சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 28, 2008

தன்னம்பிக்கை Vs கர்வம்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது. இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் ஹிட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும்.

அசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். "எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்." சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார். எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிப அபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.

ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை இன்னமும் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

தன்னம்பிக்கை ஏற்படுத்திய வளர்ச்சியையும், கர்வம் ஏற்படுத்திய பேரழிவையும் ஒரே மனிதனின் வாழ்க்கையில் ஆதாரபூர்வமாக சரித்திரம் சொல்கிறது. ஹிட்லரின் வாழ்வில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.

எனவே தன்னம்பிக்கையுடன் இருங்கள். அது தான் உங்களை உயர்த்தக் கூடியது. உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கப் போவதும் அந்த தன்னம்பிக்கை தான். ஆனால் அது கர்வம் என்ற விஷமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே. தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே.

அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போல, மேலே சொன்ன கர்வத்தின் அடையாள குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி.

- என்.கணேசன்

Tuesday, July 22, 2008

இவர்களும் தோற்றிருக்கிறார்கள்


ஒவ்வொரு துறையிலும் உச்சாணிக் கொம்பை எட்டிய மேதைகளை பொதுவாக நாம் அதிசயப்பிறவிகள் என நினைக்கிறோம். எல்லா அம்சங்களும் சரிவர அமையப்பட்டு அதிர்ஷ்டமும் ஒத்துழைத்ததால் மட்டுமே அவர்கள் அந்தந்த துறையில் சிகரங்களைத் தொட முடிந்ததென்றும் எண்ணுகிறோம். ஆனால் அவர்களும் அந்த இடத்தை அடையும் முன் எப்படியெல்லாம் தோற்றிருக்கிறார்கள், எள்ளி நகையாடப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதோ சில தகவல்கள்-

* இசை மேதை என்று ஒருமனதாக உலகம் இன்றும் பாராட்டும் பிதோவன் தன் இளமையில் வயலினை சரியாகக் கையாள முடியாதவராக இருந்தார். சொல்லிக் கொடுத்தவற்றை சரியாக வாசிப்பதை விட்டு தன் சொந்த முறையில் வாசிப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருந்த அவரை அவருடைய ஆசிரியர் 'உருப்படாத கேஸ்' என்று கணித்திருந்தார்.

* உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்த ஒரே விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசனுடைய ஆசிரியர்கள் எதையும் கற்றுக் கொள்ள இயலாத முட்டாள் என்று பட்டம் சூட்டி இருந்தனர்.

* தன் கற்பனைத் திறத்தால் டிஸ்னி லேண்ட் உருவாக்கி கோடீசுவரராகி இன்றளவும் பேசப்படும் வால்ட் டிஸ்னி ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டு இருந்தார். புதுமையாக எதையும் செய்யத் தெரியாதவர் என்று அவரை அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் வேலையை விட்டு நீக்கி விட்டார். அதன் பிறகு வால்ட் டிஸ்னி பல வியாபாரங்கள் செய்து அவற்றிலும் பெரிய நஷ்டத்தை அடைந்தார்.

* உலகப் புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் கல்லூரிப் படிப்பில் தோல்வி அடைந்தவர். "படிக்க முடியாத படிக்க விரும்பாத" மாணவன் என்று பெயரெடுத்தவர்.

* இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியும், உலக விஞ்ஞானம் செல்லும் பாதையை முழுவதுமாக மாற்றி விட்டவருமான ஐன்ஸ்டீன் நான்கு வயது வரை பேசவில்லை. ஏழு வயது வரை படிக்கவில்லை. அவருடைய பள்ளி ஆசிரியர் அவரை "மிக மந்தமானவன். மற்றவர்களுடன் நன்றாக கலந்து பழகாதவன். எப்போதும் முட்டாள்தனமான் கற்பனை உலகில் இருப்பவன்" என்று கூறினார். ஜூரிச் பாலிடெக்னிக் பள்ளியில் படிக்க ஐன்ஸ்டீனிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

* இங்கிலாந்தின் பிரதமராகவும், இரண்டாம் உலகப் போரில் உலக சரித்திரத்தில் முக்கியப்பங்கு வகித்தவருமான வின்ஸ்டன் சர்ச்சில் தலைசிறந்த பேச்சாளரும் கூட. அவர் ஆறாம் வகுப்பில் தோற்றவர். தொடர்ந்து அரசியலில் இருந்தாலும் தன் 62 வயதாகும் வரை அவரால் பிரதமராக முடியவில்லை.

* ரிச்சர்ட் பாக் என்ற பிரபல நாவலாசிரியர் "ஜோனாதன் லிவிங்ஸ்டோன்" என்ற 10000 சொற்கள் கொண்ட நாவல் ஒன்ற எழுதினார். 18 பிரபல பிரசுரங்கள் அவர் கதையை பிரசுரிக்க மறுத்து நிராகரித்தன. கடைசியாக மேக்மில்லன் கம்பெனி 1970ல் பிரசுரம் செய்தது. 1975க்குள் அமெரிக்காவில் மட்டும் ஏழு மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்த அந்த புத்தகம் இன்றும் மிகப்பிரபலமாக உள்ளது.

* 'இவனை ஏதாவது ஒரு வழியில் உருப்பட வைக்க முடியுமா என்று பாருங்கள்' என்று பயனில்லாமல் சுற்றித் திரிந்த மகனை அழைத்து வந்து கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளிடம் ஒரு தாய் கூறினார். அவனை அப்படியே இந்தியாவுக்கு அவர்களும் அனுப்பி வைத்தனர். அவன் தான் இந்தியாவில் ஆங்கில சாம்ராஜ்ஜியத்திற்கு அடி கோலிய ராபர்ட் க்ளைவ்.

இப்படி எல்லாத் துறைகளிலும் பெரும் சாதனை படைத்தவர்கள் தோல்விகளையும், கேவலமான விமரிசனங்களையும் சந்தித்திருக்கிறார்கள். வெற்றியின் பாதை பூக்களால் நிரப்பப்பட்டதல்ல. படிப்படியாக தோல்விகளையும், தளர்வடைய வைக்கும் விமரிசனங்களையும் சந்திக்கும் போது இவர்களை நினைவுபடுத்திக் கொண்டு உற்சாகமாக தொடருங்கள். நீங்களும் சரித்திரத்தில் இடம் பெறக் கூடும்.

-என்.கணேசன்

Tuesday, July 15, 2008

படித்ததில் பிடித்தது - Thoughts

வெளி உலகம் நம் பேச்சையும், செயல்களையும் கொண்டே நம்மை கணிக்கின்றன என்றாலும் அவை எல்லாம் எண்ணங்களில் இருந்தே பிறக்கின்றன. எனவே எண்ணங்கள் தானே என்று அறிவுள்ள எவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. தொடர்ந்து எண்ணப்படும் எண்ணங்கள் எப்படியும் சொல்களாகவும், செயல்களாகவும் வெளிப்பட்டு விடுகின்றன. எண்ணங்களைப் பற்றி இவ்வளவு அழகாகவும் ஆணித்தரமாகவும் ஜேம்ஸ் ஆலன் போல இன்னொருவர் சொல்லி விட முடியாது. எத்தனை தடவை படித்தாலும் சலிப்பை ஏற்படுத்தாமல் விழிப்பை மேலும் மேலும் ஏற்படுத்தும் இந்த வைர வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

Thoughts

The aphorism, "As a man thinketh in his heart so is he," not only embraces the whole of a man's being, but is so comprehensive as to reach out to every condition and circumstance of his life. A man is literally what he thinks, his character being the complete sum of all his thoughts.

As the plant springs from, and could not be without, the seed, so every act of a man springs from the hidden seeds of thought, and could not have appeared without them. This applies equally to those acts called "spontaneous" and "unpremeditated" as to those which are deliberately executed.

Act is the blossom of thought, and joy and suffering are its fruits; thus does a man garner in the sweet and bitter fruitage of his own husbandry.

Thought in the mind hath made us. What we are
By thought we wrought and built. If a man's mind
Hath evil thoughts, pain comes on him as comes
The wheel the ox behind . . . If one endure in purity
of thought joy follows him as his own shadow - sure.

Man is a growth by law, and not a creation by artifice, and cause and effect is as absolute and undeviating in the hidden realm of thought as in the world of visible and material things. A noble and Godlike character is not a thing of favor or chance, but is the natural result of continued effort in right thinking, the effect of long-cherished association with Godlike thoughts. An ignoble and bestial character, by the same process, is the result of the continued harboring of groveling thoughts.

Man is made or unmade by himself; in the armory of thought he forges the weapons by which he destroys himself. He also fashions the tools with which he builds for himself heavenly mansions of joy and strength and peace. By the right choice and true application of thought, man ascends to the Divine Perfection; by the abuse and wrong application of thought, he descends below the level of the beast. Between these two extremes are all the grades of character, and man is their maker and master.

Of all the beautiful truths pertaining to the soul which have been restored and brought to light in this age, none is more gladdening or fruitful of divine promise and confidence than this - that man is the master of thought, the molder of character, and maker and shaper of condition, environment, and destiny.

As a being of Power, Intelligence, and Love, and the lord of his own thoughts, man holds the key to every situation, and contains within himself that transforming and regenerative agency by which he may make himself what he wills.

Man is always the master, even in his weakest and most abandoned state; but in his weakness and degradation he is the foolish master who misgoverns his "household." When he begins to reflect upon his condition, and to search diligently for the Law upon which his being is established, he then becomes the wise master, directing his energies with intelligence, and fashioning his thoughts to fruitful issues. Such is the conscious master, and man can only thus become by discovering within himself the laws of thought; which discovery is totally a matter of application, self-analysis, and experience.

Only by much searching and mining are gold an diamonds obtained, and man can find every truth connected with his being if he will dig deep into the mine of his soul. And that he is the maker of his character, the molder of his life, and the builder of his destiny, he may unerringly prove: if he will watch, control, and alter his thoughts, tracing their effects upon himself, upon others, and upon his life and circumstances; if he will link cause and effect by patient practice and investigation, utilizing his every experience, even to the most trivial, as a means of obtaining that knowledge of himself. In this direction, as in no other, is the law absolute that "He that seeketh findeth; and to him that knocketh it shall be opened"; for only by patience, practice, and ceaseless importunity can a man enter the Door of the Temple of Knowledge.

- James Allen

Tuesday, July 8, 2008

ஒரு நம்பிக்கை ஏற்படுத்திய மாற்றம்

எட்வர்ட் ஜோச·ப் ·ப்ளெனகன் (Edward Jospeh Flenagan) என்ற கத்தோலிக்க பாதிரியார் 1886-1948 ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு நல்ல சீர்திருத்தவாதி. அவர் கொலை, கொள்ளை, குரூரம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு சிறைப்படும் சிறுவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற பாய்ஸ் டவுன் (Boys' Town) என்ற சமூக சீர்திருத்த அமைப்பை ஏற்படுத்தி சாதி சமய நம்பிக்கைகள் என்ற வித்தியாசமில்லாமல் எல்லா தரப்பு சிறுவர்களையும் சீர்திருத்தி வந்தார். எல்லாக் குழந்தைகளும் அடிப்படையில் நல்லவர்களே, அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலேயே தீய வழிகளுக்கு வருகிறார்கள் என்பதும் அன்பாலும் நல்ல அறிவுரைகளாலும் அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. பல நூற்றுக் கணக்கான சிறுவர்களை அப்படி மாற்றியும் வந்த அவருக்கு எட்டி (Eddy) என்ற சிறுவன் சவாலாக வந்தான்.

நான்கு வயதில் தன் பெற்றோர்களை இழந்த அந்த சிறுவன் தன் எட்டாவது வயதிலேயே தன்னை விட வயதில் பெரிய கிரிமினல் சிறுவர்களுக்கும் தலைவனாகிற அளவு திறமைகளையும் தைரியத்தையும் பெற்றிருந்தான். திருட்டுகள், துப்பாக்கி முனையில் வழிப்பறிக் கொள்ளைகள், கொலைகள் செய்து முன்னேறி சட்டத்தின் பிடியில் கடைசியில் சிக்கிக் கொண்ட அவனுக்கு போலிசிடம் கூட பயம் இருக்கவில்லை.

பாய்ஸ் டவுனுக்கு அவன் வந்த போது எல்லா தீய விஷயங்களிலும் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான். அவன் சிரித்தோ, அழுதோ யாரும் பார்க்கவில்லை. கெட்ட வார்த்தைகளை தங்கு தடையில்லாமல் உபயோகிப்பது, மற்ற சிறுவர்களை பயமுறுத்தி நடுங்க வைப்பது, மற்றவர்களை ஏளனம் செய்வது, அடிதடியில் ஈடுபடுவது என்று வந்த சில நாட்களிலேயே மற்றவர்களுக்கு அவன் சிம்ம சொப்பனமானான். அங்கு சொல்லிக் கொடுத்த பிரார்த்தனைகளும், விளையாட்டுகளும், அறிவார்ந்த விஷயங்களும் அவனுக்கு சலிப்பைத் தந்தன. அந்த சமயங்களில் எல்லாம் மற்றவர்கள் செய்வதையும் கெடுத்து வம்பு செய்தான். பெரியவர்களையும் பயமில்லாமல் பழித்தான்.

அவனுடைய தொல்லைகள் தாங்காமல் வார்டனாக இருந்தவர் ·ப்ளெனகனிடம் கேட்டார். "உலகத்தில் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்கிறீர்களே ஐயா, இவனை என்னவென்று சொல்கிறீர்கள்?"

புன்னகையுடன் ·ப்ளெனகன் அவரைப் பொறுமையாக இருக்கும்படி வேண்டிக் கொண்டார்.

ஒருமுறை எட்டிக்கு கடும் காய்ச்சல் வர அவனை ·ப்ளெனகன் அவனை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார். மற்ற சிறுவர்களையும் அவனை நன்றாகப் பார்க்க வைத்தார். அவன் குணமான பின்னும் அவனுக்கு தனி சலுகைகள் தந்து செல்லப் பிள்ளை போல் பார்த்துக் கொண்டார். இதில் எல்லாம் மனம் கனிவதற்குப் பதிலாக எட்டிக்கு எரிச்சல் தான் வந்தது.

அவன் நேராக ·ப்ளெனகனிடம் சென்று கோபத்துடன் கேட்டான். "என்னை நல்லவனாக மாற்ற முயற்சி செய்கிறீர்களே. அது முடியும் என்று நினைக்கிறீர்களே அது முடியும் என்று நம்புகிறீர்களா? நான் இப்போது தான் மேட்ரன் ஒருவரை உதைத்து விட்டு வருகிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்?"

ப்ளெனகன் உறுதியாகச் சொன்னார். "நான் இப்போதும் சொல்கிறேன். அடிப்படையில் நீ நல்ல பையன் தான்"

"ஏன் இப்படிப் பொய் சொல்கிறீர்கள்? ஒரு பாதிரியாராக இருந்து கொண்டு பொய் சொல்வது சரியா?"

·ப்ளனெகன் அவனிடம் அமைதியாகக் கேட்டார். "நல்ல பையன் என்பதை எப்படி நிர்ணயிப்பது? ஒரு நல்ல பையன் பெரியவர்கள் சொன்னபடி கேட்பான். சரி தானே?"

"சரி தான்"

"தன் ஆசிரியர்கள் சொன்னபடி நடந்து கொள்வான். சரி தானே"

"ஆமாம்"

"நீயும் அப்படித்தானே இது வரை நடந்து கொண்டு இருக்கிறாய். இங்கு வந்து சேரும் வரை தீய வழிகளில் தேர்ந்திருந்தவர்கள் தான் உனக்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். உன்னை வழி நடத்தும் பெரியவர்களாக கேடிகள் தான் உனக்குக் கிடைத்திருந்தார்கள். நீ அவர்கள் சொன்னபடி கேட்டு, கற்று இப்படி ஆகியிருக்கிறாய். இப்போது உனக்கு நல்ல ஆசிரியர்களும் வழி நடத்துபவர்களும் கிடைத்திருக்கிறார்கள். இனி சிறிது சிறிதாக நல்ல விதங்களுக்கு மாறுவாய் இது நிச்சயம்"

எட்டி அவர் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையையும் உறுதியையும் கண்டு திகைத்தான். அவர் சொன்னதில் இருந்த உண்மை அவன் அறிவுக்கு எட்டியது. அவர் நம்பிக்கை அவன் இதயத்தைத் தொட்டது. ஒன்றும் சொல்லாமல் நின்ற அவனை ·ப்ளனெகன் அன்புடன் அணைத்துக் கொண்டார். அந்தச் சிறுவன் கண்களில் இருந்து கண்ணீர் முதல் முறையாக வெளி வந்தது.

எட்டி பத்து வருடங்கள் கழித்து பட்டதாரியாகி, இராணுவத்தில் சேர்ந்து உலகப் போரில் நாட்டுக்காக போராடி பல வீரப் பதக்கங்கள் பெற்றான். நம்பிக்கைக்கும், மதிப்புக்கும் உரிய நல்ல குடிமகனாக வாழ்ந்து பலருடைய அன்பிற்குப் பாத்திரமானான்.

ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை பொறுமையுடன் கையாளப்படும் போது எப்படி மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதற்கு எட்டி ஒரு உதாரணம். இப்படி எத்தனையோ சிறுவர்களை அந்தப் பாதிரியாரின் நம்பிக்கை மாற்றி அமைத்திருக்கிறது. ஒரு நம்பிக்கை தீபம், பலர் மனதிலும் நம்பிக்கை தீபங்களை ஏற்றி பலர் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றி இருக்கிறது.

நமது நம்பிக்கை நம்மை மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் இந்த அளவுக்கு மாற்ற முடியும் என்றால் எதை நம்புகிறோம் எந்த அளவுக்கு நம்புகிறோம் என்பதில் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்வது உத்தமம் அல்லவா?

- என். கணேசன்

Tuesday, July 1, 2008

விரும்பியதை அடைய ஒரே வழி

சமுத்திரத்துக்கே சென்றாலும் கொண்டு போன பாத்திரத்தின் அளவைப் பொறுத்தே ஒருவன் தண்ணீரை எடுத்து வர முடியும். தம்ளரை எடுத்துச் சென்றவன் குடத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வருபவனைப் பார்த்து பொறாமைப் படுவதில் அர்த்தமில்லை. 'அவனுக்கு அதிகம் தண்ணீரைத் தந்திருக்கிறாயே' என்று சமுத்திரத்திடம் கோபித்துக் கொள்வதில் நியாயமில்லை. எத்தனை வேண்டுமானாலும் தர சமுத்திரம் தயாராகத் தான் இருக்கிறது. யார் எடுத்தும் அதில் தண்ணீர் குறையப் போவதில்லை. அதிகம் வேண்டுபவர் பெரிய பாத்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்து வரும் தண்ணீரைச் சுமக்கும் திராணியும் இருக்க வேண்டும். அது தான் தேவை.

கடவுள் அல்லது பிரபஞ்சம் அந்த சமுத்திரத்தைப் போல என்று சொல்லலாம். மனிதர்களின் அருகதையை அந்தப் பாத்திரமாகச் சொல்லலாம். எந்த அளவு ஒருவன் தன் தகுதியையும், அருகதையையும் வளர்த்துக் கொள்கிறானோ அந்த அளவுக்குத் தகுந்தாற் போல எல்லாவற்றையும் உலகில் பெறுகிறான். தான் பெறுவது குறைவு என்று நினைப்பவன் தன் அருகதையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

பாத்திரம் பெரிதாக இருந்தாலும் ஒருவன் அந்த சமுத்திரத்திடம் போக வேண்டும், தண்ணீரைப் பாத்திரத்தில் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும், அதை சுமந்து கொண்டு வரத்தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பாத்திரமும் ஒருவனுக்குப் பயன்படும். இல்லாவிட்டால் பெரிய பாத்திரமும் கூட காலியாகவே இருக்கும். இத்தனையும் செய்ய முடிந்தவன் வைத்திருப்பது சிறிய பாத்திரமானாலும் அதில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வருவது சாத்தியமே. எனவே தான் அருகதை இருந்தும் முயற்சி இன்மையால் சிலர் வெற்றுப் பாத்திரமாகவே இருப்பதை நாம் காண முடிகிறது. அதே போல அந்த அளவு அருகதை இல்லாதவனும் தன் முயற்சியால் அதற்கேற்றாற் போல சிறப்பாக வாழ்வதையும் காண முடிகிறது.

பாத்திரமும் பெரிதாக இருக்கிறது. சென்று தண்ணீர் எடுக்கும் முயற்சியும் நடக்கிறது. ஆனால் பாத்திரத்தில் ஓட்டை இருக்கிறது என்றாலும் எடுத்த தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும் அவலநிலையும் ஏற்படும். சிலர் தங்களிடம் ஏகப்பட்ட திறமையை வைத்துக் கொண்டு இருந்தாலும் அதையெல்லாம் போக்கடிக்கிறாற் போல ஒருசில பலவீனங்களை வைத்திருந்தாலும் பெற்றதை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே திறமையையும், திறமையை வீணடிக்கும் பலவீனத்தையும் ஒருசேரப் பெற்றிருந்தாலும் ஒருவன் வெற்றுப் பாத்திரமாக மாறும் நிலை ஏற்படலாம்.

ஆகவே மனிதர்களே, நீங்கள் எதை அடைய விரும்பினாலும் அதற்கேற்ற அருகதையை வளர்த்துக் கொள்ளுங்கள். அருகதை பெற்ற பின் விரும்பியதை அடையத் தேவையான முயற்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் குறிக்கோளுக்கு எதிரான பலவீனம் உங்களிடம் ஏதாவது இருக்குமானால் முதலில் அதைப் போக்கிக் கொள்ளுங்கள். எதை விரும்பினாலும் நீங்கள் அதை அடைவது உறுதி. அடைந்ததை தக்க வைத்துக் கொள்வதும் உறுதி.

மற்றவர் பெறுவதால் நமக்குக் கிடைப்பது குறைந்து விடும் என்ற பயமும் வேண்டாம். எத்தனை பேர் எத்தனை தண்ணீர் எடுத்தாலும் சமுத்திரம் குறையப் போவதில்லை. எல்லோருக்கும் எத்தனையும் தர குறைவில்லாத சமுத்திரம் தயார். பாத்திரங்களுடன் நீங்கள் தயாரா?

-என்.கணேசன்