சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 29, 2018

இருவேறு உலகம் – 112


செந்தில்நாதன் கண்காணிப்புக்குத் தேர்ந்தெடுத்த மூன்று குடோன்களில் ஒன்றில் மாடி ஜன்னல்கள் கண்ணாடி உடைந்தும், திறந்தும் இருந்தன. அப்படிப்பட்ட இடத்தில் யாரையும் கடத்தி வைத்திருக்க வழியில்லை என்பதால் முதல் நாளிலேயே அதைக் கண்காணிப்பில் இருந்து விலக்கினர். மீதமுள்ள இரண்டு குடோன்களையும் மிக ரகசியமாகக் கண்காணித்ததில் ஒன்று சதாசர்வ காலம் திறந்தே இருந்தது. லாரிகள் வேன்கள் வந்து போவதும் சரக்குகள் ஏற்றி இறக்கி வைக்கப்படுவதும் ஒரு நாளுக்கு நான்கைந்து முறையாவது நடந்தது. கடைசியாக மிஞ்சிய குடோன் புறநகர்ப் பகுதியில் இருந்தது. அங்கு ஒரு நாளைக்கு ஒரு முறை கூட சரக்குகள் ஏற்றி இறக்குவது அபூர்வமாக இருந்தது. விசாரித்ததில் அது ஒரு தனியார் கம்பெனியின் குடோன்களில் ஒன்று என்றும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தான் அங்கு சரக்குகள் ஏற்றி இறக்கப்படும் என்று தெரிந்தது. அந்த குடோனுக்கு மேல் மாடி இருந்த போதும் ஒரு ஜன்னல் கூட மாடிப்பகுதியில் இருக்கவில்லை. அந்தக் குடோனுக்குப் பக்கத்தில் வீடுகளோ கடைகளோ இல்லை. இரு பக்கங்களிலும் தோட்டங்கள் மட்டுமே இருந்தன. எதிர்ப்பகுதியில் ஒரு தொழிற்சாலையின் பின் பக்கச்சுவர் தான் இருந்தது.  “ஹரிணியை இது போன்ற ஒரு குடோனில் கடத்தி வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்” என்று செந்தில்நாதன் நினைத்தார்.

ஸ்கூட்டர், பைக் ஆட்டோ ரிக்‌ஷா, கார் என்று விதவிதமாய் நீண்ட இடைவெளியில் ஓட்டிச் சென்றும், கைவண்டி இழுத்துச் சென்றும், பாதசாரியாகப் போயும் ரகசியமாய் போலீஸார்  அந்தக் குடோனைக் கண்காணித்தனர். ஆனால் சந்தேகப்படுத்துவது போல் அந்தக் கட்டிடத்தையே வெறித்துப் பார்க்காமல், தனி ஆர்வம் காட்டாமல், போகிற போக்கில் மற்ற கட்டிடங்களைப் பார்த்துச் செல்கிற அளவுக்கே அதையும் பார்த்துப் போனார்கள். ஒரே ஒரு மனிதன் மட்டும் காலை அந்தக் குடோனில் இருந்து வெளியேறினான். அப்போது இன்னொருவன் உள்ளே போனான். காலை வெளியேறியவன் மதியம் ஒரு முறை வந்து மறுபடி போனான். பின் இரவு வந்தவன் மறு நாள் காலை வரை தங்கினான். இரவு அவன் வந்தவுடன் காலையில் வந்தவன் வெளியே போனான்.  இரவு முழுவதும் குடோனில் தங்கி காலையில் வெளியேறுபவனைக் காட்டி செந்தில்நாதனிடம் ஒரு போலீஸ்காரர் சொன்னார். “நம்ம சகுனியை இந்த ஆள் அடிக்கடி பார்க்க வர்றதை நான் பார்த்திருக்கேன். முதலமைச்சர் ஆபிசுக்குக் கூட இந்த ஆள் ஒரு தடவை வந்திருக்கார்.”

செந்தில்நாதன் க்ரிஷிடமும், உதயிடமும் இதைத் தெரிவித்து விட்டுச் சொன்னார். “அந்த ஆளைப் புடிச்சாலும் முதலமைச்சர் அந்த ஆளை வெளியே விட்டுட கட்டாயப்படுத்த வாய்ப்பு இருக்கு….”

உதய் அமைதியாகச் சொன்னான். “புடிச்சாலும் அதைத் தெரிவிக்கணும்கிற அவசியம் இல்லையே. அப்படியொரு விஷயம் நடக்கலைங்கற மாதிரியே இருந்துடலாம். அவனை அடைச்சு வைக்க எத்தனையோ இடங்கள் இருக்கு. விசாரிக்கிற விதத்தில் விசாரிச்சா எதிரி பத்தியும் நிறைய விஷயங்களை அவன் கிட்ட இருந்து கறந்துடலாம்”

“ஆனா ஹரிணியை அங்கே இருந்து விடுவிச்சுட்டா அந்த விஷயத்தை மறைக்க முடியாதே. முக்கியமா எதிரி லேசுப்பட்டவன் இல்லை. அவன் விட மாட்டான்…..”

”அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம் சார்.  வேண்ணா நீங்களும் தலைமறைவாயிட்டதா காமிச்சுக்கலாம். உங்களுக்கு என்ன ஆகணும், என்ன வசதிகள் வேணும்கிறதை மட்டும் சொல்லுங்க. நான் செஞ்சு தர்றேன். பத்மாவதி அம்மாவோட சின்ன மருமகள் பாதுகாப்பா வரணும். அவ்வளவு தான். அந்தம்மாவோட நச்சரிப்பு தினசரி தாங்க முடிய மாட்டேங்குது….”

க்ரிஷும் செந்தில்நாதனும் புன்னகைத்தார்கள்.

“அப்ப ரகசியமா நம்ம ஆபரேஷனை ஆரம்பிக்கலாமா? முதலமைச்சருக்குக் கூட விவரங்கள் தெரியக்கூடாதுன்னா நான் என் கூட இப்ப இருக்கிற ரெண்டு போலீஸ் அதிகாரிகளைத் தவிர மத்தவங்கள இதுல சேர்க்க முடியாது……” செந்தில்நாதன் சொன்னார்.

“உங்களுக்கு எந்த மாதிரியான ஆள்கள் வேணும்னு சொல்லுங்க. நான் ஏற்பாடு பண்ணித் தர்றேன்” உதய் உறுதியாகச் சொன்னான்.

அவர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட ஆரம்பித்தார்கள். க்ரிஷ் அன்று “போலீஸார் வருகிறார்கள்” என்ற செய்தியை ஹரிணிக்கு அனுப்பினான். அதை அனுப்புவதற்கு முன் முத்தத்தை முதலில் அனுப்பினான்….


ல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் ஏதோ ஒரு நெருடல் மனோகருக்கு ஏற்பட ஆரம்பித்தது. ஹரிணி ஒரு முரண்டும் பிடிக்காமல் அமைதியாக இருந்தது அவனுக்கு இயல்பாய் தெரியவில்லை. அவள் பற்றி எல்லாத் தகவலும் அவன் அறிந்திருந்தான். இந்தப் பெண் சிங்கம் சீறாமல் சிணுங்கவும் செய்யாமல் அமைதி காப்பது காரணம் தெரியாத ஒரு ஆபத்து உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தியது. ரகசியமாய் ஏதாவது திட்டம் வைத்திருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது. எனவே அன்று அவளிடம் பேச்சுக் கொடுப்பது என்று தீர்மானித்தான்.

அவன் அவளிடம் பேச வருவதற்கு சற்று முன் தான் க்ரிஷ் அனுப்பிய முத்தத்தை ஹரிணி உணர்ந்தாள். சந்தோஷமாய் இருந்தது. ஆனால் முத்தம் கிடைத்த அளவு தெளிவாய் அவன் அனுப்பிய தகவல் தெரியவில்லை. மிகவும் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு புலன்களைக் கூர்மையாக்கினாள். லேசாக காக்கி நிறம் போல வந்து போனது. போலீஸ் என்று சொல்ல வருகிறானோ?

அவளை அதற்கு மேல் யோசிக்க விடாமல் மனோகர் உள்ளே நுழைந்தான். உணவை வைத்து விட்டுப் போகாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு அவளைக் கூர்மையாகப் பார்த்தான். “உன்னை எல்லாரும் சிங்கம், புலின்னு எல்லாம் சொன்னாங்க. ஆனா நீ பூனை மாதிரி பதுங்கி இருக்கறதைப் பார்க்கறப்ப கஷ்டமாய் இருக்கு”

அவனுக்கு அவளுடைய அமைதி பயமுறுத்துகிறது என்பதை ஹரிணி புரிந்து கொண்டாள். புன்னகையோடு சொன்னாள். “உனக்கு ஏன் மனுஷங்களை மனுஷங்களாவே மதிக்கத் தெரியலைன்னு புரியல. மிருகங்களோடவே ஒப்பிட்டுப் பார்க்கிற இந்த நீச்ச புத்தி சரியில்லையே. இதெல்லாம் உன் முதலாளி கிட்ட இருந்து வந்த பழக்கமா?”

அவள் முதலாளி என்றதும் அவன் உஷாரானான்.  பேச்சுக் கொடுத்து ‘அவனை’ அறிந்து கொள்ள முயற்சி செய்கிறாளோ? அவன் காட்டமாகச் சொன்னான். “நீச்ச புத்தியாய் இருந்திருந்தா நீ மயக்கமா இருக்கறப்பவே உன் கற்பு பறிபோயிருக்கும். ஞாபகம் வச்சுக்கோ”

ஹரிணி சொன்னாள். “ஒரு பொண்ணை அடைச்சு வச்சு கற்பழிக்கலைங்கறது எல்லாம் ஒரு பெருமையா எக்ஸ். உன் முதலாளிக்கு க்ரிஷ் கிட்ட என்ன பிரச்சன? க்ரிஷ் உன் முதலாளி கிட்ட எந்த வம்புக்கு வந்தான்? அவன் என்ன பண்ணிடுவான்னு தான் பயப்படறீங்க? அதயாவது சொல்லித் தொலையுங்கடா. தெரிஞ்சுக்கிறேன். சரி எதிரின்னே நினைக்கிறீங்கன்னு வெச்சுக்குவோம். எதிரின்னா நேரடியா சந்திக்கணும். அது தான் வீரம். அது தான் சக்தி. உன் முதலாளியப் பத்தி நானும் நிறைய கேள்விப்பட்டேன். ஏகப்பட்ட சக்திகள் வச்சிருக்கான்னு எல்லாம் சொன்னாங்க. அப்படிப்பட்ட ஆள் அதையெல்லாம் நம்பாம என்னை கடத்திட்டு வந்தான் பாரு. அப்பவே தோத்துட்டான்னு அர்த்தம். கற்பழிக்கலைங்கறத பெருமையா சொன்னே பார். இது எந்த அளவுக்கு நீங்க இறங்கிட்டீங்கங்கறதுக்கு அருமையான உதாரணம். கற்புங்கறது உடம்பு சம்பந்தப்பட்ட சமாச்சாரம் அல்ல, மனசு சம்பந்தப்பட்ட சமாச்சாரம்னு நான் உறுதியா நினைக்கிறேன். என் உடம்ப வேண்ணா எந்த நாயும் தொடலாம். ஆனா என் மனச க்ரிஷைத் தவிர யாருமே நெருங்க முடியாது… உனக்கு இதெல்லாம் எந்த அளவு புரியும்னு தெரியாது. ஆனாலும் சொல்றேன்…..”

இவளிடம் பேச்சுக் கொடுத்திருக்க வேண்டாம் என்று மனோகருக்குத் தோன்றியது. நாக்கா…. சவுக்கா! ஆனாலும் ஆரம்பித்து விட்ட பிறகு பின்வாங்க அவன் விரும்பவில்லை. “எல்லாத்தையுமே நேரா சந்திக்கணும்னு அவசியம் இல்லை. தேவையானா மட்டும் தான் அவர் எதையுமே நேரடியா கையாள்வார்….. என் முதலாளியோட சக்திக்கு முன்னாடி உன் க்ரிஷ் ஒரு துரும்பு. அதைப் புரிஞ்சுக்கோ”

“ஒரு பெண்ணைக் கடத்தினவன இதுக்கு மேல புரிஞ்சுக்க என்ன இருக்கு எக்ஸ். ராமாயணம் படிச்சிருக்கியா. ராவணனுக்கு பத்து தலை. அத்தனையும் அறிவு. அத்தனையும் சக்தி. ஆனா அவன் எப்ப சீதையைக் கடத்தினானோ அப்பவே அவனுக்கு அழிவு காலம் ஆரம்பிச்சிடுச்சு. கடைசில அழிஞ்சே போனான். உன் முதலாளியும்  அப்படி தான் ஆரம்பிச்சு இருக்கான். அழிவுல இருந்து காப்பாத்திக்க எந்த சக்தியும் போதாது ஞாபகம் வச்சுக்கோ”

மனோகருக்கு ஓங்கி அவளை அறைய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ”பொம்பளய அடிக்கறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்குப் பெருமையாடா” என்கிற வகையில் பேச ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடுவாள் என்று பயந்தான். ஆனால் தப்பிக்க திட்டம் போடுகிறவளோ, மறைமுகமாய் எதையாவது செய்ய நினைப்பவளோ அல்ல என்பதை பணியாத அவள் பேச்சு காண்பித்து விட்டது. அந்தத் திருப்தியுடன் அங்கிருந்து போனான்.


ம்யூனிக் நகரில் அரண்மனை போல் இருந்த ஒரு வீட்டின் உள்ளே எர்னெஸ்டோ என்ற பெயருடைய ஒரு முதியவர் பிதோவனின் இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த இசையைக் கிழித்துக் கொண்டு அலறியது தொலைபேசி. லேசான முகச்சுளிப்புடன் அவர் ரிசீவரை எடுத்தார். “ஹலோ”

“சார் நம்ம அக்கவுண்டை இந்தியாவில் இருந்து யாரோ ஆராய்ச்சி செய்திருக்கற மாதிரி தெரியுது….”

வேலையாளைப் பார்த்து அவர் சைகை செய்ய அந்த வேலையாள் ஓடி வந்து பிதோவனின் இசையை நிறுத்தினான்.

“யாரதுன்னு கண்டுபிடி. கண்டுபிடிச்சு தெரிவிக்காம நீ தூங்கப் போகக்கூடாது…” அமைதியாக அவர் சொன்னாலும் கேட்ட செய்தி அவர் அமைதி மனதில் இருந்து விடைபெற்று விட்டது.

“ரெண்டு மணி நேரத்துக்குள்ளே சொல்றேன் சார்….”

(தொடரும்)
என்.கணேசன்



Wednesday, November 28, 2018

முந்தைய சிந்தனைகள் 39

சிந்திக்க சில விஷயங்கள் என் நூல்களிலிருந்து....











என்.கணேசன்

Monday, November 26, 2018

சத்ரபதி – 48


ன்னைச் சுற்றி நாலாபுறமும் எழுப்பப்பட்டு வரும் சுவர்களைப் பணியாளர்கள் கட்டுவதாக ஷாஹாஜி நினைக்கவில்லை. ஒவ்வொரு கல்லாக விதியே எடுத்து வைப்பதாகவே அவர் உணர்ந்தார். மரணம் எத்தனை அருகில் என்று தெரியவில்லை. விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விதி விட்ட வழி என்று கண்களை மூடி உள்ளே அமர்ந்திருந்த அவர் இதயத்தின் ஒரு மூலையில் சிவாஜிக்காக இரத்தம் கசிந்தது. வாழ்ந்த நாட்களில் அவர் சிவாஜிக்காகப் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவன் திறமையால், முயற்சியால் வீரத்தால் தான் பெரும்பாலான வெற்றிகளைப் பெற்றிருக்கிறான். பீஜாப்பூர் சாமராஜ்ஜியத்தையே  அவன் தன்னுடைய  சாமர்த்தியத்தாலேயே வெற்றிகரமாக எதிர்த்தும் சமாளித்தும் வருகிறான். இந்த நேரத்தில் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை அறிந்த பின் அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று அவர் யோசித்துப் பார்த்தார்.  கண்டிப்பாக அவர் மகன் துடித்துப் போவான் என்பதை அவர் அறிவார். அவனுடையது என்று அவன் எதை நினைக்கிறானோ அதை உயிருக்கு உயிராக நேசிப்பவன் அவன்.  தன் தந்தைக்குத் தன்னால் இப்படி நேர்ந்ததே என்று கண்டிப்பாக வேதனைப்படுவான். அவன் தந்தையைக் காப்பாற்ற வேண்டுமானால் அவன் கஷ்டப்பட்டுப் பெற்றது அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்படி அவன் இழப்பதில் அவருக்கு வருத்தமே. தன்னால் சாதிக்க முடியாததை எல்லாம் அந்த மகன் சாதிக்க இரகசியமாய் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர் அவர். அவன் அப்படிச் சாதிக்க இப்போது அவரே தடையாக இருப்பது நிறையவே உறுத்தியது. அவன் அப்படி ஒப்படைத்து சரணடையா விட்டாலோ அவர் உயிரை விட வேண்டியிருக்கும். இறப்பதில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. ஓரு வீரராக அவர் அதற்கு என்றைக்குமே மரணத்திற்குத் தயாராக இருப்பவர் என்றாலும்  சிறுவனாக இருக்கும் இளைய மகன் வெங்கோஜிக்கு அவர் ஆற்ற வேண்டிய கடமைகளை அவர் செய்து முடிக்காமலேயே இறப்பதில் அவருக்கு வருத்தம் இருந்தது…. ஒரு தந்தையாக இருதலைக்கொள்ளி எறும்பாய் அவர் தவித்தார்.  அவரால் ஒரு பிள்ளை பாதிக்கப்படுவது உறுதி. அது எந்தப்பிள்ளை என்பதை விதி தான் சிவாஜியின் எதிர்வினை மூலம் தீர்மானிக்கப் போகிறது….. சிவாஜி என்ன செய்யப் போகிறான்?


சிவாஜி ஷாஹாஜி எதிர்பார்த்தது போலவே துடித்துப் போனான். 
 கர்னாடகத்தை திறம்பட நிர்வாகம் செய்து வந்த ஷாஹாஜி பீஜாப்பூர் அரசின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்ததால் ஆதில்ஷா இப்படி ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுடைய எல்லாச் செயல்களிலும் ஷாஹாஜியின் பங்கில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தும் ஆதில்ஷா அவரைத் தண்டிக்கத் துணிவார் என்று அவர் நினைக்கவில்லை. சிவாஜியைப் பணிய வைக்க இந்த வழியை அவர் தேர்ந்தெடுத்திருந்தது அவனை அதிர வைத்தது. செய்தி கிடைத்ததும் தலையில் இடிவிழுந்தது போல உணர்ந்த அவன் தாயிடம் தகவலைத் தெரிவிக்கச் சென்ற போது அவன் கண்கள் கலங்கி இருந்தன.

ஜீஜாபாய் மகனைப் பார்த்தவுடனேயே பெரியதொரு அசம்பாவிதம் நடந்து விட்டிருக்கிறது என்பதை உணர்ந்தாள். அவள் மகன் அனாவசியமாய்க் கண்கலங்குபவன் அல்ல. கடைசியாக தாதாஜி கொண்டதேவின் மரணத்தின் போது அவன் கண்கள் கலங்கியதைப் பார்த்திருக்கிறாள். அதற்கு முன் அவன் அழுதது குழந்தையாக இருக்கும் போதாக இருந்திருக்கலாம். அவளுக்குச் சரியாக நினைவில்லை. அவள் கவலையுடன் கேட்டாள். “என்ன ஆயிற்று சிவாஜி?”

“நானே என் தந்தைக்கு எமனாக மாறியிருக்கிறேன் தாயே!” சிவாஜியின் குரல் தளர்ந்திருந்தது.

“என்ன உளறுகிறாய்?” ஜீஜாபாய் மகனைக் கோபித்துக் கொண்டாள்.

சிவாஜி மெல்ல தனக்குக் கிடைத்த தகவலைச் சொன்னான். கேட்ட பிறகு ஜீஜாபாயும் அதிர்ந்து போனாள். அவள் அதிர்ச்சியைக் கவனித்த சிவாஜி அவளாக எதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் ஜீஜாபாய் பேச்சிழந்து அமர்ந்திருந்தாள்.

சிவாஜி தாயிடம் நெருங்கி வந்தான். அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே பெருந்துக்கத்தோடு கேட்டான். “இப்போது என் தந்தை என்னை வெறுத்துக் கொண்டிருப்பாரா தாயே? என்னால் அல்லவா அவருக்கு இத்தனை பிரச்னையும்…..”

ஜீஜாபாய் மகனிடம் நெகிழ்ந்த குரலில் சொன்னாள். “தன் விதியை நொந்து கொண்டிருப்பாரே ஒழிய உன்னை எக்காலத்திலும் உன் தந்தை வெறுக்க மாட்டார் சிவாஜி…”

கண்களில் நீர் பெருக ஆரம்பிக்கவே சிவாஜி தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டான். மகன் தலையைப் பாசத்துடன் கோதியபடியே ஜீஜாபாய் மென்மையாகச் சொன்னாள். ”அவரால் முடியாதது எல்லாம் உனக்கு சாத்தியப்பட வேண்டும், நீயாவது நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர் சிவாஜி. இது வரை நீ செய்ததை எல்லாம் அவர் வாய்விட்டுச் சொல்லா விட்டாலும் மனதில் பெருமையாகவே நினைத்திருப்பார்…..”

தாயின் மடியிலிருந்து முகத்தை எடுத்து விட்டால் பேரழுகை அழ வேண்டியிருக்கும் என்பது போல் உணர்ந்த சிவாஜி கஷ்டப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். “நான் என்ன செய்யட்டும் தாயே?”

ஜீஜாபாய் என்ன சொல்வதென்று அறியாமல் திணறினாள். மகன் படிப்படியாகத் திட்டமிட்டு பெற்ற அனைத்தையும் கொடுக்கச் சொல்வதா? இல்லை கணவரைப் பலி கொடுப்பதா? இரண்டில் எதை அவள் சொல்வது? ஒன்றைச் சொன்னால் இன்னொன்று நஷ்டமாகுமே! மகனுக்குத் தந்தையும், மனைவிக்குக் கணவனும் மிக முக்கியம் தான். அந்த உறவை இழப்பதற்குப் பதில் வேறெதை வேண்டுமானாலும் இழக்கலாம்….. இதில் யோசிக்க ஒன்றும் இல்லை. ஆனால் சிவாஜியின் எதிர்காலத்தையும், அவன் கனவையும் அவளால் அந்தக் கணத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை. பெற்றதனைத்தையும் விட்டுக் கொடுப்பது அவன் கனவு கண்ட வாழ்க்கைக்கு நிரந்தர முற்றுப்புள்ளியை வைப்பது போல் தான். அதனால் அவளுக்கு அப்படி விட்டுக் கொடுக்கச் சொல்லவும் முடியவில்லை.

நீண்டதொரு கனத்த மௌனம் அவர்களுக்கிடையே நிலவியது. அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாஜியின் முதல் மனைவி சாய்பாய் மெல்ல முன்னால் வந்தாள். “நான் ஒன்று சொல்லலாமா?” என்று மெல்லக் கேட்டாள்.

ஜீஜாபாயும், அவளது மடியிலிருந்து தலையை எடுத்த சிவாஜியும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இதுநாள் வரை சாய்பாய் இது போன்ற அரசியல் பேச்சுக்களிலோ, விவாதங்களிலோ பங்கு கொண்டதுமில்லை. கருத்து தெரிவித்ததும் இல்லை. இருவரும் ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள் என்றாலும் அந்தப் பார்வையால் அதிகப்பிரசங்கித்தனமாகக் கருத்து சொல்ல முன் வந்து விட்டோமோ என்ற சந்தேகம் மனதில் எழ சாய்பாய் இரண்டடி பின் வாங்கினாள்.

சிவாஜி மனைவியின் தயக்கத்தைப் பார்த்துச் சின்னப் புன்னகை பூத்தபடி சொன்னான். “தயக்கம் வேண்டாம். சொல்”

”உங்கள் தாத்தாவை அகமதுநகர் சுல்தான் கொன்ற பிறகு உங்கள் பாட்டி எடுத்த முடிவையே நீங்களும் எடுத்துப் பார்க்கலாமே. முகலாயச் சக்கரவர்த்தியின் உதவியை நாடலாமே….”

ஜீஜாபாய் மருமகள்கள் நாட்டு நடப்பைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குடும்பத்தின் பழைய நிகழ்வுகளை எல்லாம் சாய்பாய், சொய்ராபாய் இருவருக்கும் விரிவாகவே சொல்லி வைத்திருந்தாள். சோதனை மிகுந்த காலங்களில் சமகாலத்து அரசியல் குறித்த சரியான  தகவல்கள் பெண்களுக்குத் தெரியாமல் இருந்தால் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும் போது அது பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும் என்று ஜீஜாபாய் நம்பினாள். அவளுடைய கஷ்டங்கள் அவளுடைய மருமகள்களுக்கு நேர வாய்ப்பில்லை என்றாலும் எதற்கும் தயார்நிலையில் பெண்களும் இருக்க வேண்டியது அவசியம் என்ற எண்ணம் அவளுக்கு எப்போதும் இருந்தது.

அதனால் ஜீஜாபாயின் தாய் மால்ஸாபாய் தன் கணவரும் மகனும் கொல்லப்பட்ட போது சிந்துகேத்தை இழக்காமல் இருக்க முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானுக்கு எழுதிய கடிதம் எழுதியதை நினைவுகூர்ந்து சாய்பாய் சொன்னதை ஜீஜாபாய் மனதிற்குள் பாராட்டினாள். அவளுக்கும் அது நல்ல திட்டம் தான் என்று தோன்றியது. மகனுக்கு அவள் பார்வையாலேயே அதைத் தெரிவித்தாள்.

தாயும் அதை ஏற்றுக் கொண்டாலும் சிவாஜி அதிலும் சில சிக்கல்களை உணர்ந்தான். மனைவியின் ஆலோசனையைப் பாராட்டி அவளை அனுப்பி விட்டு நிறைய யோசித்தான். பீஜாப்பூர் சுல்தானின் நிபந்தனைகள் முழுவதையும் அவன் ஏற்றுக் கொள்ளாமல் அவன் தந்தையை ஒருவர் காப்பாற்ற முடியும் என்றால் அது முகலாயப் பேரரசராகத் தான் இருக்க முடியும். ஆனால் ஒரு ஆபத்திலிருந்து விலக இன்னொரு பேராபத்தை ஏற்க வேண்டுமா என்று அவனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பீஜாப்பூர் சுல்தானை விட முகலாயப் பேரரசர் மேலும் ஆபத்தானவர். வலிமையானவர். அவரிடம் போவது பெரிதல்ல. பின் விலகுவது சுலபமல்ல. மால்ஸாபாய்க்கு சிந்துகேத்தை முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தலையீட்டினாலேயே காப்பாற்ற முடிந்தது. ஆனால் இப்போதும் சிந்துகேத் படை முகலாயர்களுடன் இணைந்தே இருப்பதால் இன்று வரை அவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் சிவாஜி இன்னொருவர் தலைமையை என்றுமே ஏற்க முடியாதவன்…… அதே சமயத்தில் ஷாஹாஜியை அவனால் காப்பாற்ற முடியாவிட்டால் அவனையே அவன் மன்னிக்க முடியாது.  என்ன தான் செய்வது?

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, November 22, 2018

இருவேறு உலகம் – 111


மாஸ்டரைச் சந்திக்க தாடி, மீசையுடன் இருந்த சீக்கியன் ஒருவன் வந்து சிறிது நேரம் பேசி விட்டுப் போனான் என்ற தகவல் விஸ்வத்துக்குக் கிடைத்தது. அது யார் என்று தெரிந்து கொள்ள அவன் அதிக ஆர்வம் காட்டவில்லை. போலீஸ் அல்லது வக்கீல் அல்லது ஏதாவது துப்பறியும் நிபுணராக அந்த இளைஞன் இருக்கலாம் என்று விஸ்வம் நினைத்தான். இழந்த பணத்தை மீட்க என்ன செய்யலாம் அல்லது சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று இயக்கத்தின் தலைவர் என்கிற நிலையில். மாஸ்டர் ஆலோசித்திருக்கக் கூடும். அது யாராக இருந்தாலும் அவனுக்குக் கவலையில்லை. யாரும் அவனை ஒன்றும் செய்து விடப் போவதில்லை. மீண்டும் யோகசக்திகளைப் பெருக்க ஆரம்பித்து கொஞ்சம் பயமுறுத்திய மாஸ்டர் இப்போது கவலையில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயலும் அளவுக்குப் பலவீனமானது விஸ்வத்துக்குத் திருப்தி அளித்தது. இதிலிருந்து மீண்டு மாஸ்டர் பழைய தெம்பிற்கு வருவதற்குள் அவன் திட்டம் நிறைவேறி இருக்கும். க்ரிஷ் என்ற கேள்விக்குறியும் அவனைப் பெரிதாய் ஒன்றும் செய்து விட முடியாதபடி ஹரிணி என்ற துருப்புச்சீட்டு அவன் கையில் இருக்கிறது.

ஹரிணியின் ஒத்துழைப்பு அவனுக்குத் திருப்தியைத் தந்தது. அவள் அந்த குடோனில் பொருள்கள் வைக்க ஆட்கள் போன போது ஏதாவது கத்தி ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்கிற சிறிய சந்தேகம் அவனுக்கு இருந்தது. அதனால் அதற்குத் தயாராக அவனது ஆள் ஒருவன் மயக்க மருந்துடன் சத்தமில்லாமல் வேகமாகப் படியேறி அவள் அறை வாசலில் நின்றிருந்தான். ஆனால் அதற்கு வேலை இல்லாமல் அவள் அமைதி காத்தது அவளைக் காப்பாற்றியது. ஏதாவது பிரச்னை செய்தால் சித்திரவதை செய்வோம் என்று மனோகர் பயமுறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் எப்படியாவது மாஸ்டரும், க்ரிஷும் சேர்ந்து காப்பாற்றி விடுவார்கள் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையாகவும் இருக்கலாம். எது காரணமானாலும் சரி இப்போதைக்குத் தலைவலி இல்லை.

மிக முக்கியமான ஒரு கட்டம், அவன் வாழ்வின் அதிமுக்கியத் திருப்புமுனை, நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவனுடைய எதிரிகளாக இருக்க முடிந்த இருவரும் அடங்கியே இருக்கும் சூழல் ஏற்பட்டிருப்பது திருப்தியைத் தந்தது. அவனுடைய சக்திகளை அவர்களைச் சமாளிக்க அவன் விரயம் செய்ய வேண்டியதில்லை. அவனுடைய சகல சக்திகளும் இந்த முக்கியக் கட்டத்தில் தேவைப்படுகிறது.... அவன் நிச்சயித்திருந்த பயணமான ஜெர்மனியின் ம்யூனிக் நகருக்குப் போகும் டிக்கெட் உறுதியாகி விட்ட தகவல் அவனுக்கு அந்த சமயத்தில் வந்து சேர்ந்தது நல்ல சகுனமாகவே பட்டது. அவனொரு விதி செய்வான்….!


க்ரிஷ் அன்று மாலையே கிளம்பினான். வணங்கி எழுந்த அவனை மாஸ்டர் அன்பாக அணைத்துக் கொண்டு சொன்னார். “நீ வந்ததுல எனக்கு என்னோட முக்கால்வாசி மன பாரம் இறங்கிடுச்சு க்ரிஷ். மீதி இருக்கிறதை நான் என்னோட நடவடிக்கைகளால தான் சரி செய்ய முடியும். ஆனா அதைச் செய்வேன்கிற நம்பிக்கை என் குரு அருளால கிடைச்சிருக்கு. நான் கொஞ்ச நாள் இங்கயே தனியாய் இருந்து என் சக்திகளை எல்லாம் கூர்மைப்படுத்த வேண்டி இருக்கு. ரொம்பவும் முக்கியமான ஏதாவது தகவல் இருந்தா மட்டும் போன் பண்ணு. நீ முதல்ல அனுப்பற தகவல் ஹரிணியைக் கண்டுபிடிச்சு காப்பாத்திட்டதா இருக்கணும்னு ஆசைப்படறேன். நீயும் ஜாக்கிரதையா இரு. முக்கியமாய் மேலான அலைவரிசைகள்ல இருக்கப் பார். நானும் அதைத் தான் செய்யப் போறேன்…..”

இங்கு வந்தவுடன் பார்த்த மாஸ்டருக்கும் இப்போது தெரிந்த மாஸ்டருக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது. தெளிவாய், பழைய கம்பீரத்துடன் வழியனுப்பிய மாஸ்டரிடம் இருந்து  லேசான மனதுடன் க்ரிஷ் விடை பெற்றான்.

வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஹரிணி வீட்டுக்குப் போனான். அழுது சிவந்த கண்களுடன் நடைப்பிணமாய் காட்சி அளித்த கிரிஜாவிடம் தானும், ஹரிணியும் முன்பு செய்து கொண்ட தகவல் தொடர்பு பரிசோதனைகளைப் பற்றியும், இப்போதும் அதைத் தொடர்வது பற்றியும் சொன்னான். அவள் திகைப்புடன் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டாள். இந்தப் பையன் செய்யாத பரிசோதனைகள் ஏதாவது இருக்க முடியுமா என்று அந்தக் கவலையின் நடுவிலும் அவள் ஆச்சரியப்பட்டாள். முதலில் வந்த தகவல் பற்றியும் சொன்ன அவன் இப்போது அனுப்பிய தகவலையும் சொன்னான். “ஹரிணி உங்க ஞாபகமாகவே இருக்கிறா போல இருக்கு. உங்கள நல்லா பார்த்துக்கச் சொன்னா. தைரியமாய் இருக்கச் சொன்னா”

அவன் அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று அனாவசியமாக எதையாவது சொல்லும் ரகம் அல்ல என்பதை அவள் அறிவாள். ஹரிணி காணாமல் போனது வரை அவன் ஹரிணிக்காகக் கூட அவளிடம் கூடுதலாக உபசார வார்த்தைகள் பேசியவன் அல்ல. அதனாலேயே அவளுக்கு அவன் மீது ஒரு அதிருப்தி இருந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்டவன் இப்போது சொல்வது உண்மையாகவே இருக்க வேண்டும். ஹரிணியிடம் அவள் நியாயமில்லாமல் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்த போதும், அவள் அம்மா மேல் பாசமாகவே இருக்கிறாள்….. நினைக்க நினைக்க மனம் வெடித்த கிரிஜா அடுத்த கணம் அவன் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு மனம் விட்டு அழுதாள்.

”கவலைப்படாதீங்க ஆண்ட்டி. ஹரிணி சீக்கிரம் வந்துடுவாள்….” என்று அவளைச் சமாதானப்படுத்தி விட்டு மேலும் இருபது நிமிடங்கள் அவளுடன் இருந்து தைரியம் சொல்லி பிறகு கிளம்பிய க்ரிஷ் அடுத்ததாக செந்தில்நாதனைச் சந்தித்தான். கீழே போவது போல் சொல்கிற தகவல் என்னவாக இருக்கும் என்று கேட்டான். முதல் மாடியில் இருந்து கீழ் தளத்துக்கு அவளை இடம் மாறி விட்டிருப்பார்களோ என்று கேட்டான்.

“இடம் மாற்றியிருக்க வாய்ப்பு இருக்குன்னாலும் காரணம் இல்லாம புத்திசாலிகள் அப்படி அடிக்கடி இடம் மாற்ற மாட்டாங்களே க்ரிஷ்” என்றார் செந்தில்நாதன்.

ஒரு தாளை எடுத்து அதில் Going Downstairs என்று எழுதிக் கொண்ட செந்தில்நாதன் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அதையே மனதில் சொல்லியும் பார்த்துக் கொண்டார். Going Down…… Go Down….. Godown. கடைசி வார்த்தை மனதில் தங்கியது.

“க்ரிஷ் அது ஏன் குடோனோ இருக்கக்கூடாது?” என்று கேட்டார். அந்த வார்த்தையை எப்படி அவர் அடைந்தார் என்று சொன்னபோது க்ரிஷும் பரபரப்புடன் சொன்னான். “இருக்கலாம் சார்”

செந்தில்நாதன் சொன்னார். “அவளை அடைச்சு வெச்சிருக்கறது உள்ளூராகவே இருக்கணும்னு இல்லை. வெளியூராகக்கூட இருக்கலாம். ஆனாலும் அவசரத்துக்கு உள்ளூர் தான் கடத்தல்காரங்களுக்கு அதிக வசதி. உள்ளூர்ல முதல்மாடி இருக்கற குடோன்களை ரகசியமா கணக்கெடுத்தே பார்க்கலாமே”

அவருக்கு மிகவும் நம்பிக்கையான திறமையிருக்கும் வேறு இரண்டு போலீஸ்காரர்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டார். மூவரும் சேர்ந்து சென்னையில் முதல் மாடி இருக்கும் குடோன்களின் தகவல்களை சேகரித்தார்கள். முப்பத்தியிரண்டு இருந்தன. அந்த முப்பத்தியிரண்டில் மசூதியின் தொழுகைச் சத்தம் தெளிவாகக் கேட்கும் அளவு மசூதியின் அருகில் இருக்கும் குடோன்களைக் கணக்கெடுத்தார்கள். அவை ஏழு இருந்தன. ஏழில் நான்கு மிக அதிகப் போக்குவரத்து இருக்கும் பகுதியில் இருந்தன. அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் மீதமுள்ள மூன்றை ரகசியக் கண்காணிப்புக்கு அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.


னிருத் அந்த ஆறாவது அக்கவுண்ட்டைக் கண்டுபிடிப்பதில் குறியாய் இருந்தான். அறிவாளியும், சமூக நலனில் மிகுந்த அக்கறையும் உள்ளவனுமான அவனுக்கு அந்த ரகசிய ஆன்மீக இயக்கத்தின் ஒரு உறுப்பினர் என்பதில் மிகுந்த பெருமை உண்டு. அந்த இயக்கத்தில் ஒரு மிகப் பெரிய மோசடி நடந்தது இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று அவன் நினைத்தான். அத்தனை உறுப்பினர்கள் முன்னும் மாஸ்டர் அவமானப்பட்டு நின்று நெஞ்சுருகப் பேசினதில் அளவில்லாத பச்சாதாபம் கொண்டவர்களில் அவனும் ஒருவன். அப்படிப்பட்டவனுக்கு அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது மிகப்பெரிய கௌரவம் என்றும் அதைக் கண்டுபிடித்துக் கொடுப்பது அவனுடைய தர்மம் என்றும் அவன் மனமார நம்பினான். அதனால் கர்மமே கண்ணாக கால நேரம் பார்க்காமல் அதிலேயே ஈடுபட்டிருந்த அவன் தன் திறமைக்கு அது மிகப்பெரிய சவாலாகவும் இருப்பதாக உணர்ந்தான். ஆனால் எல்லாச் சவால்களுமே அறிவும், விடாமுயற்சியும் இருப்பவர்களுக்கு கடைசியாக பணிந்து போவது போல் இந்தச் சவாலையும் கடைசியில் அவன் வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால் ரகசிய சங்கேதப் பெயர் கொண்ட அந்தக் கணக்கு உண்மையில் யாருடையது என்று மேலும் ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம் அவனைத் தலைசுற்ற வைத்தது.

(தொடரும்)

என்.கணேசன்


Wednesday, November 21, 2018

நாம் பிரச்சினைகளை எப்படி வரவழைக்கிறோம்?

அறிந்தும் அறியாமல் நாம் நம் வாழ்க்கையில் எப்படி எல்லாம் பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்கிறோம், அதற்குத் தீர்வு தான் என்ன, பிரச்சினைகள் வராமல் புத்திசாலித்தனமாய் ஆரம்பத்திலேயே தடுத்துக் கொள்வது எப்படி என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் காணொளி இது....






என்.கணேசன்

Monday, November 19, 2018

சத்ரபதி 47



சோதனைக் காலங்களில் தனிமை கொடுமையானது. அந்தத் தனிமை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் விதியால் விதிக்கப்பட்டதாக இருக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகவே நகரும். அதை ஷாஹாஜி சிறையிலிருக்கையில் நன்றாகவே உணர்ந்தார். பீஜாப்பூரில் அவர் நண்பர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் சுல்தானின் கோபத்திற்குப் பயந்து ஒருவர் கூட ஷாஹாஜியைப் பார்க்க வரவில்லை. அவர் அதைத் தவறாக நினைக்கவில்லை. அவர் அவர்கள் நிலைமையில் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார். எல்லோருக்கும் அவரவர் குடும்பங்கள் இருக்கின்றன. அவரவர் நலனில் அக்கறை காட்டாதவர்கள் கூட குடும்பங்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது. சுல்தானின் கோபத்தைச் சம்பாதித்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் நண்பர்கள் குடும்பத்துடன் நலமாக தூரமாகவே இருக்கட்டும் என்று ஷாஹாஜி நினைத்தார்.

அவருக்கு இந்த நிலைமை வந்திருப்பது சிவாஜியால் தான் என்றாலும் அவர் சிவாஜி மேலும் தவறு காணவில்லை. அவனுடைய வேகம் சற்று அதிரடியாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தாலும் கூட அதன் பின் ஆழ்ந்த திட்டம் இருந்தது. வேகமாகச் செயல்பட்டாலும் எடுத்து வைத்த அடிகளில் தவறில்லை. அந்த வயதில் அந்த அறிவும், துணிச்சலும் அபாரம் தான்.. அவன் வயதில் அவருக்கு இப்படிக் கணக்குப் போட்டு செயல்படத் தெரிந்ததில்லை….. எனவே சிவாஜி இந்த நிலைமையில் அவரைக் கொண்டு வந்து விட்டும் கூட,மகனை மானசீகமாக அவர் சிலாகித்துப் பெருமையே அடைந்தார். ஜீஜாபாய் சொன்னது போல் அவனால் கனவு காண முடிந்தது மட்டுமல்லாமல் அதை நனவாக்கும் முயற்சிகளையும் கவனமாகவும் துணிச்சலாக எடுக்க முடிகிறது.  அவரை ஆதில்ஷா கைது செய்யக்கூடும் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்…… பாவம்! அது ஒன்று தான் அவன் கணக்கில் நேர்ந்த பிழை! அவர் விஷயத்தில் விதி இன்னும் சலித்து விடவில்லை என்று தோன்றியது. திரும்பத் திரும்ப அவர் வாழ்க்கையிலேயே விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் விதியின் விளையாட்டுக் களத்தில் அவர் மகன் சிவாஜியும் சேர்ந்திருக்கிறான். அவருக்கு விதியை வெல்ல முடிந்ததில்லை. ஆனால் அவர் மகன் சிவாஜிக்கு அதை வெல்ல முடிந்தாலும் முடியலாம் என்று அந்தத் தந்தைக்குத் தோன்றியது.

அவருடைய உண்மையான கவலை பெங்களூரில் உள்ள இரண்டாவது குடும்பம் குறித்ததாகவே இருந்தது. வெங்கோஜி இன்னமும் சிறுவன் தான். இரண்டாம் மனைவி துகாபாய் ஜீஜாபாயைப் போல் விவரமானவளோ, தைரியமானவளோ அல்ல. சாம்பாஜி அவளையும் வெங்கோஜியையும் பேதமில்லாமல் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அவருடைய இடத்தை அவனால் பூர்த்தி செய்துவிட முடியாது…..


டுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதில்ஷா நீண்ட ஆழ்ந்த ஆலோசனை நடத்தினார். தந்தையின் கைது சிவாஜியை எப்படி இயங்க வைக்கும் என்பதை அவரால் சரியாக யூகிக்க முடியவில்லை. உடனே பீஜாப்பூர் வந்து சிவாஜி சரணடைவான் என்று எதிர்பார்க்க முடியா விட்டாலும் கைப்பற்றிய கோட்டைகளைத் திரும்பத் தந்து சமாதானத்திற்கு முயற்சி செய்வான் என்று எதிர்பார்த்தார். அப்படி ஒப்படைத்தால் அத்துடன் திருப்தி அடைந்து ஷாஹாஜியை விடுவித்து விடலாமா அல்லது அவருக்குப் பதிலாக சிவாஜியைக் கைது செய்து அவரை விடுவிக்கலாமா என்றெல்லாம் யோசித்தார். அவர் தன் ஆலோசகர்களிடம் சிவாஜியின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று கேட்ட போது பலவிதமான கருத்துக்கள் வந்தன.

“தந்தைக்காக சிவாஜி கண்டிப்பாக பீஜாப்பூர் வருவான். மன்னிப்பு கேட்பான்”

“சிவாஜி கண்டிப்பாக வர மாட்டான். கைப்பற்றிய கோட்டைகளை மட்டும் திருப்பித் தந்து கடிதம் மூலம் மன்னிப்பு கேட்பான்”

“சிவாஜி வரவும் மாட்டான். மன்னிப்பும் கேட்க மாட்டான். அவனுக்கும் ஷாஹாஜிக்கும் இடையே நல்ல இணக்கம் இல்லை. அதனால் தந்தைக்கு என்ன ஆனாலும் கண்டு கொள்ள மாட்டான்…..”

“நேரடியாக சிவாஜியைத் தாக்கினால் ஒழிய சிவாஜியைப் பணிய வைக்க வேறுவழி இல்லை….”

“சிவாஜி திடீர் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது. தந்தையை அவன் விடுவித்துக் கொண்டு போய் விடலாம். எனவே சிறைக்காவலைப் பல மடங்கு பெருக்கி வைப்பது நல்லது”

ஷாஹாஜி மீதும், சிவாஜி மீதும் தீராத வஞ்சம் வைத்திருந்தவன் சொன்னான். “ஷாஹாஜி உயிருக்கு ஆபத்து இல்லை என்கிற நிலை இருக்கிற வரை சிவாஜி அசைய மாட்டான். ஷாஹாஜியைத் தூக்கில் போடுவதாகவோ, சிரத்சேதம் செய்வதாகவோ அறிவியுங்கள். சிவாஜி வேறு வழியில்லாமல் வரலாம்….”

ஆதில்ஷாவுக்குத் தலைசுற்றியது. இத்தனையும் நடக்கக்கூடிய சமாச்சாரங்களே. சிவாஜியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை அவரால் அனுமானிக்க முடியவில்லை  என்பதால் இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்ய அவருக்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது. நீண்ட நேரம் ஆலோசித்தார். சில வருடங்களுக்கு முன்பு சில நாட்கள் பழகிய சிவாஜியைத் திரும்பவும் மனதில் கொண்டு வந்தார். அவருக்கு அவனைக் குறித்து நினைவிருந்ததை எல்லாம் மறுபடியும் மனத்திரைக்குக் கொண்டு வந்து கூடுதல் கவனத்துடன் அலசினார். பின் தற்போதைய நிகழ்வுகளை எல்லாம் நினைத்துப் பார்த்தார். அந்த சிவாஜியிலிருந்து இப்போதைய சிவாஜி வரை ஏற்பட்டிருந்த பரிணாம வளர்ச்சி அவரைப் பிரமிக்க வைத்தது. ஆனால் அத்தனைக்குமான வேர் அன்றைக்கே அவனிடம் உயிர்ப்புடன் இருந்ததாகத் தோன்றியது. அன்றைக்கே தீவிரமான எண்ணங்கள், ஆழ்ந்த சிந்தனைகள், வயதுக்கு மீறிய கூர்மையான அறிவு எல்லாம் இருந்தன.  அவன் குணாதிசயங்களில் பாசக்குறைவு இருக்கவில்லை. தந்தை மீது அவன் மிகுந்த அன்பு வைத்திருந்தவனாகவே தெரிந்தான். தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்காதவனாக இருந்தாலும் தந்தை மீது பாசமில்லாதவனாக இருக்கவில்லை. இப்போதும் அப்படி மாறி விட்டிருக்க வழியில்லை. சிறையில் தந்தையை அடைத்தது வேண்டுமானால் அவனை அசைக்காமல் இருக்கலாம். ஆனால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்றால் அலட்சியமாக இருந்து விடும் கல்நெஞ்சக்காரனாக மட்டும் அவன் இருக்க வழியே இல்லை.

ஷாஹாஜியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க சிரத்சேதமும், தூக்கில் இடுவதும் அதிகபட்சக் குரூரமாகவும், அவரைப் போன்ற ஒருவரை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும் தோன்றியது. ஆனால் அவரைச் சிறையிலேயே வைத்திருந்தாலோ சிவாஜி பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் கூடும். அதனால் ஷாஹாஜிக்கு மரண தண்டனை விதிப்பது சிவாஜியை உடனடியாக வரவழைப்பதற்கு மிக முக்கியம்…… யோசித்து ஆதில்ஷா ஒரு முடிவுக்கு வந்தார்.


ரசவைக்கு அழைத்துச் செல்ல வீரர்கள் வந்த போது ஆதில்ஷா ஒரு முடிவை எட்டி விட்டார் என்பது ஷாஹாஜிக்குப் புரிந்தது. தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அவர் கவலைப்பட்டு ஆகப் போவது எதுவுமில்லை…. அமைதியாக அரசவைக்குச் சென்ற அவரை அந்த நிலையில் பார்க்க பலருக்குக் கஷ்டமாக இருந்தது. அவர் ராஜ மரியாதையுடன் அந்தஸ்துடன் அமர்ந்திருந்த அதே அரசவையில் இப்போது ஒரு கைதியாக நுழைந்ததைப் பார்க்கச் சகிக்காமல் அவருடைய நண்பர்கள் தலைகுனிந்து கொண்டார்கள். ஷாஹாஜியின் வாழ்க்கையில் விதி விளையாடுவது இது முதல் தடவையல்ல என்பதால் அவர் வேகமாக பாதிப்பிலிருந்து மீண்டு இப்போது அமைதி அடைந்திருந்தார்.

ஆதில்ஷா தன் தீர்ப்பைச் சொன்னார். “ஷாஹாஜி உங்கள் மகன் இந்த ராஜ்ஜியத்திற்குத் துரோகம் செய்திருக்கிறான். இராஜ்ஜியத்திற்குச் சேர வேண்டிய நிதியை கொள்ளையடித்திருக்கிறான். இராஜ்ஜியத்திற்குச் சொந்தமான கோட்டைகளைக் கையகப்படுத்தியிருக்கிறான். ராஜத்துரோகத்திற்கு மரண தண்டனை தான் கால காலமாக வழங்கப்படும் தண்டனை.  ஆனால் தங்கள் மீது எமக்கு முன்பிலிருந்தே இருந்த அன்பின் காரணமாகவும், இந்தக் கையாடலில் தங்கள் பங்கு எதுவுமில்லை என்று தாங்கள் கூறுவதன் காரணமாகவும் தங்கள் மீது யாம் கருணை காட்டத் தயாராக உள்ளோம். ஆனால் அதற்கு நடந்த தவறுகள் திருத்தப்பட வேண்டும். கல்யாண் நிதியையும், கைப்பற்றிய கோட்டைகளையும் தங்கள் மகன் சிவாஜி எமக்குத் திருப்பித் தந்து தன் செயலுக்கு நேரடியாக இங்கு வந்து மன்னிப்புக் கோரும் பட்சத்தில் உங்களை விடுவிக்கத் தயாராக உள்ளோம். ஆனால் அப்படி உங்கள் மகன் சிவாஜி செய்யத் தவறும் பட்சத்தில் உங்களை உயிரோடு சமாதி செய்யத் தீர்ப்பு வழங்குகிறோம். உங்களைச் சுற்றி நாற்புறமும் சுவர்கள் எழுப்பி சிறு துளையை மட்டும் விட்டு வைக்கக் கட்டளையிடுகிறேன். பத்து நாட்களில் உங்கள் மகன் இங்கு வந்து தவறுகளைத் திருத்திக் கொள்ளாத பட்சத்தில் அந்தத் துளையும் மூடிவிடப்படும் என்பதையும் அறிவிக்கிறேன். இனி உங்கள் உயிர் உங்கள் மகன் கையில். நீங்கள் உயிர்பிழைக்க வேண்டுமா அல்லது கல்யாண் நிதியும், கோட்டைகளும் வேண்டுமா என்று அவன் தீர்மானிக்கட்டும்!”  

(தொடரும்)
என்.கணேசன்