சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 27, 2018

இருவேறு உலகம் – 102

                 
மாஸ்டர் தன் வாழ்க்கையில் அன்றைய நாள் வரை அடுத்தவர் முன் கூனிக்குறுகி நின்றதில்லை. இலக்கில்லாத வாழ்க்கை வாழ்ந்து திரிந்து கொண்டிருந்த இளமைப் பருவத்திலும் கூட  யாருக்கும் பணிந்தோ, தலைகுனிந்தோ  நின்றதில்லை. முதல் முறையாக தன் ஆன்மிக இயக்கத்தின் உறுப்பினர்கள் முன் கூனிக்குறுகி நின்றார். இயக்கத்தின் மிக மூத்த துறவி ஒருவரையும் பிரத்தியேக அழைப்பு விடுத்து வரவழைத்திருந்தார். அந்தத் துறவி தவ வாழ்க்கை வாழ்பவர். இயக்கத்தின் கூட்டங்களிலோ, மற்ற நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதைத் தவிர்ப்பவர். அவரை வற்புறுத்தியே மாஸ்டரால் வரவழைக்க முடிந்தது. வந்தவர்களில் இந்தக் கூட்டம் ஏன் என்று அறிந்தவர்கள் இருவர் மட்டுமே. கிருஷ்ணவேணி மற்றும் சுரேஷ்…..

இப்படிப்பட்ட மனிதர் இரண்டு நாட்களில் நடைப்பிணமாகக் காட்சி அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்த்திராத கிருஷ்ணவேணி மாஸ்டருக்காக மனமுருகினார். ஏமாந்த கதையை போனில் தெரிவித்த போதே மாஸ்டரின் மனவேதனையை அவரால் உணர முடிந்தது. நேரில் பார்த்த போதோ மேலும் கொடுமையாக இருந்தது.

தளர்ந்த குரலில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய மாஸ்டர் க்ரிஷ் அவரிடம் “பரஞ்சோதி முனிவர் சொன்ன ஆள் நீங்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?” என்று எழுப்பிய கேள்வியில் ஆரம்பித்து ஹரித்வாரில் வங்கியில் சொத்துக்களும், பணமும் மொத்தமாக கபளீகரம் ஆனது அறிந்தது வரை சொன்னார். கூட்டத்தினரின் அதிர்ச்சி அவர்கள் முகங்களில் தெரிந்தது. அவர்களில் பலருக்கும் கூச்ச சுபாவம் உள்ள, அதிர்ந்து கூடப் பேசாத, மிகவும் பணிவாகவும் இத்தனை காலம் காட்சி அளித்த விஸ்வம் இப்படி  நடந்து கொண்டார் என்பதை ஜீரணிக்க முடியாமல் இருந்தது அவர்கள் முக பாவனையில் இருந்தே தெரிந்தது. அவரவர்களுக்கு வர வேண்டிய தொகைகளைத் தகுந்த ஆவணங்களுடன் தெரிவித்தால் சிறிதும் கால தாமதமில்லாமல் அவரவர் கணக்குக்கு அந்தப் பணம் வந்து சேர்வது பற்றி அவர்கள் பல முறை தங்களுக்குள் சிலாகித்துப் பேசிக் கொண்டதுண்டு. அந்த மனிதரா இப்படி?

மாஸ்டர் மிகுந்த வேதனையுடன் மனம் விட்டு எதையும் ஒளிக்காமல் தன் தற்கொலை முயற்சியையும், க்ரிஷின் போன்கால் அந்த சமயம் வந்து அதைத் தடுத்ததையும் கூடச் சொன்னார். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முகங்களில் அதிர்ச்சியும், சிலர் கண்களில் ஈரமும் தெரிந்தது.

மாஸ்டர் தொடர்ந்து சொன்னார். “நான் செய்தது தவறல்ல. மாபெரும் குற்றம். எத்தனையோ அபூர்வ சக்திகளைக் கூடப் பெற்ற நான், ஒரு சாதாரண அறிவும், நேர்மையும் இருக்கிறவன் பொறுப்பாக நடந்திருக்கக்கூடிய அளவு கூட பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. என் குருநாதர் எனக்குக் கொடுத்திருந்த அதிகாரம் முழுவதையும் விஸ்வத்துக்குத் தந்த நான், குருநாதர் என்னை அறிந்திருந்தது போல விஸ்வத்தை முழுமையாக அறிந்திருந்தேனா என்ற கேள்வியை கிருஷ்ணவேணி அம்மா என்னைக் கேட்டார். அறியவில்லை என்பதும், அறிந்து கொள்ள நான் சரியான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதுமே உண்மை. வீட்டு சாவியை நம்பி ஒருவனிடம் தரும் முன் ஒரு சராசரி மனிதன் யோசிக்கிற அளவு கூட நான் யோசிக்கவில்லை. இந்த அலட்சியத்தில் நான் தொலைத்தது என் செல்வமாய் இருந்திருந்தால்……” மாஸ்டரின் குரல் உடைந்து போனது. கண்களில் நீர் நிரம்பியது. கஷ்டப்பட்டு தொடர்ந்தார். “…….. என் செல்வமாக இருந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். நான் தொலைத்தது இந்த இயக்கத்தின் செல்வம்….. நீங்கள் எல்லாரும் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை…… என் குருநாதர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை……” குருநாதர் நம்பிக்கையைத் தகர்த்ததைச் சொன்ன போது மாஸ்டர் முழுவதுமாக உடைந்து போனார். கண்களில் இருந்து ஆறாக நீர் பெருகியது. அங்கிருந்தோர் கண்களும் நிறைந்தன.

அவர்கள் அவரை அறிவார்கள். கம்பீரமான மனிதர், எதற்கும் அஞ்சாத மனிதர், நேர்மையில் சிறு குறை கூட அவரிடம் அவர்கள் கண்டதில்லை. எத்தனையோ சக்திகள் பெற்றிருந்தாலும் எத்தனை சிறியவரையும் குறைவாகப் பார்க்கத் தெரியாத மனிதர்…. இது நாள் வரை தன் குருவைத் தவிர யாரையும் தலைவணங்கி அவர்கள் பார்த்திராத மனிதர் இன்று தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொண்டு தலைதாழ்ந்து நிற்பதை அவர்களுக்குப் பார்க்கச் சகிக்கவில்லை.

மாஸ்டர் கைகூப்பினார். “என்னை மன்னித்து விடுங்கள். மானசீகமாக ஒவ்வொருவர் காலையும் தொட்டு வணங்கி நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பாவியை மன்னித்து விடுங்கள்…..”

கூட்டத்தில் இரண்டு மூன்று ஆட்கள் கதறி விட்டார்கள். கதறியவர்களில் சுரேஷும் ஒருவன். கலங்காத கண்கள் அங்கே இருக்கவில்லை.

“இந்த இயக்கத்தின் மிக மோசமான தலைவனாக நான் இருந்து விட்டேன். இனியும் இந்தப் பொறுப்பில் சிறிதும் அருகதை இல்லாத நான் இருப்பது சரியல்ல. அதனால் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நம் இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்களில் மிக மூத்த துறவி இமயமலையில் இருந்து வந்திருக்கிறார்கள். அவரிடம் இந்த ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறேன். தகுதி இருக்கும் ஒரு நல்ல தலைவரை நியமிக்கும்படியும், எனக்கு என்ன தண்டனை என்பதைத் தீர்மானிக்கும்படியும் அவரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”

மாஸ்டர் ராஜினாமா கடிதத்தை கலங்கிய கண்களுடன் தந்து விட்டு அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தார்.

மூத்த துறவி சிலை போல அமர்ந்திருந்தார். அவர் நடந்த நிகழ்வுகளையும், இப்போது நடப்பதையும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர் முகபாவனையில் இருந்தே தெரிந்தது. கூட்டத்திலும் மயான அமைதி நிலவியது. அவர் மெல்ல எழுந்து மிக அமைதியாகப் பேசினார்.

“நல்ல மனிதர்களின் மிகப் பெரிய பலவீனம், மற்றவர்களின் தீமைகள் எந்த அளவில் இருக்கக்கூடும் என்பதைச் சந்தேகிக்கக் கூட முடியாத அளவு நல்லவர்களாக இருப்பது தான். அதைப் பல சமயங்களில் தீய மனிதர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது இயற்கை. சாதாரண அறிவு படைத்தவன் கூட இப்படி ஏமாற மாட்டானே, இத்தனை அறிவும், அமானுஷ்ய சக்திகளும் படைத்த நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள் என்று பச்சாதாபப்படுகிறீர்கள். இது உங்கள் அறிவையும், அமானுஷ்ய சக்திகளையும் விட அதிகமாக நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது மாஸ்டர். உங்கள் குரு உங்களை சந்தேகிக்காதது போல, சந்தேகிக்க காரணம் எதுவும் காட்டாமல் கச்சிதமாக வேலை பார்த்த இன்னொருவரை உங்களால் சந்தேகப்பட முடியவில்லை. இதை நல்லவர்களின் இயல்பான தவறு என்று சொல்லலாமே ஒழிய குற்றம் என்று சொல்ல முடியாது. நல்லவர்களைத் தண்டிப்பதும் நியாயமல்ல. ஆனாலும் தண்டனையைக் கேட்கிறீர்கள், மாஸ்டர். ஏமாற்றப்பட்ட உண்மை தெரிந்த நிமிஷத்திலிருந்து இந்த நிமிஷம் வரையும் நீங்கள் அனுபவித்த வேதனையும், இனியும் இந்த உறுத்தலில் காலம் பூராவும் நீங்கள் அனுபவிக்க இருக்கும் வேதனையும் தேவைக்கும் அதிகமான பெருந்தண்டனையாக இருக்கப் போகிறது. கூடுதல் தண்டனையைக் கேட்காதீர்கள்…”

“இந்த ஆன்மிக இயக்கம் இழந்திருப்பது பணத்தை மட்டும் தான். அது அளவில் எத்தனை பெரிதாக இருந்தாலும் கூட பணம் மட்டுமே. இந்த இயக்கத்தின் ஆணி வேரான ஆன்மிக நாட்டத்தையோ, உலக நன்மை நாட்டத்தையோ நாம் இழந்து விடவில்லை. அதனால் உங்கள் தலைமையில் மிக முக்கியமான எதையும் இந்த இயக்கம் இழந்து விடவில்லை. நம் இயக்கத்து தவசிகள் எச்சரித்திருக்கும் மிகவும் பிரச்னைக்குரிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். உலக நடப்புகள் அப்படியே தெரிகின்றன. நம் இயக்கத்திலேயே ஒரு விஷமி ஊடுருவி இருக்கிறான். நம் குருவின் அசாதாரண மரணம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில் நம் இயக்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. நாம் செயல்பட வேண்டிய நேரமிது. இந்த நெருக்கடியான கட்டத்தில் நீங்கள் தகுதி வாய்ந்த நல்ல தலைவராக வேறு ஆளை நியமிக்கச் சொல்கிறீர்கள். எல்லா விதங்களிலும் உங்களை விடத் தகுதி வாய்ந்த நல்ல மனிதர் எங்களுக்கு எங்கே கிடைப்பார்கள்?”

குற்றம் பெரிதானாலும் அன்பின் காரணமாக அதைச் சிறிதாகப் பார்க்கிறார்கள் என்று நினைத்த  மாஸ்டர் மறுபடியும் கண்கலங்கினார். பேச வார்த்தைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் மறுத்து கைகளை மட்டும் அசைத்து வேண்டாம் என்று சைகையால் சொன்னார்.

அவர் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த கிருஷ்ணவேணி எழுந்து பேசினார். “மாஸ்டர் உங்கள் தவறையோ, இயக்கத்தின் பண இழப்பையோ நாங்கள் சரி என்று சொல்லவில்லை. ஆனால் மனிதகுலமே அழியும் என்கிற நிலை உருவாகி வருகிறது என்று நம் தவசிகளும் எச்சரித்திருக்கிறார்கள். க்ரிஷிடம் வேற்றுக்கிரகவாசியும் எச்சரித்திருக்கிறான். மனிதகுலமே அழியும் நிலை வந்தால், இந்த பணத்தையும் சொத்துக்களையும் வைத்து எதைக் காப்பாற்றப் போகிறோம். மதிப்பிற்குரிய மூத்த துறவி அவர்கள் சொன்னது போல நாம் இழக்கக்கூடாத அதிமுக்கியமான எதையும் இழக்கவில்லை. இப்போது தலைமைப் பொறுப்பில் இருந்து நீங்கள் விலகுவது தான் இந்த இயக்கத்துக்கு மிகப் பெரிய நஷ்டமாக இருக்கும். நீங்கள் தலைவராகத் தொடர வேண்டும், முன்பை விடத் தீவிரமாக செயல்பட வேண்டும். எந்த விதத்திலும் எதிரியை வெல்ல அனுமதிக்கக்கூடாது. அந்தக் கடமை உங்களுக்கிருக்கிறது. உங்கள் குரு உங்களை இறக்க அனுமதிக்காத காரணமும் இந்தக் கடமைக்காகவே இருக்கும் என்று நம்புகிறேன்…..” 

(தொடரும்)


என்.கணேசன்

27.9.2018 முதல் 07.10.2018 வரை தேவக்கோட்டையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில்  அரங்கு எண் 61 (ராமகிருஷ்ணா மட அரங்கு)ல் என் நூல்கள் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அங்கு செல்ல முடிந்த வாசகர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும். 

Monday, September 24, 2018

சத்ரபதி 39


சிவாஜியின் ஒற்றர்கள் கல்யாண் வரிவசூல் தொகை போகும் பாதையின் முழுவிவரங்களோடு அவன் கொடுத்த காலத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் சொன்ன வழித்தடத்தை சிவாஜி மிகவும் கவனமாகக் கேட்டான். பின்பு அவர்களிடம் நிதியோடு வரும் படை பற்றிக் கேட்டான்.

“இதுவரை எப்போதும் பணப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் சிறிய ரதங்கள் ஐந்தாகவே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு ரதத்திலும் ஐந்து வீரர்கள் வாள், ஈட்டிகள் வைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள். ஒவ்வொரு ரதத்தையும் இரண்டிரண்டு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. ஐந்து ரதங்களுக்கு முன்னால் சுமார் இருநூற்றி இருபது குதிரை வீரர்களும், பின்னால் இருநூற்றி இருபது குதிரை வீரர்களும் செல்கிறார்கள். ரதங்களின் பக்கவாட்டில் இருபக்கங்களிலும் பத்து பத்து குதிரைவீரர்கள் வருகிறார்கள். அனைவரும் வாள் அல்லது ஈட்டி வைத்திருக்கிறார்கள். இது வரை இந்தச் செல்வத்தை வழிப்பறி செய்ய பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. முயற்சி செய்தவர்கள் தோல்வியடைந்து மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். கல்யாண் பகுதியின் தலைவன் முல்லானா அகமது தன் படையில் இருப்பவர்களில் வலிமையானவர்களையே தேர்ந்தெடுத்து இந்த வேலையில் ஈடுபடுத்துகிறார் என்பதால் வீரர்கள் அனைவரும் சிறந்தவர்கள் தான்…..”

“அவர்கள் இரவுகளில் தங்கி இளைப்பாறும் இடங்கள் எவை?” சிவாஜி கேட்டான். கல்யாணிலிருந்து பீஜாப்பூர் சென்று சேரப் பல நாட்கள் ஆகும் என்பதால் பிரயாண காலத்தில் அவர்கள் தங்கி இளைப்பாறும் இடங்கள் மிக முக்கியமானவை. ஒற்றர்கள் தெரிவித்த இடங்கள் அனைத்தும் இரவு நேரத் தாக்குதல்களுக்கு உகந்ததல்ல என்பது அவனுக்கு உடனே புரிந்தது. கொள்ளையர்கள் அடிக்கடித் தாக்குதல் நடத்துவது இரவு நேரங்களிலேயே என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு பாதிக்கப்படாத, பாதுகாப்பான  இடங்களிலேயே முல்லானா அகமது தன் ஆட்களைத் தங்க ஏற்பாடு செய்திருந்தான்.

சிவாஜி அடுத்ததாக அவர்கள் பயண வேகம் குறித்துக் கேட்டான். எத்தனை நாட்களில் பீஜாப்பூரை அடைகிறார்கள்? ஒரே வேகத்தில் செல்கிறார்களா அல்லது சில இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மந்தமாகவும் செல்கிறார்களா என்று கேட்டான். சீரான வேகத்திலேயே செல்கிறார்கள் என்ற பதில் வந்தது. மேலும் பல கேள்விகள் கேட்டுத் திருப்தி அடைந்த சிவாஜி அந்த ஒற்றர் தலைவனை அழைத்துக் கொண்டு தங்கள் பகுதிகளுக்கு மிக அடுத்து அவர்கள் பயணிக்கும் பாதையில் பயணம் செய்தான். தங்கள் எல்லை முடியும் வரை பயணம் செய்த சிவாஜி மீண்டும் அதே வழியில் திரும்ப வந்து பாதையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவன் தேர்ந்தெடுத்த இடம் சற்றுக் குறுகலான பாதை, இருமருங்கிலும் மலைகள். எத்தனை பெரிய படை வந்தாலும் இந்தக் குறுகிய பாதையில் வரிசை வரிசையாகவே செல்ல முடியும்… இரு பக்க மலைகளிலும் பதுங்கிக் காத்திருக்க வசதியான பாறைகள் இருக்கின்றன. குறுகிய பாதை முடிவடைகையில் அகலமான பகுதி இருக்கிறது. அங்கு கணிசமான குதிரை வீரர்களை ரகசியமாய் காத்திருக்க வைக்கலாம்….

சிவாஜி ஒற்றர் தலைவனிடம் கேட்டான். “அவர்கள் இந்த இடத்திற்கு வந்து சேர்வது எந்த நேரத்திலாக இருக்கும்?”

“சுமார் மாலை நேரமாக இருக்கும் தலைவரே. அடுத்து அவர்கள் இளைப்பாறும் இடத்திற்கு சுமார் அரைமணி நேரத் தொலைவு தான் இருக்கிறது…”

சிவாஜி திருப்தியுடன் புன்னகைத்தான். இங்கு வரும் போது கண்டிப்பாகப் பயணக் களைப்பில் இருப்பார்கள். சிறிது நேரத்தில் இளைப்பாறும் இடம் என்பதால் இங்கு வரும் போதே மானசீகமாக இளைப்பாறுவதற்கு அவர்கள் மனம் தயாராகி விட்டிருக்கும். எல்லா விதங்களிலும் அந்த இடம் அவன் திட்டத்திற்கு ஏற்றதாக இருக்கிறது….

சிவாஜி ஒற்றர் தலைவனிடம் கேட்டான். “நாம் கல்யாண் நிதியைக் கைப்பற்றினால் அந்தத் தகவல் பீஜாப்பூருக்கும், கல்யாணுக்கும் குறைந்த பட்சம் எந்தக் கால அளவில் போய்ச் சேரும்”

ஒற்றர் தலைவன் கண்களை மூடிக் கணக்குப் போட்டு விட்டுச் சொன்னான். “பீஜாப்பூருக்கு குறைந்தபட்சம் ஒன்றரை நாளிலும், அதிகபட்சமாய் இரண்டு நாளிலும் தகவல் போய்ச் சேர வாய்ப்பிருக்கிறது. கல்யாணுக்குக் குறைந்த பட்சம் இருபது மணி நேரங்களிலும் அதிக பட்சம் ஒரு நாளிலும் தகவல் போய்ச் சேர வாய்ப்பிருக்கிறது….”

சிவாஜி திருப்தியுடன் தலையசைத்தான்.

மறுநாள் அவன் நண்பர்களும் படைத்தலைவர்களும் தங்கள் தங்கள் திட்டங்களுடன் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் இலக்கு இடங்களின் பலம், பலவீனங்களையும், தங்கள் திட்டங்களையும், அதை நிறைவேற்றத் தேவையானவற்றையும் சொன்னார்கள். சிவாஜி ஒவ்வொருவர் சொன்னதையும் கூர்ந்து கேட்டான். அவர்கள் கருத்தில் இருந்து வித்தியாசப்பட்டால் அதை வெளிப்படையாகவே காரணங்களுடன் தெரிவித்தான். ஒவ்வொருவரும் தாங்கள் இந்த இரண்டு நாட்களில் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததையும், சிந்தித்ததையும் விட அதிகமாக அவன் அறிந்திருந்தான் என்பதை உணர்ந்தார்கள். சிலர் கேட்டதை விட அதிகமாய் ஒதுக்கினான். சிலர் கேட்டதை விடக் குறைவாக ஒதுக்கினான். சிலர் கேட்டபடியே தந்தான். கிட்டத்தட்ட அனைவர் திட்டங்களிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் செய்தான். அந்தச் சின்ன மாறுதல்கள் திட்டங்களின் பலவீனங்களை அடைத்து பலமடங்கு பலப்படுத்துவதாக இருப்பதைக் கண்டு பிரமித்தார்கள்.

சிவாஜி சொன்னான். “நான் கல்யாண் நிதியைக் கைப்பற்றியவுடன் இந்த நிகழ்வுகள் வேகமாக கிட்டத்தட்ட ஏக காலத்தில் நடக்க வேண்டும். முடிந்த அளவு மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டு தயாராவதற்குள் நாம் அவர்களை வென்றுவிட வேண்டும்…..”

அவர்கள் தலையசைத்தார்கள். அவர்களில் அபாஜி சோன் தேவ் என்பவனிடம் கல்யாணைக் கைப்பற்றும் பொறுப்பை சிவாஜி ஒப்படைத்து இருந்தான். அவனிடம் சொன்னான். “அபாஜி. கல்யாண் தலைவன் முல்லானா அகமது தன் வலிமையான வீரர்கள் அனைவரையுமே வரிவசூலை பீஜாப்பூருக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறான். எனவே நீங்கள் செல்லும் போது அங்கே பெரிய எதிர்ப்பிற்கு வாய்ப்பில்லை. உங்கள் பணி சுலபமாகப் போகிறது….”

அபாஜி சோன் தேவுக்கு அது தான் கிடைத்திருக்கும் முதல் பெரிய வாய்ப்பு. அவனை நிரூபிக்கக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் காட்ட நினைத்திருந்த அவனுக்கு இந்தச் செய்தி கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

கடைசியில் அனைவரிடமும் சிவாஜி சொன்னான். “எந்த ஒரு திட்டமும் பரிபூரணமானதல்ல. நடைமுறையில் வரும் போது எதிர்பாராத எத்தனையோ விஷயங்கள் நம் திட்டத்திற்கு எதிர்மாறானதாக இருக்கலாம். அப்படி நடப்பது விதிவிலக்கல்ல. சொல்லப் போனால் அதுவே விதி. அப்படி நடக்கும் போது பதறாதீர்கள். மன தைரியம் இழக்காதீர்கள். இருக்கும் நிலைமையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று கூர்மையாகக் கவனியுங்கள். கண்டிப்பாக வழி ஏதாவது புலப்படவே செய்யும். அந்த வழியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோல்வியே வரும் நிலைமை வந்தாலும் கூட உடைந்து போகாதீர்கள். நான் இருக்கிறேன். உங்கள் உதவிக்கு நான் விரைந்து வருவேன்…. இது என் சத்தியம்…..!”

சிவாஜி உணர்வு பூர்வமாக ஆத்மார்த்தமாகச் சொன்னது. அத்தனை மனங்களிலும் பெரும் தைரியத்தை ஏற்படுத்தியது. நம்பிக்கையை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு கற்பனை தைரியத்தை அவன் உருவாக்கவில்லை. இப்போது அவர்கள் பழுதேயில்லாத பிரமாதமான திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற உணர்வில் இருக்கும் போதும் அது அப்படியே செயல்படுத்த முடியாமல் போகலாம், சில மாற்றங்கள் தேவைப்படலாம் என்று அவன் எச்சரித்தது நிஜங்களின் யதார்த்தத்தை உணர்த்தியது போல் இருந்தது. வெற்றி வாகை சூட்டி வாருங்கள் என்று அனுப்பி வைப்பவன் தோல்வியே வந்தாலும் துவண்டு விடாதீர்கள், உங்கள் உதவிக்கு நான் வருவேன் என்று சொன்ன விதம் அவர்களுக்கு அசாதாரண மனவலிமையை ஏற்படுத்தியது. இந்தத் தலைவனின் கீழ் அவர்களுக்கு முடியாதது தான் என்ன? அனைவரும் புத்துணர்ச்சியோடு அங்கிருந்து சென்றார்கள்.

அவர்கள் சென்ற பின் சிவாஜி தன்னுடன் நாளை வர மொத்தம் முன்னூறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். முன்னூறு பேரில் நூறு பேர் கொரில்லா போர்முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். சகாயாத்ரி மலைத்தொடரில் முன்பு வாழ்ந்தவர்கள். மலைப்பகுதியில் நடத்தப் போகும் தாக்குதலுக்குப் பொருத்தமானவர்கள்…..

திட்டத்தைச் செயல்படுத்தும் நாளில் சிவாஜி அதிகாலையில் குளித்து அன்னை பவானியை நீண்ட நேரம் பிரார்த்தித்தான். பின் அவன் எழுந்து கிளம்பிய போது வீர அன்னை பவானியும் கூட வருவதாக அவன் உணர்ந்தான். மாபெரும் சக்தி ஒன்று உள்ளத்தை ஆக்கிரமிக்க முன்னூறு வீரர்களுடன் சிவாஜி புறப்பட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்

Saturday, September 22, 2018

கோவையில் என் சொற்பொழிவு - வாழ்க்கை வாழ்வதற்கே!



வணக்கம் வாசகர்களே!

வரும் ஞாயிறு 23.9.2018 அன்று நூலக இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கோவைப்புதூர் பொது நூலக வளாகத்தில் ”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கிறேன்.

நாம் முறையாகத் தான் வாழ்கிறோமா? நம் வாழ்க்கையில் அர்த்தமும், அமைதியும், ஆனந்தமும், உற்சாகமும், துடிப்பும் இருக்கின்றனவா? இல்லை நாம் அதை இழந்து விட்டிருக்கிறோமா? இழந்திருந்தால் அதை எப்படி இழக்கிறோம்? திரும்பவும் அவற்றைப் பெறமுடியுமா? அதற்கான வழிகள் என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக என் பேச்சு இருக்கும்.

கோவையில் உள்ள வாசக நண்பர்களில் முடிந்தவர்கள் வருகை புரியுமாறும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.  

வாழ்க்கையைக் குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், அர்த்தமின்மையில் இருந்து அர்த்தத்திற்கும், எந்திரத்தன்மையிலிருந்து உயிரோட்டத்திற்கும், பலவீனத்திலிருந்து மகாசக்திக்கும் மாற்ற, இந்தச் சொற்பொழிவுக்கு வாங்க! சிந்திக்கலாம்!


நாள்: 23.9.2018 (ஞாயிறு)
நேரம்: மாலை 6.00 – 7.30
இடம்: கோவைப்புதூர் நூலக வளாகம், (நாகப்பிள்ளையார் கோயில் பின்புறம்)  கோவைப்புதூர். கோயமுத்தூர் 641042

அன்புடன்
என்.கணேசன்


Thursday, September 20, 2018

இருவேறு உலகம் – 101

மாஸ்டர் சிந்தனைகள் நடந்து முடிந்த நிகழ்வுகளிலேயே தொடர்ந்து இருந்தன. யோசிக்கையில் பல பழைய நிகழ்வுகளுக்குப் புது அர்த்தங்கள் இப்போது தெரிந்தன. சில ஆச்சரிய நிகழ்வுகள் ஏன் நடந்தன என்ற இயல்பான கேள்வி அவை நடந்த சமயங்களில் அவர் மனதில் எழவில்லை. அதனால் அதற்கான பதிலையும் அவர் யோசித்திருக்கவில்லை. இப்போது ஒன்றொன்றாக அவை எழுந்தன. வேற்றுக்கிரகவாசி க்ரிஷைத் தொடர்பு கொண்டது இஸ்ரோவிலேயே சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தது. உமா நாயக் மூலமாக அவர் இயக்கத்தின் மிக முக்கிய உறுப்பினர்கள் சிலருக்குத் தெரிந்திருந்தது. அந்த உண்மை தெரிந்ததால் தான் அவன் தான் பரஞ்சோதி முனிவர் சொன்ன ‘அன்னிய சக்தியின் கைப்பாவை’ என்ற அனுமானத்திற்கு அவரது இயக்கத்தின் மிக முக்கிய உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் யாரும் அது குறித்து மற்ற பொது உறுப்பினர்களுடன் பேசவோ, விவாதிக்கவோ மாட்டார்கள். அப்படி இருக்கையில் அது குறித்து உறுப்பினர்கள் அனைவரும் அறிந்திருந்தது எப்படி? க்ரிஷை சீடனாக  அவர் ஏற்றுக் கொண்டவுடன் சுரேஷ் சொன்னது நினைவுக்கு வந்தது... “எல்லாருமே க்ரிஷை எதிரி ஸ்தானத்துல வெச்சு தான் பார்க்கறாங்க. நீங்க வாரணாசி போயிருந்த போது இயக்கத்து ஆள்களைக் கூட்டி விஸ்வம் ஐயா குருவோட மரணத்தைச் சொன்ன போது எல்லாருமே கொதிச்சுப் போனதை நான் என் கண்ணால பார்த்தேன். எதிரியின் ஆளை நீங்க சிஷ்யனாய் ஏத்துகிட்டதை அவங்களால ஏத்துக்க முடியுமான்னு பயப்படறேன்…..”

க்ரிஷ் பற்றியே அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத போது எல்லாருமே அறிந்திருந்ததும், க்ரிஷை எதிரி ஸ்தானத்தில் வைத்து பார்க்க ஆரம்பித்திருந்ததும் எப்படி? அது மட்டுமல்ல, அப்படி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் க்ரிஷை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டதைத் தெரிவிக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்ன அவர் அந்தத் தகவலைக் கூட்டத்தில் தெரிவித்து ஏன் ஏற்றுக் கொண்டேன் என்ற காரணத்தையும் சொல்ல எண்ணி இருந்தார். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு முன்பே அவர் க்ரிஷை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டிருந்தது தெரிந்திருந்தது. அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போதே அந்தத் தகவலையும் சேர்த்து சொல்லியிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தைக் கூட்ட விஸ்வத்திடம் தான் சொல்லியிருந்தார். அதே போல் குரு மரணத்தைக் கூட்டம் கூட்டித்  தெரிவித்ததும் விஸ்வம் தான்.  அதைச்   சொல்லும் போது வேற்றுக்கிரகவாசி தான் எதிரி, க்ரிஷ் அவனது ஆள் என்பதைச் சேர்த்தும் அவர் தான் தெரிவித்திருக்கிறார்.

இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரியும் இந்த விஷயங்கள் முன்பு சின்ன சந்தேகத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கவில்லை. விஸ்வம் என்ற மனிதனுடன் நெருங்கிப் பழகும் போது கூட அந்தக் கபட அலைகளை அவரால் அடையாளம் கண்டுபிடித்திருக்க முடியவில்லை. இயல்பான விழிப்புணர்வும் வேலை செய்யவில்லை, கற்ற வித்தைகளும் இந்த விஷயத்தில் கைகொடுக்கவில்லை…… மாஸ்டருக்குத் தன் மீதே வெறுப்பாக இருந்தது.

நடந்தவற்றை எல்லாம் இயக்கத்திற்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதைத் தெரிவித்து விட்டு அவமானத்துடன் தலைமைப் பொறுப்பை விட்டு விலகுவது தவிர வேறு வழியில்லை. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்தக் கறையைப் போக்க முடியாது என்று மனம் கதறியது. இயக்கத்தின் அவசரப் பொதுக்கூட்டத்தை உடனே நடத்த ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.


செந்தில்நாதன் ஹரிணி கடத்தல் சம்பந்தமாக இதுவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து விசாரணைத் தகவல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தார். அவள் காணாமல் போன அன்று கல்லூரி வாசலில் சிலர் பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு அவளை யாரும் பார்க்கவில்லை. ஹரிணி கல்லூரியில் இருந்து வீடு போகும் வழித் தெருக்கள் எல்லாம் என்னேரமும் ஆள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இருக்கக்கூடியவை. அந்த வழித் தெருக்கள் அனைத்திலும் போலீஸ் அதிகாரிகள் விரிவாகவே விசாரித்திருக்கிறார்கள். விசாரித்ததில் யாரும் ஒரு பெண் கடத்தல் சம்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகப்படும்படியாக அந்த குறிப்பிட்ட மாலைப் பொழுதில் எதுவும் அசாதாரணமாய் பார்க்கவில்லை என்றே சொல்லி இருக்கிறார்கள். அவளது நெருங்கிய தோழிகள், நண்பர்கள், உறவினர்கள் எல்லாரையுமே கூட விசாரித்திருக்கிறார்கள். ஒருவேளை வீட்டுக்குப் போகாமல் அங்கே எங்காவது போயிருக்கலாம், போகிற வழியில் கடத்தல் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்திருக்கிறார்கள். அதுவும் இல்லை, கடத்தல்காரர்களிடமிருந்து போனும் வரவில்லை என்றான பிறகு இனி எப்படி விசாரணையைத் தொடர்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

செந்தில்நாதன் கிரிஜா, க்ரிஷ், ஹரிணியின் தோழிகள் ஆகியோரிடம் கேட்டதில் அவள் எப்போதும் போகும் பாதையை அடிக்கடி மாற்றுவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. செந்தில்நாதனே அந்த நேரத்தில் அந்த வழியில் போய்ப் பார்த்தார். போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. அந்தப் பாதைத் தெருக்களில் அவள் காணாமல் போன மாலையில் பெண் கடத்தல் போன்ற அசாதாரண சம்பவம் நடக்கவில்லை என்று விசாரித்து அறிந்ததில்  தவறிருக்க வாய்ப்பில்லை. ஆனால் வேறு எதாவது வித்தியாசமாகவோ, அசாதாரணமாகவோ நடந்திருக்கலாம். அதன் மறைவில் இந்தக் கடத்தல் நடந்திருக்கலாம்….. அதை விசாரிக்க ஆரம்பித்தார்.

இது போன்ற நிகழ்வுகளை விரிவாக முழுவதுமாகக் காண நேரமும், சூழலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. அப்படி இருக்கக்கூடிய ரகத்தினர் சிலர் உண்டு. தெருவோரப் பிச்சைக்காரர்கள், செருப்பு தைப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், டீக்கடையில் ஒரு டீ குடித்து விட்டு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்து பேப்பர் அனைத்தையும் படித்து, வந்து போகிறவர்களிடம் சினிமா, அரசியல் எல்லாம் பேசி அலசி விட்டுப் போகும் வேறு வேலையில்லாதவர்கள்.... செந்தில்நாதன் அவர்களை விசாரிக்க ஆரம்பித்தார். ஒரு பிச்சைக்காரன் சொன்னான். “நீல்கிரிஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு முன்னாடி ஒரு பைக்கும் ஆட்டோவும் மோதி கொஞ்ச நேரத்துக்கு டிராபிக் ஜாம் ஆயிடுச்சு சார். சண்டையின்னா சண்டை அப்படி சண்டை….. கடைசில சமாதானம் ஆயிப் போனாங்க. அப்பறம் தான் டிராபிக் சரியாச்சு…..”

செந்தில்நாதன் அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் செக்யூரிட்டியிடம் விசாரித்தார். “ஆமா சார். அன்னிக்கு சாய்ங்காலம் டிராபிக் ஜாம் இங்க ஆச்சு. தப்பு பைக் காரன் மேல தான். அவன் சிக்னல் குடுக்காம திடீர்னு க்ராஸ் பண்ணிட்டான் சார்….. ஆனா தப்ப ஒத்துக்க மாட்டேங்கிறான். கடசில பஞ்சாயத்து பண்ணி எல்லாரும் சேர்ந்து ப்ரச்சனய முடிச்சு வெச்சாங்க….. என்ன சார்?... அந்த டைம்ல டூ வீலர்ஸ் கொஞ்ச பேர் அட்ஜஸ்ட் பண்ணி எப்படியோ சைடுல போனாங்க…. சில பேர் பக்கத்து தெரு வழியா போய் சுத்தி மெய்ன் ரோட்டுக்குப் போனாங்க…..”

செந்தில்நாதன் பக்கத்து தெருவுக்குப் போனார். சின்ன தெரு. பெரிய வாகனங்கள் செல்வது ஒரு பெரிய மரம் கால்பாகத் தெருவை அடைத்து நின்றதால் சற்று சிரமம் தான். இரண்டு சக்கர வாகனங்கள் ஆட்டோரிக்‌ஷா எல்லாம் போகலாம்… அந்த வழியாகப் போய்ப் பார்த்தார். அந்தத் தெருவிலும், குறுக்குத் தெருக்களிலும் அதிக ஆள்நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லை. ஹரிணி போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்தத் தெருவில் திரும்பி இருக்க வேண்டும். அவள் சென்றவுடன் பெரிய வாகனம் ஏதாவது பின்னால் வந்து அந்த மரம் அருகே வந்து தெருவை அடைத்து நின்றால் மற்ற வாகனங்கள் அவளைத் தொடர்ந்து வந்திருக்க முடியாது. குறுக்குத் தெருவில் முன்பே கடத்தல்காரர்கள் காத்திருந்தால் அவளை வழிமறித்து கடத்திச் சென்றிருப்பது சுலபம். அவளைக் கடத்திய பின் மெல்ல அவள் பின் வந்த பெரிய வாகனம் கஷ்டப்பட்டு கடப்பது போலக் கடந்திருக்கும். யாருக்கும் எந்த சந்தேகமும் தோன்றியிருக்காது…. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று செந்தில்நாதன் யூகித்தார்.


புதுடெல்லி உயரதிகாரியின் செல்போன் அலறியது. அழைப்பது யாரென்று பார்த்தான். அந்த ரகசிய மனிதன். ஏனோ மனம் திகிலடைந்தது. கூடவே வருமானம் என்றும் மனம் சொன்னது. உயரதிகாரி பேசினான். “ஹலோ”

அந்த மறக்க முடியாத குரல் சொன்னது. “போன தடவை புனே போன போது இஸ்ரோ டைரக்டர் நாசா விஞ்ஞானிகளிடம் பேசி பூமியில் சமீபத்தில் அபூர்வ சக்தி அலைகள் ஊடுருவியதைப் பற்றிச் சொன்னது நினைவிருக்கிறதா?”

உயரதிகாரிக்கு நினைவில்லை. ஆனால் நினைவில்லை என்றால் கிடைக்கின்ற பணம் குறையலாம். அதனால் நினைவிருப்பதாக அவன் சொன்னான்.

“நல்லது. நீங்கள் அந்த டைரக்டருக்குப் போன் செய்து மேற்கொண்டு அந்த அபூர்வ சக்தி அலைகள் பற்றி நாசாவில் இருந்து என்ன புதிய தகவல் வந்திருக்கின்றது என்று கேட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதைச் சொல்லுங்கள். அவசரம்”

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, September 19, 2018

முந்தைய சிந்தனைகள் 36

சிந்திக்கவும் அசைபோடவும் சில விஷயங்கள்....











என்.கணேசன்

Monday, September 17, 2018

சத்ரபதி – 38


நிதியும் வேண்டும், ஆனால் பீஜாப்பூர் சுல்தானின் பகையும் உசிதமல்ல என்ற வகையிலேயே சிவாஜியின் நண்பர்களும், படைத்தலைவர்களும் சிந்தித்தார்கள். ஆனால் இரண்டும் சேர்ந்து சாத்தியப்படாது என்று சிவாஜி மறுபடியும் சுட்டிக் காட்டிய போது சிலர் கல்யாண் நிதியைக் கைப்பற்றுவது முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். சிலர் பீஜாப்பூர் சுல்தானின் பகையைச் சம்பாதிப்பது முட்டாள்தனம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். ஆனால் அனைவரும் சிவாஜி என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்று அவனுக்குத் துணையாக இருப்போம் என்று உறுதியாகச் சொன்னார்கள்.

சிவாஜி சொன்னான். “என்றாவது ஒரு நாள் பீஜாப்பூர் சுல்தானுக்கு எதிராக நேரடியாகவே நாம் செயல்பட வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் இப்படி ஒரு நிதி கிடைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் என்றோ செய்ய வேண்டியதை இப்போதைய லாபகரமான சூழ்நிலையில் செய்வதே புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன்…..”

அனைவருக்கும் அவன் சொன்னது சரியென்றே தோன்றியதால் அவன் சொன்னதை உற்சாகத்தோடு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அடுத்ததாக சிவாஜி சொன்னது அனைவரையுமே அதிர வைப்பதாக இருந்தது. “பீஜாப்பூர் அரசின் பகையைப் பெறுவது நிச்சயம் என்றால் ஏன் நாம் கல்யாண் நிதியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.?”

அனைவரும் சிவாஜியைக் கேள்விக்குறியோடு பார்க்க நண்பன் தானாஜி மலுசரே வாய் விட்டுக் கேட்டான். “மற்ற கஜானாக்களையும் கைப்பற்றப் போகலாம் என்கிறாயா சிவாஜி?”

“நாம் கொள்ளையர்கள் அல்ல. ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகும் கனவில் இருக்கும் வீரர்கள் கூட்டம். கல்யாண் நிதியைக் கைப்பற்றுவது மாத்திரமல்ல கல்யாணையே கைப்பற்றினால் நாம் செய்வது திருட்டாகாது. எப்படியும் ஆதில்ஷா கோபம் தான் கொள்ளப் போகிறார் என்றால் கல்யாணோடு ஏன் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கல்யாண் வரை உள்ள எல்லாப் பகுதிகளையுமே கூடக் கைப்பற்றி விடலாமே”

“அந்த அளவு நம்மிடம் படை வலிமை இருக்கிறதா சிவாஜி?”  இன்னொரு நண்பன் பாஜி பசல்கர் கேட்டான்.

சிவாஜி சொன்னான். “படையின் வலிமை வீரர்கள், யானைகள், குதிரைகள் இவற்றின்  எண்ணிக்கையில் இல்லை நண்பனே. போரிடும் யுக்தியிலும், போரிடுவோரின் மன வலிமையிலுமே உண்மையான வலிமை இருக்கிறது. இப்போதைய நிலைமையில் நம் எதிரிகளின் மிகப்பெரிய பலவீனம் அவர்கள் தயார் நிலையில் இல்லை என்பது தான். எத்தனை பெரிய படையாக இருந்தாலும் அது போரிடும் தயார்நிலையில் இல்லாத போது பலவீனமாகவே இருக்கிறது. அது சுதாரிப்பதற்குள் நாம் வெற்றியைப் பெருமளவு நிச்சயித்து விடலாம். என்ன சொல்கிறீர்கள் படைத்தலைவர்களே?”

படைத்தலைவர்கள் அவன் சொல்வது சரிதான் என்று தலையசைத்தார்கள். ஒரு மூத்த படைத்தலைவர் மட்டும் சொன்னானர். “நீ சொல்வது முதலில் ஒரு இடத்தை வெற்றி கொள்ளும் விஷயத்தில் பொருந்தலாம் சிவாஜி. ஆனால் மற்ற இடங்களுக்குப் பொருந்தாதே. முதல் இடத்தை  நாம் வெற்றி கொண்ட செய்தி கிடைத்தவுடன் மற்ற இடங்களில் உள்ளவர்கள் சுதாரித்துக் கொள்வார்களே. அதனால் நாம் அங்கு செல்லும் போது அவர்கள் தயார்நிலையில் அல்லவா இருப்பார்கள்?”

சிவாஜி புன்னகைத்தான். “வாஸ்தவம். சரியாகச் சொன்னீர்கள். அதற்குத் தான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். நாம் தாக்கிக் கைப்பற்ற நினைக்கும் அத்தனை இடங்களையும் ஒரே சமயத்தில் திட்டமிட்டுத் தாக்க எண்ணியிருக்கிறேன்!...”

அங்கிருந்த அத்தனை பேருக்கும் அந்தத் திட்டம் கைகூடுமா என்கிற சந்தேகம் இருந்ததை சிவாஜி கண்டான். அவன் சொன்னான். “நேரம், காலம், அறிந்து எதிரிகளின் பலவீனம் அறிந்து, அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் ஆக்கிரமித்து நம் சக்தியை முழுவதுமாக, முறையாகப் பிரயோகித்தால் வெற்றி முடியாததல்ல. எல்லா இடங்களிலும் நம் பலத்தைப் பிரயோகிக்க வேண்டியும் வராது. சில இடங்களில் பேச்சு வார்த்தைகளிலும், அங்கு நிர்வாகத்தில் இருப்பவர்களின் அதிருப்தியிலும் கூட அவை நம் கைக்கு வந்து சேரக்கூடும். முதலில் நம் எண்ணங்கள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். மற்றவை ஒரு அறிவாளிக்குத் தானே புலப்படும்…..”   

முடியாது என்று முன்பு மலைத்தவர்கள் இப்போது அவனுடைய உறுதியான வார்த்தைகளிலும், தன்னம்பிக்கையிலும் நம்பிக்கையைப் பெற்றார்கள். உற்சாகமடைந்தார்கள். சிவாஜி தரையில் அந்தப் பிராந்தியத்தின் வரைபடம் ஒன்றை வரைந்தான். அதில் தான் கைப்பற்ற எண்ணியிருக்கும் ஒன்பது கோட்டைகள் மற்றும் பகுதிகளைக் குறித்துக் காட்டினான்…. பின் சொன்னான். “இந்த ஒன்பது இலக்குகளையும் நம் ஆதிக்கத்திற்குக் கொண்டு  வரும் பொறுப்பை இங்கிருப்பவர்களில் ஒன்பது பேருக்குத் தருகிறேன். இரண்டு நாட்கள் அவகாசத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இலக்குகளைக் கைப்பற்றுவதில் உள்ள அனுகூலங்கள், பிரச்சினைகள் என்ன, பலங்கள், பலவீனங்கள் என்ன என்று முதலில் பட்டியல் இடுங்கள். வெற்றி பெற உங்களுக்கு என்னென்ன தேவை என்று நினைக்கிறீர்கள் என்பதையும் பட்டியலிடுங்கள். எல்லாவற்றையும் பயன்படுத்தி  வெற்றி பெற திட்டம் தீட்டுங்கள். இரண்டு நாட்கள் முடிந்து பட்டியல்கள் மற்றும் திட்டத்தோடு வாருங்கள். பின் யோசிப்போம்……”   சொல்லி விட்டு யாருக்கு எந்த இலக்கு என்று சிவாஜி வரிசையாகத் தெரிவித்தான்.

வரைபடம் வரைந்து ஒன்பது இடங்களைக் குறித்த போதும் சரி, அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் பொறுப்பை ஒன்பது ஆட்களுக்கு ஒதுக்கும் போதும் சரி சிவாஜி யோசிக்க நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களை அழைப்பதற்கு முன்பே எல்லாவற்றையும் சிவாஜி முன்கூட்டியே ஆழ்ந்து யோசித்து வைத்திருப்பது தான் என்பது அவர்களுக்குப் புரிந்து  அவர்களை வியக்கவும் வைத்தது. ஒன்பது பேரும் தங்களை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று மகிழவும் செய்தார்கள். சில மணி நேரங்களுக்கு முன்பு யாராவது இப்படி ஒரு பொறுப்பைத் தந்திருந்தால் அவர்கள் இதெல்லாம் தங்கள் சக்திக்கு மேலானது என்று மறுத்திருப்பார்கள். ஆனால் சிவாஜி வேலையைத் தரும் போதே அத்துடன் பெரியதொரு நம்பிக்கையையும் சேர்த்தே தந்தான்.

சிவாஜி மேலும் சொன்னான். “சில நேரங்களில் காலம் தான் நம் எதிரி. சில நேரங்களில் காலம் தான் நம் நண்பன். காலம் எதிரியாவதும், நண்பனாவதும் நாம் காலத்தைப் பயன்படுத்தும் விதத்திலேயே தீர்மானிக்கப் படுகிறது. இனி வரும் நாட்கள் நம் எண்ணமெல்லாம் நம் இலக்காகவே இருக்க வேண்டும். தொடர்ந்து இலக்கு குறித்து எண்ணும் போதே அது குறித்த ஞானம் விரிவடைகிறது. முழுமையாக அறிந்து கொள்ளாத எதையும் நம்மால் வெல்ல முடிவதில்லை. முழுமையாக அறிய முடியாததை வெல்ல முடிந்தாலும், வென்றதை இழக்கும் வாய்ப்புகளும் அதிகம். எனவே இனி மனதில் வேறு சிந்தனைகளைத் தவிர்த்து இலக்கையே எண்ணுங்கள். ஒவ்வொருவரும் நல்லதொரு திட்டத்தோடு இரண்டு நாட்களில் வாருங்கள். ..….”

சிவாஜியின் நண்பன் யேசாஜி கங்க் கேட்டான். “கல்யாண் நிதியைக் கைப்பற்றும் வேலையை யாருக்கு ஒதுக்கியிருக்கிறாய் சிவாஜி. அதைப் பற்றி நீ எதுவும் சொல்லவில்லையே”

“அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்…. அது குறித்த கவலை யாருக்கும் வேண்டாம்… “

அவர்கள் அனைவரும் சென்ற பிறகு தரையில் வரைந்திருந்த வரைபடத்தையே பார்த்தபடி சிவாஜி தனியாக அமர்ந்திருந்தான். அந்த வரைபடம் அவன் மனதில் உண்மை இராஜ்ஜியமாகவே விரிந்தது. அத்தனையும் அவன் கற்பனையில் அவனுடையதாகவே ஆகியிருந்தது. சத்தமில்லாமல் அவன் பின்னால் வந்து நின்ற ஜீஜாபாய் அந்த வரைபடத்தைக் கூர்ந்து பார்த்தாள். மகன் குறித்து வைத்திருந்த பகுதிகள் கண்டிப்பாக ஒருநாள் மகனுடையதாகவே ஆகிவிடும் என்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அப்படி ஆகி விட்டால் பீஜாப்பூர் சுல்தான் சும்மா இருந்து விட மாட்டார்.  இத்தனை நாட்கள் அவர் சும்மா இருந்ததே அதிசயம் தான். அவருடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்த போது அவளை அறியாமல் அடிவயிற்றில் ஒரு பயத்தை அவள் உணர்ந்தாள்.

அவளுடைய பயம் அவள் மகனைக் குறித்ததாக இருக்கவில்லை. அவன் எந்த நிலையிலும் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தவன். அவளுடைய பயம் அவளுடைய கணவரைப் பற்றியதாக இருந்தது. ஆதில்ஷாவுக்கு சிவாஜியின் மேல் வரும் கோபம் சிவாஜியைத் தாக்குவதோடு நின்று விடாது. அந்தக் கோபம் அவன் தந்தை மேலும் நீள கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. அப்படி நீண்டால்…..?

அதற்கு மேல் சிந்திக்க அவள் மனம் பயந்தது. ஆனால் அவள் தன் பயத்தை மகன் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. அவள் சத்தமில்லாமல் வந்த வழியே திரும்பினாள்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, September 13, 2018

இருவேறு உலகம் – 100

ரைக்கு மீண்டும் வந்தமர்ந்த மாஸ்டர் ஒரு கணத்தில் தான் செய்ய இருந்த கோழைத்தனமான செய்கைக்காக வெட்கப்பட்டார். இப்போதும் மனம் ரணமாகத் தான் இருக்கிறது என்றாலும், அவரையே அவரால் மன்னிக்க முடியவில்லை தான் என்றாலும், தற்கொலை தீர்வல்ல, எல்லாவற்றையும் சந்தித்தே தீர்வது என்ற தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். ஆன்மிக இயக்க உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டி நடந்ததை எல்லாம் விவரித்து தவறுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு தன் தவறுக்குத் தண்டனை நரகமே ஆனாலும் அதை எதிர்ப்பில்லாமல் ஏற்று அனுபவிக்கத் தயாராக இருந்தார். சற்று முன் குருவே என்னை மன்னித்து விடுங்கள் என்று கூவியது சொர்க்கத்தில் இருந்த அவரது குருவுக்குக் கேட்டிருக்க வேண்டும். அவர் தான் க்ரிஷ் மூலம் தற்கொலையைத் தடுத்திருக்கிறார். குருவைப் பற்றி எண்ணிய போது மனம் லேசானது. அவர் இருந்திருந்தால் அவர் மடியில் தலை வைத்து மனபாரம் குறையும் வரை அழுதிருக்கலாம் என்று தோன்றியது.

மாஸ்டர் அமைதியாக அமர்ந்து விஸ்வத்தைப் பற்றி யோசித்தார். என்ன நடந்தது, எப்படி ஏமாந்தோம் என்று புரிய சற்று நேரமானது. விஸ்வம் சுமார் பத்து வருடங்களுக்கு முன் தான் அவர்களுடைய இயக்கத்தில் வந்து சேர்ந்தார். அவர் ஈடுபாடெல்லாம் ஹதயோகமும், கணிதமுமாக இருந்தது. ஆன்மிகத்தில் மிக நல்ல ஈடுபாட்டைக் காட்டினார். ஆனால் அதையே ஆழமாக யாராவது பேசினால் அதைப் புரிந்து கொள்ளும் சிரமத்தை வெளிப்படையாகவே காட்டினார். ஒரு வேலை தந்தால் அதைச் செய்து முடிக்கும் வரை ஓய்வெடுக்காத ஒரு சிறந்த தன்மை அவருக்கிருந்தது. அது குருவையும், மாஸ்டரையும் வெகுவாகக் கவர்ந்தது. மொத்தத்தில் எளிமை, சராசரி அறிவு, வேலையில் மிக நேர்த்தியான ஒழுங்கு, ஹதயோகம் மற்றும் கணிதத்தில் நிபுணத்துவம் என்கிற முகத்தையே விஸ்வம் அவர்களுக்குக் காட்டினார். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்.

ஆரம்பத்தில் மாஸ்டர் இயக்கத்தின் கணக்கு எழுதும் போது விஸ்வம் ஆர்வத்துடன் உதவ முன் வருவார். மாஸ்டர் கால்குலேட்டர் அழுத்தி ஒரு விடையை எட்டுவதற்கு முன் விஸ்வம் மனதிலேயே கணக்குப் போட்டு அதை எட்டியிருப்பார். அவர் சொல்கிற எண்ணும் மாஸ்டர் கால்குலேட்டரில் பார்க்கும் எண்ணும் ஒன்றாக இருக்கும். விஸ்வத்தின் ஞாபக சக்தியும் அபாரம். வரவு செலவுகளையும், தொகைகளையும் தவறில்லாமல் ஞாபகம் வைத்திருப்பார். ”அந்த டிராவல் ஏஜென்சி பில்லுக்கு போன பதினைந்தாம் தேதி 12500 ரூபாய் அனுப்பினோம். மீதி தரவேண்டியது 7856 ரூபாய்” “அந்த ப்ரிண்டிங் ப்ரஸ் இது வரை மூன்று பில்கள் அனுப்பியிருக்கிறார்கள். 17568 ரூபாய், 11375 ரூபாய், 28577 ரூபாய். நாம்  அதற்கு 35000 ரூபாய் இந்த மாதம் 15 ஆம் தேதி அனுப்பி இருக்கிறோம். இனி தரவேண்டியது 22520 ரூபாய்”

இதெல்லாம் அவர்கள் நினைவு வரும் போது திடீரெனக் கேட்கும் பழைய கணக்குகளுக்குப் பதில்களாய் இருக்கும். எந்தக் குறிப்பையும் பார்க்காமல் விஸ்வம் தெளிவாகப் பதில் சொல்வதில் இது வரை ஒரு தொகை கூடத் தவறாக இருந்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு ஞாபகசக்தியும், கணக்கிடும் திறமையும் இருக்கும் ஆள் இருக்கையில் இந்தக் கணக்குகளை அவரிடமே பார்க்க விடுவது தான் உத்தமம் என்று நாளாவட்டத்தில் அவர்களுக்குத் தோன்றியது. ஆரம்ப காலங்களில் எப்போது சரிபார்க்க வந்தாலும் நடப்பு தேதி வரை கணக்கு எழுதப்பட்டிருக்கும். பண இருப்பும் பைசா வித்தியாசம் இல்லாமல் இருக்கும். வங்கிக் கணக்குகளை விஸ்வம் பார்க்க ஆரம்பித்த பின் ஒவ்வொரு செக்கிலும், முக்கியமான காகிதங்களிலும் கையெழுத்திட்டு அனுப்பும் பிரச்னை வந்தது. ஒரு பிரச்னையும் இல்லாமல், கச்சிதமாக எல்லாவற்றிலும் இருக்கும் விஸ்வத்தை எந்த விதத்திலும் சந்தேகிக்க மாஸ்டருக்குக் காரணம் இருக்கவில்லை. அதனால் எல்லாவற்றிற்கும் கையெழுத்திடும் அதிகாரத்தையும் அவரிடம் மாஸ்டர் தந்து விட்டார்.

இயக்கத்தின் எல்லாச் செலவினங்களுக்குமான தொகை அந்தந்த நபர்களுக்கு அந்தந்த காலத்தில் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தது. இதுவரை ஒருவர் கூட பண விஷயமாக மாஸ்டரிடம் புகார் சொன்னதில்லை. விஸ்வம் எழுதும் கணக்கில் ஆடிட்டர் கூட எந்த சந்தேகத்தையும் எழுப்பியதில்லை. மிகவும் கச்சிதமாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் மாஸ்டர் சந்தேகம் கொள்ள இதுவரை காரணம் இருந்ததில்லை. அதனால் தான் கிருஷ்ணவேணி சொல்லும் போது கூட மாஸ்டருக்கு சந்தேகம் ஏற்படவில்லை……

இவ்வளவு திறமையான மனிதர் முயன்றால் பல விஷயங்களில் சிறக்க முடியும் என்று அபிப்பிராயப்பட்ட மாஸ்டர் விஸ்வத்திடம் அமானுஷ்ய சக்திகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யச் சொன்னார். “மாஸ்டர் உங்க உயரத்துக்கு நீங்க யோசிக்கிறீங்க. எனக்கு என் உயரம் நல்லாத் தெரியும். என் மூளைக்கு கணக்கு மட்டும் தான் சரியா வரும். மத்ததெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது…” என்று சங்கோஜமில்லாமல் உண்மை சொல்வது போல் சொல்லி விஸ்வம் மறுத்திருக்கிறார்.

இப்போது யோசிக்கையில் கணக்கில் மட்டுமல்லாமல் எல்லா விஷயங்களிலும் விஸ்வம் கச்சிதமாகவே இருந்திருப்பது புரிந்தது. கணக்கு தவிர மற்ற விஷயங்களில் தனக்கு சராசரி அறிவு தான் என்று காட்டிக் கொண்டது, ஆன்மிகத்தின் ஆழம் புரியாதது போல நடித்தது, அமானுஷ்ய சக்திகளைத் தனக்கு எட்டாத விஷயம் என்று சொன்னது,  கூச்ச சுபாவமாகக் காட்டிக் கொண்டு எல்லோரிடமிருந்தும் சற்று எட்டியே இருந்தது எல்லாம் மற்றவர்களுக்கு அவர் மீது சிறிதும் சந்தேகத்தை ஏற்படுத்தாமலிருக்க உதவியிருக்கின்றன.

எதிரி ஸ்டீபன் தாம்சனிடம் சொன்னதாய் க்ரிஷ் தெரிவித்தது மாஸ்டருக்கு நினைவுக்கு வந்தது. “நான் சாதாரண மனிதன்….. எனக்கு அன்பும், கருணையும், இறை நம்பிக்கையும் நிறைந்ததாய் மனித மனம் இருக்க வேண்டும், இந்த உலகம் சமாதான பூமியாகத் திகழ வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர வேறு எதிலும் ஆர்வமும் இல்லை….. அடுத்தவர் மனத்தைப் படிக்கிற சக்தியெல்லாம் என்னைப் போன்ற எளியவனுக்கு எப்படி வரும்…..”

யோசிக்க யோசிக்க பல விஷயங்கள் தெளிவடைய ஆரம்பித்தன. ஆனாலும் விஸ்வம் தான் அந்த சக்தி வாய்ந்த எதிரி என்று நம்ப மாஸ்டரால் முடியவில்லை. விஸ்வம் பணம் மட்டுமே பிரதானம் என்று தான் இங்கே செயல்பட்டிருக்கிறார். மற்ற இடங்களில் கேள்விப்பட்டதிலோ எதிரிக்கு அமானுஷ்ய சக்திகளே பிரதானமாக இருந்திருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியோ பிரம்மாண்டமாய் இருக்கிறது….. மதியம் முடிந்து, மாலையும் முடிந்து இருட்டிய பின்னும் மாஸ்டர் கங்கைக் கரையில் பல சிந்தனைகளுடன் அமர்ந்திருந்தார்….


செந்தில்நாதனை ஹரிணியைத் தேடுவதற்காக ஈடுபடுத்த வேண்டும் என்று உதய் மாணிக்கத்திடம் சொன்ன போது அவருக்கு உடனடியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் சொன்னது கோரிக்கையாக இல்லை, செய்தே ஆக வேண்டும் என்ற தொனியில் இருந்தது. அவனிடம் மறுப்பது போர்க்கொடியை உயர்த்துவது போலத்தான். கமலக்கண்ணனிடம் பசப்பு வார்த்தைகள் செல்லுபடியாகும். ஆனால் உதயிடம் அது செல்லுபடியாகாது. அவனிடம் சண்டை போட்டு இந்த நேரத்தில் கட்சியை இரண்டு அணிகளாகப் பிரிப்பது புத்திசாலித்தனமல்ல என்பதாலும், ஹரிணி கடத்தல் பற்றிய விசாரணை குறித்து எந்த ஆணையும், ஆட்சேபணையும், ஆலோசனையும் மனோகரிடம் இருந்து வந்து சேரவில்லை என்பதாலும் மாணிக்கம் இனிய வார்த்தைகளோடு சம்மதித்தார். “நீ சொன்னா நான் மறுக்கவா போறேன். தாராளமா அவர் அந்த வழக்கை விசாரிக்கட்டும். எனக்கு ஹரிணி நலமா திரும்பி வந்தா போதும். அவ காணாம போனதுல இருந்து  மணீஷ் முகத்தைப் பார்க்கவே சகிக்கல. இப்பவே ஆர்டரை அனுப்பறேன் உதய்”

உதய் இந்தத் தகவலை செந்தில்நாதனுக்கும் தெரிவித்தான். செந்தில்நாதன் தன் பழைய கேள்வியை மறுபடியும் கேட்டார். “கடத்தினவங்க கிட்ட இருந்து போன் கால் எதுவும் வரலையே?”

“வரலை சார்” என்றான் உதய். உதய்க்கு கடத்தியவர்கள் இன்னும் தொடர்பு கொள்ளாதது நெருடலாகவே இருந்தது. மனதின் அடித்தளத்தில் இனம் புரியாத பயம் தொடர்ந்து வந்தது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் க்ரிஷ் அமைதியாகவும், தன்னிலை இழக்காமலும் இருந்தான். அமெரிக்காவில் இருந்து வந்து ஹரிணி கடத்தல் பற்றித் தெரிந்தவுடன் உடைந்தவன் மாஸ்டரிடம் போய் வந்த பிறகு ஓரளவு அமைதியாகவே இருந்தான். பழைய கலகலப்பு இல்லை என்றாலும் கலக்கமும் தெரியவில்லை. ஒரு நாள் அதிகாலை அவன் அறையில் விளக்கு எரிவது பார்த்து எட்டிப் பார்க்கையில் க்ரிஷ் தியானத்தில் அமர்ந்திருந்தது தெரிந்தது.

இவனால் எப்படி இந்தச் சூழ்நிலையில் தியானத்தில் ஆழ முடிகிறது என்று உதய் திகைத்தான். ’எதிரி மிக மிக சக்தி வாய்ந்தவனாக இருக்கலாம். ஆனால் என் தம்பியும் சளைத்தவனல்ல’ என்று உதய்க்குப் பெருமையாக இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்  

Monday, September 10, 2018

சத்ரபதி – 37




ல்லா வலிமைகளிலும் ஒரு பலவீனம் உள்ளடங்கியே இருக்கிறது என்று ஜீஜாபாயிடம் தெரிவித்த சிவாஜி சம்பந்தப்பட்டவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி குறுகிய காலத்திற்குள் இரண்டு கோட்டைகளைக் கைப்பற்றினான். ஜீஜாபாய் சொன்ன கொண்டானா கோட்டைத் தலைவன் பணத்தாசை பிடித்தவன். பீஜாப்பூர் சுல்தான் தரும் ஊதியம் அவனைப் போன்ற வலிமையான கோட்டைத் தலைவனுக்கு உகந்த ஊதியம் அல்ல என்ற மனக்குறை அவனுக்கு எப்போதும் இருந்து வந்தது. சிவாஜி பெரும் தொகை ஒன்றைக் கொடுக்க முன்வந்த போது அவனுக்கு மறுக்க முடியவில்லை. தொகையைப் பெற்றுக் கொண்டு கோட்டையை சிவாஜி வசம் ஒப்படைத்து விட்டு அவன் சந்தோஷமாகத் தலைமறைவானான். சிவாஜி கொண்டானா கோட்டைக்கு சிம்மக் கோட்டை என்று பெயரிட்டு அதை மேலும் பலப்படுத்தினான்.

சிவாஜியின் அடுத்த பார்வை கொண்டானா கோட்டைக்கு அருகில் இருந்த புரந்தரா கோட்டை மீது விழுந்தது. அந்தக் கோட்டைத் தலைவர் இறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. கோட்டைத் தலைவருக்கு மூன்று மகன்கள். மூத்தமகன் தானே தலைவனாகி தம்பிகளுக்கு பங்கு கொடுக்க மறுத்தான். சகோதரர்களிடையே ஏற்பட்ட சண்டை எந்த விதத்திலும் தீர்வதாக இருக்கவில்லை. சிவாஜி அந்தக் கோட்டையைக் கைப்பற்றி கோட்டைக்கு வெளியே தள்ளியிருந்த ஒரு நிலப்பரப்பை மூத்த சகோதரனுக்கும், தன் படைப்பிரிவில் உயர்ந்த பதவிகளை மற்ற இரண்டு சகோதரர்களுக்கும் தந்து திருப்திப்படுத்தினான். கொல்லாமல் விட்டானே, அத்துடன் எனக்கென்று ஒரு நிலப்பரப்பையும் கொடுத்தானே என்ற திருப்தி அந்த மூத்த சகோதரனுக்கு. தங்களுக்குக் கிடைக்காதது அண்ணனுக்கும் கிடைக்கவில்லை என்பதுடன் ஒன்றுமில்லாததற்கு சிவாஜியின் படைப்பிரிவில் நல்ல ஊதியத்தில் கௌரவமான பதவியும் கிடைத்ததே என்ற திருப்தி இளைய சகோதரர்களுக்கு.

போர் புரியாமல் இரண்டு முக்கியக் கோட்டைகளைக் கைப்பற்றிய சிவாஜிக்கு இப்போது அந்தப் பிரதேசத்தின் மீதிருந்த ஆதிக்கம் பலமடங்கு பெருகி விட்டிருந்த போதும் அவன் கஜானா காலியாகியிருந்தது. கைப்பற்றிய அத்தனை கோட்டைகளையும் பழுது பார்த்து வலிமை கூட்டியதில் டோரணா கோட்டையில் கிடைத்த புதையல் பெரும்பகுதி செலவாகியிருந்தது. கொண்டானா கோட்டைத் தலைவனுக்குக் கொடுத்து மீதியும் காலியாகியிருந்தது.

இது போன்ற நிலைமைகளில் பொதுவாக எல்லோரும் எடுக்கும் முடிவு குடிமக்களிடம் விதிக்கும் வரிகளைக் கூட்டுவது தான். ஆனால் சிவாஜிக்கு அதற்கு மனம் வரவில்லை. அவன் ஆட்சியில் மக்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தாதாஜி கொண்டதேவ் சொன்னது போல் அந்த மகிழ்ச்சியே இறைவனின் ஆசிர்வாதம் என்று அவன் நினைத்தான். ஆனால் நிர்வாகச் செலவுகள் நிறைய இருந்தன. வீரர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் தக்க சமயத்தில் தரவேண்டும். மற்ற பகுதிகளில் நடப்பது போல் இது வரை அவன் சரியான சமயத்தில் ஊதியம் தருவதைத் தாமதப்படுத்தியதில்லை.….. இந்த சமயத்தில் அது நடந்து விடும் போல் இருக்கிறது…..

மனக்கவலையை அவன் வெளிக்காட்டவில்லை. அவன் தைரியம் அவன் சகாக்களின் தைரியம். அவன் குடும்பத்தின் தைரியம். அவன் மக்களின் தைரியம். அவன் தைரியம் இழந்தால் அத்தனை பேரும் அதை இழப்பார்கள். அவன் அதை விரும்பவில்லை. டோரணா கோட்டைப் புதையலில் கிடைத்த பவானி சிலையைத் தன் பூஜையறையில் வைத்திருந்தான். அதன் முன் அமர்ந்து அவன் பிரார்த்தித்தான். “தாயே வழிகாட்டு……!”

நீண்ட நேரம் அவன் பிரார்த்தித்து விட்டு வெளியே வந்த போது ஒற்றன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான். சிவாஜியை வணங்கி விட்டுச் சொன்னான். “நான்கு நாட்களில் கல்யாணில் இருந்து ஒரு சிறுபடை வரிவசூலை பீஜாப்பூருக்குக் கொண்டு செல்கிறது”

தானேக்கு அருகில் இருந்த கல்யாண் பிரதேசம் பீஜாப்பூரின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. அது செல்வச்செழிப்பு மிக்க பகுதியாக இருந்ததால் அங்கு வரிவசூல் தொகை பெருந்தொகையாகவே இருக்கும். வழிகாட்டச் சொல்லி பவானி தேவியை வணங்கி விட்டு வெளியே வரும் நேரத்தில் இந்தச் செய்தி கிடைத்தது தெய்வம் காட்டிய வழியாகவே தெரிந்தது.

உடனடியாக சிவாஜி தன் ஒற்றர்களை வரவழைத்துச் சொன்னான். “கல்யாணில் இருந்து பீஜாப்பூருக்கு வரிவசூல் தொகை கொண்டு செல்லப்படுவது இது முதல் தடவையல்ல. வருடா வருடம் நடக்கும் நிகழ்வு. அவர்கள் செல்லும் வழி எது, கொண்டு செல்லும் வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதங்கள் என்னென்ன, எவ்வளவு என்பது எனக்குத் தெரிய வேண்டும். மனிதர்கள் பழக்கத்தின் அடிமைகள். பிரச்சினை இல்லாமல் ஒரு விஷயம் நடந்து விட்டால் பின் எப்போதும் அந்த வழக்கத்தையே எப்போதும் பின்பற்றுவார்கள். அதனால் அவர்கள் செல்லும் பாதையில் வசிப்பவர்களிடம் ரகசியமாக விசாரித்து அந்தத் தகவல்களை எனக்கு 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.”

அவர்கள் சென்றுவிட அவன் சிந்தனையில் ஆழ்ந்தான். இது நாள் வரை நேரடியாக அவன் பீஜாப்பூர் சுல்தானோடு மோதவில்லை. கூடுமான வரை ஆதில்ஷாவை அவன் குழப்பத்திலேயே வைத்திருந்தான். அவர் மூர்பாத்தில் அவன் கட்டிக் கொண்டிருந்த கோட்டைகளை நிறுத்தச் சொன்ன போது நிறுத்தி விடவில்லை. ஆனால் அந்தக் கோட்டைகள் பீஜாப்பூர் அரசின் வலிமையை கூட்ட அவன் ஆசைப்பட்டுக் கட்டுவது என்றும் அந்த வாய்ப்பை அவன் இழக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்து பதில் கடிதத்தைச் சற்றுத் தாமதமாக அனுப்பி வைத்தான்.  அத்துடன் டோரணா கோட்டை வரிவசூலின் ஒரு பகுதியையும் கணக்கோடு சேர்த்து அனுப்பி வைத்தான்.

சொன்னபடி டோரணாக்கோட்டை வரிவசூல் தொகையை சிவாஜி அனுப்பி வைத்ததால் மூர்பாத்தில் கோட்டைகள் கட்டுவது பீஜாப்பூர் அரசின் வலிமையைக்கூட்ட என்று சிவாஜி தெரிவித்ததை ஆதில்ஷாவுக்கு முற்றிலும் பொய் என்று எண்ண முடியவில்லை. அதே நேரம் முற்றிலும் உண்மை என்றும் நினைக்க விடாமல் அறிவு தடுத்தது. கர்னாடகத்தில் பல பகுதிகளை வென்று பீஜாப்பூர் அரசை தெற்கில் ஷாஹாஜி வலிமைப்படுத்தி வருவதால்  அனாவசியமாக  ஏதாவது நடவடிக்கை எடுத்து ஷாஜாஜியின் அதிருப்தியைச் சம்பாதிக்கவும் ஆதில்ஷா விரும்பவில்லை. சிவாஜியைப் பற்றி இப்போது  இரண்டுங்கெட்டான் அபிப்பிராயங்களே ஆதில்ஷா வைத்திருந்தார். அதை சிவாஜி யூகித்தே வைத்திருந்தான். சிறிது காலம் முன் அவன் கொண்டானா கோட்டையைக் கைப்பற்றியதும் இப்போது ஒற்றர்கள் மூலமாக ஆதில்ஷா காதுகளுக்கு எட்டியிருக்கும். அதில் கூட ஆதில்ஷா உடனடி நடவடிக்கை எடுக்காதபடி குழப்பங்கள் நிறைந்த கடிதம் ஒன்றை அனுப்பி சிவாஜியால் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் சம்பந்தமேயில்லாத கல்யாண் பகுதியின் வரிவசூலை சிவாஜி கைப்பற்றுவதற்கு எந்தக் காரணமும் அவனால் சொல்ல முடியாது. சொன்னால் அது எடுபடவும் செய்யாது. இது கிட்டத்தட்ட நேரடிப் போர் பிரகடனம் தான். ஆதில்ஷாவுக்கு குழப்பம் நீங்கி அவன் நோக்கம் என்னவென்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தே தீரும்…..

அந்தப் பிராந்தியத்தின் வலிமையை சிவாஜி பெருமளவு பெருக்கியிருந்தாலும் பீஜாப்பூர் சுல்தானையே நேரடியாக எதிர்க்கும் அளவுக்கு அவன் வலிமை பெற்றுவிடவில்லை. ஆனால் வலிமை வெறும் படைபலத்திலும், பணபலத்திலும் மட்டும் இல்லை. எல்லா வலிமைகளின் எல்லைகளையும் நிர்ணயிப்பது மனோவலிமையும் அறிவுக்கூர்மையும் தான். அந்த இரண்டையும் வியக்கத்தக்க அளவிலேயே சிவாஜி பெற்றிருந்தான். தெய்வம் வழிகாட்டிய பின்னும் மனிதன் அந்த வழியே விரைந்து செல்லத் தயங்கினால் அவன் தெய்வத்தையே சந்தேகப்படுகிறான் என்று அர்த்தம். சிவாஜி தெய்வத்தைச் சந்தேகிக்கவில்லை….

உடனே தன் நெருங்கிய நண்பர்களையும் முக்கியப் படைத்தலைவர்களையும் கூட்டி சிவாஜி தங்களது தற்போதைய நிதி நிலவரத்தையும், கல்யாண் வரிவசூல் தொகை நான்கு நாட்களில் பீஜாப்பூர் கொண்டு செல்லப்பட இருப்பதையும் தெரிவித்து விட்டுச் சொன்னான். “கல்யாண் வரிவசூலைக் கைப்பற்றுவது நேர்த்தியாகத் திட்டமிட்டு, வேகமாகச் செயல்பட்டால் முடியாத காரியமல்ல. அந்தச் செல்வம் கிடைத்தால் நம் நிதிப்பிரச்சினை உடனடியாகத் தீரும். ஆனால் பீஜாப்பூர் சுல்தானை நேரடியாக எதிர்க்க வேண்டிவரும். படைவலிமையைப் பொருத்தவரை நாம் எந்த விதத்திலும் பீஜாப்பூர் படைக்கு இணையல்ல என்பதையும் மறுக்க முடியாது. கல்யாண் நிதியைக் கைப்பற்றா விட்டால் பீஜாப்பூர் சுல்தானிடமிருந்து உடனடிப் பிரச்சினை எதுவுமிருக்காது. ஆனால் நம் நிதிநிலைமை தேறாது. நிதிப்பிரச்சினை எப்போதுமே தனியாக நின்று விடுவதில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும். யோசித்துச் சொல்லுங்கள் என்ன செய்வது?”

சிறிது நேரம் அங்கே பேரமைதி நிலவியது. இரண்டு நெருக்கடிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்கு எளிதாக அவர்களால் விடை சொல்ல முடியவில்லை. ஒன்றைச் சொல்ல முற்படுகையில் மற்றதன் விளைவு அவர்களைப் பயமுறுத்தியது….

(தொடரும்)
என்.கணேசன்

Sunday, September 9, 2018

மத நல்லிணக்கத்திற்கு ஒரு கோயில், ஒரு மசூதி!



தங்களின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களும், அராஜகங்களும் ஒரு பக்கம் இருக்க, மதங்களைக் கடந்த பெருந்தன்மைகளும், மரியாதைகளும் கூட அவ்வப்போது நமக்குப் பார்க்கக் கிடைப்பது தான் இந்த தேசத்தின் மிகப்பெரிய பலம்.

இன்றைய (9.9.2018) பத்திரிக்கையில் இரு செய்திகள் வியக்க வைக்கும்படி இருந்தன. ஒன்று முஸ்லீம் ஒருவர் விநாயகருக்குக் கோயில் கட்டி வரும் செய்தி. மைசூரைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் அருகே சிக்கஹொல்லே என்ற அணைக்கட்டுப் பகுதியில் மக்கள் வணங்கி வந்த விநாயகர் சிலை கடந்த வருடம் திருட்டுப் போய் விட அது அந்தப் பகுதி மக்களைக் கவலைக்குள்ளாக்கியது. அச்செய்தி பாதித்த மனிதர்களில் ரஹ்மான் என்பவரும் ஒருவர். அந்த அணைக்கட்டுப் பகுதியின் ஊழியராக முன்பு பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் அவர் அப்பகுதியில் சிறிய விநாயகர் கோயில் ஒன்றைக் கட்ட விருப்பம் கொண்டு அதற்காகக் கடும் முயற்சிகள் மேற்கொண்டு உழைத்து வருகிறார். சிலை தயாராகி விட்டதாகவும், கோயில் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. அதற்கு ஆகும் செலவைக் குறித்துக் கேட்ட போது ரஹ்மான் ”இறைவனின் காரியங்களில் கணக்குப் பார்க்க விரும்பவில்லை” என்று கூறி விட்டாராம்.

மாற்று மதத்தின் கோயிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ரஹ்மான் ஒரு வித்தியாசமான உதாரண புருஷராகத் திகழும் அதே வேளையில் உத்திரப்பிரதேசத்தின் முசபர்நகர் அருகே உள்ள நன்ஹெடா கிராமத்தில் இருக்கும் மசூதி ஒன்றை இருபத்தி ஐந்து வருடங்களாக ராம்வீர் காஷ்யப் என்ற இந்து பராமரித்து வருவதாகவும் அதே பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது. 2013ல் நடந்த மதக்கலவரத்தில் அந்த மசூதியை இடிக்க கலவரவாதிகள் முற்பட்ட போது தடுத்துக் காத்தவர்களில் அவரும் ஒருவர்.

முஸ்லீம்கள் யாரும் தற்போது அந்தக் கிராமத்தில் இல்லாத போதும் அதிகாலையில் மசூதியைக் கூட்டிச் சுத்தம் செய்து, மாலையில் மெழுகுவர்த்தி பற்ற வைத்து, வருடத்திற்கு ஒரு முறை ரம்ஜானுக்கு முன் மசூதிக்கு வெள்ளையடித்து ராம்வீர் காஷ்யப் தன் சொந்தச் செலவில் பராமரித்து வருகிறார். அந்தக் கிராமத்து வழியாகப் போகும் முஸ்லீம் வழிப்போக்கர்கள் எப்போதாவது நமாஸ் செய்து விட்டுப் போகிறார்கள்.  

“நான் சிறுவயதிலிருந்து பார்த்து வந்த மசூதி அது. வழிபாட்டுத்தலம் எதுவும் பாழடைந்து இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை. எல்லா வழிபாட்டுத் தலங்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப் பட்டவன் நான். நானே மேஸ்திரியாகவும் இருப்பதால் சிறிய சிறிய ரிப்பேர் வேலைகளையும் செய்து பராமரிப்பது எனக்கு சுலபமாகிறது” என்று அவர் கூறுகிறார்.

இவர்கள் இருவரும் இந்தத் தேசத்தின் ஆழமான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். ஒரு கலவரமானால் அதைப் பல நாட்கள் செய்தியில் இருத்தும் மீடியாக்கள் இது போன்ற நிகழ்வுகளை அதிகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்க விஷயம்.

நல்ல விஷயங்களைப் பேசுபவர்கள் இன்று குறைந்து விட்டார்கள். ஊடகங்களோ நல்ல விஷயங்களைத் தொடர்ந்து வெளியிட்டால் காசு பார்க்க முடியாதென்று நினைக்கிறார்கள். அதனால் ஒரு குடும்பப்பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு கள்ளக்காதலனோடு ஓடினால் அது பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பல நாள் செய்திகளாகத் தொடர்கிறது. மோசமான விஷயங்களை நீட்டி முழக்குபவர்கள் நல்ல விஷயங்களை ஒரு நாள் ஒரு பத்திச் செய்தியாகக் கடந்து விடுகிறார்கள்.

ஆனால் உண்மையில் பத்திரிக்கைகளில் அதிகம் வராத, தொலைக்காட்சிகளில் அதிகம் காட்டாத இது போன்ற சம்பவங்களே இந்தத் தேசத்தின் உண்மையான ஆழத்தையும் உயரத்தையும் காட்டுகின்றன. நம் அடையாளமும் இது தான்.

என்.கணேசன்

Thursday, September 6, 2018

இருவேறு உலகம் 99

மாஸ்டர் ஹரித்வாருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கிருஷ்ணவேணியிடம் கேட்க சென்ற விஷயமே வேறு, கிருஷ்ணவேணி சந்தேகப்பட்ட விஷயமே வேறாக இருந்தது.  மாஸ்டர் கேட்கப்போன நோக்கம் எதிரியின் கைப்பாவையாக தற்போது இருக்கக்கூடிய ஆள் யார் என்று அறிந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கிருஷ்ணவேணியோ கேள்வியின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளாமல் ஆன்மிக இயக்கத்தின் கணக்கில் கையாடல் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அதிலேயே நின்று விட்டார். விஸ்வம் மேல் மாஸ்டருக்கு இப்போதும் பெருத்த சந்தேகம் வந்து விடவில்லை. அப்படியே ஒரு வேளை கணக்கில் சில்லறைத் தவறுகள் இருந்தாலும் கூட ”அன்னிய சக்தி பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது’ என்ற பிரம்மாண்டப் பிரச்னைக்கு முன் இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆனாலும் மேலான ஒருவரிடம் ஆலோசனை கேட்டபின் அந்த ஆலோசனையைப் பின்பற்றாமல் இருப்பது அவருக்கு ஏற்படுத்தும் கௌரவக் குறைவாகத் தோன்றியதால் தான் மாஸ்டர் விஸ்வத்திடம் தெரிவிக்காமலேயே தற்போது ஹரித்வார் போய்க் கொண்டிருக்கிறார்.  எல்லாக்கணக்கும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டுத் திரும்பிய பிறகு மறுபடி உண்மையான பிரச்னையான எதிரி பற்றி யோசிக்க வேண்டும்….

ஹரித்வாரில் விஸ்வம் தங்கியிருந்த வீடு பூட்டி இருந்தது. விஸ்வம் எங்கோ வெளியே போயிருக்க வேண்டும். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாததால் வெளியே செல்லும் போது பூட்டின் சாவியை வெளியே மின்சார மீட்டரை மூடி வைத்திருக்கும் மரக்கட்டைத் தடுப்பின் உள்ளே ஒரு ஓரமாக சாவியை விஸ்வம் வைத்து விட்டுப் போவது வழக்கம். மாஸ்டர் அந்தத் தடுப்பின் உள்ளே வைத்திருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். நேராக விஸ்வம் எப்போதும் அக்கவுண்ட்ஸ் ஃபைல் வைத்திருக்கும் அலமாரியை நோக்கிச் சென்றார். அலமாரியில் அந்த இடத்தில் அக்கவுண்ட்ஸ் ஃபைல் இல்லை. அலமாரியில் இடம் மாறி வைத்திருக்கிறாரா என்றும் மாஸ்டர் பார்த்தார். இல்லை.

அத்தனை உறுதியாக கிருஷ்ணவேணியிடம் சொல்லி சொன்னபடி இப்போது அந்த ஃபைல் அங்கு இல்லாமல் போனது மாஸ்டருக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. மாஸ்டர் கம்ப்யூட்டரை ஆன் செய்து விஸ்வம் சொல்லியிருந்த இடத்தில் அக்கவுண்ட்ஸ் ஃபோல்டரைத் தேடினார். அங்கும் அது இல்லை.  மாஸ்டரின் நெற்றி சுருங்கியது. என்ன ஆயிற்று விஸ்வத்துக்கு?

செல்போனை எடுத்து விஸ்வத்தைத் தொடர்பு கொள்ள முயன்றார். செல்போன் ஸ்விட்ச்டு ஆஃப் ஆகியிருந்தது. நம்பக் கஷ்டமாய் இருந்தாலும் விஸ்வம் பணத்தில் ஏதாவது கையாடல் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் லேசாக எழ ஆரம்பித்தது. மாஸ்டர் வீட்டுக்குள் ஒரு வலம் வந்தார். வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் பல நாட்கள் ஆனது போல் இருந்தது. எதிரி விஸ்வத்தையும் கடத்தி விட்டானோ என்ற சந்தேகம் மெல்ல எழ ஆரம்பித்தது. அதற்கு வாய்ப்பு இருப்பதாக மனம் சொன்னது. உடனே விஸ்வத்தின் ஆடைகளும், மற்ற உடைமைகளும் இருக்கும் பீரோவைத் திறந்து பார்த்தார். பீரோ காலியாக இருந்தது. விஸ்வத்தை எதிரி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் காற்றில் கரைந்தது. சிறிது யோசித்து விட்டு அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்த மாஸ்டர் தியானத்தில் மூழ்கி விஸ்வத்தின் அலைகளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். அவரால் விஸ்வத்தின் அலைகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பெரியதொரு தடுப்பரணில் மோதி அவர் அனுப்பிய அலைகள் திரும்பிய உணர்வு ஏற்பட்டது.

மனதினுள் பல உணர்ச்சிகள் போராட வெளியே வந்த மாஸ்டர் அந்த வீட்டின் எதிரில் உள்ள மளிகைக் கடைக்காரனிடம் விசாரித்தார். “இப்பவெல்லாம் அவர் இங்கே வர்றதே அபூர்வம். மாசத்துல ஒரு நாள் இங்கே இருந்தால் அதுவே பெருசு.” என்றான் அந்தக் கடைக்காரன். கடைசியாக எப்போது விஸ்வத்தைப் பார்த்தோம் என்பது கூட அந்தக் கடைக்காரனுக்கு நினைவிருக்கவில்லை. மாஸ்டர் மனதின் ஆழத்தில் சின்னதாய் ஒரு அபாய அறிவிப்பை உணர ஆரம்பித்தார்.

அதற்கு மேல் மாஸ்டர் அதிகம் தாமதிக்காமல் ஹரித்வாரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குப் போனார். அங்கிருந்த மேனேஜரை அவர் மிக நன்றாக அறிவார். அவர் மாஸ்டரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். வந்த காரணத்தைக் கேட்ட அவர் உடனே ஒருவருட வங்கிக்கணக்கை ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்தார். அங்கு கணக்கை  ஆராய ஆரம்பித்த மாஸ்டருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஒன்பது மாதங்களில் அதிகமாய் வரவுகள் மட்டும் இருந்தன. அவற்றில் அதிகம் வெளிநாட்டிலிருந்து உறுப்பினர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் அனுப்பியிருந்த பெருந்தொகைகள். கடந்த மூன்று மாதங்களாக கணக்கில் வேறுபல பரிவர்த்தனைகளும் ஆகியிருந்தன. அவர்கள் ஆன்மிக இயக்கத்தின் பல சொத்துக்கள் விற்கப்பட்டு பணம் வரவாகி அவையெல்லாம் உடனடியாக பல பெயர்களில் இருந்த வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. உள்நாட்டு வெளிநாட்டு ஆன்மிக ஆதரவாளர்கள் அனுப்பியிருந்த கோடிக்கணக்கான பணமும் பெரிய பெரிய தொகைகளாக அதே போல் வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. எல்லாம் போய் கணக்கில் தற்போது ரூ.36123.57 கணக்கில் மீதம் இருந்தது.

மாஸ்டர் சாதாரணமாக எதற்கும் அதிரும் ரகம் அல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அவரைச் சுற்றியுள்ள உலகம் இருண்டு போனது…..

அவர் முகமாற்றத்தில் இருந்தே ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது என்பதை மேனேஜர் புரிந்து கொண்டார். “என்ன சார்?”

தன்னைச் சுதாரித்துக் கொள்ள மாஸ்டருக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. சுதாரித்துக் கொண்டு பணக் கையாடல் நடந்து விட்டது என்று சுருக்கமாகத் தெரிவித்தார். மேனேஜர் முகத்திலும் திகைப்பும் அதிர்ச்சியும் தெரிந்தது. இனி எடுக்க கணக்கில் பெரிதாக எதுவுமில்லை என்ற போதும் விஸ்வத்திற்கு முன்பு கொடுத்திருந்த எல்லா அதிகாரங்களையும் ரத்து செய்யும் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு நடைப்பிணமாய் மாஸ்டர் வெளியே வந்தார். மதிய வெயில் மண்டையைப் பிளந்தது. அதை விட அதிகமாய் மனசாட்சி அவரைப் பிளந்து கொண்டிருந்தது.

தன்னுடைய சொத்துக்கள், உடைமைகள் முழுவதுமே போயிருந்தால் கூட அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஆனால் போனது அவர் பணம் அல்ல மற்றவர்கள் பணம். அவரை நம்பி ஒரு மாபெரும் இயக்கம் ஒப்படைத்த செல்வம். எல்லாவற்றையும் மிக நன்றாக நடத்திச் செல்வார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவர் குரு தன் பிரிய சிஷ்யனிடம் அந்த இயக்கத்தை ஒப்படைத்துச் சென்றார். அந்தக் குருவின் நம்பிக்கையையும், மற்றவர்கள் நம்பிக்கையையும் தகர்த்து விட்டிருக்கிறோம் என்கிற உறுத்தல் மாஸ்டருக்குத் தாங்க முடியாததாய் இருந்தது.

சுடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மாஸ்டர் கங்கைக் கரைக்குச் சென்று அமர்ந்தார். சென்ற முறை வந்த போது கங்கை அவருக்குப் பாடம் நடத்தியதாக உணர்ந்தது நினைவுக்கு வந்தது. எப்போதும் புத்துணர்ச்சியுடன் இலக்கு நோக்கிய பயணமாக வாழ்க்கை இருக்க வேண்டும் என்று கங்கை சொல்லி இருந்தது.  இலக்கு தகர்ந்து, நம்பிக்கை தகர்ந்து, எல்லாமுமே தகர்ந்து போன வாழ்க்கையை நீட்ட வேண்டுமா என்ற கேள்வி மாஸ்டருக்குள் பெரிதாக எழுந்தது. ’நான் தகர்ந்திருந்தால் பரவாயில்லை. என் முட்டாள்தனத்தால் இந்தப் புனித இயக்கத்தையே ஓட்டாண்டி ஆக்கி விட்டேனே! இதற்கு மன்னிப்பு உண்டா?” மனம் கதறியது. கங்கையில் மாஸ்டர் இறங்கினார். ’குருவே என்னை மன்னித்து விடுங்கள்’ என்று மனதிற்குள் கூவியபடி கங்கையின் ஆழத்தை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில் அவருடைய செல் போன் இசைத்தது. எடுத்துப் பார்த்தார். அழைப்பது க்ரிஷ்…. பேசினார். “ஹலோ”

“மாஸ்டர் க்ரிஷ் பேசறேன்”

“என்ன விஷயம் க்ரிஷ்?”

“திடீர்னு உங்க கிட்ட பேசணும், உங்க குரலைக் கேட்கணும்னு தோணுச்சு மாஸ்டர். அதனால தான் கூப்பிட்டேன்……..”

அவனுடைய அன்பான வார்த்தைகள் அவர் கண்களை ஈரமாக்கின. தொடர்ந்து அவன் செந்தில்நாதன் வந்து விட்டதையும், ஹரிணியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையும் சொன்னான். இப்போது ஓரளவு மனோபலம் பெற்று விட்டிருப்பதையும் சொன்னான். “….நீங்க சொன்ன வார்த்தைகளை ஒரு பெரிய பேப்பர்ல எழுதி எதிர் சுவத்துல ஒட்ட வெச்சிருக்கேன் மாஸ்டர். ’பிரச்சினைகளைத் தர்ற விதி அதை சமாளிக்கற வழியையும் தராமப் போயிடறதில்ல. நம்பிக்கையோட இரு. சக்திகளை கவலையில் விரயம் பண்ணாம தீர்வுகள் பக்கம் திருப்பு. நல்லதே நடக்கும்’. ...”

அதற்கப்புறமும் க்ரிஷ் என்னென்னவோ சொன்னான். அதெல்லாம் அவர் மனதில் பதியவில்லை. அவர் சொல்லி அவன் நினைவுபடுத்திய வார்த்தைகளிலேயே அவர் மனம் நின்றது..... அவன் கால் மணி நேரம் கழித்து போன் செய்திருந்தால் அவர் வாழ்க்கை முடிந்து போயிருந்திருக்கும். அவர் குருவே அவனை அவருக்குப் போன் செய்ய வைத்திருக்கிறார் என்று நம்பினார். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் மாஸ்டர் கரைக்குத் திரும்பினார்.

(தொடரும்)

என்.கணேசன்