சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, September 30, 2023

என் இரு ஆன்மீக நூல்கள்-மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மீகம்- மறுவெளியிடு!

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நான் எழுதி தினத்தந்தியில் தொடராகவும், நூலாகவும் வெளிவந்த இரண்டு ஆன்மீக நூல்களின் மறுபதிப்புகள்  இன்று வெளியாகியுள்ளன.

முதலாவது நூல் மகாசக்தி மனிதர்கள். இதன் மூன்றாம் பதிப்பை இன்று என்.கணேசன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.


இரண்டாவது நூல் அமானுஷ்ய ஆன்மீகம். இதன் இரண்டாம் பதிப்பை இன்று என்.கணேசன் புகஸ் வெளியிட்டுள்ளது. 


புத்தகங்களை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

இந்த நூல்கள் உட்பட என்னுடைய எல்லா நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/l/27943762031?ie=UTF8&marketplaceID=A21TJRUUN4KGV&me=AU2MIH1I41Z2K

இப்படி தொடர்ந்து புதிய நூல்களும், பழைய நூல்களின் அடுத்தடுத்த பதிப்புகளும் வெளியாகிக் கொண்டிருப்பதற்கு வாசகர்கள் காட்டி வரும் பேராதரவே காரணம். நன்றி.


அன்புடன்

என்.கணேசன்

Thursday, September 28, 2023

சாணக்கியன் 76

 

பிலிப் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண்டு வீரர்களை அழைத்து கலவரப்பகுதியில் நடந்தது என்ன என்று புதிதாகக் கேட்பவன் போல் கேட்டான்மனதால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த யவனப்படைத்தலைவன் சொன்னதில் சில விஷயங்கள் விடுபட்டிருக்கக்கூடும். சில விஷயங்கள் அதிகப்படுத்தி சொல்லியிருக்கக்கூடும். எனவே என்ன நடந்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள நினைத்து பிலிப் அந்த இரு வீரர்கள் சொன்னதைக் கூர்ந்து கவனித்துக் கேட்டான்.  அவர்களும் யவனப்படைத் தலைவன் சொன்ன நிகழ்வுகளையே சொன்னார்கள் என்றாலும் அவர்கள் வீரசேனன் மீது சந்தேகம் கொள்ளவில்லை. சிறுவர்களைத் தாக்குவதற்கு அவன் உடன்படாதது கலவரக்காரர்களின் நட்பினால் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காட்டுக்குள்ளிருந்து வந்த படையினரிடம் வீரமாக அவன் போரிட்டதையும், அவர்களைத் துரத்திக் கொண்டு அவன் போனதையும் சுட்டிக் காட்டினார்கள்.

 

பிலிப் காட்டுக்குள்ளிருந்து வந்த வீரர்களைப் பற்றிய விவரங்களைக் கூடுதலாகக் கேட்டறிந்தான்.   இரு வீரர்களும் அவர்கள் வெகுசிறப்பாகப் போர்ப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தவர்களாகத் தெரிகிறார்கள் என்றும், துணிச்சலுடனும், சீற்றத்துடனும் போரிட்டார்கள் என்றும் சொன்னார்கள். முக்கியமாக அவர்கள் தலைவனாக வந்த இளைஞன் அலட்டிக் கொள்ளாமல் சிறப்பாகப் போராடினான் என்றும் அவன் ஒவ்வொரு முறை கை ஓங்கிய போதும் தங்கள் ஆட்கள் யாராவது வீழ்ந்தார்கள் அல்லது காயப்பட்டார்கள் என்றும் சொன்னார்கள்.

 

அவர்களைத் தொடர்ந்து வீரசேனனும் மற்ற சில வீரர்களும் போனதாகச் சொல்கிறீர்கள். அவர்கள் யாருமே திரும்பி வரவில்லையா , அல்லது வீரசேனன் மற்றும் திரும்பி வரவில்லையா?” என்று பிலிப் கேட்டான்.

 

காட்டுக்குள் சிறிது தொலைவு போன பின் தொடர முடியாமல் அவர்கள் திரும்பி விட்டார்கள். ஆனால் வீரசேனன் அவர்களுடன் அதே வேகத்தில் பின் தொடர்ந்தபடியால் உள்ளே போய் விட்டார். அவர் பின் திரும்பவில்லை

 

வீரசேனனின் சகோதரன் சூரசேனன் என்ன சொல்கிறான்?” பிலிப் சந்தேகத்துடன் கேட்டான்.

 

அவர் தன் சகோதரன் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று அஞ்சுகிறார். அவர் காட்டுக்குள் சென்று சகோதரனைக் காப்பற்றி வருவதற்கு அனுமதி கேட்டதற்கு சேனாதிபதி மறுத்ததால் அவர் செல்லவில்லை…”

 

யவன சேனாதிபதி அதை முன்பே பிலிப்பிடம் தெரிவித்திருந்தான். அவன் சூரசேனன் காட்டுக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்ததை பிலிப்பால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்றால் ஒருவன் போய் திரும்பி வராமல் இன்னொருவன் போவதற்கும் அனுமதி தருவது சதிகாரர்கள் இருவரையுமே தப்பிக்க விடும் முட்டாள்தனமாகி விடும். ஆனால் மற்ற ஒரு படை பின் தொடர்ந்து போய் ஒட்டு மொத்த சதிக்கூட்டத்தையும் பிடிக்க முயற்சி செய்திருக்கலாமே என்று பிலிப் யவன சேனாதிபதியிடம் கேட்ட போது அவன் சொன்னான். “ஒருவேளை அடர்ந்த காட்டுக்குள்ளே நம்மை வரவழைப்பதற்காக அவர்கள் செய்திருக்கும் முயற்சியோ அது என்ற சந்தேகமும் எனக்கு வந்தது சத்ரப். ஒரு படை காட்டுக்குள்ளே போன பின் வேறெதாவது ஒரு பகுதியிலிருந்து அவர்களது இன்னொரு படை மாளவத்திற்குள் புகுந்து கலவரம் மறுபடி பூதாகரமாக வெடித்தால் என்ன செய்வது என்றும் யோசித்தேன்.”

 

அதில் பிலிப் தவறு காணவில்லை. அதற்கும் வாய்ப்பிருக்கிறது. அவர்கள் திட்டம் தெரியாத வரை எல்லா யூகங்களையும், வழிகளையும் யோசித்தே முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. பிலிப் பெருமூச்சு விட்டான். இந்த விஷயத்தில் கலவரக்காரர்களுக்குக் குழப்பமில்லை. திட்டமிட்டு அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் செய்வதைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதிரடியாக நாமே ஏதாவது செய்யலாம் என்றாலோ மற்ற பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறியாமலிருப்பது தடுக்கிறது. எல்லாம் அறிந்து கொள்ள சில நாட்களாவது ஆகும். அது வரை கலவரக்காரர்கள் சும்மா இருப்பார்கள் என்றும் தோன்றவில்லை. வீரசேனன் திரும்பி வராதது பிலிப் மனதில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது. அவன் கலவரக்காரர்களுடன்  போரிட்டு இறந்திருந்தால் பிரச்சினை இல்லை. இல்லா விட்டால்…..?

 

வீரசேனனுக்குக் கலவரக்காரர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காட்டுக்குள்ளே அவர்களிடம் அவன் பிடிபட்டும் அவனை அவர்கள் வெட்டி வீழ்த்தவில்லை. கட்டிப் போடவில்லை. அவனுடைய ஆயுதங்களைப் பறித்து, அவனுடைய காயங்களுக்கு மருந்திட்டு, ஓரிடத்தில் அமர வைத்து உணவும் தண்ணீரும் தந்து உபசரித்து விருந்தாளியை நடத்துவது போல் நடத்தினார்கள். வீரசேனன் உணவை மறுத்து விட்டு தண்ணீரை மட்டும் அருந்தினான். அந்த வீரர்களின் தலைவன் சிலரால் சந்திரகுப்தா என்றழைக்கப்பட்டான். அழைத்தவர்கள் அவன் நண்பர்கள் என்று தெரிந்தது. அவர்கள் எல்லோருமே அங்கிருந்த ஒரு அந்தணரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வதைக் கவனித்த வீரசேனன் அவர் தான் தட்சசீலத்து ஆசிரியராக இருக்க வேண்டும் என்று அனுமானித்தான். எல்லாக் கலவரங்களுக்கும் முக்கிய காரணம் அவர் தான் என்று தாழ்ந்த குரலில் யவன அதிகாரிகளும், வீரர்களும் பேசிக் கொள்வதை அவன் கேட்டிருக்கிறான். அவர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

 

சந்திரகுப்தன் வீரசேனனின் வலது காலிலும் இடது தோளிலும் ஏற்பட்டிருந்த காயங்களை ஆராய்ந்து வலி அதிகம் இருக்கிறதா என்று அக்கறையுடன் விசாரித்தான். ஒரு நண்பனின் விசாரிப்பாக அது தெரிந்தது. வீரசேனன் இல்லை என்றான். ஆனாலும் அவன் சொல்வதற்கு எதிர்மாறாக வலி அதிகமாகத் தான் இருக்கிறது என்று அவன் முகபாவனையிலிருந்து சந்திரகுப்தன் புரிந்து கொண்டது வீரசேனனுக்கும் தெரிந்தது.

 

வீரசேனன் இறுகிய முகத்தோடு சொன்னான். “எனக்கு உங்கள் இரக்கம் தேவை இல்லை.”  

 

திடீரென்று அந்த அந்தணர் வீரசேனனைக் கேட்டார். “உன் பெயர் என்ன வீரனே?”

 

வீரசேனன்     

 

ஏன் எங்கள் இரக்கம் உனக்குத் தேவையில்லை என்கிறாய் வீரசேனா?”

 

எதிரிகளின் இரக்கத்தை எந்த வீரனும் விரும்ப மாட்டான்

 

நாங்கள் உன் எதிரிகள் என்று யார் சொன்னது?”

 

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று வீரசேனனுக்குத் தெரியவில்லை. மௌனமாக இருந்தான்.

 

ஆனால் அவர் தொடர்ந்து அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாங்கள் எதிரிகள் என்றால் யவனர்கள் உனக்கு நண்பர்களா? ஆமாம் என்றால் அவர்கள் உனக்கு எப்போதிருந்து நண்பர்கள் ஆனார்கள்?”

 

வீரசேனன் சொன்னான். “அவர்கள் என் நண்பர்கள் அல்ல. எஜமானர்கள். அவர்களின் எதிரிகள் அவர்களிடம் பணிபுரியும் எனக்கும் எதிரிகளே

 

வீரசேனனே, யவனர்கள் மாளவத்தை ஆக்கிரமிக்கப் போர் தொடுத்த போது நீ மாளவ சேனையிலிருந்து யவனர்களுடன் போரிட்டவன் தானே? இல்லை, அப்போதும் அவர்கள் எதிரிகளாக இல்லாமல் உன் நண்பர்களாக இருந்தார்களா?”

 

அவரது கேள்விகள் இயல்பாய் வந்தன. அவர் எதையும் யோசித்து கேட்பது போல் தெரியவில்லை. அவன் தர்மசங்கடத்துடன் சொன்னான். ”முன்பு எதிரிகள் தான். நாங்கள் தோற்று சரணடைந்து அவர்களிடம் பணி புரிய சம்மதித்த பிறகு தான் எஜமானர்கள்

 

அவர்கள் அந்தப் போரில் பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் கொன்று குவித்தார்களே அது உனக்குச் சம்மதமானதா?”

 

அந்தக் கேள்வி அவனுக்குத் தர்மசங்கடத்தைத் தந்தது. “சம்மதமில்லை தான். ஆனால் அவர்கள் வென்ற பின் அவர்கள் செயல்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை, தோற்ற நான் எப்படித் தீர்மானிக்க முடியும்? இப்போது அவர்கள் ஆட்சியாளர்களும் ஆகி விட்டார்கள்…”

 

இப்போது உன் குடும்பம் மாளவத்தில் இருக்கிறதா? வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?"


"என் தாய், என் மனைவி இரண்டு பிள்ளைகள், என் சகோதரன், அவன் மனைவி, அவர்கள் மகள்

 

சாணக்கியர் கேட்டார். “அவர்களில் யாராவது ஒருவரைப் பிடித்து உன் யவன ஆட்சியாளர்கள் துன்புறுத்தினால் அவர்கள் செயல்களில் எதையும் நீ தீர்மானிக்க முடியாது என்று சும்மா இருந்து விடுவாயா?”

 

வீரசேனன் தர்மசங்கடத்துடன் கண்களை மூடினான். அப்படி நினைத்துப் பார்க்கையிலேயே இதயம் சுருக்கென்றது. அவருக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.  இப்போதே கூட அவன் திரும்பிப் போகாததால் அவனை யவனர்கள் சந்தேகப்பட்டிருக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த யவனைப் படைத்தலைவன் புரட்சிக்கார சிறுவர்களைத் தண்டிக்க முனைந்த போது அவன் தடுத்தது அவர்கள் சந்தேகத்திற்குக் காரணமாகலாம்.  அந்தச் சந்தேகத்தின் காரணமாக அவன் தம்பி சூரசேனனை அவர்கள் துன்புறுத்தி விசாரிக்கும் வாய்ப்பிருக்கிறது.  அவன் மனதில் கவலை புகுந்தது முகத்திலும் தெரிந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, September 25, 2023

யோகி 15

டந்ததையெல்லாம் சொல்லி முடித்து விட்டு, சேதுமாதவன் கைகூப்பியபடி சொன்னார். “எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் நீ செய்யணும் அருணா. என் பேத்தியையும் அந்த டாக்டரையும் கொலை செஞ்ச கொலைகாரங்களுக்குக் கண்டிப்பா தண்டனை கிடைக்கணும். என் மகனோட கடைசி ஆசையை நீ எனக்காக நிறைவேற்றித் தரணும்... யோகி பிரம்மானந்தா உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர், நெருக்கமானவர்னு எல்லாம் பத்திரிக்கைகள்ல படிச்சிருக்கேன். சம்பந்தப்பட்டவர், வேண்டியவர்ங்கறதாலேயே இதுல நடவடிக்கை எடுக்க உனக்கு கஷ்டமாய் இருக்கலாம். ஆனாலும் எனக்கு உன்னை விட்டா அதிகார வட்டத்துல வேற யாரையும் தெரியாது. வேற யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியும்னும் எனக்கு தோணல...”

 

அருணாச்சலம் தன் நண்பனின் கூப்பிய கைகளை விலக்கியபடி அமைதியாகச் சொன்னார். “என்னை மாதிரி உயர்ந்த பதவில இருக்கறவங்களுக்கு எல்லாரும் நெருக்கமானவங்க தான். எல்லாரும் வேண்டப்பட்டவங்க தான். ஆனாலும் அருணாச்சலம்கிற தனிமனிதனுக்கு சேதுமாதவன்கிற நண்பன் அளவுக்கு நெருக்கமானவங்களும், வேண்டியவர்களும் குறைவு. அதனால என்னால என்ன முடியுமோ அதைக் கண்டிப்பா செய்யறேன் சேது...”

 

சேதுமாதவன் கண்களிலிருந்து கண்ணீர் மடைதிறந்த வெள்ளம் போல் கிளம்பியது. பேச வார்த்தைகள் கிடைக்காமல் அழுத நண்பனைப் பார்க்கையில் அருணாச்சலத்துக்கும் கண்கள் கலங்கின.

 

அருணாச்சலம் கேட்டார். “கிருஷ்ணா கிட்ட அந்த டாக்டர் சொன்னதைப் பத்தியோ, அந்த ஆளும் இறந்ததைப் பத்தியோ யார் கிட்டயாவது நீங்க சொல்லியிருக்கீங்களா? முக்கியமா மீடியால யார் கிட்டயாவது அது பற்றிப் பேசியிருக்கீங்களா?”

 

என்னோட நெருங்கிய நண்பர்கள் ரெண்டு பேரைத்தவிர நாங்க யார்கிட்டயும் பேசலை... முந்தைய அனுபவங்க எங்க வாயை அடைச்சிடுச்சு. யார் கிட்ட சொல்லியும் எந்தப் பிரயோஜனமும் இல்லங்கறது புரிஞ்சு போனதால யார் கிட்டயும் அது பத்தி எதுவும் சொல்லலை.”

 

நல்லது. இப்ப நம்ம முன்னாடி ரெண்டு வழிகள் இருக்கு சேது. ஒன்னு சட்டபூர்வமாய் நீ புகார் தந்து நான் விசாரணைக்கு ஏற்பாடு செய்யலாம். ஆனால் அது நீ முதல்லயே புரிஞ்சுகிட்ட மாதிரி பலருக்கும் மெல்ல அவல் கிடைச்ச மாதிரி தான் ஆகும். பின்ன, யோகாலயம் அகில இந்திய அளவுல பிரபலமான ஒரு அமைப்பு. பிரம்மானந்தாவும் சாதாரணமான ஆள் அல்ல. அவங்க கிட்ட பணபலமும் நிறையவே இருக்கு. சட்டத்துல இருக்கற ஓட்டைகளை அவங்க அனாயாசமாய் பயன்படுத்திக்குவாங்க. நீ அவங்க பேரைக் கெடுக்கறதுக்காகவே உள்நோக்கத்துல புகார் செய்யறதா உன் மேலேயே வழக்கும் போட்டு உன்னை கோர்ட்டுக்கு பல தடவை இழுத்தடிச்சு உன்னை அலைக்கழிக்கவும் அவங்களால முடியும். அதனால அந்த வழி நமக்கு வேண்டாம். இன்னொரு வழி உண்மையில் என்ன நடந்தது, ஏன் நடந்தது, யார் குற்றவாளிகள்னு நாம மறைமுகமாய் விசாரிச்சு தெரிஞ்சுக்கறது. அதை முதல்ல கண்டுபிடிப்போம். பிறகு அதை வெச்சு என்ன செய்ய முடியும்னு யோசிப்போம். இந்த இரண்டாவது வழி தான் நமக்குப் பிரச்சினை இல்லாதது. அதற்கு நான் ஏற்பாடு செய்யறேன்

 

சேதுமாதவன் நன்றியுணர்வோடு கண்கலங்கியபடி சொன்னார். “அது போதும் அருணா. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.”

 

அருணாச்சலம் நெகிழ்ச்சியுடன் சொன்னார். “நண்பர்களுக்குள்ளே நன்றிங்கற வார்த்தையே அவசியமில்லாதது சேது. எனக்கு கணக்கு சொல்லித் தர நீ வருஷக்கணக்குல பட்ட பாட்டையெல்லாம் யோசிச்சுப் பார்த்தா நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அதனால தான் நான் நன்றி சொன்னதேயில்லை..”

 

சேதுமாதவன் மீண்டும் கண்கலங்கினார். இனி என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதைத் தெரிவித்த பின், இறுக்கமான சூழலின் கனத்தைக் குறைக்க, அருணாச்சலத்துக்கு நண்பனைச் சீண்டத் தோன்றியது. 

 

எனக்கு ஒரு சந்தேகம் சேது. இந்த வேண்டுகோள் இல்லாமலிருந்தால் நீ கடைசி வரைக்கும் என்னைப் பார்க்கவே வந்திருக்க மாட்டாய். இல்லையா?”

 

அந்தக் கேள்வி சேதுமாதவனின் கண்ணீரை நிறுத்தி குற்றவுணர்வை அதிகப்படுத்தியது. கண்களைத் துடைத்தபடியே பலவீனமான குரலில் சொன்னார். “என்னை மன்னிச்சுடு அருணா. உயரங்களுக்குப் போன பிறகு நிறைய பேருக்கு தாழ்ந்த நிலையில இருக்கறவங்களை நண்பர்களாய் கொண்டாடற மனநிலை இருக்கறதில்லை.... ஆரம்பத்துல இருந்தே தொடர்பில் இருந்திருந்தா உன் மனநிலை எனக்குத் தெரிஞ்சிருக்கும். ஆரம்பத்துல உத்தியோக விஷயமா வெளியூர்கள்லயே தூர தூரமாய் இருந்தேன். நீ எம். எல்.ஏ ஆகி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகி, முதலமைச்சரும் ஆகற வரைக்கும் தொலைவுலயே இருக்கற சூழ்நிலை. நானும் பிசியாவே இருந்துட்டேன். ரிடையர் ஆகி சென்னை வந்தப்பறம் நான் ஃப்ரியாயிட்டேன். ஆனா முதலமைச்சராகி எப்பவுமே பிசியாய் இருக்கற உன்னை பெரிய காரணம் எதுவுமில்லாம தொந்தரவு செய்ய மனசு வரலை...”

 

நண்பனின் மனநிலையை அவர் சொல்லாமலேயே முழுவதுமாய் ஊகிக்க முடிந்தாலும் அருணாச்சலம் நண்பரின் மனதைத் துக்கத்திலிருந்து திருப்ப சண்டை போடுவது என்று தீர்மானித்தார். “நானும் உன் விலாசத்தை எப்படியாவது கண்டுபிடிச்சு உன்னைத் தொடர்பு கொள்ள சில சமயம் நினைச்சதுண்டு. ஆனா எனக்காவது உன் விலாசத்தைக் கண்டுபிடிக்கணும். என் விலாசம் ஊரறிஞ்ச விலாசம். அது உனக்கும் தெரிஞ்சிருந்தும் உனக்கே என்னைச் சந்திக்க மனசில்லாமல் இருக்கறப்ப, நான் தொடர்பு கொள்றது உனக்குத் தொந்தரவாகுமோன்னு நினைச்சு பேசாம இருந்துட்டேன்.”

 

ஐயோ அப்படியெல்லாம் இல்லை அருணா...” சேதுமாதவனுக்குத் தான் செய்தது சிறிதும் சரியல்ல என்ற உணர்வு கூடியது. தலையைச் சற்றுத் தாழ்த்திக் கொண்டார்.

 

அருணாச்சலத்துக்கு நண்பனைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் அவர் விடுவதாய் இல்லை. “சரி விடு. உன் மகன் கல்யாணத்துக்காவது வந்து கூப்ட்டிருக்கலாமில்ல

 

தலை தாழ்த்தியபடியே சேதுமாதவன் சொன்னார். “வந்து சந்திக்காட்டியும் நான் தபால்ல அழைப்பிதழ் அனுப்பிச்சிருந்தேன்.”

 

எனக்கு வர்ற தபால்கள் அத்தனையும் என் பார்வைக்கு வந்தா அதுக்கே எனக்கு நேரம் போதாது. தினமும் எத்தனையோ அழைப்பிதழ்கள் வரும். அதில் முக்கியமானதுன்னு எதை என் செக்ரட்டரி நினைக்கிறானோ அது மட்டும் தான் என் பார்வைக்கு வரும்...” உண்மையிலேயே அந்த அழைப்பிதழ் அவர் பார்வைக்கு வந்திருந்தால் கண்டிப்பாக அந்தத் திருமணத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி, தனியாக சேதுமாதவனிடம் இத்தனை காலம் தொடர்பு கொள்ளாமலிருந்ததற்குச் சண்டை போட்டு வந்திருப்பார். 

 

அருணாச்சலத்துக்கு, தானும் தன் மகளின் திருமணத்திற்கு சேதுமாதவனை அழைக்கவில்லை, அழைப்பிதழையும் அவருக்கு அனுப்பி வைக்கவில்லை என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது. சேதுமாதவன் அறிவுக்கு அது எட்டாமல் இருக்க வழியில்லை. ஆனாலும் அவர் பதிலுக்கு அதைச் சுட்டிக்காட்ட முற்படவில்லை என்பதை அருணாச்சலம் கவனித்தார். அப்படிச் சுட்டிக்காட்டாமல் இருக்கக் காரணம் நண்பன் முதலமைச்சராக இருப்பதோ, தற்போது அவரிடம் உதவி கேட்டு வந்திருப்பதோ அல்ல என்பதையும் அருணாச்சலம் அறிவார். ஒருவேளை அவர் நண்பர் தனியார் நிறுவன குமாஸ்தாவாகவோ, ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவராகவோ இருந்து சண்டை போட்டிருந்தாலும் கூட சேதுமாதவன் அவரிடம் சுட்டிக்காட்டியிருக்க மாட்டார். இது இளமைக்காலத்திலிருந்தே சேதுமாதவனிடம் உள்ள உயர்ந்த குணம். அவருடைய குறையை யாராவது சுட்டிக் காட்டினால், அது உண்மையாக இருக்குமானால் உடனடியாக ஏற்றுக் கொள்வாரேயொழிய, யாரையும்நீ ரொம்ப ஒழுங்கோ?” என்று கேட்டதில்லை. தவறைச் சுட்டிக்காட்டியவர்களின் குறையை அவர் என்றுமே பட்டியல் போட முயன்றதில்லை. 

 

பொதுவாழ்வில் லட்சக்கணக்கான மனிதர்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்தும், இப்படிப்பட்ட இன்னொரு மனிதனை அருணாச்சலத்தால் சந்திக்க முடிந்ததில்லை. அதனாலேயே தான் அறுவை சிகிச்சை முடிந்து தனிமையில் ஓய்வில் இருந்த காலத்தில் சேதுமாதவனின் நினைவு பல முறை அருணாச்சலத்துக்கு வந்திருக்கிறது. இனி எத்தனை காலம் வாழமுடியும் என்பது நிச்சயமில்லை என்பதால், அவர் சென்னைக்குத் திரும்பியவுடன் சேதுவைச் சந்திக்க வேண்டும் என்று அமெரிக்காவிலேயே முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் சூழல் அவர் எதிர்பார்த்ததை விட வேகமாய், எதிர்பாராத விதமாய் சேதுவையே அவரிடம் வரவழைத்து விட்டது...

 

அருணாச்சலம் தங்கள் பள்ளி, கல்லூரி கால நண்பர்கள் சிலரைப் பற்றி சேதுமாதவனிடம் விசாரிக்க ஆரம்பித்தார். பழைய நினைவுகள், புதிய விசாரிப்புகளில் சிறிது நேரம் போனது. மணி பதினொன்றை எட்டிய போது தான் நேரமாகி விட்டதை நண்பர்கள் உணர்ந்தார்கள்.                                                                                                                                                                    சேதுமாதவன் எழுந்து நின்று நன்றியுடன் நண்பனின் கைகளைப் பற்றியபடி சில வினாடிகள் இருந்து விட்டுத் தலையசைத்து விடைபெற்றார். வெளியே வந்த போது அவர் மனம் மிக லேசாக இருந்தது.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, September 21, 2023

சாணக்கியன் 75

 

முதல் கலவரம் முடிந்து நான்கு நாட்கள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் எல்லாப் பகுதிகளிலும் அமைதி நிலவியது. ஆனால் பிலிப்பாலும் அவனுடைய படைகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. என்ன நடக்குமோ, எப்போது நடக்குமோ என்று தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கையில், வெளியே அமைதி நிலவினாலும் கூட எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களின் மன அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதில்லை. ஏனென்றால் வெளியே நிலவும் அமைதி நிச்சயமில்லாததால் அதுகுறித்து சந்தோஷப்பட்டு அமைதிக்குத் திரும்ப மனம் சம்மதிப்பதில்லை.

 

முதல் முறையாக பிலிப் ஆச்சாரியரின் புத்திசாலித்தனத்தை உணர்ந்தான். அவர்கள் கேகயத்திற்கு எதிராகப் பயன்படுத்திய தந்திரத்தை இப்போது ஆச்சாரியர் பயன்படுத்துவது போலத் தோன்றியது. அலெக்ஸாண்டர் கேகயத்துக்கு எதிராகப் பயன்படுத்திய யுக்தி போல ஆச்சாரியர் ஏதோ ஒரு யுக்தியைப் பயன்படுத்தக் காத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது என்ன என்று தெரியாதவரை நிம்மதியாக இருக்க முடியாத நிலையில் பிலிப் இருந்தான்.

 

அடுத்த கலவரம் ஐந்தாவது நாள் அனைத்து இடங்களிலும் நடந்தது.  இந்த முறை முதியவர்களும், சிறுவர்களும் வீதிகளில் முழக்கமிட்டபடி சென்றார்கள். அவர்களுடன் சில இளைஞர்களும், நடுத்தர வயதினரும் கூட இருந்தார்கள் என்றாலும் அதிகமான இளைஞர்களும், நடுத்தர வயதினரும், சில இடங்களில் பெண்களும் வீட்டின் கூரைகளின் மேலிருந்தும், மரங்களின் மீதிருந்தும், மறைவான இடங்களில் இருந்து கொண்டும் கற்களை எறிந்து வீரர்களைத் தாக்கினார்கள். தாக்கப்பட்டவர்களிலும் அதிகமாக யவன வீரர்களாக இருந்தார்கள். பல இடங்களில் இருந்தும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டதால் யவன வீரர்கள் கடுமையாகக் காயமடைந்தார்கள். எதிரிலோ அருகிலோ இல்லாமல் தொலைவிலிருந்தோ, மறைவிலிருந்தோ கற்கள் வீசப்பட்டதால் வீசியவர்களைப் பிடிக்க சில சமயங்களில் குதிரைகளிலிருந்து அவர்கள் இறங்கிச் செல்ல வேண்டியிருந்தது. அது அவர்களுக்கு மேலும் பிரச்சினையாகியது. ஒருவனை அவர்கள் பிடிக்க முடிவதற்கு முன் பலரிடமிருந்து காயப்பட வேண்டியிருந்தது.

 

மாளவத்தில் ஓரிடத்தில் சிறுவர் கூட்டம் ஒன்றை மாளவப் படைத்தலைவன் வீரசேனனும், யவனப்படைத் தலைவன் ஒருவனும் சேர்ந்து கண்டார்கள். பல இடங்களில் தங்கள் வீரர்கள் காயப்பட்டிருந்ததால் யவனப்படைத்தலைவன் இந்தச் சிறுவர்களிடம் அந்தக் கோபத்தைக் காட்டித் தணித்துக் கொள்ளத் தீர்மானித்தான். அவன் வாளை உருவிப் பாய முற்பட்ட போது வீரசேனன் அதிர்ந்தான். அவனுக்கு இந்த வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் குழந்தைகளிடம் வீரத்தைக் காட்டுவது ஒரு வீரனுக்கு அழகல்ல என்ற அபிப்பிராயமும் அவனிடம் இருந்தது. அந்த யவனப்படைத் தலைவனைத் தடுத்து விட்டு அந்தச் சிறுவர்களிடம் கடுமையான குரலில் வீரசேனன் சொன்னான். “கலைந்து செல்லுங்கள் சிறுவர்களே. இல்லா விட்டால் சிறுவர்கள் என்றும் பாராமல் நாங்கள் உங்களைத் தண்டிக்க வேண்டி வரும்

 

ஒரு சிறுவன் வீரசேனனிடம் கேட்டான். “நம் பூமியில் இவர்கள் ஆதிக்கம் செய்வது ஏன்? நாம் இவர்கள் மண்ணுக்குச் சென்று ஆக்கிரமித்தால் இவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? பின் ஏன் நாம் மட்டும் இவர்கள் நம்மை ஆள்வதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்?”

 

வீரசேனன் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க யவனப் படைத்தலைவன் கோபத்துடன் வீரசேனனிடம் சொன்னான். “இந்த அளவு பேசுபவர்களை சிறுவர்கள் என்று விட்டு விட்டால் நாளை மேலும் அதிகம் பேர் இவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். ஏன் இவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறாய்? முதலில் தாக்கு அவர்களை

 

வீரசேனன் தன்னையும் அறியாமல் யவனப் படைத்தலைவனுக்கும், சிறுவர்களுக்கும் இடையில் குதிரையை நகர்த்தினான். கடுமையாக விழிகளை உருட்டிசென்று விடுங்கள் சிறுவர்களே. இது என் கட்டளைஎன்று மிரட்ட சிறுவர்கள் ஆபத்தை உணர்ந்தவர்களாக வேகமாக அங்கிருந்து கலைந்து சென்றார்கள். வீரசேனன் யவனத்தலைவனிடம் சொன்னான். “நம் கோபத்தைச் சிறுவர்களிடம் காட்டுவது நம் வீரத்துக்கு அழகல்ல

 

யவனப் படைத்தலைவன் கோபத்துடன் ஏதோ பதில் சொல்ல முற்பட்ட போது தொலைவில் குதிரைகள் பல வேகமாக வரும் ஓசையும், “புனித பாரதம் வாழ்க, பாரதத்திற்கே வெற்றிஎன்ற வீர முழக்கமும் கேட்டன. அவர்களும் அவர்கள் வீரர்களும் உடனே சத்தம் கேட்ட திசை நோக்கி விரைந்தார்கள். சந்திரகுப்தன் தலைமையில் வந்திருந்த வீரர்கள் பராக்கிரமத்தோடு அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். அந்தத் தாக்குதலிலும் கூட அவர்கள் அதிகம் குறி வைத்தது யவனர்களைத் தான். இருபக்கத்தினரும் ஆக்ரோஷமாகப் போரிட்ட போதும் சந்திரகுப்தனும், அவன் வீரர்களும் மின்னல் வேகத்தில் இயங்க முடிந்தவர்களாக இருந்ததால் எதிரிகளை வீழ்த்துவதிலும் காயப்படுத்துவதிலும் அவர்கள் வெற்றி கண்டார்கள்.

 

அதன் பின் அவர்கள் அங்கே அதிகம் தாமதிக்காமல் வந்த வழியே வேகமாகத் திரும்பிச் சென்றார்கள். வீரசேனனும் அவனுடைய சில வீரர்களும் அவர்களைத் துரத்திக் கொண்டு விரைந்தார்கள். யவனப் படைத்தலைவனும், எஞ்சியிருந்த ஒரு சில யவன வீரர்களும் அவர்களுடன் செல்லத் தயங்கிப் பின்தங்கினார்கள்.

 

ன் முன் கடுங்கோபத்துடன் வந்து நின்ற யவனப்படைத் தலைவனை பிலிப் கேட்டான். “என்ன ஆயிற்று?”

 

யவனப்படைத் தலைவன் கோபத்தில் குரல் நடுங்கியபடி சொன்னான். “உங்களை வந்து சந்தித்துத் தகவலைச் சொல்ல எனக்கு உயிர் மிச்சமிருக்கிறது சத்ரப். நம் படையினர் பலர் அந்தப் பாக்கியம் இல்லாமல் உயிர்விட்டும், உயிருக்குப் போராடிக் கொண்டுமிருக்கிறார்கள்.”

 

பிலிப் அந்தப் படைத்தலைவன் தோளில் தோழமையுடன் கை வைத்துமுதலில் அமைதியடை. உட்கார். தண்ணீர் குடிஎன்று சொன்னான். அவன் பார்வையால் கட்டளையிட அவன் சேவகன் வேகமாக ஒரு பெரிய குடுவையில் தண்ணீர் கொண்டு வந்து அந்த யவனப் படைத்தலைவனிடம் தந்தான்.

 

படைத்தலைவன் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து தண்ணீரைக் குடித்த பின் ஓரளவு அமைதி அடைந்து மாளவத்தில் நடந்ததைச் சொன்னான். கேட்கக் கேட்க பிலிப்பின் திகைப்பும் கோபமும் அதிகமாயின. முடிவில் படைத்தலைவன் சொன்னான். “சத்ரப். இங்கே நம் வீரர்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை. மொத்தப் படையினரில் நம் வீரர்களின் எண்ணிக்கை விகிதம் குறைவாக இருந்த போதும் இன்று மரணமடைந்தவர்களிலும், காயப்பட்டவர்களிலும் நம் வீரர்களே அதிகம். உடன் போரிடும் மற்ற வீரர்களை எங்களால் நம்ப முடியவில்லை. கலவரக்காரர்களும் எங்களைத் தான் குறிவைக்கிறார்கள்இந்த நிலை தொடருமானால் இங்கு இருக்க எங்களுக்கு விருப்பமில்லை. எங்களைத் தாயகம் திரும்பிச் செல்லத் தயவு செய்து அனுமதியுங்கள். அதற்கு அனுமதி இல்லா விட்டால் தயவு செய்து உங்கள் கையாலேயே எங்களைக் கொன்று விடுங்கள். இங்குள்ள ஆட்கள் கையால் சாவதை விட உங்கள் கையால் சாவது மேலானது என்று ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தயவு செய்து இந்தக் கலவரத்தை ஒடுக்கும் வேலையில் எங்களை ஈடுபடுத்தாதீர்கள்.”

 

யவனப்படைத்தலைவன் உறுதியான குரலில் சொன்னதைக் கேட்ட பிலிப் நிலைமை பூதாகரமாவதை உணர்ந்தான். மாளவம் ஒன்றின் நிலைமையைத் தான் கேள்விப்பட்டிருக்கிறான். மற்ற இடங்களில் என்ன நிலைமை என்பது தெரிய சில நாட்களாவது ஆகும்.  படைவீரர்கள் இப்படி தைரியம் இழந்தால் எங்கும் தாக்குப் பிடிப்பது தான் எப்படி? தன் மனதில் எழுந்த கவலையை வெளியே சிறிதும் காட்டிக் கொள்ளாமல் பிலிப் கேட்டான். “வீரசேனன் தற்போது எங்கேயிருக்கிறான்?”

 

தெரியவில்லை. அவன் அந்தக் கலவரக்காரர்களின் படையினர் பின் தொடர்ந்து சென்றிருக்கிறான். சென்றவன் திரும்பி வராததால் அவர்களுக்கும் அவனுக்கும் முன்பே தொடர்பு இருக்கவும் வாய்ப்பிருப்பதாக இப்போது எனக்குத் தோன்றுகிறது.”

 

பிலிப் எச்சரிக்கை உணர்வுடன் சொன்னான். “உண்மை தெரியாமல் சந்தேகத்தில் யூகிக்கும் யூகங்கள் ஆபத்தானவை. அவன் வரட்டும். விசாரிப்போம். அவனுடைய சகோதரன் சூரசேனன்?”

 

அவன் இங்கே தான் இருக்கிறான்.”

 

எதற்கும் அவன் மீது நம் கண்காணிப்பு இருந்து கொண்டிருக்கட்டும். கலவரக்காரர்களுக்கு உதவ வந்த படையினர் எங்கிருந்து வந்தார்கள். எங்கே சென்றார்கள்?”

 

அருகிலிருந்த காட்டுப்பகுதியிலிருந்து வந்தார்கள். அங்கேயே திரும்பச் சென்றிருக்கிறார்கள்

 

இப்போது கலவரக்காரர்களால் ஏற்பட்டிருக்கும் நிலைமையை எப்படிச் சமாளித்து கட்டுப்படுவது என்று நான் யோசித்து முடிவெடுக்கிறேன். நீ சிறிதும் தைரியம் இழக்க வேண்டாம் படைத்தலைவனே. அலெக்ஸாண்டரின் படைத் தளபதியான நீயே தைரியம் இழப்பது சரியல்ல. நம் வீரர்களின் பாதுகாப்புக்கு  என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்கிறோம். நீ கவலைப்படாமல் போ

 

மிக அமைதியாக பிலிப் உறுதியாகச் சொன்னதும் சிறிது அமைதியடைந்த படைத்தலைவன் அங்கிருந்து சென்றான். ஆனால் பிலிப்பின் அமைதி தொலைந்திருந்தது. ’மற்ற பகுதிகளில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?’

 

(தொடரும்)

   

என்.கணேசன்      


Monday, September 18, 2023

யோகி 14

 

சேதுமாதவன் தங்கள் வாழ்க்கையை உலுக்கிப் போட்ட நிகழ்வுகளை அருணாச்சலத்திடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

 

“… எங்களோட தனிப்பட்ட துக்கம், பிரச்சினை பத்திரிக்கைகளுக்கும் டிவிக்கும் வியாபாரமாச்சு. சில நாட்கள் தொடர்ந்து எல்லா பத்திரிக்கைகள்லயும், டிவி சேனல்கள்லயும் எங்களப் பத்தின செய்திகள் தான். சிலர் எங்களுக்கு ஆதரவாகவும், யோகாலயத்துக்கு எதிராகவும் செய்திகள் வெளியிட்டாங்க. சிலர் எங்களுக்கு எதிராகவும், யோகாலயத்துக்கு ஆதரவாகவும் செய்திகள் வெளியிட்டாங்க. ஆனா உள்ளதை உள்ளபடி செய்திகள் வெளியிடற நேர்மை யாருக்கும் இருக்கறதா தெரியல. நாங்க சொன்னது கூடச் சொல்லாததும் சேர்ந்து நாங்க சொன்னதாய் வெளியாச்சு. மீடியா இவ்வளவு மோசமாகவும், மனசாட்சி இல்லாததாகவும் இருக்கும்கிறதை எங்க கஷ்ட காலத்துல தெரிஞ்சுக்க வேண்டியதாச்சு. இதுல சில மத கோஷ்டிகளும் வந்து சேர்ந்துகிட்டாங்க. சிலர் எங்க மதத்துக்கு வந்துடுங்க, நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கறோம்னு சொன்னாங்க. சில பேர் மத அடையாளம் தெரியாதபடி பொதுவான பெயர்களோட வந்து எங்க மேல அக்கறை இருக்கறவங்களா காமிச்சுகிட்டு  கடைசில அவங்க மத உயர்வு பத்தின பேச்சை ஆரம்பிச்சாங்க. சிலர் நம்ம மதத்தை நாமளே இழிவுபடுத்தலாமா, யோகாலயத்து மேல வழக்கு போடலாமா, தயவு செஞ்சு வழக்கை வாபஸ் வாங்குங்கன்னு கெஞ்சினாங்க.  எங்க பிரச்சினைக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்னே புரியல. ஒட்டு மொத்தமாய் கோர்ட்ல ஒரு முடிவு வர்ற வரைக்கும் ஒவ்வொரு நாளும் எங்களுக்குச் சித்திரவதை தான்…”

 

நினைவுகளின் கசப்பில் ஒரு கணம் சேதுமாதவன் கண்களை மூடிக் கொண்டார். அருணாச்சலத்துக்கு நண்பரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சேதுமாதவன் மிக நல்ல மனிதர். சிறு வயதிலிருந்தே எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். தானுண்டு தன் படிப்புண்டு என்று இருந்தவர். முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவியாக இருந்தவர். அருணாச்சலத்துக்கு ஆரம்ப வகுப்புகளில் இருந்தே கணிதம் மிகவும் கடினமான பாடமாக இருந்தது. மற்ற பாடங்களில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றாலும் கணிதத்தில் தேர்ச்சி பெற குறைந்த பட்ச மதிப்பெண் பெறுவது அவருக்கு இமயமலை ஏறுவது போலத் தான் இருந்தது. ஒவ்வொரு வருடமும் அவரை கணிதத்தில் தேர்ச்சி பெற வைத்தவர் சேதுமாதவன் தான். அவர் தான் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு வருடமும் கணிதப் பொதுத் தேர்வுக்கு முந்தைய நாள் கஷ்டப்பட்டு அவர் சொல்லிக் கொடுத்ததை அருணாச்சலம் என்றுமே மறக்க முடியாது. கல்வியிலும், ஒழுக்கத்திலும், நேர்மையிலும் சிறந்து விளங்கிய சேதுமாதவன், படித்து முடித்தவுடனேயே மத்திய அரசுப் பணியும் கிடைத்து விட்டதால், சமூக அவலங்கள் அதிகமாய் நேரடியாய் அறியும் வாய்ப்பு பெறாதவர். பொது வாழ்க்கையின் கொடூரங்களையும், கசப்புகளையும் அறியாதவர். அதனால் திடீரென்று அவற்றை ஒருசேரச் சந்திக்கையில் அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை அருணாச்சலத்தால் புரிந்து கொள்ள முடிந்தது….

 

சேதுமாதவன் தொடர்ந்து சொன்னார். “எனக்கு அமீர் பாய்னு ஒரு இஸ்லாமிய நண்பர் இருக்கார். அவர் இந்த ரெட்டை வேஷம் போடற மதவாதிகளையும், மீடியாவையும் சைத்தான்கள்னு சுருக்கமாய் சொன்னார். அது ரொம்பச் சரின்னு புரிஞ்சுகிட்டது கசப்பான அனுபவம்மீடியா வியாபார நோக்கத்துல அப்படியாகறதையாவது என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா தெய்வீகத்துக்கு மனுஷனை அழைச்சுட்டுப் போக வேண்டிய மதங்கள், இப்படி தரம் தாழ்ந்த மனிதர்கள் கிட்ட சிக்கிகிட்டதைத் தான் தாங்க முடியலை அருணா

 

அந்தக் காலத்திலேயே சேதுமாதவன் ஆன்மீக நூல்களை விரும்பிப் படிப்பதை அருணாச்சலம் பார்த்திருக்கிறார். ஒவ்வொன்றும் மிகத் தடிமனான புத்தகங்கள். தன் மதப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் மற்ற மத நூல்களையும் படிக்கக்கூடியவர் அவர். அப்படிப்பட்ட புத்தகங்களில் அந்த இளமைக் காலத்திலேயே மூழ்க முடிந்த நண்பரிடம் அருணாச்சலம் மென்மையாகச் சொன்னார். “ஆன்மீகத்தை ஆழமாய் புரிஞ்சு ஞானமடைஞ்ச ஆளுக ட்ரைவிங் சீட்டுல இருந்திருந்தா மதம் சரியான தெய்வீகப் பாதைல முன்னேறும். ஆனா ட்ரைவிங் சீட்டுல சைத்தானை விட்டுட்டு, ஆழமான ஞானம் இருக்கற ஆள்க பின்னாடி உட்கார்ந்துட்டதுல வந்த பிரச்சனை தான் இதெல்லாம் சேது. அதனால தான் எல்லாம் தடம் மாறிப் போகுது. மதத்தோட பேர்ல மோசடியும், வியாபாரமும் சகஜமாய் நடக்குது…” 

 

வழிநடத்த முடிந்த அளவு ஞானமுள்ளவன், பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் பின் வாங்கியதின் விளைவே, மதங்கள் இன்று சந்திக்கும் வீழ்ச்சி என்பதை அருணாச்சலம் சுட்டிக் காட்டியது சேதுமாதவனை யோசிக்க வைத்தது. உண்மை தான்! இன்னொரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் இந்த விஷயத்தை நண்பருடன் சேர்த்து அவர் அலசியிருப்பார். ஆனால் அதற்கு வேண்டிய காலமும், மனமும் இப்போது அவரிடம் இல்லை. அவர் கனத்த இதயத்துடன், அடுத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

 

தொலைபேசி மணியடித்தது. முதல்வரின் காரியதரிசி சலிப்புடன் கடிகாரத்தைப் பார்த்தான்.  மணி 9.32. அழைப்பது யாரென்று பார்த்தான். யோகாலயம்! ரிசீவரை எடுத்துப் பேசினான். “ஹலோ

 

வணக்கம் சார். யோகாலயத்துல இருந்து பேசறோம். பூஜ்ய யோகிஜி முதலமைச்சரோட நலம் விசாரிக்கணும்னு விரும்பினார்முதல்வரோட பர்சனல் மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்காம்…”

 

இப்ப முதல்வர் அவரோட நண்பர் ஒருவரோட பேசிகிட்டிருக்கார்.”

 

அவர் அப்பாயின்மெண்ட் எப்ப முடியும்?”

 

இது கடைசி அப்பாயின்மெண்ட். நண்பர்ங்கறதால எப்ப முடியும்னு சொல்ல முடியாது.”

 

பூஜ்ய யோகிஜி நலம் விசாரிக்கத் தான் கூப்பிடறார். அதிகபட்சமாய் அஞ்சு நிமிஷத்துக்கு மேல அவர் பேச மாட்டார். அவரும் பிசி தான்….”

 

முதல்வரின் காரியதரிசி எரிச்சலுடன் சொன்னான். “மன்னிக்கணும். இடையில் எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாதுன்னு சி.எம் சொல்லி இருக்கார்.”

 

ஒரு நிமிஷம்…” சிறிது நேர நிசப்தம்.

 

காரியதரிசி ரிசீவரைக் கீழே வைக்க எண்ணுகையில் யோகி பிரம்மானந்தாவின் கணீர் குரல் கேட்டது. “சௌக்கியமா தம்பி

 

காரியதரிசி குரலில் பணிவைக் காட்டினான். “உங்க ஆசிர்வாதத்துல சௌக்கியம்ஜீ

 

முதலமைச்சர் எப்படி இருக்கார்ப்பா?”

 

நலமாயிருக்கார்ஜி. ஆனா நிறைய ஓய்வு தேவைன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க

 

ஆனாலும் அப்பாயின்மெண்ட்ஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கே

 

இல்லைஜி. பிரதமரும், பக்கத்து மாநில முதலமைச்சர்களும், நம்ம கேபினட் அமைச்சர்கள் ரெண்டு பேரையும் தவிர முதலமைச்சரைப் பார்க்க யாரையுமே அனுமதிக்கல. இப்ப பேசிகிட்டிருக்கிறவர் முதல்வரோட இளவயது நண்பராம். அதனால் வெளியாள் அவர் ஒருத்தருக்கு மட்டும் தான் அப்பாயின்மெண்ட் தந்திருக்கார்…”

 

அது நல்லது தம்பி. நண்பர்களோட பேசிகிட்டிருந்தாலே மனசுல இருக்கற ஸ்ட்ரெஸ் எல்லாம் குறைஞ்சுடும். உண்மைல முதல்வருக்கு இப்போதைய தேவை அது தான்…”

 

அதனால தான் அவர் இடையில எந்த போன்காலும் தரவேண்டாம்னு சொல்லிட்டார்என்றான் காரியதரிசி. இனி அவரும் அந்த வேண்டுகோள் விடுக்க வேண்டாம்!

 

அது சரி தான் தம்பி. இடையில தொந்தரவு செய்யறது நியாயமும் அல்ல. நாகரிகமும் அல்ல. நான் நலம் விசாரிச்சேன்னு மட்டும் அவர் கிட்ட சொல்லு. ஒரு வாரம் கழிச்சு முதல்வர் கிட்ட நான் பேசிக்கறேன்…”

 

முதலில் பேசியவனைப் போல் பேசாமல் பிரம்மானந்தா நாகரிகமாக நடந்து கொண்டது முதல்வரின் காரியதரிசிக்குத் திருப்தியாக இருந்தது. முதலில் பேசியவன் பிரம்மானந்தாவின் காரியதரிசியா, சீடனா, டெலிபோன் ஆபரேட்டரா என்று தெரியவில்லை.

 

அவன் மனம் சேதுமாதவன் பற்றி எண்ண ஆரம்பித்தது. நேற்றிரவு முதல்வர் சேதுமாதவன் என்று சொன்னவுடனே ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்துசேதுவா பேசினான்என்று கேட்டு விட்டு சேதுமாதவனின் போன் நம்பரை வாங்கி உடனே பேசவும் முற்பட்ட போது தான் அந்த நபர் அந்த அளவு முதல்வரின் மனதுக்கு நெருக்கமான நண்பர் என்பது அவனுக்குப் புரிந்தது.

 

நண்பனை அழைக்க முற்பட்ட முதல்வர் ஒரு கணம் தாமதித்துமுதல்ல அவன் கிட்ட சண்டை போடணும். போன்ல சரியாகாது. சரி நீயே போன் பண்ணி நாளைக்கு வரச் சொல்லு. நிறைய பேச வேண்டியிருக்கு. அதனால டாக்டர்கள் ராத்திரி வந்து போன பிறகு வரச் சொல்லு. அப்ப தான் யார் தொந்தரவும் இருக்காது. தேவைப்பட்டா கார் அனுப்பி வை…”

 

முதல்வருக்கு இந்த அளவு நெருக்கமான சேதுமாதவன் ஏன் இத்தனை காலம் முதல்வருடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார் என்று காரியதரிசி யோசித்தான். ஒன்றும் புரியவில்லை. முதல்வர் நேரில் சந்தித்துச் சண்டை போட வேண்டும் என்று சொன்னது இப்போதும் அவனைப் புன்னகைகைக்க வைத்தது. கிழவர்களானாலும், நண்பர்கள் என்றும் நண்பர்கள் தான்! இப்போதும் நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டு தானிருக்கிறார்கள். சண்டை முடிந்து விட்டதா என்று தெரியவில்லைஇருவரும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி ஒரு கணம் அவன் மனதில் வந்து போனது. 

 

(தொடரும்)

என்.கணேசன்