என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label யாரோ ஒருவன்?. Show all posts
Showing posts with label யாரோ ஒருவன்?. Show all posts

Monday, June 12, 2023

யாரோ ஒருவன்? 142



ஜீம் அகமது நான்காவது வழித்தடத்தில் செல்ல ஆரம்பித்தவுடனேயே கடைசி நேரத்தில் அவனும் அன்வரும் சேர்ந்து ரா தலைவரிடம் மறைமுக அனுமதி பெற்று மாற்றியிருந்த திட்டத்தை அந்த வழித்தடத்தில் சற்று தொலைவில் நின்றிருந்த காரில் ஒளிந்திருப்பவர்களிடம் நரேந்திரன் தெரிவித்தான். அந்த வழித்தடத்தில் மட்டும் தான் அந்த வசதியும், வாய்ப்பும் இருப்பதோடு அன்வரும் காத்திருக்கிறான் என்பதனால் அவர்கள் திட்டத்தில் செய்திருந்த சிறிய மாற்றத்தை நரேந்திரன் சொன்னவுடன் அவர்கள் சரியென்றார்கள்.

அஜீம் அகமதின் கார் அந்தக் காரைத் தாண்டியவுடன் அந்தக் காரும் கிளம்பியது. அதைக் கண்ட அஜீம் அகமது அதிர்ந்தான். அந்தக் கார்க்காரன் எதாவது முக்கியமான போன் பேச வேண்டியிருந்து காரை நிறுத்திப் பேசி விட்டு அவன் காரைக் கிளப்பியுமிருக்கலாம் என்றும் அவனுக்குத் தோன்றியதுதேவையில்லாமல் அதிர்ச்சி அடைகிறோமா என்ன என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனாலும் அவன் தயாராகக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டை வீச ஒரு கை தயாராகி ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கவும் இன்னொரு கை தயாராகியது. ஆனால் சிறிது தூரம் வரை சற்று தொலைவிலேயே வந்து கொண்டிருந்த அந்தக் கார் பின் நின்று விட்டது

அஜீம் அகமதின் சகா நிம்மதியடைந்தவனாய் சொன்னான். “அந்தக் கார்ல எதோ பிரச்சன போல இருக்கு பாஸ். நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்...”

அஜீம் அகமது முழுவதுமாக நிம்மதியடைந்து விடவில்லை. அவன் உள்ளுணர்வு மறுபடி எச்சரித்தது. அதனால் திரும்பிப் பார்த்தபடியே இருந்தான். அந்தக் காரின் உள்ளே விளக்கு எதுவும் எரியவில்லை. திடீரென்று வேகமாக அந்தக் கார்க்காரன் ஹாரன் அடித்தான். அந்த நேரத்தில் அஜீம் அகமதின் கார் ஒரு தெருக்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தெருக்கோடியில் ஒரு பெரிய இரும்புக் குப்பைத்தொட்டி தெரிந்தது. தெருக்கோடி வந்து கார் வலது பக்கம் திரும்ப வேண்டும்அந்தப் பகுதியில் கட்டிடங்கள் எதுவும் இல்லை. வலது பக்கம் திரும்பும் தெருவும் வெறிச்சோடிக் கிடந்தது.

கார் ஹாரன் சிக்னல் கிடைத்தவுடன் தெருக்கோடியில்  இருந்த குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு உருவம் திடீரென்று எழுந்து நிற்க காரை ஓட்டி வந்து கொண்டிருந்த அஜீம் அகமதின் சகா திகைத்தபடிபாஸ்என்றழைத்தான். அவன் அழைக்கும் வரை பின்னால் திரும்பி தூரத்தில் நின்று விட்டிருந்த காரையே பார்த்துக் கொண்டிருந்த  அஜீம் அகமதுஎன்னஎன்று கேட்டபடி திரும்பவும், குப்பைத் தொட்டியில் நின்று கொண்டிருந்த உருவம் எதையோ குறி பார்த்து எரியவும் சரியாக இருந்தது. அவன் எறிவது வெடிகுண்டு என்று அஜீம் அகமதுவும், சகாவும் உணர்ந்த நேரத்தில் அவர்களுக்குத் தற்காத்துக் கொள்ள எதுவும் செய்ய முடியவில்லை.  ஏனென்றால் அந்த உண்மை உறைத்த அந்த நேரத்தில் அந்த வெடிகுண்டும் அவர்கள் கார் மேல் விழுந்தது. பயங்கரச் சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த போது அஜீம் அகமது உள்ளே வைத்திருந்த வெடிகுண்டும் சேர்ந்து வெடித்துச் சிதறியது. அஜீம் அகமதுவும் அவன் சகாவும் கூடச் சேர்ந்து சிதறினார்கள்     

குப்பைத் தொட்டியிலிருந்து அன்வர் வெற்றிப் புன்னகையுடன் வெளியே வர கண்காணிப்பறையில் நரேந்திரனும் மற்றவர்களும் வெற்றி கோஷமிட்டார்கள்.

அஜீம் அகமது நரேந்திரனின் தாயை வெடிகுண்டு வைத்துக் கொல்ல முயற்சி செய்தவுடன் அன்வர் நரேந்திரனிடம் சொல்லியிருந்தான். “அவங்க வழியிலயே அவங்கள கொன்னா என்ன? துப்பாக்கிச் சூட்டுல அவன் எப்படியாவது தப்பிக்கவும் வழியிருக்கு. ஆனா வெடிகுண்டு வீசினா அந்த இடத்துலயே ஆள் காலியாயிடுவான்.”

சட்டபூர்வமாக அது சரியல்ல என்றாலும் நரேந்திரனுக்கும் அது நல்ல வழியாகவும் சரியான நீதியாகவும் தோன்றியது. அவன் தலைவரிடம் சொன்ன போது அவரும் அப்படியே நினைப்பதாகச் சொன்னார்அங்குள்ள போக்குவரத்து குறைவையும், ஒளிந்து கொள்ள ஒதுக்குப்புறமான வீடுகளும் அதிகமுள்ள பகுதி அருகில் இருப்பதையும் அன்வர் சுட்டிக் காட்டி, அஜீம் அகமது போகும் வழித்தடம் இதுவாக இருக்கும் என்று அனுமானித்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பை தனக்கே தரும்படியும் கேட்டுக் கொண்டிருந்தான்.

கண்காணிப்பு அறையில் அத்தனை பதிவுகளும் கவனமாக உடனடியாக அழிக்கப்பட்டன. எதிர்காலத்தில் இந்தப் பதிவுகள் கசிந்து பிரச்னையாவதை அவர்கள் யாரும் விரும்பவில்லை.

அதிகாலையில் டெல்லி உயர் போலீஸ் அதிகாரி பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார். “உலக நாடுகள் பலவும் தேடி வந்த சர்வதேசத் தீவிரவாதி அஜீம் அகமது இந்தியாவிற்கு வந்திருக்கும் செய்தி உளவுத்துறைக்கு சில நாட்களுக்கு முன் எட்டியது. உடனே அவனைப் பிடிக்கஆபரேஷன் ஏஸ்கொயர்என்ற ரகசியத் திட்டத்தை உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கியது. மிகவும் இரகசியமாகச் செயல்பட்டு அவன் தங்கியிருக்கும் இடத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதை எப்படியோ அறிந்து விட்ட அஜீம் அகமது அங்கிருந்து தன்னுடைய கூட்டாளியுடன் ஒரு கருப்புக் காரில் தப்பியோடினான். அப்படித் தப்பி ஓடுகையில் நோய்டாவின் புறநகர்ப்பகுதியில் ஆபரேஷன் ஏஸ்கொயர் செயல்திட்ட வீரர்கள் அவன் காரைச் சுற்றி வளைத்தார்கள். போலீஸில் பிடிபட விரும்பாத அஜீம் அகமதுவும், அவன் சகாவும் தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு பலியானார்கள். நரேந்திரன் ஐபிஎஸ் தலைமையில் நடந்த இந்த ஆபரேஷனில் துணிச்சலாகச் செயல்பட்ட செயல்வீரர் அன்வரின் பங்கு மகத்தானது…. பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அஜீம் அகமதை வீழ்த்திய இந்தியச் செயல்வீரர்களுக்கு உலக நாடுகளிலிருந்து பாராட்டு குவிந்து வருகிறது…”

டிவியில் இந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனார்தன் த்ரிவேதி பதறிப்போய் காளிங்க சுவாமியின் சீடர்களுக்குப் போன் செய்தார். இரண்டு மணி நேரம் கழித்து தான் தொடர்பு கிடைத்தது. காளிங்க சுவாமியின் சீடன் அந்த ரத்தினக்கல் விஷயத்தில் சுவாமிஜி ஏமாந்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னான். அவன் குரலிலும் உண்மையாகவே வருத்தம் தெரிந்தது. ஜனார்தன் த்ரிவேதி தன் காதுகளை நம்ப முடியாமல் திகைத்தார்.

அஜீம் அகமது இப்படி தற்கொலை செய்து கொள்வான் என்பதையும் அவரால் நம்ப முடியவில்லை. ஆனால் பிறகு சம்பவ இடத்தை ஆராய்ந்த நிபுணர்கள் வெடித்த இரண்டு வெடிகுண்டுகளில் ஒன்றில் அஜீம் அகமதின் தனி முத்திரைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அந்த வெடிகுண்டு அவனே தயாரித்திருக்கக்கூடிய வெடிகுண்டு என்று ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டிய போது அவர் சந்தேகம் தெளிந்தார். மிகவும் வருத்தமாக இருந்தாலும், மரணத்தைக் கூடத் தன் வழியிலேயே  தேடிக் கொண்ட அவனை எண்ணிப் பிரமிக்காமல் அவருக்கு இருக்க முடியவில்லை.


முடிவில்...

·         நரேந்திரன் மற்றும் அன்வர் இருவருக்கும் பதவி உயர்வு கிடைத்தது. உலகநாடுகள் அஜீம் அகமதுக்காக அறிவித்திருந்த பரிசுத் தொகைகள் ஆபரேஷன் ஏஸ்கொயர் செயல்வீரர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டதுதான் தயாரித்த வெடிகுண்டுகளால் ஏராளமானவர்களை மரணமடையச் செய்த அஜீம் அகமதின் மரணமும் அதே வழியில் நடந்ததைஇயற்கையின் நீதிஎன்று பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வர்ணித்தன.

·         நாகராஜ் அவனுடைய குருஜி குறித்துக் கொடுத்திருந்த நாளில் துறவியாக மாறி அந்த ஆசிரமத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அவனுடைய நற்பணிகள் தொடர்ந்தன.

·         ரஞ்சனி சத்தியமங்கலத்திலிருக்கும் பரந்தாமன்-அலமேலு தம்பதியரிடம் தன் மகனை அழைத்துக் கொண்டு போய் அவன் உண்மையிலேயே மாதவனுடைய மகன் என்பதைத் தெரிவித்தாள். திருமணத்திற்கு முன்பு கருத்தரித்ததால் அதை வெளிப்படையாக அவளால் சொல்லியிருக்க முடியவில்லை என்றும், உண்மை தெரிந்தும் அவளைத் திருமணம் செய்து கொண்ட சரத் அதை வெளியே சொல்ல வேண்டாமென்றும் சொன்னதால் இத்தனை காலம் மௌனம் சாதித்ததாகவும், சமீபத்தில் ஒருநாள் திடீரென்று மாதவன் கனவில் வந்துஎன் பெற்றோரிடம் நம் மகனை அறிமுகப்படுத்துஎன்று கட்டளையிட்டதால் இப்போது வந்து சொல்வதாகவும் அவள் ஒரு கதை சொன்னாள்.

முதியவர்கள் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள். அலமேலு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். சில நாட்களுக்கு முன் தன் கனவிலும் மாதவன் வந்ததைத் தெரிவித்த அவள் தீபக்கை முதல் முறை பார்த்த போதே மாதவனுக்கு ஒரு மகன் இருந்தால் இப்படி இருப்பான் என்று அவர்கள் இருவரும் நினைத்ததைச் சொன்னாள். விடுமுறை நாட்களில் ரஞ்சனியும் தீபக்கும் அவர்கள் வீட்டுக்கு வர பரந்தாமனும், அலமேலுவும் பேரனின் அன்பிலும் புத்திசாலித்தனத்திலும் பூரித்துப் போனார்கள்.

ஒருமுறை தீபக் தர்ஷினியையும் அழைத்து வந்து எதிர்கால மனைவியாக அறிமுகப்படுத்த அவளையும் அவர்களுக்குப் பிடித்து விட்டது.    22 வருட துக்கத்திற்கு நஷ்ட ஈடு தருவது போல் கடவுள் கடைசி காலத்தில் இப்படியொரு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் ஆனந்தத்தில் நாதமுனியும் இணைந்தார். அவருக்கும் தீபக்கை மிகவும் பிடித்திருந்தது.

சரத்தும், கல்யாணும் ஏன் வருவதில்லை என்று ஒரு முறை அலமேலு வருத்தத்துடன் கேட்ட போது மாதவனின் நினைவுகள் அவர்கள் மனதை இப்போதும் வேதனைப்படுத்துவதால் தான் வருவதில்லை என்று ரஞ்சனி சமாளித்தாள். என்னவொரு அன்பு என்று அலமேலு கண்கலங்கினாள். சில சமயங்களில் உண்மையை விடப் பொய்யே ஆறுதல், பொய்யே நிம்மதி, பொய்யே வாழ்க்கையைச் சுலபமாக்குகிறது!

·         வாரநாட்களில் தீபக் தினமும் வழக்கமான நேரத்தில் அந்த ரேஸ்கோர்ஸில் தவறாமல் வாக்கிங் செல்கிறான். கூடவே அவன் தந்தையும் வருவதாக உணர்கிறான். தந்தையிடம் சொல்லத் தோன்றுவதை எல்லாம் அவன் மனதுக்குள் சொல்கிறான். தந்தை கேட்பதாகவும் உணர்கிறான். அவன் தந்தையின் கைவிரல்களின் ஸ்பரிசமும் கூட அவன் உணர்கிறான். எல்லாம் அவன் கற்பனையா இல்லை நாகராஜ் தன் சக்தியின் மூலம் அந்த உணர்வை ஏற்படுத்துகிறானா என்பது தெரியவில்லை.

·         சரத் வாழ்க்கையில் இருந்த ஒரே பிடிப்பு தீபக்கின் அன்பாய் தான் இருந்தது. தீபக் மட்டும் முன்பு போலவே அவனிடம் பாசமாய் இருந்தான். ரஞ்சனி அதே வீட்டில் அவனுடன் வாழ்ந்தாலும் அன்னியமாகவே இருந்தாள்.

·         கல்யாணின் தொழில் பிரச்னைகள் தீரவில்லை. பல கோடி நஷ்டத்தைச் சந்தித்த அவனுடைய நிதி நிலைமை முன்பிருந்ததில் கால் பாகமாகக் குறைந்தது. கடனை அடைக்க அவன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸையும், கோத்தகிரி எஸ்டேட்டையும் விற்க வேண்டி வந்தது. அவன் கெஞ்சிக் கூத்தாடி மனைவி மகளை ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வரவழைத்தாலும் அவர்களுக்கு அவன் மீது பழைய அன்பும், மரியாதையும் இல்லாமலேயே போயிற்று. வேலாயுதம் எந்தப் பாம்பாட்டியைப் பார்த்தாலும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு, பின் ஏமாற்றத்துடன்   நகர்கிறார்.

·         சஞ்சய் ஷர்மாவும், மதன்லாலும் அரைப்பைத்தியங்களாகவே இருக்கிறார்கள். அவர்களைக் குணமாக்க முடியாமல் ஜனார்தன் த்ரிவேதி அவர்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். அவர்கள் மனைவிகள் அவர்களைச் சமாளிக்க முடியாமல் வீட்டில் கயிற்றால் கட்டிப் போடுவதாகப் பின்பு கேள்விப்பட்டார். நரேந்திரன் அவர்களைக் கட்டிப்போட்ட நேரம் அவர்களுடைய மீதி வாழ்க்கையையும் அப்படியே செய்து விட்டதே என்று மனம் புழுங்குவார். இப்போதெல்லாம் அவர் காளிங்க சுவாமியைத் தரிசிக்கவும் போவதில்லை. இனி அவர் கட்சி ஆட்சிக்கு வரும் அறிகுறியே இல்லை என்பதால் விரக்தியுடன் வாழ்கிறார்.

· மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் அந்த ஃபேக்டரியில் கண்டுபிடித்தவுடனேயே அஜீம் அகமது தான் கடத்தி வைத்திருந்த க்யான் சந்தை கொன்றிருந்தான். மகேந்திரன் கொலையான விதத்தை அவன் சொல்லி விடக்கூடும் என்பதோடு, சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் கடத்திய பழியோடு இந்தப் பழியையும் நரேந்திரன் மீது சுமத்த அஜீம் அகமது எண்ணியிருந்தான். கொலைப்பழியும் சேர்ந்தால் நரேந்திரனுக்குத் தூக்கு தண்டனை நிச்சயம் என்று அவன் குறுக்கு மூளை கணக்குப் போட்டிருந்தது. மதன்லால், சஞ்சய் ஷர்மா இருவரும் பகிரங்கமாக நரேந்திரன் மீது குற்றச்சாட்டு சொன்ன மறுநாளே க்யான் சந்த் உடல் புதைக்கப்பட்ட இடத்தைப் போலீஸுக்குத் தெரிவிக்க எண்ணியிருந்தான். ஆனால் நரேந்திரன் மீது குற்றம் சாட்டும் நிலைமைக்கு மதன்லால், சஞ்சய் வராததால் இவன் இறந்த தகவலும் வெளிவராமலேயே தங்கி விட்டது. இப்போதும் போலீஸார் க்யான் சந்தைத் தேடி வருகிறார்கள்.   

·         பாம்பாட்டியும், பீம்சிங்கும் தங்கள் பழைய வழிகளை மாற்றிக் கொண்டு வியாபாரிகளாக மாறி விட்டார்கள். செல்வம் நல்ல முறையில் அவர்களிடம் சேர்ந்து கொண்டே போனது. பாம்பாட்டி அதற்கு நாகரத்தினக்கல்லைக் காரணமாக நினைக்கிறான். பீம்சிங் அனுமாரின் அனுக்கிரகத்தைக் காரணமாக நினைக்கிறான்.

·         காளிங்க சுவாமியின் ஒரு சீடன் அவரோடிருப்பதில் இனி பெரிய எதிர்காலம் இல்லை என்று எண்ணி அவரை விட்டுப் போய் விட்டான். ஒரு வேளை விசேஷ நாகரத்தினம் அவரிடம் வந்திருந்தால் அதை எடுத்துக் கொண்டு போகிறவன் அவனாகத் தான் இருந்திருப்பானோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. நாகசக்தியால் மற்றவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது போல் விசேஷ நாகரத்தினம் ஏற்படுத்த முடிந்த விளைவுகளை அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. விசேஷ நாகரத்தினத்தை முதலில் அடைந்த நாகராஜ் மட்டுமே அதன் விசேஷத் தன்மைகளையும், ரகசியங்களையும் அறிந்தவன். ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை உருவாக முடிந்த விசேஷ நாகரத்தினத்தின் மீதிப்பயணத்தில் தனக்கு இடமில்லை என்று உணர்ந்து அவன் அனுப்பி விட்டான் என்பதை மட்டுமே அவரால் யூகிக்க முடிந்தது. மற்றதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. காளிங்க சுவாமி மாகாளியிடம் கேட்ட போதும் அது இப்போது சேர வேண்டிய இடமாக கங்கையைக் காட்டியதோடு நிறுத்திக் கொண்டாள். மீதியை அவளும் சொல்லவில்லை. இனி அது எப்போது யார் கைக்குப் போகும், அதன் பின் என்ன ஆகும் என்பதையாவது அறிந்து கொள்ள அவ்வப்போது அவருக்கு ஆர்வம் ஏற்படுவதுண்டு. ஆனால் காலம் தன் ரகசியங்களை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தி விடுவதில்லை. அப்படி வெளிப்படுத்தி விட்டால் அதன் பின் வரப்போவதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?


முற்றும்.

என்.கணேசன்




(அடுத்த திங்கள் முதல் யோகி நாவல் வாரா வாரம் வெளியாகும்)

Monday, June 5, 2023

யாரோ ஒருவன்? 141

ரேந்திரன் இல்லாத சமயத்தில் அந்த அபார்ட்மெண்ட்ஸில் ரா பாதுகாப்பு தீவிரமாக இல்லாத காரணத்தால் அஜீம் அகமது அனுப்பிய கொலையாளி அபார்ட்மெண்ட்ஸின் பின்புற காம்பவுண்டு சுவர் ஏறிக் குதிப்பதில் பிரச்னை இருக்கவில்லை. அவன் நீல நிற சீருடையில் யாரும் சந்தேகப்பட முடியாத தோற்றத்தில் இருந்தான். நரேந்திரனின் ஃபளாட் ஏ 7 என்பதும் பொதுவாக இந்த நேரத்தில் அவன் தாய் சமையலறையில் இரவுச் சமையலில் மும்முரமாக இருப்பாள் என்பதும் அந்தக் கொலையாளி ஏற்கெனவே சேகரித்து வைத்திருந்த தகவல். அஜீம் அகமதின் போன்கால் வந்து அரை மணி நேரத்தில் அங்கே வந்து சேர்ந்திருந்த அவன் ஏ ப்ளாக் கட்டிடத்துக்குள் போகாமல்  பி ப்ளாக் கட்டிடத்திற்குள் நுழைந்தான். லிப்ஃடைப் பயன்படுத்தாமல் அவன் மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான். இரண்டாம் மாடியைக் கடந்து மூன்றாம் மாடியை நோக்கிப் போகும் படிகளில் ஒரு பக்கத்துச் சுவரைத் தாவிக் குதித்து எம்பி மேலே இருந்த கண்ணாடி ஜன்னல் கதவைச் சிறிது சிரமப்பட்டு இழுத்தான். அங்கிருந்து பார்க்கையில் ஏ 7ன் சமையலறையின் பின்னால் இருந்த துணி உலர வைக்குமிடம் தெரிந்தது. சமையலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கொலையாளி தான் கொண்டு வந்திருந்த கையெறி வெடிகுண்டைக் குறி பார்த்து ஏ 7 ன் துணி உலர வைக்கும் இடத்தை நோக்கி வீசினான். அடுத்த வினாடி வெடிகுண்டு வெடிக்கும் ஓசையில் எல்லாக் கட்டிடங்களும் சில வினாடிகள் நடுங்கி ஓய்ந்தன. அவன் அமைதியாகப் படியில் இறங்க ஆரம்பித்தான். லிஃப்ட் இருக்கையில் யாருமே படிகளில் ஏறுவதோ இறங்குவதோ கிடையாது என்பதால் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.

வெளியே வந்தவன் ஏ 7லிருந்தும் 8லிருந்தும் கிளம்பியிருந்த புகைமண்டலங்களைப் பார்த்தான். திகைப்பிலும் அதிர்ச்சியிலும் அங்கிருந்த எல்லோர் கவனமும் அங்கேயே நிலைத்திருக்க மேலும் பலர் அக்கம்பக்கத்திலிருந்து ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.  அந்தக்  களேபரத்தில் அவன் அமைதியாக வெளியேறினான். கண்டிப்பாக சிசிடிவி கேமராக்களை ஆராயும் போது அவன் தெரிவான் என்றாலும் பலத்த ஒப்பனையோடு வந்திருந்த அவன் யாரென்று கண்டுபிடிப்பது அவர்களால் முடியாத காரியம்...    


ரேந்திரன் நாகராஜுக்குப் போன் செய்த போது அவன் கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. கண்கள் ஈரமாகி இருந்தன. நரேந்திரன் குரல் தழுதழுக்கச் சொன்னான். “மகராஜ் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இனி வரும் ஜென்மங்களிலும் கூட நீங்கள் செய்திருக்கும் உதவிகளுக்கு என்னால் கைம்மாறு செய்ய முடியாது...”

அரை மணி நேரத்திற்கு முன்பு தான் நாகராஜ் நரேந்திரனுக்குப் போன் செய்திருந்தான். அதிசயமாய் இந்த மனிதர் ஏன் அழைக்கிறார் என்று யோசித்தபடி பேசிய நரேந்திரனிடம் நாகராஜ் சொன்னான். “உங்கம்மாவை உடனடியாக சி அல்லது டி ப்ளாகில் ஏதாவது ஒரு வீட்டிற்குப் போய்ப் பேசிக் கொண்டிருக்கச் சொல். சீக்கிரம்

இத்தனை மட்டும் சொல்லி விட்டு இணைப்பை நாகராஜ் துண்டித்து விட்டான். ஆபத்தின் எச்சரிக்கையை உணர்ந்த நரேந்திரன் உடனடியாகத் தாயிற்குப் போன் செய்தான். “அம்மா உடனடியா வீட்டை விட்டு வெளியே போங்க. சி அல்லது டி ப்ளாக்ல எதாவது வீட்டுல பேசிகிட்டிருங்க. கேள்வி எதுவும் கேட்காதீங்க. சீக்கிரம் போங்க ப்ளீஸ்...”

மகன் குரலை வைத்தே நிலைமையை உணர்ந்த அவன் தாய் சுமித்ராவும் வேறெதுவும் பேசாமல் உடனடியாக அவன் சொன்னபடியே தங்கள் ஃப்ளாட்டை விட்டு வெளியேறியிருந்தாள். டி ப்ளாகில் இருக்கும் அவளுக்குப் பழக்கமான வயதான தம்பதிகளைப் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருக்கையில் தான் அந்த வெடிகுண்டு வெடித்த சத்தம் அவள் காதை அறைந்தது.  

நன்றி சொன்ன நரேந்திரனிடம் நாகராஜ் சொன்னான். “காப்பாற்றுபவன் இறைவன். நான் வெறும் கருவி தான். ஆனால் கருவிக்கும் நல்லவர்களுக்கு உதவ முடிவதில் ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது...”

அதோடு அவன் இணைப்பைத் துண்டித்து விட்டான். நரேந்திரன் இருந்த இடத்திலிருந்தே கண்கலங்க இறைவனுக்கும் நாகராஜுக்குமாய் சேர்த்து கைகூப்பினான்.


ஜீம் அகமதுக்கு அந்தக் கொலையாளி போன் செய்தான். ”வேலை முடிந்தது தலைவா

அஜீம் அகமது திருப்தியுடன் டிவி ரிமோட்டை எடுத்தான். டெல்லியில்அடுக்குமாடிக் குடியிருப்பில் வெடிகுண்டு வெடித்ததுஎன்ற தலைப்பில் அந்தச் செய்தி எல்லா செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு அறிவிப்பாளர் பரபரப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். “வெடிகுண்டு வெடித்த ஃப்ளாட் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்குச் சொந்தமானது. அந்த ஃப்ளாட்டும் அதற்கடுத்த ஃப்ளாட்டும் பாதிக்கும் மேல் எரிந்து சாம்பலாயிருக்கிறது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்த விவரங்கள் தீயணைப்பு முடிந்தவுடன் தான் தெரியவரும்....”

பாவம் மகேந்திரன் மகன்.... அப்பனைப் போலவே நிஜமாகவே துரதிர்ஷ்டசாலி தான். அஜீம் அகமதைப் பகைத்துக் கொண்டவர்கள் யாரும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வழியில்லைஎன்று மனதினுள் சொல்லிக் கொண்டு டிவியை அணைத்து விட்ட அஜீம் அகமது இங்கிருந்து தப்பித்துப் போகும் இடத்திலும் ஒரு நாளுக்கு மேல் தங்கப் பிரியப்படவில்லை. கண்டிப்பாக ரா வீறு கொண்டு எழும். கூடுதல் வேகத்தோடு அவனைத் தேடும். அதனால் நாளை மறுநாள் காலை இந்தியாவிலிருந்து வெளியேற ஏற்பாடுகள் இப்போதே செய்ய ஆரம்பித்தான். அதை அவன் இன்னும் ஜனார்தன் த்ரிவேதியிடம் கூடச் சொல்லவில்லை. வெளிநாட்டில் அவன் இருப்பிடத்துக்குப்  போய்ச் சேர்ந்தபின் சொன்னால் போதும்....

ஜீம் அகமதின் சகா ஒருவன் தன் இருப்பிடத்திலிருந்து  இரவு 11.26க்குக் கருப்புக் காரில் கிளம்பிய தகவல் நரேந்திரனுக்கு வந்தது. அந்தத் தகவலைஆபரேஷன் ஏஸ்கொயர்செயல்வீரர்களுக்கு உடனடியாக அவன் அனுப்பி வைத்தான். அந்த சகா நேரடியாக அஜீம் அகமதை அழைத்துப் போக வந்தால் இரவு 12.10க்குள் வந்து விடலாம். வேறெங்காவது போய் வேறெவனையாவது அழைத்து வருவதாய் இருந்தால் மேலும் தாமதமாகலாம்....

அஜீம் அகமதின் சகா வேறெங்கும் போகாமல் நேராக அஜீம் அகமது தங்கி இருக்கும் இடத்துக்கே வந்தான் என்றாலும் குறைந்த வேகத்திலேயே வந்தான். யாராவது பின் தொடர்கிறார்கள என்று அடிக்கடி அவன் பார்த்துக் கொண்டான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை. எங்கே போகிறான் என்பது தெரிந்தவர்கள் பின் தொடரும் அவசியமில்லை என்பதை அறியாத அவன் நிம்மதியாக 12.22 மணிக்கு அஜீம் அகமது இருக்கும் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான்.

தொழிற்சாலையின் அலுவலகத்தில் இருந்து வேவு பார்த்துக் கொண்டிருப்பவன் பரபரப்புடன் பார்க்க ஆரம்பித்தான்.  அஜீம் அகமதை ஒரு முறை நேரில் பார்க்கும் ஆர்வம் அவனுக்குள் இந்த இரண்டு நாட்களில் அதிகமாயிருந்தது. அந்தப் பகுதியின் மிக முக்கிய பகுதிகளில் ரகசியக் கேமிராக்கள் வைத்து கண்காணிப்பு அறையிலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்த நரேந்திரனும் தன் எதிரியை நேரில் பார்க்க மிக ஆர்வமாக இருந்தான். அவர்கள் மனநிலையிலேயே மற்றவர்களும் இருந்தார்கள்.

அஜீம் அகமதின் சகா வெளியிலேயே காரை நிறுத்தினான்.  அவன் காரின் கண்ணாடிக் கதவுகளை மேலேற்றியே இருந்தான். அவன் காரிலிருந்து கீழே இறங்கவில்லை. கூர்க்கா எழுந்து வந்து காரின் பின் கதவைத் திறந்து வைத்தபடி நின்றான். அடுத்த நிமிடம் மின்னல் வேகத்தில் சத்தமில்லாமல் அஜீம் அகமது ஓடி வருவது தெரிந்தது. அவன் பெரிய தொப்பி ஒன்றை அணிந்திருந்தான். அவன் தலை குனிந்தபடியே ஓடி வந்ததால் முகம் சரியாகத் தெரியவில்லை.

லாவகமாக அவன் காரின் பின்சீட்டில் ஏறிக் கொண்டு கதவைச் சாத்திக் கொள்ள கார் வேகமாக அங்கிருந்து கிளம்பியது. வரும் போது குறைவான வேகத்தில் ஓட்டி வந்த சகா இப்போது மிக வேகமாகக் காரை ஓட்ட ஆரம்பித்தான்.  

கண்காணிப்பு அறையில் பரபரப்புடன் அவன் எந்த வழித்தடத்தில் போவான் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அந்தக் கார் நாலாவது வழித்தடத்தில் இருந்த கேமிராவில் தென்பட்டது.

நாலாவது வழித்தடம் என்ற தகவல் உடனடியாக எல்லாருக்கும் அனுப்பப்பட்டது. நரேந்திரனுக்கு அன்வரை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. காரணம் அவன் முன்பே அஜீம் அகமது நான்காவது வழித்தடத்தில் தான் போவான் என்று அனுமானித்து வைத்திருந்தான். அதனால் தான் அவன் தன்னை அந்த வழித்தடத்திலேயே இருத்தும்படி நரேந்திரனிடம் கோரிக்கையும் வைத்திருந்தான்.

(அடுத்த வாரம் முடியும்) 
என்.கணேசன்





Monday, May 29, 2023

யாரோ ஒருவன்? 140



பீம்சிங்குக்கு காளிங்க சுவாமி சொன்னது ஆச்சரியத்தைத் தந்தாலும் அவன் விளக்கம் எதுவும் கேட்காமல் ஜீப் டிரைவரிடம் தன்னை லக்ஷ்மண் ஜூலாவிற்கு அழைத்துப் போகச் சொன்னான்.

சிறிது நேரத்தில் ஜீப் லக்ஷ்மண் ஜூலாவை அடைந்தது. லக்ஷ்மண் ஜீலா ரிஷிகேசத்தின் எல்லையில் கங்கையின் இரு கரைகளுக்கு இடையே இருக்கும் நீண்ட தொங்கும் பாலம். சுற்றுலாப்பயணிகள் அதிகம் கண்டு ரசிக்கும் ஒரு இடம். அந்த நேரத்தில் அங்கே கூட்டம் அதிகமில்லை...

காளிங்க சுவாமி அவன் மனதினுள் சொன்னார். “நீ உன் பையிலிருந்து அந்த ரத்தினத்தை வைத்திருக்கும் மஞ்சள் துணியை எடுத்துக் கொள். பின் இறங்கி அந்தப் பாலத்தில் நடந்து போ..”

பீம்சிங் அவர் சொன்னது போலவே செய்தான். கிட்டத்தட்ட அந்தப் பாலத்தின் மையப்பகுதியை அவன் அடைந்த போது அவர் சொன்னார். “இங்கே நில்

அவன் நின்றான். “வலது பக்கம் திரும்பி கங்கையைப் பார்த்தபடி நில்அவன் அப்படியே செய்தான். “மஞ்சள் துணியிலிருந்து அந்த ரத்தினத்தைக் கையில் எடுத்துக் கொள்பீம்சிங் அப்படியே மஞ்சள் துணியிலிருந்து அந்த நாகரத்தினத்தைக் கையில் எடுத்துக் கொண்டான்.

முதலில் மனதில் உன் அனுமாரை வணங்கு. பின் காளியை வணங்கு.  பின் நாகதேவதையை வணங்கு. பின் கங்கையை வணங்கு….”

அப்படியே ஓவ்வொருவராக நினைத்து பீம்சிங் வணங்கினான். காளிங்கசுவாமி பின் சொன்னது அவனைத் திகைக்க வைத்தது. “அந்தக் கல்லை பலம் கொண்ட வரைக்கும் தூரத்தில் கங்கை நீரில் தூக்கி எறி

திகைத்த பீம்சிங் சிறிது தயங்கினான். “யோசிக்காதே பீம்சிங். அதன் பாதையில் இதுவரையில் தான் உன் பங்கு. அதன் அடுத்த பயணத்தை கங்கை பார்த்துக் கொள்வாள்… இனி இந்த விஷயத்தில் நாம் செய்ய முடிந்தது எதுவுமில்லை....”

பீம்சிங் திகைப்பு மாறாதவனாய் அந்த விசேஷ நாகரத்தினக்கல்லை பலம் கொண்ட வரை தூரமாக வீசி எறிந்தான். சூரிய வெளிச்சத்தில் அந்தக் கல் விசேஷமாக ஜொலித்தபடியே போய் தூரத்தில் கங்கை நீரில் மூழ்கியது.

பின் பக்கம் திரும்பி நின்று மாகாளியை வணங்கியபடி அந்த மஞ்சள் துணியை கங்கையில் போடு 

பீம்சிங் அப்படியே செய்தான். காளிங்க சுவாமி சொன்னார். “நீ இனி உன் வீட்டுக்குக்குப் போய்க் கொள். உனக்கு வர வேண்டிய மீதி ஏழு லட்சத்தை நான் உனக்கு அனுப்பி வைக்கிறேன்…”

அந்த விசேஷ நாகரத்தினத்தை கங்கையில் வீசியவுடனேயே பெருத்த நிம்மதி அடைந்திருந்த பீம்சிங் சொன்னான். “சுவாமிஜி. எனக்கு பணம் எதுவும் வேண்டாம். அந்த மூன்று லட்சத்தையும் கூட திருப்பித் தர நான் தயார்…. அஜீம் அகமது என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வது?”

காளிங்க சுவாமி சொன்னார். “சுவாமிஜி சொன்னபடி சேர்த்து விட்டேன் என்று சொல். அது போதும்.”

அவன் மனதிலிருந்து காளிங்க சுவாமி இருந்த சுவடில்லாமல் மறைந்து போனார். திரும்பி நடந்த போது பீம்சிங்குக்கு ஏனோ நிம்மதியாக இருந்தது.  ஆனால் ஒரு நிமிடம் கழித்து அவனுக்குத் தோன்றியது. “பைத்தியக்காரத் தனமாக எதை எதையோ நினைப்பதற்குப் பதிலாக ஐந்து கோடி ரூபாய் வேண்டும் என்று நினைத்திருந்தால் அந்தப் பணம் கிடைத்திருக்குமோ? அப்படிக் கிடைத்திருந்தால் மீதி வாழ்நாள் பூராவும் பணக்கஷ்டம் வராமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்...”

அவன் அந்த ரத்தினக்கல்லை வீசி எறிந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தபடி ஒரு நிமிடம் நின்றிருந்து விட்டு மறுபடி நடக்க ஆரம்பித்தான். ‘அந்தப் பணம் வந்தவுடன் கூடவே என்னென்ன எண்ணமெல்லாம் வந்திருக்குமோ, என்னென்ன பாடுபட்டிருப்பேனோ யாருக்குத் தெரியும்? இன்றைக்குப் பைத்தியம் பிடிக்காமல் தப்பித்ததே அனுமாரின் கருணை தான்...”


ரேந்திரன் அஜீம் அகமதைக் கொல்வதற்காக ஏழு மறைவிடங்களில் குறி பார்த்துச் சுடக்கூடிய வல்லவர்களான இரண்டிரண்டு ஆட்களை நிறுத்தியிருந்தான். ஏழு இடங்களில் மூன்று வீட்டு மொட்டைமாடிகள், மூன்று பாதி கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், ஒன்று ஒரு பெரிய குப்பைத் தொட்டி. நான்கு பைக்குகள், மூன்று கார்கள் எந்த நேரத்திலும் உடனடியாகப் பயன்படுத்தும் தயார் நிலையில் மறைவிடங்களில் இருந்தன. கார்களுக்குள்ளேயும், பைக்குகளுக்கு அருகிலேயும் ஆட்கள் தயாராக ஒளிந்திருந்தார்கள். அஜீம் அகமது அந்த வீட்டை விட்டுக் கிளம்பினால் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை அவன் கடப்பதற்குள் சுட்டுக் கொன்று விட வேண்டும் என்பது அவர்கள் இலக்காக இருந்தது. பிடித்துக் கைது செய்வதும், அவனை உயிரோடு வைத்திருப்பதும் தேவையில்லாமல் பிரச்னைகளை வளர்த்துக் கொள்வதாக இருக்கும் என்று ராவின் தலைவரும், மற்ற உயரதிகாரிகளும் எண்ணினார்கள்.   

அஜீம் அகமது தப்பிப்பதானால் அவர்கள் தகவலைக் கசிய விட்ட அன்றைய இரவே அதைச் செய்வான் என்பது நரேந்திரனின் அனுமானமாக இருந்தது. தகவல் தெரிந்த பின் அங்கிருந்து தப்பிக்க காலம் தாழ்த்துமளவு அஜீம் அகமது முட்டாள் அல்ல. எந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பான் என்ற கேள்விக்கு அவன் பைக்கில் தப்பிப்பதானால் தொழிற்சாலையின் இரவு ஷிஃப்ட் துவங்கும் பத்து மணியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நரேந்திரன் முதலில் நினைத்தான். தொழிலாளியின் சீருடையில் அவன் இருந்தால் அந்த நூற்றுக் கணக்கானவர்களின் வாகனங்களோடு அவனும் கலந்து கொண்டால் தப்பிப்பது அஜீம் அகமதுக்குச் சுலபமாக இருக்கும். ஆனால் அப்படி வெளிப்படுவது அவன் சுடப்பட்டு சாவதற்கும் வழிவகுக்கும் என்று நினைக்க வாய்ப்பு இருப்பதால் அவன் திறந்தவெளியில் போகாமல் காரில் போவதையே புத்திசாலித்தனமாக நினைப்பான் என்று நரேந்திரனுக்குப் பிறகு தோன்றியது. அப்படிக் காரில் தப்பித்துப் போவதானால் தொழிற்சாலை ஷிஃப்ட் நேரங்கள் அவனுக்கு வேகமாகத் தப்பிக்கச் சாதகமாக இருக்காது என்பதால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அதிகாலை நான்கு மணிக்குள் அதிக வாகனப்போக்குவரத்து இல்லாத நேரம் சாதகமானது என்று அஜீம் அகமது நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று நரேந்திரன் கணக்குப் போட்டான்.

அப்படி அஜீம் அகமது தப்பிக்க அவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அவன் ஆட்களில் மூன்று பேர்கள் அவனுக்கு உதவலாம் என்பதால் அந்த மூன்று பேரையும் அதிரகசியமாகக் கண்காணிக்க அவர்கள் வசிக்கும் இடங்களில் ஏற்பாட்டைச் செய்திருந்தான்.

அன்று மதியம் நடந்த ரகசியக் கூட்டத்தில் ”ஆபரேஷன் ஏஸ்கொயர்” என்று அவர்கள் பெயர் வைத்திருந்த திட்டத்தில் பங்கு பெறும் செயல்வீர்ர்களிடம் நரேந்திரன் அவனும், அன்வரும், ஜெய்தீப்பும், விக்டருமாகச் சேர்ந்து தீட்டியிருந்த திட்டத்தை விளக்கினான். திரையில் அந்தப் பகுதியின் பெரிய வரைபடத்தைக் காட்டி அஜீம் அகமது எந்தெந்த வழிகளில் போகும் வாய்ப்பு இருக்கிறது என்று முக்கிய ஐந்து வழித்தடங்களைக் காட்டிய நரேந்திரன் எந்தெந்த வழியில் போனால் எவரெவர் எங்கு எப்படித் தாக்க வேண்டும் என்று சொன்னான்.

திட்டத்தில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதில்களும் தரப்பட்டன. ஒரு இடத்தில் அவர்கள் திட்டத்தில் சிறு குறையிருப்பதை ஒரு செயல்வீரன் சுட்டிக் காட்டிய போது அவனைப் பாராட்டிய நரேந்திரன் உடனே அதற்குத் தேவையான மாற்றத்தையும் உடனடியாகச் செய்தான். எல்லோரும் எந்தச் சந்தேகமும் இல்லாதபடித் தெளிவடைந்த பிறகு அங்கிருந்து கலைந்தார்கள்.   


ஜீம் அகமது ஒரு முடிவுக்கு வந்தவுடன் உடனடியாக அவனுடைய ஆட்களுக்குப் போன் செய்து என்ன திட்டம் எந்த நேரம் என்று தெரிவித்தான். பின் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள ஆரம்பித்த அவனுக்கு மகேந்திரன் மகன்  அவன் நோய்டாவில் இருப்பதை அறிந்த பின் மும்முரமாக தேட ஆரம்பித்திருப்பான் என்று நினைக்கையில் எரிச்சலாக இருந்தது. “இவன் அடங்க மாட்டேன்கிறானே. காளிங்க சுவாமி எப்போது வேலையை ஆரம்பிப்பது, எப்போது இவன் அடங்குவது” என்று நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்த அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக ஒரு எண்ணுக்குப் போன் செய்து “மகேந்திரன் பொண்டாட்டியை இன்னைக்கு சாயங்காலம் முடிச்சுடு” என்று சொன்னான். காளிங்க சுவாமி வேலையை ஆரம்பிக்க நேரமானாலும் பரவாயில்லை. இப்போதைக்கு மகேந்திரன் மகன் கவலையில்லாமல் அஜீம் அகமதுக்கு எதிரான வேலைகளைப் பார்க்க வேண்டாம்….

(தொடரும்)
என்.கணேசன்  

தற்போது விற்பனையில்