சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 21, 2024

யோகி72

மூவரும் திகைத்தார்கள். தேவானந்தகிரி தொடர்ந்தார். “டாக்டர் பக்கம் மண்டை ஓடு தெரியுது. பாண்டியன் பக்கம் ஓநாய் தெரியுது…. ரெண்டு பேரோடு மணிப்புரா சக்ராவும் எரியறது தெரியுது….”

 

அவர் கடைசியாகச் சொன்னது பாண்டியனுக்கும், சுகுமாரனுக்கும் புரியவில்லை. அவர்கள்  கேள்விக்குறியுடன் பிரம்மானந்தாவைப் பார்த்தார்கள். பிரம்மானந்தா வயிற்றுப் பகுதியைக் காண்பித்து அது தான் மணிப்புரா சக்ரா என்று சைகையால் தெரிவித்தார்.

 

அவர்களுடைய வியப்பு அதிகரித்தது. அவர்களாக எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இருந்த போதும், இத்தனை கச்சிதமாகத் தகவல்களைச் சொன்னவர் இதன் பின்னணியையும் அப்படியே சொல்வார் என்ற நம்பிக்கை பூரணமாகப் பிறந்தது. 

 

சுகுமாரன் கேட்டார். ”இந்தப் பிரச்சினைக்குக் காரணம் அந்தப் பொண்ணோட ஆவியா?”

 

தேவானந்தகிரி கண்களைத் திறக்காமலேயே சொன்னார். “இல்லை. இது ஆவியோட வேலையில்லை. ஆட்களோட வேலை


பாண்டியனுக்குத் தன் சந்தேகம் பலித்து விட்டது திருப்தியளித்தது. ஆவியைத் துரத்தலாமே ஒழிய பழிவாங்க முடியாது. துன்பம் விளைவித்தவர்களைத் திருப்பித் தாக்காமல் இருக்கும் நிலைமை அவருக்குச் சிறிதும் உடன்பாடானதல்ல. எதிரிகள் ஆட்களானால் தான் எதையாவது செய்ய முடியும். அதனால் அவர் உடனடியாக ஆர்வத்துடன் கேட்டார். ”அந்த ஆட்கள் யார்னு சொல்ல முடியுமா?”

 

தேவானந்தகிரி சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. சிலை போல் அமர்ந்திருந்தவர் பின் மெல்ல சொன்னார். “ஒரு இளைஞன் தெரியறான். அவனுக்கு 25 வயசுல இருந்து முப்பது வயசுக்குள்ளே இருக்கும்.”

 

பாண்டியனும் பிரம்மானந்தாவும் திகைத்தார்கள். அவர்கள் இருவரும் இதுவரையில் சைத்ராவின் தாத்தா தான் இதன் பின்னணியில் இருப்பார் என்று சந்தேகப்பட்டிருந்தார்கள். அதனால் தேவானந்தகிரி இளைஞன் என்று சொன்னது அவர்களைக் குழப்பியது. அந்த இளைஞன் எப்படி சைத்ராவுடன் சம்பந்தப்படுகிறான்? சைத்ராவுடன் சம்பந்தமில்லை என்றால் ஏன் அவள் உருவம் அவர்களுக்குத் தெரிந்தது?

 

பிரம்மானந்தா கேட்டார். “அந்த இளைஞன் தான் இவங்களுக்கு எதிராய் இந்தப் பிரயோகம் செய்தவனா? அவனுக்கு இந்த வித்தை எல்லாம் தெரியுமா?”

 

அவனுக்கு இந்த வித்தை தெரியாது. அவன் என்னை மாதிரி ஒருத்தர் மூலமாய் இதைச் செய்ய வெச்சிருக்கான். செய்த ஆள் ரொம்ப திறமைசாலி. அவர் நினைச்சிருந்தா இவங்க ரெண்டு பேரையும் சாகடிச்சிருக்கக்கூட முடியும். இந்த அளவு போதும்னு அவர் நிறுத்திகிட்ட மாதிரி தான் இருக்கு.”

 

இந்தத் தகவல் மூவரையும் அதிர வைத்தது. ”யாரவர்பாண்டியன் உடனடியாகக் கேட்டார்.

 

தேவானந்தகிரிக்கு அந்த நபர் காட்சியாகத் தெரியவில்லை என்றாலும், இக்காலத்தில் இது போன்ற வேலைகளில் அசாத்திய ஞானமும், தனக்குத் தானே ஒரு எல்லையோடு நிறுத்திக் கொள்ளும் கட்டுப்பாடும் உள்ள நபர் ஒரே ஒருவர் தான். பரசுராமன். ஆனால் அந்தப் பெயரைத் தன் வாயால் சொல்லி பரசுராமனின் அதிருப்திக்கு ஆளாக அவர் விரும்பவில்லை. மேலும் ப்ரஷ்னத்தில் தெரிவதைப் பார்த்துச் சொல்லத் தான் அவர் பணம் வாங்குகிறார். சரியாகவே இருந்தாலும் அனுமானத்தைச் சொல்வதற்காக அல்ல...

 

அவர் மெல்லச் சொன்னார். “அது ப்ரஷ்னத்தில் தெரியலை. இவ்வளவு சூட்சுமமான பிரயோகத்தை செய்திருக்கற அவர், தன்னை மறைச்சுக்கற வித்தை தெரிஞ்சவராயிருக்கறதுல ஆச்சரியப்பட ஒன்னுமில்லை. ஒன்னு மட்டும் நிச்சயம். அந்த ஆள் தானாய் ஒரு கட்டுப்பாட்டோட இத்தோட நிறுத்திகிட்ட மாதிரி தான் இருக்கு. மணிப்புரா சக்ரால பிரயோகப்படுத்தினதை அவர் அனாஹதா சக்ரால பிரயோகப்படுத்தி இருந்தால் இவங்களுக்கு மாரடைப்பு வந்திருக்கும். விசுத்தி சக்ரால பிரயோகப்படுத்தியிருந்தால் பேச்சு நின்னு போயிருக்கும். ஆக்ஞ சக்ரால பிரயோகப்படுத்தியிருந்தால் உடனடியாய் பைத்தியம் பிடிச்சிருக்கும். அதெல்லாம் நடக்கலையேன்னு சந்தோஷப்படுங்க

 

குழப்பத்துடன் பார்த்த பாண்டியனிடமும், சுகுமாரனிடமும் பிரம்மானந்தா, அனாஹதா சக்ரா நெஞ்சுப்பகுதியில் உள்ளதென்றும், விசுத்தி சக்ரா தொண்டைப் பகுதியில் உள்ளதென்றும், ஆக்ஞ சக்ரா இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ளதென்றும் விளக்கினார்.

 

பிறகு பிரம்மானந்தா தேவானந்தகிரியிடம் கேட்டார். “இந்த மாதிரி பிரயோகங்கள் செய்ய முடிஞ்ச ஆட்கள் இந்தக் காலத்துல நிறைய இருக்க மாட்டாங்களே. அதனால ஆளை உங்களால சாதாரணமாவே சொல்லிட முடியுமே

 

தேவானந்தகிரி கண்களைத் திறந்தார். நீங்க நினைக்கற மாதிரி இல்லை. இந்த வித்தை தெரிஞ்சவங்க நமக்குத் தெரியாம நிறைய பேர் இருக்காங்க. அதனால இதுல யூகங்கள் தவறான ஆளை அடையாளம் காட்டிடலாம்என்னைக் கேட்டால் இந்தப் பிரயோகம் பண்ணினவர் பின்னால் போறது ஆபத்தும் கூட. அதனால அவரைச் செய்யச் சொன்ன இளைஞனைக் கண்டுபிடிக்கப் பார்க்கறது தான் புத்திசாலித்தனம்…”

 

பாண்டியன் கேட்டார். “அந்த இளைஞனுக்கு எங்க மேல ஏன் இந்த வன்மம்னு பார்த்துச் சொல்ல முடியுமா?”

 

தேவானந்தகிரி மறுபடி கண்களை மூடிக் கொண்டார். சிறிது நேரம் மௌனமாய் இருந்து விட்டுச் சொன்னார். ”அது தெளிவாய் தெரியலை…. கொஞ்சம் பொறுங்க….. அவன் இப்ப என்ன செஞ்சுகிட்டிருக்கான்கிற தகவல் தெரியுது…..”

 

மூவரும் பேரார்வத்துடன் தேவானந்தகிரியைப் பார்த்தார்கள். அதை வைத்து அவர்களுக்கு எதையாவது அனுமானிக்க முடியலாம்ஒவ்வொரு வினாடியும் யுகமாய் நகர்ந்தது. தேவானந்தகிரி கண்களை மூடியபடியே முழுக்கவனத்தை ஓரிடத்தில் குவித்துப் பார்ப்பது போலிருந்தது.

 

சிறிது நேரம் கழித்து அவர் சொன்னார். ”இப்ப அவன் யாரோ ஒரு நிஜ யோகியைத் தீவிரமாய்த் தேடிகிட்டிருக்கிற மாதிரி தெரியுது.”

 

உண்மையில் அந்த நேரத்தில் ஷ்ரவன் சைத்ராவின் ஆவி சொல்லி இருந்த யோகியைப் பற்றித் தான் தீவிரமாக யோசித்தபடி இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான். அதைத் தான் தேவானந்தகிரியால் உணர முடிந்தது. 

 

தேவானந்தகிரியின் பதில் மூவரையும் ஏமாற்றமடைய வைத்தது. ஆவி விஷயத்தை விடவும் அதிகமாக இது குழப்பியது.  யோகியைத் தேடுபவன் ஏன் அவர்களுக்கு எதிரான வேலையில் இறங்குகிறான்? மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யோகியைத் தீவிரமாகத் தேடுபவன் ஆன்மீக மார்க்கத்தில் ஆழமாக ஈடுபட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்டவனுக்கு இவர்களுடன் என்ன பிரச்சினை? ஏன் இப்படிச் செய்கிறான்?

 

சுகுமாரன் தன் சந்தேகத்தைக் கேட்டார். “அந்த இளைஞன் தேடற யோகி இவர் தானோ?” சுகுமாரன் பிரம்மானந்தாவைக் கை காட்டினார். அவருக்குத் தெரிந்த ஒரே யோகி பிரம்மானந்தா தான். சுகுமாரனையும்,  பாண்டியனையும் தண்டித்து விட்டு அடுத்த குறியாக பிரம்மானந்தாவை வைத்துக் கொண்டு, அவர் தற்போது எங்கிருக்கிறார் என்று அவன் தேடிக் கொண்டிருக்கிறானோ?”

 

இல்லை என்று தேவானந்தகிரி தலையசைத்தார்.

 

சுகுமாரன் பரிதாபமாகக் கேட்டார். “இப்படி யார் வேணும்னாலும் யார் மேலயும் சக்தியைப் பிரயோகிக்க முடியுமா?”

 

தேவானந்தகிரி உள்ளதை உள்ளபடி சொன்னார். “எப்பவுமே பலமானவங்க, பலவீனமானவங்க மேல சக்தியை பிரயோகிக்க முடியும். பிரயோகம் செஞ்ச ஆள் பலமானவர். நீங்க பலவீனமானவங்க…”

 

மூவருக்கும் அவர் சொன்னது கசந்தது. மூவருமே தங்களை மிக வலிமை வாய்ந்தவர்களாய் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பதால் அவரது இந்த வாசகம் அவர்களைச் சிறுமைப்படுத்துவது போல் தோன்றியது. பிரம்மானந்தா சாமர்த்தியமாக, தன் அதிருப்தியை மறைத்துக் கொண்டார். மற்ற இருவருக்கும் அது முடியவில்லை.

 

அவர்கள் இருவருடைய முகபாவனையிலிருந்து, தான் சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை தேவானந்தகிரி உணர்ந்தார். பரசுராமனைப் போன்றவர்கள் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நியாயம் இல்லாத ஒரு செயலில் ஈடுபட மாட்டார்கள். அதனால் இந்த இருவரும் ஏதோ பெரிய அநீதியைச் செய்திருக்க வேண்டும். 

 

தவறான கர்மாவைச் செய்திருப்பவர்கள் அந்த விளைவுகளை அனுபவித்து முடியும் வரை பலவீனமானவர்களே.’ என்று தேவானந்தகிரி விளக்க நினைத்து பின் அதைத் தவிர்த்தார். அதையெல்லாம் விளக்குவது அவர் வேலை அல்ல.

 

தேவானந்தகிரி, எப்படி இந்தப் பிரயோகம் நடந்திருக்கலாம் என்பதை,  தொடர்ந்து சொன்னார். “நீங்க ரெண்டு பேரும் தினமும் பயன்படுத்திகிட்டு இருக்கற பேனா, கர்ச்சீஃப், சாக்ஸ், செருப்பு, டவல், பனியன், வாட்ச், ட்ரஸ் மாதிரியான ஏதோ ஒரு பொருள் அவன் கைல கிடைச்சிருக்கு, உங்க இடத்து மண்ணும் அவங்களுக்குக் கிடைச்சிருக்கலாம்…” 

 

சுகுமாரன் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் கைக்குட்டையை இழந்ததை நினைவு கூர்ந்தார். பாண்டியனுக்கும் சுகுமாரனின் வீட்டுக்குப் போயிருந்த போது அவரது டவல் காணாமல் போயிருந்தது நினைவு வந்தது. யோசித்துப் பார்த்தால் அவர்கள் அதைத் தவற விடவில்லை. யாரோ திட்டமிட்டு எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.

 

அவங்க பிரயோகிச்சதை அவங்களுக்கே திருப்பி ஏவி விட முடியாதா?” பாண்டியன் ஆவலுடன் கேட்டார். அதைச் செய்து விட்டு அவர்கள் படும் அவஸ்தையை நேரில் பார்த்தால் ஒழிய அவருக்கு மனம் ஆறாது.


(தொடரும்)

என்.கணேசன்





 

Thursday, October 17, 2024

சாணக்கியன் 131

 

றுநாள் பத்ரசால் சூதாட்ட விடுதிக்கு வந்த போது சின்ஹரன் முன்பே வந்திருந்து சூதாடிக் கொண்டிருந்தான். பத்ரசாலைக் கண்டவுடன் புன்னகை செய்து மரியாதையான வணக்கம் செலுத்தி பழையபடி ஆட்டத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன் பின் பத்ரசால் பக்கம் திரும்பவில்லை. அந்த ஆட்டத்திலும் அவன் பணத்தை இழந்தாலும் சிறிதும் வருத்தம் காட்டிக் கொள்ளவில்லை.

 

சரி நண்பர்களே. இந்த நான்கு நாட்கள் உங்களுடன் விளையாடி இனிமையாகப் பொழுதைக் கழித்தேன். நாளை காலையே கலிங்கத்திற்குச் செல்லவிருக்கிறேன். அனைவரிடமும் விடைபெற்றுக் கொள்கிறேன்.” என்று ஆட்ட நண்பர்களிடம் சின்ஹரன் விடைபெற்றான். தோற்றாலும், வென்றாலும் எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் அவனை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

ஒரு ஆட்ட நண்பன் கேட்டான். “இனி எப்போது வருவீர்கள் நண்பரே?”

 

மூன்று மாதங்களாகி விடும் என்று நினைக்கிறேன். ஆனால் வந்தவுடன் கண்டிப்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பேன்.”

 

இடிச்சிரிப்பு சிரிக்கும் ஆட்ட நண்பன் சொன்னான். “கடைசி நாள் தானே. இன்னொரு விளையாட்டு விளையாடுங்கள் நண்பரே. கண்டிப்பாக வெல்வீர்கள். போகும் போது வெற்றியாளனாகப் போங்கள்

 

சின்ஹரன் புன்னகையுடன் சிரித்தான். “இல்லை நண்பரே. நான் ஏற்கெனவே உங்களிடம் தெரிவித்திருந்தபடி ஒரு நாளுக்கு ஒரு முறைக்கு மேல் சூதாடுவதில்லை என்று என் மனைவிக்கு வாக்குத் தந்திருக்கிறேன். அதை மீறுவதாக இல்லை

 

மனைவிக்குக் கொடுத்த வாக்கை இந்த அளவு சத்தியத்தோடு நிறைவேற்றும் ஒரு மனிதனை நான் இது வரைக்கும் பார்த்ததில்லை. உங்களை மனமாரப் பாராட்டுகிறேன் நண்பரே. உங்கள் மனைவியின் பெயரென்ன?”

 

இல்லாத மனைவியின் பெயரை இப்படி யாராவது கேட்பார்கள் என்று சின்ஹரன் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதோ ஒரு பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக வாயிற்கு வந்த பெயரை அவன் சொன்னான். “மைனிகா

 

உங்களைப் போன்ற ஒருவரைக் கணவனாக அடைவதற்கு மைனிகா நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். போய் வாருங்கள். மீண்டும் சந்திப்போம்

 

அனைவரிடமும் விடைபெறுவது போலவே நட்புடன் பத்ரசாலிடமும் சின்ஹரன் விடைபெற்றுக் கொண்டான். பத்ரசாலும் சின்ஹரன் முந்தைய நாள் எச்சரித்ததை நினைவில் கொண்டு புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தான். சின்ஹரன் மதுவருந்தும் பகுதிக்குச் சென்றவுடன் அவர்கள் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார்கள்.

 

மதுவருந்திக் கொண்டிருந்த வேளையில் சின்ஹரன் வெளிப்பார்வைக்கு அமைதியாகவே தோற்றமளித்தாலும் அவன் இதயத்தில் ஒரு கொந்தளிப்பே நிகழ்ந்து கொண்டிருந்ததுஏதோ ஒரு பெண்ணின் பெயரைச் சொல்ல வேண்டுமென்ற நிலை வந்த போது ஏனந்தப் பெயர் அவனையுமறியாமல் அவன் வாயிலிருந்து வந்தது? வேறு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றனவே? இன்னும் அவள் நினைவு அவன் இதய ஆழத்தில் இருக்கின்றது என்பதல்லவா இதன் பொருள். எத்தனையோ மாறி விட்ட போதும் இது மட்டும் அவன் வாழ்க்கையில் இன்னும் மாறாமல் இருப்பது அவனுக்கு அவன் மீதே கோபத்தை ஏற்படுத்தியது. மனிதனுடைய வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்களால் போகப் போக இதயம் கடினப்பட்டு விடுகின்றது என்றாலும் அதிலும் ஒரு பகுதி மென்மையாகவே தங்கி பழைய நினைவுகளில் வேதனைப்படுவதாக அமைந்து விடுகின்றது என நினைத்துக் கொண்டான்.

 

அலெக்ஸாண்டர் பாரதத்திலிருந்து வெளியேறிய சமயத்தில் சாணக்கியர் மைனிகாவின் சேவையை மிக உயர்த்திச் சொன்னார். எல்லோரும் இருக்கும் போது அதைப் பொதுவாகச் சொன்ன அவருக்கு அவனுக்கு மைனிகாவுடன் ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவம் பற்றி நன்றாகவே தெரியும். ஆனாலும் அவரும் சரி, அவனும் சரி அதுபற்றிப் பேசவில்லை. அவரைப் பொருத்த வரை அவருடைய பாரதத்தை ஒன்றிணைக்க உதவும் ஒவ்வொருவரும் மகத்தானவர்களே. அவர்களை ஆத்மார்த்தமாகப் பாராட்ட அவர் என்றும் தயங்கியதில்லை. ஆனால் அவனுக்கு அவளுடன் இருந்த பழைய கணக்கு தீர்க்கப்படாமலேயே பாக்கி இருந்தது. கோபம் இருந்தாலும் அவளை அவன் முழுவதுமாக வெறுத்தோ, மறந்தோ விடவில்லை என்பதற்கு சற்று முன் அவள் பெயரை அவனையறியாமல் அவன் சொன்னதே சான்று....

 

சற்று தள்ளி அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒற்றனுக்கு அவன் ஏதோ ஒரு வேதனையில் இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிந்தது. இரண்டு நாட்களாக  சேனாதிபதி பத்ரசாலுடன் மதுவருந்தியபடி அந்தப் புதிய வணிகன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்திருந்த அவனுக்கு அவர்கள் இன்றும் சேர்ந்து மதுவருந்திப் பேசிக் கொள்ளாமலிருந்தது அவன் சந்தேகப்பட்ட அளவுக்கு அவர்கள் நெருக்கத்தில் இல்லை என்ற திருப்தியை ஏற்படுத்தியது. இருவரும் சற்று முன்னும் நட்புடன் தான் விடைபெற்றார்கள் என்றாலும் மற்றவர்களுடன் தெரிந்த ஆட்ட நட்பையே பத்ரசாலுடனும் வணிகன் வெளிப்படுத்தியதையும் அவன் பார்த்திருந்தான். இப்போது முதல் ஆட்டம் முடிந்தவுடன் பத்ரசால் மதுவருந்த இவனுடன் வந்து சேர்ந்து கொள்கிறானா என்று பார்க்க அவன் காத்துக் கொண்டிருந்தான்.

 

ஆனால் பத்ரசால் இரண்டாவது ஆட்டத்தை விளையாட ஆரம்பித்து விட்டான். சின்ஹரன் அந்தப் பக்கமே திரும்பியும் பார்க்காமல் எழுந்து வெளியேறுவதைக் கண்ட ஒற்றன் எதற்கும் முன்னெச்சரிக்கையாய் அவனைப் பின் தொடரத் தீர்மானித்தான்.  பின் தொடர்ந்து அவன் தங்கியிருந்த விடுதியினுள்ளே நுழையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அவன் தன் பழைய சந்தேகம் அர்த்தமற்றது என்று நினைத்துக் கொண்டான். இன்றும் அந்த வணிகனும் பத்ரசாலும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அந்தச் செய்தியை ராக்ஷசர் காதில் போட்டு விட வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்ததற்கு அவசியமில்லாமல் போய் விட்டது. இருந்த போதிலும் ஆட்ட நண்பர்களிடம் அறிவித்தபடி நாளை காலையில் பாடலிபுத்திரத்தை விட்டு இந்தப் புதிய வணிகன் வெளியேறுகிறானா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது என்று எண்ணிக் கொண்டான்.  இரண்டு நாளாக அவன் காலையில் விடுதியை விட்டு வெளியே வரும் நேரம் அவனுக்குத் தெரியும் என்பதால் அதே சமயத்தில் நாளை போய் கண்காணிப்பது என்று தீர்மானித்தான்.

 

ஆனால் மறுநாள் விடிவெள்ளி கீழ்வானில் முளைக்கும் போதே சின்ஹரன் ஒரு பழுத்த துறவியாக வேடமிட்டு விடுதியிலிருந்து வெளிப்படுவான் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சின்ஹரன் பார்ப்பவர்கள் கைகூப்பி வணங்கும்படியானதொரு ஆன்மிகத் தோற்றத்தில் இருந்தான். பூசாரி வருவதற்கு முன்பே அவன் மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்றுக் காத்திருந்தான்.


அரசி தாரிணியும், இளவரசர் சுதானுவும் அன்று அதிகாலையிலேயே வழிபட  வருவார்கள் என்று முன்கூட்டியே பூசாரிக்குத் தெரிவிக்கப் பட்டிருந்ததால் சீக்கிரமாகவே வந்து சேர்ந்திருந்த பூசாரி சின்ஹரனைப் பார்த்ததும் யாரோ ஒரு மகான் என்று நினைத்து பணிவுடன் வணங்கி ஆசிகள் பெற்று பூஜை வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

 

சுதானுவும், தாரிணியும் சிறிது நேரத்தில் ரதத்தில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கோயிலுக்குள் நுழைந்த போது கண்களை மூடி மோனநிலையில் ஆன்மிகப் பரவசத்தில் இருப்பது போல் தெரிந்த துறவியை வியப்புடன் பார்த்தார்கள்.

 

தாரிணி மெல்லிய  குரலில் அந்தத் துறவியைச் சுட்டிக் காட்டியாரதுஎன்று பூசாரியிடம் கேட்டாள்.

 

பூசாரி தாழ்ந்த குரலில் சொன்னார். “நானும் இன்று தான் பார்க்கிறேன். பெரிய மகான் போல் தெரிகிறது. யாத்திரை போகும் வழியில் இங்கே வழிபட வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.”

 

பூசாரி மணி அடிக்கும் சத்தம் கேட்டு சின்ஹரன் மெல்லக் கண் திறந்து கஷ்டப்பட்டு எழுந்து மகாவிஷ்ணுவை வணங்கி நின்றான். அவன் அரசியையோ, இளவரசனையோ கண்டு கொள்ளவில்லை. அதுவே அவர் பெரிய மகானாய் தான் இருக்க வேண்டும் என்கிற அபிப்பிராயத்தை தாரிணியிடம் ஏற்படுத்தி விட்டது.

 

தாரிணி இறைவனை வணங்கி விட்டு அந்தத் துறவியையும் பயபக்தியுடன் வணங்கினாள். சுதானு வணங்குவதா வேண்டாமா என்ற யோசனையுடன் நிற்க தாரிணி மகனைப் பார்த்து வணங்கு என்று கண்ஜாடை செய்தாள். சுதானு வேறு வழியில்லாமல் வணங்கினான்.

 

சின்ஹரன் கரகரத்த வயோதிகக் குரலில் சுதானுவுக்கு ஆசி வழங்கினான். “ஒரு வேண்டுதல் வேண்டி மகாவிஷ்ணு சன்னிதிக்கு முதல் சனிக்கிழமை வந்திருக்கிறாய். அதற்கு இறைவன் அனுக்கிரகம் இருப்பதாய் தெரிகிறது. ஆனால் தொடர்ந்து இனி எட்டு சனிக்கிழமைகளும் நீ வர மறந்து விடாதே

 

தாரிணியும் சுதானுவும் திகைத்தார்கள். திவ்யசக்தி இருக்கும் ஒரு மகானுக்கு மட்டுமே அல்லவா இதைச் சொல்ல முடியும்! இருவரும் பணிவின் வடிவமாய் கைகூப்பி நின்றார்கள்.

 

வெளியே எதிரிகள் முற்றுகையிட்டிருக்கும் காலத்தில் உள்ளே உனக்குள்ள தடையை நீ நீக்கி விட்டால் உன் ஆசை நிறைவேறுவது உறுதி. அது வரை பொறுத்திருஎன்று சின்ஹரன் அமைதியாகச் சொன்னான்.

 

அவர்கள் இருவரும் அவன் வார்த்தைகள் விளங்காமல் குழப்பத்துடன் பார்த்து அவனிடம் விளக்கம் கேட்கும் முன் அவன் வெளியே வந்து விட்டான். தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திகைப்புடன் சிலையாக நின்று மீண்டு வெளியே வந்து பார்ப்பதற்குள் சின்ஹரன் மாயமாகியிருந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்





  

Monday, October 14, 2024

யோகி 71

பாண்டியனின் கேள்விக்கு என்ன பதில் வருகிறது என்பதை அறிந்து கொள்ள பிரம்மானந்தாவும் ஆர்வமாக இருந்தார். தற்காத்துக் கொள்வது மிக முக்கியம் என்றாலும், எதிரிகளை அடையாளம் கண்டு கொள்வது அதற்கு இணையான முக்கியம் தான். எதிரிகள் உருவாகையிலேயே கண்டுபிடித்து அழித்து விடாமல் இருப்பது ஆபத்து என்பதை அவரும் அறிவார். இது வரை அவருக்கு எதிராக யாரும் எதையும் செய்து ஜெயித்ததில்லை. எதிராக இயங்குகிறார்கள் என்று தெரிந்தவுடனேயே செயல்பட்டு வந்ததால் தான் இத்தனை தூரம் சாதிக்க முடிந்திருக்கிறது. இன்று முளையிலேயே வேரோடு கிள்ளி எறியா விட்டால், நாளை விருட்சத்தோடு போராட வேண்டியிருக்கும். எந்தப் பிரச்சினையையும், அதிகப்படுத்திக் கொண்டு, பின் அதைத் தீர்க்கப் போராடுவது அறிவீனம்

 

தேவானந்தகிரி பாண்டியனிடம் சொன்னார். “விசேஷ ப்ரஷ்ன பூஜை செய்து முடிச்சதுக்கப்பறம் தான் எதையும் சொல்ல முடியும்.  அந்தப் பூஜையை சந்த்யா காலத்துல ஆரம்பிக்கணும். நீங்க ரெண்டு பேரும் முகம், கை, கால் அலம்பிட்டு வந்து உட்கார்ந்தா பூஜை முடியற வரைக்கும் அந்த இடத்தை விட்டு எழுந்து போகக் கூடாது. அந்த நேரத்துல எதுவும் பேசக்கூடாது.  செல்போனை எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு தூர வெச்சுட்டு வரணும். பூஜை நடக்கறப்ப நீங்க எழுந்திருச்சாலோ, பேசினாலோ பூஜையைத் தொடர்ந்து செய்ய முடியாது. அடுத்த சந்த்யா காலத்துல, அதாவது நாளைக்கு அதிகாலைல தான் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதுக்குள்ளே துஷ்டசக்தியோட பிடி உங்க மேலே கூடுதலாய் இறுகிடும்கிறதால அதைத் தவிர்க்கறது உத்தமம். பூஜை சமயத்துல உங்க ரெண்டு பேரையும், யோகிஜியையும் தவிர யாரும் அந்த இடத்துல இருக்கக்கூடாது…”

 

பாண்டியனும், சுகுமாரனும் தலையசைத்தார்கள். பாண்டியனுக்கு தேவானந்தகிரி வளவளவென்று பேசுபவராக இல்லாமல் விஷயத்தை மட்டும் தெளிவாகப் பேசும் விதம் மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட மனிதர்கள் காரியத்தையும் சாதித்துக் கொடுத்தால் இவர்களுக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் தரலாம்

 

பிரம்மானந்தா கேட்டார். “பூஜையை எங்கே நடத்தலாம்ஜி?”

 

தேவானந்தகிரி சொன்னார். “பதினாறடிக்கு மேலே நீளமும், அகலமும் இருக்கிற இடம் உத்தமம்.”

 

தேவானந்தகிரி தங்குவதற்கு விருந்தினர் தங்கும் கட்டிடத்தில் ஒரு பெரிய அறையை ஒதுக்கித் தந்து விட்டு பாண்டியன் மறுபடியும் பிரம்மானந்தாவிடம் வந்தார். அவர் வரும் போது சுகுமாரன் எந்த மதக்கடவுளும் இந்த ஆவி தொந்தரவிலிருந்து தன்னைக் காப்பாற்றவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

 

பிரம்மானந்தா கேட்டார். “நீண்ட காலம் கும்பிடறவனையே கடவுள் சோதிச்சு, பிறகு தான் காப்பாத்தறார். நீங்களோ கடவுளை இதுவரைக்கும் நம்பாதவர். பயந்து போய் இப்ப தான் அவரைத் தொடர்பு கொள்றீங்க. அதுவும் முழு நம்பிக்கை வந்துன்னு சொல்ல முடியாது. அப்படி இருக்கறப்ப கடவுள் உங்களைக் காப்பாத்துவார்னு எப்படி எதிர்பார்க்கறீங்க டாக்டர்?”

 

சுகுமாரன் திருதிருவென்று விழிப்பதைப் பார்க்க பாண்டியனுக்கு வேடிக்கையாக இருந்தது. இப்போது இடைமறிக்கா விட்டால் பிரம்மானந்தா இனி தொடர்ந்து ஒரு பெரிய பிரசங்கம் செய்து விடுவாரோ என்று பாண்டியன் பயப்பட்டார். இல்லாத கடவுளைப் பற்றிப் பேசி நேரத்தை விரயம் செய்வதில் பாண்டியனுக்கு விருப்பமிருக்கவில்லை. இருப்பதைப் பேசி முடிவெடுக்க எத்தனையோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன

 

சோபாவில் அமர்ந்தபடி பாண்டியன் பிரம்மானந்தாவிடம் சொன்னார். “யோகிஜி. இந்த மந்திரவாதி கிட்ட ஏதோ ஒரு சக்தி இருக்குங்கறது நிச்சயம். பிரச்சினை எங்க ரெண்டு பேருக்கும் தான்னு இவர் கண்டுபிடிச்ச மாதிரி, இதையெல்லாம் செஞ்சது யாருன்னும் கண்டுபிடிச்சு, இதைத் தீர்க்கவும் இவரால முடிஞ்சா நல்லாயிருக்கும்

 

பிரம்மானந்தா சொன்னார். “இவர் அதைக் கண்டுபிடிச்சு, பிரச்சினையைத் தீர்த்துடுவார்னு தான் நான் நினைக்கிறேன். இவரைப் பத்தி என் கிட்ட சொன்னவங்க அனுபவம் அப்படி தான் இருக்கு. ஆவின்னா அதைப் போக வைக்கிற வழி என்னங்கறதையும் தெரிஞ்சு அதைச் செய்யக்கூடியவர்ங்கறாங்க. அதே மாதிரி செய்வினை, சூனியம் மாதிரின்னா, யார், யார் மூலம், எப்படிச் செஞ்சிருக்காங்கன்னும் சொல்லி அதுல இருந்து தற்காப்புக்கும் வழி செஞ்சு தர்றாராம். திரும்ப அவங்க மேலயே அதை ஏவி விடற வேலையிலயும் இவர் கெட்டிக்காரர்னு சொல்றாங்கஅதுக்கு ஒவ்வொன்னுக்கும் தனியாய் பெரிய தொகை வாங்கறாராம். ஆனால் பிரச்சினையை முடிச்சுக் கொடுக்கறார்ங்கறாங்க.”

 

அந்தத் தகவல் பாண்டியனுக்குப் பரம திருப்தி அளித்தது. அவர் முன்பே நினைத்தது போல், காரியம் நடக்கும் என்றால் பணம் எத்தனை தந்தாலும் அது நஷ்டமல்ல. அது கூலி தான்.

 

யோகாலயத்தில் சின்னதும் பெரியதுமாக மூன்று ஹால்கள் இருந்தன. அதில் நாற்பது பேர் அமரக்கூடிய சிறிய ஹால் ஒன்றை தேவானந்தகிரியின் விசேஷ ப்ரஷ்ன பூஜைக்கு பாண்டியன் தேர்வு செய்திருந்தார். தேவானந்தகிரி சொன்னது போல் பூஜை சமயத்தில் அங்கு அவருடன் பாண்டியன், சுகுமாரன் மற்றும் பிரம்மானந்தா மட்டுமே இருந்தார்கள். நீல நிறப் பட்டுக் கச்சம் கட்டி வந்த தேவானந்தகிரி இருட்ட ஆரம்பிக்கும் சந்தியா காலம் வரை பிரம்மானந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 

பிரம்மானந்தா அவரிடம் பேச்சுவாக்கில் சொன்னார். ”இதை எல்லாம் ஒரு காலத்தில் நானும் ஆர்வமாய் கத்துகிட்டேன். ஆனால் யோக மார்க்கத்தில் போனவுடன் நிறுத்திட்டேன். உண்மையைச் சொன்னால். முன்பு செய்ததில் நிறைய இப்போது மறந்தும் போய் விட்டதுஎதுவுமே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மட்டும் தானே சரியாக ஞாபகம் இருக்கும்?.”

 

தேவானந்தகிரி சொன்னார். “வாஸ்தவம். உங்கள் குரு யார்?”

 

பிரம்மானந்தா கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாய் கற்பனை செய்து சொன்னார். “இமயமலையில் இருக்கிற ஒரு சாது. அப்பவே அவருக்கு வயது எழுபதுக்கு மேல இருக்கும். ஆனால் யாரும் முப்பதுக்கு மேல் அவர் வயசைச் சொல்ல மாட்டாங்கஅப்படி இருப்பார்.”

 

அவருடைய கற்பனையை தேவானந்தகிரி கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. தேவானந்தகிரி சொன்னார். “அவங்கெல்லாம் தவ வாழ்க்கை வாழ்ந்தவங்க. இப்ப அவங்களை மாதிரி ஆட்களை பார்க்கிறது அபூர்வம்... என்னோட குரு பாலக்காட்டு சங்கர நம்பூதிரி. பூஜைக்கு முந்தின நாள் சாயங்காலத்திலிருந்தே விரதமிருப்பார். பூஜை முடியற வரைக்கும் பட்டினி தான். 84 வயசுல இறந்தார். சாகற வரைக்கும் நோய் நொடின்னு அவர் ஆஸ்பத்திரிக்குப் போனவரல்ல...”

. 

தேவானந்தகிரி சரியான முகூர்த்த காலத்தில் தன்னுடைய பையிலிருந்து பட்டுத் துணியால் கட்டியிருந்த ஒரு வெள்ளிப் பேழையை வெளியே எடுத்து ஒரு விளக்கின் அருகே வைத்தார். அந்த வெள்ளிப் பேழை மூடப்பட்டு இருந்ததால் அதனுள்ளே என்ன இருக்கிறது என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. தேவானந்தகிரி பாண்டியனையும், சுகுமாரனையும் இரண்டு மரப்பலகைகளில் அமர வைத்து, விசேஷ ப்ரஷ்ன பூஜையை ஆரம்பித்தார். அதன் பின் அவர் கவனம் சிறிதும் சிதறவில்லை.

 

ஹாலின் ஒரு மூலையில் ஒரு மர நாற்காலியில் பிரம்மானந்தா அமர்ந்திருந்தார். அவர் இது போன்ற பூஜையை இது வரை பார்த்ததில்லை என்பதால் தேவானந்தகிரி எப்படி இந்தப் பூஜையைச் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள மிக ஆவலாய் இருந்தார். இனி எப்போதாவது இது சம்பந்தமாய் பேச வேண்டிய சந்தர்ப்பம் வருமானால் இந்த வழிமுறைகளைச் சொல்லி அவர் சோபிக்கலாம். ஆனால் அவர் தன் ஆவலை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக ஒரு ஆசிரியர் தன் மாணவனுக்குக் கற்றுத் தந்த பூஜையை சரியாகச் செய்கிறானா என்று மேற்பார்வை பார்க்க அமர்ந்திருக்கும் பாவனையைத் தான் வெளிப்படுத்தினார். அவர் உரக்கச் சொன்ன மந்திரங்கள் சிலவற்றை, தானும் அறிந்தவர் போல், பிரம்மானந்தா முணுமுணுக்க ஆரம்பித்தார்.

 

தேவானந்தகிரி மந்திர உச்சாடனங்களைச் செய்தபடியே பாண்டியனையும், சுகுமாரனையும் கூர்ந்து பார்த்து தரையில் சில சின்னங்களை வரைய ஆரம்பித்தார். சில சமயங்களில் அவர்களுடைய உடல்களைத் தாண்டியும் எதையோ அவர் கூர்ந்து பார்த்து வரைந்தார். பரசுராமன் பூஜைகள் செய்த போது வரைந்த சின்னங்கள், தேவானந்தகிரியாலும் இருவரையும் பார்த்து பார்த்து வரையப்பட்டன. இருவருக்கும் பொதுவாக இருந்த சின்னங்களையும், யந்திரங்களையும் ஓரிடத்தில் வரைந்தவர், தனி சின்னங்கள், யந்திரங்களை அதன் இரு பக்கங்களிலும் வரைந்தார். அவர் அனைத்தையும் வரைந்து முடிக்கையில் மணி எட்டாகி விட்டது.

 

பின் சிறிது நேரம் அந்த சின்னங்களையும், யந்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவர் கண்களை மூடிக் கொண்டார். நீண்ட நேரம் அவர் கண்களைத் திறக்காததைப் பார்த்து அவர் உறங்கி விட்டாரோ என்ற சந்தேகம் சுகுமாரனுக்கு வந்து விட்டது.

 

பின் தேவானந்தகிரி கண்களை மூடியபடியே சொல்ல ஆரம்பித்தார். “மயான காளி சிலை தெரியுது. சிரிச்சுகிட்டிருக்கற ஒரு பொண்ணோட படம் தெரியுது. காவித் துணி தெரியுது…. காவித் துணி தீப்பற்றி எரியறது தெரியுது…”


(தொடரும்)

என்.கணேசன்