண்மை நிலையைச் சொல்ல விரும்புகிறேன். யூடெமஸ் எனக்கு ஒரு தூதனை அனுப்பியிருக்கிறான். அதில் சிந்து நதி வரை அவன் பார்த்துக் கொள்வதாகவும், அதற்குத் தெற்கில் நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறான்.”

 

சாணக்கியர் சொன்னார். “அவன் உயிர்ப்பயம் அவனைத் தெற்கிற்குப் போகாமல் தடுக்கிறது ஆம்பி குமாரா. இனி நாங்கள் வென்ற பகுதிகள் பக்கம் நீ வருவாயானால் அது உன் தவறான தலையெழுத்தாகி விடும்

 

அந்தத் தலையெழுத்திற்குப் பயந்தவனாய் ஆம்பி குமாரன் சொன்னான். “ஆச்சாரியரே. காந்தாரம் தாண்டி வேறெங்கும் சென்று ஆதிக்கம் செலுத்த நான் விரும்பவில்லை. இங்கு என்னை நிம்மதியாக இருக்கவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே இருக்கிறேன். அதற்கு நான் என்ன செய்வது என்று புரியவில்லை. உங்கள் பழைய மாணவனின் அறிவுக்கூர்மை உங்களுக்குத் தெரியும். இந்த சமயத்தில் உங்கள் அறிவுரை எனக்கு உதவியாக இருக்கும்

 

பழைய ஆம்பி குமாரன் மறந்தும் சொல்ல முடியாத வார்த்தைகள் அவை.  அவன் வெளிப்படையாக தன் மனநிலையைச் சொன்னதையும், உதவி கேட்டதையும் ரசித்தவராக சாணக்கியர் சொன்னார். “ஆம்பி குமாரா நான் ஏற்கெனவே சொன்னபடி நாங்கள் வென்ற பகுதிகளை ஒரு சத்ரப்பாக நீ மீட்கும் கட்டாயத்தில் வந்தால் உன்னை எதிர்த்துப் போராடும் நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படும். நீ அதைச் செய்யாமல் காந்தாரத்திலேயே பாதுகாப்பாக இருக்க விரும்பினால் மறைமுகமாக எங்களுக்கு நிதியுதவியும் செய்வாயானால் இங்கு எந்தப் புரட்சியும் வெடிக்காமல், உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் புரட்சிப் படையினர் பார்த்துக் கொள்வார்கள்.”

 

ஆம்பி குமாரனுக்கு ஒரு கணம் கோபம் வந்து, வந்த வேகத்திலேயே போய் விட்டது. அலெக்ஸாண்டரும் வரமாட்டான், யூடெமஸும் எச்சரிக்கையுடன் தொலைவிலேயே இருக்கத் தீர்மானிக்கிறான் என்றால் சத்ரப் பதவி என்றைக்கும் அவன் உயிருக்கு உலை வைக்கும் பதவியாகவே இருக்கும். உயிருக்கு மேல் என்ன இருக்கிறது என்று விரக்தியுடன் நினைத்தவனாய் ஆம்பி குமாரன் சொன்னான். “நான் உதவுவது வெளியே தெரிய வாய்ப்பில்லை என்றால் நிதியுதவி அளிப்பது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆச்சாரியரே. ஆனால் அலெக்ஸாண்டரோ, யூடெமஸோ என்னைப் போர் புரிய வாஹிக் பிரதேசத்திற்குப் போக நிர்ப்பந்தித்தால் நான் என்ன செய்வது?”

 

சாணக்கியர் சொன்னார். “அப்படி ஒரு கட்டளை வருமானால் நீ யூடெமஸையும் இங்கே வரச் சொல். சேர்ந்து போனால் தான் வெற்றி கிடைக்கும் என்று சொல். அல்லது அவன் சொல்வதற்கு முன் இன்னும் ஒருபடி மேலேயே போய் நீயாகவே அவனுக்குச் செய்தி அனுப்பு. இழந்த பகுதிகளை மீட்க வேண்டுமானால் பெரும்படையுடன் அவனும் வந்தால் தான் அது சாத்தியம் என்று சொல். அவன் கண்டிப்பாக வர மாட்டான். அதனால் நீயும் போக வேண்டி வராது”

 

ஆம்பி குமாரனுக்கு அவர் ஆலோசனை பிடித்திருந்தது. அந்த விவரமானவனைச் சமாளிக்க இந்த விவரமானவரின் ஆலோசனை தான் சரி. “நன்றி ஆச்சாரியரே. அப்படியே செய்கிறேன். ஆனால்  நான் எந்த வெளிப்படையான ஆதரவையும் புரட்சியாளர்களுக்குத் தர முடியாது. இந்த மறைமுக நிதியுதவி கூட வெளியே தெரிய வருமானால் எனக்கு ஆபத்து என்பதை நீங்கள் அறிவீர்கள்....”

 

சாணக்கியர் சொன்னார். “அதை நான் அறிவேன். எந்த இரகசியமும் எங்கள் பக்கத்திலிருந்து கசியாது ஆம்பி குமாரா. அது குறித்து உனக்கு சிறிது சந்தேகமும் தேவையில்லை. நான் வாக்குத் தருகிறேன்”

 

அலெக்ஸாண்டரை வரவழைத்தவன், யவனர்களின் தற்போதைய சத்ரப் என்ற இரண்டு காரணங்களே புரட்சிப்படையினர் சதி செய்து அவனைக் கொல்ல போதுமாயிருப்பதாக அவன் எண்ணி எண்ணி இனி பயக்கத் தேவையில்லை. ஆச்சாரியரிடம் அவன் நேர்மையாக நடந்து கொள்ளும் வரையில் அவரும் அப்படியே நடந்து கொள்வார். அவர் வாக்குத் தந்த பின் கவலைப்பட ஏதுமில்லை…

 

நிதியுதவி எவ்வளவு, எப்படித் தருவது என்பது குறித்து தாழ்ந்த குரலில் பேசி இருதரப்பும் ஏற்றுக் கொள்ள முடிந்த ஒரு முடிவுக்கு வந்து அவரை வணங்கி விட்டுக் கிளம்பிய போது ஆம்பி குமாரனின் மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கி விட்டிருந்தது.

 

ஆ,ம்பி குமாரனின் வரவும் அவனுடன் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்படிக்கையும் சாணக்கியரையும் திருப்தியடைய வைத்தது. காந்தாரத்தை இப்போது புரட்சிப் படையினர் கைப்பற்றுவது கஷ்டமென்றாலும் சரியாகத் திட்டமிட்டால் முடியாத காரியமல்ல. ஆனால் அப்படி ஒருவேளை வென்றாலும் அதைத் தாண்டியிருக்கும் வட பகுதிகள் யவனர்களின் வசம் இருப்பதால் இந்த எல்லைப் பகுதியான காந்தாரம் ஒரு பிரச்சினையான பகுதியே. அதனால் நிதியுதவி செய்யச் சம்மதித்த ஆம்பி குமாரன் சாவதை விட வாழ்வதே அவர்களுக்கு இலாபம். மேலும் அவர்கள் கவனம் திருப்ப வேண்டிய முக்கிய பகுதி மகதமே….

 

ரண்மனை திரும்பிய ஆம்பி குமாரன் யூடெமஸின் தூதனை வரவழைத்துக் கம்பீரமாகச் சொன்னான். “சத்ரப் யூடெமஸுக்கு என் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவிப்பாயாக, தூதனே. கலவரம் நடந்து புரட்சிக்காரர்கள் வென்ற பகுதிகளைத் திரும்பவும் மீட்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றாலும் அது இப்போது இங்கிருக்கும் படைபலத்தை வைத்துக் கொண்டு என் ஒருவனால் சாத்தியமல்ல என்பதை சத்ரப் யூடெமஸிடம் சொல் தூதனே. அதனால் அப்படி சக்கரவர்த்தியோ சத்ரப் யூடெமஸோ கூட எதிர்பார்க்கும் பட்சத்தில் ஒரு வலிமையான படையுடன் சத்ரப் யூடெமஸ் உடனடியாகக் கிளம்பி வருவது தான் அதற்கு உகந்ததாக இருக்கும். மற்ற பணிகளை அவர் பிறகு பார்த்துக் கொள்ளட்டும். மற்றபடி நம் பகுதிகளில் வழக்கமான நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொள்வதானால் அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை…”

 

(தொடரும்)

என்.கணேசன்




 

Monday, November 27, 2023

யோகி 25

 

யோகாலயத்தில் ஒவ்வொரு நாளும் மாலை ஏழரை மணியளவில் அந்த நபரின் மேசையில் ஒரு தகவல் தாள் இருக்கும். சில நாட்களில் அது ஒரு தாளாக இருக்கும். சில நாட்களில் அது பல தாள்களாக இருக்கும். சில சமயங்களில் ஒரு பென் டிரைவும் அதனுடன் வைத்திருக்கப்படும். அதில் சில புகைப்படங்களும், வீடியோக்களும் இருக்கும். அந்த நபர் மிகவும் பொறுமையாக அந்த அறிக்கையைப் படித்துப் பார்ப்பார். அவ்வப்போது வைக்கப்படும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்ப்பார்.  பல சமயங்களில் அதன் பிறகு எந்தக் கருத்தும், கட்டளையும் அவரிடம் இருக்காது. அபூர்வமாய் சில சமயங்களில் அவர் கட்டளைகள் பிறப்பிப்பார். அவை உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.

 

அன்று அவர் மேசையில் இருந்த அறிக்கையில் இந்த வார யோகா-தியான வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் குறித்த விவரங்கள், அவர்களில் சிலர் பின்னணி, செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இருந்தன. அதைப் படித்த பின் அதில் குறிப்புகள் எழுதவோ, கட்டளைகள் பிறப்பிக்கவோ அவசியமிருக்கவில்லை. அந்த அறிக்கையில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்து இருப்பவர்களின் செயல்முறைகள் குறித்த தகவலும் இருக்கும். சமீப காலத்தில் ஒரு புதிய தோட்டக்காரனும், சமையல்காரனுக்கு உதவியாள் ஒருவனும் தான் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களும் சந்தேகத்திற்கு இடந்தரும் வகையில் நடந்து கொள்ளவில்லை

 

அந்த நபர் திருப்தியுடன் அந்த அறிக்கையைத் தள்ளி வைத்தார். சைத்ரா சம்பவத்திற்குப் பிறகு தான் யோகாலயத்தில் பல நிலைகளிலும் கண்காணிப்பை அவர் தீவிரப்படுத்தியிருக்கிறார். ஆனால் மொட்டைக் கடிதம் எழுதிய நபரை மட்டும் இன்னமும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நபர் அடுத்ததாய் எந்த வில்லங்கமான செயலையும் செய்யவில்லை. இப்போதெல்லாம் தீவிரக் கண்காணிப்பு அங்கிருப்பதால், அந்த நபருக்கு மொட்டைக் கடிதம் எழுதினாலும் அதைத் தபால் பெட்டியில் போடுவது உட்பட எதுவும் செய்து விட முடியாது என்பது தான் யதார்த்த நிலைமை. ஆனாலும்  அவர் இருக்கும் இடத்தில் அப்படி ஒரு துரோகி என்னும் களை ரகசியமாய் முளைத்திருப்பது அவருக்குச் சவால் தான்! 

 

திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு ஷ்ரவன் யோகாலயம் போய்ச் சேர்ந்தான். சில நாட்களாகவே அவன் தன் நடை, உடை, பேச்சு, தோற்றத்தில் சில நுணுக்கமான மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தான். யோகாலயம் அவனை இனி இப்படித் தான் காணப்போகிறது. ஒரு கைதேர்ந்த நடிகன் புதிய கதாபாத்திரத்தை எப்படி மனதில் ஆழமாக உள்வாங்கி அப்படியே மாறி விடுகிறானோ அப்படி மாறும் திறமை ஷ்ரவனுக்கு இருந்தது. இதற்கு முன்பு ஒரு நக்சலைட் கும்பலைப் பிடித்துக் கொடுப்பதிலும் அவனுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது அத்திறமை தான்.

 

யோகாலயத்தில், ஒரு வார காலம் அங்கு யோகா கற்றுக் கொள்ள அவன் அனுமதிக்கப்பட்ட மெயிலைக் காண்பித்த பின்பும் அவன் அந்த பெயருக்கான ஐ,டியையும் காட்டிய பின்பு தான் பிரதான வெளிக்கதவைத் தாண்டி ஷ்ரவன் உள்ளே செல்ல முடிந்தது.

 

ரிசப்ஷனில் இருந்த இளைஞன் ஷ்ரவன் காட்டிய ஆதாரங்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு அவனுக்கு ஏழாம் எண் அறை ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். யோகா வகுப்பில் கலந்து கொள்ள வருபவர்கள் இரண்டிரண்டு பேருக்கு ஒவ்வொரு அறை ஒதுக்கப்படும் என்று முன்பே அவனுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் தன்னுடன் தங்கும் ஆள் யாரென்று அறிந்து கொள்ள ஷ்ரவன் விரும்பினான். ரிசப்ஷனிஸ்ட் மேஜை மீது இருந்த ரிஜிஸ்டரில் பார்த்து விட்டு அந்த நபர் பெயர் ஸ்ரீகாந்த் என்றும், அவன் சற்று முன் தான் வந்து சேர்ந்தான் என்றும் தெரிவித்தான்.

 

ஷ்ரவன் புதிய இடத்தை ஆர்வத்துடன் பார்க்கும் பாவனை காட்டி வரவேற்பறையை நோட்டமிட்டான். அங்கு மூன்று இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இருந்தது தெரிந்தது. ரிசப்ஷனிஸ்ட் சொன்னான். “இடது பக்கம் ஐந்தாவது ரூம் சார்

 

அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு ஷ்ரவன் நகர்ந்தான். ஏழாம் எண் அறையில் அவனை வரவேற்ற ஸ்ரீகாந்த் பேசுவதில் சலிப்பில்லாதவனாய் இருந்தான். கால் மணி நேரத்தில் அவனுடைய வரலாறையே ஷ்ரவன் அறிந்து கொண்டிருந்தான்.

 

ஸ்ரீகாந்த் திருச்சியைச் சேர்ந்தவன். வயது 35. இன்னும் திருமணமாகாதவன். இரண்டு வருடம் முன்பு வரை துபாயில் ஒரு நல்ல வேலையில் இருந்து நிறைய சம்பாதித்திருக்கிறான். அதை அவன் ஷேர் மார்க்கெட்டில் மிக புத்திசாலித்தனமாய் முதலீடு செய்திருப்பதால் திருப்திகரமான வருமானம் அவனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் அவன் கலந்து கொள்ளாத தியான வகுப்புகள் இல்லை என்று சொல்லி விடலாம். ஹரித்வார், ரிஷிகேஷ், டில்லி, புனே, பெங்களூர், கோயமுத்தூர் ஆகிய நகரங்களில் பல தியானம் மற்றும் யோகா வகுப்புகளில் கற்றிருக்கிறான். எல்லாம் ஒன்றையே தான் சில சின்ன மாறுதல்களோடு புதியது போல சொல்லித் தருகின்றன என்று அவன் சொன்ன போது ஷ்ரவன் புன்னகையோடு கேட்டான். “பின் ஏன் இந்த அறிமுக வகுப்புக்கும் வந்து சேர்ந்திருக்கீங்க?”

 

ஸ்ரீகாந்த் புன்னகையுடன் சொன்னான். “இங்கேயாவது ஏதாவது புதுசா சொல்லித் தர்றாங்களான்னு பார்க்கத் தான்  

 

பல விஷயங்களில் ஆர்வம், நகைச்சுவை உணர்வு, கூர்மையான அறிவு, தன் குறைகளை ஒத்துக் கொள்வதில் தயக்கமில்லாத தன்மை கொண்ட ஸ்ரீகாந்தை  ஷ்ரவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் இருவரும் யோகா வகுப்புக்குச் சென்றார்கள்.

 

அந்த வார யோகா பயிற்சிகளுக்கு மொத்தம் 21 ஆட்கள் வந்திருந்தார்கள். பத்து பெண்கள், பதினோரு ஆண்கள். அவர்களில் எட்டு பேர் முதியவர்கள். ஏழு பேர் நடுத்தர வயதினர், ஆறு பேர் இளம் வயதினர்.  யோகா வகுப்பறையில் முதல் முதலாகச் சந்தித்துக் கொண்ட அவர்களில் பலருக்கு ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.   

 

அவர்களுடன் பேசிக் கொண்டே ஷ்ரவன் தன் பார்வையை வகுப்பறையில் சுழல விட்டான்.  அங்கேயும் இரண்டு கண்காணிப்பு காமிராக்கள் இருந்தன.

 

இரண்டு துறவிகள் யோகா பயிற்சியாளராக வந்தார்கள். ஒரு ஆண், ஒரு பெண். அனைவருடைய செல் போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து விடச் சொன்னார்கள். பிறகு பிரார்த்தனை, அறிமுகப்படுத்திக் கொள்தல், முடிந்தவுடன் அங்கு இந்த ஒரு வாரம் தங்கியிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சொன்னார்கள். மது குடித்தல், புகை பிடித்தல், ஒழுங்கீனமாய் நடந்து கொள்தல் - மூன்றும் கூடாதென்று சொன்னார்கள். அடுத்ததாய் யோகாலயத்தின் பின்பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்று சொன்னார்கள். பின் பகுதியில் துறவிகள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கே மற்றவர்கள் செல்வது அவர்களது தியானத்திற்கும், துறவு வாழ்க்கைக்கும் தொந்தரவாக இருக்கும் என்று சொன்னார்கள்.

 

ஷ்ரவன் இவர்கள் சொல்வது மட்டும் தான் பின் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதற்குக் காரணம் என்று நம்பவில்லை. பின் பகுதியில் தான் பிரம்மானந்தாவும் வசித்து வருகிறார். வேறு ரகசியங்களும் பின்பகுதியில் இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அப்பகுதியில் தான் சைத்ரா வாழ்ந்தாள், அங்கு தான் கொலைக்கான காரணமும் புதைந்திருக்கிறது.

 

பின் ஆண் துறவி சென்று விட பெண் துறவி யோகா வகுப்பை ஆரம்பித்தார். அவர் பேச்சும், வகுப்பை நடத்திய முறையும் மிக நேர்த்தியாக இருந்தன. அவருக்குப் பிறகு பயிற்சி சொல்லித் தர வந்த துறவியும் சிறப்பாகவே பாடம் நடத்தினார்.  ஆனால் இருவரும் அதிகமாக யோகி பிரம்மானந்தா சொன்னதையே மேற்கோள் காட்டினார்கள். ஒரு கட்டத்தில் சற்று எரிச்சல் அடைந்த ஸ்ரீகாந்த் இடைமறித்து இரண்டாவது வந்த துறவியிடம்இந்தக் கருத்து பிரம்மானந்தாவுக்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்னாலேயே பதஞ்சலி மகரிஷியால் சொல்லப்பட்டது அல்லவா?” என்று கேட்க அந்தத் துறவி சற்று தர்மசங்கடத்துடன் பார்த்து விட்டு, சமாளித்தபடி சொன்னார். “உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்த யோகா முறை அதற்கும் முந்தையது. வேதகாலத்து விஷயமிது. அதை தொகுத்துக் கொடுத்த பதஞ்சலி மகரிஷி வேறு யாருமல்ல, யோகி பிரம்மானந்தரின் முற்பிறவி குரு. ஆனால் பதஞ்சலி மகரிஷியின் கருத்துகள் எல்லாருக்கும் புரியும்படியான எளிய வார்த்தைகளில் இல்லை. அதையே அவருடைய பிரதான சீடராக இருந்த யோகி பிரம்மானந்தா இப்பிறவியில் மிக எளிமையான முறையில் விளக்கியவர் என்பதால் தான் அவரை நான் மேற்கோள் காட்டினேன்…”

 

ஸ்ரீகாந்த் ஷ்ரவனிடம் முணுமுணுத்தான். ”இதென்ன புதுக்கதை. பதஞ்சலி சொன்னதை சுவாமி சின்மயானந்தாவும், மகரிஷி மகேஷ் யோகியும் கூட எளிமையாகத் தான் சொல்லி இருக்கிறார்கள். இப்போது இந்த ஆள் பிரம்மானந்தா சொன்னதாய் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சின்மயானந்தா பயன்படுத்திய அதே வார்த்தைகள்   

 

ஷ்ரவன் புன்னகைத்தான். ‘இந்த ஒருவார வகுப்புகள் ஸ்ரீகாந்த் தயவால் சுவாரசியமாகத் தான் இருக்கப் போகின்றன.’


(தொடரும்)

என்.கணேசன்





 

Thursday, November 23, 2023

சாணக்கியன் 84

 

யூடெமஸ் பிலிப் கொல்லப்பட்ட பகுதிகளின் பக்கத்தில் கூடப் போகப் பிரியப்படவில்லை என்பதை அவன் அனுப்பியிருந்த தகவல் தெரிவித்தது. யவனர்களைக் குறி வைத்துக் கொல்கின்ற பகுதியை நிர்வாகிக்கப் போய் உயிரை இழக்க அவன் தயாரில்லை. அதனால் அவன் சிந்துநதியைத் தாண்டாமல் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறான். யவனர்களின் இன்னொரு சத்ரப்பான ஆம்பி குமாரனுக்கும் அந்த அளவே ஆபத்து இப்பகுதிகளில் இருக்கிறது என்பதை அவன் அறியவில்லையா, இல்லை அது பற்றிய கவலை அவனுக்கில்லையா என்று ஆம்பி குமாரனுக்குத் தெரியவில்லை. அலெக்ஸாண்டரின் படைத்தலைவனாக இருந்தும் தொடைநடுங்கியாக இருக்கும் யூடெமஸை எண்ணும் போது ஆம்பி குமாரனுக்கு வெறுப்பாக இருந்தது.

 

அதோடு இன்னொரு அச்சம் அவன் மனதில் மெல்ல எழுந்தது. நாளை புரட்சிக் காரர்கள் வென்ற பகுதிகளை மறுபடி ஏன் மீட்கவில்லை என்று அலெக்ஸாண்டர் கேள்வி எழுப்பினால் அப்பகுதிகள் எல்லாம் ஆம்பி குமாரர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது, அவரிடம் தான் அந்தப் பகுதிகளின் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறேன். அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும் உத்தேசமும் யூடெமஸுக்கு இருக்குமோ? இத்தனை தூரம் சிந்திப்பவன் இதையும் சிந்தித்து வைத்திருக்கலாம்,,,,,,,   

 

ஆம்பி குமாரன் யூடெமஸின் சூழ்ச்சியில் சிக்கி விடக்கூடாது என்று எச்சரிக்கை அடைந்தான். அவன் சிறிது யோசித்து விட்டு யூதிடெமஸின் தூதுவனிடம் சொன்னான். ”இன்று விருந்தினர் விடுதியில் ஓய்வு எடுத்துக் கொள் வீரனே. யோசித்து சத்ரப் யூடெமஸுக்கு என் பதிலை நாளை சொல்கிறேன்.”

தங்கள் உத்தரவு சத்ரப்என்று தூதுவன் பணிவாக வணங்கிக் கூறி விட்டு விடைபெற்றான்.

 

தூதுவன் சென்ற பின் இந்த குறுக்குபுத்தி கொண்ட யூடெமஸுக்கு என்ன பதில் சொல்லி அனுப்புவது என்று ஆம்பி குமாரன் யோசிக்க ஆரம்பித்தான்.  அவனுக்கும் கூடக் குறுக்கு புத்தி பல சமயங்களில் வேலை செய்திருக்கின்றது என்றாலும் அதை வைத்து அவன் சாதித்தது பெரிதாக ஒன்றுமில்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அவனுக்கு ஒரு செயலின் விளைவு என்னவாக இருக்கும் என்று பல படிகள் கடந்து யோசிக்கிற அறிவெல்லாம் கிடையாது. அதெல்லாம் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் போன்ற ஆட்கள் அனாயாசமாகச் செய்வது....

 

ஆச்சாரியரின் நினைவு வந்தவுடன் ஆம்பி குமாரனுக்கு அவனுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு அவரிடம் கிடைக்கும் என்று தோன்றியது. அவரை எதிரியாக வைத்திருப்பது ஆபத்து என்று மறுபடியும் உள்ளுணர்வு சொன்னது. இத்தனை காலம் செய்த முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்று சில நாட்களாக அவன் எண்ணுவது மேலும் உறுதிப்பட்டது.

 

நேற்று தான் அவர் தட்சசீலம் திரும்பி வந்திருப்பதாக அவன் ஒற்றன் தெரிவித்திருந்தான். நீண்ட யோசனைக்குப் பிறகு ஆம்பி குமாரன் உடனடியாக ஆச்சாரியரைச் சந்தித்துப் பேச முடிவெடுத்தான்.

 

சாணக்கியர் தன் முன்னால் வணங்கி நின்ற ஆம்பி குமாரனிடம் பெரிய மாற்றத்தைக் கண்டார். சூழ்ச்சி செய்து அவரைக் காண வரும் போதெல்லாம் அவன் உத்தேசம் அவன் முகத்தில் அவன் கட்டுப்பாட்டையும் மீறி வெளிப்பட்டு விடும். இன்று அவனிடம் உண்மையான பணிவு தெரிந்தது. வழக்கத்தை விட அதிகமாகக் குனிந்த அவன் அவர் கால்களை பயபக்தியுடன் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டபடி தலை நிமிராமல் சொன்னான். “என்னை மன்னித்து விடுங்கள் ஆச்சாரியரே

 

சாணக்கியர் அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “எதற்கு ஆம்பி குமாரா?”

 

ஆம்பி குமாரன் ஆத்மார்த்தமாகச் சொன்னான். “நான் இங்கே கல்வி கற்கும் போது உங்கள் மாணவனாக இருக்கும் அருகதையை வளர்த்துக் கொள்ளவில்லை. அப்போதும் சரி பின்பும் சரி நிறைய தவறுகள் செய்திருக்கிறேன்.”

 

அவன் அதை நடித்துப் போலித்தனமாய் சொல்லியிருந்தால் அதற்கேற்றாற் போல் பூடகமாக ஏதாவது சாணக்கியரும் சொல்லியிருப்பார். அபூர்வமாய் அவன் உண்மையான வருத்தத்தோடு மன்னிப்பு கேட்கிறான். சாணக்கியர் சொன்னார். “தவறு செய்யாதவர்கள் யாருமில்லை ஆம்பி குமாரா?”

 

உண்மை ஆச்சாரியரே. ஆனால் நான் தவறுகளை மட்டுமே செய்திருக்கிறேன். சில தவறுகள் மன்னிக்க முடிந்தவை அல்ல. ஆனாலும் என் முட்டாள்தனத்தால் செய்திருக்கிறேன். கல்வி கற்கும் காலத்திலேயே ஏற்பட்ட ஆரம்ப கோணல் பின் எதையும் நேராகவும் சரியாகவும் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. என் தந்தை எப்போதும் என்னிடம்மகனே ஏன் சிந்திக்க மறுக்கிறாய்?” என்று கேட்பார்.. அந்தக் கேள்வி என்னை என்றைக்குமே கோபமூட்டியிருக்கிறதே ஒழிய யோசிக்க வைத்ததில்லை. அர்த்தமில்லாத கர்வம் என் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து விட்டிருக்கிறது. மன்னிக்கப்படும் அருகதை இல்லா விட்டாலும் ஒரு காலத்தில் உங்கள் மாணவனாக இருந்தவன் என்பதற்காகவாவது என்னை மன்னிப்பீர்களா ஆச்சாரியரே?” சொல்கையில் ஆம்பி குமாரனின் குரல் கரகரத்தது. அவன் கண்களில் ஈரம் தெரிந்தது. 

 

சாணக்கியர் சொன்னார். “செய்த தவறை உணர்ந்து பச்சாதாப்படுபவன் என்றும் மன்னிப்புக்கு அருகதை உள்ளவனாகிறான் ஆம்பி குமாரா. மேலும், மாணவர்களின் தவறை மன்னிக்க முடியாதவன் ஆசிரியனாக இருக்க அருகதை இல்லாதவனாகிறான்

 

சில கணங்கள் உணர்ச்சிவசப்பட்டவனாய் பேச்சிழந்து நின்ற ஆம்பி குமாரன் பின் மெல்லச் சொன்னான். “நன்றி ஆச்சாரியரே.....”

 

மறுபடி சிறிது மௌனம் சாதித்து விட்டு ஆம்பி குமாரன் சொன்னான். “உங்கள் மாணவர்களும், சின்ஹரனும் நீங்கள் காட்டிய வழியில் பயணம் செய்து மகத்தான வெற்றிகளைக் கண்டு வருவதற்கு உங்களுக்கு வாழ்த்துகளும் கூட ஆச்சாரியரே.”

 

அவனைக் கூர்ந்து பார்த்த சாணக்கியருக்கு அவன் முகத்தில் கபடம் தெரியவில்லை. ஆம்பி குமாரன் சொன்னான். “தற்போது அலெக்ஸாண்டர் என்னையும் யூடெமஸையும் பாரதத்தின் சத்ரப்களாக நியமித்திருக்கிறான் ஆச்சாரியரே. காந்தார அரசனாகவும், அலெக்ஸாண்டரின் சத்ரப்பாகவும் தங்களுக்கு நேரடியாக ஆதரவு தர முடியா விட்டாலும் கூட இந்த வெற்றிகளைச் சாதித்தவர்கள் நான் படித்த கல்விக்கூடத்தின் மாணவர்கள், என் முந்தைய சேனாதிபதி, என் ஆச்சாரியர் என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது 

 

அலெக்ஸாண்டரின் இந்தப் புதிய நியமனம் பற்றி சாணக்கியர் இப்போது தான் அறிகிறார். பிலிப்புக்கு நேர்ந்த கதி தான் ஆம்பி குமாரனின் ஞானோதயத்துக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் அனுமானித்தார். அடுத்த சத்ரப் அவனுடைய பாதுகாப்பிற்காகப் பணிந்து வந்திருக்கிறான். ஆனால் பழைய சூழ்ச்சி மனப்பான்மை இல்லாமல் அவன் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. சின்ஹரன் அவருடன் இணைந்ததிலும் அவனுக்கு வருத்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே சமயத்தில் காந்தார அரசனாகவும், அலெக்ஸாண்டரின் சத்ரப் ஆகவும் நேரடியாக ஆதரவு தருவது சாத்தியமல்ல என்றும் யதார்த்த நிலைமையை சொல்கிறான். மறைமுக ஆதரவு தருவதாகச் சூசகமாகத் தெரிவிக்கிறான். தன் முன்னாள் மாணவனின் புதிய அவதாரம் சாணக்கியரை யோசிக்க வைத்தது.

                   

அவர் அமைதியாகச் சொன்னார். “உன்னிடம் தெரியும் மாற்றங்கள் உன் முன்னாள் ஆசிரியனுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன ஆம்பி குமாரா

 

முதல் முறையாக அவரிடமிருந்து கிடைத்த அந்தப் பாராட்டு அவனுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. அவன் மனம் நெகிழ்ந்து ஆத்மார்த்தமாகச் சொன்னான். ”அரச புத்திரனாகவே வாழ்க்கையை ஆரம்பித்ததால் அது ஒன்றே போதும் என்ற தவறான தலைக்கனம் என்னிடம் உருவாகியிருந்தது ஆச்சாரியரே. அதனால் அரியணையைப் போலவே எல்லாம் தானாக எனக்கு வாய்த்து விடும் என்று தோன்றியிருந்தது. கல்வி கூட எனக்கு கசந்த காரணம் அதில் கூடுதல் நன்மை  எதையும் என்னால் யோசித்து உணர முடியாமலிருந்தது தான். இல்லா விட்டால் உங்கள் மாணவனாகும் வாய்ப்பைப் பெற்றும் காலிப் பாத்திரமாகவே இந்தக் கல்விக்கூடத்திலிருந்து போகும் துர்ப்பாக்கியத்தை நான் பெற்றிருக்க மாட்டேன்...”

 

காலம் ஆம்பி குமாரனையும் மாற்றி தன் சக்தியை நிரூபித்து விட்டது என்று சாணக்கியர் நினைத்துக் கொண்டார். அவர் மென்மையாகச் சொன்னார். “ஆனால் இந்தக் கல்விக்கூடம் மாணவனாக உன்னிடம் ஒரு காலத்தில் மாற்றத்தைப் பார்க்கா விட்டாலும், ஒரு மன்னனாக இன்றைக்கு உன்னிடம் பெரிய மாற்றத்தை பார்க்கிறது என்பதே சிறப்பு தான் ஆம்பி குமாரா. உன் பழைய தவறுகளை ஒத்துக்கொள்ள மட்டுமே நீ இங்கு வரவில்லை என்று நினைக்கிறேன். இன்று நீ இங்கு வந்த உத்தேசம் என்ன என்பதை மனம் விட்டுச் சொல்

  

(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, November 22, 2023

Monday, November 20, 2023

யோகி 24

 

ந்தே நிமிட தியானத்தில், எலும்பில் ஏற்பட்ட விரிசலை பிரம்மானந்தா சரிசெய்து கொண்டது எந்த ஆஸ்பத்திரியில், எந்த நாளில் என்ற தகவல்கள் எங்கும் தரப்படவில்லை. அவரது விமர்சகர்கள் அதை அவருடைய அபாரக் கற்பனை என்று கேலி செய்தார்கள். நடந்தது உண்மை தான் என்றால் ஆதாரம் காட்டுங்கள் என்று சொன்னார்கள். பிரம்மானந்தா ஆதாரம் காட்டும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை.  சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் அந்தக் காலத்தில் இருந்த அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் விசாரித்து விட்டதாகவும், எந்த ஆஸ்பத்திரியிலும் அந்த நிகழ்வை யாரும் நினைவு கூரவில்லை என்றும் விமர்சகர்கள் சொன்னார்கள்.

 

ஒரு பேட்டியில் அவரிடம் நேரடியாகவே அந்த நிகழ்வைச் சந்தேகிக்கும் கேள்வி கேட்கப்பட்டது. “உங்கள் விமரிசகர்கள் தங்கள் பழைய எலும்பு விரிசல் தியானத்தால் குணமானது என்பதை நம்ப மறுக்கிறார்களே?”

 

பிரம்மானந்தா அலட்டிக் கொள்ளாமல் சொன்னார். “இறைவனையே நம்ப மறுக்கும் மனிதர்களைக் கொண்ட உலகம் இது. அவர்கள் நான் சொல்வதை நம்ப மறுப்பதில் ஆச்சரியம் இல்லை. யாருடைய நம்பிக்கையும் சான்றிதழும் எனக்குத் தேவையில்லை. தியானத்தின் மகிமையைத் தெரிவிக்க வேண்டி தான் அந்த நிகழ்வைச் சொன்னேன். மற்றபடி அதைச் சொல்லி எலும்பு முறிவுக்கான ஆஸ்பத்திரி நடத்தி சம்பாதிக்கும் உத்தேசம் எனக்கு இல்லவே இல்லைசொல்லி விட்டு கலகலவென்று பிரம்மானந்தா சிரித்து அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

அவர் பிரபலமாகி விட்ட பின் தந்த பேட்டிகளில் பேட்டியாளர்களைப் பிரமிக்க வைக்குமளவு, தன் கற்பனை வளத்தைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்.  அதை உண்மை என்று நிரூபிக்கும் அவசியம் இல்லாதபடியும் பார்த்துக் கொண்டார். ஒரு முறை ஒரு பேட்டியில் முற்பிறவியில் அவர் பதஞ்சலி முனிவரின் பிரதான சீடராய் இருந்ததைச் சொன்னார். அந்த நிகழ்வுகள் எல்லாம் சில சமயங்களில் தனக்கு திடீர் என்று நினைவுக்கு வருவதாய்ச் சொன்னார்.

 

யோக நூல்களைத் தொகுத்து, யோக சூத்திரங்களை இவ்வுலகுக்குத் தந்த அவர் குருவின் உத்தரவால் தான், இப்பிறவியில் அவர் யோகாலயத்தை நிறுவியதாய்க் கண்கலங்கக் குறிப்பிட்டார். அவர் குருவின் யோக சூத்திரங்கள் இந்த உலகிற்கு வழிகாட்டுவது போல், அவருடைய யோகாலயமும் இந்த உலகுக்கு காலம் உள்ள வரையும் வழிகாட்டும் என்று நம்புவதாகவும் குரல் கம்ம அவர் சொன்னார்.  ஆனால்  எதற்கும் காரணமாகத் தன்னை நினைக்கவில்லை என்றும், இதுவரை நடந்ததும், இனி நடக்க இருப்பதும் எல்லாம் சுந்தரமகாலிங்கத்தின் அருளாலும், அவருடைய குரு பதஞ்சலியின்   ஆசியாலும் தான் என்று நினைப்பதாயும் சொன்னார். அவருடைய  தன்னடக்கத்தை அவருடைய பக்தர்களும், தீவிர ஆதரவாளர்களும் பாராட்டினார்கள். அவர் முற்பிறவியில் பதஞ்சலி முனிவரின் பிரதான சீடர் அல்ல என்பதை நிரூபிக்க முடியாமல் அவருடைய எதிர்ப்பாளர்கள் திணறினார்கள்.

 

அவருடைய பேச்சுகள் பலதும் வார்த்தைக்கு வார்த்தை ஓஷோவின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் விமர்சகர்கள் சொன்னார்கள். அதை பிரம்மானந்தா முழுவதுமாக மறுத்தார். “யோகா உட்பட எல்லா ஞானமும் சதுரகிரியில் என் மூளைக்குள் டவுன்லோடு ஆன சங்கதிகள். எல்லாம் அந்த சுந்தர மகாலிங்கம் எனக்குப் போட்ட பிச்சை. இளமைக்காலத்தில் நான் ஒருசில புத்தகங்கள் படித்திருக்கிறேன். அதுவும் ஓஷோவின் புத்தகங்கள் அல்ல. சதுரகிரியில் நான் மெய்ஞான அனுபவம் பெற்ற பிறகு எந்தப் புத்தகம் படிக்கும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. முற்றிலும் ஞானமடைந்த பிறகு புத்தகங்களில் இருப்பதெல்லாம் அரைகுறைகளாகவும், தவறானவைகளாகவும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் அவற்றையெல்லாம் படிக்கும் அவசியமோ, பொறுமையோ எனக்கில்லாமல் போய் விட்டது.”

 

பெரும்பாலும் எந்த ஒரு கேள்விக்கும் அவர் எளிமையான பதில் சொல்வதைத் தவிர்த்தார் என்பதையும் ஷ்ரவன் கவனித்தான். கடினமான கேள்விகளுக்கு மட்டுமல்லாமல் எளிமையான கேள்விகளுக்கும் கூட அவர் பெரிய பெரிய வார்த்தைகள் சொன்னார். வரலாறையும், அறிவியலையும், விஞ்ஞானிகளையும், மேற்கோள் காட்டிப் பேசினார். பேட்டியின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத எதிர்கேள்விகள் கேட்டு பிரம்மானந்தா அசத்தினார். பல சமயங்களில் தாங்கள் கேட்டதற்கும், இவர் கேட்கும் பதில் கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் திருதிருவென பேட்டியாளர்கள் விழிப்பது தெரிந்தது. அவர்கள் பதில் தெரியாமல் தடுமாறுவதை ரசித்துஇதற்குப் பதில் கிடைக்கும் போது நீங்கள் கேட்கும் கேள்விக்கும் தானாய் பதில் புரிந்து விடும்என்று சொல்வார். எந்த ஒரு கேள்விக்கும் அவர்தெரியாதுஎன்ற பதிலை மட்டும் இதுவரை சொன்னதேயில்லை. 

 

அவர் பேச்சில் குறிப்பிடும் வரலாற்று உண்மைகள் ஆதாரமற்றவை என்றும், அவர் கூறும் அறிவியல் கருத்துகளுக்கும் அடிப்படை எதுவும் இல்லை என்றும் அவரை விமர்சிப்பவர்கள் சொன்னார்கள். அந்த விமர்சனத்தை அவரோ, அவருடைய பக்தர்களோ காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அதையெல்லாம் நாத்திகர்களும், மாற்று மதத்தவர்களும் உள்நோக்கத்தோடு செய்யும் அவப் பிரசாரமாகச் சொன்னார்கள்.

 

அதே சமயத்தில் உண்மைக்காக மட்டுமே அவரை விமர்சிக்கிறார்கள் என்று சொல்ல முடியாதபடி தான் அவருடைய விமர்சகர்களும் பெரும்பாலும் இருந்தார்கள். அவருடைய யோகாலயம் பற்றியும், அவருடைய கருத்துக்களைப் பற்றியும் மிகவும் கடுமையாக இளம்பரிதி என்ற இளைஞன் விமர்சித்து வந்தான். அவன் அவரைப் பல கேள்விகள் யூட்யூபில் கேட்டு விட்டுஎங்கே பதில்?”  எங்கே பதில்?” என்று அடுத்தடுத்த யூட்யூப்களில் கேட்டு வந்தான். பிரம்மானந்தாவின் பரம பக்தர் ஒருவர்முதலில் உன் பெற்றோர் உனக்கு வைத்த பெயர் என்ன? உன் மதம் என்ன? என்று வெளிப்படையாகத் தெரிவித்து விட்டு கேள்விகள் கேள். இப்படி புனைப்பெயரில் முகமூடிகளைப் போட்டுக் கொண்டு கேள்விகள் கேட்பதை நிறுத்துஎன்று ஆவேசமாகத் தன் யூட்யூபில் கேட்டார். இளம்பரிதியிடமிருந்து அதற்குப் பதில் இல்லை. ஆனால் அதன் பின்எங்கே பதில்?” என்று கேட்பதை அவன் நிறுத்திக் கொண்டான்.   

 

ஷ்ரவன்யாருக்கும் வெட்கமில்லைஎன்று நினைத்தான். அவன் கவனம் அடுத்ததாக பிரம்மானந்தாவின் குடும்ப உறுப்பினர்கள் பக்கம் திரும்பியது. பிரம்மானந்தாவின் பெற்றோர் அவர் யோகாலயம் ஆரம்பித்த காலத்திலேயே இறந்து போயிருந்தார்கள். அவரது ஒரே தங்கை தற்போது தன் மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறாள். அவள் எப்போதாவது இந்தியா வருகையில் அண்ணனைப் பார்த்து விட்டுப் போகிறாள் என்பதைத்தவிர அவள் அவருடன் அதற்கதிகத் தொடர்பில் இல்லை. அதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கம் யோகாலயத்தில் தற்போது எதிலும் இல்லை என்பது புரிந்தது. 

 

ஷ்ரவன் அடுத்ததாய் யோகாலயம் பற்றிய மற்றவர்கள் அபிப்பிராயங்களை அறிய விரும்பினான். இணையத்தில் நிறைய பேர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்கள். சிலர் அவரை கடவுள், பதஞ்சலியின் சீடர், யோகி, ஞானக்கடல், அறிவுப்பொக்கிஷம், மகான், சித்தர் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். சிலர் அவர் புளுகர், போலி, பினாமி, தற்பெருமைப் பிரியர், ஏமாற்றுப் பேர்வழி என்றெல்லாம் வர்ணித்திருந்தார்கள். இரண்டு வித அபிப்பிராயங்களுக்கும் காரணங்களை அவர்கள் விவரித்திருந்தார்கள். அவற்றில் எது உண்மை, எது பொய் என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய வேண்டியிருந்தது.

 

ஆரம்பத்தில் யோகாலயத்திற்கான இடத்தை வாங்க பிரம்மானந்தா சிரமப்பட்டதைப் போல் பின்பு சிரமப்படவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. தொடர்ந்து சுற்றிலும் இருக்கும் இடங்களை வாங்கி யோகாலயத்தை விரிவுபடுத்திக் கொண்டே போவதற்கு வேண்டிய அளவு பணம் அவரிடம் இருந்திருக்கிறது. சிலரை மிரட்டி இடம் வாங்கியிருக்கிறார் என்ற புகார் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் பலத்த எதிர்ப்பை யாரும் காட்டியதாகத் தகவல் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சிகளிலும் இருக்கும் முக்கியஸ்தர்கள் கூட பிரம்மானந்தாவுக்கு நெருக்கமாகவே இருந்து வந்ததால் அவரை எதிர்த்து யாரும் சோபிக்க முடியவில்லை.  பல அரசியல்வாதிகளின் பணம் அவரிடம் இருக்கிறது, பலரது பினாமியாகவும் அவர் இருக்கிறார் என்று சிலர் பொதுவாக அபிப்பிராயம் தெரிவித்தாலும் அது வதந்தியாகவே வலம் வந்ததே ஒழிய உறுதியாக ஆதாரத்துடன் குற்றம் சாட்ட முடிந்தவர்கள் யாருமில்லை.

 

சிலர் யோகாலயத்தில் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் மறைவாக வாழ்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். அவர்களுக்கு பிரம்மானந்தா அடைக்கலம் தந்து பிரதிபலனாகப் பெரிய தொகையைப் பெற்றுக் கொள்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் அதற்கும் நம்பத்தகுந்த எந்த ஆதாரத்தையும் விமர்சிகர்களுக்குத் தர முடியவில்லை.

 

ஷ்ரவன் எந்த வதந்தியையும், புகாரையும் அலட்சியப்படுத்தி விடவில்லை. உண்மை எதிலும் இருக்கலாம். இனி யோகாலயத்தின் உள்ளே என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதை அவனே சென்று தான் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்


(தொடரும்)

என்.கணேசன்