சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 10, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 89


ஹானா வெளியே சென்றிருந்தாள். கௌதம் விளையாடப் போயிருந்தான். பாட்டியிடம் பேச இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த வருண் மரகதத்தைத் தேடிப் போனான். மரகதம் கந்தர் சஷ்டி கவசம் சொன்னபடி முருகனுக்கு மாலை சார்த்திக் கொண்டிருந்தாள். முருகனிடம் வேண்டியபடி அக்‌ஷய் எந்த ஆபத்தும் இல்லாமல் திரும்பி வரப் போகிறான் என்கிற திருப்தி கலந்த சந்தோஷம் அவளை ஆட்கொண்டிருந்தது. பேரனைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள்.

“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது. வருகிறீர்களா?” அவன் புன்னகைக்காமல் கூப்பிட்டான்.

சஹானா இல்லாத போது பேரன் பேசக்கூப்பிடுகிறான் என்றால் அது சேகரைப் பற்றிப் பேசத்தான் என்பதைப் புரிந்து கொண்ட மரகதம் பெருமூச்சு விட்டு அவனைப் பின் தொடர்ந்து ஹாலுக்கு வந்தாள்.

“உட்காருங்கள்” என்றான். அவள் உட்கார்ந்தாள். “என்னடா?”

“உங்கள் மகன் சாகவில்லை....”

“என்னடா உளறுகிறாய்?” மரகதம் சலிப்புடன் கேட்டாள்.

வருண் அமைதியாக மூன்று நாளுக்கு முன் சேகரைச் சந்தித்து பேசியதை விவரித்தான். மரகதம் திகைப்பில் சிலையாய் சமைந்தாள். அவன் அவன் மூச்சிறைக்க ஓடி வந்து தெருநாய் துரத்தி வந்ததாகச் சொன்னதும், அவன் வெளிறிய முகமும் நினைவுக்கு வந்தது.

“அப்படியானால் அன்றைக்குச் செத்துப் போனது யார்?”

“தெரியவில்லை. உங்கள் மகன் ஏதோ சதித்திட்டம் தீட்டி செத்துப் போனதாய் நாடகம் போட்டிருக்கிறான்.....”

“ஏன்...?” இப்படியெல்லாம் கூட யாராவது செய்வார்களா என்கிற திகைப்பிலிருந்து மரகதத்தால் விடுபட முடியவில்லை.

அதற்குப் பதில் சொல்லாமல் வருண் சேகர் அனுப்பி இருந்த கடிதத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தான். ”இதை ஒரு பையன் மூலம் கொடுத்தனுப்பினான்...”

வாங்கிப்படித்த மரகதத்திற்கு இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பதே விளங்கவில்லை. அதிர்ச்சியுடன் பேரனைப் பார்த்து மெல்ல கேட்டாள். “அவன் எங்கே குடியிருந்தான்....?”

“வந்தனா வீட்டின் மேல் மாடியில்....”

“அப்படியானால் அவன் மூலமாகத் தான் அவர்களுக்கு அந்தப் புகைப்படம் கிடைத்ததா?”

வருண் தலையசைத்தான்.

“இப்போது போய் விட்டானா....?”

“அப்படித்தான் போல இருக்கிறது. ஆனால் விசாரித்த போது வீட்டைக் காலி செய்து விடவில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படி காலி செய்ய வீட்டில் பொருள்களும் எதுவுமில்லை......”

மரகதம் அந்தக் கடிதத்தையே வெறித்துப் பார்த்தாள். பின் மெல்ல சொன்னாள். “உன் மேலாவது பாசம் வைத்திருக்கிறானே!”

வருண் பல்லைக்கடித்துக் கொண்டு சொன்னான். “ஒரு கில்லாடிக்குத் தாயாக இருந்தாலும் கூட உங்களுக்கு மூளை வேலை செய்ய மாட்டேன்கிறதே பாட்டி. மகன் மேல் பாசம் இருப்பவன் இப்படி நம்மை அனாதரவாய் விட்டு விட்டு செத்தது போல நாடகமாடிக் காணாமல் போவானா? அப்பா மட்டும் நம் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நாம் சந்தோஷமாக இருந்திருப்போமா பாட்டி”

மரகதம் கண்கள் தானாகத் தாழ்ந்தன. யோசிக்க யோசிக்க மகனின் அயோக்கியத்தனம் அவளைக் கூனிக்குறுக வைத்தது.

வருணுக்குப் பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த அப்பாவி வயிற்றில் எப்படி அந்த ஆள் பிறந்தான்....! பாட்டியிடம் அவன் ஆணித்தரமாய் சொன்னான். “இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தெரிய வேண்டாம்....”

மரகதம் மெல்ல கேட்டாள். “அக்‌ஷயிடம் சொல்வது நல்லது தானேடா....”

“அப்பாவுக்கும் தெரிய வேண்டாம் என்று நான் சொல்ல இரண்டு காரணம். ஒன்று இந்த ஆள் நான் கண்டிப்பாக கூடப்போக மாட்டேன் என்பது புரிந்து இனி வராமலேயே இருக்கலாம்.... அப்படி ஆனால் அப்பாவிடம் சொல்லி அவர் நிம்மதியையும் கெடுப்பது வீண். இன்னொன்று அப்பா அநியாயத்துக்கு நல்லவர். இந்த ஆள் அவரிடம் அழுது புலம்பி தன் பழைய நடவடிக்கைக்கு ஏதாவது கதை சொல்லி என் மகனை என்னோடு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்டால் மனம் இளகி என்னிடம் “என்ன இருந்தாலும் அவர் உனக்கு அப்பா. பாவம் அவருக்கு யாருமில்லை. நீ அவர் கூடப்போ..... எங்களைப் பார்க்கத் தோன்றும் போது வந்து பார்த்து விட்டுப் போ” என்கிற மாதிரி சொல்லவும் செய்யலாம்...”

அதைச் சொல்லும் போது அவன் அழுகிற மனநிலைக்குப் போனது போல் இருந்தது. மரகதத்திற்கு அக்‌ஷய் அப்படி எல்லாம் சொல்வான் என்று தோன்றவில்லை என்ற போதும் பேரனின் திருப்திக்காக சரியெனத் தலை அசைத்தாள்.

வருண் மிக உறுதியாகச் சொன்னான். “அந்த ஆள் கூடப் போகிறதை விட நான் செத்துப் போவது நல்லது பாட்டி. நான் என் அப்பாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பாட்டி.....”

மரகதம் கண்கள் கலங்கின. “சாவைப் பற்றி பேசாதேடா”.

வருண் எழுந்து நின்றான். மரகதம் மெல்லக் கேட்டாள். “அவன்... அவன்... என்னைப் பற்றிக் கேட்டானா?

“இல்லை பாட்டி.... “ என்று இரக்கத்துடன் சொல்லி விட்டு வருண் தனதறைக்குப் போய் விட மரகதம் தளர்ச்சியுடன் எழுந்தாள்.


லீ க்யாங் தொலைபேசி மூலமாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மைத்ரேயனையும், அவன் பாதுகாவலனையும் திபெத்-நேபாள எல்லைப் பகுதிகளில் தேடுவதைக் கைவிடச் சொன்னான். வாங் சாவொவிடமும் அதைச் சொன்ன போது வாங் சாவொ திகைப்புடன் கேட்டான். “தப்பித்துப் போய் விட்டார்களா?”

“ம்”

“எந்த வழியாக?”

“அந்த சைத்தான் மலை வழியாகத் தான்.....”

”அவனே ஒரு சைத்தான் தான் போலிருக்கிறது.....” வாங் சாவொ அங்கலாய்த்தான்.

“அவனை தலீபான் தீவிரவாதிகள் அப்படித்தான் அழைத்தார்களாம்...” லீ க்யாங் அமைதியாகச் சொன்னான்.

“நேபாளத்தில் அவர்களைப் பிடிக்க ஏற்பாடு செய்தீர்களா சார்”

“அது வீண். நேபாளத்தில் இந்திய உளவுத் துறை ஆட்கள் அவர்களுக்கு உதவக்காத்துக் கொண்டிருப்பார்கள்.... அங்கு அவர்கள் நமக்கு அகப்பட மாட்டார்கள்.... இனி நாம் ஆசான் மூலமாகத் தான் அவர்கள் இருப்பிடம் கண்டுபிடிக்க வேண்டும்..... வேறு வழியில்லை...”

மிக அமைதியாக லீ க்யாங் சொன்னாலும் கூட அவன் அவர்களைத் தப்பிக்க விட்டதை எந்த அளவு அவமானகரமாக நினைப்பான் என்பதை வாங் சாவொ நன்றாக அறிவான். இந்த அமைதி அபாயகரமான அமைதி. அடுத்த முறை புயலாக இயங்க வைக்க ஆயத்தமாகும் அமைதி.....!



மாராவின் அலைபேசி இசைத்தது. மாரா அழைத்தது யார் எனப் பார்த்தான். அவர்கள் இயக்கத்தின் உள்வட்டத்து உறுப்பினர். இந்தியாவில் இருப்பவர். உள்ளுணர்வு மைத்ரேயன் சம்பந்தமாகத் தான் அவர் அழைக்கிறார் என்றது. அனாவசியமாக அழைப்பவர் அல்ல அவர். தற்போது பேசும்படியான அவசியமான விஷயங்களும் அவரைப் பொருத்த வரை இல்லை.

மாரா பேசினான். “ஹலோ...”

“மைத்ரேயன் புதுடெல்லி விமான நிலையத்தில் இருக்கிறான்....”

மனதில் எழுந்த உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாரா கேட்டான். “அவன் தானா அது?”

“அவனது அலைகளை நான் தீயாக உணர்கிறேன். அவனே தான்...”

“அவன் உங்களைப் பார்த்தானா?”

“ஒருமுறை பார்த்தான்.... பிறகு என் பக்கம் திரும்பவில்லை....”

“எந்த உடையில் இருக்கிறான்?”

“சாதாரண சிறுவனின் உடையில் தான். ஆனால் எந்த உடையில் அவன் இருந்தாலும் என் அகக் கண்ணிற்கு அவன் காவி உடை புத்தனாகவே தெரிகிறான்....”

மாரா புன்னகைத்தான். அந்த மனிதர் கவிஞர். அதனால் அவர் உணர்வுகள் கூடுதல் தீட்சண்யம் கொண்டவை.

“அவன் பக்கத்தில் இருப்பவன்?”

“அவன் கண்கள் நடனக்காரியின் கண்கள் போல எல்லா பக்கமும் சுழன்று கொண்டிருக்கின்றன.... மிகவும் ஜாக்கிரதையானவன் என்பதில் சந்தேகம் இல்லை.....”

“அவன் அலைகளை எப்படி உணர்கிறீர்கள்?”

“அபாயமாகவே உணர்கிறேன். அவன் அருகில் இருக்கையில் யாரும் எந்தக் காலத்திலும் மைத்ரேயனை நெருங்கி விட முடியாது.....”

சின்ன சந்தேகமும் இல்லாமல் வந்தது பதில். மெல்லிய புன்னகை உதடுகளில் படர மாரா அடுத்த கேள்வியைக் கேட்டான்.

”அவர்கள் எங்கு போகிறவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததா?”

“உம்... கோயமுத்தூர் போகிறார்கள். நானும் அங்கு போகத் தான் அதே விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்....”

மாரா தன் வழக்கமான கட்டுப்பாட்டையும் மீறி விசில் அடித்தான். அவர்கள் கடவுள் மாரா தெரிவித்தபடி இது மைத்ரேயனுக்கு பெரிய சோதனைக் காலம் தான். இல்லாவிட்டால் அவர்கள் இயக்கத்து ஆள் அதே விமானத்தில் போக விதி வழி வகுத்திருக்குமா?!

“கோயமுத்தூரில் அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். ஆனால் எந்தக் காரணத்தினாலும் நீங்கள் அவர்கள் விஷயத்தில் ஆர்வம் காட்டுவது அவர்களுக்குத் தெரியக்கூடாது....”

“மைத்ரேயனுக்கு நான் யார் என்பது தெரியும் என்றே நினைக்கிறேன். ஆனால் அவன் அந்த பாதுகாவலனிடம் சொல்லும் சிரமத்தைக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பாதுகாவலனுக்குச் சிறிதும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.... நாளை அதிகாலை விமானம் கோயமுத்தூர் சேர்கிறது. அவர்கள் போகுமிடம் தெரிந்தவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.....”

அலைபேசியை தன் சட்டைப்பையினுள் வைத்த பின் அந்தக் கவிஞர் மைத்ரேயன் இருக்கும் பக்கம் விமானம் வந்து சேர்ந்த அறிவிப்பு வரும் வரை திரும்பவேயில்லை. தன் கையில் இருந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த அவர் அறிவிப்பு வந்தவுடன் எழுந்து சோம்பல் முறித்தார். மைத்ரேயனும் பாதுகாவலனும் முன்னால் செல்ல சில ஆட்களுக்குப் பின் அவரும் நடந்தார்.

விமானத்தின் உள்ளும் அனாவசியமாக அவர்கள் இருக்கும் பக்கம் அவர் அதிகம் பார்க்கவில்லை. விமானத்தில் இருந்து இறங்கும் வரை அமானுஷ்யனுக்கு சந்தேகம் எழாமல் பார்த்துக் கொண்டார்.

கோயமுத்தூர் சென்று சேர்ந்த பிறகும் கூட அவர்களை அவர் பின் தொடரவில்லை. மாறாக அவர்கள் ஏறிய கால்டாக்சி எண்ணை மட்டும் குறித்துக் கொண்டார். இரண்டரை மணி நேரம் கழித்து அவருடைய ஆட்கள் அந்த கால்டாக்சி கோவையில் எந்த இடத்தில் எந்த வீட்டின் முன் போய் அந்தப் பயணிகளை இறக்கி விட்டது என்கிற தகவலை அவருக்குத் தெரிவித்தனர்.

உடனடியாக மாராவுக்கு அந்தத் தகவலை அவர் அனுப்பி வைத்தார்.


(தொடரும்)

என்.கணேசன்

9 comments:

  1. சுஜாதாMarch 10, 2016 at 5:42 PM

    என்ன சார் மைத்ரேயன் தப்பிச்சுட்டான்னு நெனச்சா மாராவ இந்தியா வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டீங்களே. டென்ஷன் தாங்கல. ஆனா நாவல் செமயா போகுது.

    ReplyDelete
  2. anna ,enna idhu ,ippide interesting sequencelaye eppodhum thavikka vitta enna panradhu? :(

    ReplyDelete
  3. What amazes me is the way you take care of all characters and all situations in very natural manner and all things are taken care of beautifully. Very interesting sir.

    ReplyDelete
  4. ஆஹா ஆஹா மைத்ரேயன் களமாடப் போவது நம்ம கோயம்புத்தூர்லதானா? அற்புதம். காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. N.Ganeshan sir always rocking!!!

    ReplyDelete
  6. நல்ல எழுத்து...
    தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. Super Sir! And, finally Mythreyan had arrived to Coimbatore, Tamil Nadu. Waiting with eager for further story.

    ReplyDelete
  8. ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட் சூப்பர்

    ReplyDelete