சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 28, 2016

எல்லோரும் என்பது யார் யார்?


“எல்லோரும் சொல்கிறார்கள்”,  “எல்லாருக்கும் தெரியும்”,  “எல்லாரும் என்ன நினைக்கிறார்கள் என்றால்... முதலான வார்த்தைகளைப் பலரும் அடிக்கடி பயன்படுத்துவதை அனைவரும் அடிக்கடி கேட்கிறோம். அப்படி எல்லோரும் சொல்கிறார்கள் என்று ஆரம்பித்துச் சொல்லும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பெரும்பாலும் நல்ல விஷயங்களாய் இருப்பதில்லை என்பதும், நல்லெண்ணத்தில் சொல்லப்படுவதாகவும் இருப்பதில்லை என்பதும் நம் அனுபவமாக இருக்கிறது.

எல்லாரும் உன்னைப் பற்றி இப்படி நினைக்கிறார்கள்”, எல்லாரும் இப்படி எல்லாம் கேவலமாய் பேசுகிறார்கள்”, ”எல்லாரும் சிரிக்கிறார்கள்”  என்று சொல்பவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்தக் கருத்துக்களையே அப்படி நம்மிடம் தெரிவிக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டாலும் ஓரிருவர் அல்லது அதிகபட்சமாய் ஐந்தாறு பேர் சொன்னதை ஒட்டு மொத்த சமூகமும் சொல்வதாக ஒரு தோற்றத்தை உண்டுபண்ண முயல்கிறார்கள்.

இப்படி எல்லோர் மனங்களையும், கருத்துக்களையும் அறிந்து அவர்களுடைய பிரதிநிதிகளாய்  நம்மிடம் வந்து தெரிவிக்கும் சமூக சேவகர்களிடம் நாம் சில கேள்விகள் கேட்கத் தவறி விடுகிறோம். எல்லோரும் என்றால் குறிப்பாக யார் யார்?, சுமார் எத்தனை பேர்?, அதையேன் உன்னிடம் வந்து சொல்கிறார்கள்?, நீ அதைப்பற்றி அவர்களிடம் கருத்துக் கேட்கப் போனாயா என்றெல்லாம் கேட்டுப் பாருங்கள். உற்சாகம் வடிந்து உஷாராகிப் பின் வாங்கி விடுவார்கள். அது மட்டுமல்ல, இனி ஒருமுறை அந்த வாசகங்களோடு உங்களை நெருங்க மாட்டார்கள்.

 மற்றவர் கருத்துகளை அலட்சியம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஓரிருவர் கருத்துக்களை சமூகத்தின் கருத்தாக எண்ணி அதன்படி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி மாற்றிக் கொண்டே போனால் நம் சுயத்தை இழந்து, எவரோ சிலர் கருத்தின்படி இயங்கும் கைப்பாவையாக நாம் மாறிவிடுவோம். எது சரியோ, எது நம் தகுதிக்கு உகந்ததோ, அதைச் செய்ய வேண்டும், மாறானதைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்கிற அளவுகோல் வைத்தே நாம் இயங்குவோமானால் நம் அடையாளத்தையும், மரியாதையையும் நாம் என்றுமே தக்க வைத்துக் கொள்ளலாம்.
  

-என்.கணேசன்

4 comments:

  1. This is the original picture of the nasty cowards who enjoy in others problems. I thank you very much Sir, for your kind advice.

    ReplyDelete
  2. நன்றாகச் சொன்னீர்கள்.

    சீதாலக்ஷ்மி

    ReplyDelete