சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 13, 2025

சாணக்கியன் 152

 

த்ரசால் சிறிது தயங்கி விட்டு மெல்லச் சொன்னான். “நேற்று என் கனவில் ஒரு மகான் வந்தான். பழுத்த கிழம். பார்க்கும் போதே ஞானி என்று புரியும்படியான தோற்றம். அவர்.... அவர்....”

 

சுதானுவுக்குப் பரபரப்பாக இருந்தது. சேனாதிபதி சொல்லும் மகான் மகாவிஷ்ணு கோயிலில் பார்த்த மகானாக இருப்பாரோ? ஆர்வத்துடன் சொன்னான். “மேற்கொண்டு சொல்லுங்கள் சேனாதிபதி”

 

“அவர் உங்களைப் பற்றி என்னிடம் சொன்னார். அவர் சொன்னது நான் எதிர்பார்க்காதது என்பதால் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.   ஆனால் அது கனவு என்பதால் அர்த்தமில்லாததாய் கூட இருக்கலாம். சொன்னால் சிரிப்பீர்கள்...”

 

சுதானு பொறுமை இழந்தான். “அழத்தான் கூடாது. சிரிப்பது தப்பில்லை. சொல்லுங்கள் சேனாதிபதி”

 

பத்ரசால் மெல்லச் சொன்னான். “சீக்கிரமாகவே உங்கள் தந்தை வனப்பிரஸ்தம் போவார் என்றும் மகதத்தின்  அடுத்த அரசராக நீங்கள் ஆவீர்கள் என்றும் சொன்னார்.  அது நடந்தேறும் சமயத்தில் நான் அதற்குத் துணையாக உங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று அறிவுரை சொன்னார். எனக்கு ஒரே திகைப்பாக இருந்தது. வயதில் மூத்தவராக இளவரசர் சுகேஷ் இருக்கும் போது இளையவர் எப்படி அரசராக முடியும் என்று கேட்க நான் வாய் திறப்பதற்குள் அவர் மறைந்து விட்டார். எனக்கும் விழிப்பு வந்து விட்டது.”

 

சுதானுவுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது. அவரல்லவோ மகான் என்று தோன்றியது. அவனுக்கு உதவ வேண்டும் என்று சேனாதிபதி கனவில் வந்து சொல்லியிருக்கிறாரே என்று நெகிழ்ந்து போனான்.  நேரில் முதலில் சந்தித்த போதும் அவன் எதுவும் சொல்லாமலேயே அவன் வேண்டுதல் என்ன என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு சொன்னவர் அவர். சேனாதிபதி கனவிலும் வந்து அவனுக்கு உதவச் சொல்லியிருப்பது அற்புதத்திலும் அற்புதம் அல்லவா?      

 

புளங்காகிதம் அடைய வைத்த இந்த அற்புத நிகழ்வில் அவனுக்கு நெருடலாக இருந்த விஷயம் ’வயதில் மூத்தவராக இளவரசர் சுகேஷ் இருக்கும் போது இளையவர் எப்படி அரசராக முடியும்?’ என்ற சேனாதிபதியின் சந்தேகம் தான்.

 

சுதானு தாங்கள் பேசிக் கொள்வது மற்றவர்கள் காதில் விழுமா என்று மிக எச்சரிக்கையாக சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த அளவு அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தாழ்ந்த குரலில் கேட்டான். “வயதைத் தவிர வேறு எதிலாவது என்னை விட சுகேஷ் அரசனாகும் தகுதி படைத்தவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா சேனாதிபதி?”

 

சேனாதிபதி என்ன சொல்வது என்று யோசித்தான்.  உண்மையிலேயே சுகேஷுக்கு வேறு தகுதி இல்லை. தாயின் செல்ல மகனாக வளர்ந்திருந்த சுகேஷ் தந்தையைப் போல கேளிக்கைகளிலும் அதிக நாட்டம் கொண்டவனாக இருந்தான்.  வீரனுக்குத் தேவையான பயிற்சிகளைப் போதுமான அளவு செய்து தேர்ந்திருந்தாலும் கூடுதல் வீரமோ, ஆளுமையோ, அறிவுத்திறனோ அவனிடம் இருக்கவில்லை என்பது உண்மை.

 

பத்ரசால் மெல்லச் சொன்னான். “நீங்கள் சொல்வது போல வயதைத் தவிர வேறு எதிலும் அவருக்குக் கூடுதல் தகுதி கிடையாது தான். அரசர் மனதில் என்ன இருக்கிறதோ அது தெரியாதல்லவா?”

 

சுதானு எரிச்சலோடு சொன்னான். “அரசர் மனதில் நிதியைத் தவிர வேறு எதற்கும் பிரதான இடம் கிடையாது சேனாதிபதி. அது என்னைக் காட்டிலும் உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்….”

 

சேனாதிபதி தலையசைத்தான். மகதத்தில் அந்த உண்மையை அறியாதவர்கள் சமீபத்தில் வந்த புதியவர்களாகத் தானிருக்க வேண்டும். பழைய ஆயுதங்கள் சேதமடைந்ததால் போருக்குப் புதிய ஆயுதங்கள் அவசியம் என்பது தெரிந்திருந்த போதும் ஆயுதங்கள் தயாரிக்க நிதியை தனநந்தனிடம் வாங்க ராக்‌ஷசர் பட்ட பாட்டை அருகிலிருந்து பார்த்தவன் அவன். பல இடங்களிலிருந்து கொல்லர்களை அவர் அவசரமாக வரவழைத்து விட்ட பின்னரும் நிதியைப் போதுமான அளவு தருவதற்கு தனநந்தன் நிறைய யோசித்தான்.   இவ்வளவு வேண்டுமா?” என்று ஆரம்பித்தவன் கடைசியில் “மக்களிடம் கூடுதல் வரி வசூலித்து தான் இந்தச் செலவைச் சரிசெய்ய வேண்டும்” என்று சொல்ல ஆரம்பித்தான்.

 

ராக்‌ஷசர் பொறுமையாகச் சொன்னார். “போரில் வென்ற பிறகு எதிரிகளின் நிதியையும் கண்டிப்பாக நாம் கைப்பற்றுவோம் அரசே. அதற்குப் பிறகும் பற்றாக்குறை ஏற்பட்டால் வரி பற்றி யோசிப்போம். ஆனால் போரில் வெல்ல இப்போதைக்கு நமக்கு ஆயுதங்கள் மிக முக்கியம் அல்லவா?”

 

பின் தான் தனநந்தனிடமிருந்து நிதி தேவையான அளவு கிடைத்தது. இப்போது இரவு பகலாக ஆயுதத் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. அருகிலிருக்கும் மற்ற நாடுகளிலிருந்தும் ஆயுதங்கள் வாங்குவதற்கான அதிவேக முயற்சிகளும் ராக்‌ஷசர் எடுக்க ஆரம்பித்திருந்தார்.  அவர் மட்டும் அப்படி இயங்காமலிருந்தால் முன்பே தோல்வி நிச்சயமானது போலத் தான் என்று பத்ரசால் நம்பினான். சுதானு தன் தந்தையைப் பற்றிய கருத்துகளை இப்படி வெளிப்படையாகச் சொல்லலாம். ஆனால் சேனாதிபதியான தான் சொல்ல முடியுமா என்று நினைத்தபடி பத்ரசால் மெலிதாய் புன்னகைத்தான்.

 

பத்ரசாலையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுதானுவுக்குத் தன் கருத்தை அவன் முழுமையாக ஏற்றுக் கொள்கிறான் என்பது புரிந்து நிம்மதியாயிற்று. சில நாட்களாகவே மகத மன்னனாக அரியணையில் அமரும் கனவில் அவன் அதிகம் மிதந்து வருகிறான். சுகேஷை விட அவனுக்கே தகுதி அதிகம் என்று ஆரம்பத்தில் நினைக்க ஆரம்பித்திருந்த அவன் இப்போது தனநந்தனையும் விடத் தகுதி தனக்கே அதிகம் இருக்கிறது என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறான்.

 

கங்கைக் கரையில் புதைத்திருந்த புதையலைத் தொலைத்திருந்த தனநந்தன் இப்போது கிட்டத்தட்ட புத்தி சுவாதீனமில்லாதவனாகவே மாறி விட்டதாய் சுதானு உணர்கிறான். ஏதாவது சில சமயங்களில் மட்டுமே தனநந்தன் சரியாக இருப்பது போல் தெரிகிறது. அவன் இரவு சரியாக உறங்குவதில்லை. என்னேரம் எழுந்து பார்த்தாலும் விழித்தபடி இருக்கிறான் என்று தாரிணி சொல்கிறாள். சில சமயங்களில் அவன் சாணக்கின் மகனைத் திட்டிக் கொண்டிருக்கிறான் என்றும் அவள் சொல்கிறாள். இப்படிப் பித்துப் பிடித்தவன் அரசனாக இருப்பது பொருத்தமாக சுதானுவுக்குத் தோன்றவில்லை. போருக்கான அவசிய ஆயுதங்களைத் தயாரிக்கும் நிதியைத் தரக்கூடத் தயக்கம் காட்டுவது தற்கொலைக்குச் சமானம் அல்லவா? முட்டாள் தனமாக எங்கோ நிதியைப் புதைத்து விட்டு அதைக் காக்கும் முயற்சி கூட எடுக்காமல் இருந்திருப்பதைப் பார்க்கையில் எப்போதோ இந்தப் பைத்தியம் ஆரம்பித்திருக்கலாம் என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்படுகின்றது.

 

யோசித்துப் பார்க்கையில் எல்லாம் அவன் அரசனாக அனுகூலமான சூழ்நிலைகளாகவே தெரிகின்றன. பைத்தியக்காரத் தந்தையை வனப்பிரஸ்தம் அனுப்புவதும் நல்லதொரு ஆலோசனையாகத் தெரிகிறது. மகான் அவனிடம் சொல்லாமல் விட்டதை சேனாதிபதி கனவில் சொல்லி உதவியிருக்கிறார். அவன் முன்பு ஆசைப்பட்டபடி தனநந்தன் அவனை பட்டத்து இளவரசனாக அறிவித்திருந்தாலும் கூட, தந்தை எப்போது இறப்பான் என்று அவன் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும். தந்தை வனப்பிரஸ்தம் போனால் அந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போது மீதியிருக்கும் ஒரே பிரச்சினை சுகேஷ் தான்....

 

சுதானு பத்ரசாலிடம் சொன்னான். “அந்த மகான் உங்கள் கனவில் வந்து சொன்னதைச் சொன்னீர்கள் சேனாதிபதி. ஆனால் அது குறித்து உங்கள் முடிவு என்ன என்பதை நீங்கள் சொல்லவில்லையே”

 

பத்ரசால் சொன்னான். ”கனவில் வந்தது மகானா இல்லை என் அர்த்தமில்லாத கற்பனையின் விளைவா என்றே எனக்கு விளங்காமல் இருக்கும் போது நான் என்னவென்று சொல்வது இளவரசே”

 

சுதானு சொன்னான். “உங்கள் கனவில் வந்தது உண்மையாகவே மகான் தான் சேனாதிபதி. நீங்கள் வர்ணித்த அந்த மகானை நானும் என் தாயும் உண்மையாகவே சந்தித்திருக்கிறோம். ஒரு முறை அல்ல இரு முறை”

 

சேனாதிபதி முகத்தில் திகைப்பை வெளிப்படுத்தினான். சுதானு அந்த இரு சந்திப்புகளையும் பற்றி சொன்னான். பத்ரசால் உடனே சொன்னான். ”அப்படியானால் அந்த மகான் சொன்னபடியே நடப்பதை என் பாக்கியமாகக் கருதுகிறேன் இளவரசே” 

 

சுதானு அந்தப் பதிலில் பரமதிருப்தி அடைந்தான். “எனக்கு உதவுபவர்களை நான் சேவகர்களாக நினைப்பதில்லை சேனாதிபதி. அவர்களை நண்பர்களாகவே நினைப்பேன். அவர்களிடம் நான் என்றும் தாராளமாக இருப்பேன். அதை நீங்கள் போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்.”

 

பத்ரசால் மெல்லச் சொன்னான். “ஆனால் ராக்ஷசர்....”

 

சுதானு கேட்டான். “அவருக்கு என்ன?”

 

அவர் நம் நடவடிக்கைகளில் அதிருப்தி அடையலாம். மன்னரான பின் உங்களையாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் என் மீது ஏதாவது குற்றம் சாட்டலாம். ஏனென்றால் அவர் உங்கள் தந்தையின் தீவிர விசுவாசி.”

 

சுதானு உறுதியான குரலில் சொன்னான். “என் நண்பர்கள் மீது அவர் குற்றம் சாட்டுவதை என் மீது குற்றம் சாட்டுவதைப் போலவே நான் நினைப்பேன் சேனாதிபதி. நம் நடவடிக்கைகளில் அவர் அதிருப்தி அடைந்தால் அவர் தாராளமாக மகதத்திலிருந்து வெளியேறி விடலாம். இங்கிருக்கிற வரை அவர் நம்மை அனுசரித்துப் போக வேண்டியவர் என்பதே என் நிலைப்பாடு.”

 

பத்ரசால் நிம்மதி அடைந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Wednesday, March 12, 2025

முந்தைய சிந்தனைகள் 121

சிந்திக்க சில விஷயங்கள் என் நூல்களிலிருந்து...











 

Monday, March 10, 2025

யோகி 93

 

லைபேசி இசைத்தது. ஸ்ரேயா அதை எடுத்து யாரென்று பார்த்தாள். இதுவரை தொடர்பில் இல்லாத புது எண். கடன் வேண்டுமா என்று ஏதாவது வங்கியிலிருந்து கூப்பிட்டுக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அல்லது, வேறெதாவது விளம்பர அழைப்பாய் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவள் அலைபேசியை எடுத்து சற்று கண்டிப்பான குரலில் பேசினாள். “ஹலோ

 

ஹலோ ஸ்ரேயா. நான் ஷ்ரவன் பேசறேன்.”

 

அவன் குரலைக் கேட்டதும் அவளுடைய மனத்தில் பரவிய புத்துணர்ச்சியை அவள் கடிந்து கொண்டாள். ‘எத்தனை பட்டாலும் இந்த மனம் பாடம் கற்றுக் கொள்வதே இல்லை.’

 

சொல்லுங்கஎன்று வறண்ட குரலில் ஸ்ரேயா சொன்னாள்.

 

உன் கிட்ட நேர்ல கொஞ்சம் பேசணும்.”

 

இன்னைக்கு நான் ரொம்ப பிசியாய் இருக்கேன்.” என்று பொய் சொன்னாள். மீண்டும் மீண்டும் அடிபட அவள் இதயம் தயாராயில்லை.

 

அப்படின்னா, நாளைக்குப் பேசலாமா?”

 

இந்த வாரம் முழுசுமே நான் பிசி.”

 

புரியுது ஸ்ரேயா. ஆனால் நான் இன்னைக்கோ, நாளைக்கோ உன் கிட்ட கண்டிப்பாய் பேசியாகணும். பிறகு நான் ஓரிடத்திற்குப் போக வேண்டியிருக்கு.  போனால் எப்ப திரும்பி வருவேன்னு நிச்சயமில்லை.”

 

என்ன விஷயம்னு போன்லயே சொல்லுங்களேன்.” அவனைப் பார்த்தால் அவள் மனம் சிறிதும் வெட்கம், மானம், ரோஷம் இல்லாமல் அவனைக் கொண்டாடும். பட்ட அவமானமெல்லாம் போதும். அவனைப் பார்க்காமல் இருப்பதே நல்லது!

 

போன்ல பேச முடியாது ஸ்ரேயா.”

 

அப்படின்னா சாரி.”

 

ஒரே ஒரு தடவை நாம சந்திச்சுப் பேசலாம் ஸ்ரேயா. அதற்கப்பறம் உனக்கு வேண்டாம்னு  தோணுச்சுன்னா பிறகு நான் கண்டிப்பாய் எப்பவுமே உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.”

 

இப்போதும் முடியாதென்று சொல்லி அவன் செய்ததற்குப் பழிதீர்த்துக் கொள் என்று மனதின் ஒரு பகுதி சொன்னது. ஆனால் மனதின் மறுபகுதிஅப்படிச் சொன்னால் பின் நீ எப்போதும் நிம்மதியாக இருக்க முடியாதுஎன்று எச்சரித்தது. அது மட்டுமல்ல, அவன் என்ன சொல்ல வந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் அவளுக்கு மண்டையே வெடித்து விடும்....

 

சரி எங்கே சந்திக்கலாம்?” என்று அவள் கேட்டாள்.

 

உனக்கு வர சௌகரியமான இடமும் நேரமும் சொல்லு.”

 

ஸ்ரேயா அவள் வீட்டுக்கும் ஆபிசுக்கும் இடையில் உள்ள ஒரு பெரிய பூங்காவின் பெயரைச் சொல்லி, அங்கு அன்று மாலை ஆறு மணிக்குச் சந்திக்கலாம் என்றாள்.

 

தேங்க்ஸ் ஸ்ரேயா

 

அன்று அவளுக்கு ஆபிசில் வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை. ஷ்ரவன் என்ன சொல்வான் என்று அவள் மனம் பல அனுமானங்களை யோசிக்க ஆரம்பித்தது. காதலைச் சொல்வதிலிருந்து கடன் கேட்பது வரை அத்தனை சாத்தியக்கூறுகளும் மனதில் வந்து போயின. சொன்னபடி அவன் வராமல் போகவும் வாய்ப்புண்டு என்று அவள் மனம் அச்சுறுத்தவும் செய்தது.

 

அவளுடைய ஆபிசிலிருந்து ஸ்கூட்டியில் போனால் அந்தப் பூங்காவை கால் மணி நேரத்தில் அடைந்து விடலாம். ஆனால் மாலை ஐந்தரையிலிருந்தே அவள் மனம் அவனைச் சந்திக்கக் கிளம்பச் சொன்னது. இந்த முட்டாள் மனமே பெரிய இம்சை தான் என்று அவள் சலித்துக் கொண்டாள்.  5.46க்கு அவள் கிளம்பினாள்.

 

பூங்காவின் வாசலிலேயே ஷ்ரவன் அவளுக்காகக் காத்திருந்தான். தூரத்திலிருந்து அவனைப் பார்த்தவுடனேயே மனதில் பட்டாம்பூச்சிகள் படபடக்க அவள் மனதை எச்சரித்தாள். “பொறு. ஒரேயடியாய் கற்பனைக் குதிரையை ஓட விடாதே.”

 

அவனை நெருங்கிய போது தான் அவனிடம் நிறைய சிறு சிறு மாற்றங்கள் தெரிவதை அவள் கவனித்தாள். நடை, உடை, பாவனை, கண்கள், சிகையலங்காரம் எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தது. ஆத்மார்த்தமாய் அவனிடம் உணர்ந்த ஆரம்பக் காதல் தான் அவனை உடனடியாக அடையாளம் காட்டியதேயொழிய, மற்றபடி அவன் புதிய ஆளாகவே தெரிந்தான். இந்த மாற்றங்களும் அவனுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய்த் தோன்றியது. ’மனமே கற்பனைக் கோட்டை எதையும் கட்டாதே. அவன் அழைத்தது அவனுடைய திருமண அழைப்பிதழ் தரவதற்காகக் கூட இருக்கலாம்என்று அவள் மனதை எச்சரித்தாள்.

 

வந்ததுக்கு தேங்க்ஸ்என்று சொல்லி அவன் கையை நீட்டிய போது, அவள் கை தானாக நீண்டது. இருவருமே அந்த ஸ்பரிசத்தின் இனிமையை உணர்ந்தார்கள். கைகள் விலக சிறிது நேரமாகியது.

 

ஆட்கள் அதிகமாக இல்லாத ஒரு இடமாய்ப் பார்த்து அவர்கள் இருவரும் அமர்ந்தார்கள். ஷ்ரவன் அவளிடம் சொன்னான். “யோகாலயத்துல நான் நடந்துகிட்டது உனக்கு புரியாத புதிராய் இருந்திருக்கும் ஸ்ரேயா. ஆனால் நான் காரணமாய் தான் அப்படி நடந்துகிட்டேன். நான் என்ன செய்தாலும் அதை உன்னிப்பாய் கவனிக்க அங்கே ஆள்களும், கேமிராக்களும் இருந்ததால நாம நெருக்கமாகிறோம்னு அவங்க தெரிஞ்சுக்கறது கூட உனக்கு ஆபத்துல முடியலாம்னு தான் நான் அங்கே அலட்சியமாய் இருந்தேன்.”

 

ஸ்ரேயா திகைப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் சொன்னான். “எல்லாத்தையும் நான் விவரமாய் சொல்றேன். ஆனால் நீ எனக்கு ஒரே ஒரு சத்தியம் மட்டும் செய்து தரணும். நான் இப்ப சொல்றது எதுவுமே உன் மூலமாய் வேற யாருக்குமே எப்பவுமே தெரியக்கூடாது.”

 

அவன் கையை நீட்ட அவன் உள்ளங்கையில் தன் கையை வைத்து அவள் சத்தியத்தை உறுதிப்படுத்தினாள். ஷ்ரவன் தான் யார் என்பதையும், யோகாலயத்தின் யோகா, தியான வகுப்புகளில் சேர்ந்த காரணத்தையும் அவளுக்குச் சொன்னான். போலீஸ் இலாகா சைத்ரா வழக்கை ரகசியமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது என்று அவன் சொன்னானே தவிர இதில் முதல்வர் சம்பந்தப்பட்டதை அவன் சொல்லவில்லை. சைத்ரா, டாக்டர் வாசுதேவன் இருவர் மரணங்களையும் சொன்னவன் தேவையான சில விவரங்கள் தவிர மற்ற விவரங்களைச் சொல்வதைத் தவிர்த்தான். இதுவே கூட அவன் தொழில் தர்மத்தை மீறிய செயல். ஆனால் அவன் தன் செய்கைக்கான காரணத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என்று சொன்னானேயொழிய மற்றதெல்லாம் சொல்வதற்கு அவசியமிருக்கவில்லை.

 

ஸ்ரேயா அவன் சொன்னதை எல்லாம் கேட்டு திகைத்தாள். அவளும் சைத்ரா வழக்கு  குறித்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்திருந்த செய்திகளை அறிந்திருந்தாள். ஆனால் உண்மை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டிருந்ததால் அவள் தெளிவான அபிப்பிராயத்தை எட்டி இருக்கவில்லை. ஆனால் ஷ்ரவனிடம் உண்மையைக் கேட்டறிந்த போது அவளுக்கு ரத்தம் கொதித்தது. யோகாலயத்தில் இருக்கும் குற்றவாளிகள் எத்தனை உயிர்களை எடுத்திருக்கிறார்கள். என்னவொரு அலட்சியம், என்னவொரு ஆணவம்.... 75 வயதில் அனாதையாய் நிற்கும் சைத்ராவின் தாத்தாவை நினைக்கையில் அவள் மனம் பதைத்தது. 

 

ஷ்ரவன் முடிவில் சொன்னான். “நான் இது வரைக்கும் எடுத்துகிட்ட எந்த வேலையைப் பற்றியும் என் வீட்டுலயோ, என் நண்பர்கள் கிட்டயோ சொன்னதில்லை ஸ்ரேயா. முதல் முதல்ல அதை நான் மீறியிருக்கேன். வாழ்க்கைல முதல் தடவையாய் உன்னைப் பார்த்த முதல் கணத்துலயே நான் காதலை உணர்ந்திருக்கேன். நீயும் அப்படியே உணர்ந்தாய்னும் ஆத்மார்த்தமாய் உணர்ந்திருக்கேன். இப்படியெல்லாம் உணர முடியும்னு யாராவது எப்பவாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாய் நான் கேலி செய்திருக்கக்கூடிய ஆள். சினிமால தான் நடக்கும், கதையில தான் நடக்கும்னு சொல்லியிருப்பேன். மனசுல உணர்ந்த காதலை வாயால உன்கிட்ட தெரிவிக்கிற இந்த நேரத்துல எனக்கு இருக்கற ஆபத்தையும் உன்கிட்ட சொல்றது தான் நியாயம். இதுவரைக்கும் நான் எடுத்துகிட்ட எல்லா வேலையும் ஆபத்து நிறைஞ்சது தான். ஆனால் ஒவ்வொன்னுலயும் அதை மீறி சாதிச்சுட்டு தான் நான் வந்திருக்கேன். இந்த வேலையும் அப்படி தான். போய்ச் சாதிக்க முடியும்னு நம்பிக்கை இருந்தாலும்,  போனவன் திரும்பி வராமலேயே போகக்கூடிய ஆபத்தும் இருக்குன்னு உன் கிட்ட நான் தெரிவிக்கறது தான் நியாயமாய் இருக்கும். நான் உன் கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்டுக்கறேன். நான் இதுல கண்டுபிடிச்சு வெளியே வர சுமார் மூனு மாசத்திலிருந்து ஆறு மாசம் வரைக்கும் ஆகலாம்னு எதிர்பார்க்கறேன். அது வரைக்கும் எனக்காக காத்திருப்பாயா? அப்படி திரும்பி வந்தால் நான் உன் அம்மா அப்பா கிட்ட முறைப்படி பேசறேன். அப்படி நான் வரலைன்னா, என்னையும் இந்தக் காதலையும் மறந்துட்டு, ஒரு நல்ல பையனாய் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு புதிய வாழ்க்கையை நீ ஆரம்பிக்கணும்.”

 

(தொடரும்)

என்.கணேசன்

Thursday, March 6, 2025

சாணக்கியன் 151

சின்ஹரன் பத்ரசாலிடம் சொன்னான். “நான் முன்பே சொன்னபடி ராக்‌ஷசர் போர் முடியும் வரை அமைதியாகத் தான் இருப்பார். போர் முடிந்த பின் தான் அவர் இந்த விஷயத்தைக் கிளறுவார். நண்பரே, அதனால் அந்தச் சமயத்தில் ராக்‌ஷசரை விடவும் சக்தியும் அதிகாரமும் வாய்ந்த ஒருவரின் பாதுகாப்பு வளையத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை அல்லவா?”

 

பத்ரசால் கவலையுடன் சொன்னான். ”ராக்‌ஷசரை விட அதிக அதிகாரம் இருப்பவர் மன்னர் தான். ஆனால் அவர் ராக்‌ஷசர் சொல்வதை தேவ வாக்காக எடுத்துக் கொள்பவர்.”

 

“நீங்கள் தனநந்தனை மன்னனாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு சொல்கிறீர்கள். ஆனால் போர் முடிந்த பின் தனநந்தன் மன்னனாக இருக்கப் போவதில்லை”

 

சின்ஹரன் சொன்னதைக் கேட்டதும் பத்ரசாலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன சொல்கிறீர்கள் நண்பரே?” என்று திகைப்போடு கேட்டான்.

 

சின்ஹரன் சொல்வதா வேண்டாமா என்று யோசிப்பவன் போல பாவனை காட்டினான். பத்ரசால் சிறிது படபடப்புடன் சொன்னான். “தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஏனப்படி சொல்கிறீர்கள்?”

 

சின்ஹரன் மிக ரகசியமான தகவலைப் பகிர்ந்து கொள்பவன் போலத் தாழ்ந்த குரலில் சொன்னான். “நண்பரே. எங்களுக்கு மகாசக்தி வாய்ந்த ஒரு மகானைத் தெரியும். அவர் சொல்லும் வாக்கு எதுவும் இது வரை பொய்த்ததில்லை. நாங்கள் முக்கியமாக எது செய்வதானாலும் அவர் ஆலோசனையைக் கேட்டு விட்டுத் தான் செய்வோம். அவர் இந்தப் போருக்குப் பின் மகத அரியணையில் தனநந்தன் அமரப் போவதில்லை என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார்”

 

பத்ரசாலுக்கு சின்ஹரன் அளவுக்கு அந்த மகானின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. இப்படி யாரோ ஒருவர் சொல்கிறார் என்றால் அப்படியே நடக்கும் என்று எப்படி இவர்களால் நம்ப முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான்.

 

அதைப் புரிந்து கொண்டவன் போல சின்ஹரன் சொன்னான். “உங்கள் ஆச்சரியம் எனக்குப் புரிகிறது நண்பா. நாங்களும் அந்த மகான் சந்திரகுப்தன் வாஹிக் பிரதேச மன்னனாக வருவான் என்று ஆரம்பத்தில் சொன்ன போது சந்தேகப்பட்டோம். எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண மாணவன் சக்தி வாய்ந்த யவனர்களைத் துரத்தியடித்து எப்படி மன்னனாக முடியும் என்று எண்ணினோம். அது நடந்தது. யவன சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் அற்பாயுசில் இறந்து போய் விடுவான். சொந்த ஊருக்குப் போகும் வழியிலேயே அது நடந்து விடும் என்றார். அதையும் எங்களால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அலெக்ஸாண்டர் திடகாத்திரமாக இருந்தான். இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் அவன் எப்படி அற்பாயுசில் சாவான் என்று சந்தேகப்பட்டோம்.. அந்த மகான் சொன்னபடியே தான் நடந்தது. இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். எதையும் அவர் சொல்கிற போது நடக்க முடியாத சூழ்நிலைகளே பெரும்பாலும் இருந்தன. ஆனால் பின் எல்லாம் மாறி அவர் சொன்னபடியே நடக்க ஆரம்பித்த பிறகு எங்களுக்கு அவர் சொல்வதில் சந்தேகமே வருவதில்லை...”

 

பத்ரசாலுக்கு அதைக் கேட்ட பிறகு  மெல்ல சந்தேகம் தெளிந்தது. சந்திரகுப்தன் அரசனாவான் என்றும் அலெக்ஸாண்டர் அற்பாயுசில் இறந்து போவான் என்றும் முன்கூட்டியே சொல்லியிருந்தால் அந்த மகான் மிகவும் சக்தி வாய்ந்தவராகத் தான் இருக்க வேண்டும். ஆனால்....

 

சந்தேகமும், திகைப்பும் கலந்த தொனியில் கேட்டான். “அப்படியானால் இந்தப் போரில் நாங்கள் தோற்று விடுவோம் என்று அவர் சொல்கிறாரா?”

 

சின்ஹரன் சொன்னான். “தோற்று விடுவீர்கள் என்று அவர் சொல்லவில்லை. உங்கள் எல்லைப் பகுதிகள் சிலவற்றை எதிரிகள் கைப்பற்றி விடுவார்கள் என்று சொன்னார். உங்கள் மன்னரின் மனநிலை மோசமாகிக் கொண்டே போய் கடைசியில் போருக்குப் பின் மன்னர் முடிதுறந்து மகனை அரசனாக்கி வனப்பிரஸ்தம் சென்று விடுவார் என்று சொன்னார்.”

 

பத்ரசால் யோசித்தான். தனநந்தனின் மனநிலை மோசமாகிக் கொண்டே வருவதைப் பற்றி அரண்மனையில் பணிபுரிபவர்களே தாழ்ந்த குரலில் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவன் அந்த நிதி களவு போனதிலிருந்து சில நேரங்களில் சரியாக இருந்தாலும் பல நேரங்களில் பைத்தியம் பிடித்தவன் போலத் தான் நடந்து கொள்கிறான்....

 

பத்ரசால் சொன்னான். “ஆனால் சுகேஷ் அரசனானாலும் அவனும் ராக்‌ஷசரின் கைப்பாவையாகத் தான் இருப்பான். அவன் தனியாக முடிவெடுக்க முடிந்தவனோ, உறுதியானவனோ அல்ல.”

 

“நான் இளவரசன் சுகேஷைச் சொல்லவில்லை. சுதானுவைச் சொன்னேன் நண்பரே”

 

பத்ரசால் குழப்பத்துடன் கேட்டான். “மூத்தவனான சுகேஷைத் தானே பட்டத்து இளவரசனாக அறிவிக்கப் போவதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?”

 

“அது நடக்கப் போவதில்லை நண்பா. நடக்கவிருக்கும் போர் நிறைய பழைய கணக்குகளைப் பொய்யாக்கப் போகிறது. அந்தச் சமயத்தில் நீங்கள் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கப் போகிறது.”

 

சுதானு கோபக்காரனானாலும் சுதேஷை விடத் துடிப்பும், வேகமும், உறுதியும் கொண்டவன். யாருக்கும் அடங்க மறுப்பவன். அவன் அரசனானால் தனநந்தன் அளவுக்கு ராக்‌ஷசருக்கு முக்கியத்துவம் தர மாட்டான். ...

 

பத்ரசால் தயக்கத்துடன் சொன்னான். “சுதானுவுடன் நான் நெருங்கிய நட்பில் இல்லை. அதனால் அவன் எனக்கு ஆதரவாய் இருப்பான் என்பது நிச்சயமில்லை...”

 

“நட்பு என்பது எப்போதும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது நண்பரே. சென்ற வருடம் நீங்களும் நானும் அன்னியர்களாக இருந்தோம். ஆனால் இன்று நாம் நெருங்கிய நண்பர்களாகி விடவில்லையா. உங்களுக்குப் பிரச்னை வரப்போகிறது என்று தெரிந்தவுடன் நான் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் உங்களுக்குத் தெரிவிக்கவும், உதவவும் ஓடி வரவில்லையா? அதனால் நீங்கள் மெல்ல சுதானுவுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பியுங்கள்....”

 

பத்ரசால் மெல்லத் தலையசைத்தான். சுதானுவும் சீக்கிரம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தவன் அல்ல. அவனுக்கு வரும் திடீர் கோபங்கள் அரண்மனை வளாகத்தில் மிகவும் பிரசித்தம். இப்போதும் தனநந்தனிடமே அடிக்கடி சண்டையிடுபவன் அவன் ஒருவனே.

 

அவன் தயக்கத்தை உணர்ந்தவன் போல் சின்ஹரன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நண்பரே. சுதானுவும் அந்த மகானின் பக்தனே. அவனும் அவரை மிகவும் நம்புகிறான். அவரைப் பற்றிப் பேசியே நீங்கள் அவனிடம் சீக்கிரமாகவே நெருக்கமாகி விட முடியும்.”  

 

கூடவே எப்படி அதைச் செய்ய வேண்டும் என்பதையும் சின்ஹரன் விவரித்துச் சொல்லவே பத்ரசால் எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசிக்க முடிந்த நண்பனின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்தான். இவன் யோசித்து இருக்காத விஷயமே இருக்காது போலிருக்கிறதே…

 

சின்ஹரன் இயல்பாய் தெரிந்து கொள்ள விரும்புபவன் போல கேட்டான். “நண்பரே. இந்தப் போரில் நீங்கள் எங்கே இருப்பீர்கள்? தலைநகரிலேயே இருப்பீர்களா? இல்லை வெளியே சென்று விடுவீர்களா?”

 

பத்ரசால் சொன்னான். “சரியாகத் தெரியவில்லை நண்பரே. நிலவரம் பார்த்துப் பின் முடிவு செய்யலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்.”

 

தலையசைத்தபடி சின்ஹரன் சொன்னான். “அதுவும் நல்லது தான் நண்பரே. அது தீர்மானமாகும் வரை என்ன நடந்தாலும் உங்களுக்கு உதவ நான் பாடலிபுத்திரத்திலேயே மறைவாய் இருக்கிறேன். வேண்டிய நேரத்தில் வந்து விடுவேன். இனி நான் அதிக நேரம் இங்கே தங்கினால் அது தேவையில்லாத கேள்விகளை எழுப்பிவிடும். அதனால் விடைபெறுகிறேன் நண்பரே.”

 

சின்ஹரன் விடைபெற்றான்.

 

றுநாள் பத்ரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பிரிவுகளை எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் ராக்‌ஷசர் முன் தினம் போலவே வந்து சிறிது நேரம் மேற்பார்வை பார்த்து விட்டுப் போய் விட்டார். அவர் எதுவும் சொல்லவில்லை என்றாலும் குதிரை மாற்ற விவகாரத்தை அவர் அறிந்து விட்டார் என்ற நினைவே பத்ரசாலுக்கு நெருடலாக இருந்தது. இந்தப் பாழாய்ப் போன போர் எழுந்திருக்கா விட்டால்  ராக்‌ஷசருக்கு இந்த விவகாரம் தெரிய வராமலேயே இருந்திருக்கும்…

 

ராக்‌ஷசர் சென்ற பிறகு சிறிது நேரத்தில் சுதானு அங்கே வந்தான்.  சுதானுவைப் பார்த்தவுடன் பத்ரசால் நட்புடன் புன்னகைத்தான். சுதானுவும் புன்னகைத்தாலும் அவன் சிறிது யோசித்தது போல் இருந்தது. பத்ரசால் தான் செய்து கொண்டிருந்த வேலையை தன் இரு படைத்தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு சுதானு அருகில் வந்து சின்ஹரன் சொன்னது போலவே ஆரம்பித்தான்.

 

“இளவரசே. நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று வாக்களித்தால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.”

 

சுதானு சிரித்துக் கொண்டே சொன்னான். “நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவர் பார்வையில் பைத்தியக்காரர்களாகவே இருப்போம் சேனாதிபதி. அது தவிர்க்க முடியாதது. அதனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிப்படையாகச் சொல்லுங்கள். என்ன விஷயம்?”

 

(தொடரும்)

என்.கணேசன்