சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 18, 2024

யோகி 41

சேதுமாதவன் வீட்டு மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. ஆனால் சேதுமாதவன் சொல்லாமலேயே  பரசுராமன் சரியாக சைத்ராவின் அறைக்குள் நுழைந்தார். உள்ளே நுழைந்தவர் அங்கும் கண்களை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் நின்றார். பின் மெல்ல கண்களைத் திறந்தவர் சேதுமாதவனிடம் கேட்டார். “உங்க பேத்தி கிட்ட இருந்து என்ன தெரிஞ்சுக்க விரும்பறீங்க?”

 

சேதுமாதவன் திகைத்தார். பின் சொன்னார். “அவ எதையெல்லாம்  என் கிட்ட சொல்லணும்னு நினைக்கிறாளோ அதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பறேன்

 

பரசுராமன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து மறுபடியும் நேரத்தைக் குறித்துக் கொண்ட மாதிரி இருந்தது. பின் சைத்ரா எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரே இருந்த அவளுடைய கட்டிலில் அமரும்படி சேதுமாதவனிடம் கைகாட்டினார்.

 

சேதுமாதவன் பரபரப்புடன் கட்டிலில் அமர்ந்து கொண்டார். மறுபடி பரசுராமன் கண்களை மூடிக் கொண்டார். காலம் மெல்ல நகர்ந்தது. பரசுராமன் உறங்கி விட்டாரோ என்று ஒரு கட்டத்தில் சேதுமாதவனுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் சிலை போல் உட்கார்ந்து யாரும் உறங்க  முடியாது என்பதால் பரசுராமன் உறங்கியிருக்க வழியில்லை. மேலும், அவருடைய தலையும் தொய்வில்லாமல் நேராகவே இருந்தது.

 

சேதுமாதவன் சுவரில் இருந்த பேத்தியின் படத்தை, பாசத்துடன் பார்த்தார். நிஜமாகவே பேத்தியிடமிருந்து எதாவது செய்தி அவருக்கு, பரசுராமன் மூலம் கிடைக்குமா? பரசுராமனுக்கு நிஜமாகவே ஆவிகளைத் தொடர்பு கொள்ளும் சக்தி இருக்கிறதா? ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவருக்குப் பரபரப்பாக இருந்தது.

 

நாற்பத்தியெட்டு நிமிடங்கள் கழிந்த பின் பரசுராமனின் உதடுகள் லேசாக அசைந்தன. ”தாத்தா…?” குரல் மிகவும் தாழ்ந்திருந்தது.

 

சேதுமாதவனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அவர் காதில் கேட்டது அவருடைய பேத்தியின் குரல் தான்…. அவரால் நம்ப முடியவில்லை. கனவா இது என்ற சந்தேகம் எழுந்தது. இல்லைகனவில்லை…. நிஜம் தான்…. அவருடைய கைகளில் மயிர்க்கூச்செறிந்தது. கண்களில் நீர் மல்க, குரல் உடைய அவர் சொன்னார். “சைத்ரா

 

மிகவும் சன்னமாக சைத்ராவின் குரல் ஒலித்தது. “தாத்தாநீங்க யோகியை ஒரு தடவையாவது…. சந்திக்கணும்…..”

 

சேதுமாதவன் திகைத்தார். பின் மெல்லக் கேட்டார். “பிரம்மானந்தாவையா?”

 

அப்படி சேதுமாதவன் கேட்டதை சைத்ராவின் ஆவி அபத்தமாக நினைத்தது போலிருந்தது.

 

உடனே பதில் வந்தது. “அவரில்லை தாத்தா.... இவர் நிஜமான யோகி. ரகுராமன் அவர் பெயர். நீங்க கண்டிப்பா ஒரு தடவையாவது அவரைச் சந்திக்கணும்....” குரல் தாழ்ந்து இருந்தாலும் உணர்வு பூர்வமாக இருந்தது.

 

சேதுமாதவனுக்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. அவர் எதை எதிர்பார்த்திருந்தாலும், கண்டிப்பாக இதை எதிர்பார்க்கவில்லை. கொலை செய்தவர்கள் பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் தான் சைத்ராவின் ஆவி அவரிடம் தெரிவிக்கும் என்று தான் நினைத்திருந்தார். அதற்குச் சம்பந்தமில்லாத இதை ஏன் சைத்ரா அவரிடம் சொல்ல வேண்டும் என்று அவருக்குப் புரியவில்லை. தவறி வேறு எதாவது ஆவி பரசுராமனிடம் வந்து விட்டதா என்று நினைக்கவும் வழியில்லை. காரணம், பேசிய குரல் சைத்ராவின் குரல் தான். மேலும், அவள் உயிரோடு இருக்கையில் மிக உயர்வாக எதையாவது நினைத்துப் பேசும் போதெல்லாம்  இந்தத் தொனியில் தான் பேசுவாள்.

 

“... அவரை நான் பார்த்தப்ப முதல்ல நினைச்சது உங்களைத் தான் தாத்தா. அவரைச் சந்திச்சா நீங்க ரொம்ப பரவசமாவீங்கன்னு தோணுச்சு....”

 

சேதுமாதவன் தலையசைத்தார். கொலையைப் பற்றியும், கொலைகாரர்கள் பற்றியும்  அடுத்ததாகச் சொல்வாளோ என்னவோ...

 

உங்க அன்புக்கும்,  உங்க நல்ல மனசுக்கும் தேங்க்ஸ் தாத்தா.. நான். போறேன்... பை பை

 

சைத்ராவின் ஆவி கடைசியாய் சொன்னதைக் கேட்டு அவர் கண்கள் தானாகக் கலங்கின என்றாலும் அவள் முக்கியமான எதையும் சொல்லாமல் போய் விட்டதில் அவர் ஏமாற்றமடைந்தார். ஒரு கணம் வாயடைத்துப் போன அவர் சுதாரித்துக் கொண்டு பதற்றத்துடன் அவசரமாக, கொலை பற்றிக் கேட்க வாயைத் திறப்பதற்குள் பரசுராமன் கண்களைத் திறந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வந்து விட்டார். 

 

பரசுராமன் முதலில் பார்த்தது கைக்கடிகாரத்தைத் தான். அந்த நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவர் சிறிது நேரம் மனதில் எதையோ கணக்குப் போடுவது தெரிந்தது. பின் ஏதோ முடிவுக்கு வந்த பரசுராமன், அதைச் சொல்லாமல், சேதுமாதவனிடம்  ஆர்வமாகக் கேட்டார். “உங்க பேத்தி என்ன சொன்னா?”

 

சேதுராமன் குழப்பத்தோடு அவரைப் பார்த்தார். ’இவர் மூலமாகத் தானே சைத்ரா பேசினாள்? பின் ஏன் இவர் தெரியாதது போல் கேட்கிறார்?’

 

அவர் பார்வையிலிருந்து அவர் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, பரசுராமன் சொன்னார். “ஒரு ஆவியோட ஊடகமாய் மாறிய பிறகு, அந்த உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து வந்தால் ஒழிய, நடக்கிறது எதுவும் அந்த ஆவி ஊடக மனிதனுக்குத் தெரிய வராது.”

 

சேதுமாதவன் சைத்ராவின் ஆவி சொன்னதை எல்லாம் பரசுராமனிடம் தெரிவித்து விட்டு வருத்தத்துடன் சொன்னார். “... யார் கொலை செஞ்சாங்க, என்ன காரணம், என்ன நடந்துச்சுன்னு கேட்கறதுக்குள்ளே  நான் போறேன்.... பை.. பைன்னு சொல்லிட்டா

 

பரசுராமன் சொன்னார். “அவ எதையெல்லாம்  உங்க கிட்ட சொல்லணும்னு நினைக்கிறாளோ அதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பறதா சொன்னீங்க... அவளும் அப்படியே சொல்லணும்னு ஆசைப்பட்டதை சொல்லிட்டுப் போயிட்டா. நீங்க இப்ப கேட்க நினைக்கிறதை முதல்லயே கேட்க ஆசைப்பட்டிருந்தா அவ அதைச் சொல்லியிருக்கலாம்...”

 

சேதுமாதவன் கேட்டார். “அப்படின்னா, மறுபடியும் அவளைக் கேட்கலாமா?”

 

தலையசைத்த பரசுராமன் கண்களை மூடி மறுபடி சைத்ராவின் ஆவியைத் தொடர்பு கொள்ள முயன்றார்.  பின் இரண்டு நிமிடங்கள் கழித்து மெல்ல கண்களைத் திறந்து சேதுமாதவனிடம் இரக்கத்துடன் சொன்னார். “அவ ஆவி போயாச்சு. இனி எதுவும் அவ கிட்ட நீங்க கேட்க முடியாது. ஏன்னா அவளுக்கு பழைய வாழ்க்கையோட கணக்குல எதுவும் பாக்கியில்லாமல், பூஜ்ஜியமாயிடுச்சு போலத் தெரியுது. அவபை பைசொன்னது இந்த தடவை வந்துட்டு போனதுக்கல்ல. ஒட்டு மொத்தமாவே சொல்லிட்டு போயிருக்கா.”

 

சேதுமாதவன் திகைத்தார். “அவ ஏன் அந்தக் கொலை பத்தி எதுவும் சொல்லலை?”

 

அந்த யோகியைப் பத்தி சொன்ன தகவல் அளவுக்கு அந்தக் கொலை பத்தின தகவல் முக்கியமில்லைன்னு அவ நினைச்சிருக்கலாம்...” என்று சொன்ன பரசுராமனுக்கு இனி அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. அவர் மெல்ல எழுந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.

 

அவரைப் பின் தொடர்ந்து வந்த சேதுமாதவனுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளைக் கொலை செய்தவர்கள் பற்றிய தகவலை விட அந்த யோகியைப் பற்றிய தகவல் எப்படி கூடுதல் முக்கியமாக முடியும்? அந்தத் தகவல் எதுவும் சொல்லாமல் எப்படி அவள் பழைய கணக்குகள் பூஜ்ஜியமாக முடியும்? இருவரும் படியிறங்கிக் கீழே வருகையில் தன் அந்தச் சந்தேகத்தை சேதுமாதவன் வெளிப்படையாகவே பரசுராமனிடம் கேட்டார்.

 

பரசுராமன் ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தபடி அமைதியாகச் சொன்னார். “இறந்த பிறகு ஆத்மாவோட முக்கியத்துவங்க மாறிடுது. வாழும் போது மனுஷனுக்கு முக்கியமாய் தெரியற விஷயங்கள், இறந்த பிறகு முக்கியமாய் தெரியறதில்லை. நேசிக்கறவங்களுக்கு ரொம்ப முக்கியமானது எதையாவது தெரியப்படுத்தணும்னு அந்த ஆவி நினைக்கற வரைக்கும் ஏதாவது வகையில அவங்கள சுத்திகிட்டிருக்கும். அல்லது அது செய்ய ஆசைப்பட்ட விஷயம் எதாவது இருந்து, இறந்த பிறகும் அந்த முக்கியத்துவம் அதே அளவுல குறையாம இருந்துச்சுன்னாலும், அதைச் செய்ய வைக்க ஏதாவது முயற்சி எடுக்கும். ஆனா எல்லா வேலையும் முடிஞ்சுதுன்னு உணர்ந்தா அதற்கப்புறம் அது இருக்கறதில்லை...”

 

சேதுமாதவனும் அவருக்கெதிரே அமர்ந்தபடி அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டார். ஆனால் பரசுராமன் சொன்னது, தன் பேத்தி விஷயத்தில் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று அவருக்கு இப்போதும் தோன்றியது. அவர் யோசனையோடு பரசுராமனிடம் சொன்னார். “என் பேத்தி எப்பவுமே நீதிக்காகப் போராடறவ. அநீதியோ, அயோக்கியத்தனமோ எங்கே நடந்தாலும் அவளால அதைச் சகிச்சுக்க முடியாது. அப்படி இருக்கறப்ப, அவள் கொல்லப்பட்டதையே அவளால் எப்படி சகிக்க முடியும்? அந்தக் கொலைக்கான தகவல்களைச் சொல்றதை முக்கியமில்லாததாய் எப்படி விட்டுட முடியும்?”


(தொடரும்)

என்.கணேசன்



 

Thursday, March 14, 2024

சாணக்கியன் 100

ரிரு வருடங்களுக்கு ஒரு முறையாவது தனநந்தனுக்கு அந்தக் கொடுங்கனவு வருவதுண்டு. ஒரே கனவல்ல அது. ஆனால் ஒரே முடிவை எட்டும்படியான கனவு அது. அன்று இரவும் அதே போல் கனவு வந்தது.

 

தனநந்தன் குதிரையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறான். அவன் இதயம் வெடித்து விடுவது போல் படபடக்கிறது. அவனுக்கு எங்காவது தங்கி ஓய்வெடுக்க வேண்டும் போல் தோன்றுகிறது என்றாலும் அவனால் ஓய்வு எடுக்க முடியாத நிலை. அவன் எதிரிகளிடமிருந்து தப்பிச் சென்று கொண்டு இருக்கிறான். அரண்மனையிலிருந்து கிளம்பும் போது அவனால் எடுத்துக் கொள்ள முடிந்தது ஒரு பெரிய பொற்காசு மூட்டை ஒன்றைத் தான்.

 

செல்வம் மிக முக்கியம். செல்வம் இருந்தால் நண்பர்கள் உண்டு. சேவகர்கள் உண்டு. உறவுகள் உண்டு, காமக்கிளத்திகள் உண்டு. படைகள் உண்டு. எல்லாம் உண்டு. செல்வமில்லா விட்டால் இவை எதுவுமேயில்லை என்பது மட்டுமல்ல முடிவில். பிள்ளைகள் இல்லை, மனைவி இல்லை, மரியாதை இல்லை என்கிற நிலைமை வந்து விடும். இந்த உண்மையை தனநந்தன் என்றும் மறக்க மாட்டான்.

 

நல்ல வேளையாக பொற்காசு மூட்டையையாவது தூக்கிக் கொண்டு வந்தோமே என்று நினைத்தவனாக குதிரையில் கட்டித் தொங்க விட்டிருந்த மூட்டையைத் தொட்டுப் பார்த்த தனநந்தனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கனத்த மூட்டை இப்போது மிக லேசாக இருந்தது. திகைப்புடன் குதிரையை நிறுத்தி ஆராய்ந்து பார்க்கிறான். மூட்டையில் ஒரு ஓட்டை. பொற்காசுகள் அந்த ஓட்டை வழியாகச் சிதறிக் கொண்டே வந்திருக்கின்றது என்பது புரிந்தது.  இப்போது அந்த மூட்டையில் நாலைந்து காசுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. திரும்பிப் பார்த்தான் வழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பொற்காசுகள் கீழே விழுந்து கிடப்பது தெரிந்தது.

 

பதறிய மனதுடன் திரும்பிப் போய் அவற்றைப் பொறுக்கிக் கொள்ளலாமா என்று அவன் நினைக்கையில் தூரத்தில்  பல குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டது. பொற்காசுகளை விட உயிர் முக்கியம் என்று முடிவெடுத்து அவன் குதிரையை முடுக்கி விட்டான். ஆனால் பொற்காசுகளை இழந்து தனியே போவது உயிரை இழந்து பிணமாகப் போவது போல் தோன்றியது…. போயிற்று. எல்லாம் போயிற்று…..

 

திடீரென்று கனவிலிருந்து மீண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்த தனநந்தன் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். வெடிப்பது போல் துடித்த இதயம் இது வெறும் கனவென்று உணர்ந்து அமைதியடைய சிறிது சமயம் தேவைப்பட்டது. 

 

அவன் அரசனாக அரியணை ஏறியது முதல் இது போன்ற கனவு வருகின்றது. சில சமயங்களில் அவன் அரண்மனையை எதிரிகள் படையுடன் சூழ்ந்து கொள்வார்கள். கஜானா அதிகாரி ஓடிவந்து சொல்வான். “அரசே நம் கஜானாவில் உள்ள நிதி அனைத்தையும் எதிரிகள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். காவலுக்கு நிற்கும் நம் காவலர்களைக் கொன்று விட்டார்கள். நான் தங்களிடம் தெரிவிக்க தப்பி ஓடி வந்திருக்கிறேன்....” இப்படிக் கனவு வரும்.

 

சில சமயங்களில் கஜானாவை அவன் பரிசோதனை செய்யப் போகும் போது கஜானா காலியாக இருப்பது போன்ற கனவு வரும். சில சமயங்களில் எதிரிகள் மகதத்தை ஆக்கிரமித்து விடுவது போலவும் அவன் உயிருக்குப் பயந்து தப்பி விடுவது போலவும், போகும் போது ஒரு நிதி மூட்டையை எடுத்துச் செல்வது போலவும், அது அவன் வேகமாகச் செல்லும் போது நழுவிக் கீழே விழுந்து விடுவது போலவும் அதை எடுக்க அவன் தாமதிக்கும் போது எதிரிகள் பின்னாலிருந்து வந்து அவனைச் சூழ்ந்து விடுவது போலவும் கனவு வரும். கிட்டத்தட்ட எல்லாக் கனவுகளும் அவன் செல்வத்தை இழந்து விடுவது போலத் தான் முடிவடையும்.

 

தனநந்தன் தன் பெயரில் வைத்திருப்பது போலவே வாழ்க்கையிலும் செல்வத்தை நிறையவே வைத்திருந்தான். சேர்த்த செல்வத்தைக் கணக்கிட்டு மகிழ்ச்சியடையும் அவன் அந்த மகிழ்ச்சியை வேறெந்தச் செயலிலும் உணர்ந்தது கிடையாது. அதனால் அந்தச் செல்வத்தை இழப்பது அவனால் நினைத்தும் பார்க்க முடியாத துன்பமாகவே இருந்தது. சில கனவுகள் ராஜ்ஜியத்தையும் சேர்ந்து அவன் இழப்பது போல் முடிவடையும். அரசன் என்ற அகங்காரத்துடன் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வாழும் அவனுக்கு அதுவும் கற்பனையிலும் ஜீரணிக்க முடியாத பேரவலமாகத் தோன்றியது.

 

அவன் அரசனான சிறிது காலத்தில் ஒரு சமணத்துறவி பாடலிபுத்திரத்துக்கு வந்திருந்தார். அவர் மகாஞானி என்றும் முக்காலமும் அறிந்தவர் என்றும் பலரும் சொன்னார்கள். ஞானிகளுக்கும் ஞானத்திற்கும் தனநந்தன் மரியாதை தருபவனல்ல.  ஞானிகளிடம் பேசினாலும், யாராவது அவனிடம் ஞானத்தைப் பற்றிப் பேசினாலும் பெரும் சலிப்பை உணர்பவன் அவன். ஆனால் அந்த சமணத்துறவி மனிதர்களின் கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமங்களையும் உணர்ந்து சொல்ல வல்லவர் என்று அப்போதைய பிரதம அமைச்சர் ஷக்தார் அவனிடம் பேச்சுவாக்கில் சொல்ல உடனே தனநந்தன் அவரை அரண்மனைக்கு வரவழைத்தான். நேரடியாக அந்தக் கனவைச் சொல்லி அவரிடம் பலன் கேட்க அவன் விரும்பாமல் தொடர்ந்து ஒரே முடிவுடன் முடியும் கனவுகளுக்கு என்ன பலன் என்று கேட்டான்.

 

அந்தச் சமணத் துறவி “ஒரே செய்தியைத் திரும்பத் திரும்ப கனவு உனக்குத் தெரிவிக்குமானால் அது உன் எதிர்காலத்தில் நிகழக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். நல்லதாக இருந்தால் உன்னை உற்சாகப் படுத்தவும், தீயதாக இருந்தால் உன்னை எச்சரிக்கவும் அந்தக் கனவு வருகிறது என்று அர்த்தம். அப்படிக் கெட்டதாக இருக்குமானால் அலட்சியப்படுத்தாமல் உன்னைக் காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்துக் கொள்வது நல்லது” என்று சொன்னார்.

 

அவர் சொன்னது அவனுக்கு மேலும் கிலியை அதிகப்படுத்தியது. கஜானாவில் எத்தனை செல்வமிருந்தாலும் கஜானாவே காலியாகும் நிலைமை உருவானால் அல்லது ராஜ்ஜியத்தையே ஒருவேளை அவன் துறக்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது என்ற கவலை அவன் மனதை அரித்தது. அதனால் அவன் தன்னைக் காத்துக் கொள்ளும் நடவடிக்கையாக யாரும் சந்தேகப்படாத வண்ணம் கங்கைக் கரையில் ஓரிடத்தில் பெரும் நிதியை ஒளித்து வைக்கத் தீர்மானித்தான்,. கனவின் படியே நிகழ்வுகள் நடந்தாலும் ஆபத்துக் காலத்தில் அந்த நிதி அவனுக்கு உதவுவதாக இருக்கும் என்று கணக்குப் போட்டான். நிதி அங்கிருக்கிறது என்பது அவனைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது என்றும் நினைத்தான். அதனால் கங்கைக் கரையில் நிதியைப் புதைத்து அதை அறிந்த பணியாட்களையும், சாரதியையும் கொல்லவும் செய்தான்.

 

அதன் பின்னும் அந்தக் கனவு அவனை விட்டபாடில்லை. தற்செயலாக எதற்காவது யாராவது அங்கு குழி தோண்டி புதையலைக் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வர ஆரம்பித்தது. தற்செயலாகவும் கூட யாரும் அவ்வளவு ஆழமாக மண்ணைத் தோண்டிப் பார்க்க வாய்ப்பே இல்லை என்று அறிவு சொன்னாலும் பயம் அகலவில்லை. கூடவே ஒரு வேளை ராஜ்ஜியத்தை இழந்தால் மீண்டும் அனைத்தும் மீட்க பெரும் நிதி தேவைப்படும் என்றும், அங்கே புதைத்திருக்கும் செல்வம் போதாது என்றும் தோன்ற ஆரம்பித்தது. சில வருடங்கள் கழித்து  மீண்டும் அதே அளவு செல்வத்தைச் சேர்த்து அதையும் அங்கே புதைத்து வைத்து அதற்கு மேல் ஏதாவது சிறு கோயில் அல்லது யாகசாலை கட்டி வைத்தால் நல்லது என்று தோன்ற ஆரம்பித்தது.

 

கோயில் என்றால் மக்கள் கூட்டம் அங்கே வந்து கொண்டிருக்கும். அதனால் அவன் மட்டும் பயன்படுத்தக் கூடிய யாகசாலை ஒன்றை அதன் மீது கட்டி வைத்தால் நல்லது என்று தனநந்தன் கணக்கிட்டு அப்படியே செய்தான். அஸ்திவாரப் பணி முடிந்தவுடன் அந்தக் கட்டிடப் பணியாளர்களையும், உணவில் விஷம் வைத்துக் கொன்று பாம்பு கடித்து அவர்கள் இறந்திருக்கிறார்கள் என்ற கருத்தைப் பரப்பி யாகசாலையைக் கட்டி முடித்தான். கட்டியது பயன்படுத்தப்படாமல் இருந்தால் பலரும் சந்தேகப்படும் வாய்ப்பிருக்கிறது என்பதால் வருடம் தோறும் தன் பிறந்த நாளில் அந்த யாகசாலையில் வேள்விகள் நடத்தினான். மற்ற நாட்களில் அதைப்பூட்டியே வைத்தான். அவனைத் தவிர அந்தப் புதையல் ரகசியத்தை வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்பதால் ஓரளவு நிம்மதியும் பெற்றான். அவன் மிக உறுதியாக நம்பும் ராக்‌ஷசருக்குக் கூட அவன் அந்தப் புதையலைப் பற்றிச் சொல்லியிருக்கவில்லை.

 

யாகசாலையில் பல ஹோம குண்டங்கள் இருந்தாலும் மத்தியில் இருக்கும் பெரிய ஹோமகுண்டத்தின் அடியில் தான் புதையல் இருக்கிறது. வருடாவருடம் யாகசாலையின் மத்தியில் இருக்கும் பெரிய ஹோம குண்டத்தில் வேள்விகள் நடக்க அங்கு அமர்ந்திருக்கையில் அவன் அந்தப் புதையலை உணர்வான். பிறந்த நாளன்று புதையலின் மேலே அமர்ந்திருப்பது பெரும் ஐஸ்வரியமாகவும், அதிர்ஷ்டமாகவும் அவனுக்குத் தோன்றும்.  யாகசாலை கட்டி முடித்த பின் இரண்டு வருடங்கள் ஏதாவது ஒரு காரணம் வைத்து அங்கு சென்று அந்தப் பெரிய ஹோம குண்டம் கட்டி முடித்த போதிருந்த நிலையிலேயே இருக்கிறதா, இல்லை ஏதாவது சேதாரம் ஆகியிருக்கிறதா என்று பார்த்து வந்தான். அப்படி எந்த முயற்சியும் நடக்கவில்லை என்றறிந்த பின் அதுகுறித்த கவலை ஒழிந்து நிம்மதியடைந்தான். ஏனென்றால் புதையல் பற்றி வேறு யாராவது தெரிந்து வைத்திருந்தால் இந்த இரண்டு வருடங்களுக்குள் அதை எடுக்க கண்டிப்பாக முயற்சி எடுத்திருப்பார்கள் என்று கணக்குப் போட்டான்.

 

இன்றும் அந்தப் பயங்கரமான கனவு வந்து விழித்துக் கொண்ட தனநந்தன் ஆரம்ப நாட்களைப் போல் மனநிம்மதி இழந்து விடாமல் ’ஒருவேளை கனவின்படியே ராஜ்ஜியத்தையும், கஜானாவையும் இழந்தாலும் இழந்ததை மீண்டும் பெற முடிந்த அளவு ஏராளமான நிதி கங்கைக் கரையில் புதைந்து இருக்கிறது.’ என்று எண்ணி அமைதி அடைந்தான். முதல் முறை புதைத்த போதே அதை இரகசியமாய் பார்த்து விட்ட ஜீவன் ஒன்று உள்ளது என்று தெரியாததால் அவனால் மறுபடி நிம்மதியாக உறங்க முடிந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்


புதிய நாவல் சதுரங்கம் வெளியாகி விட்டது. விவரங்களுக்கு- 

https://nganeshanbooks.blogspot.com/2024/03/blog-post.html



Wednesday, March 13, 2024

Monday, March 11, 2024

யோகி 40

 

யோகாலயத்து முக்கியஸ்தர்களை நினைக்கையில் செல்வத்துக்குத் தன் நிலைமை மிகப் பரிதாபமாகத் தோன்றியது. நாம் மட்டும், எவன் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒரு புகார் கடிதத்தோடு வந்து நம் எதிரேயே நிற்கலாம் என்ற நிலையில் இருக்கிறோமே என்று அவர் மனம் நொந்த போது, ஒரு ஏழைப் பெண் கையில் ஒரு காகிதத்துடன் அவர் அறை வாசலில் நின்றாள்.   எரிச்சலுடன்போய் உட்கார்என்று அவளிடம் சைகையால் தெரிவித்து விட்டு செல்வம் யோகாலயத்துக்குப் போன் செய்தார்.

 

போனில் பேசிய துறவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுபாண்டியன் சாரிடம் பேச வேண்டும்என்று செல்வம் தெரிவித்த போது, அந்தத் துறவி, “சார் பிசியாய் இருக்கார். என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அவர் ஃப்ரியாய் இருக்கறப்ப தெரிவிக்கிறேன்என்றார்.

 

இந்த நாய்களுக்கு எத்தனை பெரிய உதவியை எல்லாம் நான் செய்திருக்கிறேன். அந்த நன்றி விசுவாசம் இதுகளுக்கு இப்போதில்லையே.  மேனேஜர் சார் பிசியாம். இவன் கிட்ட விஷயத்தைச் சொன்னால் அவன் ஃப்ரியாய் இருக்கறப்ப தெரிவிப்பானாம். எல்லாம் என் நேரம்...’ என்று மனதுக்குள் வெடித்த செல்வம் கோபத்தை உள்ளே அமுக்கியபடி பணிவான குரலில் சொன்னார். “எனக்கு திடீர்னு தூத்துக்குடிக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுட்டாங்க. ஒரு வாரத்துக்குள்ளே அங்கே ரிப்போர்ட் பண்ணச் சொல்லி இருக்காங்க. யோகிஜி மனசு வெச்சு சி எம் கிட்ட பேசினா அதை கேன்சல் பண்ணலாம். அதான்...”

 

சரிங்க. நான் மேனேஜர் சார் கிட்ட சொல்றேன்.”

 

நான் திரும்ப எப்ப போன் பண்ணட்டும்?”

 

நாளைக்குப் பண்ணுங்களேன். அதுக்குள்ளே நான் கேட்டு சொல்றேன்

 

அந்தத் துறவி ரிசீவரை வைத்து விட்டார். 

 

நாளைக்கா?’ நன்றி கெட்ட உலகம் என்று நினைத்து செல்வம் மனம் கொதித்தார்.

 

யோகாலயத்தில் அன்று வந்திருந்த முக்கியமான அழைப்புகள் மற்றும் தகவல்கள் கொண்ட அறிக்கையை மேனேஜர் பாண்டியனின் மேஜையில் வைக்கச் சென்ற போது தான் அந்தத் துறவி, இன்ஸ்பெக்டர் செல்வம் அழைத்துச் சொன்ன வேண்டுகோளை அவரிடம் தெரிவித்தார்.

 

பாண்டியன் அந்த வேண்டுகோளை அலட்சியத்துடன் கேட்டுக் கொண்டார். அவரைப் பொருத்தவரை எந்தவொரு வேலைக்கும் கூலியைத் தாராளமாகவே தந்துவிடுவார். அதற்கு மேலும் அந்த வேலையின் அடிப்படையில் கூடுதலாக யாரும் எதையும் எதிர்பார்ப்பது அவருக்குப் பிடித்தமானதல்ல. இன்ஸ்பெக்டர் செல்வம் அவர்களுக்குச் செய்துவரும் சலுகைகளுக்கு அவ்வப்போது பணம் தாராளமாகத் தரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதி இன்ஸ்பெக்டர் என்பதால் மாதா மாதம் ஒரு தொகையும் தரப்படுகிறது. அந்த ஆள் தூத்துக்குடிக்குப் போவதில் யோகாலயத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வேறு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வரத்தான் போகிறார். புதிதாய் வருபவருக்கும் பணத்தேவை கண்டிப்பாக இருக்கும். தொடர்ச்சியாய் கூடுதல் வருமானம் வருவதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பணத்தை தாராளமாக வீசினால் அவரும் அனுசரித்துப் போகப் போகிறார்.

 

மேலும் சைத்ரா விஷயத்தில் ஏற்பட்ட தவறு இன்னொரு முறை யோகாலயத்தில் ஏற்படப்போவதில்லை. ஒரு தவறைச் செய்து, அதிலிருந்து பாடம் கற்ற பின்னும், அதே தவறை மீண்டும் ஒரு முட்டாள் மட்டுமே செய்ய முடியும். அதனால் போலீஸாரின் கூடுதல் தயவு இப்போதைக்கு அவசியமில்லை...

 

பாண்டியன் தன் மேஜையில் வைக்கப்பட்டிருந்த தகவல்களைப் பார்த்தார். அவர் தலையிட்டுத் தீர்மானிக்க வேண்டியது எதுவும் அவற்றில் இருக்கவில்லை.  கண்களை மூடியபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் மனதில் ஒரே ஒரு நெருடல் தான் இப்போதும் இருக்கிறது. யோகாலயத்தில் இருக்கிற கருப்பு ஆட்டை இன்னமும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கருப்பு ஆடு உஷாராகி விட்டது போல் தோன்றியது. அது ஏதாவது நடவடிக்கையில் இறங்கினால் அதை அடையாளம் கண்டுபிடிப்பது சுலபம். அதை அறிந்து அது மிக எச்சரிக்கையுடன் பதுங்கியே இருக்கிறது. யார் அது?...   

 

செல்வத்தின் வேண்டுகோளுக்கு ஏதாவது ஒரு பதில் சொல்ல வேண்டும் என்று கூட பாண்டியன் நினைக்கவில்லை என்பதை அந்தத் துறவி உணர்ந்தார். ஆனால் செல்வம் நாளை திரும்பவும் போன் செய்வதாகச் சொல்லியிருப்பதால், அந்தத் துறவியே பாண்டியனிடம் கேட்டார். “அந்த இன்ஸ்பெக்டர் நாளைக்குப் போன் செய்யறதாய் சொல்லியிருக்கார். அவருக்கு நான் என்ன சொல்லட்டும்?”

 

பாண்டியன் சொன்னார். “சி எம் ஆபரேஷன் முடிஞ்சு வந்து ரெஸ்ட்ல இருக்கறதால அவர் கிட்ட போன்லயே கூடப் பேச முடியாத நிலைமை இருக்கு. அதனால இப்போதைக்கு எதுவும் செய்யறதுக்கில்லைன்னு சொல்லிடுங்க.”

 

அந்தத் துறவி தலையசைத்து விட்டு நகர்ந்தார்.  

 

ரசுராமனைப் பற்றிய முக்கிய விவரங்களை சேதுமாதவனிடம் அருணாச்சலம் போனில் தெரிவித்து விட்டுச் சொன்னார். “அவன் ரொம்ப வித்தியாசமானவன் சேது. அவன் நடந்துக்கறதும் ரொம்ப வினோதமாய் இருக்கும். ஆனா திறமையானவன். மாந்திரீகம், ஆவி சம்பந்தமான விஷயங்கள்ல அவன் தான் நம்பர் ஒன்னுன்னு பலரும் சொல்றதைக் கேட்டிருக்கேன். உன் குடும்பத்துல நடந்ததை எல்லாம் அவன் கிட்ட நான் சொல்லியிருக்கேன். அவன் மூலமாய் நமக்கு எதாவது தெரிய வருதான்னு பார்ப்போம். அவன் நாளைக்கு உன் வீட்டுக்கு வருவான். எந்த நேரம் வருவான்கிறதை அவனே போன் செஞ்சு சொல்வான். அவன் சொல்றபடி செய். அவன் என்ன செஞ்சாலும் ஆச்சரியப்படாதே.... அவன் வந்துட்டு போனவுடன எனக்குப் போன் பண்ணுஅதற்கு மேல் அருணாச்சலம் எதையும் சொல்லவில்லை.

 

அன்றிரவு பரசுராமன் சேதுமாதவனை போனில் அழைத்துப் பேசினார். முதல்வரின் தாய்மாமனின் மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் சொன்னார். “மச்சான் உங்களைப் பத்தி என்கிட்ட ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே சொல்லியிருக்கார். சமீபத்துல நடந்ததையும் சொன்னார்.  அவர் மாதிரியே நானும் வருத்தப்பட்டேன். ஆனால் தொடர்ந்து கஷ்டத்தைக் கொடுத்த கடவுள் அதைத் தாங்கற மனோ தைரியத்தையும் உங்களுக்கு கொடுத்திருக்கறது ஆறுதலாயிருக்கு.... நாளைக்கு ராத்திரி மணி ஏழு நாற்பத்தி ஏழுக்கு நான் உங்க வீட்டுக்கு வர்றேன். அந்த சமயத்துல உங்க வீட்டுல உங்களைத் தவிர வேற யாரும் இல்லாமலிருந்தா நல்லது. அதோட, நான் வர்றதும் யாருக்கும் தெரியாமல் இருந்தால் நல்லது.”

 

7.47 என்று துல்லிய நேரத்தை அவர் சொன்னதும், அவர் வருவது மற்ற யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னதும் சேதுமாதவனுக்குப் புதிராய் இருந்தது. ஆனால் அவர் அதற்கு விளக்கம் கேட்கவில்லை. அந்த நேரம் பெரும்பாலும் அவர் வாக்கிங் போய் திரும்பி வந்து அமீர்பாய் மற்றும் மைக்கேலுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நேரம்...

 

மறுநாள் மாலை வாக்கிங் போகும் போது, ஏழரை மணிக்கு வீட்டுக்கு தூரத்து உறவினர் வரப்போவதாக நண்பர்களிடம் சொன்னார். அதனால் அவர்கள் இருவரும் வாக்கிங் முடிந்தபின் அவர் வீட்டுக்கு வராமல் அவரவர் வீட்டுக்கே போய் விட்டார்கள்.

 

சேதுமாதவன் பரசுராமனுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார். சரியாக 7.46க்கு அவர் வீட்டுக்கு வெளியே பரசுராமனின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி அவர் வீட்டுக்குள் நுழைந்த போது நேரம் சரியாக 7.47 ஆக இருந்தது. பரசுராமன் காவி உடை அணிந்திருந்தார். தலையில் காவித் துணி கட்டியிருந்தார். நெற்றியில் நீளவாக்கில் குங்குமம் இட்டிருந்தார். 

 

பரசுராமன் சேதுமாதவனைப் பார்த்து கைகூப்பினார். சேதுமாதவனும்  கைகூப்பி  அவரை அமரச் சொன்னார். ஆனால் பரசுராமன் அமரவில்லை. கண்களை மூடி சில வினாடிகள் அப்படியே நின்றார். பின் சொன்னார். “பேத்தி ரூம் மாடில தானே?”

 

சேதுமாதவன் திகைப்புடன் சொன்னார். “ஆமா

 

பரசுராமன் வேறெதுவும் சொல்லாமல் மாடிப்படி ஏற ஆரம்பித்தார். சேதுமாதவன் திகைப்புடன் அவரைப் பின் தொடர்ந்தார். திடீரென்று பல்லி சத்தமிட்டது. பரசுராமன் அப்படியே நின்றார். பின் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். பின், ஒரு கால் ஒரு படியிலேயும், இன்னொரு கால் இன்னொரு படியிலேயும் இருக்க அவர் எத்தனாவது படியில் நிற்கிறோம் என்பதைக் கணக்கிட்டது சேதுமாதவனுக்குத் தெரிந்தது. எதையோ மனதில் குறித்துக் கொண்டு மௌனமாய் மறுபடியும் பரசுராமன் படியேற ஆரம்பித்தார்.

 (தொடரும்)

என்.கணேசன்


விரைவில் வெளிவருகிறது ’சதுரங்கம்’