சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, April 28, 2009

இறைவனை வரவழையுங்கள்!


கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பைகூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம்.

நமது புராணக்கதைகளில் இறைவன் ஹோமங்களில் பிரத்தியட்சமானதைக் காட்டிலும் அதிகமாக பக்தர்களின் பக்திக்கு மெச்சி காட்சியளித்த சம்பவங்கள் அதிகம். மனம் தூய்மையாக இருக்குமானால் இறைவன் அங்கு விரும்பிக் குடியேறுகிறான் என்று இறையருள் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோயில் தோன்றிய கதை சுவாரசியமானது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த பூசலார் என்ற சிவபக்தர் பரம ஏழை. ஆனால் அவருக்கு சிவபெருமானிற்கு பெரிய ஆலயம் ஒன்று கட்டும் பேராசை இருந்தது. தன்னுடைய அன்றாட ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு ஆலயம் கட்டுவது முடிகிற காரியமா?

வெளியே கட்ட முடியாத ஆலயத்தை அவர் மனதிலேயே கட்ட தீர்மானித்தார். ஒரு நல்ல நாளில் தன் மனதில் சிவாலயம் கட்ட ஆரம்பித்தார். மனதினுள் என்றாலும் ஆகம விதிப்படி கட்டும் பணி நடைபெற ஆரம்பித்தது. சிவாலயத்தைக் கட்டி முடித்த பூசலார் ஒரு நன்னாளைக் கும்பாபிஷேகம் செய்யத் தேர்ந்தெடுத்தார்.

அதே சமயத்தில் காஞ்சிபுரத்தில் மன்னன் ராஜசிம்ம பல்லவன் கைலாசநாதர் ஆலயத்தை மிகச்சிறப்பாகக் கட்டி முடித்து பூசலார் குறித்திருந்த அதே நாளில் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தேர்ந்தெடுத்திருந்தான். அந்த நாளுக்கு முந்தைய தினம் இரவில் அவன் கனவில் வந்த சிவபெருமான் கும்பாபிஷேக நாளை இன்னொரு நாளுக்கு மாற்றும்படியும், மறுநாள் அவர் பக்தர் பூசலார் திருநின்றவூரில் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு தான் போக வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

விழித்துக் கொண்ட மன்னன் அமைச்சரையும், அதிகாரிகளையும் அழைத்து கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தவும், கும்பாபிஷேகத்திற்கு வேறு நாள் பார்க்கவும் கட்டளையிட்டான். இத்தனை சிறப்பாகவும், அழகாகவும் கட்டிய கோயிலை விட அந்த பக்தர் பிரம்மாண்டமாகக் கோயிலைக் கட்டியிருக்க வேண்டும், இல்லையென்றால் இறைவன் இதை விட அதற்கு முதலிடம் தந்திருப்பாரா என்று எண்ணிய ராஜசிம்ம பல்லவன் அந்தக் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தானும் செல்லத் தீர்மானித்து இரவோடிரவாகப் புறப்பட்டான்.

மறுநாள் அதிகாலை திருநின்றவூரைச் சேர்ந்த மன்னன் அங்கு கோயிலையும் காணாமல் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளையும் காணாமல் திகைத்தான். விசாரித்த போது அங்கு கோயில் எதுவும் கட்டப்படவில்லை என்றும் பூசலார் என்ற சிவபக்தர் சிறுவீடு கூடக் கட்ட வசதியில்லாத பரம ஏழை என்றும் தெரிந்தது. ஆச்சரியப்பட்ட மன்னன் பூசலாரைச் சென்று தன் கனவைப் பற்றி சொல்ல பூசலார் கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது. தன் இதயத்தில் கட்டிய கோயிலைப் பற்றி அவர் சொன்னார். ராஜசிம்ம பல்லவனும் அவர் இறை பக்தியில் நெகிழ்ந்து போனான்.

பூசலாரின் இருதயக் கோயிலில் ஈசன் எழுந்தருளியதால் இருதயாலீசுவரர் என்ற பேர்சூட்டி பெரியதொரு கோயிலை திருநின்றவூரில் ராஜசிம்ம பல்லவன் கட்டிக் கொடுத்தான்.

இறைவன் எந்தத் திருக்கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தான் பார்த்தீர்களா? ஒவ்வொரு இதயமும் கோயிலாகலாம் அதில் தூய்மை இருந்தால். அதில் பக்தியும் நன்மைகளும் நிறைந்திருந்தால்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல் நீர பிற.

என்றார் திருவள்ளுவர். உண்மையான அறம் மனத்தினுள் மாசில்லாமல் இருப்பதே. மற்றதெல்லாம் வெறும் பகட்டே என்கிறார். அப்படி மாசில்லாமல் தூய்மையாக உள்ளம் மட்டுமே இறைவன் நுழையத் தகுதி வாய்ந்ததாகிறது.

வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறோம். இதெல்லாம் செய்வது கூட அடுத்தவர் பார்வைக்காகவே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. உள்ளத்தை யாரும் பார்ப்பதில்லை என்பதால் அதை பெரும்பாலோர் குப்பையாகவே வைத்திருக்கிறோம்.

அகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு என்று எத்தனையோ அழுக்குகள் மனதிற்குள். அதைத் துடைத்து எடுப்பதற்குப் பதிலாக அழுக்கின் மேல் அழுக்காக சேர்த்துக் கொண்டே போகிறோம். எத்தனை கால அழுக்குகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நம் எல்லாத் துயரங்களுக்கும் இந்த அழுக்குகள் தான் காரணமாக இருக்கின்றது. ஆனால் அதை உணர்வதற்குக் கூட உள்ளத்தில் ஒரு ஊசிமுனை இடமாவது சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாதவர்களுக்கு இந்த உண்மை புலப்படாது.

இந்த அழுக்குகளைத் துடைத்தெடுக்க என்ன தான் வழி? தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என்று எத்தனையோ வழிகளைப் பெரியோர்கள் சொல்கிறார்கள். உங்களுக்குப் பொருத்தமான, உங்கள் இயல்பிற்குத் தோதான ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். நாட்பட்ட அழுக்குகளைக் களைவது அத்தனை சுலபமல்ல.

ஆனால் உங்கள் மனத்தை உங்களால் தூய்மைப்படுத்தி வைக்க முடிந்தால் இறைவனைத் தேடி நீங்கள் கோயில்களுக்குப் போக வேண்டாம். உங்களைத் தேடி இறைவன் வருவது உறுதி.

இப்போது உள்ளே எட்டிப்பார்த்து சொல்லுங்கள். இறைவன் உள்ளே இருக்கிறானா? இல்லையென்றால் உள்ளத்தை சுத்தம் செய்து இறைவனை வரவழையுங்கள். அந்த இறையானுபவத்தை, அதனால் ஏற்படும் சச்சிதானந்தத்தை உணருங்கள். பின் ஒரு போதும் அந்த அழுக்குகள் உங்களை நெருங்குவதை நீங்கள் சகிக்க மாட்டீர்கள்.

-என்.கணேசன்

Friday, April 24, 2009

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

ஒருவர் உங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. என்ன தான் தலைகீழாய் நின்றாலும் அடுத்தவர் மேல் நம் கருத்தைத் திணிக்க முடியாது. முல்லா வழக்குக்கு முன்னும் அந்தத் தலைவரைக் கழுதையாகத் தான் நினைத்தார். நீதிபதியின் தீர்ப்பிற்குப் பின்னும் அவர் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

ஒவ்வொருவரும் அடுத்தவரை தங்கள் அளவுகோல்களை வைத்தே அளக்கிறார்கள். அவர்களைப் பற்றி அபிப்பிராயம் கொள்கிறார்கள். எனவே அடுத்தவர் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன தான் நீங்கள் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் அவர்கள் தங்கள் கருத்தை எளிதாக மாற்றிக் கொள்வதில்லை. அதுவும் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் தற்பெருமை பேசினால் அது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.

உங்கள் குணாதிசயங்கள், நீங்கள் நடந்து கொள்ளும் முறை எல்லாம் தான் நீங்கள் யாரென்று வெளியுலகிற்கு அழுத்தமாகப் பிரசாரம் செய்கின்றன. மற்றவர்கள் அதை வைத்தே உங்களை எடை போடுகிறார்கள். எனவே உங்களைப் பற்றி அதிகம் நீங்களே சொல்லிக் கொள்வது தேவையற்றது.

அதே நேரத்தில் அடுத்தவருக்குப் பிடிக்கிற மாதிரியெல்லாம் நடந்து கொண்டு பேரெடுக்க முயற்சி செய்யாதீர்கள். சில நாட்களிலேயே தோற்றுப் போவீர்கள். இறைவனால் கூட தொடர்ந்து மனிதனிடம் நல்ல பெயர் எடுக்க முடிவதில்லை. இறைவனாலேயே முடியாதது உங்களால் முடிந்து விடுமா என்ன?

மற்றவர்கள் எண்ணத்தில் உயர வேண்டுமானால் -

உங்களைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்வதைத் தவிருங்கள்.

ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அடிக்கடி ஆராயப் போகாதீர்கள்.

உங்கள் பண்புகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

மற்றவர்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

மற்றவர்களைப் பற்றி நல்லதையே பேசுங்கள்.

அப்படியும் ஒருசில சமயங்களில் உங்களைப் பற்றி வரும் எதிர்மறை விமரிசனங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

- இவற்றைப் பின்பற்ற முடிந்தால் நீண்டகாலம் நீங்கள் பெரும்பாலானவர்களின் உயர்ந்த கருத்தில் இருக்க முடிவது உறுதி.

- என்.கணேசன்

நன்றி: விகடன்

Monday, April 20, 2009

நல்லதாய் நான்கு வார்த்தை...

கல்கத்தா வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். சில இடங்களில்அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சேவகர் ஒருவர், ஒரு கட்டத்தில் அந்த நெடியைத் தாங்க முடியாமல் பின்வாங்க அன்னை தெரசா அந்த வேலையைத் தானே மேற்கொண்டு தொடர்ந்தார்.

சிறிதும் முகம் சுளிக்காமல், நெடியைப் பொருட்படுத்தாமல் அன்னை தொடர்ந்து செய்த அந்தப் பணி அந்தத் தொழு நோயாளியின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. "அம்மா இது போன்ற அருவருக்க வைக்கும் வேலையைச் செய்ய உங்களுக்கு சிரமமாகத் தோன்றவில்லையா?" என்று அவர் கேட்டார்.

"சகோதரரே! நீங்கள் அனுபவிக்கும் இந்தக் கஷ்டத்துடன் ஒப்பிடும் போது நான் செய்வது ஒரு சொல்லத்தக்க விஷயமே இல்லை" என்று அன்புடன் பதிலளித்தார் அன்னை தெரசா.

அன்னையுடைய அந்தத் தன்னலமில்லாத சேவைக்கு இணையாக அந்தத் தொழுநோயாளியின் இதயத்தைத் தொட்டது அந்த அன்பான வார்த்தைகள்.

பல நேரங்களில் நல்லதாக, அன்பாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை. அதுவும் கஷ்ட காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும்படியாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவேயில்லை. தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் கட்டை பிடித்து மிதக்க உதவுவதைப் போல அந்த நல்ல வார்த்தைகள் கஷ்டகாலங்களில் தாக்குப் பிடிக்க ஒருவனுக்கு உதவுகின்றன.

மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், தைரியசாலிகள் கூட சில சமயங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களே தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். அப்படி நல்லதைப் பாராட்டும் போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்கள்.

மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள். வருத்தங்களும் தோல்விகளும் சகஜமானவை என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலுக்கு வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள். அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள். பிறையாகத் தோன்றும் எல்லாமே முழுநிலவாகிப் பிரகாசிப்பதில்லை. எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போயிருக்கின்றன. ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள். தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன. அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயங்காதீர்கள்.

இன்றைய நாட்களில் நல்லதாய் நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது. எத்தனையோ சௌகரியங்களும், வசதிகளும் பெருகி இருந்தாலும் மனப்பற்றக்குறையாலும், நேரப்பற்றாக்குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது. இந்தச் சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை.

அன்னை தெரசாவைப் போல் தன்னலமில்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமலிருக்கலாம். ஆனால் அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லவாவது செய்யலாமில்லையா? அதற்கு என்ன செலவு இருக்கிறது? அதில் என்ன சிரமம் இருக்கிறது? இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல காரியத்தை நாம் செய்ய ஆரம்பிப்போமா!

-என்.கணேசன்

Tuesday, April 14, 2009

காலத்தை வென்று பிரகாசியுங்கள்


ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?

இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார்.

ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.

சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத் துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."

தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.

அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar's Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.

அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.

அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.

அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.

ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பலன் என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.

சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?

உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.

பிரகாசிப்பீர்களா?

-என்.கணேசன்

நன்றி: விகடன்

Friday, April 10, 2009

சில வழக்கங்கள் எதற்காக?

ஆன்மீகம் சம்பந்தமாக எத்தனையோ செயல்களை தினமும் செய்கிறோம். அதன் பொருள் என்னவென்று கேட்டால் நமக்குத் தெரிவதில்லை. அர்த்தமில்லாத காரியங்கள் உண்மையான ஆன்மீகத்தில் இல்லை. அப்படி அர்த்தமில்லாமல் செயல்கள் இருந்தால் அது உண்மையான ஆன்மீகம் இல்லை. எனவே எதையும் ஏன் செய்கிறோம் என்று தெரிந்து அந்த பாவனையுடன் செய்வதே சிறப்பு.

தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்?

தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்து கொண்டிருக்கும்.

ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கிறது. இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தீபம் ஏற்றுகிறோம். சந்தியா காலங்களான அதிகாலை, மாலை நேரங்கள் பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக நம் முன்னோர் கருதி வந்ததால் அந்த சமயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது நமது வழக்கமாக இருக்கிறது.

எண்ணெய், திரி இரண்டும் ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாகக் கருதுகிறார்கள். தீபம் ஒளிரும் போது எண்ணெயும், திரியும் சிறிது சிறிதாக அழிவது போல், ஞானத்தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும் ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்றும் தீபம் மூலம் உணர்த்தப்படுவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மேலும் தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே ஒளிர்கிறது. அது போல உண்மையான ஞானமும் நம்மை மேலான எண்ணங்களுக்கே தூண்டுகிறது. அந்த ஞானம் நமக்கு அமையட்டும், அந்த ஞான ஒளி நம் வாழ்க்கைப் பாதையில் ஒளிவீசி வழிகாட்டட்டும் என்ற பிரார்த்தனையோடு நாம் தீபம் ஏற்றுகிறோம்.

சடங்குகள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வைப்பதும் அந்த ஞானாக்னியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள்புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.

இனி தீபம் ஏற்றும் போதும், ஏற்றிய தீபத்தைக் காணும் போதும் இந்த அர்த்தத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக?

கோயிலில் கர்ப்பக்கிரகத்தை வலம் வருவதும் கூட எல்லோரும் செய்கிறார்கள் என்று செய்கிறோம். அந்த நேரத்தில் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் எந்திரமாய் நடக்கிறோம். அது தவறு.

ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி நாம் வரைய முடியாது. இறைவன் தான் நம் வாழ்வின் மையம், ஆதாரம் எல்லாம். அந்த இறை மையத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம் என்பதை உணர்த்துவதே இந்த பிரதக்ஷிணம் என்ற வலம் வருதல். வலம் வருவதும் நாம் இடமிருந்து வலமாகத் தான் செய்கிறோம். இப்படி வலம் வருகையில் இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான். நம் நாட்டில் வலப்பக்கத்தை மங்கலமாகக் கருதுகிறார்கள். ஆங்கிலத்தில் கூட அது right side என்றே அழைக்கப்படுகிறது.

எனவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகையில் எல்லாம் வல்ல இறைவன் என்ற மையத்தை வைத்தே நாம் நம் வாழ்வில் இயங்குகிறோம், அவனை நம் இதயத்தின் மையத்தில் வைத்தே அனைத்து எண்ணங்களும் எழ வேண்டும் என்ற பாவனையில் சுறி வந்து பாருங்கள். தொழுது விட்டு வெளியே வரும் போது உங்களுக்குள் அமைதியும் சக்தியும் அதிகரிக்கக் காண்பீர்கள்.

புரிந்து செய்யும் போதே இது போன்ற செயல்கள் புனிதமாகின்றன. புரியாமல் செய்யும் போது இவை வெறும் சம்பிரதாயம் மட்டுமே. புரியாமல் எத்தனை முறை செய்தாலும் அவை ஒரு பலனையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே புரிந்து, உணர்ந்து, பக்தியுடன் செய்து பலன் காணுங்கள்.

-என்.கணேசன்

Monday, April 6, 2009

கொடுங்கள்.. பெறுவீர்கள்!....

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

-என்.கணேசன்

நன்றி:விகடன்

Wednesday, April 1, 2009

கவலையைக் குறைக்க இரு பட்டியல்


பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனனிடம் அழகாகக் கூறுவான். "வீண் கவலை காணிட வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ".

திருதராஷ்டிரன் கூறியது போல் கவலைப்படுவதற்கு காரணங்களைப் பட்டியல் இடுவது கஷ்டமான காரியம் அல்ல. நம் ஒவ்வொருவரிடமும் நீளமான பட்டியல் இருக்கவே இருக்கிறது. பட்டியலில் ஒன்று குறையும் போது ஒன்பது சேர்ந்து கொண்டு பட்டியல் மேலும் நீள்கிறது.

இன்னொரு பழமொழியும் இருக்கிறது. "உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலை". மனித உடல் உள்ள வரை, மனிதனுக்கு உயிர் உள்ள வரை, அவன் கவலைகளை சேர்த்து கடலில் போட்டால் அந்த கடல் அளவும் போதாதாம். செத்தால் தான் நிம்மதி என்று இந்த வழிச் சிந்தனை சொல்கிறது.

இப்படி இருக்கையில் கவலையைக் குறைக்க அல்லது மறக்க மனிதன் எத்தனையோ முயற்சி செய்கிறான். இந்தக் கவலைக் கடலைக் "குடித்தே" குறைக்க நினைப்பவர்கள் உள்ளனர். வேறெதுவும் குறைக்காது என்பது அவர்கள் வாதம். ஆனால் அந்த வாதம் முட்டாள்தனம். போதை தெளிந்து பார்க்கையிலும் கவலைகள் அப்படியே இருக்கும் (போதையால் பிரச்சினைகள் பெருகாமல் இருந்தால்).

அதிகம் கவலைப்படுபவர்களே! உங்கள் கவலையைக் குறைக்க இரு பட்டியல்கள் தயாரியுங்கள். ஒன்று உங்களிடம் உள்ள நல்லவற்றின் பட்டியல். எத்தனையோ பேருக்குக் கிடைக்காத எத்தனையோ நல்லவற்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதையெல்லாம் பட்டியலிட்டுப் பாருங்கள்.

"காலில்லாதவனைப் பார்க்கும் வரை செருப்பில்லை என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்" என்று கூறியவனைப் போல எத்தனையோ விஷயங்களில் உங்கள் கவலை அர்த்தமில்லாதது என்பதை உணர்வீர்கள்.
ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை உண்டு.

ஞானி ஒருவர் தன்னிடம் கவலையுடன் வந்த மனிதனின் அறிவுக் கண்களைத் திறக்க நினைத்தார். "உனக்கு கண்கள் இருக்கின்றன. குருடாக இருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார். உனக்குக் காது கேட்கிறது. செவிடாக உள்ள லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார்....." என்று ஆரம்பித்து அவனிடம் உள்ளவற்றின் பட்டியலை எல்லாம் சொல்லி அவை இல்லாமல் இருக்கும் லட்சக் கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்க்கச் சொன்னார். கடைசியில் "உனக்கு ஒரு அழகான கார் உள்ளது. வாகனமே இல்லாத லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்" என்று முடித்தார்.

ஆனால் கவலை குறையாத அந்த மனிதன் சோகமாகச் சொன்னான். "ஸ்வாமி! என்னிடம் உள்ள அத்தனையும் என் பக்கத்து வீட்டுக்காரனிடமும் இருக்கின்றன. ஆனால் அவனிடம் கூடுதலாக இன்னொரு காரும் இருக்கிறதே?"

இதற்கு என்ன செய்வது? இவன் பார்வை பக்கத்து வீட்டுக்காரனுடன் நின்று விடுகிறது. குதிரைக்குக் காப்பு கட்டியது போல நம் பார்வையைக் குறுக்கிக் கொள்வதும், நம்மை விட அதிர்ஷ்டசாலிகள் என்று நாம் எண்ணும் மனிதர்களுடன் மட்டுமே நம்மை ஒப்பு நோக்கிக் கொள்வதுமே பல்வேறு கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

அடுத்தது இரண்டாவது பட்டியல். உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள், துக்கங்கள் என்னென்ன என்பதையும் அந்தப்பட்டியலில் எழுதுங்கள். ஆரம்பத்தில் இதில் எழுத அதிகம் எதுவும் இல்லாதது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அந்தப் பட்டியல் போல் நீளமான ஒரு பட்டியலை நீங்கள் தயார் செய்யவே முடியாது. பட்டியலில் எழுதத் தேவையானவற்றைப் பெற நீங்கள் சில இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

முதலில் உங்கள் ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி ஒன்றிற்குச் சென்று ஒரு முழு உலா வர வேண்டும். அடுத்து ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப் பாருங்கள். இந்த இரு இடங்களிலும் நோயாளிகளையும் அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினரையும் பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள் என்னென்ன என்று உங்களுக்குப் புரியும்.

மேலே சொன்ன கதையில் கூட அந்த மனிதன் தன்னை விட ஒரு கார் அதிகம் உள்ள பக்கத்து வீட்டுக்காரனை மேலோட்டமாகப் பார்க்காமல் உற்று கவனித்தால் அவனிடம் உள்ள எத்தனையோ குறைபாடுகள், பிரச்சினைகள் தன்னிடம் இல்லை என்பதை உணர முடியும்.

ஒரு வட்டத்திற்குள் இருந்து உழலும் போது மலையாய் தெரியும் கவலைகள் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து கவனிக்கும் போது சிறுத்துப் போகின்றன.

யாருக்கும், என்றைக்கும், உள்ள பிரச்சினைகளை விட இல்லாத பிரச்சினைகளே அதிகம் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு கவலைப்படும் நீங்கள் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகளின் பட்டியலையும் எடுத்துப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன், எல்லோருடைய எல்லா பிரச்சினைகளயும் பார்க்கும் போது, அவர்களுடைய துக்கங்களை நேரடியாகக் காணும் போது, உங்கள் கவலைகளில் பல அவற்றின் முன் அர்த்தமில்லாமல் போவதைக் காண்பீர்கள்.

துரியோதனனைப் போல் கவலைப்பட நூறு காரணங்கள் நீங்கள் கண்டுபிடிக்க முடியும். ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விட ஆயிரம் காரணங்கள் உள்ளன என்பதை இந்த இரண்டு பட்டியல்களும் உங்கள் தலையைக் குட்டிச் சொல்லும்.

-என்.கணேசன்