சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 27, 2014

பரம(ன்) ரகசியம் – 86




ம்பீசன் சொன்னபடி காலை ஆறு மணிக்கே வந்து விட்டார். அவருடன் அவர் உதவியாளர்கள் இரண்டு பேரும் வந்திருந்தனர். அரைகுறையாய் நரைத்த குடுமி, தாடி, பருமனான சிவந்த தேகம், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு எல்லாமாகச் சேர்ந்து நம்பீசனைப் பார்க்கும் போதே பாபுஜிக்கு அவரிடம் ஒரு தேஜஸ் இருப்பது போல் தோன்றியது. வந்தவர்  வெளி கேட்டிலேயே சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு நின்றார். பின் கேட்டார். “இங்கே ஒரு மந்திரக் கவசம் போட்டு இருக்கீங்களே. யார் போட்டது?

பாபுஜிக்கு ஆச்சரியமாக இருந்தது. உதயன் சுவாமி பற்றியெல்லாம் இவருக்குச் சொல்ல வேண்டுமா என்று அவர் யோசித்தார். நம்பீசன் சொன்னார். “எனக்கு ஒளிவு மறைவில்லாமல் நீங்கள் எல்லாத்தையும் சொல்றதா இருந்தால் நான் உள்ளே வர்றேன். இல்லாட்டி இப்படியே போயிடறேன். ஏன்னா இங்கே ரெண்டு விதமான பெரிய சக்திகள் ஒன்னுக்கொன்னு போட்டியா போராடிகிட்டு இருக்கற மாதிரி இருக்கு. அரைகுறையாய் தெரிஞ்சுகிட்டு இங்கே அந்த ரெண்டு சக்திகளுக்கு மத்தியில நான் சிக்கிக்க விரும்பலை....

பாபுஜி ஜான்சனைப் பார்த்தார். ஜான்சன் ஒருவர் தான் இப்போது அவருடன் இருக்கிறார். குருஜி போன சில மணி நேரங்களில் மகேஷும் போய் விட்டான். தூங்காமல் நிறைய நேரம் விழித்திருக்கிறானே என்று பாபுஜி அவன் அறையை எட்டிப் பார்த்த போது அவன் கையில் தூக்க மாத்திரை டப்பாவை வைத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவன் இங்கேயே தற்கொலை செய்து கொண்டு விடுவானோ என்ற பயம் பாபுஜிக்கு வந்து விட்டது. அதனால் சிறிது நேரம் கழித்து அவன் போவதாகச் சொன்ன போது அவர் உடனே அனுப்பி வைத்தார். அவன் பின்னாலேயே இரு துப்பறியும் ஆசாமிகளை அனுப்பி வைத்து எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்பதைக் கண்காணிக்க மட்டும் ஏற்பாடு செய்தார். மகேஷ் ஏதோ ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியதாக தகவல் வந்தது. அங்கே போய் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான் என்று புரிந்த போது பாபுஜிக்கு நிம்மதியாக இருந்தது. ‘விட்டது சனியன்

அதனால் நம்பீசன் சொன்ன போது, கூட இருந்த ஒரே ஆளிடம் அவருக்கு ஆலோசனை கேட்கத் தோன்றியது. ஜான்சன், சொல்லி விடுவது தான் நல்லது என்பது போல தலையசைத்தார்.

பாபுஜி சுருக்கமாகச் சொன்னார். நம்பீசன் நீண்ட யோசனைக்குப் பின்பு தான் உள்ளே வந்தார். பாபுஜி தியான மண்டபத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். நம்பீசன் தியான மண்டபத்திற்கு உள்ளே நுழைய மறுத்தார். வெளியே இருந்தே விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்தார். பின் வெளியே அந்த 23 ஏக்கர் நிலப்பரப்பில் மௌனமாக நடக்க ஆரம்பித்தார். அவரை அவர் உதவியாளர்கள் பின் தொடர்ந்தனர். பாபுஜியும், ஜான்சனும் கூடப் பின் தொடர்ந்தார்கள். அங்கங்கே நிற்பது, யோசிப்பது, பின் நடப்பதுமாக இருந்த நம்பீசன் சில இடங்களில் சில குறியீடுகள் இடும்படி தன் உதவியாளர்களிடம் சொன்னார். அவர்கள் அந்த இடங்களில் அந்தக் குறிகளை வரைந்தார்கள். கடைசியில் அந்த இடங்களில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்த அவர் அங்கு நின்று கொண்டு சொன்னார். “இந்த இடத்துல ஒரு அஷ்டமங்கல ப்ரஸ்னம் வச்சுப் பார்த்தால் தான் இருக்கிற நிலைமை என்ன, என்ன செய்யலாம்னு தெரியும். அதுக்கு ஒரு நாள் வேண்டி வரும்

பாபுஜிக்கு இருந்த அவசரத்தில் அதெல்லாம் அனாவசியம் என்று தோன்றியது. உடனடியாக செயல்பட வேண்டிய நேரத்தில் நிலைமை என்ன, என்ன செய்யலாம் என்று கண்டுபிடிக்கவே தாமதமாவது அவருக்கு சகிக்க முடியாததாக இருந்தது.  அந்த அறுவரும் கூட இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் தயக்கத்துடன் சொன்னார். “நமக்கு அவ்வளவு நேரம் இல்லை. உடனடியாய் ஏதாவது செய்தாகணும்

நம்பீசன் சொன்னார். “அவசரமாய் சாக எனக்கு ஆசை இல்லை. நீங்க வேற ஆளைப் பார்த்துக்கலாம்”.  சொன்ன நம்பீசன் ‘கிளம்பலாம்என்பது போல தன் உதவியாளர்களுக்கு சமிக்ஞை செய்ய பாபுஜி பதறிப் போனார். “என்ன சுவாமி. இப்படி நீங்க சொன்னா எப்படி?

இங்கே வந்தப்பறம் தான் சிக்கல் அதிகமாய் இருக்குன்னு புரிஞ்சுது. இது சாதாரணமாய் சூனியம் வச்சதை எடுக்கற காரியமோ, மந்திரத்தை முறியடிக்கிற காரியமோ அல்ல. மகாசக்திகளோட ஆட்டம் இது. கவனமா ஆடலைன்னா நம்மளை அழிச்சுடும். பிணமானதுக்கப்பறம் பணத்தோட உபயோகம் என்ன சொல்லுங்க?

பாபுஜிக்கு கிலி கிளம்பியது. கொஞ்சம் பொறுங்கஎன்று சொன்னவர் தனதறைக்குப் போய் அறுவருடன் பேசினார். அந்த அறுவரும் அதற்கு முன்பே நம்பீசன் பற்றிய எல்லா விவரங்களும் சேகரித்திருந்தார்கள். ஆள் விஷயம் தெரிந்தவர் என்று தான் எல்லா தகவல்களும் சொல்லின. அவர்களில் மூவர் ஒத்துக் கொள்ளச் சொன்னார்கள். மூவர் இரண்டு மடங்கோ, மூன்று மடங்கோ பணம் தந்து உடனடியாக ஏதாவது செய்ய முடியுமா என்று முயற்சிக்கச் சொன்னார்கள். குழம்பிய பாபுஜி கடைசியில் தன் தந்தைக்குப் போன் செய்தார். அவருடைய தந்தை குருஜி அங்கிருந்து போய் விட்டார் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகே நடக்கின்ற ஆராய்ச்சிகளில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்திருந்தார். இவர்கள் ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்களோ என்ற பயம் அவரை ஆக்கிரமித்திருந்தது.

அதனால் பாபுஜி போன் செய்த போது அவர் உடனே சொன்னார். “நம்பீசன் சொல்ற மாதிரி நிலவரம் என்ன, என்ன செய்யலாம்னு தெரிஞ்சுக்கோ பாபுஜி. அவசரப்படாதீங்க. ஒரு நாள்ல ஒன்னும் குடி முழுகிடாது.

பாபுஜி நம்பீசனிடம் போய் சம்மதம் தெரிவித்தார். நம்பீசன் அஷ்டமங்கல ப்ரஸ்னம் பார்க்க முகூர்த்தம் கணிக்க ஆரம்பித்தார்....

கேஷ் தூக்க மாத்திரைகளை விழுங்கிக் கொண்டே தந்தைக்குப் போன் செய்தான்.  “அப்பா... சாரிப்பா... அம்மாவுக்காவது ஈஸ்வர் இருக்கான். உங்களுக்குத் தான் என்னை விட்டால் யாரும் இல்லை...

விஸ்வநாதன் திடுக்கிட்டார். “என்னடா சொல்றே?

எனக்கு வாழப் பிடிக்கலப்பா. இனி நான் வாழ்றதுல அர்த்தமில்ல... நான் சாகறதுக்கு முன்னாடி மன்னிப்பு கேட்டேன்னு விஷாலி கிட்ட சொல்லிடுங்க அப்பா....

விஸ்வநாதன் பதறினார். “மகேஷ் என்னடா சொல்றே? முட்டாள்தனமாய் எதுவும் செஞ்சுக்காதேடா...

இனிமே நான் வாழ்றது தான் முட்டாள்தனம்ப்பா. சாகறதில்லப்பா. நான் இப்போ ஓட்டல் சிட்டி பாரடைஸ்ல ரூம் நம்பர் 305ல இருக்கேன்ப்பா.. என் பிணத்தை கலெக்ட்... செய்துக்கோங்கப்பா..... அவன் குரல் குழற ஆரம்பித்தது. விஸ்வநாதன் இடிந்து போனார்.

குருஜி காரை ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் நிறுத்தச் சொல்லி இறங்கினார். டிரைவரிடம் இரண்டு உறைகளைக் கொடுத்து தன் உதவியாளனிடம் தரச் சொன்னார். ஒன்றில் அவரது டிரஸ்டுகள் இனி யார் பொறுப்பில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் எழுதி இருந்தார். இன்னொன்று அவரது உயில். அவரது தனிப்பட்ட சொத்துக்களை கணபதியின் பெயரில் அவர் எழுதி இருந்த உயில். கார் டிரைவரைப் போகச் சொன்னார்.

கார் டிரைவருக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் குருஜியை மறுத்துப் பேசி அறியாத அவர் மறுவார்த்தை பேசாமல் காரை ஓட்டிக் கொண்டு போனார். கார் பார்வையில் இருந்து மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த குருஜி இருட்டில் எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தார். அவர் அணிந்து கொண்டிருந்த உடையையும், சட்டைப்பையில் இருந்த நூறு ரூபாயையும் தவிர அவருக்கு என்று அவர் எதையும் வைத்துக் கொண்டிருக்கவில்லை.  

நீண்ட தூரம் நடந்து சென்ற பிறகு ஒரு சலூன் கடையைப் பார்த்தார். அந்தக் கடைக்காரன் கதவைச் சாத்திக் கொண்டிருந்தான். அவனிடம் போய் கெஞ்சிக் கேட்டு கதவை மீண்டும் திறக்க வைத்து மொட்டை அடித்துக் கொண்டார். தன்னிடம் இருந்த கடைசி பணமான நூறு ரூபாயை அவனிடம் தந்து விட்டு வெளியே வந்த குருஜியை இப்போது யாருமே அடையாளம் கண்டு விட முடியாது. இனி யாரும் பழைய குருஜியைப் பார்க்கவும் முடியாது.

மறுபடி நடக்க ஆரம்பித்தவர் களைத்துப் போகும் வரை நடந்தார். நள்ளிரவில் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்த அவரைப் பார்த்து நாய்கள் குரைத்தன. அவர் லட்சியம் செய்யவில்லை. மனம் மட்டும் நடந்தவைகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது.  குருஜி என்ற சகாப்தம் முடிந்து விட்டாலும் ஞான தாகத்தோடு பாரதத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்த ராமகிருஷ்ணன் என்ற தனிமனிதனின் கதை முடியவில்லை. சுயபச்சாதாபத்தோடு தன் வாழ்க்கையின் பல மைல்கல்களை எண்ணிப் பார்த்த போது கடைசியில் அவருக்கு வாய்விட்டு அழத் தோன்றியது.

ஆளே இல்லாத ஒரு பஸ் ஸ்டாப்பில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அழ ஆரம்பித்தார். “என்னைக் கடவுள் கைவிட்டது கூட எனக்கு தப்பாய் தெரியலை. ஏன்னா நான் நிறைய தப்புகள் செய்திருக்கேன். ஆனால் குருவே நீங்கள் என்னைக் கை விட்டது எனக்கு அதிகமாய் வலிக்கிறது. என்ன இருந்தாலும் உங்களிடம் சில காலமாவது சீடனாய் நான் இருந்தவன் அல்லவா? என்னைத் திட்டி புத்தி சொல்லக் கூடிய அதிகாரம் இருப்பவர் தானே நீங்கள். ஒரே ஒரு தடவையாவது அதை நீங்கள் செய்திருக்கலாமே!  நான் முன்பே திருந்த ஒரு வாய்ப்பை எனக்குத் தந்திருக்கலாமே. எனக்கிருந்த தலைக்கனத்துக்கு நான் அப்ப திருந்தியிருக்க வாய்ப்பில்லை தான். ஆனால் நீங்கள் முயற்சி செய்து பார்த்திருக்கலாமே... கணபதியால் முடிந்தது உங்களால் முடிந்திருக்காதா? எத்தனையோ குருக்கள் எனக்கு இருந்திருந்தாலும் மத்தவங்களை எல்லாம் நான் மிஞ்சி விட்டிருந்தேன். அதனால் அவர்கள் எனக்கு பின்னால் தேவைப்படலை. நான் மிஞ்சாத ஒரே குரு நீங்கள் தான். எனக்கு இப்பவும் தேவைப்படறவரும் நீங்கள் தான்.... நான் எல்லாமே வேண்டாம்னு உதறிட்டு வந்துட்டேன். உலகத்தால தர முடிஞ்சது எனக்கு எதுவுமே வேண்டாம். நான் ஒருகாலத்துல தீவிரமாய் தேடின ஆத்மஞானத்துக்காக தான் மறுபடி ஏங்கறேன். எல்லாம் தெரிஞ்ச எனக்கு இன்னும் எதோ பிடிபடாததால அல்லவா கர்வமே உள்ளே நுழைஞ்சது. என்னை திசை திருப்பிச்சு. இனிமேலாவது நீங்கள் ஒரு வழி காட்டக் கூடாதா?

அந்த நள்ளிரவில் தனிமையில் அழுது கொண்டிருந்த முதியவரைப் பார்த்துக் கொண்டிருந்த நாய்கள் அனுதாபத்தோடு குரைப்பதை நிறுத்தின. அதிகாலை சூரிய கிரணங்கள் எழும் வரை அதே சிந்தனைகளோடும், துக்கத்தோடும் அப்படியே குருஜி அமர்ந்திருந்தார். திடீரென்று ஒரு கை அவர் தோளைத் தொட்ட போது மின்சாரம் தாக்கியது போல் இருக்க அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தார். அவருடைய குரு அக்னிநேத்ர சித்தர் நின்றிருந்தார். அவர் கை நீட்ட அந்தக் கையை நன்றியுடனும், பிரமிப்புடனும் குருஜி பிடித்துக் கொண்டு எழுந்தார். பெரும் துக்கத்தோடு குருஜியிடம் இருந்து வார்த்தைகள் வெளி வந்தன. “ஏன் குருவே இவ்வளவு தாமதம்?

நீ இது வரைக்கும் என்னை இப்படி வற்புறுத்திக் கூப்பிட்டதே இல்லையே ராமகிருஷ்ணா. அது மட்டுமில்லாம தப்பான வழியிலே போய் யாரும் சரியானதை சாதிச்சுட முடியாதுன்னு நீ உணரணும்னு தான் நான் காத்துகிட்டிருந்தேன். வா. போகலாம்...கனிவான குரலில் சித்தர் சொன்னார்.

குருஜி அக்னி நேத்ர சித்தரின் கைகளைப் பிடித்து பேரழுகையோடு கண்களில் ஒற்றிக் கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு சித்தர் நடக்க ஆரம்பித்தார். ஆனந்தக் கண்ணீருடன் குருவுடன் குருஜி நடக்க அவர்கள் முன் அமைதியானதொரு பாதை நீண்டிருந்தது!....

லகில் எந்த ஒரு தகப்பனுக்கும் இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்று விஸ்வநாதன் எண்ணினார்.   சிட்டி பாரடைஸ் ஓட்டலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகனை தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் சேர்த்தாகி விட்டது. அங்கு அவரையோ மகேஷையோ யாருக்கும் அடையாளம் தெரியாது. எதையும் 24 மணி நேரம் கழித்துத் தான் சொல்ல முடியும் என்று டாக்டர் தெரிவித்த போது அவர் உடைந்து போன விதத்தைப் பார்த்த டாக்டர் வீட்டில் வேறு யாரும் இல்லையா என்று இரக்கத்தோடு கேட்டார்.

விஸ்வநாதன் மனைவியிடம் கூடத் தகவலைத் தெரிவிக்கவில்லை. சொன்னால் அவளால் கண்டிப்பாகத் தாங்க முடியாது. பரமேஸ்வரனிடமும் சொல்ல முடியாது. பின் வேறு யார் இருக்கிறார்கள்? மனம் ஏனோ ஈஸ்வரை நினைத்தது. அவன் பரமேஸ்வரனுக்கு மாரடைப்பு வந்த போது அதை சமாளித்த விதம் அவருக்கும் இப்போது நினைவிற்கு வந்தது.  அவன் இப்போது கூட இருந்தால் பெரிய ஆசுவாசமாக இருக்கும் என்று தோன்றியது. அவன் ஏதோ ஆராய்ச்சியில் இருக்கிறான். அவனுக்கு அவரிடமோ, மகேஷிடமோ சிறிதும் அன்பிருக்க வாய்ப்பில்லை. அதை அவர்கள் சம்பாதித்தும் வைத்திருக்கவில்லை.... ஆனாலும் அவன் நல்லவன்... சங்கரின் மகன்.... பரமேஸ்வரனை மன்னித்தவன்... கருணை காட்டலாம்...

விஸ்வநாதன் தயக்கத்துடன் அவனுக்குப் போன் செய்தார். அவர் அழைத்த போது அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். எதிரிகள் புதிதாக யாரையோ வரவழைக்கிறார்கள், அவர் மறு நாள் அதிகாலை வருவார் என்று தகவல் கிடைத்த பிறகு அவனுக்கு அப்போது தான் இளைப்பாற நேரம் கிடைத்திருந்தது. ஏதாவது ஆபத்து என்றால், தான் தெரிவிப்பதாக ஹரிராம் உறுதி அளித்திருந்தார். அவருக்கு இயல்பாகவே அப்படி தொடர்பு கொள்ளும் சக்தி இருந்ததால் கண்காணிக்கும் வேலையை விட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் அவன் உறங்க ஆரம்பித்திருந்தான்.  அவனை  விஸ்வநாதனின் போன் எழுப்பியது.  குரலடைக்க அழுகையோடு விஸ்வநாதன் சொன்ன தகவல் ஈஸ்வரை அதிர வைத்தது. உடனே மீனாட்சியும், பரமேஸ்வரனும் அவன் நினைவுக்கு வந்தார்கள். எப்படி தாங்குவார்கள்? “நீங்க அத்தை கிட்டயும், தாத்தா கிட்டயும் சொல்லலையே?

“இல்லை ஈஸ்வர்.

“நல்லதாச்சு. எந்தக் காரணம் வச்சும் சொல்லிடாதீங்க. எந்த ஆஸ்பத்திரி? அவர் சொன்னார். அவன் கிளம்பி விட்டான். இப்போதைக்கு தியான மண்டபத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விட சாத்தியமில்லை. ஏதாவது தேவை இருந்தால் ஹரிராம் கூப்பிடுவார்.

பார்த்தசாரதி அவனைத் தனியாக அனுப்ப பயந்தார். அவனைக் கொல்ல வந்த  ஆட்கள் இனியும் முயற்சி செய்யலாம். வெளியே பொது இடத்தில் அவனைப் பாதுகாப்பது கஷ்டம்... ஆனால் ஈஸ்வர் போகாமல் இருக்க சம்மதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தானும் கூட கிளம்பினார். சற்று இடைவெளி விட்டு தங்களைப் பின் தொடர இரண்டு திறமையான போலீஸ்காரர்களிடம் சொன்னார்....

அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஈஸ்வர் அந்த ஆஸ்பத்திரியில் இருந்தான். உடனடியாக அவன் வருவான் என்று எதிர்பார்த்திராத விஸ்வநாதன் அவனைப் பார்த்ததும் அழுது விட்டார். அழாதீங்க மாமா... விபரீதமா எதுவும் நடந்துடாது

விஸ்வநாதனின் செல்போன் இசைத்தது. விஸ்வநாதன் அழுகையுடன் சொன்னார். “உன் அத்தை தான் கூப்பிடறா... இது ஏழாவது தடவை.... ராத்திரி  நேரத்தில் நான் ஒன்னும் சொல்லாம கிளம்பிட்டதால கவலைப்படறா போல இருக்கு. ஆனா நான் அவ கிட்ட என்னன்னு சொல்வேன்... அதான் நான் எடுக்கலை....

“பேசாமல் இருந்தா தான் அவங்களுக்கு டென்ஷனாகும் மாமா...என்ற ஈஸ்வர் அவருடைய செல்போனை எடுத்து தானே பேசினான். “அத்தை நான் ஈஸ்வர் பேசறேன்... மாமா என் கூட தான் இருக்கார்... என் ஆராய்ச்சிக்கு மாமா உதவி கொஞ்சம் தேவைப்பட்டுது.. அதனால தான் மாமாவைக் கூப்பிட்டுகிட்டேன்.... ஆராய்ச்சிக்கு தொந்திரவாகும்னு ஸ்விட்ச் ஆஃப் செய்து வச்சிருந்ததால கேட்கல. சாரி அத்தை...

மீனாட்சி நிம்மதியடைந்தாள். “உன் கூட தான் இருக்காரா? அப்ப பரவாயில்லை.... ராத்திரி நேரத்துல அவர் என் கிட்ட ஒன்னுமே சொல்லாமல் அவசரமா போனாரா... அதான் நான் ரொம்பவே பயந்து போயிட்டேன்...

மீனாட்சியை சமாளித்த விதமும், பின் டாக்டரிடம் போய் பேசிய விதமும், பேசி வந்த பிறகு மறுபடியும் தைரியம் சொன்ன விதமும் ஒரு மகனுடைய செய்கைகளாக இருந்தன. அவருக்கு ஒரு மூத்த மகன் இருந்திருந்தால் இப்படி செய்திருக்கலாம்... யாரை அவரும் அவர் மகனும் ஆழமாக வெறுத்தார்களோ அவன் இத்தனையும் அவர்களுக்காக செய்கிறான். அவன் அவர்களைப் புரிந்து கொள்ளாத முட்டாள் அல்ல... ஆனாலும் அவன் அதைப் பெரிதுபடுத்தவில்லை போல் இருந்தது. அவன் முகத்தில் பெரும் களைப்பு தெரிந்தது. சரியாக உறங்காத களைப்பு அது... ஆனால் ஒரு சலிப்பு கூட அந்த முகத்தில் தெரியவில்லை... “சங்கர் எப்படி ஒரு மகன் உனக்கு கிடைச்சிருக்கான்.... நீ எவ்வளவு புண்ணியம் செய்தவன்....

அந்த நேரத்தில் தென்னரசுவின் பிணம் ரயில்வே டிராக் அருகில் சிதறிக் கிடப்பதாக பார்த்தசாரதிக்குத் தகவல் வந்தது.

ஷ்ட மங்கல ப்ரஸ்னம் நடந்து கொண்டிருந்த போது பொறுமை இல்லாமல் பாபுஜியும், சுவாரசியத்தோடு ஜான்சனும் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சின்னச் சின்ன சகுனத்தையும் கூட நம்பீசன் கணக்கில் எடுத்துக் கொண்டார். மரத்தில் இருந்து உதிரும் இலை, பறவையின் சத்தம், சுற்றி உள்ளவர்களின் வித்தியாசமான அசைவுகள் என எல்லாமே அவருக்கு ஏதோ தகவல்களைத் தந்து கொண்டிருந்தது போலத் தெரிந்தது.

கடைசியில் நம்பீசன் சொன்னார். “நீங்கள் நினைக்கிற மாதிரி உங்களுக்கு ஒரு எதிரி வெளியே மட்டும் இல்லை. உள்ளேயும் இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள்.....

பாபுஜியும் ஜான்சனும் அதிர்ந்தார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்

Monday, February 24, 2014

கர்மா என்பதென்ன?

 அறிவார்ந்த ஆன்மிகம் - 34  


ந்து மதத்தின் விசேஷமான சிறப்பம்சங்களில் ஒன்று கர்மா சித்தாந்தம். இறைவன் உட்பட இந்து மதத்தின் பல கருத்துகளுடன் உடன்பாடு இல்லாத கௌதம புத்தர் கூட இந்த கர்மா சித்தாந்தத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பலரும் கர்மா சித்தாந்தந்தை முன் ஜென்ம வினையின் பலன் அடுத்த ஜென்மத்தில் கிடைக்கும் என்பதாக எடுத்துக் கொண்டு குழப்பிக் கொள்கிறார்கள். சரியாகச் சொல்வதானால் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குத் தகுந்த விளைவு உண்டு, செயலைச் செய்பவன் அந்த விளைவில் இருந்து என்றுமே தப்ப முடியாது என்பதே கர்மா சித்தாந்தம். அந்த விளைவு உடனடியாகக் கிடைக்கலாம். சில காலம் கழித்தும் கிடைக்கலாம். அடுத்த ஜென்மத்திலும் கூடக் கிடைக்கலாம்.

கர்மா என்பது தலைவிதி அல்ல. அது முன்பே கடவுள் உட்பட வேறு யாராலும் நிர்ணயிக்கப்பட்டது அல்ல. வானியல் கிரகங்கள் நம் மீது திணிக்கும் விஷயம் அல்ல. நாம் அனுபவிப்பதற்கு எல்லாம் விதி என்று பெயரிட்டுக் கொண்டோமானால் கூட அது நாமாகவே எழுதிக் கொண்ட விதி என்பது தான் கர்மா சித்தாந்தம்.

இதைத் தான் புறநானூறும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா!"  தீமையும் நன்மையும் அடுத்தவர்களால் வருவதில்லை.  வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் முதலான பழமொழிகளும் இதையே சொல்கின்றன.

திருக்குறளின் பல குறள்களில் கர்மா சித்தாந்தத்தின் உண்மைகள் பிரதிபலிக்கின்றன.  உதாரணத்திற்கு ஒரு குறளைப் பார்ப்போம்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.

(நிழல் ஒருவரை விட்டுப் பிரியாமல் அவர் அடியிலேயே தொடர்ந்து வருவதைப் போல் தீமை செய்பவரைத் துன்பம் தொடர்ந்து வரும்.)

செயலோடு விளைவு நிழல் போலத் தொடரும். இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்வதானால் நிழல் கூட இருட்டில் தொடர்வதில்லை. கர்மா ஒருவரைத் தொடராமல் இருப்பதில்லை. நன்மையும் தீமையும் செய்தவனுக்குத் தகுந்த பலனை என்றுமே தராமல் இருப்பதில்லை.

இந்த கர்மா சித்தாந்தத்தை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமானால்  இறைவனை நம்புகிறவர்களுக்குப் பல நிகழ்வுகளுக்கு விளக்கம் காண முடியாமல் போகும்.

உதாரணத்திற்கு ஒரு அயோக்கியன் நிறைய ஏமாற்று வேலைகள், கொடுமைகள், மோசடிகள் செய்து கொண்டு இருக்கிறான். ஆனால் அவன் துன்பத்தை அனுபவிப்பதில்லை. நன்றாகவே வளமாகவே இருக்கிறான். அதே நேரத்தில் இன்னொருவன் மிக நல்லவனாகவும், நியாயமானவனாகவும், நேர்மையானவனாகவும் இருந்தும் கூட துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கிறான். பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறான். இந்த உதாரணம் கற்பனையானது என்று சொல்வதற்கில்லை. இன்று நம்மால் இதைப் பல இடங்களில் பார்க்க முடிவது தான்.

பதவி, பணம், அதிகாரம் இருந்தால் இப்படி எல்லாம் நடப்பது சகஜம் தான், இது கலிகாலம் என்று சொல்லி விட்டு விட முடியுமா?

அப்படியானால் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். தர்மத்தை நிலை நாட்ட வேண்டியவன் இப்படி அதர்மம் ஜெயிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது நியாயமா? தவறு செய்தவன் தண்டிக்கப்படாமல் நன்றாக இருப்பதும், நல்லவன் நன்றாக இருக்காமல் தண்டிக்கப்படுவதும் சரி தானா? சிலர் எல்லாம் இறைவன் விளையாட்டு என்று சொல்வதுண்டு. இப்படி விளையாடுவது இறைவனுக்கு அழகா என்றெல்லாம் கேட்கத் தோன்றும் அல்லவா?

சரி இதைச் செய்வது இறைவன் அல்ல, சாத்தான் என்று சொன்னால் சாத்தானைக் கட்டுப்படுத்த முடியாதவன் இறைவன் என்று அர்த்தமாகும் அல்லவா?

இங்கு தான் கர்மா எல்லாவற்றிற்கும் பதிலாக அமைகிறது. இப்பிறவியிலோ, முற்பிறவியிலோ செய்திருக்கும் நன்மைகள், தீமைகளின் பலன்கள் தான் இப்போது ஒவ்வொருவரும் அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் காரணம் என்பது பொருத்தமான பதிலாக இருக்கும். முன்பு நன்மை செய்த கர்மாவை இன்று நல்லபடியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவன், இன்று கெட்டவனாக இருந்து இப்போது தீமைகள் செய்தால் அதன் தீய பலன்கள் வரிசையாக அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அது சிறிது காலத்திலேயோ, சற்று அதிக காலத்திலேயோ அவனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும். அந்தத் தீய பலன்களை அனுபவிப்பதற்கு முன்னால் அவன் இறந்து போனால் கூட அவன் அந்தக் கர்மாவில் இருந்து தப்பித்து விட முடியாது. அடுத்த பிறவியிலும் அவனை அந்தக் கர்மா விதியாகத் தொடரவே செய்யும். அதன் பலனை அவன் அனுபவித்து முடிகிற வரை அது விடாது.

நேர்மையாளனாகவும், நன்மை செய்பவனாகவும் இருந்த போதும் ஒருவன் கஷ்டப்படுகிறான் என்றால் அவன் முந்தைய தீய கர்மாக்களின் பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்று பொருள். அந்த தீய பலன்களை அவன் அனுபவித்து முடிந்தவுடன் அவன் கஷ்டங்களும் விலகி விடும். அதன் பின் நல்ல கர்மாக்களின் பலனை அவன் அனுபவிக்க ஆரம்பித்து விடுவான். ஒருவேளை அவன் அந்த நல்ல பலனை அனுபவிப்பதற்கு முன் இறந்து விட்டாலும் கூட அடுத்த பிறவிக்கு அந்த நல்ல பலன்கள் தொடரவே செய்யும். அதுவும் கூட பலன்களைத் தந்து முடிக்காமல் அவனை விடுவதில்லை.

இந்த கர்மா சித்தாந்தத்தைத் தெளிவாக உணர்வது மனிதர்களை நல்வழிப்படுத்த உதவும். இன்றில்லா விட்டாலும் என்றாவது தங்கள் செய்கைகளுக்குப் பலனை அனுபவித்தாக வேண்டும் என்பதை ஒரு மனிதன் உறுதியாக உணர்ந்தானானால் அவன் அறிந்து தவறு செய்ய மாட்டான்.

இன்று நன்றாக இருக்கிறோம் என்றால் நாம் முன்பு செய்திருக்கிற நல்ல கர்மாக்களின் பலன் தான் காரணம். இனியும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், நன்மைகளைப் பெற வேண்டுமென்றால் நாம் தொடர்ந்து நல்ல செயல்களையே செய்து வர வேண்டும் என்கிற ஞானம் கர்மா சித்தாந்தத்தை அறிந்தவனிடம் இருக்கும்.

அதே போல் இன்று துன்பங்களை அனுபவிக்கிறோம் என்றால் முன்பு செய்த தீமைகளின் பலனை அனுபவித்து அதைத் தீர்த்துக் கொண்டிருக்கிறோம். இனியும் இது தொடரக்கூடாது என்றால் நாம் நன்மைகளைச் செய்தல் வேண்டும் என்ற ஞானமும் கர்மா சித்தாந்தத்தை அறிந்தவனிடம் இருக்கும்.  

அப்படி அறிந்தவன் நல்லவன் கஷ்டப்படுவதையும், கெட்டவன் நன்றாக இருப்பதையும் கண்டு ‘கெட்டவர்க்குத் தான் காலம்என்று தானும் கெட்டுப் போக மாட்டான். இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்ப துன்பங்களுக்குப் பின்னால் முந்தைய கர்மாக்கள் இருக்கின்றன என்று தெளிந்து அதனால் பாதிக்கப்படாமல் நேர்வழியில் நடப்பதைக் கைவிட மாட்டான்.

பலர் இறைவனை வணங்குவதாலும், கோயில் உண்டியலில் காசைப் போடுவதாலும் கெட்ட கர்மாக்களைக் கழித்து விடலாம் என்று தவறாகக் கணக்கிட்டு விடுகிறார்கள். அந்த சிந்தனை உள்ளவர்கள் திருந்தவும் முனைவதில்லை. அவர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து இறைவனிடமே தந்திரமாக நடந்து கொள்கிறார்கள். இதில் எல்லாம் கர்மா கழிவதில்லை. உன்னைப் புகழ்கிறேன், உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். என்னைக் கண்டு கொள்ளாதே’  என்பது போன்ற லஞ்சத்தில் இறைவன் ஏமாறுவது இல்லை. ஏமாறுவது அவர்கள் தான்.

எனவே ஆன்மிக மார்க்கத்தில் செல்பவர்கள் கர்மாவைச் சரியாகப் புரிந்து கொள்வது மிக அவசியம். அது பல தவறுகளைத் தவிர்க்கும். எல்லா சந்தர்ப்பங்களிலும் சரியான பாதையிலேயே பயணிக்க வைக்கும்.

-          என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் - 29-10-2013

Thursday, February 20, 2014

பரம(ன்) ரகசியம் – 85



ணபதியைக் கொன்று விட்டால் எதிர்ப்பு சக்தியை அழித்து விடலாம் என்று கேள்விப்பட்டவுடன் மறுபடி வீடியோ கான்ஃப்ரன்சிங்கில் ஆலோசனை செய்தார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி பாபுஜி ஜான்சனை அழைத்துப் பேசினார்.

“ஏன் ஜான்சன் அந்தப் பையன் கணபதி விசேஷ மானஸ லிங்கத்துக்கு அவசியம் தானா?

ஜான்சன் சொன்னார். “தெரியலை. தென்னரசும், குருஜியும் தான் அந்த சிவலிங்கத்திற்கு நித்ய பூஜை தடைபட்டு விடக் கூடாதுன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அப்படி பூஜை அவசியம்னா கணபதியை விட்டால் நமக்கு வேற வழி கிடையாது

அந்த விசேஷ மானஸ லிங்கத்துக்கு பூஜை செய்யாட்டி என்ன ஆகும்?ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள்.

“தெரியலை. குருஜியைத் தான் கேட்கணும்”  ஜான்சன் சொன்னார்.

உடனடியாக குருஜியிடம் ஜான்சனும், பாபுஜியும் போனார்கள். கணபதியைக் கொன்றால் என்ன என்கிற ரீதியில் பாபுஜி கேட்ட்தும் குருஜிக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. ஆனால் கண்ணைக் கூட இமைக்காமல், பாதிப்பையே காட்டாமல் குருஜி பாபுஜியைப் பார்த்தார். இவனிடம் நல்லது கெட்டது பேசிப் புண்ணியம் இல்லை. வியாபாரியிடம் லாப நஷ்டக் கணக்கு தான் பேச வேண்டும். விசேஷ மானஸ லிங்கம் சக்தி வாய்ந்ததாய் இருக்கணும்னா அதுக்கு தொடர்ந்து நித்ய பூஜை நடந்து தானாகணும்.  இவனுக்கு முன்னாடி ரெண்டு நாள் அதுக்குப் பூஜை செய்தவன் பயந்து ஓடினதுக்கப்புறம் இவனைக் கூட்டிகிட்டு வர ஒரு நாளுக்கு மேல ஆச்சு. அந்த நாள்ல வேதபாடசாலையில் சித்தரே ரகசியமாய் வந்து பூஜை செய்துட்டுப் போயிருக்கார். அப்படின்னா நித்ய பூஜை எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கணும். அவனைக் கொன்னுட்டா அந்த சிவலிங்கத்தோட மதிப்பு வெறும் ரெண்டாயிரம் ரூபாய் ஆயிடும். உனக்கு கேட்டதெல்லாம் கொடுக்கிற கல்பவிருக்‌ஷம்  வேணுமா இல்லை ரெண்டாயிரம் ரூபாய் அவசரமாய் தேவைப்படுதா?

பாபுஜிக்கு அந்த நாளில் அந்த சிவலிஙகத்தின் மீது  திபெத் பகுதியில் பூக்கும் காட்டுப் பூக்கள் இருந்ததாய் கேள்விப்பட்டதும் ஞாபகம் வந்தது.  மன உளைச்சலுடன் பாபுஜி அழாத குறையாகக் கேட்டார். அப்படின்னா என்ன தான் செய்யறது குருஜி

“எல்லாருமா சேர்ந்து வேறெதாவது வழியை யோசிங்க பாபுஜி. எனக்கு உடம்பு சரியாயிருந்தா நானே ஏதாவது வழி கண்டுபிடிச்சுச் சொல்லி இருப்பேன்...என்று சொல்லி குருஜி கண்களை மூடிக் கொள்ள வேறு வழியில்லாமல் இருவரும் வெளியே வந்தார்கள்.

ஜான்சனையும் கூட்டிக் கொண்டு தனதறைக்குப் போன பாபுஜி மறுபடியும் அந்த அறுவருடனும் ஆலோசனை நடத்தினார். ஆறு பேரும் பரபரப்புடனும், டென்ஷனுடனும் பைத்தியம் பிடித்தது போல இருப்பதாக ஜான்சனுக்குத் தோன்றியது. அவருக்கு அதைத் தப்பு சொல்லத் தோன்றவில்லை. இப்படியொரு மகாசக்தி நிரூபணமாகி அவர்கள் வசம் இருக்கையில் அதை உபயோகிக்க வழியில்லாமல் போனால் பின் எப்படித் தான் இருக்கும்? அவருக்கே இப்போது பணம் நிறைய வேண்டி இருக்கிறது. விவாகரத்து செய்த மனைவிக்குத் தரவேண்டிய பணம் அற்ப சொற்பம் அல்ல. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று விட்டால் அவரும் பின் எப்போதும் பணத்திற்குக் கவலைப்பட வேண்டியதில்லை... விசேஷ மானஸ லிங்கம் தயவு செய்யுமா?

குருஜி அவன் அறைக்குள் வந்த போது கணபதிக்கு பரபரப்பு தாங்கவில்லை. “கூப்பிட்டிருந்தால் நானே வந்திருப்பேனே குருஜி என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே வரவேற்றான்.

குருஜி அவனைக் கனிவுடன் பார்த்துச் சொன்னார். “நான் கிளம்பறேன் கணபதி உன் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்

அவருக்கு வேறுபல வேலைகள் இருப்பதால் அதையெல்லாம் கவனிக்கப் போகிறார் என்று நினைத்த கணபதி தலையாட்டினான். குருஜி அவனிடம் ஒரு உறையை நீட்டினார். “இது உனக்கு நான் தர வேண்டிய பணம். இன்னும் ரெண்டு அல்லது மூணு நாளைக்கு மேல் நீ இங்கே இருக்க வேண்டி வராதுன்னு நினைக்கிறேன். அதனால அது வரைக்கும் கணக்கு போட்டு தந்திருக்கேன்

அந்தப் பணத்தை வாங்க அவனுக்கு கூச்சமாய் இருந்தது. பணத்திற்காகத் தானே எனக்கு பூஜை செய்தாய் என்று சிவன் கேட்பது போல இருந்தது. ஆனால் அம்மாவிடம் அவன் நல்ல தொகை கிடைக்கும் என்று சொல்லி விட்டுத் தான் கிளம்பி வந்திருக்கிறான். சுப்புணிக்கும் அவன் பிள்ளையாருக்குப் பூஜை செய்ததுக்குப் பணம் தர வேண்டும். என்ன தான் செய்வது என்ற தர்மசங்கடம் அவன் முகத்தில் தெரிந்தது.

குருஜிக்கு அவன் தர்மசங்கடம் புரிந்தது. புன்னகையோடு சொன்னார். “நான் கிளம்பறேன்னு நினைச்சவுடனே என் கனவுல உன்னோட சிவன் கணபதி கணக்கை செட்டில் பண்ணாம போயிடாதேன்னு உத்தரவு போட்டுட்டார். அதனால தான் உடனே கொண்டு வந்துட்டேன்...

கணபதிக்கு கண்கள் நிறைந்தன. ‘இந்த சிவனுக்குத் தான் எத்தனை பாசம் என் மேல. என் நிலைமையைப் புரிஞ்சு வச்சுட்டு குருஜி கிட்ட இப்படி சொல்லி இருக்காரே”. சிவனே சொன்ன பிறகு பணம் வாங்க அவனுக்குத் தயக்கம் இருக்கவில்லை. சந்தோஷமாக வாங்கிக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் குருஜி மனம் லேசாகியது. கிளம்பினார். கணபதி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான். குருஜிக்கு கால்களும் மனதும் கூசின. உன்னை ஆசிர்வதிக்கிற அளவுக்கு எனக்கு வயசு ஒன்னைத் தவிர வேற எந்த தகுதியும் இல்லையே கணபதி!என்று மனதில் அழுதார்.

வாசல் வரை போனவர் திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டார். “எனக்கு ஒரு உபகாரம் செய்வியா கணபதி?

“என்ன இப்படிக் கேட்கறீங்க குருஜி. உத்தரவு போடுங்க. நான் செய்யறேன்

“நீ உன் சிவனையும் பிள்ளையாரையும் கும்பிடறப்ப எனக்காகவும் வேண்டிப்பியா? சொல்லும் போதே அவர் குரல் உடைந்தது.

அவர் தமாஷ் செய்கிறாரோ என்ற சந்தேகம் கணபதிக்கு வந்தது. ஆனால் அவர் உணமையாகவே கேட்கிறார் என்பது புரிந்த போது அவன் நெகிழ்ந்து போனான். என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து இப்படிக் கேட்கிறாரே இத்தனை பெரிய மனிதர்என்று நினைத்தவனாய் கைகூப்பியபடி சொன்னான். “கண்டிப்பா வேண்டிக்கறேன் குருஜி”.
கடைசியாக ஒரு முறை கண்கள் நிறைய அவனைப் பார்த்து விட்டு குருஜி அங்கிருந்து கிளம்பினார்.

பாபுஜி மறுபடியும் மற்றவர்களைக் கலந்தாலோசித்தார். எகிப்தியர் திட்டவட்டமாகச் சொன்னார். “பாபுஜி. நீங்கள் இனி எதற்கும் குருஜியை நம்பிப் பயனில்லை.... நமக்கு உதவ வேறு யாரையாவது கண்டுபிடிப்பது நல்லது

தென்னாப்பிரிக்கர் சொன்னார். “யாரோ தடுப்பு மந்திரமோ, சூனியமோ செய்திருக்கிறார்கள். அதை உடைக்க ஒரு திறமையான ஆளைப் பிடிப்பது நல்லது பாபுஜி. எங்கள் நாட்டில் இருந்து கூட என்னால் ஆளை அனுப்ப முடியும். ஆனால் உடனடியாக  அனுப்புவதில் விசா, போலீஸ் கண்காணிப்பு என்று நிறைய சிக்கல் இருக்கிறது. உங்கள் நாட்டிலேயே ஒரு ஆளைப் பிடித்து உடனடியாக அந்த தடுப்பு சக்தியை உடைக்கப் பாருங்கள்... உதயன் சுவாமியை வரவழைக்க முடியுமா என்று இன்னொரு தடவை குருஜியிடம் கேட்டுப் பாருங்களேன்.

இதற்கு முன்னால் அதைக் கேட்டதற்கு என்னை ஏதோ அபசாரம் செய்தது மாதிரி குருஜி பார்த்தார். பணத்தினால் வாங்க முடியாத விஷயங்கள் உலகத்துல இருக்குன்னு கடுமையாய் சொன்னார். அதனால இன்னொரு தடவை கேட்கறதில் அர்த்தமே இல்லை

அப்படியானால் வேறு யாராவது ஆளைச் சீக்கிரமாய் பார்த்துச் செய்ய வேண்டியதை உடனடியாகச் செய்யுங்கள்என்றார் எகிப்தியர்.


பரபரப்புடன் யோசித்து விட்டு பாபுஜி உடனடியாகத் தன் நெருங்கிய நண்பர்களுக்குப் போன் செய்தார். விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றிச் சொல்லாமல் மந்திரம் சூனியம் ஆகியவற்றை உடைக்க முடிந்த நம்பகமான ஆள்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார். இரண்டு நண்பர்கள் கேரளாவில் இருக்கும் நம்பீசன் என்ற ஒரு மந்திரவாதியைச் சொன்னார்கள். செய்யும் வேலைக்கு அவர் வாங்கும் கூலி அதிகம் என்றாலும் அவர் சக்தி வாய்ந்தவர், ரகசியம் காக்கும் நம்பிக்கையான மனிதர், அவரை சில வேலைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம், அவர் சக்தியை நேரடியாக உணர்ந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு மேல் யோசிக்காமல் உடனடியாக பாபுஜி அந்த மந்திரவாதியைத் தொடர்பு கொண்டார். என்ன பணம் வேண்டுமானாலும் தருகிறேன். உடனே விமானத்தில் கிளம்பி வாருங்கள்”.  ஒப்புக் கொண்டு நாளை அதிகாலை வந்து சேர்வதாக அந்த மந்திரவாதி உறுதியளித்தார்.

பாபுஜி தயக்கத்துடன் தான் நாளை காலை ஒரு மந்திரவாதி வரப் போவதாக குருஜியிடம் தெரிவித்தார். தன்னைக் கேட்காமல் அந்த ஏற்பாட்டைச் செய்ததற்காக அவர் கோபிப்பாரோ என்று நினைத்தார். ஆனால் குருஜி “நல்லதுஎன்று சொன்னார். எப்போதோ மனதளவில் விலகி விட்ட பிறகு யார் வந்தால் எனக்கென்ன என்ற எண்ணம் தான் குருஜியிடம் மேலோங்கி இருந்தது.  

குருஜியும் பாபுஜியிடம் இன்னொரு தகவலைத் தெரிவித்தார். “எனக்கு உடம்பு எதனாலேயோ சுகமில்லை. குணமாகிற மாதிரியும் தெரியலை. அதனால நான் இப்பவே கிளம்பிப் போயிடலாம்னு நினைக்கிறேன் பாபுஜி

உபகாரமில்லாத ஆள் இருந்தென்ன போயென்ன என்ற எண்ணத்தில் இருந்த பாபுஜி முகத்தில் மட்டும் கவலையையும், அக்கறையையும் காட்டி கடைசியில் சம்மதித்தார். ”..... என்னால ஏதாவது ஆக வேண்டி இருந்தால் சொல்லுங்கள் குருஜி

குருஜி தலையசைத்தார். குருஜி கிளம்பிப் போகிறார் என்பதை பாபுஜி மூலம் அறிந்து ஜான்சனும், மகேஷும் உடனடியாக வந்தார்கள். இருவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தவரே இப்படி பாதியில் விலகிப் போகிறாரே  என்று ஜான்சன் உண்மையிலேயே வருத்தப்பட்டார். குருஜி இருக்கும் போது அவருக்கு தைரியமாய் இருந்தது. அவர் விஞ்ஞானமும், குருஜியின் அனுபவ ஞானமும் நல்ல கூட்டு சக்தியாக இருந்தது. குருஜி அளவுக்கு வரப் போகிற மந்திரவாதிக்கு இந்த விஷயத்தில் ஆழமான ஞானம் இருக்க வாய்ப்பில்லை என்று அவர் நிச்சயமாக நம்பினார். “ஆராய்ச்சியில் பங்கெடுக்கா விட்டாலும் பரவாயில்லை குருஜி  ஆலோசனை தரவாவது நீங்கள் இருந்தால் நல்லாயிருக்கும்என்று சொல்லிப் பார்த்தார். உடல்நலத்தைக் காரணம் காட்டி குருஜி மறுத்து விட்டார்.

மகேஷிற்கும் குருஜி போவது வருத்தமாய் இருந்தது.  முதலில் தென்னரசு... இப்போது குருஜி... குருஜி சொல்லிக் கொண்டாவது போகிறார். தென்னரசு அதைக் கூடச் செய்யவில்லை. திடீர் என்று மாயமானவர் பின் அவனைத் தொடர்பு கொள்ளவே இல்லை. அவர் செல் போனிற்கு போன் செய்த போதெல்லாம் “ஸ்விட்ச்டு ஆஃப்என்ற தகவலே வந்து கொண்டிருந்தது. குருஜியிடம் மகேஷ் கேட்டான். “தென்னரசு அங்கிள் உங்க கிட்டயாவது  போறதுக்கு முன்னாடி சொல்லிட்டு போனாரா குருஜி?

“இல்லை...குருஜிக்கு தென்னரசு நினைவும் மனதை அழுத்தியது. எல்லாம் ஏதோ ஒரு உத்தேசத்தில் ஆரம்பித்து எப்படி எல்லாமோ முடிந்து விட்டதே!

மகேஷிற்கு சந்தேகம் வலுத்தது. அவனிடம் சொல்லா விட்டாலும் கூட தென்னரசு குருஜியிடம் சொல்லாமல் போகிறவர் அல்ல.....

குருஜி கிளம்பி விட்டார். அவரை வழியனுப்ப பாபுஜி, ஜான்சன், மகேஷ் மூவருமே வந்தார்கள். குருஜி யாரிடமும் எதுவும் பேசவில்லை. தியான மண்டபத்தைத் தாண்டித் தான் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் போக வேண்டி இருந்தது. அவருக்கு கடைசியாக ஒரு முறை விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்க்கத் தோன்றியது. வாசலில் இருந்தே எட்டிப் பார்த்தார். விசேஷ மானஸ லிங்கம் ஒருவித வித்தியாச ஜொலிப்பில் இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. ஹரிராம் அவரது வழக்கமான இடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அவரிடமும் அந்த ஜொலிப்பு பிரதிபலிப்பது போலத் தோன்றவே குருஜிக்கு உள்ளே ஒரு பொறி தட்டியது. ஹரிராம் தான் அந்த மூன்றாவது ஆள்...!

பாபுஜி ஜான்சனைக் கேட்டார். “இவர் மட்டும் ஏன் இன்னும் தனியா உட்கார்ந்து தியானம் செய்யறார்

ஜான்சன் சொன்னார். தினமும் மணிக்கணக்கில் தியானம் செய்கிறவர் அவர். இந்த ஆராய்ச்சியில் சிவலிங்க சக்தியில லயிக்க முடியாட்டியும் தன்னோட வழக்கமான தனிப்பட்ட தியானத்தையாவது செய்யலாம்னு உட்கார்ந்த இடத்திலேயே அதைச் செய்ய ஆரம்பிச்சிருப்பார்....

‘இந்த மாதிரி ஆளெல்லாம் நம் பக்கம் இருந்து கூட எல்லாம் இப்படி திடீர் என்று தடைப்பட்டு நிற்கிறதேஎன்று பாபுஜி ஆதங்கப்பட்டார்.

இப்படி அவர்களால் பேசப்பட்டும் எண்ணப்பட்டும் இருந்த ஹரிராம் EEG மெஷினை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் அவர் ஐந்து சிபிஎஸ் தீட்டா அலைகளில் மிக ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் காட்டி அவர்கள் கவனத்தை மேலும் கவர்ந்திருக்கும்.

இது வரை அவர் விசேஷ மானஸ லிங்கத்தின் முன் அமர்ந்து செய்த தியானங்களில் மிகவும் கவனமாக ஒரு எல்லைக்குள் இருந்திருந்தார். விசேஷ மானஸ லிங்கம் இழுப்பது போல் தோன்ற ஆரம்பித்த முதல் கணத்திலேயே பின்வாங்கி வந்திருந்தார். அன்று காலை ஆராய்ச்சியின் போது மந்திரக் காப்புச் சுவரை விசேஷ மானஸ லிங்கத்தின் முன்பு எழுப்பும் போது கூட, முன்பு கற்றிருந்த வித்தை தான் வேலை செய்ததே ஒழிய விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு அவருக்கு முழுமையாக ஐக்கியமாக முயல முடியவில்லை.

ஆராய்ச்சிகள் தடைப்பட்டு மற்றவர்கள் எல்லோரும் போன பிறகு அவருக்கு தியானத்தில் அமரத் தோன்றியது. யார் தொந்திரவும் இல்லாமல் அமர்ந்த அவர் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் வைத்துக் கொள்ளாமல் தியானத்தை ஆரம்பித்து பின் விசேஷ மானஸ லிங்கத்தில் கவனத்தைக் குவித்து அதன் அலைகளுடன் ஐக்கியமாக ஆரம்பித்தார். வழக்கம் போலவே பிரம்மாண்ட உணர்வுகளுடன் கூடிய மிக அழகான அனுபவம்... விசேஷ மானஸ லிங்கம் ஜெகஜோதியாய் மின்ன ஆரம்பித்தது.... பின் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.....  தீஜ்வாலையாய், அக்னிமலையாய் கண்ணுக்கும் கருத்துக்கும் அடங்காத விஸ்வரூபம் அது..  அதற்கடுத்ததாய் அது தன்னிடம் அவரை இழுப்பது போலத் தோன்றியது. முன்பு போல அதற்குச் சிக்காமல் மீண்டு வரும் முயற்சி எதிலும் அவர் ஈடுபடவில்லை. அந்த விசேஷ மானஸ லிங்கம் அவரை ஆட்கொள்ள விட்டார்.

ஒரு கணம் ஒரு பெருஞ்சுழியில் அவர் சிக்கிக் கொண்டது போல இருந்தது. மறு கணம் அவர் தலைக்குள் அக்னிப்பந்து ஒன்று புகுந்து கொண்டது போல் இருந்தது. எதுவும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் எதையும் கட்டுப்படுத்தவும் விரும்பவில்லை. அந்த மகாசக்தியின் பிரவாகத்தில் பல நிலைகளுக்கு அடித்துச் செல்லப்படும் சிறு துரும்பாக அவர் உணர்ந்தார். என்னென்னவோ ஆகியது... வார்த்தைகளுக்கு சிக்காத எத்தனையோ நிலைகள்.... எத்தனையோ பயணம்... ‘ஹரிராம்என்ற அடையாளத்துடன் கூடிய நான் ஒரு கட்டத்தில் மறைந்தே போனது. சர்வமும் அமைதியாகியது. ஒரு மகத்தான மௌனம் மட்டுமே நிலவியது.....

எத்தனை காலம் அந்த மோன நிலையில் இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. சிறிது சிறிதாக அவர் நினைவு திரும்பிய போது அவர் புடம் போட்ட தங்கம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.

இத்தனை கால அவர் வாழ்க்கையில் எத்தனையோ கோடிட்ட இடங்கள் இருந்தன. அர்த்தம் புரியாத, அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாத இடங்கள் இருந்தன. இப்போதோ அவர் வாழ்க்கையின் அத்தனை கோடிட்ட இடங்களும் அர்த்தத்தோடு நிரம்பி இருந்தன. மிகப் பெரிய புரிதல் நிகழ்ந்திருந்தது. யாருமே கற்றுத் தர முடியாத, கடைசியில் மட்டுமே அந்தராத்மாவில் உணரக் கூடிய ஞானம் கிடைத்திருந்தது. அது கேள்விகள் இல்லாத, பதில்கள் தேவைப்படாத ஒரு பரிபூரணமான நிலை. ஜன்ம ஜன்மாந்திரங்களாய் தேடியும், காத்தும் இருந்த உன்னதமான நிலை....!

குருஜியும் போன பிறகு மகேஷிற்கு அங்கிருக்கவே மனமில்லை. தனிமைப்படுத்தவன் போல அவன் உணர்ந்தான். போரடித்தது. அப்பாவிற்குப் போன் செய்தான். “அங்கே எல்லாம் எப்படிப்பா இருக்கு?

விஸ்வநாதன் சொன்ன தகவல்கள் இடியாய் அவன் தலையில் விழுந்தது. விஷாலி இப்போது அவன் வீட்டில் இருக்கிறாள். ஈஸ்வரும் அவளும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். ஈஸ்வரின் அம்மா அமெரிக்காவில் இருந்து வந்து விட்டாயிற்று....

மகேஷ் உள்ளே அணு அணுவாய் நொறுங்க ஆரம்பித்தான். இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று தோன்றியது.

(தொடரும்)


என்.கணேசன்

Tuesday, February 18, 2014

தினமணிக்கதிரில் ’சங்கீத மும்மூர்த்திகள்’


16.02.2014 தேதிய தினமணிக்கதிரில் என் சங்கீத மும்மூர்த்திகள் நூலில் இருந்து ‘ஒன்ஸ் மோர்’ பகுதியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

-என்.கணேசன்

Monday, February 17, 2014

ஆராய்ந்து பழகுங்கள்!


க்நாத் ஈஸ்வரன் தியான முறைகளைப் பற்றி நிறைய எழுதியும், பிரசங்கங்கள் செய்தும் அமெரிக்காவில் ஆன்மிகம் பரப்பிய அறிஞர். அவர் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் தினமும் பள்ளியில் எந்த நண்பனுடன் என்னவெல்லாம் விளையாடினேன் என்பதை எல்லாம் தன் பாட்டியிடம் போய்ச் சொல்வாராம். அதனால் அவருடைய பாட்டிக்கு அவர் நண்பர்கள் பெயர்கள், அவர்கள் குணங்கள் எல்லாம் அத்துபடி.

சில நாட்கள் சென்ற பிறகு அவரது பாட்டி அவர் சொல்லாமலேயே அவரைப் பார்த்தவுடனேயே அன்று யாருடன் சேர்ந்து அதிகம் விளையாடி இருக்கிறார் என்பதைச் சொல்லி விடுவாராம். ஏக்நாத் ஈஸ்வரனுக்கு ஆச்சரியமாய் இருக்குமாம்.

“எப்படி பாட்டி நீங்கள் சரியாகச் சொல்கிறீர்கள்என்று ஒருமுறை ஏக்நாத் ஈஸ்வரன் திகைப்புடன் கேட்ட போது பாட்டி சம்ஸ்கிருதப் பழமொழி ஒன்றைச் சொன்னாராம். “சம்சர்கத் தோஷகுணா பவந்தி”.யாருடன் சேர்கிறோமோ அவர்களைப் போலவே ஆகி விடுகிறோம்என்று அதற்குப் பொருள்.

அதன் பொருள் அப்போது தனக்கு விளங்கவில்லை என்றும் பிற்காலத்தில் தியான வழிகளில் ஆழமாய் ஈடுபட்ட போது பூரணமாய் விளங்கியது என்றும் ஏக்நாத் ஈஸ்வரன் பிற்காலத்தில் கூறினார். நாம் நெருங்கிப் பழகும் நபர்களின் வலுவான தன்மைகள் நம்மை அறியாமல் நம்மிடம் ஏற்பட ஆரம்பிக்கின்றன. அவர்கள் சிந்தனைகள், செயல்கள், சொற்கள் ஆகியவற்றின் தாக்கம் நம் சிந்தனைகள், செயல்கள், சொற்களில் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்த உண்மை மற்ற எல்லா பருவங்களையும் விட அதிகமாய் இளமைக்காலத்திற்குப் பொருந்தும்.

உளவியல் அறிஞர்கள் 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு குடும்பத்தை விட அதிகமாய் நண்பர்களையே முக்கியமாய் நினைக்கத் தோன்றும் என்று கூறுகிறார்கள். எனவே இந்த வயதில் ஏற்படும் நட்பு அவர்களை திசை திருப்பும் சக்தி வாய்ந்தது என்று கருதுகிறார்கள். அதனால் இந்த பதின்ம வயதில் சரியான நட்பைத் தேர்ந்தெடுப்பது மற்ற பருவங்களைக் காட்டிலும் மிக முக்கியமாகிறது.

அக்காலத்தில் நம் முன்னோர்கள் சத்சங்கம் என்று சொன்னது இந்த உளவியல் உண்மையைப் புரிந்து கொண்டதால் தான் என்று தோன்றுகிறது. குருகுலத்தில் கல்வி பயிலும் முறை இருந்தது, அரும்பும் பருவத்தில் நல்ல மன அலைகள் மாணவர்களிடத்தில் நிலவ வேண்டித் தான். அறிஞரான ஆசிரியரின் கண்காணிப்பில் தவறான போக்கு மாணவர்களிடம் ஏற்பட அங்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. 

நல்ல மனிதர்களை அதிகம் கவனிக்கும் போது, அவர்களுடன் அதிகம் பழகும் போது அவர்களிடம் வெளிப்படும் நற்பண்புகள் மீது நமக்கு ஈர்ப்பும், மரியாதையும் ஏற்படுகிறது. எதை அதிகம் மதிக்கிறோமோ, எது அதிகம் நமக்கு பிடித்திருக்கிறதோ அதன் தாக்கம் சிறிது சிறிதாக நம்முள் ஏற்பட ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் அதன் தாக்கங்கள் மிக நுணுக்கமாக இருப்பதால் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஏற்படும் தாக்கங்கள் பின்பு நம்மிடம் அதே போன்ற குணாதிசயங்களை ஏற்படுத்தி விடக்கூடியவை.

பொறுமையாக இருப்பவர், திறமையாக இருப்பவர் நடந்து கொள்கின்ற விதங்கள் சேர்ந்து இருக்கின்றவர்க்கு வழிகாட்டுதலாக இருக்கும். அந்தக் குணங்களால் கிடைக்கிற மரியாதையும், அதனால் ஏற்படும் நல்ல பலன்களும் பல நல்ல புத்தகங்களை விட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரேயடியாக முழுமையாக அதே போல் மாறா விட்டாலும் கூட ஓரளவாவது, சின்னச் சின்ன விஷயங்களிலாவது சேர்ந்து இருப்பவர்களை மாற்றும்.

அதே போல் அதிகமாய் கோபம் கொள்கிறவர், தீய பழக்கங்களில் ஈடுபடுபவர்களும் நெருங்கி இருப்பவர்களுக்குத் தவறான வழிகாட்டிகளாக மாறி விடுகிறார்கள்.  இது தான் சரி, இது தான் வாழ்க்கையை அனுபவிப்பது என்று அர்த்தப்படுத்திக் கொள்வது அறியாத இளமைப்பருவத்தில் எளிதாகி விடுகிறது. மனப்பக்குவம் ஏற்படும் காலத்திற்கு முன்பே தீயவை மனதில் பதிந்து விட்டால் பின் அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபமாக இருக்காது. 

திருக்குறளில் நட்புக்கு ஐந்து அதிகாரங்கள் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?  நட்பு, நட்பாராய்தல், பழைமை (முதிர்ந்த நட்பு), தீ நட்பு, கூடா நட்பு என்று ஐந்து அதிகாரங்களை நட்பிற்காக திருவள்ளுவர் ஒதுக்கி இருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஆராய்ந்து ஆராய்ந்து ஏற்படுத்திக் கொள்ளாத நட்பு கடைசியில் அழிவதற்குக் காரணமான துன்பத்தைக் கொடுக்கும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.

அதனால் தான் அவர் இன்னொரு திருக்குறளில் அது போன்ற நல்லறிவில்லாதவர்கள் நட்பை விட்டு விலகுவதே ஒருவனுக்கு லாபம் என்று லாபக்கணக்கு கூறுகிறார்.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

இதே கருத்தை டாக்டர் ஜான் யாகர் (Dr. Jan Yager) என்ற அமெரிக்க சமூகவியல் அறிஞர் தன்னுடைய “நட்பால் பாதிக்கப்படும் போது” (When Friendship Hurts) என்ற நூலில் இப்படிக் கூறுகிறார். “நட்பு என்பது வாழ்நாள் முழுவதும் கடைசி வரை நீடிக்க வேண்டும் என்ற கருத்து காலகாலமாக இருந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் சில நட்புகள் முறிந்து விடுவது தான் நல்லது.

டாக்டர் பெவர்லி ஃபெர் என்ற வின்னிபெக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஐம்பது சதவீத விவாகரத்துகளில் நண்பர்கள் பங்கு பிரதானமாக இருப்பதாகச் சொல்கிறார். அவர்கள் கருத்துகள், ஆலோசனைகள் எல்லாம் இது போன்ற மிக முக்கிய முடிவெடுப்புகளில் தீர்மானிக்க உந்துபவையாக இருக்கின்றன என்கிறார். உடல்நலம், மனநலம் இரண்டிலுமே நண்பர்கள் பங்கு அதிகமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

இப்படி முன்னோர்களும், அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் எடுத்துச் சொல்லும் உண்மைகளை யாரும் அப்படியே நம்பி விடக்கூட வேண்டியதில்லை. நாம் இப்போது சில காலம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கும் மனிதர்களின் பழக்கங்கள் குணாதிசயங்கள் ஆகியவற்றை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைத்துக் கொண்டு, நாம் அவர்களுடன் பழக ஆரம்பித்த பின் எத்தனை விஷயங்களில் எப்படி எல்லாம் மாறி இருக்கிறோம் என்பதை இன்னொரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு, பிறகு இரண்டையும் ஒப்பிட்டால் மிகத் தெளிவாக நமக்கே விளங்கும்.

சில பேர் நண்பர்களை மாற்றிக் காட்டுகிறோம் பார் என்று சவால் விட்டுப் போய் தாங்களே மாறி விடுவதுண்டு. ஒரு ஆங்கில வேடிக்கைக் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்.

ஒரு சிறுவன் தூய ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் கொச்சை ஆங்கில வார்த்தைகளை அதிகம் உபயோகப்படுத்துவதைப் பார்த்து வருத்தப்பட்ட பெற்றோர் அவனை ஆக்ஸ்போர்டு பலகலைக்கழக ஆங்கிலப் பேராசிரியரிடம் சில காலம் அனுப்பி வைத்தார்கள். பிறகு மகனின் முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்று அறிய அவர்கள் போன போது அவர்கள் மகனைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு அந்த ஆங்கிலப் பேராசிரியரே கொச்சையான ஆங்கிலத்தில் பதிலளிப்பதைப் பார்த்து துவண்டு போனார்களாம். அவர்கள் மகன் தான் மாறுவதற்குப் பதிலாக அந்தப் பேராசிரியரையே மாற்றி இருக்கிறான்.

இளைஞர்களே, உறவுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் நீங்கள் பிறக்கும் போதே இறைவனால் தீர்மானிக்கப்பட்டவர்கள். ஆனால் இறைவன் உங்களுக்கு மிக முக்கியமான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறான். நண்பர்களை அவன் உங்களுக்காக தேர்ந்தெடுப்பதில்லை. அந்த உரிமையை உங்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறான். அந்த உரிமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நட்புகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.  நல்ல பண்புகளையும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பையும் கொண்டுள்ள நண்பர்களிடம் நெருங்கிப் பழகுங்கள். இதன் மூலம் நீங்கள் வேகமாக நல்ல முறையில் முன்னேற முடிவது மட்டுமல்லாமல் நீங்களும் மற்றவர்களை நல்வழிப்படுத்தும் நல்ல நண்பனாக மாறுவீர்கள்!

-என்.கணேசன்
நன்றி: தி இந்து
  

Thursday, February 13, 2014

பரம(ன்) ரகசியம் – 84

ரிராமிற்கு ஈஸ்வரின் கேள்வி மனதைத் திரும்பத் திரும்ப தாக்கிக் கொண்டிருந்தது.  “நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இது வரைக்கும் ஒருத்தரையாவது நேசிச்சிருக்கீங்களா?

அவர் உயிருக்குயிராக நேசித்த காதல் மனைவி ஒரு குறைப்பிரசவத்தில் குழந்தையுடன் இறந்த பிறகு அவர் யாரையும் நேசித்ததில்லை. அவர் நேசம் என்றால் வலி என்று அர்த்தப்படுத்திக் கொண்டு விட்டார். பார்த்த இடங்களில் எல்லாம் அது சரி என்பதற்கான காரணங்களும் அவருக்குக் கிடைத்தன. கற்ற தியானமும், பெற்ற அபூர்வ சக்திகளும் கூட அவர் மனக்காயத்தை ஆற்றியதில்லை. அபூர்வ சக்திகள் வேறு, மன நிம்மதி என்பது வேறு. அந்த அபூர்வ சக்திகள் பக்குவத்தை வரவழைத்ததில்லை. உள்ளே இருந்த ஒரு வெறுமையை நிறைத்ததில்லை. தற்கொலை முயற்சியிலிருந்து அவரைக் காப்பாற்றி அவருக்குக் குருவாக இருந்த சாதுவிடம் பல காலம் கழித்து அவர் ஒரு முறை கேட்டிருக்கிறார். என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? என்னை சாக விட்டிருக்கலாமே?

“வந்த வேலை முடியாமல் யாரும் சாக முடியாது?

“நான் வந்த வேலை என்ன?

அந்த சாது சின்ன முறுவலுடன் பதில் சொன்னார். “அதை வரண்ட மனதில் நீ தெரிந்து கொள்ள முடியாது. மனதில் ஈரம் வேணும். நேசம் வேணும். உன் மனைவி, குழந்தைன்னு நெருக்கமான மனுஷங்க மேல மட்டும் வர்ற நேசம் அல்ல... எல்லார் மேலயும் வர்ற ஆத்மார்த்தமான நேசத்தை சொல்றேன்.  அந்த நேசம்னா என்னன்னு ஒரு நாள் புரியறப்ப உன் வேலை என்னன்னு தெரியும். உன் வாழ்க்கையோட அர்த்தமும் உனக்குப் புரியும்.

ஆண்டுகள் பல போய், வயது கூடிக் கொண்டே வந்த போதும் ஹரிராமிற்கு கடவுள் உட்பட யாரிடமும் அந்த நேசம் ஏற்பட்டதில்லை. கணபதி தான் அந்த நேசத்தை அடையாளம் காட்டினான். அவருடைய குரு சொன்ன ஈரத்தை அடையாளம் காட்டினான். அவனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டிருந்தது. ஆனால் அவர் அவனையும் நேசிக்க ஆரம்பித்து விடுவோமோ என்று பயந்தார். அந்தப் பயத்தை ஈஸ்வர் அடையாளம் கண்டு கொண்டு தான் கேட்கிறானா இல்லை கல்நெஞ்சக்காரன் என்று முடிவு செய்து விட்டே கேட்கிறானா?

ஈஸ்வரிடம் கருத்துப் பரிமாற்றத்திலேயே அவர் கேட்டார். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இது வரைக்கும் ஒருத்தரையாவது நேசிச்சிருக்கீங்களான்னு கேட்டீங்களே ஏன்?

ஈஸ்வருக்கு குருஜியின் அதிசய மனமாற்றம் பெருத்த மனநிம்மதியை ஏற்படுத்தி இருந்தது. கணபதியைத் தவிர வேறு யாராலும் குருஜியை மாற்றி இருக்க முடியாது என்று ஈஸ்வர் நம்பினான். கணபதியின் கள்ளங்கபடமில்லாத தன்மையும், அவனது அசைக்க முடியாத நம்பிக்கையுமே குருஜியின் அதிரடி மாற்றத்திற்குக் காரணம் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. கொலை கூடச் செய்யத் துணிந்த ஒரு மனிதருக்கு, ஒரு நல்லவனின் நம்பிக்கையைக் கொல்ல மனம் வராமல் போனது மானுடத்தின் வெற்றியே என்று அவன் நினைத்தான்.

ஹரிராமின் கேள்வி மனத்திரையில் வந்து விழ அவன் பதிலளித்தான். “கடவுள் புண்ணியத்துல குருஜி மனம் மாறினதால கணபதி தப்பிச்சான். இல்லாட்டி அவன் நிலைமை என்ன ஆயிருக்கும்னு யோசிச்சீங்களா? பச்சைக் குழந்தை மாதிரி அவன். அவனைத் தடுத்து நிறுத்தி காப்பாத்தணும்னு தோணலையே உங்களுக்கு

யாரையும் யாரும் காப்பாத்தணும்னு இல்லை. அந்த வேலையைக் கடவுள் பார்த்துக்குவார். அதுவும் விசேஷ மானஸ லிங்கத்தைத் தொட்டு சுமந்துட்டு வர முடிஞ்சவன் அவன்....

கடவுள் கிட்ட நல்லவங்களுக்கு எப்பவுமே பாதுகாப்பு உண்டு. ஆனா மனுஷ ரூபத்துல சில மிருகங்கள் உண்டு. அதுக கிட்ட இருந்து நம்மளை மாதிரி ஆளுங்க தான் நல்லவங்களை காப்பாத்தணும். கடவுள் அவங்களை நமக்கு அறிமுகப்படுத்தறதே அதுக்காகத் தான்  

ஹரிராம் மௌனமாக இருந்தார். அவர் தன் மனைவி, குழந்தை மரணத்திற்குப் பின் யார் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள விரும்பியதில்லை.  தன் வாழ்க்கையே பாரமாக இருக்கையில் வேறு மனிதர்களின் பாரங்களை சுமக்க முடியுமா என்ன?  அவனுடைய குருவான சாது அதைத் தான் ஒரு குறையாக நினைத்தாரோ? மனதில் ஈரம் வேணும். நேசம் வேணும்.... எல்லார் மேலயும் வர்ற ஆத்மார்த்தமான நேசம் உனக்கு வரும் போது வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்று சொன்னாரே, அதையே தான் இவனும் சொல்கிறானோ?..
                                                           
இவன் சொல்வது போல் குருஜி மனம் மாறாமல் கணபதிக்கு மூளைச்சலவை செய்திருந்தால் என்ன ஆகி இருந்திருக்கும். குருஜி மனதில் ஓடிய எண்ணங்களைப் பார்த்த போது தான் அவருக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்று புரிந்தது. தீமையை எல்லாம் நன்மை என்று தன் வாக்கு சாமர்த்தியத்தால் குருஜியால் கணபதியை நம்ப வைத்திருக்க முடியும். அவனை அவர்கள் பின் எப்படியும் பயன்படுத்தி இருக்க முடிந்திருக்கும். ஒரு அழகான, புனிதமான கற்புள்ள பெண்ணை வேசியாக்குவது போல் அது.... நினைக்கவே மனம் பதறியது...

கணபதி “எங்க சிவன் எப்படிங்க? பரவாயில்லையா?  என்று கேட்டது நினைவுக்கு வந்தது. சோமாலியக் கொள்ளைக்காரர்களுக்கு அம்மா எல்லாம் இருப்பாங்க இல்லையா? அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும்னு நினைக்கறப்ப அழுகையா வருதுஎன்று சொன்னதும், “எல்லாரும் நல்லா சந்தோஷமாயிருக்கணும்னு கேட்டா என்ன குருஜி?என்று கேட்டதோடு மனதில் ‘ தனித்தனியாய் ஒவ்வொருவரும் கேட்பதை விட இப்படி எல்லாரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று கேட்பது நல்லதுஎன்று நினைத்ததும் நினைவுக்கு வந்தது.

அதோடு சற்று முன் குருஜியிடம் அவன் அழுது சொன்ன வார்த்தைகளும், குருஜி அதற்குக் கட்டுப்பட்ட விதமும், அவன் அங்கிருந்து கிளம்பிய பின் அவன் நின்ற இடத்தை குருஜி தொட்டு வணங்கியதும் ஹரிராமின் வறண்ட இதயத்தைப் பெரிதும் ஈரப்படுத்தின.....

“நான் சொன்னதை அண்ணன் கிட்ட சொல்லிட்டீங்களா?என்று கணபதி அவரிடம் கேட்டு அவர் நினைவலைகளைத் தடுத்தான். ஹரிராம் ஈஸ்வரைப் பார்க்க, கணபதி குருஜி கெட்டவருன்னு அண்ணன் சொன்னது தப்பு என்று சற்று ஆவேசமாகவே சொன்னதை ஆமாம் என்று ஈஸ்வர் முழு மனதுடன் ஒத்துக் கொண்டான். மன்னிச்சுக்கோ கணபதி. எனக்கு அவரை சரியா தெரியலை

“அது பரவாயில்லை அண்ணா. தெரிஞ்சு யாராவது மத்தவங்களைத் தப்பா நினைப்பாங்களாஎன்று கணபதி பெருந்தன்மையுடன் சொல்ல புன்னகைத்த ஈஸ்வர் இனி என்ன செய்வது என்று யோசித்தான்.

குருஜியின் குறுக்கீடு இனி இருக்காது என்பது உறுதியாகி விட்டது. ஆனால் மற்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பது குருஜி பேச்சில் இருந்து புரிந்தது. இனி நடக்க இருக்கும் ஆராய்ச்சி வில்லங்கமான ஆராய்ச்சியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் குருஜியே அவர்கள் சொல்கிறபடி கேட்காதே என்று கணபதியிடம் கூறி இருக்கிறார்.  அவர்களைத் தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஈஸ்வர் யோசித்தான். அது போன்ற கவலை எதுவுமில்லாமல் கணபதி அந்தப் பட்டு வேஷ்டி பிள்ளையாருக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான். ஈஸ்வருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

விசேஷ மானஸ லிங்கத்தை மனதில் நினைத்துக் கொண்டு சொன்னான். “இவன் கவனத்தை என் பக்கம் திருப்புவதே அடிக்கடி கஷ்டமாய் இருக்கிறது. இந்த லட்சணத்தில் இவனுடன் சேர்ந்து இன்னொருவனை வேறு தேடச் சொல்கிறார் சித்தர். வேடிக்கையாயில்லை?

விசேஷ மானஸ லிங்கம் திடீர் என்று ஒளிர்ந்து மறைந்து ஹரிராம் மட்டுமே ஒரு கணம் தெரிந்தார். அந்த மூன்றாவது ஆள் இவர் தானோ? எதிலும் ஒட்டாமல் சிந்தனை வசப்பட்டு நிற்கும் இந்த மனிதர் கணபதியைத் தடுத்து நிறுத்தச் சொன்ன போது கூட அசையாதவர் ஆயிற்றே!  இந்த மனிதர் யார் என்று கூடத் தெரியவில்லையே! கணபதியிடம் கேட்க நினைத்தான்.

கணபதியை மூன்று முறை அழைத்த பிறகு தான் அவன் கவனம் ‘கனவில் வந்திருக்கும் ஈஸ்வர் அண்ணாமீது திரும்பியது. “யார் அவர்?

ஓ...இவரைக் கேட்குறீங்களா? இவர் தான் சிவனை ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறவங்கள்ல ஒருத்தர். பேரு... பேரு...அவனுக்கு அவர் பெயர் நினைவில் வரவில்லை. “உங்க பேர் என்னங்க?என்று கேட்டு விட்டு ஈஸ்வருக்குத் தெரிவித்தான். “ஹரிராம்.

எதிரணியில் ஆராய்ச்சிக்கென்று அழைத்து வரப்பட்டவர் என்று அறிந்ததும் ஈஸ்வருக்கு  சந்தேகம் தலை தூக்கியது. அவரையே கூர்ந்து பார்த்தான். அவரை எடை போடுவது சுலபமாக இல்லை. ஆனால் எதிரணியில் இருந்த போதும் அவர் எதிரியாக இருக்க சாத்தியமில்லை என்றும் தோன்றியது. ஓலைச்சுவடி வார்த்தைகள் படி தூங்காமல் தேடும் போது அல்லவா அவர் கிடைத்திருக்கிறார்.

கணபதி மனத்திரையில் அந்தப் பட்டு வேஷ்டியை தன் பிள்ளையாருக்கு சார்த்தி மறுபடி அழகு பார்க்க ஆரம்பித்திருந்தான். கணபதியையே பார்த்துக் கொண்டிருந்த ஹரிராம் அதை ரசிப்பது போல் தெரிந்தது. நேசமே இல்லாதவர் என்று குற்றம் சாட்டியது தவறோ என்று தோன்ற ஈஸ்வர் அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

அவன் எண்ணை அலைகள் வந்து சேர்ந்தவுடன் ஹரிராம் தன் பார்வையை கணபதியிடம் இருந்து ஈஸ்வரிடம் திருப்பினார். நீங்கள் கேட்டதுல தப்பே இல்லை. நான் பதில் சொல்லாதது தான் தப்பு... ஒரு காலத்துல ஒரு பொண்ணை உயிருக்குயிராய் நேசிச்சிருக்கேன்....ஹரிராமிற்குத் தன்னைப் பற்றி சொல்லத் தோன்றியது. சொன்னார்.

ஈஸ்வருக்கு அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் மீது நம்பிக்கை பிறந்தது. அந்த மூன்றாவது ஆளாக இவர் இல்லா விட்டாலும் கூட எதிரியல்ல என்று நம்பத் தோன்றியது. விசேஷ மானச லிங்கத்தை மானசீகமாக நினைத்து வணங்கி விட்டு ஈஸ்வர் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னான்.

இதற்குள் கணபதி அங்கேயே சுவரில் சாய்ந்து உட்கார்ந்து உறங்க ஆரம்பித்திருந்தான்.

ஹரிராமிற்குத் தன்னை அந்த மூன்றாவது மனிதனாக நினைக்க முடியவில்லை. ஆனால் அவருக்கு அவருடைய குரு சொன்ன அந்த வேளை வந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

ஈஸ்வர் இனி அந்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாகத் தொடரக் கூடாது. விசேஷ மானஸ லிங்கத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது, அதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அது மனித சமுதாயத்திற்கே அவர் செய்ய முடிந்த பெரிய உதவியாக இருக்கும் என்று சொன்னான்.

ஹரிராம் யோசித்தார். இந்த ஒரு வேலைக்காகத் தான் அவர் இது வரை உயிர் வாழ வேண்டி வந்ததோ? நேசத்தை அவருக்கு கணபதி புரிய வைத்தான். அர்த்தம் இல்லாத வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஈஸ்வர் சொல்லித் தருகிறானோ?... ஹரிராம் சொன்னார். “நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க  

ரொம்ப நன்றி. இனி அவர்கள் விசேஷ மானஸ லிங்க சக்திகளுடன் லயிக்கக் கூடாது. அவர்கள் செய்யச் சொல்கிற ஆராய்ச்சியில் இருந்துகிட்டே அவர்களுக்கு எதிராக அதை நீங்கள் செய்யலாம். விசேஷ மானஸ லிங்கத்திற்கும் அவர்களுக்கும் நடுவே ஒரு தடுப்பு சக்தியை உருவாக்கலாம். அது உங்களுக்கு கஷ்டமில்லை. உங்கள் சப்ஜெக்ட் தான் அது

ஹரிராம் தலையசைத்தார்.

ஈஸ்வர் “கணபதிஎன்றழைத்து கவனத்தை அவன் பக்கம் திருப்பிய போது தான் அவன் உறங்குவதைக் கவனித்தான்.  சிரித்துக் கொண்டே எழுப்பினான். “கணபதி... கணபதி...

“ஐயோ இந்த அண்ணன் என்னை ஏன் தூங்கவே விட மாட்டேன்கிறார்...என்று சிறிது சலித்துக் கொண்டே கணபதி விழித்தான்.

சோமாலிய கடல் கொள்ளைக்காரர்கள் ஆராய்ச்சியில் மற்ற மூன்று பேரை விட ஜோராக சிவனின் ருத்ர தாண்டவத்தைக் கற்பனை செய்த கணபதியின் கற்பனைக்குத் தகுந்த மாதிரி அவர்கள் படகும் அவர்களும் சூறாவளியில் சிக்கி ஆடி படாதபாடு பட்டதை நினைத்துப் பார்த்த ஈஸ்வர் அடுத்த நாள் ஆராய்ச்சியில் என்ன செய்ய வேண்டும் என்று கணபதிக்குச் சொல்லித் தந்தான்.

றுநாள் ஆராய்ச்சிக்கு எகிப்தின் தேர்தலில் ஜனாதிபதியாக நிறுத்தப்பட உத்தேசித்த நபரின் புகைப்படம் வழங்கப்பட்டது. அந்த நபரின் செல்வாக்கை அதிகரிக்கச் சொன்னார்கள். இன்னும் மூன்று நாள்களில் நடக்க இருக்கும் கருத்துக் கணிப்பில் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னார்கள். கணபதியை அவர்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. மற்ற மூவரைத் தான் அவர்கள் அதிகம் நம்பினார்கள். ஆனால் தியான மண்டபத்திற்கு குருஜி வரவில்லை.

ஜான்சன் பாபுஜியைக் கேட்டார். “என்னாச்சு?

பாபுஜி குருஜியின் அறைக்கு விரைந்தார். குருஜி ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். “குருஜி நேரமாயிடுச்சு. கவனிக்கலையா?

குருஜி பழைய குருஜியாகத் தெரியவில்லை. ஒரே நாளில் பல வயது கூடினது போலத் தெரிந்தார். என்ன ஆச்சு குருஜி

குருஜி களைப்புடன் சொன்னார். “என்னவோ மாதிரி இருக்கு. இன்னைக்கு தியானம் எனக்கு கைகூடும்னு தோணலை. அதனால் தான் வரலை. நீங்க அதை ஆரம்பிச்சுக்கோங்க. மத்தவங்க எல்லாம் இருக்காங்க தானே

தலையசைத்த பாபுஜிக்கு ஏமாற்றமாக இருந்தது. “ரெஸ்ட் எடுத்துக்கோங்க. குருஜி என்று சொல்லி விட்டு தியான மண்டபத்திற்கு வந்து ஜான்சனிடம் விஷயத்தைச் சொன்னார். ஜான்சனுக்கும் ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் வெறும் மூன்று பேரை வைத்துத் தானே ஆராய்ச்சியை நடத்துவதாக இருந்தது, பின்பு தானே குருஜியும் அதில் சேர்ந்தார் என்ற நினைவு வர, அது பெரிய விஷயமில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆராய்ச்சி ஆரம்பமானது. முந்தைய நாளைப் போலவே அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டு ஆரம்பித்தார்கள்.  ஈஸ்வர் அதே நேரத்தில் தோட்ட வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு ஆரம்பித்தான். சிவனுக்கும், கியோமி அலெக்ஸுக்கும் நடுவே ஒரு தடை எழுப்ப வேண்டும் அதனால் நடுவே ஒரு நந்தி இருப்பதாகவும் அவர்களுக்கு அது சிவனை மறைப்பதாகவும் எண்ணிக் கொள்ள ஈஸ்வர் கணபதியிடம் சொல்லி இருந்தான். கணபதிக்கு அதில் சிறிதும் சிரமம் இருக்கவில்லை. நந்தனாருக்கு நந்தி சிவனை மறைத்து நின்ற கதையை அவன் படித்திருக்கிறான். அந்த நந்தி பிரம்மாண்டமாக அலெக்ஸி, கியோமி முன்னால் வளர்ந்து கொண்டே போவது போல தத்ரூபமாக நினைக்க ஆரம்பித்தான்.  

ஹரிராம் ஆல்ஃபா தீட்டா அலைகளுக்கு வந்து முன்பே கற்றிருந்த மந்திரக் காப்புத் தடுப்புச் சுவரை எழுப்ப ஆரம்பித்தார். இந்த சக்திகளில் மற்ற இருவரை விட நன்றாகவே முன்னேறி இருந்த காரணத்தால் அவர்கள் இருவரும் அறிந்து விடாதபடி அதை ரகசியமாய் அவரால் செய்ய முடிந்தது. ஈஸ்வர் அங்கிருந்தபடியே ஒரு பெரிய திரையை விசேஷ மானஸ லிங்கத்திற்கு முன்பு உருவகப்படுத்திக் கொண்டிருந்தான்.

அலெக்ஸியும் கியோமியும் ஆல்ஃபா அலைகளுக்குப் போன போது விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகள் அகப்படவில்லை. அவர்கள் அலைகள் பாதியிலேயே ஏதோ ஒன்றில் இடித்துக் கொண்டு நிற்பது போல அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் எத்தனை தான் முயன்றாலும் அதைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.

ஏமாற்றத்துடன் அவர்கள் தியானத்தில் இருந்து மீண்டு வந்து ஜான்சனிடம் சொன்னார்கள். அவர்கள் சொல்லும் போது ஹரிராமும் சேர்ந்து கொண்டு அதையே சொன்னார். ஜான்சன் EEG மெஷின்கள் பதித்து இருந்த அலைகளை மகேஷிடம் மறுபடியும் சரி பார்த்து சொல்லச் சொன்னார். மகேஷ் பார்த்துச் சொன்னான். அலெக்ஸியும், கியோமியும் ஆல்ஃபா அலைகள் எட்டு சிபிஎஸிலும், ஹரிராம் தீட்டா ஆறு சிபிஎஸிலும் இருந்திருப்பது தெரிந்தது. ஜான்சன் குழப்பத்துடன் கணபதியைப் பார்த்தார். ஹரிராமிற்கு திக்கென்றது. ஒரு வேளை ஜான்சன் கூப்பிட்டுக் கேட்டால் சாமர்த்தியமாய் இவனுக்குப் பொய் சொல்ல வராதே!

கணபதி தான் எழுப்பி இருந்த நந்தியிடம் பேசிக் கொண்டிருந்தான். “நீ நந்தனாருக்கு சிவனை மறைச்சது சரியா?என்று கேட்டுக் கொண்டிருந்தான். இந்த முட்டாள் ஆராய்ச்சியில் பிரச்சினை வந்திருப்பது கூடத் தெரியாமல் ஏதோ கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறான் என்று மனதினுள் சலித்துக் கொண்ட ஜான்சன் கணபதியை எதுவும் கேட்கவில்லை.

அவர் மூன்று பேரையும் கேட்டார். தடுப்பது என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது?

கியோமி சொன்னாள். “ஏதோ சுவர் தடுக்கிற மாதிரி இருக்கு

அலெக்ஸி சொன்னார். “ஏதோ மாடோ எருமையோ மறைக்கிற மாதிரி இருக்கு

ஹரிராம் சொன்னார். “யாரோ ஆள் இடையில் நிற்கிற மாதிரி தெரிகிறது

ஜான்சன் மூவரும் மூன்று விதமாகச் சொல்கிறார்களே என்று குழம்பினார். தடைகளைச் சொல்லும் போது மனிதர்கள் ஆழ்மனதில் தங்கள் பழைய அனுபவங்களில் உள்ள தடைகளுடன் சம்பந்தப்படுத்திக் கூட உணர்வதுண்டு. அதனால் இப்படி இருக்கலாம். இவர்கள் மூவரில் ஆழமான அலைகளில் இருப்பது ஹரிராம் தான். அவர் சொல்வது சரியாக இருக்கலாம். தடுப்பது ஆள் என்பது தான் சரியாக இருக்கும். அது ஈஸ்வர் தான்.....

“எதற்கும் நீங்கள் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு மறுபடி ஆரம்பியுங்கள்என்று சொல்லி மூவரையும் அனுப்பினார். பாபுஜி கேட்டார். “என்ன ஆகியிருக்கும்”.  ஜான்சன் சொன்னார். “ஈஸ்வர்

பாபுஜிக்கு ஆத்திரமாய் வந்தது. அங்கு நடப்பதை எல்லாம் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த அறுவரில் நால்வர் சைகைகளில் பாபுஜியிடம் என்ன பிரச்சினை என்று கேட்டார்கள். வந்து சொல்கிறேன் என்று பதிலுக்கு சைகை காட்டி விட்டு பாபுஜி ஜான்சனையும் அழைத்துக் கொண்டு குருஜியின் அறைக்கு விரைந்தார். இப்போதும் குருஜி எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்ததும் கேட்டார். என்ன ஆச்சு?

சொன்னார்கள். குருஜி முகத்தில் திகைப்பைக் காட்டினார். களைப்புடன் கண்களை மூடிக் கொண்டு ‘எதற்கும் இன்னொரு தடவை முயற்சி செய்து பாருங்கள்என்றார்.

வெளியே வந்த பாபுஜி ஜான்சனைக் கேட்டார். “என்ன ஆச்சு இவருக்கு?

“உடம்புக்கு முடியலை போல இருக்கு ஜான்சன் சொன்னார்.

பாபுஜி தனதறைக்குப் போய் அறுவருடனும் வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் பேசினார். நடந்ததை எல்லாம் சொன்னார். அவர்கள் ஆறு பேருக்கும் அது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆரம்பத்தில் குருஜி விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றிப் பேசிய போது அவர்களுக்கு சுவாரசியமான அவநம்பிக்கை மட்டும் தான் இருந்தது. ஆனால் சோமாலியக் கடற்கொள்ளையரின் மரணம் அதில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதை வைத்துக் கொண்டு உலகையே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாமே என்று தோன்ற ஆரம்பித்து இருந்தது. ஒரே நாளில் உறங்காமல் கனவுகளை வளர்த்துக் கொண்ட அவர்கள் தாங்கள் எப்படி எல்லாம் ஆக வேண்டும், என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று பெரிய பட்டியல்களையே வைத்திருந்தார்கள். பாபுஜியோ அவர்களைப் போல் இருமடங்கு நீண்ட பட்டியலை உருவாக்கி வைத்திருந்தார்.  இந்த நிலையில் இப்படி ஒரு தடங்கல் வந்தது அவர்கள் ஏழு பேரையும் பைத்தியம் பிடிக்கச் செய்து விடும் போல இருந்தது.

இஸ்ரேல்காரர் கேட்டார்.குருஜி ஏன் இப்படி செய்யறார். அவர் அப்படி என்ன தான் எழுதுகிட்டிருக்கார்?

பாபுஜி சொன்னார். ‘ஏதோ உயில் மாதிரி தெரியுது

“உயிலா? அப்படின்னா அவருக்கு நிஜமாகவே உடம்புக்கு முடியலைன்னு நினைக்கிறேன்இனி அவர் நம் ஆராய்ச்சிக்கு பயன்படுவார்னு தோணலைஅமெரிக்கர் சொன்னார்.

“ஈஸ்வர் தான் பிரச்சினைன்னா அவனை தீர்த்துக் கட்டிடலாமே எகிப்தியர்  சொன்னார்.

“அந்தத் தோட்ட வீட்டுக்கு வெளியே ஒரு போலீஸ் படையே இருக்கு. அவனை நாம் இப்போதைக்கு ஒன்னும் செய்ய முடியாதுபாபுஜி சொன்னார்.

“எதற்கும் இன்னொரு தடவை ஆராய்ச்சியைத் தொடர்ந்து பாருங்கள். பிறகு முடிவு செய்யலாம் ஜப்பானியர் சொன்னார்.

ஒரு மணி நேரத்தில் மறுபடி ஆராய்ச்சி தொடர்ந்தது. அதே விளைவு தான்.

ஏழு பேருடைய ரத்த அழுத்தமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்கர் தனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதியைச சந்தித்து ஆலோசனை கேட்டு விட்டு மறுபடி பாபுஜியைத் தொடர்பு கொண்டார். 

”...அவர் சொல்றார். அந்த சிவலிங்கம் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பையனைக் கொன்றால் அந்த எதிர்ப்பு சக்தியை அழிச்சுட முடியுமாம்

(தொடரும்)
என்.கணேசன்

(பரம(ன்) இரகசியம் உட்பட என் அனைத்து நூல்களும் தற்போது 14.2.2014 முதல் 23.2.2.14 வரை தஞ்சையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கடை எண் 22ல் கிடைக்கும்)