சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 26, 2017

இருவேறு உலகம் – 14


க்ரிஷோட அந்த ரெண்டு நண்பர்களும் அவர் செய்யற ஆராய்ச்சில எப்பவாவது கலந்துக்கறதுண்டா செந்தில்நாதன் அவர்களைக் கேட்டார்.

இல்லையென மூன்று பேரும் ஒருசேரத் தலையசைத்தார்கள்.

ஆனா அவங்களுக்கு க்ரிஷோட ஆராய்ச்சிகள் பத்தி உங்கள விட அதிகமா தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. இல்லையா?

ஆமென்று அவர்கள் தலையசைத்தார்கள்.

செந்தில்நாதன் சொன்னார். “எனக்கு க்ரிஷோட ரூம், அவரோட கம்ப்யூட்டர் எல்லாம் செக் பண்ணனும்....

அவரை அழைத்துப் போக உதய் எழுந்தான். அவரும் எழுந்து அவனைப் பின் தொடர்ந்தார். போகும் போது அவனைக் கேட்டார். “அவர் கம்ப்யூட்டர் பாஸ்வர்டு உங்களுக்குத் தெரியுமா?

“எல்லாமே ஓப்பனா தான் இருக்கும். எதையும் அவன் வெளிப்படையா தான் வச்சிருப்பான்.....உதய் சொன்னான்.

க்ரிஷின் அறை ஒரு பக்கம் புத்தகங்களால் நிறைந்திருந்தது. பல அலமாரிகள், அதில் ஏராளமான புத்தகங்கள்.... ஆனால் எல்லாம் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் வைக்கப்பட்டிருந்தன. அந்த ஒழுங்கும், நேர்த்தியும், கட்டில், கம்ப்யூட்டர் டேபிள், சில உடற்பயிற்சிக் கருவிகள் என அறை முழுவதும் எல்லாவற்றிலும் தெரிந்தது. பெரும்பாலான அறிவுஜீவிகள் அப்படி இருப்பதில்லை என்பதை செந்தில்நாதன் கண்கூடாகப் பார்த்திருக்கிறார். இதிலும் இவன் வித்தியாசமானவன் தான்....

செந்தில் நாதன் முதலில் புத்தக அலமாரியருகே போனார். நாவல்கள், இலக்கியங்கள், வானவியல், உளவியல், தத்துவம், வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி, ஆழ்மனசக்தி, ஆன்மீகம், மாந்திரீகம், உடலியல், அறிவியல் என பல பிரிவுகளில் நூல்கள் நூலகத்தில் வைத்திருப்பது போல் வைக்கப்பட்டிருந்தன. அவர் சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தார். அவற்றில் எல்லாம் பல பக்கங்களில் பென்சிலில் அவன் எழுதியிருந்த குறிப்புகள் பக்கவாட்டில் தெரிந்தன. படிக்காமல் வைத்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் எதுவும் இல்லை போல் தெரிந்தது.

அவர் திரும்பவும் அலமாரியில் வைத்த புத்தகங்கள் சில வரிசைக்கு வெளியில் தெரிய உதய் உடனே அதைச் சரிப்படுத்தினான். அதைக் கவனித்த செந்தில்நாதனிடம் மெல்லச் சொன்னான். “அவன் வந்து பாத்தா திட்டுவான்... நான் பல தடவை அவன் கிட்ட திட்டு வாங்கியிருக்கேன்....

அவர் அதற்குப் பின் எடுத்த புத்தகங்களைக் கவனமாக வைத்தார். பின் மெல்லக் கேட்டார். “நீங்களும் இப்படி தான் உங்க ரூமை வச்சிருப்பீங்களா?

அவனுக்கு குபுக்கென்று சிரிப்பு வந்தது. “ஐயோ, என் ரூம்ல எதுவுமே ஒழுங்கா இருக்காது. அம்மா அப்பப்ப வந்து ஒழுங்குபடுத்திட்டு போவாங்க. ஆனா கொஞ்ச நேரத்துலயே பழையபடி மாறிடும்...

அவன் வெளிப்படையாகச் சொன்ன விதம் அவரைக் கவர்ந்தது. அப்படிப்பட்டவன் இங்கு தம்பியின் அலமாரியில் சற்று விலகிய நிலையில் இருக்கும் புத்தகத்தைக் கூடச் சரிசெய்ததும், தம்பி பார்த்தால் திட்டுவான் என்று சொன்னதும் அவனை வித்தியாசமான கோணத்தில் அவருக்குக் காட்டியது....

க்ரிஷின் மேசையில் ஏதாவது புத்தகங்கள் இருக்கிறதா என்று செந்தில்நாதன் பார்த்தார். இல்லை. இருந்திருந்தால் கடைசியாக அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகம் எது என்பதைத் தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். அவர் உதயிடம் சொன்னார். “உங்க தம்பிக்கு நிறைய விஷயங்கள்ல ஆர்வம் இருந்திருக்கு....

அவன் பெருமையுடன் சொன்னான். “ஆமா.... சில சமயம் கல்லு, சில சமயம் ஓலைச்சுவடி, சில சமயம் ஆளுங்க, சில சமயம் ஆகாயம்னு அவனுக்கு சாதாரணத்துல இருந்து பெரிய விஷயங்க வரைக்கும் உலகத்துல எத்தனையோ விஷயங்க பிரமிப்பானதா இருந்துச்சு. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும், ஆழமா புரிஞ்சுக்கணும்னு நினைப்பான்.... 

க்ரிஷ் பற்றிய அந்தக் கருத்தை அவனைப் பற்றிப் படிக்கையிலேயே உணர்ந்திருந்த செந்தில்நாதன் தலையசைத்து விட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்றீங்களா?” என்றார்.

உதய் கம்ப்யூட்டரை ஆன் செய்தான். கம்ப்யூட்டர் திரையில் கண்ணாடி அணிந்திருந்த ஒரு அழகான பெண் தெரிந்தாள்...... கண்களில் புத்திசாலித்தனம் தெரிந்தது. இது யார்?என்று செந்தில்நாதன் கேட்க உதய் “இது தான் ஹரிணிஎன்றான்.

அவள் தோழி மட்டுல்ல சற்று அதிகப்படியாகவும் இருக்கலாம் என்று செந்தில்நாதனுக்குத் தோன்றியது. ஆனால் அதை அவர் கேட்கவில்லை. அவர் நாற்காலியில் அமர்ந்து கம்ப்யூட்டரில் தனக்கு ஏதாவது தகவல்கள் கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்.

ஹரிணியின் புகைப்படத்தை தம்பியின் டெஸ்க்டாப்பிலேயே பார்த்த உதய் மனதை சின்னதாய் ஒரு சோகம் சூழ்ந்தது. முதலில் எல்லாம் அடிக்கடி வரும் அவள் கடந்த மூன்று மாதங்களாக வருவதில்லை...

க்ரிஷ் அவளைக் காதலிப்பது அவனுக்குத் தெரியும். காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஒரே ஒருத்தியோடு மட்டும் ஏற்படும் ஆத்மார்த்தமான உணர்வு என்று நம்புபவன் க்ரிஷ். அவளோடு இருக்கிற போதெல்லாம் க்ரிஷிடம் கூடுதல் பிரகாசம் தெரிவதாக உதய்க்குத் தோன்றும். அவளிடமும் அதே பிரதிபலிப்பை அவன் பார்த்திருக்கிறான்.  ஒரு முறை இதே அறையில் இருவரும் மிக நெருக்கமாக இருந்த காதல் தருணத்தை உதய் தற்செயலாகப் பார்த்து விட்டு பல நாட்கள் தம்பியைச் சீண்டி இருக்கிறான். “டேய் எத்தனை தெரிஞ்சு என்ன பிரயோஜனம். சிலதை எல்லாம் செய்யறதுக்கு முன்னாடி ரூம் கதவ தாள் போட்டுக்கணும்கிற சின்ன விஷயம் கூட உனக்குத் தெரியலையே”.

தம்பியின் வெட்கமும், முகச்சிவப்பும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடிக்க வரும் தம்பியிடமிருந்து விலகி ஓடி விடுவான். எதிலும் தம்பியிடம் திருப்பிப் பேச முடியாத அவனுக்குக் கிடைத்த இந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தை அவன் வீணாக்கவில்லை. க்ரிஷ் அவனிடம் பதில் பேச முடியாமல், திட்ட முடியாமல் தர்மசங்கடப்படும் ஒரே விஷயம் அது தான். எனவே உதய்  பெற்றோர் இருக்கையிலும் ஜாடை மாடையாக இதையே  சொல்லித் தம்பியின் வெட்கத்தையும், கோபத்தையும் ரசித்திருக்கிறான். பெற்றோர் என்ன என்று கேட்கும் போது வேறெதோ கதை சொல்லி சமாளித்து இருக்கிறான்...

இப்போது ஏனோ அந்த நினைவுகள் மனதில் கனக்கின்றன.



ஞ்சுத் தலையருக்கு பிறகு தூக்கம் வரவேயில்லை. அவர் போன் செய்து நள்ளிரவிலேயே அந்த சுந்தரத்திடம் எங்கிருந்து போன் வந்தது என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொல்லியிருந்தாலும் அவன் மறு நாள் காலையில் தான் கண்டுபிடித்துச் சொல்ல முடியும் என்று தன் நிலையை மிகவும் பணிவாகச் சொல்லியிருந்தான்.

நள்ளிரவில் அவன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும் அவருக்கு அவன் மேல் கோபம் வந்தது. “காசை வீசினாலும் சில வேலைகள் வேகமா நடக்க மாட்டேங்குது....என்று மனம் நொந்தவர் எங்கிருந்து யார் இந்த சதிவேலையைச் செய்திருக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார். மணீஷ் சொன்னது போல எதோ ஒரு புறம்போக்கு அந்த மலை மேல் இருந்திருக்க வேண்டும். அவன் தான் அந்த வாடகைக் கொலையாளி மரணத்திற்கும் காரணமாய் இருந்திருக்க வேண்டும். க்ரிஷின் பிணத்தை ஒளித்து வைத்து விளையாடுகிறான். ஒரு வேளை அந்தச் சனியன் வீடியோ கூட எடுத்து வைத்திருக்கலாம்.....

திடீரென்று இப்படிப் போன அவருடைய எண்ணப் போக்கு அவரையே பயமுறுத்தியது. “கற்பனைல மணீஷ மிஞ்சுடுவோம் போல இருக்கே.... ச்சேஎன்று தன்னையே கண்டித்துக் கொண்டவர் அவன் யாராக இருந்தாலும் அவனை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அந்த ஆள் இன்னும் அந்தப் பகுதியிலிருந்து தான் போன் செய்கிறானா, இல்லை அந்த அமானுஷ்யப் பேய்க்காற்றை எதிலாவது பதிவு செய்து வைத்துக் கொண்டு பயமுறுத்துவதற்காக, போன் பேசும் போது போட்டு விடுகிறானா என்று தெரியவில்லை.

பணம் பிடுங்கறதுக்காக என்கிட்ட விளையாடறியா நாயே. உனக்கு நான் யாருன்னு காட்டறேன் இரு....என்று முகம் தெரியாத அவனிடம் மனதில் அடிக்கடி சொல்லிக் கொண்டார்.

அவர் நிலைமையைப் பற்றிக் கவலைப்படாமல் நிதானமாக நகர்ந்தது காலம். ஒருவழியாக விடிந்தது. காலையில் மணீஷிடமும் அவர் போன் செய்து முந்தைய இரவு வந்த அந்தப் போன்கால் பற்றித் தெரிவித்தார். அவன் சிறிது நேரத்தில் அங்கு வந்து விட்டான். இருவரும் தங்கள் யூகங்களைப் பகிர்ந்து கொண்டு தாங்களே சிறிது பயப்பட்டார்கள்.

ஒருவழியாக அவர்கள் இருவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த சுந்தரத்தின் போன் கால் வந்தது. உடனே ஸ்பீக்கரை அழுத்தி விட்டு பஞ்சுத்தலையர் பேசினார். “ஹலோ

“ஐயா அவன் உங்க வீட்டு ஏரியால இருந்து தான் போன் பண்ணிருக்கான்என்று சொன்னான். பஞ்சுத்தலையருக்கு ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தாலும் மூளை வேலை செய்வதை நிறுத்தவில்லை.

“அவன் எனக்குப் போன் செஞ்ச மாதிரி வேற யாருக்காவது போன் செஞ்சிருக்கானா? இல்லை வேற யாராவது அந்த நம்பருக்குப் போன் செஞ்சு பேசி இருக்காங்களா?

இல்லைங்க ஐயா. வேற யார் கிட்டயும் அந்த ஆள் பேசல. அதே மாதிரி வேறெந்த காலையும் அந்த ஆள் அட்டெண்ட் பண்ணல

மணீஷும் பஞ்சுத்தலையரும் கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்  

Monday, January 23, 2017

காலம் வீணாகும் விதங்களும், தடுக்கும் முறைகளும்!

அறிந்தும் அறியாமலும் எப்படியெல்லாம் நம் காலம் வீணாகிறது, அதை எப்படி எல்லாம் தடுப்பது என்று பார்ப்போமா?

யூட்யூபில் காண-



ஸ்லைட்யுகளில் காண-


Saturday, January 21, 2017

தலை நிமிர வைக்கும் இளைய தலைமுறை!


த்தியின்றி, இரத்தமின்றி, சத்தமின்றி யுத்தம் ஒன்று இங்கு அரங்கேறியிருக்கிறது.

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கடலெனக் கூட்டம் கூடிய இளைஞர்கள் காட்டிய கண்ணியமும், பொறுப்புணர்வும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆண்களும், பெண்களுமாய் பெருமளவு கூடிய இடங்களில் ஒரு கண்ணிய நட்புச் சூழலைப் பார்க்க முடிந்தது. கோவையில் வ உ சி பூங்கா பகுதியில் திரண்டிருந்த அவர்கள் தாங்கள் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் காட்டிய அக்கறையும், சில இடங்களில் போக்குவரத்தைச் சீர்ப்படுத்த காவலர்க்கு உதவிய விதமும், ஆச்சரியப்படுத்தியது. பலர் குடும்ப சகிதம் வந்து கலந்து கொண்டார்கள்.

அவர்களுக்குள் யாராவது சொல்லிலோ, செயலிலோ அத்துமீற ஆரம்பிக்கையிலேயே அவர்களில் சிலர் அதைக் கட்டுப்படுத்தினார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட இளைஞர்களும் கட்டுப்பட்டார்கள். இதைக் காண மனம் நிறைந்தது. உணர்ச்சிகளின் போராட்டத்தில் வன்முறை வெடிக்க பல நூறு காரணங்கள் கிடைக்கும். அப்படி இருந்தும் எதுவும் நிகழ்ந்து விடாமல் இருந்தது நினைக்கவே பெருமையாக இருக்கிறது. சில விஷமிகள் புரளி, வதந்தி பரப்பி போராட்டம் வெடிக்க முயற்சி செய்த போதிலும் இளைஞர்கள் அதற்கு இடம் தராமல் அதைப் புறக்கணித்து அமைதி காக்க வழிவகுத்தார்கள் என்ற செய்திகளும் கிடைத்தன. காவல்துறையும் பொதுமக்களும் தங்களுக்குள் இளையதலைமுறையைப் பாராட்டிப் பேசிக்கொண்டதை பல இடங்களில் கேட்க முடிந்தது.

இதில் பேரதிர்ச்சி அடைந்தது அரசியல்கட்சிகளாகத் தான் இருக்கும். பணம், பிரியாணி வகையறாக்களைக் கொடுத்து ஆள் திரட்டி தங்கள் பொதுக்கூட்டங்களுக்குத் தருவித்துப் பழகிய அவர்களுக்கு தானாகக் கூடிய இளைஞர் படை அதிர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும். சொந்த லாப நஷ்டங்களை வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தும் பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தப் போராட்டத்திற்குத் தங்கள் கட்சி சாயம் பூச முயற்சித்து தோற்றுப் போனதைப் பார்த்து ரசிக்க முடிந்தது.

இளைஞர்களே உங்களுக்குப் பாராட்டுக்கள். தேவை ஒன்று வரும் போது உங்களால் அலட்டிக் கொள்ளாமல் இராணுவ ஒழுங்குடன் விசுவரூபம் எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறீர்கள். சபாஷ். இது போதும், இனி இந்த தேசம் விழித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது!

என்.கணேசன்

   

Thursday, January 19, 2017

இருவேறு உலகம் – 13


த்மாவதியின் வார்த்தைகளும், துக்கமும், கமலக்கண்ணனையும், உதயையும் உடனடியாகப் பாதித்தன. கமலக்கண்ணன் அழுது விடக்கூடாது என்று கடுமையாக முயற்சி செய்து அதைச் சாதிக்க அவள் பக்கம் திரும்பாமலேயே இருந்தார். உதய் தன் தாயின் துக்கத்தில் தானும் லேசாகக் கண் கலங்கினான். தாயைத் தோளாடு அணைத்துக் கொண்டபடி சொன்னான்.  அழாதேம்மா. தம்பிக்கு எதுவும் ஆகியிருக்காது. வந்துடுவான்..

செந்தில்நாதனை அந்தக் காட்சி நெகிழ வைத்தது. அந்தத் தாயின் மன ஆழத்திலிருந்து வந்த யதார்த்த வார்த்தைகள், அந்தப் பெற்றோரின் துக்கம், அந்தத் தமையனின் பாசமான வார்த்தைகள் எல்லாம் அன்பான குடும்பம் ஒன்றின் ஆத்மார்த்தமான வெளிப்பாடாக இருந்தன. காட்டான் என்று நினைத்த அந்த இளைஞன், நினைத்த அளவு காட்டான் அல்ல என்று இப்போது தோன்றியது.

பத்மாவதி சிறிது அமைதியடைந்தாள்.  கண்களைத் துடைத்துக் கொண்டாள்.  கமலக்கண்ணன் செந்தில்நாதனை ‘தொடருங்கள்என்பது போல் பார்த்தார்.

“சார், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா?செந்தில்நாதன் கேட்டார்.

இல்லை”  கமலக்கண்ணன் யோசிக்காமலேயே சொன்னார். செந்தில்நாதனுக்கு அவர் யோசித்துச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

அவர் மெல்லக் கேட்டார். “உங்க நம்பிக்கைக்குப் பாத்திரமா சில காலம் கூட நெருக்கமா இருந்து பிறகு விலகிப் போன உதவியாளர்கள், வேலைக்காரர்கள், கட்சிக்காரர்கள் யாராவது....?

கமலக்கண்ணன் இல்லையென்று தலையசைத்தார்.  அடிமட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்திருந்த கமலக்கண்ணன் நெருக்கமாகத் தன்னுடன் இருந்தவர்களை நன்றாகவே நடத்தினார். கோபப்படுவாரேயொழிய அவமரியாதையாக யாரையும் நடத்தியதில்லை. கொடுக்கும் விஷயத்திலும் தாராளமாகவே அவர்களுடன் நடந்து கொண்டார். அதனால் நெருங்கியிருந்த மனிதர்கள் விலகிப் போகும் சந்தர்ப்பங்கள் வந்ததில்லை.

செந்தில்நாதன் உதயைப் பார்த்தார். அவனும் தந்தை சொல்வது சரியே என்பது போலத் தலையசைத்தான்.

“க்ரிஷ் அந்த மலைக்கு ஏன் போனார்?

கமலக்கண்ணன் என்ன சொல்வதென்று தர்மசங்கடத்துடன் யோசித்தார். பின் வெளிப்படையாகவே சொன்னார். “அவன் எப்பவுமே எதைப்பத்தியாவது ஆராய்ச்சி செஞ்சுகிட்டோ, படிச்சுகிட்டோ இருப்பான்..... அந்த மலைக்குப் போறதும் அந்த மாதிரி ஏதாவதா தான் இருக்கும்னு நினைக்கிறேன்... நாங்க அவன் கிட்ட எதையும் கேக்கறதில்லை.... அவன் சொன்னாலும் எங்களுக்குப் புரியாது....

உனக்கு ஏதாவது தெரியுமா என்பது போல் செந்தில்நாதன் உதயைப் பார்த்தார். உதய் தங்கள் நிலையை சுருக்கமாகச் சொன்னான். “எப்பவாவது எதாவது வித்தியாசமா செஞ்சா கேட்டு தெரிஞ்சுக்க நமக்கு ஆர்வமிருக்கும்.... செய்யறது எல்லாமே வித்தியாசமா இருந்தா என்ன செய்ய முடியும்?  ஆரம்பத்துல ஒன்னு ரெண்டு விஷயத்துல நான் அவனை அப்படிக் கேட்டிருக்கேன். அவன் சொன்னது சுத்தமா எனக்குப் புரியலை. புரியலைன்னவுடனே அவன் விளக்க முயற்சி செஞ்சான். ஆனா அதுவும் தலைசுத்த வெக்கற அளவுல குழப்புச்சு. அதனால கேக்கறதயே விட்டுட்டேன்...

செந்தில்நாதன் பத்மாவதியைப் பார்த்தார். பத்மாவதி சொன்னாள். “படிச்சவன் இவனுக்கே புரியலைன்னா எனக்கு என்ன புரியும். நானும் எதயும் கேட்டுக்கறதில்லை. இந்த மலைப்பக்கம் பேய் உலாவுதுன்னு கேள்விப்பட்டதால அவன் கிட்ட “பேய் இருக்கற இடம்னு பேசிகிட்டாங்களேடா, ஜாக்கிரதையாய் இருன்னு மட்டும் சொன்னேன். அவன் அதுக்கு அப்படி அங்கே பேயும் இருந்துச்சுன்னா ரொம்ப நல்லதும்மா, வாழ்க்கைல ஒரு பேயையாவது ஆராய்ச்சி செஞ்சுடணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னான்....

செந்தில்நாதன் அவள் சொன்னதில் “பேயும் இருந்துச்சுன்னாஎன்ற வாசகத்தை மனதில் அடிக்கோடிட்டார். அப்படியானால் அங்கே வேறெதோ இருந்திருக்கிறது. அதை ஆராய்ச்சி செய்யப் போயிருக்கிறான்....

“அவர் அந்த மலைக்கு அடிக்கடி போவாரோ?

பத்மாவதி சொன்னாள். “அமாவாசை அமாவாசைக்குப் போவான்....சொல்லும் போதே இன்னொரு தகவலும் அவளுக்கு நினைவுக்கு  வர உடனே மூத்த மகன் பக்கம் திரும்பிக் கேட்டாள். “ஏண்டா அங்கே அமாவாசையப்ப தானே பேய்கள் உலாவும்னு பேசிகிட்டாங்க.... அவனை பேய் ஏதாவது செய்துருக்குமோ?

உதய் முகத்தில் குறும்புப் புன்னகை பூத்தது. செந்தில்நாதனை ஒருகணம் அவன் மறந்தான். “ஏதாவது செய்துருக்குமோன்னா?

“அவனை மயக்கமடைய வச்சு எங்கயாவது எடுத்துட்டு போயிருக்குமோ

“அப்படி தூக்கிட்டுப் போயிருந்துச்சுன்னா, உன் பையனுக்கு மயக்கம் தெளிஞ்சவுடனே கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாம அலறியடிச்சுட்டு ஓடியிருக்கும்.....

சின்னதாய் அவள் முகத்திலும் புன்னகை படர மூத்த மகனைப் பொய்க்கோபத்துடன் பார்த்தாள்.

சற்று முன் கண்ணீருடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் இப்போது ஒரு சிறு கணம் அதை மறந்து அளவளாவியதை செந்தில்நாதனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நல்ல அன்பான மனிதர்கள் தான்.....

அவர் இருப்பதை உடனே உணர்ந்த உதய் மெல்ல “சாரிஎன்றான்.

முதல் முறையாக அவனைப் பார்த்து செந்தில்நாதன் புன்னகைத்தார். “பரவாயில்லை... எப்பவுமே எந்த நேரத்துல அங்கே போய் எந்த நேரத்துல திரும்பி வருவார்?

“மதியமே வீட்டுல இருந்து கிளம்பிடுவான். மறு நாள் காலைல ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடுவான்....பத்மாவதி சொன்னாள்.

சில வினாடிகள் யோசித்து விட்டு செந்தில்நாதன் கேட்டார். க்ரிஷோட நெருங்கிய நண்பர்கள் கிட்ட தன் ஆராய்ச்சியை அவர் பகிர்ந்திருக்கலாமில்லையா? அவரோட நெருங்கிய நண்பர்கள் பேரை சொல்லுங்களேன்....

மணீஷும், ஹரிணியும் தான் அவனோட நெருக்கமான நண்பர்கள். ரெண்டு பேரும் அவனோட க்ளாஸ்மேட்ஸ். ஐஐடில தான் படிக்கறாங்கஉதய் சொன்னான்.

கமலக்கண்ணன் சொன்னார். “மணீஷ் என் நண்பர் மகன் தான்.... அமைச்சர் மாணிக்கத்தோட மகன்... நல்ல பையன்....


ணீஷிடம் பஞ்சுத்தலையர் சொல்லிக் கொண்டிருந்தார். செந்தில்நாதன் அடுத்ததா உன் கிட்ட தான் பேச வருவான். ஆள் விவகாரமானவன். அவன் கிட்ட ஜாக்கிரதையா இரு. கவனமா பேசு.....

சரியென்று மணீஷ் தலையசைத்தான்.

“உன் அப்பா சிங்கப்பூர்ல இருந்து எப்ப வர்றான்?....

“நாளைக்கு மத்தியானம் வர்றார்...

“க்ரிஷ் விவகாரம் பத்தி என்ன சொன்னான்...?

“நீங்க சொன்னபடி தான் அவரும் என்னை ஜாக்கிரதையா இருக்கச் சொன்னார்.... அவருக்கும் செந்தில்நாதனைப் பிடிக்கலை....

“வேறெதுவும் சொல்லலையா?

இல்லை என்று தலையசைத்த மணீஷ் தன் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றத்தை அறிவான். சிங்கப்பூரிலிருந்து வரும் அவர் விமானநிலையத்தில் இருந்து நேராக க்ரிஷ் வீட்டுக்குப் போய் அவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாக இருந்தது தான் அவர்களுடைய உண்மையான திட்டம். க்ரிஷின் திடீர் தலைமறைவு இப்போது எல்லாவற்றையும் மாற்றி விட்டது. முந்தைய திட்டம் நிறைவேறியிருந்தால் க்ரிஷின் மறைவு பாம்பு கடித்துச் செத்த மரணமாய் இருந்திருக்கும். யாரும் எந்தக் கேள்வியும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இப்போதோ காணாமல் போன விவகாரமானதால் அவனை நெருங்கியவர்களை எல்லாம் விசாரிக்கும் நிலைமை வந்து விட்டது. நாளையே செந்தில்நாதன் அவனைத் தேடி வரலாம்.... திட்டப்படி சாகாத க்ரிஷ் மேல் அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

பஞ்சுத்தலையர் கொட்டாவி விட்டார். நேற்றிரவெல்லாம் சரியாகத் தூங்காமல் க்ரிஷின் மரணச்செய்திக்காக காத்திருந்தது இப்போது அவர் கண்களைச் சொருக வைத்தது.  அதைக் கவனித்த மணீஷ் கிளம்பினான். “சரி நீங்க தூங்குங்க. நாளைக்குப் பார்க்கலாம்.

“சாயங்காலம் வர்றேன். அதுக்கு முன்னாடியே செந்தில்நாதன் வந்தான்னா கவனமா பேசு.....

சொன்னதையே மனுஷன் எத்தன தடவை சொல்வார். வயசானாலே இந்த மாதிரி பிரச்னை எல்லாம் வந்துடுமோஎன்று நினைத்தவனாக மணீஷ் அங்கிருந்து கிளம்பினான்.

அவர் அவன் போனதும் வெளிக்கதவைத் தாளிட்டுக் கொண்டு உறங்கப் போனார். நேற்றிரவும் தூங்காத பலனாய், படுக்கையில் விழுந்தவுடனேயே உறக்கம் அவரைத் தழுவிக் கொண்டது. எத்தனை நேரம் உறங்கியிருப்பார் என்பது அவருக்குத் தெரியவில்லை. மெல்ல இசைக்க ஆரம்பித்த அவருடைய செல்போன் கடைசியில் கத்த ஆரம்பித்த போது தான் எங்கேயோ ஒலிப்பது போல் அவருக்குக் கேட்டது.

உறக்கம் முழுமையாகக் கலையாதவராக கண்களை மூடிக் கொண்டே அவர் கைகளால் துழாவி செல்போனை எடுத்துப் பேசினார்.  ஹலோ

செல்போனில் அமானுஷ்யமான பேய்க்காற்று ஒலித்ததைக் கேட்ட போது அவர் தூக்கம் முழுவதும் பறந்து போனது. “எவண்டாவன் எங்கிட்டயே வெளையாடறது..... முடிஞ்சா நேர்ல வாடா.....அவர் கத்தினார்.

மறுமுனையில் பதில் இல்லை. அவர் ஆத்திரத்துடன் சொன்னார். நீ வரவேண்டாண்டா. நானே வர்றேன். உனக்கு இருக்குடா சங்கு

இணைப்பு துண்டிக்கப்பட்டது. பஞ்சுத்தலையர் முன்பே வாடகைக் கொலையாளியின் செல்போன் எங்கிருந்து பேசப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருந்த ஆளை உடனடியாகத் தொடர்பு கொண்டார்.


தொடரும்)

என்.கணேசன்

Monday, January 16, 2017

அரங்கன் கணக்கு!

ஆஸ்திரேலிய தமிழ் இணையதளம் நடத்திய அமரர் அருண்விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016ல் மூன்றாவது பரிசு பெற்ற என் சிறுகதை 



வானம் பெரிதான மழைக்கு ஆயத்தமாகி இருந்தது. நல்ல வேளையாக  வெங்கடேசன் பெருமழை பெய்ய ஆரம்பிக்கும் முன் அரங்கன் கோயிலை எட்டி விட்டார். அவர் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கனத்த மழை பெய்யும் என்றும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அறிவிப்புகள் வர ஆரம்பித்திருந்தன. அதனால் காரில் நூறு கிலோமீட்டர் தூரப் பயணம் செய்து அரங்கனைத் தரிசிப்பதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு. இன்னோரு நாள் போனால் என்ன, அரங்கன் ஓடியா போய் விடுவார்? ஆனால் நவம்பர் இருபதாம் தேதியான இன்று அரங்கனைத் தரிசிக்காமல் இருக்க மாட்டேன் என்று அவர் பிடிவாதமாகக் கிளம்பி வெற்றிகரமாக வழக்கமான மதிய நேரத்தில் வந்து சேர்ந்தும் விட்டார்.

கடந்த பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த சந்திப்பைப் புயலும், மழையும், எதிர்ப்பும் நிறுத்தி விட முடியுமா என்ன! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான தடங்கல் வந்து கொண்டு தானிருந்தது. உடல்நிலை சரியில்லாமை, கார் பழுது, வியாபார அவசரங்கள், திருமணங்கள், இழவுகள் என்று அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தடை முன்னே வந்து நிற்க, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு அவர் அந்த நாளில் அரங்கனைத் தரிசித்து வந்திருக்கிறார். இன்றும் வருகையில் வழியெல்லாம் மழையால் போக்குவரத்து நெருக்கடி தான். சில இடங்களில் நிறைய நின்று, சில இடங்களில் ஊர்ந்து தான் வரவேண்டி இருந்தது. ஆனால் இதெல்லாம் அரங்கன் வைக்கும் பரிட்சைகளல்லவா?


காரிலிருந்து இறங்கி வெங்கடேசன் அண்ணாந்து கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டார். அரங்கனுடைய அந்தக்கோயில் மிகப்பழைய கோயில். திருவிழாக் காலத்தைத் தவிர மற்ற நாட்களில் அதிகம் கூட்டம் காணாத கோயில். கனத்த இரும்புச் சங்கிலிகளும், பித்தளைக் குமிழ்களும், மரச்செதுக்கு சிற்பங்களும் கொண்ட உயரமான கோயில் கதவுகள் மதிய உச்சி பூஜை முடிந்து சாத்தப்பட்டு இருந்தன. ஆனால் வலது கதவின் கீழ்ப்பகுதியில் சிறியதாய் ஒரு சின்னக்கதவு இழைக்கப்பட்டு இருந்தது. அந்தக் கதவு இரவு வரை எப்போதும் திறந்தே இருக்கும். அந்தச் சிறிய கதவு வழியாக வெங்கடேசன் கோயிலுக்குள் நுழைந்தார். உள்ளே யாருமே இல்லை. இனி மாலை நான்கு மணி வரை இப்படித் தான் கோயில் வெறிச்சோடிக் கிடக்கும். அதன் பின் தான் சில பக்தர்களாவது வருவார்கள். இப்போது மணி இரண்டரை. ஒன்றரை மணி நேரம் அரங்கனோடு தனியாக இருக்கலாம்.

வெங்கடேசன் எப்போதுமே இந்த நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்து வருவார். இறைவனிடம் ஒப்பிக்க இந்த வருடத்திய கணக்கு நிறைய இருந்தது. அது கூட்டம் இருக்கும் போது சாத்தியப்படுவதில்லை. பூசாரி உட்பட இடைஞ்சல் போலத் தான் அவருக்குத் தோன்றும். கற்பாளங்களாலான ஈரத்தரையில் சில இடங்களில் பாசி படர்ந்திருந்தது. கவனமாக அதில் கால் வைத்து மூன்று முறை சுற்றி விட்டு கருவறை முன் இருந்த உள்மண்டபத்திற்கு அவர் வந்தார்.

அரங்கன் கம்பிக்கதவுகளிற்குப் பின்னால் கருவறையில் பள்ளி கொண்டிருந்தான். இரண்டு பக்கமும் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் கூடுமான வரை இருளைப் போக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. அரங்கனை மங்கலான ஒளியில் தரிசித்த போது வெங்கடேசனுக்கு மெய்சிலிர்த்தது. மனம் லேசானது. “அரங்கனே உன் பக்தன் வந்திருக்கிறேன்.... மண்டபத்தில் அரங்கனை ஒரு முறை வணங்கி விட்டு அவனைப் பார்த்தபடி அப்படியே உட்கார்ந்தார். ஓரிரு நிமிடங்களில் காலத்தை மறந்து போனார்.....

பத்து வருடங்களுக்கு முன்னால் இதே நவம்பர் இருபதாம் தேதி இதே நேரத்தில் இதே இடத்தில் அரங்கன் முன் கனத்த இதயத்துடன் வந்தவர் அவர். இப்போதைய வானம் போல அன்று அவர் மனம் இருண்டிருந்தது. தற்கொலை செய்து கொள்ள மனம் தீர்மானித்திருந்தது. அதை நிறைவேற்ற அவர் சட்டைப் பையில் விஷம் இருந்தது. வியாபாரத்தில் பெருத்த நஷ்டம், பல இடங்களில் பெருங்கடன், பல இடங்களிலிருந்தும் ஒருமித்த நெருக்கடி, அதிலிருந்து மீள வழியில்லாமை, எல்லாமாகச் சேர்ந்து அவரை இந்த முடிவுக்கு வரவழைத்திருந்தன. மனைவிக்கு ஒரு மன்னிப்புக் கடிதமும், மனைவியையும், மகளையும் பார்த்துக் கொள்ளச் சொல்லி மாமனாருக்கு ஒரு உருக்கமான வேண்டுதல் கடிதமும் அவரது சட்டைப்பையில் இருந்தன. அதே வேண்டுதலை தன் இஷ்ட தெய்வமான அரங்கனிடம் வேண்டி விட்டு இறக்கத் தான் இந்தக் கோயிலுக்குள் அன்று வந்திருந்தார்.

அன்று அவர் அரங்கன் முன் அவர் குமுறிக் குமுறி அழுதிருக்கிறார். அரங்கனே நான் நிறைய முட்டாள்தனங்கள் செய்திருக்கிறேன் நிறையவே அஜாக்கிரதையாக இருந்திருக்கிறேன். அதனால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் உணர்ந்த இப்போதோ எல்லாமே தலைக்கு மேலே போய் விட்டது. சரி செய்ய வழியே இல்லை. அத்தனை தவறும் என்னுடையது. என் தவறுகளுக்காக என் மனைவியும், மகளும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற என் மாமனாருக்கு தீர்க்காயுளையும், சக்தியையும் கொடு.....

அழுது ஓய்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு அரங்கனிடமும் மனதார விடைபெற்றுக் கொண்டு அவர் எழுந்து நகர்ந்த போது காலை ஏதோ இடறியது. ஒரு சிவந்த தோல்பை அது. யாரோ விட்டுச் சென்றிருக்க வேண்டும். தோல் பையின் ஜிப் சற்றே விலகி உள்ளே கட்டுக் கட்டாய் பணம் தெரிந்தது. ஒரு கணம் அவரது இதயத்துடிப்பு நின்று போனது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. குனிந்து ஜிப்பை விலக்கிப் பார்த்தார். கட்டுக் கட்டாய் பணத்துடன் தங்க நகைகளும் இருந்தன. இதயம் சம்மட்டியாக அடிக்க ஆரம்பிக்க, கோயிலை அவசரமாக ஒரு முறை சுற்றிப் பார்த்தார். யாருமே இல்லை. அவருக்கு வியர்த்தது. மறுபடி அரங்கன் முன் அமர்ந்து பணத்தைக் கணக்கிட்டார். இருபது லட்ச ரூபாய் இருந்தது. தங்கநகைகள் சுமார் ஐம்பது பவுனாவது இருக்கும்.

அரங்கனைப் பார்த்தார். அரங்கன் படுத்தபடியே மந்தஹாசப் புன்னகை பூத்தான். யாரோ இறைவனுக்கு என்று இதை ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் போலத் தோன்றியது. இறைவன் அவர் மீள ஒரு வழியைக் காண்பித்திருக்கிறான். ‘இதை வைத்துக் கொண்டு மறுபடியும் ஆரம்பி...என்று அரங்கன் சொல்வதாக ஒரு தோணல். கலியுகத்தில் இவ்வளவு சீக்கிரம் கடவுள் கருணை காட்டுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. மீண்டும் அழுதார். அந்தப் பையை எடுத்துக் கொண்டு வந்தவர் விஷத்தை குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு, சட்டைப் பையில் வைத்திருந்த கடிதங்களை சுக்கு நூறாகக் கிழித்து விட்டு ஊர் திரும்பினார்.

அவர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. கடன்களைத் தீர்த்து விட்டு மீதி இருந்த பணத்தைத் தொழிலில் போட்டு கவனமாகவும், கஷ்டப்பட்டும் உழைத்தார். இறைவனுடைய முதலும் அவருடைய உழைப்பும் சேர்ந்ததால் நல்ல பலன் கிடைத்தது. செல்வம் குவியத் தொடங்கியது. வந்த இலாபத்தில் பாதியை மட்டும் தனக்கு வைத்துக் கொண்டார். மீதியை அரங்கன் கணக்காக நினைத்து தர்ம காரியங்களுக்குச் செலவு செய்தார். அவரும், அரங்கனும் சேர்ந்த கூட்டணி அவரை மலைக்க வைக்கும் உயரத்திற்குக் கொண்டு சென்றது. ஆனால் அவர் பழையதை மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் நவம்பர் இருபதாம் தேதி வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி வணங்குவதில் தவறவில்லை. இலாபத்தில் அரங்கனுடைய பங்கை எப்படி எல்லாம் செலவு செய்திருக்கிறார் என்று நேரடியாக வந்து கணக்கை ஒப்புவிக்கத் தவறவில்லை....

காலத்தை மறந்து அரங்கனுடன் இருந்த அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக வானம் இரைச்சலுடன் பொழிய ஆரம்பித்தது. யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. ஓடி வந்த மனிதருக்கு அறுபதுக்கும் மேற்பட்ட வயதிருக்கும். சாயம் போன சட்டையும், பழைய வேட்டியும் அணிந்திருந்தார். வந்தவர் தன் மேலே போட்டிருந்த துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டார். அவர் மழைக்கு ஒதுங்குபவர் போல அந்த உள் மண்டபத்தில் ஒதுங்கினாரே ஒழிய அரங்கன் பக்கம் திரும்பவில்லை. அரங்கனுக்கு முதுகைக் காட்டியபடியே நின்றார்.

வெங்கடேசனுக்கு அரங்கனுடன் இருந்த அந்த இனிமையான தனிமை பறி போனதால் அந்த மனிதர் வரவை ரசிக்க முடியவில்லை. கோயிலில் யாரும் வரலாம், அரங்கனுக்கு அனைவரும் ஒன்று தானே என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவராக கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வது போல பாவனை செய்தார். ஆனாலும் மனம் அந்த பாவனையில் ஒன்றவில்லை. மழையுடன் இடி மின்னலும் சேர்ந்து கொண்டது. கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்து இருக்க முடியாமல் சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தார்.

அந்த முதியவர் அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். வெங்கடேசன் கண்களைத் திறப்பதற்காகக் காத்திருந்தவர் போல உடனே கேட்டார். “நீங்கள் வெங்கடேசன் தானே?

வெங்கடேசன் பலவந்தமாய் புன்னகையை வரவழைத்துக் கொண்டு ஆமாம் என்று தலையாட்டினார்.

முதியவர் முகத்தில் மிகுந்த மரியாதை தெரிந்தது. “உங்களைப் பற்றி பத்திரிக்கைகளில் நிறைய படித்திருக்கிறேன். அனாதை ஆசிரமங்கள், இலவச முதியோர் இல்லங்கள், ஏழைகள் படிப்புக்கு உதவித்தொகை என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருக்கிறீர்கள். ரொம்ப பெரிய மனது உங்களுக்கு....

வெங்கடேசனுக்கு கூச்சமாய் இருந்தது. அடக்கத்துடன் அரங்கனைக் காண்பித்துச் சொன்னார். “எல்லாம் அவன் போட்ட பிச்சை. நானாகச் செய்தது எதுவுமில்லை

முதியவர் பார்வை அப்போதும் அரங்கன் பக்கம் போகவில்லை. அந்த உள் மண்டபத்தில் பதித்திருந்தஉபயம்- வெங்கடேசன் என்ற வாசகத்தின் மீது அவர் பார்வை தங்கியது. இந்த மண்டபம் கூட நீங்கள் தான் கட்டியது. இல்லையா. ஒரு காலத்தில் இப்படி இருக்கவில்லை...

வெங்கடேசன் சங்கோஜத்துடன் தலையசைத்தார். பின் தயக்கத்துடன் சொன்னார். “எல்லாம் அவன் கொடுத்தது. அவன் கொடுத்ததிலேயே இதைக் கட்டி விட்டு உபயம் என்று என் பெயரைப் போட்டது சரியல்ல. ஆனால் நான் சொன்னாலும் கேட்காமல் போட்டு விட்டார்கள்.

முதியவர் முகத்தில் தெரிந்த மரியாதை கூடியது. “உங்களை மாதிரி ஒரு நல்ல மனிதரை நேரில் பார்த்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது”.  சொல்லி விட்டு அவர் கை கூப்பினார். பின் சினேகத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் ராமமூர்த்தி. பக்கத்து ஊரில் தான் இருக்கிறேன். அங்கே ஒரு தனியார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராய் இருக்கிறேன்.

வெங்கடேசனும் கை கூப்பினார். “நீங்கள் அதிர்ஷ்டசாலி. பக்கத்து ஊரிலேயே இருக்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் வந்து அரங்கனை தரிசிக்கலாம்.

முதியவர் முகம் சுருங்கியது. மெல்லச் சொன்னார். நான் இந்த இடத்திற்கு வந்து பத்து வருஷமாகி விட்டது

அரங்கன் சன்னிதியைக் கோயில் என்று சொல்லாமல் இந்த இடம் என்று அவர் சொன்னதும் சொன்ன விதமும் வெங்கடேசனை நிறையவே பாதித்தது.

அவர் முகபாவனையிலேயே அதைப் புரிந்து கொண்ட ராமமூர்த்தி குரலை சற்று மென்மையாக்கிக் கொண்டு சொன்னார். உங்களுக்கு இவன் இறைவனாய் இருக்கலாம். நல்லது நிறைய செய்திருக்கலாம். என்னைப் பொறுத்த வரை இவன் திருடன். தண்டிக்க முடியாத திருடன். முதலில் எல்லாம் நான் இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தவன் தான். என் தாத்தா, அப்பா, நான் என்று எல்லாரும் வம்சாவளியாக இங்கே வந்து வணங்கியவர்கள் தான். ஆனால் பத்து வருஷமாய் தான் நான் வணங்குவதை நிறுத்தி விட்டேன். இப்போது கூட வந்திருக்க மாட்டேன்.  வேறொரு வேலையாக இந்த ஊருக்கு வந்தேன். வேலையை முடித்துக் கொண்டு போகிற நேரத்தில் இப்படி மழை பிடித்துக் கொண்டது. பக்கத்தில் ஒதுங்க எந்த கட்டிடமும் இல்லை. அதனால் தான் என்னை அறியாமல் பழைய பழக்க தோஷத்தில் இங்கே வந்து விட்டேன்...

வெங்கடேசன் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அரங்கன் சன்னிதியில் நின்று கொண்டு அரங்கனையே பழித்துப் பேசும் அந்த முதியவரின் செயல் அவருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. கோபத்தை பேச்சில் காண்பிக்கக் கூடாது என்று எண்ணியவராக இயல்பான குரலில் கேட்டார். அப்படி என்ன தான் அரங்கன் செய்து விட்டான்?

ராமமூர்த்தி உடனடியாக பதில் சொல்லவில்லை. அரங்கனைப் பார்க்கவும் பிடிக்காதவராய் பெய்கின்ற மழையையே சிறிது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு மெல்ல சொன்னார். “மாளிகையில் இருந்த என்னை ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டான்....

வெங்கடேசன் திகைப்போடு அவரைப் பார்த்தார்.

மழை குறைகிற மாதிரி தெரியவில்லை. ஆக்ரோஷத்துடன் பெய்து கொண்டிருந்தது. ராமமூர்த்தி பெய்யும் மழையைப் பார்த்தபடியே தளர்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தார். “ஒரு காலத்தில் பம்பாயில் நல்ல விதமாய் வியாபாரம் செய்து கொண்டு இருந்தேன். நான், என் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் எல்லாரும் சந்தோஷமாய் இருந்தோம். மூத்த மகனுக்கும், மகளுக்கும் கல்யாணம் செய்து முடித்திருந்தேன். கடைசி மகன், மகள் பிறந்து பத்து வருடம் கழிந்து பிறந்தவன். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது பம்பாயில் தொழில் மந்தமாக ஆரம்பித்தது. கலவரங்களும் அதிகமாக இருந்தன. அந்தத் தொழிலை விட்டு விட்டு தமிழ்நாட்டிற்கே வந்து புதிதாக தொழில் ஆரம்பித்தால் என்ன என்கிற எண்ணம் வந்தது. தமிழ்நாட்டில் மனை விற்பனை  நன்றாகப் போகிறது, அதில் பணம் போட்டால் நல்ல இலாபம் வரும் என்று இங்கிருந்த சிலர் ஆலோசனை சொன்னார்கள். எல்லாவற்றையும் விற்று விட்டு பணத்தோடு தமிழ்நாட்டிற்கே வந்து அப்படி தொழில் ஆரம்பித்து விடலாமா என்று இங்கே வந்து குல தெய்வமான இந்த அரங்கனிடம் பூப் போட்டு உத்தரவு கேட்ட போது செய் என்று பதில் வந்தது. மலிவான விலையில் நல்ல இடத்தில் வீடு கட்டி விற்க பன்னிரண்டு ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருந்தது. விற்பவன் கணக்கில் குறைவாகத் தான் காண்பிப்பேன், பெரும்பகுதியை ரொக்கமாகத் தான் தரவேண்டும் என்று சொன்னான். அப்படியே பணத்தையும், போதாதற்கு இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு, இதே நவம்பர் மாதம் இதே இருபதாம் தேதி இவனை வணங்கி விட்டு வியாபாரம் முடிப்பதற்காக, முதலில் இதே இடத்திற்கு வந்தேன்.....

வெங்கடேசன் இதயத்தை ஏதோ கனமாக அழுத்தியது போல உணர்ந்தார்.

அதைக் கவனிக்காமல் மழையிலும் கடந்த காலத்திலும் லயித்தபடி ராமமூர்த்தி தொடர்ந்து சொன்னார். “வந்த நேரம் கூட கிட்டத்தட்ட இதே நேரம் தான். சாயங்காலம் பூசாரி வந்து தீபாராதனை காட்டுகிற வரை காத்திருக்க நேரம் இல்லை. அதனால் வணங்கி விட்டுக் கிளம்பினேன். ஒரு பெரிய பையின் உள்ளே துணிமணியோடு பணம் நகை வைத்த சிறிய சிவப்புப்பை பாதுகாப்பாய் வைத்திருந்தேன். அதை எடுத்து இவன் முன்னால் வைத்துக் கும்பிட்டேன். பின் அதை எடுத்தவன் உள்ளே வைக்க எப்படி மறந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. பெரிய பையில் அதை எடுத்து வைத்து விட்டதாய் நினைத்து கிளம்பி விட்டேன். நிலம் விற்பவனிடம் போன பிறகு தான் அந்தப் பையை இங்கேயே விட்டு விட்டதைக் கண்டு பிடித்தேன். உடனடியாகத் திரும்பி இங்கே ஓடோடி வந்தேன். அரங்கன் முன் வைத்த பணம் அவன் கண்காணிப்பில் பத்திரமாய் தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால்.... ஆனால் .....இங்கே வந்த போது அந்தப் பை மாயமாய் மறைந்திருந்தது.....


வெங்கடேசன் இதயத்தை அழுத்த ஆரம்பித்த கனம் இமயமாக மாறியது. சரியாக மூச்சு விடக்கூட அவரால் முடியவில்லை.

ராமமூர்த்தி குரல் கரகரக்க ஆரம்பித்தது. “பணம் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. பணம் போனதோடு எல்லாம் போகும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படித் தான் ஆனது. மூத்த மகன், மகள் பெயரில் நான் சேர்த்து வைத்திருந்த சொத்துகளைத் தவிர எல்லாவற்றையும் இந்த வியாபாரத்திற்காக நான் விற்றிருந்தேன். அதனால் நிலைமையை சரிக்கட்ட அவர்கள் பெயரில் இருந்த சொத்து எனக்கு தேவைப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் கையெழுத்துப் போட மறுத்து விட்டார்கள். பெற்ற பிள்ளைகளே அப்படி செய்வார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை ஜீரணிக்க முடியவில்லை. மற்ற உறவுகளும், நட்பும் கூட அப்படியே உதிர்ந்து போய் விட்டது. நானும், என் மனைவியும், என் சின்ன மகனும் நடுத்தெருவில் நின்றோம்...... நான் செய்த ஒரே தவறு இவனை வணங்க இங்கே வந்தது தான். இவன் முன்னால் நான் விட்டுப் போன என் பணத்தை எனக்குக் காப்பாற்றித் தரத் தெரியாதவன் இந்த உலகத்தையே காப்பாற்றுவானாம்..... சொல்லி விட்டு ராமமூர்த்தி ஏளனமாகச் சிரித்தார்.

வெங்கடேசன் உள்ளே நொறுங்கிக் கொண்டிருந்தார். ஒரு மனிதனை குடும்பத்தோடு நடுத்தெருவிற்குக் கொண்டு வந்து விட்டுத் தான் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றி விட்டிருக்கிறார்... அந்த அப்பாவி மனிதரின் அழிவில் தான் இன்று பெரியதாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.... அந்த உள் மண்டபத்தின் சுவரில் இருந்த “உபயம்-வெங்கடேசன்என்ற வாசகம் அவரைப் பார்த்து ஏளனமாய் சிரித்தது. இத்தனை காலம் கணக்கு ஒப்பித்தவர் இந்தக் கணக்கை எங்கே சொல்ல முடியும்? என்ன கணக்கு இது? இது பாவக்கணக்கே அல்லவா?

வெங்கடேசனைப் பார்த்த போது ஏதோ ஒரு விபரீதம் நடப்பது ராமமூர்த்திக்கு விளங்கியது. அவர் முகத்தில் தெரிந்த பெரும் வலியைக் கண்டு ராமமூர்த்தி பயந்து போனார். வெங்கடேசனுக்கு மாரடைப்பு வந்து விட்டதா என்ற சந்தேகம் வலுக்க வேகமாக அவர் அருகே வந்து கேட்டார். “என்ன ஆயிற்று உங்களுக்கு? உடம்பு சரியில்லையா?

சொல்லப் போவதை கேட்டு விட்டால் இந்தக் கருணை அந்த மனிதரிடம் இருந்து பறந்து போகும் என்பதில் வெங்கடேசனுக்கு சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அரங்கன் முன்னால் பத்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்த அந்த பாவக்கணக்கு அவன் சன்னிதியில் அவன் முன்னிலையில் இன்று தீர்க்கப் பட வேண்டும் என்பதில் வெங்கடேசன் உறுதியாக இருந்தார். அந்தப் பணத்தை யாராவது தவறுதலாக விட்டுப் போயிருக்கக் கூடும் என்ற அறிவுபூர்வமான எண்ணம் தோன்றாததற்குக் காரணம் தன்னுடைய அப்போதைய சுயநலம் என்று இன்று விளங்கியது. யாரோ வேண்டுமென்றே விட்டுப் போயிருக்க வேண்டும் என்று நினைத்தது அப்போதைய நிலைமைக்கு வசதியாக இருந்ததாக இப்போது உணர்ந்தார். ஆனால் பிழைக்க வழி கிடைத்தது என்று அன்று நினைத்தாரே ஒழிய ஒருவர் பிழைப்பில் மண்ணைப் போடுவோம் என்று நினைத்திருக்கவில்லை.  அப்படியே குனிந்து அந்த மனிதரின் கால்களை கெட்டியாகத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார்.

ராமமூர்த்தி பதறிப் போனார். “ஐயோ, என்ன இது.என்று கால்களைப் பின்னுக்கு இழுக்க முயற்சி செய்தார். ஆனால் வெங்கடேசன் அவர் கால்களை விடுவதாய் இல்லை. இந்தப் பாவியை மன்னித்து விடுங்கள் ஐயா. என்னை மன்னித்து விடுங்கள்....

ராமமூர்த்தி குழப்பத்துடனும், தர்மசங்கடத்துடனும் கேட்டார். “எதற்கு?

ராமமூர்த்தியின் கால்களைப் பிடித்தபடியே வெங்கடேசன் பத்து வருடத்திற்கு முந்தைய நவம்பர் இருபதில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தார். வெளியே பெய்த மழையை ஒன்றுமில்லாததாக்கியது வெங்கடேசனின் கண்ணீர். ஒன்றையும் மறைக்காமல் வெங்கடேசன் சொன்னதைப் பேச்சிழந்து கேட்டுக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி.

கடைசியில் வெங்கடேசன் கதறிபடி சொன்னார். “ஐயா எல்லாத்தையும் திருப்பித் தந்து விடுகிறேன். நீங்கள் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பத்து வருஷத்தில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு மட்டும் பரிகாரம் என்னால் செய்ய முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்....அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரால் ராமமூர்த்தியின் கால்களைக் கழுவியபடியே அவர் கூனிக் குறுகியிருந்தார்.

ராமமூர்த்தியின் பார்வை முதல் முறையாக அரங்கன் பக்கம் திரும்பியது. அரங்கனையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். அவர் மனதில் ஏராளமான எண்ணங்களும் உணர்வுகளும் அலை மோதின. அவர் நீண்ட நேரம் பேசவில்லை. ஒரு கனத்த மௌனம் அங்கே நிலவியது.

அவர் ஒன்றும் சொல்லாதது வெங்கடேசனை மேலும் துக்கப்படுத்தியது. அவர் சொன்னார். “ஐயா எதாவது சொல்லுங்கள். என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள். அரங்கனைத் திட்டாதீர்கள்.... எல்லாத் தவறும் என்னுடையது. என்னோட வடிகட்டிய சுயநலம் தான் இதற்கெல்லாம் காரணம். இப்போதே நீங்கள் என் கூட வந்தால் நான் இது வரை சம்பாதித்ததை எல்லாம் அப்படியே திருப்பித் தந்து விடுகிறேன். சரி என்று சொல்லி ஏற்றுக் கொண்டு இந்தப் பாவியைத் தயவு செய்து மன்னியுங்கள் ஐயா....

அரங்கனைப் பார்த்தபடியே சிலையாக நின்றிருந்த ராமமூர்த்தி அப்போதும் ஒன்றும் பேசவில்லை. ஆழ்ந்த யோசனையில் அவர் மூழ்கி இருந்தார்.


வெங்கடேசனுக்கு அவர் ஏதாவது சொல்லா விட்டால் பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது. என்ன ஐயா யோசிக்கிறீர்கள்? இந்தப் பாவி மன்னிப்புக்கும் ஏற்றவன் இல்லை என்றா?


ராம்மூர்த்தி மெல்ல வெங்கடேசன் பக்கம் திரும்பினார். இரு கைகளாலும் அவரைப் பிடித்து எழுப்பினார். “நீங்கள் ஏன் இந்த மாதிரி பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்கிறீர்கள்? நடந்ததை
இப்போது இன்னொரு தடவை யோசித்துப் பார்த்தால் எனக்கு உங்களையோ, அரங்கனையோ தப்பு சொல்லத் தோன்றவில்லை

வெங்கடேசன் திகைத்துப் போனார். “ஐயா என்ன சொல்கிறீர்கள்?

“அந்தப்பணம் என்னிடமே இருந்திருந்தால் உங்களை மாதிரி இத்தனை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்க மாட்டேன். அந்த அளவு பெரிய மனம் எனக்கு இருந்ததில்லை. உங்களிடம் அந்தப்பணம் வந்ததால் தான் இத்தனை நல்ல காரியம் நடந்திருக்கிறது. அதனால் தான் அரங்கன் அந்தப் பணத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். ஒருவிதத்தில் அந்தப் பணம் என் கையை விட்டுப் போனதும் நல்லது தான் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது வெங்கடேசன். பணத்துக்காக ஒட்டியிருந்த உறவுகளும், நட்புகளும் அந்தப் பணத்துடனேயே போய் உண்மையான உறவுகளும், நட்புகளும் மட்டுமே என் வாழ்க்கையில் மிஞ்சினது ஒரு விதத்தில் யோசித்தால் அருமையான நிகழ்வு இல்லையா? இல்லாவிட்டால் நான் போலிகளை எல்லாம் நிஜம் என்று கடைசி வரை ஏமாந்து போயிருப்பேன். அந்த வகையில் அரங்கன் எனக்கு உதவி தான் செய்திருக்கான். இது தாண்டா நிஜம். நிஜத்தை மட்டுமே கொண்டாடு என்று காட்டியிருக்கிறான்....

“ஐயா...வெங்கடேசன் திகைத்தார்.

ராமமூர்த்தி கனிவாகச் சொன்னார். “உங்களை சமாதானப்படுத்த நான் சொல்லவில்லை. இப்போது யோசித்தால் என் வாழ்க்கையில் செல்வம் தான் போனதே ஒழிய மற்றபடி இவன் அருளில் எல்லாம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்றும் அளவு சம்பாதிக்க எனக்கு ஒரு வேலை கிடைத்தது. பணம் இல்லாததால் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கடைசி மகன் நன்றாகப் படித்தான். அவனுக்கு பேங்கில் ஒரு வேலை கிடைத்து இப்போது அவன் என்னையும் என் மனைவியையும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறான். என்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று தான் சொல்கிறான். நான் தான் சும்மா இருக்க முடியாமல் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னிடம் இப்போது பணம் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையைக் கௌரவமாக ஓட்டத்தேவையான அளவு பணம் இருக்கிறது. முக்கியமாக நிம்மதி இருக்கிறது.. நிம்மதிக்கு மேல் என்ன வேண்டும். சொல்லுங்கள்.

வெங்கடேசன் அந்த வார்த்தைகளில் மேலும் நொறுங்கினார். இத்தனை நல்ல மனிதர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியது திருட்டுக்கு அல்லவா சமானம் என்று தோன்றியது. “ஐயா இந்த திருடனுக்கு பரிவாகப் பேசுகிறீர்களே. என் பாவக் கணக்கை நான் எங்கே போய் சொல்வேன்.... என்று உடைந்த குரலில் கதறினார்.

ராமமூர்த்தி அந்த நல்ல மனிதரை அணைத்துக் கொண்டார். “வெங்கடேசன். இது பாவக்கணக்கு அல்ல. இது அரங்கன் கணக்கு. அவன் சரியான கணக்கு தான் போட்டிருக்கிறான். என்னிடம் இருந்து பணத்தை எடுத்து அரங்கன் எனக்கு நல்லதைச் செய்திருக்கிறான். அந்தப் பணத்தை உங்களுக்கு கொடுத்து உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லதைச் செய்திருக்கிறான். நான் தான் இத்தனை நாள் இது புரியாமல் இவன் மேல் கோபமாய் இருந்திருக்கிறேன்....


“நீங்கள் என்னை சபிக்காமல் இந்த அளவு பெருந்தன்மை காட்டினதை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நீங்கள் நிஜமாகவே பெரிய மனிதர். நீங்கள் இப்போதே என் கூட வந்தால் நான் அத்தனையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவேன். என் ஆடிட்டரிடம் பேசி முறைப்படி செய்து விடலாம்... வெங்கடேசன் ஆத்மார்த்தமாகச் சொன்னார்.


“நான் தான் கணக்கு சரியாகத் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டேனே. பணம் திரும்பி வந்தது தெரிந்தால் உதிர்ந்த உறவுகளும், நட்புகளும் வெட்கமே இல்லாமல் திரும்பி வந்து ஒட்டிக் கொள்ளும். என் மனைவிக்கு இளகின மனம். நான் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவள் ஏற்றுக் கொள்வாள். நானும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கும். பணம் இனி எனக்கு நல்லது செய்வதை விட கெட்டது தான் அதிகம் செய்யும்.... ராமமூர்த்தி புன்னகையோடு சொன்னார்.

வெங்கடேசன் திகைப்புடனும், விவரிக்க முடியாத பிரமிப்போடும் ராமமூர்த்தியைப் பார்த்தார். ராமமூர்த்தி அவரிடம் நிறைந்த மனதுடன் தொடர்ந்து சொன்னார். “அரங்கன் அருளால் உங்கள் வியாபாரம் இனியும் தொடர்ந்து நன்றாய் நடக்கட்டும். உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து  இதே மாதிரி நல்லதை நிறைய செய்யுங்கள். உங்கள் கணக்கை அரங்கனிடம் எப்போதும் போல் ஒப்புவியுங்கள். இந்த விஷயம் நம் மூன்று பேருக்குள்ளேயே இருக்கட்டும். வெளியே யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை....


வெங்கடேசனிடம் சொல்லி விட்டுத் தெளிந்த மனத்துடன் பத்து வருடங்கள் கழித்து அரங்கனை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் ராமமூர்த்தி.  சொல்ல வார்த்தைகள் எதுவும் கிடைக்காமல் சிலையாக நின்றிருந்தார் வெங்கடேசன். மௌன சாட்சியாய் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்க, மாறாத புன்னகையுடன் தன் இரு பக்தர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான் அரங்கன்.


- என். கணேசன் 

நன்றி:
http://akkinikkunchu.com/2017/01/13/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-2/