சத்ரபதி நாவல்
படித்து முடித்து எனக்கு வந்த முதல் விரிவான விமர்சனம் இது. நிறை, குறைகள், ரசித்தது, ரசிக்காதது இரண்டையுமே சேர்த்து ஒரு முழுமையான விமர்சனம் எழுதிய திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
- என்.கணேசன்
சத்ரபதி நாவல் விமர்சனம்
”ஐயா தங்களுடைய தீவிர ரசிகன் நான். அமானுஷ்யனில் ஆரம்பித்து இருவேறு உலகம் வரை ஒவ்வொரு நாவலையும் ரசித்துப் படித்தவன். ஆனால் தங்களுக்கு நான் கருத்து தெரிவித்ததில்லை. சத்ரபதியைப் படித்து முடித்த பின் உடனே நான் உணர்ந்ததைச் சொல்லும் ஆவல் ஏற்பட்டது. ஏனென்றால் சிவாஜியை அவன் பிறப்பிலிருந்து நேரில் பார்த்து அவன் வாழ்க்கையோடு பயணம் செய்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. நாவல் அருமையிலும் அருமை.
உங்கள் மற்ற நாவல்கள் போல் மளமளவென்று படித்து நகர முடியவில்லை. நிறைய வரலாற்றுத் தகவல்கள் இடையிடையே நிறைய கொடுத்திருப்பதால் நிதானமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. புரிந்து கொண்டபின் அந்தக் காலத்தில் பயணம் செய்வது போலவே உணர முடிந்தது.
உயிருக்குப் பயந்து சிவாஜியின் பெற்றோர் ஓடி வரும் கட்டத்தில் ஆரம்பிக்கும் நாவல் சிவாஜியின் முடிசூட்டு விழாவில் முடியும் வரை ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே நிற்கிறது. ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியிலும் அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருப்பதால் அந்தக் கதாபாத்திரங்களையும் சரித்திரத்தையும் இயல்பாய் புரிந்து கொள்ள முடிந்தது.
ஷாஹாஜி, ஜீஜாபாய், தாதாஜி கொண்டதேவ், சிவாஜியின் நண்பர்கள், ஆதில்ஷா சுல்தான்கள், அப்சல்கான், செயிஷ்டகான், ஔரங்கசீப், ஜஹானாரா, ஜெப் உன்னிசா கேரக்டர்கள்
மனதில் தங்கி விட்டார்கள். சிவாஜிக்கு ரொட்டி கொடுத்த பாட்டி போன்ற சின்னச்
சின்ன கேரக்டர்களும் சூப்பர்.
சின்ன எடிட்டிங் தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன என்றாலும் ஒட்டு
மொத்தத்தில் ஒரு மகாபுருஷனை பிரம்மாண்டமாய் செதுக்கி வைத்திருக்கிறீர்கள். அவனோடு வாழ்வது போலவே உணர
வைத்ததற்கு நன்றி.
நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள்:
ஜீஜாபாய் அயூப்கான் என்ற ஏமாற்றுக் கோட்டைத் தலைவனைப் பழி வாங்கும் இடம்.
ஜாவ்லி அரசனை சிவாஜியின் ஆட்கள் நன்றாய் கலாய்த்து விட்டுக் கொல்லும் இடம்
செயிஷ்டகான் மீதான தாக்குதலில் நகைச்சுவையும் அதற்குப் பின் சிவாஜியின் குழு
தப்பித்த விதமும்.
சிவாஜி ஆக்ரா சென்று சேர்ந்ததிலிருந்து அங்கிருந்து தப்பித்து வருவது வரை
நிகழ்ச்சிகள் நல்ல விறுவிறுப்பு. திட்டமிட்ட விதமும், அதன் பின் ஔரங்கசீப் போலத்கானை
விசாரித்து உண்மையாக நடந்ததைத் தெரிந்து கொள்ளும் நிகழ்ச்சியும் அருமை..
சாலேர் கோட்டையைத் தக்க வைக்க சிவாஜி செய்த யுத்த யுக்திகளால் மும்முனையில்
வெற்றி பெற்ற சம்பவம்.
ஔரங்கசீப்பின் பழைய காதலை அறிந்து அவன் மகள் ஜெப் உன்னிசா தந்தையைச்
சந்தித்துப் பேசும் இடம். முடிவில் ஔரங்கசீப் மீது அவளைப் போலவே நமக்கும்
பச்சாதாபம் ஏற்படுகிறது. (உங்கள் நாவல்களில் என்னால் வில்லன்களைக் கூட வெறுக்க
முடிந்ததில்லை. அப்படி அவர்களைச் சித்தரிப்பீர்கள். இந்த நாவலிலும் ஔரங்கசீப் கேரக்டரின் அந்த
குறிப்பிட்ட இடம் சூப்பர்)
ஆக்ராவிலிருந்து தப்பித்து வரும் சிவாஜி ஒரு மூதாட்டி வீட்டில் தங்கும்
நிகழ்வு. அந்த மூதாட்டியின் மனமும், சிவாஜியின் பதில் பரிசும் நெகிழ வைத்த இடங்கள்.
நாவலில் என்னால் ரசிக்க முடியாத விஷயங்கள்:
மராட்டியப் பெயர்கள் ஒரே போல் இருப்பது போலவே தெரிகின்றன. சில இடங்களில் குழப்பமாக
இருக்கிறது. ”
-
சங்கர
சுப்பிரமணியன்