சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 28, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்-1




  • சாமி காட்டுமே தவிர ஊட்டாது.

  • அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

  • இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.

  • உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.

  • கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.

  • தெய்வம் பாதி திறமை பாதி.

  • தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.

  • ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.

  • சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.

  • தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.

  • அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.

  • மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.

  • கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.

  • கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.

  • பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.

  • குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.

  • பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.

  • அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.

  • எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.

  • அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.

  • முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.

  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

  • அக்காள் இருந்தால் மச்சான் உறவு.

  • முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.

தொகுப்பு: என்.கணேசன் 

Monday, May 21, 2012

பிரச்சினைகளை வளர்த்தாதீர்கள்!



ண்டைய சீனத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் வடக்கு சுங் வம்ச சக்கரவர்த்திகள் ஆண்ட காலத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி இது. ஒரு எல்லை மாகாணத்தில் கான் யுவான் (Con Yuon) என்ற அதிகாரி மேயராகப் பொறுப்பேற்ற போது மாகாணத் தலைமையிடத்தில் போலீஸ் மற்றும் இராணுவ வீரர்கள் யாருமே இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டார். அவரது அதிகாரிகளை விசாரித்த போது இராணுவமும், போலீஸும் மாகாணத்தின் ஒரு எல்லையில் மூண்ட கலவரத்தை அடக்கச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அவர் பொறுப்பேற்ற மூன்றாவது நாளில் இன்னொரு எல்லையில் உள்ள, அவரது மாகாண அதிகார வரம்புக்கு உட்பட்ட, பழங்குடி மக்கள் ஈட்டி, வில் போன்ற ஆயுதங்களுடன் நகர வாயிலில் குவிந்து இருக்கும் செய்தி வந்தது. கான் யுவான் தன் துணை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். துணை அதிகாரிகள் நகரத்தின் பிரதான கதவை இழுத்து மூடி பக்கத்து மாகாணங்களிடம் இருந்து இராணுவ உதவி பெறுவதே உத்தமம் என்றார்கள். அப்படி இராணுவ உதவி வரும் வரை தாக்குப் பிடிக்க முடிந்தால் அது பெரியதொரு அதிர்ஷ்டம், அதைத் தவிர வேறு வழியில்லை என்றார்கள்.
கான் யுவான் கேட்டார். “அந்தப் பழங்குடியினர் திடீர் என்று போராடக் காரணம் என்ன?
அவரது துணை அதிகாரிகள் படிப்பறிவற்ற பழங்குடி மக்களுக்கு அதற்கெல்லாம் காரணம் பெரியதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்கள். அற்ப சொற்ப காரணங்களுக்காகக் கூட அவர்கள் போராடத் துணிபவர்கள் என்று சொன்னார்கள். அதனால் முதல் வேலையாகப் பக்கத்து மாகாணங்களில் இருந்து இராணுவ உதவி பெற ஆளனுப்ப அவசரப்படுத்தினார்கள்.

கான் யுவானோ முதலில் பழங்குடி மக்களைச் சந்திக்க ஆளனுப்புவதே சரி என்று சொன்னார்கள். காரணம் அறியாமலேயே அவர்களை அடக்கி போராட்டத்தைத் தோல்வியடையச் செய்தாலும் இது போன்ற புரட்சிகள் மறுபடி வெடிக்க சாத்தியமுண்டு என்பதால் முதலில் யாராவது சென்று அவர்களைச் சந்தித்து என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளச் சொன்னார். பழங்குடி மக்களைச் சென்று சந்திப்பதில் சிறிதும் நாட்டமில்லாத அவர்கள் அவர் சொல்லுவது யதார்த்தத்திற்கு ஒத்து வராதது என்று கருதினார்கள். யாரும் போவதற்குத் தயங்கினார்கள். ஒரு சிலராகப் போய் பழங்குடியினரைச் சந்திப்பது ஆபத்தானது என்றார்கள்.

அவர்கள் தயக்கத்தைக் கண்ட மேயர் கான் யுவான் தானே சென்று பழங்குடியினரைச் சந்திப்பதாகச் சொன்னார். அவர்கள் அவரைக் கூடுமான வரை தடுக்க முயன்றார்கள். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. துணைக்கு இரண்டு வயதான வேலையாட்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார். அவரது துணை அதிகாரிகள் இந்த முட்டாள் மேயர் திரும்பவும் உயிரோடு திரும்ப மாட்டார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஒரு படையை எதிர்பார்த்திருந்து அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்த பழங்குடி மக்கள் ஒரு தனிமனிதர் குதிரையில் இரு வேலையாட்களுடன் வந்த போது ஆச்சரியப்பட்டார்கள்.

கான் யுவான் அவர்களிடம் சொன்னார். “நான் இந்த மாகாணத்திற்கு புதிய மேயராக சமீபத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டவன். உங்களுடைய போராட்டத்திற்குக் காரணத்தை அறிய விரும்புகிறேன். தயவு செய்து தங்கள் தலைவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்

அவர்கள் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது. அவர்கள் அவரை அவர்களுடைய தலைவரிடத்தில் அழைத்துச் சென்றார்கள். நகர எல்லையைக் கடந்து காட்டிற்கு பழங்குடியினர் தலைவரை சந்திக்கச் செல்வதில் ஆபத்தை உணர்ந்த அவருடைய வயதான வேலையாட்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லி நின்று விட்டார்கள். ஆனால் கான் யுவான் தனியாகவே பழங்குடியினர் தலைவரை சந்திக்க குதிரையில் பயணத்தைத் தொடர்ந்தார்.

பழங்குடியினர் தலைவருக்கும் இவரைக் கண்டவுடன் வியப்பு. அவரிடம் கான் யுவான் சொன்னார். “நான் புதியதாக மேயராக பதவி ஏற்றவன். முறைப்படி தாங்கள் தான் என்னை வந்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவசர நிலைமை காரணமாக நானே இங்கு வர வேண்டியதாகி விட்டது. பரவாயில்லை. உங்கள் இன மக்கள் திடீர் என்று போராட்டம் நடத்தக் காரணம் என்ன?

அவரைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்த பழங்குடி மக்கள் தலைவர் முந்தைய மேயரின் ஆட்சியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அவர் நடத்திய முறைகேடுகளையும், பழங்குடி மக்களுக்கு விதித்த அநியாய அதிக வரிகளையும், அதனால் அவர்களுக்கு வரப்போகும் பனிக்காலத்திற்குத் தேவையான உணவின்மையையும், ஆடுமாடுகள் இல்லாததையும் விளக்கினார்.

கான் யுவான் அவர்கள் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்தார். “முந்தைய மேயர் உங்களிடம் அநீதியாக நடந்து கொண்டதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இப்போது நீங்கள் என் பொறுப்பில் உள்ளவர்கள். உங்களுக்கு நல்லபடியாக வாழ வழி செய்து தருவது என் கடமை. நான் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்து தருகிறேன். இப்போது இருட்டி விட்டது. அதனால் இன்று உங்களுடன் தங்கி விட்டு நாளை காலை செல்கிறேன். என்னுடன் உங்கள் ஆட்களை அனுப்பினால் அவர்களுடன் உணவுப் பொருள்களையும், கால்நடைகளையும் அனுப்பி வைக்கிறேன்

அன்று அவர்களுள் ஒருவராக அவர்களுடனே தங்கி மறு நாள் அவர்களில் சிலரை அழைத்துக் கொண்டு கான் யுவான் நகரத்திற்குத் திரும்பினார். அவர்களுடன் அவர் வருவதைக் கண்ட அவருடைய துணை அதிகாரிகள் அவரைப் பணயக்கைதியாக அந்தப் பழங்குடியினர் அழைத்து வருவதாக எண்ணிக் கொண்டு அவர்களைத் தாக்க ஏற்பாடுகள் செய்தார்கள். ஆனால் கான் யுவான் அவர்களைத் தடுத்து உண்மையை விளக்கி பல டன்கள் உணவு தானியங்களையும், நூற்றுக் கணக்கான ஆடுமாடுகளையும் அந்தப் பழங்குடி மக்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அவரைத் தெய்வமாகப் போற்றிய பழங்குடி மக்கள் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும், என்ன உதவி அவருக்குத் தேவைப்பட்டாலும் தங்கள் உயிரைக் கொடுத்தாவது செய்வோம் என்று வாக்குறுதி தந்தனர். அது போலவே அவர் மேயராக இருந்த வரை நன்றியுடன் இருந்தார்கள்.

பல சமயங்களில் பிரச்சினைகளுக்கு உண்மையான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு சரிவர அணுகினாலே அவற்றில் பாதிக்கு மேல் சரியாகி விடும். நேரடியான அறிவு பூர்வமான அணுகுமுறையால் மலை போன்ற பிரச்சினைகளும் நம்மால் சரி செய்யக் கூடிய அளவுக்கு இலகுவாகி விடும். அதே நேரத்தில் சிறிய பிரச்சினைகள் கூட மனிதர்களின் அலட்சியத்தாலும், ஈகோவினாலும், முட்டாள்தனத்தாலும் பூதாகரமாக மாறி விடுவதுண்டு.

இந்த உதாரணத்தில் தன் துணை அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு கான் யுவான் படை திரட்டி அந்தப் பழங்குடி மக்களை ஒடுக்க நினைத்திருந்தால் ஏராளமான உயிர்ச்சேதம் இரு பக்கத்திலும் நிகழ்ந்திருக்கும். அப்படியே அவர்கள் ஒடுக்கப்பட்டாலும் கூட அது தற்காலிகமாகவே இருந்திருக்கும். சரியான சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் அரசாங்கத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே என்றும் இருந்திருப்பார்கள். கான் யுவான் தன் தலைமைப் பண்பினாலும், அறிவு கூர்மையாலும் பெரிய பிரச்சினையை சமாளித்ததோடு அவர்களைத் தனக்கு உதவக்கூடிய பெரும்பலமாக ஆக்கிக் கொண்டதில் இராஜதந்திரியாகயாகவும், நல்ல தலைவனாகவும் மாறி விட்டார். அவருடைய துணை அதிகாரிகள் ஆரம்பத்திலும் சரி, கடைசியிலும் சரி தவறான முடிவுகளை எடுப்பவர்களாகவே இருந்தாலும் அதை அனுமதிக்காமல் சரியாக பிரச்சினையை கான் யுவான் அணுகியதால் அப்போதைக்கு மட்டுமல்லாமல் பிற்காலத்திலும் பழங்குடி மக்கள் மூலமாக வர முடிந்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி அவர் வைத்து விட்டார். 

எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. பல சமயங்களிலும் எதிர்ப்பிற்கு வலுவான நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும். அதை அலட்சியம் செய்வது யாருக்கும் நல்லதல்ல. உண்மையைக் காண மறுப்பதும், ஒரு சூழ்நிலை பிரச்சினையாக மாற அனுமதிப்பதும் முட்டாள்தனம். சிறியதாக இருக்கையில் கையால் கிள்ளி விடுவதை விட்டு விட்டு மரமாக அனுமதித்துப் பின் கஷ்டப்பட்டு கோடாரியால் வெட்டி வீழ்த்துவது அறிவுடமையும் அல்ல, இனிமையானதுமல்ல.

சிந்தித்துப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக கோபித்துக் கொதித்தெழுவது எந்தப் பிரச்சினையையும் வளர்த்திக் கொண்டே போகுமே ஒழிய தீர்த்து வைக்காது. எந்தப் பிரச்சினையிலுமே அதன் மூல காரணத்தைத் தெரிந்து கொள்வதும், அதைச் சரி செய்யத் தேவையானதைத் தயக்கமில்லாமல் செய்யத் துணிவதுமே மிக முக்கியம். வேரை அழிக்காமல் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தால் திரும்பத் திரும்ப அதை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

அதே போல சில பிரச்சினைகளை சுற்றி வளைத்து அணுகாமல் நேரடியாக அணுகினால் அவற்றை சீக்கிரமாகவே தீர்த்து வைக்க முடியும். ஆனால் பிரச்சினைகளால் அதிகம் பாடுபடுவர்கள், பிரச்சினைகளிலேயே மூழ்கிக் கொண்டிருப்பவர்கள் பிரச்சினையே அவர்களிடம் இந்த நேரடி அணுகுமுறை இல்லாதிருப்பது தான். அவர்கள் எதையும் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசித் தெரிந்து கொள்ளவோ, தெரிவிக்கவோ மாட்டார்கள். இரண்டாம் மனிதர், மூன்றாம் மனிதர் மூலமாகவே கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். எப்போதுமே சுற்றி வளைத்துப் போகும் கருத்துக்கள் உள்ளது போலவே போய்ச் சேர்வதில்லை. அந்த இரண்டாம் மனிதர், மூன்றாம் மனிதர் நேர்மையானவராகவும், நல்ல எண்ணம் கொண்டவராகவும் இல்லா விட்டாலோ அது கண்டிப்பாக பிரச்சினைகள் இன்னும் பெரிதாக்குவதாகவே இருக்கும்.

எனவே பிரச்சினைகளை கான் யுவான் போல அணுகுங்கள். பிரச்சினைகள் தீர்வது மட்டுமல்ல அவை அனுகூலமாக மாறவும் கூடும்.

-என்.கணேசன்


Monday, May 14, 2012

வாழ்க்கைப் பயணத்தில் …



 
வாழ்க்கையின் பாதையிலே
வெகுதூரம் செல்கையிலே
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
கள்ளிச்செடி உள்ளிருக்கும்
பாதையை நீ பழிக்காமல்
பார்த்து நட மானிடனே!

பாராட்டு சில நேரம்
வசைபாட்டு சில நேரம்
பாராமுகமாகவே
ஊரிருக்கும் பல நேரம்
மனமுடைந்து முடங்காமல்
தினம் செல்வாய் மானிடனே!

சில சமயம் துணையிருக்கும்
சில சமயம் பகையிருக்கும்
பல சமயம் தனித்தே நீ
பயணிக்கும் நிலையிருக்கும்
இறை இருப்பான் துணையென்று
முறை நடப்பாய் மானிடனே!

                   - என்.கணேசன்

Monday, May 7, 2012

ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 15
ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு

சிரிஸ் கோயில்கள் எப்போதும் இரண்டு பகுதிகளாக இருந்தன. முதல் பகுதி பொது ஜனங்கள் வந்து வணங்கிச் செல்வதற்காக இருந்தது. இரண்டாம் பகுதி ரகசிய தீட்சை தரும் இடமாகவும், அதைத் தரத்தக்க குருமார்களின் பயிற்சி, தியானம் மற்றும் பிரார்த்தனை இடமாகவும் இருந்தது. இந்த இரண்டாம் பகுதிக்கு சாதாரண பொது ஜனங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.

ரகசிய தீட்சை பெற சுயகட்டுப்பாடு அதி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அங்கு ரகசிய தீட்சை பெற்று ஆன்மிகப் பேருண்மைகளை அறிய விரும்புபவர்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களைக் கடுமையாகச் சோதித்துப் பார்த்த பின்னரே ரகசிய தீட்சை பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படி ரகசிய தீட்சை தருவது கூட எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவரவர் தன்மைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப தருவதற்கு பல தரப்பட்ட தீட்சைகள் இருந்தன.

பால் ப்ரண்டன் அபிடோஸ் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை தரும் இரண்டாம் பகுதியின் சிதிலமடைந்த பகுதியில் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஆராய்வதற்கு முன்பு அங்கு தியானத்தில் அமர்ந்து அங்கிருந்த ஆன்மிக அலைகளில் இருந்து அந்த ரகசிய தீட்சைகளின் சூட்சுமத்தை அறிய முற்பட்டார்.

(எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு. அதனால் திறந்த மனத்துடன் நம் சொந்த அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு உண்மையான தகவலையும், ஞானத்தையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பழமையான நாகரிகத்தின் தகவலை கலப்படமில்லாத தூய்மையுடன் அறிய வேண்டுமானால் அது மிகவும் கஷ்டமான விஷயமே. எனவே தான் உண்மையான ஞானத்தைப் பெற விரும்பிய பால் ப்ரண்டன் அந்தக் கோயிலில் இரண்டாம் பகுதியில் இருந்த சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்து தனக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது, அதன் உண்மையான தன்மையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அப்படி தியானம் செய்து அந்த பழங்கால மகாத்மாக்கள் தந்த ஞானத்தின் தன்மையை அறிய முற்பட்டார்).

சுமார் இரண்டு மணி நேரங்கள் அங்கு அமர்ந்து தியானித்த அவர் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அது மிக அருமையான அனுபவமாக இருந்தது என்று பின்னர் கூறுகிறார். ஓசிரிஸின் துண்டான உடல்கூறுகளும் அவை ஒன்று சேர்ந்து உயிர் பெற்றமையும் காட்சிகளாகத் திரும்பத் திரும்ப அவருடைய தியானத்தின் போது மனத்திரையில் வந்து நின்றன. ரகசிய தீட்சையில் அந்தக் காட்சி மிக முக்கியமான இடம் வகிப்பதாக அவர் நினைத்தார். அது ஏதோ உணர்த்த வருகிறது என்று அவர் உணர்ந்தார்.  

பிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த போது அவருடைய ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வந்தது. தன் உணர்ச்சியற்ற உடலைக் கண்களின் துணையின்றித் தெளிவாகப் பார்த்ததும் பின்னர் தன் உடலுக்குள் திரும்ப வந்ததும் ஒரு விதத்தில் மரணமும், பின் ஜனனமும் போலவே அல்லவா என்று நினைத்தார். தியானம் முடிந்தபின் உள்ளே ரகசிய தீட்சை நடந்த பகுதிகளில் கண்ட சித்திரங்களும் சிற்பங்களும் அவர் தியானத்தில் உணர்ந்த உண்மைகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.

கோயில்களில் முதல் பகுதியில் கூட பூஜை நேரங்களில் கூட சத்தம் ஆரவாரம் எதுவுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்று முன்பே சொல்லியிருந்தோம். உள்ளே இருந்த இரண்டாம் பகுதியில்  வெளிப்புற அமைதி மட்டுமல்லாமல் மன அமைதியும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அபிடோஸில் இருந்த ஓசிரிஸின் அந்தப் பிரதான கோயிலில் உட்பக்கம் இருந்த இரண்டாம் பகுதியில் ரகசிய தீட்சை நடக்கும் இடத்தில் இருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த மனிதர்களின் முகத்தில் பேரமைதியைக் கண்டார் பால் ப்ரண்டன்.

அங்கு ஓசிரிஸின் மரணமும், உயிர்த்தெழுதலும் தத்ரூபமாக வரையப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. ஓசிரிஸின் உடற்கூறுகள் சிதறிக் கிடந்த காட்சிகளில் கூட அங்கு மரணத்தின் போது இருக்கும் ஒரு துக்ககரமான சூழ்நிலை தெரியவில்லை. மாறாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிற, வாழ்கிற ஒரு சூழ்நிலையே அங்கிருந்த குருமார்களின் முகத்திலும், ரகசிய தீட்சை பெற வந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது. ரகசிய தீட்சையின் சடங்குகள் கிட்டத்தட்ட ஓசிரிஸின் மரணம், உயிர்த்தெழுதல் போலவே தெரிந்தன. அங்கு ரகசிய தீட்சைக்கு வந்த அவர்கள் ஒரு விதத்தில் மரணித்து பின் புதிய பிறப்பு எடுப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.

ரகசிய தீட்சை பெறத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவன் அஸ்தமன காலத்திற்குப் பின்னரே கோயிலுக்குள் இருக்கும் இரண்டாம் பகுதிக்கு அனுமதிக்கப் படுகிறான்.  மந்திர தந்திரங்களிலும், ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் போன்ற கலைகளிலும் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த அந்தக் கால எகிப்திய குருமார்கள் தங்கள் சக்தியால் அவனை மிக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். கிட்டத்தட்ட மரணிப்பது போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் ‘எகிப்திய மம்மிபோலவே கிடக்கும் அவனை ஒரு சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக மூடி வைக்கிறார்கள். அவனுக்கு அந்த ஆழ்ந்த மரண நிலை மயக்கத்திலேயே குருமார்கள் பல வித அனுபங்களை ஏற்படுத்தி உண்மை ஞான நிலையை உணர வைக்கிறார்கள். அவனுடைய ஆன்மா வேறொரு மேலான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலான உண்மைகளை உணர்த்தப்படுவது போல காண்பிக்கப்படுகிறது.

அந்தக் காட்சிகளின் விளக்கச் சித்திரங்களில் அந்த ஆன்மாவின் பயணங்கள் மிக சக்தியும், நுண்ணிய உணரும் தன்மையும் வாய்ந்த குருமார்களுக்கெ முழுமையாகக் காண முடிவது போல் சித்தரிக்கப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட மாணவனின் தன்மைக்கும் தரத்துக்கும் ஏற்ற நிலைப்படி தான் அவனுக்கு அறிவிக்கப்படுகின்றது. அந்த தீட்சையின் கால அளவும் அதற்கு ஏற்றபடி கூடவோ, குறையவோ செய்கின்றது. அந்த உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகிலேயே குருமார்கள் நிற்கின்றனர். அந்த நேரத்தில் இரவுப் பிரார்த்தனைகளும் மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகின்றன.

அந்த தீட்சைக்கு உட்படுத்தப்படும் மாணவனின் ஆன்மா ஓசிரிஸின் ஆன்மசக்தியுடன் இணைந்து அறிய வேண்டியவற்றை அறிந்து திரும்புவது போல ஐதிகம். ஓசிரிஸ் மரணித்தது போல அவனும் மரணிக்கிறான். ஆனாலும் உடல் உணர்ச்சியற்று இருப்பினும் ஆன்மாவின் நுண்ணிய பிணைப்பில் இன்னும் உடல் இருக்கின்றது. ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போன்றதே, மரணம் என்பது என்றும் ஆன்மாவிற்கு இல்லை, என்பதை தன் நிஜ அனுபவம் மூலமே அவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிகிறான். இன்னும் பல்வேறு அனுபவங்களை அடைகிறான், தன் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வேண்டிய உண்மைகளை அறிகிறான். உடலோடு ஆன்மா இணைந்திருக்கும் போது அவன் உணர முடியாத எத்தனையோ ரகசியங்களை அந்த தீட்சையின் போது அவன் உணர்கிறான். தன் இயல்பான எத்தனையோ நன்மைகளையும், சக்தியையும் மறுபடி உணர்கிறான். ஓசிரிஸ் போல பலமடங்கு சக்தியுடன் அவன் மீண்டும் உயிர் பெறுகிறான். 

சடங்குகள் முடிந்து மதகுருமார்களின் அற்புத சக்திகளால் அவன் உணர்வுநிலை திரும்பவும் உடலுக்கு தருவிக்கப்படுகிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து அதிகாலையின் சூரிய கிரணங்கள் அவன் மீது விழும் படி வைக்கிறார்கள். அவன் புதிய மனிதனாய் புத்துணர்வுடன் திரும்புகிறான். இந்த ரகசிய தீட்சை பெற்றவர்களை ‘இருமுறை பிறந்தவர்கள்அல்லது ‘வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டவர்கள் என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.

மதகுருமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்குவதற்கும், அவனை அந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு தடியை உபயோகப்படுத்துகிறார்கள்.  மதகுருமார்களின் ஹிப்னாடிச சக்திகள் இன்றைய ஹிப்னாடிச சக்திகள் போலவே வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவர்கள் சக்திக்கும், இன்றைய ஹிப்னாடிச சக்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. இன்றைய ஹிப்னாடிச சக்தியில் அந்த நிலைக்குக் கொண்டு போகப்பட்டவன் விழிக்கும் போது அந்த நிலையில் நடந்த, உணர்ந்த எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த மதகுருமார்கள் ஏற்படுத்தும் ஹிப்னாடிச சக்தியில் அந்த உணர்வற்ற நிலையில் பெற்ற அனைத்து அனுபவங்களும் அவன் உணர்வுநிலைக்குத் திரும்பும் போது நினைவில் தெளிவாக இருக்கின்றன. அவன் இனி வாழப்போகும் நிலைக்கு வழிகாட்டும் உன்னத அனுபவப்பாடங்களாக அமைகின்றன.

ஆரம்பத்தில் எகிப்தியர்களுக்கு மட்டுமே இந்த தீட்சை தரப்பட்டது. பின்னர் காலப் போக்கில் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கும் அந்த தீட்சைத் தரப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டவர்களில் உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் அடங்குவர். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் அனுபவங்களையும் பார்ப்போமா?

(தொடரும்)

- என்.கணேசன்