சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 29, 2014

விஞ்ஞானியையே வியக்க வைத்த யோக சக்தி!


7.மகாசக்தி மனிதர்கள்

“உயிரையே எடுக்கக் கூடிய இத்தனை ஆபத்தான பொருள்களையும், விஷங்களையும் சாப்பிட்டும் நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதெப்படி?என்ற கேள்விக்கு நரசிங்க சுவாமி பதில் சொன்னார். “இதை ஹத யோகத்தால் சாதிக்கிறேன். இதில் எந்த ஏமாற்று வேலையும் இல்லை. யோக மூச்சுப் பயிற்சிகளை முழுமையாகக் கற்றிருக்கிறேன். அதனால் எந்த விஷமும் உடலில் இருக்கையில் என்னை பாதிக்காமல் இயல்பாக என் உடலில் இருந்து வெளியேற்றப் படுகிறது.

நரசிங்க சுவாமி பல நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவரை எடுத்த எக்ஸ்ரே படங்களையும் ரிஷிசிங் க்ரேவாலுக்குக் காட்டினார். அந்த எக்ஸ்ரே படங்களில் அவர் வயிற்றில் இருந்த ஆணிகளும், கண்ணாடித் துகள்களும் தெளிவாகவே தெரிந்தன.

ரிஷிசிங் க்ரேவால் கண்ட நிகழ்ச்சியைப் போலவே இன்னொரு நிகழ்ச்சி கல்கத்தாவில் பிரசிடென்ஸி கல்லூரியில் இயற்பியல் அரங்கில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மெத்தப் படித்த மருத்துவர்கள். அதற்கு மூலகாரணமாய் இருந்தவர் டாக்டர் நியோகி. இவர் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் வேதியியல் துறையில் பேராசிரியர். இவர் மதுப்பூர் என்ற நகரத்திற்குச் சென்றிருந்த போது நரசிங்க சுவாமி ஒரு நிகழ்ச்சியில் விஷ அமிலங்களை உட்கொண்டதை நேரில் பார்த்து வியந்தவர்.

முழுவதும் விஞ்ஞான முறையில் அமைக்கப்பட்ட அரங்கில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்திக் காட்ட இயலுமா என்று அவர் நரசிங்க சுவாமியிடம் கேட்ட போது நரசிங்க சுவாமி சம்மதித்தார். இரண்டு மாதங்களில் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். வேறுபல உயர் மருத்துவ அறிஞர்களும் அங்கு வந்திருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியிலும் கல்லூரி பரிசோதனைச்சாலையில் இருந்த அமிலங்கள் நரசிங்க சுவாமிக்குத் தரப்பட்டது.  முதலில் கந்தக அமிலமும் பின்னர் கார்பாலிக் அமிலமும், மூன்றாவதாக பொட்டாசியம் சயனைடும் தரப்பட்டது. பொட்டாசியம் சயனைடு அதிக பட்சம் மூன்று நிமிடங்களில் உயிரை எடுக்கக்கூடியது. ஆனால் அது நரசிங்க சுவாமிக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தது கூடியிருந்த அறிஞர்களைத் திகைக்க வைத்தது.

அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியிலும் கண்ணாடி பொடி செய்து அவருக்குத் தரப்பட்டது. பொட்டாசியம் சயனைடு உடனடியாகக் கொல்ல முடிந்தது என்றால் கண்ணாடிப் பொடி தாமதமாகக் கொல்லக் கூடியது. மருத்துவ அறிஞர்கள் அவர் மேல் வைத்த கண்களை எடுக்கவில்லை. நரசிங்க சுவாமி பின்னர் ஆணிகளையும் விழுங்கினார். பிறகு மூன்று மணி நேரம் கழிந்து கல்கத்தா மருத்துவர் ஒருவர் அவர் வயிற்றில் இருந்ததை பம்ப் செய்து வெளியே எடுத்து பரிசோதனை செய்தார். விஷம் அப்படியே இருந்தது. கண்ணாடிப் பொடியும் இருந்தது. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போதும் ஆணிகள் உட்பட வயிற்றில் இருந்த இடம் தெளிவாகத் தெரிந்தது. எந்த விதத்திலும் ஏமாந்து விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இருந்த அறிஞர்களுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.  

நிகழ்ச்சி முடிந்தவுடன் சர் சி வி ராமன் சொன்னார்.  எனக்கு மலைப்பாக இருக்கிறது. இது நவீன மருத்துவத்திற்கு விடப்படும் சவாலாகவே நான் கருதுகிறேன்

நிகழ்ச்சிக்கு நிறைய பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இந்த அற்புதங்கள் எப்படி சாத்தியமாகிறது என்று நரசிங்க சுவாமியைக் கேட்டார்கள். நரசிங்க சுவாமி உடனடியாக யோக நிஷ்டையில் ஆழ்ந்து இந்த விஷங்களுக்கு எதிரான சக்தியை உடலில் ஏற்படுத்தி விடுவதாகச் சொல்லி இருக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்த ஒரு பிரபல மருத்துவ அறிஞரைக் கேட்டார்கள். உங்கள் மருத்துவ அறிவைக் கொண்டு இதை எப்படி நீங்கள் விளக்குவீர்கள்?

“இதை மருத்துவ சாஸ்திரத்தால் விளக்க முடியாது. இது புரியாத புதிராகவே இருக்கிறதுஎன்று அந்த மருத்துவர் பதில் அளித்தார்.

ரிஷிசிங் க்ரேவால் நேரில் கண்ட நிகழ்ச்சியும், சர் சி வி ராமன் முன் கல்கத்தா ப்ரசிடென்சி கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள். இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஏமாற்று வேலைகள் நடந்து விடக்கூடாது என்று பார்வையாளர்களும், அறிஞர்களும் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளில் நரசிங்க சுவாமி செய்து காட்டிய அற்புதங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பரவ ஆரம்பித்தன. அவரைப் பல நாடுகளும் அமைப்புகளும் அழைக்க ஆரம்பித்தன. அவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டு தன் யோகசக்தியை பல்வேறு இடங்களில் நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் ஒரு அப்படி நடந்த ஒரு பொது நிகழ்ச்சி அவர் உயிரையே எடுத்து விட்டது என்பது தான் வருத்தத்திற்குரிய செய்தி. 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி பர்மாவில், ரங்கூன் நகரில், ஜுபிலி அரங்கத்தில் தான் அவருடைய கடைசி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கும் அவர் வழக்கம் போலவே அமிலங்கள், விஷங்கள், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் எல்லாம் விழுங்கினார். இந்த உயிர் கொல்லிகள் அவரைப் பாதிக்காமல் இருக்க அவர் செய்ய வேண்டிய யோக நிஷ்டைகளை முழுமையாகச் செய்ய விடாமல் அங்குள்ள மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடைய ஆர்வ மிகுதி அவர் கவனத்தைச் சிதறச் செய்திருக்க வேண்டும். அவர் உட்கொண்டவற்றில் ஒரே ஒரு விஷத்தைத் தவிர மற்றவற்றைச் செயலிழக்கச் செய்ய அவரால் முடிந்தது. ஒரு விஷம் அவரை உயிர் இழக்கச் செய்தது.

எப்போதாவது இப்படி நிகழலாம் என்று அவர் முன்பே அறிந்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. தனக்கு திடீர் என்று மரணம் நிகழுமானால் தன் அந்திம கிரியைகளை இப்படிச் செய்ய வேண்டும் என்பதை அவர் சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். அப்படியே செய்தார்கள்.

நரசிங்க சுவாமி என்ற இந்த ஹத யோகியின் வாழ்க்கை இரண்டு பெரிய உண்மைகளை நமக்குப் புலப்படுத்துகிறது.

முதலாவது யோக சக்தியால் முறைப்படி முயன்றால் உடல் மீது ஒரு மனிதன் எந்த அளவும் கட்டுப்பாடு செலுத்த முடியும் என்ற உண்மை. எண்ணற்ற முறைகள் அவர் பொட்டாசியம் சயனைடு உட்பட பல கொடிய விஷங்கள் உட்கொண்டும் அது அவரை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருந்தது அதற்கான அழுத்தமான ஆதாரம். பல நிகழ்ச்சிகளில் அவருக்கு அந்தக் கொடிய அமிலங்களைத் தாங்களே கொடுக்க முயன்றவர்கள் தப்பிப் தவறி கையில் அமிலங்கள் சிந்தி காயப்பட்ட நிகழ்ச்சிகள் ஏராளம். யோக சக்தியை முழுமையாக தன்வசப்படுத்திக் கொண்ட மனிதரோ அந்த அமிலங்கள் கை, வாய், தொண்டை, வயிறு பகுதிகளில் பயணித்தும் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது சர் சி வி ராமன் சொன்னது போல விஞ்ஞானத்திற்கு பதில் காண முடியாத சவாலே அல்லவா?     

இரண்டாவது இயற்கைக்கு எதிராக மனிதன் எந்த சக்தியைப் பயன்படுத்தி எதைச் செய்ய முடிந்தாலும் அதில் அவன் எப்போதும் பூரண எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், அப்படி இருக்கா விட்டால் அது அவனுக்கு பேராபத்தை விளைவித்து விடும் என்பது. அதற்கும் நரசிங்க சுவாமி மிகச்சரியான உதாரணம்.

இனி வேறு ஒரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போமா?

(தொடரும்)
-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – 24.10.2014



Thursday, December 25, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 26


க்‌ஷய் நாளை காலை திபெத்திற்கு கிளம்புகிறான். எல்லா விதங்களிலும் தன்னை அவன் தயார்ப்படுத்திக் கொண்டாகி விட்டது. கண்களை மூடி அமைதியாகத் தன் அறையில் அவன் உட்கார்ந்திருக்கையில் வருண் நுழைந்தான். கண்களைத் திறந்த அக்‌ஷய் புன்னகைத்தான். “வா.... உட்கார்.....

அக்‌ஷயை ஓட்டியபடி உட்கார்ந்தான் வருண். சின்ன வயதில் இருந்தே அக்‌ஷயுடன் அவ்வளவு நெருக்கமாய் உட்கார்ந்தால் தான் அவனுக்கு திருப்தி. நாளை போனால் இனி எப்போது வருவான் என்று தெரியாது, ஏன் திரும்ப வருவானா என்றே தெரியாது என்றெல்லாம் வருணின் மனம் நினைக்க ஆரம்பித்திருந்ததால் இன்று பாசம் மேலும் கூடி இருந்தது.

“அப்பா, அம்மா சொல்கிறாள் நான் உங்களை நிறையவே இம்சிக்கிறேனாம்... அப்படி நினைக்கிறீர்களாப்பா?

வருண் தோளில் தோழமையுடன் கையைப் போட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டு அக்‌ஷய் சொன்னான். “அவளுக்கு என்ன தெரியும்? அவள் சொல்வதை எல்லாம் கண்டு கொள்ளாதே...”  பின் அவன் கண்களைப் பார்த்து ஆத்மார்த்தமாய் சொன்னான். “இது வரை நீ எனக்கு எப்போதுமே இம்சையாய் இருந்ததில்லை. இனி மேலும் அப்படி இருக்க மாட்டாய்...

வருணுக்கு அவன் மடியில் படுத்து அழத் தோன்றியது. அழுதான். அக்‌ஷய் அவன் தலையைக் கோதிக் கொண்டே சொன்னான். “என்ன சின்னக்குழந்தை மாதிரி?

உடனடியாகப் பதில் சொல்லாத வருண் மெள்ள எழுந்து தேம்பலை நிறுத்தி கண்களைத் துடைத்துக் கொண்டான். நான் உங்களைப் பொருத்த வரை எப்போதுமே சின்னக் குழந்தை தான். இல்லையாப்பாஎன்று கண்களின் ஈரம் காயாமல் சிரிக்க முயல அக்‌ஷய் மனம் நெகிழ்ந்து போனான். “ஆமாம்என்றான்.

சிறிது நேரம் இருவரும் அமைதியாய் இருந்தார்கள். சேர்ந்து அமர்ந்திருக்கையில் மௌனமும் ஒரு விதத்தில் நிறைவாகவே இருந்தது. பின் மெல்ல வருண் சொன்னான். “அப்பா நான் எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் முதலில் உங்களிடம் தான் சொல்லி இருக்கிறேன்.... நீங்கள் போவதற்கு முன்னால் சொல்ல புதிதாய் ஒன்றிருக்கிறது....

“சொல்

“நான்.... நான் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்.....

அக்‌ஷய் முகத்தில் குறும்பு கலந்த மகிழ்ச்சி பொங்கியது. “ஏய்... இப்போது தான் சொன்னாய்... உங்களைப் பொருத்த வரை நான் சின்னக்குழந்தை என்று... குழந்தை திடீரென்று இவ்வளவு சீக்கிரம் வளர்ந்து விட்டதா என்ன?

வருண் வெட்கப்பட்டான். “உங்களுக்கு தான் குழந்தை. மற்றவர்களுக்கு அல்ல..என்று சொன்ன போது அக்‌ஷய் வாய் விட்டுச் சிரித்தான்.

“அந்தப் பெண்ணைப் பற்றி சொல்

“பெயர் வந்தனா. கூடப்படிக்கிறாள். நல்ல மாதிரி..... பார்க்க அழகாயிருப்பாள்

“அவளும் உன்னைக் காதலிக்கிறாளா?

“அப்படித்தான் நினைக்கிறேன். நானும் அவளிடம் என் காதலை இன்னும் சொல்லவில்லை.... முதலில் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்....

அக்‌ஷய் பேச்சிழந்து போனான். காதலைக் கூட முதலில் அவனிடம் வந்து தெரிவிக்க நினைக்கும் ஆழமான அன்பை அவன் வேறெங்கு காண முடியும்? மனம் என்னவோ செய்தது.

வருண் தொடர்ந்தான். “அவள் நம் எதிர் வீட்டுக்கு தான் குடி வரப் போகிறாள். அவர்கள் வீடு மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம் எதிர் வீடு காலியாக இருக்கிறது என்று சொன்னேன். வந்து பார்த்து விட்டு பிடித்திருந்ததால் அடுத்த வாரம் குடிவரப் போகிறார்கள்....

சிரித்துக் கொண்டே அக்‌ஷய் அவன் வயிற்றில் நட்பாக குத்தியபடி சொன்னான். “நல்ல விவரமாய் தான் இருக்கிறாய். காதல் என்று வந்து விட்டாலே மூளை இரண்டு மடங்கு வேலை செய்யும் போல இருக்கிறது...

அக்‌ஷயின் கைகளைப் பிடித்துக் கொண்டு சிரித்த வருண் சிரிப்பதை விட்டு சீரியஸாக சொன்னான். “நீங்கள் திரும்பி வரும் போது அவள் நம் எதிர் வீட்டில் இருப்பாள். நீங்கள் கண்டிப்பாய் திரும்பி வர வேண்டும்.... அந்த மைத்ரேயனைக் காப்பாற்றுகிறீர்களோ இல்லையோ உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்..... நாங்கள் எல்லாரும் உங்களுக்காக காத்துக் கொண்டே இருப்போம்....

பல வருடங்களுக்கு முன்பு வருணை விட்டுக் கிளம்புவதாய் அக்‌ஷய் சொன்ன போது இருந்த அதே துக்கம், அதே வேண்டுதல் இப்போதும் தெரிந்தது. வருண் சொன்னது பொய்யில்லை. ஆண்டுகள் நகர்ந்து சிறுவன் வளர்ந்து இளைஞனான பின்னும் அவனைப் பொருத்த வரை குழந்தையாகத் தானிருக்கிறான்... 

அக்‌ஷயின் மனம் கனமானது. எது மனிதனின் கையில் இருக்கிறது. எதையும் தீர்மானிப்பது இறைவனே அல்லவா? அந்த அன்பு மகனின் திருப்திக்காக அவன் சரியென தலையசைத்தான்.



சேடாங் (Tsedang) நகரம் அதிகாலையில் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. நகர வாசிகளில் சிலர் மெள்ள எழுந்து வீடுகளில் இருந்து வெளியே வர ஆரம்பித்திருந்தார்கள். அந்த ஏழை  நடுத்தர வயதுப் பெண்மணி வாசலில் ஏதோ வேலையாக இருந்தாள். தெருமுனையில் ஒரு புத்த பிக்கு வருவதை அவள் கவனித்தாலும் அந்த புத்த பிக்கு தன் வீட்டுக்கு தான் வந்து கொண்டிருக்கிறார் என்பதை சற்றும்  அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. காரணம் அவள் குடும்பத்தினர் புத்தமதத்தினர் தான் என்ற போதும் அடிக்கடி மடாலயங்களுக்குப் போய் வணங்கும் வழக்கம் அவர்களிடம் இருக்கவில்லை. வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மட்டும் போய் வணங்கி விட்டு வருவார்கள். அதுவும் ஒரு சம்பிரதாயமான சிறிது நேர சமாச்சாரமாக மட்டுமே இருக்குமே ஒழிய ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாக இருந்ததில்லை. அதனால் புத்த பிக்குவும் அவர்கள் வீட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று அவள் நினைத்தாள்  ஆனாலும் புத்த பிக்கு அவளை நோக்கி தான் வந்தார்...

அருகே வந்த பிக்குவை அவள் வணங்கி நின்றாள். அவளுக்கு ஆசி வழங்கிய பிக்கு “காலை பத்து மணிக்கு கண்டிப்பாக மடாலயத்திற்கு வர மூத்தவர் உங்களை அழைத்திருக்கிறார்என்று சொல்லி விட்டு அடுத்த கணமே அந்தப் பெண்மணியைத் திரும்பிக்கூட பாராமல் அங்கிருந்து நகர்ந்தார். அந்தப் பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த பிக்கு சீக்கிரமாகவே அவள் பார்வையில் இருந்து மறைந்து போனார்.

அந்த ஊரில் இருந்த சிறிய புத்த மடாலயத்தில் இருந்த தலைமை பிக்குவை அனைவரும் மூத்தவர் என்றே அழைத்தார்கள். அப்படி அழைக்க என்ன காரணம் என்று அவளுக்குத் தெரியாது. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அவளுக்கு இருந்ததில்லை. தலாய் லாமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று அவரைப்பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறாள். வேறு ஊர்களிலிருந்து வந்து அவரை பல பிக்குகள் வணங்கிச் செல்வதை அவள் பார்த்திருக்கிறாள். அவருடைய சொற்பொழிவுகள் குறித்தும் அறிவாளிகள் என அவள் நினைத்திருக்கும் பலரும் மிக உயர்வாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு அவர் பேசியது எதுவும் அதிகம் புரிந்ததில்லை.

அப்படிப்பட்ட உயரிய நிலையில் இருக்கும் மூத்தவருக்கு அவளிடம் பேச என்ன இருக்க முடியும். அறிவிலோ, பக்தியிலோ, செல்வத்திலோ அவர் கவனத்திற்கு வரும் நிலையில் அவள் இல்லை.  ஏதோ தவறு நடந்திருக்கிறது. வேறு யாரையோ கூப்பிடுவதற்குப் பதிலாக, தவறாக, அவளை அழைத்து விட்டுப் போயிருக்கிறார் அந்த பிக்கு. அப்படித்தான் இருக்க வேண்டும். பத்து மணிக்குப் போனால் அவர் புரிந்து கொள்வார். மடாலயத்திற்குப் போய் வணங்கி பல மாதங்கள் ஆகின்றன. அவளை ஒரு முறை வரவழைக்க போதிசத்துவர் செய்யும் லீலை தானோ இது.

பத்து மணிக்கு மடாலயத்தில் அவள் இருந்தாள். அவளைப் பார்த்ததுமே காலையில் வந்து தகவல் சொன்ன பிக்கு விரைந்து வந்தார். “மூத்தவர் உள்ளே காத்திருக்கிறார்என்று சொன்னார்.

இன்னும் ஆள் மாறாட்டத் தவறு இந்த பிக்குவுக்கு உறைக்கவில்லை என்று நினைத்த அவள் உள்ளே சென்றாள். மூத்தவர் மகாபுத்தர் சிலை முன் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். தானும் வணங்கினாள். நல்லது என் வாழ்க்கையில் நடந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது புத்தரே. அடிக்கடி வந்து வணங்கவில்லை என்பதற்கு ஒரேயடியாக எங்களைப் புறக்கணித்து விடாதீர்கள். அருள் புரியுங்கள்

எழுந்து விட்டாள். அதற்கு மேல் புத்தரிடம் சொல்ல வேறு எதுவும் இல்லை.

ஆனால் மூத்தவர் வணங்கி முடிக்க சிறிது நேரம் ஆனது. அவள் காத்திருந்தாள். திரும்பியவர் மிகுந்த மரியாதையுடன் அவளை அமரச் சொன்னார். அந்த பிக்கு தவறான ஆளை அழைத்து விட்டு வந்தது இவருக்கு இன்னும் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டபடி ஒடுங்கிப் போய் அமர்ந்தாள்.

“உங்கள் மகன் எப்படி இருக்கிறார்?அவர் அதே மரியாதையுடன் கேட்டார்.

மூன்று மகன்களைப் பெற்றிருந்த அந்த தாய்க்கு அவர் எந்த மகனைக் கேட்கிறார் என்று புரியவில்லை. அவர் இத்தனை மரியாதை தந்து கேட்கக்கூடிய அளவு வயதிலோ, வேறெந்த தகுதியிலோ அவளுடைய மகன்கள் இருக்கவில்லை. “நீங்கள் என் எந்த மகனை விசாரிக்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை ஐயாஎன்று அவள் சொன்னாள்.

அவள் முகத்தையே கூர்ந்து பார்த்த மூத்தவர் “உங்கள் கடைசி மகனைத் தான் கேட்கிறேன் அம்மாஎன்றார்.

இப்போது அவளுக்கு எல்லாம் விளங்கி விட்டது. அவளது மூன்றாவது மகன் பள்ளிக்கூடம் செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பினாலும் சில நாட்கள் பள்ளிக்கூடம் போகாமல் சேடாங் நகரத்தின் சுற்று வட்டாரத்தில் இருக்கும் சில குகைகளில் போய் அமர்ந்து கொண்டு பொழுதைக் கழிப்பதுண்டு. இல்லா விட்டால் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திபெத்தின் முதல் புத்த மடாலயமான சம்யே மடாலய (Samye monastery)த்திற்குப் போய் விடுவதுண்டு... சில சமயம் அதற்கு அருகில் இருக்கும் புனித குளமான லாமோ லாட்சோ(Lhamo Latso) விற்குப் போய் விடுவதுண்டு. இவன் இப்படிப் போவது அங்கே போகும் புத்தபிக்குகளுக்கு ஏதாவது விதத்தில் தொந்தரவாக இருந்திருக்க வேண்டும். அதை அவர்கள் மூத்தவரிடம் புகார் சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்கத் தான் அழைத்திருக்கிறார்.

“அவன் சின்னப் பையன். ஏதாவது தவறு செய்திருந்தால் அவனை மன்னிக்க வேண்டும் ஐயாஎன்று அவள் வேண்டிக் கொண்டாள்.

மூத்தவர் அவளைப் பார்த்து சின்னதாய் புன்னகைத்தார். தாயே. உங்களுக்கு உங்கள் மகன் யாரென்று தெரியுமா?

அவளுக்கு அந்தக் கேள்வி வினோதமாய்த் தோன்றியது. மகன் மகன் தான். இது என்ன கேள்வி? அவள் முகத்தில் தெரிந்த குழப்பம் அவர் புன்னகையை விரிவுபடுத்தியது.

அவர் சொன்னார். “போதிசத்துவ மகாபுத்தரின் அவதாரமான மைத்ரேயரே உங்கள் கடைசி மகன். அந்த அவதார புருஷரைப் பெற்றெடுத்த புனிதவதியான அன்னையை நான் வணங்குகிறேன்.

அவள் தடுப்பதற்குள் எண்பது வயதைக் கடந்தவரும் மகாஞானி என்று மற்றவர்களால் போற்றப்பட்டவருமான மூத்தவர் அவளைத் தாழ்ந்து வணங்கினார்.

அதிர்ச்சியில் சமைந்து போன அந்தப் பெண்மணிக்கு இந்த ஆள் மாறாட்டக் குழப்பத்தில் சிக்கியிருப்பது அவள் அல்ல அவளுடைய மகன் என்று மெள்ள புரிய ஆரம்பித்தது. அவர் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை. தாய் அறியாத சூல் இருக்க முடியுமா? அனிச்சையாய் இரண்டடி பின் வாங்கினாள்.

(தொடரும்)

என்.கணேசன்




Monday, December 22, 2014

விஷத்தையும் உண்ணும் யோகி!


மகாசக்தி மனிதர்கள்-6


ரு யோகியின் சக்திகள் இவ்வளவு தான் என்று முடிவாகக் கூறமுடிவது யாராலும் முடியாத செயல். முழுமையாக யோகக் கலையை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு அவர்களது மனம் தான் எல்லை. மனம் போகிற தூரத்திற்கு அவர்கள் சக்திகளும் நீளும். ஆதிசங்கரர் போன்ற மகா யோகிகள் தங்கள் யோக சக்தியை மனித குலத்தின் நன்மைக்காக பல விதங்களில் பயன்படுத்தி நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றார்கள். அவர் போன்ற மகா யோகிகள் அபூர்வம். பொதுவாக யோகக் கலையில் ஏதாவது ஒரு பகுதியைக் கற்றுத் தேர்ந்து ஓரிரு சக்திகளைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டவர்கள் தான் அதிகமானவர்கள்.

அந்த ஓரிரு சக்திகளே மற்றவர்களை மலைக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். சாதாரண பகுத்தறிவுக்கு எட்டாத அளவுக்கு இருக்கும். அப்படி ஒரு மகாசக்தியைப் பெற்றிருந்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் வாழ்ந்த நரசிங்க சுவாமி.   அவரைப் பற்றியும் ரிஷிசிங் க்ரேவால் விரிவாக எழுதி இருக்கிறார். கல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் பந்தோபாத்யாயா, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் ஆகியோரும் தங்களது நேரடி அனுபவத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.

முதலில் ரிஷிசிங் க்ரேவாலின் நேரடி அனுபவத்தைப் பார்ப்போம். அவர் நரசிங்க சுவாமியைச் சந்தித்தது 1923 ஆம் ஆண்டில். விஷம் உட்பட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல எதையும் சாப்பிடும் நரசிங்க சுவாமி அக்காலத்தில் இந்தியாவில் மிகப் பிரபலம். அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் தன் சக்தியை அனைவர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டுவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் ரிஷிசிங் க்ரேவால் சென்றிருந்தார்.

அந்த பொது நிகழ்ச்சிக்கு பெரிய அளவு கூட்டம் திரண்டிருந்தது. நரசிங்க தாடி, சுருள்முடி, ஆழமான பார்வை உடைய சுவாமி நடுத்தர வயதினராக இருந்தார். அவருக்கு அருகில் இருந்த மேஜையில் பல திரவ பாட்டில்கள், காகிதப் பொட்டலங்கள் இருந்தன.

நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்பே சென்றிருந்த ரிஷிசிங் க்ரேவால் அந்த பாட்டில்களில் இருப்பது என்னென்ன திரவங்கள் என்று கேட்டார்.

இது கந்தக அமிலம், இது நைட்ரிக் அமிலம், இது ஹைட்ரோ க்ளோரிக் அமிலம், இது பாதரசம், இது கார்போலிக் அமிலம்....என்று நரசிங்க சுவாமி ஒவ்வொரு பாட்டிலாக காண்பித்துக் கொண்டே வந்தார்.  

“இந்தப் பொட்டலங்களில் இருப்பதெல்லாம் என்ன?ரிஷிசிங் க்ரேவால் கேட்டார்.

“இதில் இரும்பு ஆணிகள் இருக்கின்றன. இதில் லாந்தர் விளக்கின் உடைந்த கண்ணாடித்துகள்கள், இதில் சின்னச்சின்ன கற்கள், இதில் நிலக்கரித் துண்டுகள்...என்று நரசிங்க சுவாமி விளக்கினார். ஏதோ பருவநிலை அறிவிப்புகள் போல் அவர் சொல்லிக் கொண்டே வந்தது ரிஷிசிங் க்ரேவாலை ஆச்சரியப்படுத்தியது.

“:இந்த நிகழ்ச்சியில் இத்தனையுமா சாப்பிடப் போகிறீர்கள்?என்று ரிஷிசிங் க்ரேவால் திகைப்புடன் கேட்டார்.

“ஆமாம். நீங்கள் எல்லாம் எப்படி சாப்பாட்டை சாப்பிடுகிறீர்களோ அப்படி நான் இதைச் சாப்பிடுவேன்என்று நரசிங்க சுவாமி சொல்லி விட்டு சிரித்தார்.

நிகழ்ச்சி ஆரம்பமாகியது. நரசிங்க சுவாமி எழுந்து நின்றார். முதலில் பாதரச பாட்டிலை எடுத்து அதைக் கூட்டத்தில் இருப்பவர்களிடம் பார்க்கக் கொடுத்தார். கூட்டத்தில் இருந்த ஆர்வம் மிக்க ஆட்கள் அதை வாங்கி அது நிஜமான பாதரசம் தானா என்று பார்த்து திருப்தி அடைந்து விட்டுத் திருப்பித் தந்தார்கள். நரசிங்க சுவாமி அந்த பாட்டிலில் இருந்த பாதரசத்தை ஒரு ஸ்பூனில் தன் உள்ளங்கையில் ஊற்றி அதை வாயில் போட்டுக் கொண்டார்.   தலையை ஒரு முறை ஆட்டி விட்டு முழுங்கிய அவர் சிறிது தண்ணீரும் குடித்துக் கொண்டார்.  


அடுத்ததாக கந்தக அமிலம் பாட்டில் கூட்டத்தில் இருப்பவர்களிடம் காட்டப்பட்டது. பிறகு நரசிங்க சுவாமி அதையும் தன் கையில் ஊற்றிக் கொண்டு நக்கி சாப்பிட்டார். பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினரில் ஒரு மருந்துக் கடைக்காரரும் இருந்தார். அவர் தன் கடையிலிருந்து கொண்டு வந்திருந்த கந்தக அமிலத்தை நரசிங்க சுவாமி சாப்பிட்டுக் காண்பிக்கத் தயாரா என்று கேட்டு சவால் விட்டார். கூட்டத்தில் சிலர் அந்த மருந்துக் கடைக்காரர் சவாலுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். நரசிங்க சுவாமி சிறிதும் தயங்காமல் அந்த சவாலுக்கு ஒத்துக் கொண்டார்.


அந்த மருந்துக் கடைக்காரர் கொண்டு வந்த கந்தக அமிலம் உண்மையான கந்தக அமிலம் தானா என்பது ஒரு செப்பு நாணயத்தில் ஒரு சொட்டு அமிலம் விட்டு அங்கேயே பரிட்சிக்கப்பட்டது. அங்கிருந்த மருத்துவ நிபுணர்கள் அது கந்தக அமிலம் தான் என்று அங்கீகரித்த பின்னர் நரசிங்க சுவாமி அதையும் தன் உள்ளங்கையில் ஊற்றி பின் சாப்பிட்டார். பின் உள்ளங்கையை கூட்டத்தினரிடம் காட்டினார். உள்ளங்கையில் எந்த காயமும் இருக்கவில்லை.



அடுத்தபடியாக நரசிங்க சுவாமி ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து கூட்டத்தினருக்குக் காட்டி விட்டு அதை வாயில் போட்டுக் கொண்டார். அவர் அதைக் கடித்துப் பொடியாக்கி தன் நாக்கில் இருப்பதைக் காட்டி விட்டு சிறிது தண்ணீரை வாயில் ஊற்றிக் கொண்டு அப்படியே சேர்த்து அதை விழுங்கினார்.   


அடுத்ததாக நைட்ரிக் அமிலம் எடுக்கப்பட்டது. அந்த நைட்ரிக் அமிலத்தை ஒரு கைக்குட்டையில் சில துளிகள் கொட்டி தீய்ந்து போன அந்த்க் கைக்குட்டையை கூட்டத்தினர் பார்வைக்கு நரசிங்க சுவாமி அனுப்பினார். பின் அந்த நைட்ரிக் அமிலத்தையும் தன் கையில் ஊற்றி பின் அதை வாயில் போட்டுக் கொண்டார்.


கூட்டத்தில் இருந்த ஒருவன் “ஏன் எல்லாவற்றையும் கையில் விட்டுக் கொண்டு அப்புறம் சாப்பிடுகிறீர்கள். அதை கையில் ஊற்றாமலேயே அப்படியே வாயில் ஊற்றிக் கொள்ளக் கூடாதா?


அந்தக் கேள்வியும் நரசிங்க சுவாமியை எந்த விதத்திலும் கோபம் மூட்டவில்லை. “தாராளமாக அப்படியும் செய்யலாம்என்றார்.


நைட்ரிக் அமிலத்தை அவர் வாயில் ஊற்ற அந்த மருந்துக் கடைக்காரரே முன் வந்தார். நைட்ரிக் அமிலத்தை அவர் நரசிங்க சுவாமியின் வாயில் நேரடியாகவே ஊற்றினார்.  


அதன் பின்னும் நரசிங்க சுவாமி உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை கூட்டத்தில் சிலரிடம் இருக்கவில்லை. கண்முன் அந்த மனிதர் துடித்துச் சாவதை பார்க்க மனமில்லாமல் அவர்கள் அங்கிருந்து கிளம்பத் தயாரானார்கள். ஆனால் நரசிங்க சுவாமி ஏதோ இனிப்புப் பண்டம் சாப்பிடும் சிறுவன் போல மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டு விட்டு தண்ணீர் சிறிது குடித்தார். எல்லோருக்கும் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை.  
 

அடுத்ததாக ஆணிகளையும் கற்களையும் நரசிங்க சுவாமி சாப்பிட்டார். கடைசியாக நாகப் பாம்பின் விஷத்தைச் சாப்பிட்ட நரசிங்க சுவாமி கூட்டத்தில் இருக்கும்  யாராவது உயிருள்ள கடும் விஷப் பாம்புகளைக் கொண்டு வந்தால் அவர்கள் கண் முன்னாலேயே அதைச் சாப்பிடுவதாகவும் சவால் விட்டார்.


கூட்டத்தினர் பேச்சிழந்து போய் அவரைப் பிரமிப்புடன் பார்த்தார்கள். கூட்டம் முடிந்தும் சிலர் தங்கி இருந்து அவருக்கு எதாவது ஆகிறதா என்று பார்த்தார்கள். அவர் பூரண ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியாகவே இருந்தார்.
.
ரிஷிசிங் க்ரேவால் மறு நாள் காலை சென்று நரசிங்க சுவாமியைப் பார்த்தார். அப்போதும் நரசிங்க சுவாமி நலமாகவே இருந்தார்.

என்னவொரு ஆச்சரியம் இந்த மனிதர் என்று வியந்த ரிஷிசிங் க்ரேவால் அவரிடம் கேட்டார். “உயிரையே எடுக்கக் கூடிய இத்தனை ஆபத்தான பொருள்களையும், விஷங்களையும் சாப்பிட்டும் நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதெப்படி?


(தொடரும்)

-          என்.கணேசன்    
நன்றி: தினத்தந்தி – 17-10-2014


     

Thursday, December 18, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 25


க்‌ஷய் மருதமலை போய் மொட்டை அடித்துக் கொண்டு வந்தது வேண்டுதலுக்காகவோ, பக்தியாலோ அல்ல என்பது வீட்டில் கௌதமைத் தவிர மற்ற மூன்று பேருமே உணர்ந்திருந்தார்கள். அவன் திபெத் போகப் போவதன் ஆயத்தத்தில் முதல் கட்டம் தான் என்பதை அவர்கள் யூகித்தார்கள். ஆனாலும் அவர்கள் அதைப் பற்றி அவர்கள் வெளிப்படையாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. கருத்து தெரிவித்தவன் கௌதம் தான்.

“அப்பாவுக்கு மொட்டை நன்றாகவே இல்லை. பார்க்கவே சகிக்கவில்லைஎன்று கௌதம் முகத்தைச் சுளித்துக் கொண்டே சொன்னான்.

அக்‌ஷய் புன்னகைத்தான். கௌதம் கேட்டான். “உங்களுக்கு முடி எப்போது வளரும்?

அக்‌ஷய் மகனை அணைத்துக் கொண்டே சொன்னான். “திபெத் போய் திரும்பி வரும் போது முடி வளர்ந்திருக்கும்

கௌதம் திருப்தி அடைந்து விளையாட வெளியே போய் விட்டான்.

திபெத் போவது என்று தீர்மானத்தை வீட்டில் சொல்லி ஓரளவு வருணையும் சமாதானப்படுத்திய பிறகு அக்‌ஷய் முழுமூச்சுடன் தன் பயணத்துக்குத் தயாராக ஆரம்பித்திருந்தான். அதிகமாக திபெத்தின் வரைபடத்தை இணையத்தில் மணிக்கணக்கில் ஆராய்ந்தான். ஒன்றில் கவனத்தைக் குவிக்கும் போது மற்றெல்லா விஷயங்களிலுருந்தும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும் அபூர்வ சக்தி அவனிடம் இயல்பாகவே இருந்தது.

இப்போதும் கௌதம் விளையாடப் போன பின் திபெத்தைப் பற்றிய விவரங்களையே இணையத்திலிருந்து உள்வாங்கிக் கொண்டிருந்த அவன்  கவனத்தை சுற்றிலும் கேட்ட சத்தங்கள் எட்டவில்லை. அவனுடைய அறைக்கு வீட்டவர்கள் அவ்வப்போது வந்து போனதை அவன் கவனிக்கவில்லை.  

அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த வருணுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை. “எப்படி இவரால் மனதை இந்த அளவுக்கு ஒருமுகப்படுத்த முடிகிறது? இவர் கற்றுக் கொண்டதெல்லாம் இப்படித்தான் போலிருக்கிறது. இவர் அமானுஷ்யன் ஆன ரகசியம் இது தானா? 

சின்ன வயதிலிருந்தே அவனுடைய கதாநாயகனாக இருந்த அக்‌ஷய் மீது இன்னமும் வருணுக்கு பிரமிப்பு குறையவில்லை. இப்படி ஒரு நல்ல மனிதனை, அவனையும், அவன் அம்மாவையும், பாட்டியையும் ஏற்றுக் கொண்டு இவ்வளவு தூரம் நேசிக்க முடிந்தவனை, இழந்து விடுவோமோ என்கிற பயம் தான் பாடாய் படுத்துகிறது. அந்த பயத்தை சஹானாவிடமும், மரகதத்திடமும் கூட, அவர்கள் வார்த்தைப்படுத்தா விட்டாலும், அவனால் இப்போது காண முடிகிறது.   வழக்கமான கலகலப்பு அவர்களிடமும் இல்லை.

சஹானா மரகதத்தைக் கேட்பது காதில் விழுந்தது. “உங்களுக்காக எடுத்து வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருக்கிறது அத்தை. சாப்பிடவில்லையா?

“இன்றைக்கு சங்கடஹர சதுர்த்தி. விரதம் ஆரம்பித்திருக்கிறேன்....மரகதம் சொன்னாள்.

விரதம் யாருக்காக என்று வருணுக்குப் புரிந்தது. இந்தப் பாட்டியிடம் போய் நேற்று அநியாயத்திற்குக் கோபித்துக் கொண்டோமே என்று தோன்றியது. அக்‌ஷயின் தாய் சாரதா ஒரு காலத்தில் மகனுக்காக அடிக்கடி விரதம் இருந்ததைக் கேள்விப்பட்டிருந்த மரகதம் அந்த ஸ்தானத்தில் இப்போது ஆரம்பித்திருக்கிறாளோ என்று நினைக்கையில் மனம் இலேசாகியது.....


ந்தப் பூங்காவில் அக்‌ஷய் நுழைந்த போது ஆட்கள் அதிகமில்லை. உச்சி வெயில் வேளையானதால் அங்கங்கே ஒருசில காதல் ஜோடிகள் மட்டும் தான் இருந்தார்கள். தொப்பி ஒன்றைப் போட்டுக் கொண்டு தனியாகப் பூங்காவில் நுழையும் அக்‌ஷயை ஆச்சரியத்துடன் காவலாளி பார்த்தான்.

ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியில் இருந்த புதர் அருகே மறைவில் அமர்ந்த அக்‌ஷய் தன் ஜோல்னா பையில் இருந்த காவி உடையையும், சில சாதனங்களையும் வெளியே எடுத்தான். அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு புத்த பிக்கு பூங்காவை விட்டு வெளியேறுவதைப் பார்த்த காவலாளி ‘இந்த ஆள் எப்போது உள்ளே நுழைந்தார்?என்று ஆச்சரியப்பட்டான்.

புத்தபிக்கு வேடத்தில் இருந்த அக்‌ஷய் பூங்கா இருந்த தெருக்கோடியில் இருந்த ஒரு புகைப்படமெடுக்கும் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தான். அந்த கடைக்காரரை அவனுக்கு நன்றாகத் தெரியும். புத்த பிக்கு கோலத்தில் அமைதியே வடிவாக உள்ளே நுழைந்த அவனை கடைக்காரர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. மிகுந்த மரியாதையுடன் அவனிடம் கடைக்காரர் கேட்டார். “என்ன வேண்டும்?

கரகரத்த குரலில் அக்‌ஷய் சொன்னான். “பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ....  உடனே கிடைக்குமா?” . பேசியதில் தமிழல்லாத அன்னிய வாடை அந்தக் கடைக்காரருக்குத் தெரிந்தது.

“பத்தே நிமிடத்தில் கிடைத்து விடும்என்று சொன்ன கடைக்காரர் உள்ளே அழைத்துச் சென்றார்.

படம் எடுக்கையில் எங்கிருந்து வருகிறீர்கள் என கடைக்காரர் கேட்டார். நேபாள் என்று அக்‌ஷய் சொன்னான். அங்கு அவன் இருந்த பத்து நிமிட காலத்தில் கடைக்காரருக்கு சிறிது கூட சந்தேகம்  வரவில்லை.

திரும்பவும் பூங்காவிற்குள் புத்தபிக்கு நுழைவதைப் பார்த்த காவலாளி இந்த ஆள் ஏன் பழையபடி வருகிறார் என்று யோசித்தான். மறைவிடத்தில் வேடத்தைக் கலைத்துக் கொண்டு அவன் பழைய தோற்றத்தில் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்த காவலாளிக்கு திடீரென்று அந்த சாமியார் உள்ளே என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தது. உள்ளே சாமியாரை வலைவீசித் தேடியும் கிடைக்காததன் மர்மம் அந்தக் காவலாளிக்குக் கடைசி வரை பிடிபடவில்லை. என்ன மாயா ஜாலமாக இருக்கிறதுஎன்று நினைத்துக் கொண்டான். கடைசியில் சாமியாரைப் பார்த்ததே பிரமையாக இருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது. முடிவில் இராத்திரி அவ்வளவு குடித்திருக்கக்கூடாதுஎன்று தனக்கே சொல்லிக் கொண்டான். 

        
வீட்டுக்கு வந்த அக்‌ஷய் மின்னஞ்சலில் பிக்கு தோற்றத்தில் இருந்த புகைப்படத்தையும், மைத்ரேயர் புகைப்படத்தையும் புதுடெல்லி ஆளுக்கு அனுப்பி விட்டு பேசினான். நேபாள நாட்டைச் சேர்ந்த புத்த பிக்குவாக தனக்கு ஒரு பாஸ்போர்ட் அவசரமாக வேண்டும் என்று சொல்லி விட்டு மைத்ரேயர் தோற்றத்திற்கு ஓரளவாவது பொருந்துகிற அதே வயதுள்ள ஒரு பையன் தனக்கு வேண்டும் என்று சொன்னான். “முகவெட்டும், உடல்கட்டும் அச்சாக அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஓரளவாவது பொருந்துகிற மாதிரி ஒரு பையனை ஏற்பாடு செய்யுங்கள்....

அந்தப் பையன் எப்படியிருந்தால் தேவலை என்றெல்லாம் அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான்...

எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்த புதுடெல்லி மனிதன் மூன்று நாட்களுக்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாகச் சொன்னான்.


தே நேரத்தில் சந்திரகாந்த் முகர்ஜியின் அழைப்பு மணி அழைத்தது. பேசியது ஒரு பெண் குரல். அமெரிக்க ஆங்கிலத்தில் சாயல் அவள் பேச்சில் இருந்தது.

“டிஸ்கவரி சேனலின் வரலாற்று பிரிவில் இருந்து டொமினிக் பேசுகிறேன். நான் பேசுவது டாக்டர் சந்திரகாந்த் முகர்ஜி அவர்களிடம் தானா?

ஒரு கணம் சந்திரகாந்த் முகர்ஜி பேச்சிழந்து போனார். என்றோ ஒரு நாள் வரும் என்று காத்திருந்த பெரும்புகழ் இன்றே வந்து விட்டதோ? டிஸ்கவரி சேனலில் இருந்து அழைக்கிறார்களே! நம் பெயர் அங்கு வரை சென்று விட்டதா?

அவர் பரபரப்புடன் சொன்னார். “ஆமாம் டாக்டர் சந்திரகாந்த் முகர்ஜி தான் பேசுகிறேன். என்ன விஷயம் சொல்லுங்கள்

“நாங்கள் ஆசிய வரலாற்றுத் தொடர் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். அதற்காக ஆசிய சரித்திர எழுத்தாளர்களை பேட்டி எடுத்து அவர்கள் கருத்தையும் பதிவு செய்ய நினைத்திருக்கிறோம்.  இந்திய சரித்திர எழுத்தாளராக தங்களை எங்கள் குழு தேர்ந்தெடுத்திருக்கிறது....

சந்திரகாந்த் முகர்ஜிக்கு இது கனவா என்ற சந்தேகம் வந்தது. தன் வழுக்கைத் தலையைக் கொட்டிக் கொண்டார். தலை வலித்தது. கனவல்ல நிஜம் தான்.

“மகிழ்ச்சி.... நன்றி....அதற்கு மேல் என்ன சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

அவள் தொடர்ந்தாள். எங்கள் பிரதிநிதி இப்போது கல்கத்தாவில் தான் உள்ளார். உங்களை சந்திக்க எப்போது எங்கு வர வேண்டும் என்று நீங்கள் சொன்னால் உடனே அனுப்பி வைக்கிறோம்...

சந்திரகாந்த் முகர்ஜி பரபரப்புடன் சொன்னார். “நான் தற்போது மூர்ஷிதாபாத் பக்கத்தில் இருக்கும் என் பூர்வீக கிராமத்தில் இருக்கிறேன். நான்கு நாட்கள் இங்கு குடும்ப பூஜை இருக்கிறது. என் சகோதரர்கள், சகோதரிகள் அவர்கள் குடும்பம் எல்லாம் அதற்காக வந்திருக்கிறோம். நான் கல்கத்தாவிற்கு ஐந்து நாள் கழித்து தான் வருவேன்.....

அவள் தன் குரலில் ஏமாற்றத்தைக் காட்டினாள். சீக்கிரமே தொடர் ஒளிபரப்பை ஆரம்பிக்க இருப்பதால் உங்கள் பேட்டி எவ்வளவு சீக்கிரம் கிடைக்கிறதோ அவ்வளவு எங்களுக்கு வசதியாக இருக்கும்

உங்கள் பிரதிநிதி இங்கேயே வர முடிந்தால்...அவர் இழுத்தார்.

அவள் சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். “பரவாயில்லை சார்....  கல்கத்தாவிற்கு வந்தவுடனேயே பேட்டி கொடுக்க முடியுமா?

இத்தனை கௌரவம் வழுக்கைத் தலையருக்கு இது வரை கிடைத்ததில்லை. அதனால் அவருக்கு ஆனந்தக்கண்ணீர் வந்து விட்டது. பேட்டி கொடுக்க முடியுமா என்று கேட்கிறாளே! “தாராளமாக.... நான் கல்கத்தாவுக்கு ஏழாம் தேதி காலை எட்டு மணிக்கு வந்து சேர்வேன். காலை ஒன்பது மணிக்கு மேல் எந்த நேரம் அவர் வந்தாலும் சரி....   

“மிக்க நன்றி. அவர் சரியாக பத்து மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருவார். உங்களுக்கு வசதியான நேரம் தானே அது

“வசதியான நேரம் தான்.....

“அந்த நேரத்தில் வீட்டில் கூட்டமாக ஆள்கள் சேராமல் இருந்தால் பேட்டி எடுக்க சௌகரியமாய் இருக்கும்.... பல இடங்களில் டிவி சேனலில் இருந்து வருகிறார்கள் என்றாலே கூட்டம் சேர்த்து விடுகிறார்கள். பேட்டிக்கு அது இடைஞ்சலாகி விடுகிறது.... அதனால் தயவு செய்து இந்த பேட்டியைப் பற்றி முடிகிற வரை யாரிடமும் சொல்லாமல் இருந்தால் உதவியாக இருக்கும்....

யாரிடமும் சொல்ல மாட்டேன். டிவியில் வரும்போது அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.... வீட்டில் நான் தனியாகத் தான் இருப்பேன்....

அவள் குரலில் நிம்மதி தொனித்தது. “நன்றி சார். எங்கள் சேனலில் உங்கள் பேட்டி  சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்....

அவள் கடைசி வரை அவர் முகவரியைக் கேட்கவில்லை. அது அவருக்கு பெரிய விஷயமாய் தெரியவில்லை. அவரைப் போன்ற பிரபல சரித்திர எழுத்தாளரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்த அவளுக்கு அவர் விலாசம் கண்டுபிடிப்பது கஷ்டமா என்ன?

(தொடரும்)
-          என்.கணேசன்


     

Monday, December 15, 2014

ரகசிய யோகாஸ்ரமத்தில் ரகசியக் கலைகள்!


மகாசக்தி மனிதர்கள் 5

(ரிஷி சிங் க்ரேவால் விசுத்தானந்தரிடம் கேட்டார். “கரன்சி நோட்டுக்களை நீங்கள் வரவழைப்பீர்களா?”)

“மாட்டேன். ரூபாய் நோட்டுக்களை அரசாங்கம் அச்சடிப்பது. உனக்கு வேண்டுமானால் சொல். நான் இன்னொரு வெள்ளிக்கட்டி வரவழைத்துத் தருகிறேன்என்று விசுத்தானந்தர் மறுத்து விட்டார்.

இந்த அற்புதங்களை எல்லாம் எப்படி நிகழ்த்துகிறீர்கள் என்று ரிஷி சிங் க்ரேவால் கேட்ட போது விசுத்தானந்தர் எல்லாவற்றின் மூலக்கூறு அணுக்களும் வெட்ட வெளியில் நிறைந்துள்ளன. அதில்  எது வேண்டுமோ அதில் கவனத்தைக் குவித்தால் போதும் அதை வரவழைத்து விடலாம்

மிக எளிமையாக அவர் சொல்லி விட்டாலும் அது எல்லாராலும் முடிகிற காரியமா?

சுமார் 36 வருடங்கள் கழித்து மீண்டும் ரிஷி சிங் க்ரேவால் விசுத்தானந்தரை சந்தித்த போது விசுத்தானந்தர் விளையாட்டாக “வெள்ளிக்கட்டி வேண்டுமா?  என்று கேட்டார்.  ஆன்மிகத்தில் முன்னேறி இருந்த ரிஷி சிங் க்ரேவால் “வேண்டாம். சாப்பிட ஏதாவது கிடைத்தால் போதும்என்று சொல்லி விட்டார்.

யோகி விசுத்தானந்தர் குறித்து வேறு பல தகவல்களும் சொல்லப்படுகின்றன என்றாலும் அவை செவி வழி செய்திகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. நேரடி அனுபவங்களாக அவை இல்லை. அவருடைய சீடர் நந்தலால் குப்தா என்பவர் யோகி ராஜாதிராஜ விசுத்தானந்தா-வாழ்க்கையும், தத்துவமும்என்ற நூலில் தன் குருவைப் பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்கள் எழுதி உள்ளார்.

ஒரு காகிதத்தில் கோபிநாத் என்பவரை சில வார்த்தைகள் எழுதச் சொல்லி விட்டு பின் அந்தக் காகிதத்தை நெருப்பில் எரிக்கச் சொல்லி விட்டாராம். அந்த சாம்பலில் இருந்து மீண்டும் அந்தக் காகிதத்தை முன்பு போலவே வரவழைத்துக் காட்டினார் என்று ஒரு தகவல் அந்த நூலில் உள்ளது. அதே போல அவருடைய அண்ணன் தங்கள் இறந்து போன தந்தையை அதே உருவில் திரும்பவும் பார்க்கவும், பேசவும் ஆசைப்பட்டாராம். அதில் நீ என்ன லாபம் அடையப் போகிறாய், அது இயற்கைக்கு எதிரானது, அதனால் தீய விளைவுகளும் கூட ஏற்படலாம் என்றெல்லாம் சொல்லி ஆத்மா உடல்களை ஆடையாக மாற்றிக் கொண்டே போகிறது அதனால் தனிப்பட்ட உடல் மீது அன்பு கொள்வது அர்த்தமற்றது என்றெல்லாம் சொல்லியும் அவர் கேட்கவில்லையாம். கடைசியில் விசுத்தானந்தர் ஒரு குறிப்பிட்ட அறையைத் தேர்ந்தெடுத்து அதில் புத்தம்புதிய கட்டில் படுக்கையை வைத்து தன் யோக சக்தியால் தந்தையை பழைய உருவிலேயே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரவழைத்தாராம். அந்தத் தந்தை அந்தக் கட்டிலில் அமர்ந்து அவர்களுடன் 15 நிமிடங்கள் இருந்து மூத்த மகன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்து விட்டு மறைந்தாராம். விசுத்தானந்தரின் அண்ணன் அப்போதைக்குத் திருப்தி அடைந்தாலும் பிற்காலத்தில் இதனாலேயே விசுத்தானந்தர் கணித்தபடி ஒரு விசித்திர நோய்வாய்ப் பட்டு இறந்து போனாராம். அதே போல காசி, கல்கத்தா, பர்த்வான் முதலிய இடங்களில் ஆசிரமங்கள் வைத்திருந்த விசுத்தானந்தர் அங்கே இருந்து கொண்டே மற்ற இடங்களுக்கும் தன் யோக சக்தியால் சென்று, செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து வந்தார் என்றும் அந்த நூலில் அவர் தெரிவிக்கிறார். இது போல இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. இந்தத் தகவல்கள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது நமக்குத் தெரியாது.

முந்தைய மூன்று நபர்களின் விசுத்தானந்தருடனான அனுபவங்கள் நேரடியானவை. அவர்கள் அவருக்கு நெருங்கிய சம்பந்தம் இல்லாதவர்கள். அதனால் அவர்கள் விசுத்தானந்தர் பற்றி கதைகளைத் திரித்துக் கூற அவசியம் இல்லாதவர்கள். மேலும் அவர்கள் சொன்ன அனுபவங்களில் அடிப்படை ஒற்றுமை இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் விசுத்தானந்தரின் சீடரான நந்தலால் குப்தாவின் அறிவுக்கூர்மை மற்றும் மனப்பக்குவம் குறித்து நாம் அதிகம் அறியோம். பல சமயங்களில் உண்மையின் மீது இருக்கும் நாட்டத்தை விட அதிகமாய் குருட்டுத்தனமான நம்பிக்கையும் பக்தியும் சீடர்களுக்குத் தங்கள் குருவின் மீது வருவதுண்டு. அப்போது அவர்களது கற்பனையும், மற்றவர்கள் கற்பனையும் அவர்கள் சொல்வதில் சேர்ந்து கொள்வதுண்டு. அதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

விசுத்தானந்தர் எந்தவொரு நறுமணத்தையும் ஏற்படுத்த வல்லவர் என்பதும் அந்தரத்தில் இருந்து பொருள்களை தருவித்துக் கொடுப்பதிலும் வல்லவர் என்பதில் மட்டும் எல்லோரும் ஒருமித்துப் போகிறார்கள். பால் ப்ரண்டனிடம் அவர் கூறியது போல சூரிய விஞ்ஞானம்என்ற யோக ரகசியக் கலையின் மூலம் அவர் அதை சாதித்தாரா, இல்லை, ரிஷி சிங் க்ரேவால் சொன்னது போல பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள அணுக்களை தன் வசப்படுத்திக் கொண்டு அதை சாதித்தாரா, இல்லை இரண்டும் பெயர்கள் வேறென்றாலும் ஒரே கலை தானா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பொதுவாக மேல்நிலை யோகிகள் தங்கள் யோக சக்திகளை அவசியமான சமயங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்பதை ஆரம்பத்திலேயே சொன்னோம். இவரைப் பொருத்த வரை இவருடைய யோக சக்திகள் உண்மையானது இவர் எந்த வகை ஏமாற்று வேலைகளிலும் ஈடுபட்டு அவற்றை வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட அவசியமானதற்கு மட்டுமே இவர் அவற்றை உபயோகப்படுத்தினார் என்று சொல்ல முடியாது. யோகானந்தர் கூறியது போல அந்த நறுமணங்களை ஏற்படுத்தி ஒரு யோகி என்ன சாதிக்கிறார் என்ற கேள்வி நம்மிடையே தங்கித் தான் போகிறது. அதே போல பால் ப்ரண்டனிடம் காட்டிய அற்புதமான ஒரு குருவியைக் கொன்று பின் உயிர்ப்பித்துக் காட்டியதிலும், ரிஷி சிங் க்ரேவாலுக்கு வெள்ளிக்கட்டி வரவழைத்துத் தந்ததிலும் சக்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய யோகத்தின் மேல்நிலை நிரூபிக்கப்படவில்லை என்றே நாம் நடுநிலைமையோடு சொல்ல வேண்டும். ஒரு வேளை அவர் தந்தையை 15 நிமிடங்களுக்கு உயிர்ப்பித்திருந்தால் அதுவும் இந்தக் கருத்தில் சேர்க்கப்பட வேண்டியதே!

விசுத்தானந்தர் குறித்து வடமொழியில் “ஸ்ரீ ஸ்ரீ விசுத்தானந்த ப்ரசங்காஎன்ற நூலை எழுதியிருக்கும் கோபிநாத் கவிராஜும் அந்த நூலில் தன் குருநாதரான விசுத்தானந்தர் குறித்து நிறைய தகவல்கள் எழுதி இருக்கிறார். இந்த கோபிநாத் கவிராஜ் தான் பால் ப்ரண்டனை விசுத்தானந்தரிடம் அழைத்துச் சென்றவர். இவர் சாகித்ய அகாடமி மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயர்ந்த பட்டங்களைப் பெற்றவர்.  

திபெத்தில் இருக்கும் க்யான்கஞ்ச் யோகாஸ்ரமம்என்ற ரகசிய இடத்தில் தான் விசுத்தானந்தர் 12 ஆண்டுகள் கடுமையான தவப்பயிற்சிகள் மேற்கொண்டதாக கவிராஜ் கூறுகிறார். அவரது பெரும்பாலான சக்திகள் சூரிய விஞ்ஞானம் என்ற ரகசியக்கலை மூலமாகவே செயல்படுகின்றன என்று சொல்லும் கோபிநாத் கவிராஜ் விசுத்தானந்தர் சூரிய விஞ்ஞானம் மட்டுமல்லாமல் சந்திர விஞ்ஞானம், வாயு விஞ்ஞானம், சப்த விஞ்ஞானம் போன்ற விஞ்ஞானக் கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றிருந்ததாகச் சொல்கிறார்.  அந்த விஞ்ஞானக் கலைகள் எப்படி, எந்த மகாசக்திகளை எல்லாம் ஏற்படுத்துகின்றன, அவற்றைப் பயில்வது எப்படி என்கிற விவரங்கள் நம்மால் அறிய முடியவில்லை. அக்கால யோகிகள் இயற்கை சக்திகளின் மீது மிக உயர்ந்த ஆளுமையைப் பெற்றிருந்த போதிலும் கூட அதை எல்லோருக்கும் கற்றுத்தரும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை. முறையாகப் பயன்படுத்தப்படா விட்டால் இந்த மகாசக்திகள் அழிவுக்குக் காரணமாகி விடும் என்ற எச்சரிக்கை உணர்வு அவர்களிடம் இருந்து வந்தது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அதே போல் க்யான்கஞ்ச் யோகாஸ்ரமம் கைலாஷ், மானசரோவர் அருகில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே ஒழிய அது யாரும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத மறைவான இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அதே பகுதியில் பயணித்தாலும் அது போன்ற ரகசிய யோகாஸ்ரமங்கள் இருப்பது பயணிகளின் கவனத்தை ஈர்க்காது என்று சொல்கிறார்கள்.

சரி. இனி அடுத்த ஒரு சுவாரசியமான யோகியைப் பற்றி அறிந்து கொள்ளலாமா?

(தொடரும்)

-என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி – 03-10-2014

Thursday, December 11, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 24


 புத்தகயாவில் இருந்து திரும்பி வந்த அக்‌ஷய் திபெத் போக முடிவெடுத்திருப்பதைச் சொன்னதில் இருந்து அந்த வீட்டில் வார்த்தைப்படுத்தாத இறுக்கம் நிலவியது. எல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டவன் வருண் தான். இரவில் வீடு வந்து சேர்ந்த அக்‌ஷய் வருணிடம் நிறைய நேரம் பேசினான். அவன் வருணை சமாதானப்படுத்த எடுத்துக் கொண்ட அதிகபட்ச முயற்சிகளைப் பார்க்க சஹானாவுக்கே பாவமாக இருந்தது. ஆனாலும் வருண் சமாதானமாகி விடவில்லை.

மறுநாள் காலையிலும் வருண் உர்ரென்று இருந்தான். அக்‌ஷய் காலை ஓட்டத்திற்குப் போயிருந்த போது சஹானா வருணைக் கடிந்து கொண்டாள். “நீ அவரை நிறையவே இம்சிக்கிறாய். அவரானதால் தான் இத்தனை பொறுத்துக் கொள்கிறார்....

‘உன் அப்பாவாக இருந்திருந்தால் நீ எதிர்த்து முதல் வார்த்தையைக் கூடச் சொல்லியிருக்க முடியாதுஎன்று சொல்ல வந்தவள் சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். இது போல சில வருடங்களுக்கு முன் அவனிடம் ஒரு தடவை சொல்லி வருண் தாயிடம் ஆறு மாதம் பேசவில்லை. அவன் அக்‌ஷயின் மகன் அல்ல என்கிற உண்மையை யார் சொன்னாலும் அவனால் தாங்கிக் கொள்ள முடிந்ததில்லை. அதனால் அந்த வீட்டில் யாரும் அதைப் பற்றிப் பேசியதில்லை. அதனால் கௌதம் கூட வருண் அக்‌ஷயின் மகன் அல்ல, தாய் மட்டுமே தங்களுக்குப் பொதுவானவள் என்கிற உண்மையை அறிந்திருக்கவில்லை. அவன் நம்பிக் கொண்டிருப்பது வருணும் தானும் அக்‌ஷய்-சஹானாவின் பிள்ளைகள், மரகதம் அக்‌ஷயின் பெரியம்மா. அவளுக்கு பிள்ளைகள் யாரும் இல்லாததால் தங்கை சாரதாவின் மகனான அக்‌ஷயுடன் இருக்கிறாள் என்பது தான்...

அக்‌ஷயை வருண் இம்சிப்பதாய் சஹானா சொன்னவுடனேயே வருணுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் தாயையும் பாட்டியையும் பார்த்து கத்தினான். “காரணம் நான் அவரை அவ்வளவு நேசிக்கிறேன்.... நீங்கள் இரண்டு பேரும் என் மாதிரியே வருத்தப்பட்டிருந்தால் அப்பா கண்டிப்பாக திபெத் போக ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.     

சஹானா வருத்தத்துடன் சொன்னாள். “என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் அவரைத் தடுக்கவில்லை வருண் 

உண்மையில் சஹானாவால் கூட முந்தைய இரவில் உறங்க முடிந்திருக்கவில்லை. ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும். அதனால் எதைப்பற்றியும் கவலைப்பட்டு என்னவாகப் போகிறதுஎன்று அக்‌ஷய் அடிக்கடி சொல்வான். அவன் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று புரிந்தாலும் அந்த விதி என்ன என்று அறியாமல் ஏற்படும் தடுமாற்றத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.

தாயின் வருத்தத்தை பார்வையிலேயே உணர முடிந்த வருண் அடுத்ததாக மரகதத்தைப் பார்த்தான். மரகதம் வெகுளியாகச் சொன்னாள். “நான் என்றைக்கு வாயைத் திறந்திருக்கிறேன்? உங்கப்பன் காலத்தில் இருந்தே மவுனமாய் தான் இருந்திருக்கிறேன்...

சஹானா மாமியாரைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போல் வருண் எரிமலையாக வெடித்தான். “அந்த ஆளை எங்கப்பா என்று சொல்லாதீர்கள். உங்கள் மகன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். அக்‌ஷய் தான் என் அப்பா. புரிகிறதா?

மரகதம் பாவமாகத் தலையாட்டினாள்.   அந்த ஆத்மா இப்போது எந்த உலகத்தில் இருக்கிறதோ. இன்னமும் இவன் அவன் மீது வெறுப்பை சுமந்து கொண்டிருக்கிறானேஎன்று அவளுக்குத் தோன்றியது.

வருணுக்கு இனி சிறிது நேரம் அங்கே இருந்தால் அவர்கள் இருவரையும் மேலும் வார்த்தைகளால் காயப்படுத்தி விடுவோம் என்று பயமாக இருந்ததால் வேறெதுவும் சொல்லாமல் உடனே வீட்டை விட்டு வெளியேறினான்.

தூக்கக்கலக்கத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டே வந்த கௌதம் தாயைக் கேட்டான். “அண்ணன் ஏன் கோபமாய் போகிறான்?

அப்பா திபெத் போகிறது அவனுக்குப் பிடிக்கவில்லை...

“சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்கிறான் அவன். நானே பரவாயில்லைஎன்று பெருமையாக அவன் தாயைப் பார்த்தான். விளையாட்டைத் தவிர வேறு எதிலுமே கவனம் அதிகம் இல்லாத அவனுக்கு தற்போதைய நிலைமையின் பூதாகரம் தெரியவில்லை. தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்கிற ஆர்வமும் அவனிடம் இருக்கவில்லை.  அப்பா எதோ வேலையாக திபெத் போகிறார், வேலை முடித்து சில நாள் கழித்து திரும்பி வருவார், அந்த சில நாள் பிரிவைக்கூடத் தாங்க முடியாமல் அண்ணன் அலட்டிக் கொள்கிறான் என்று தான் நினைத்தான்.

மரகதம் அவனை இறுக்கி அணைத்தபடி சொன்னாள். “நீ இது மாதிரி அவனிடம் எதுவும் சொல்லப்போகாதே. கோபித்துக் கொள்வான்....

“சரி பாட்டி.... எல்லாம் அப்பா அவனுக்குக் கொடுக்கிற இடம்... செல்லம் கொடுத்து அவர் அவனைக் கெடுத்து விட்டார் என்று நினைக்கிறேன்என்று எல்லாம் தெரிந்தவனாக அவன் சொன்ன போது சஹானாவும், மரகதமும் ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டார்கள்.

“திபெத்தில் என்ன விளையாட்டு சாமான் கிடைக்கும்? கௌதம் அம்மாவிடம் ஆவலாகக் கேட்டான்.

லீ க்யாங் ஆவணக்காப்பகத்தில் நுழைந்த போது காலை மணி 10.55. அவனைப் பார்த்தவுடனேயே பொறுப்பாளருக்குப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. ‘என்ன மனிதனிவன். இவனுக்கு வேறெந்த வேலையும் கிடையாதா?

“நான் கேட்டதெல்லாம் தயாராக இருக்கிறதா?என்று வந்தவுடனே முதல் கேள்வியாக லீ க்யாங் கேட்டான்.

பொறுப்பாளர் காலை வந்தவுடன் லீ கியாங் தேவை என்று சொன்னதை எல்லாம் தன் உதவியாளனிடம் சொல்லி இருந்தார். அதனால் அவர் உடனே தன் உதவியாளனை அழைத்து “எல்லாம் தயாரா?என்று கேட்க உதவியாளன் “தயாராகிக் கொண்டே இருக்கிறதுஎன்று சொன்னான்.

லீ க்யாங் பொறுப்பாளரை பார்வையால் எரித்து விட்டு உதவியாளனிடம் சொன்னான். “பத்து நிமிடத்தில் தயாராகா விட்டால் உன்னை திபெத் ஆவணக்காப்பகத்திற்கே மாற்ற நான் சிபாரிசு செய்யப் போகிறேன். அங்கே உன்னைப் போன்ற ஒரு ஆள் தேவையாக இருக்கிறது

உதவியாளன் துணுக்குற்றான். அவன் பிள்ளைக்குட்டிக்காரன். பீஜிங்கில் தான் அவன் குடும்பம் இருக்கிறது. திபெத்திற்குப் போய் சிரமப்பட அவன் தயாராக இல்லை. தலையசைத்து விட்டு வேகமாக அவன் நகர்ந்தான். பொறுப்பாளர் அடுத்ததாக நம்மை ஏதும் சொல்லி விடுவானோ என்று பயந்து போய் சிரமம் பார்க்காமல் எழுந்து வேகமாக உதவியாளனைப் பின் தொடர்ந்தார்.

அவர் அத்தனை வேகமாக நடந்து இது வரை பார்த்திராத உதவியாளன் ‘இந்த உடம்பால் இப்படிக்கூட நகர முடியுமாஎன்று வியந்தான். அவன் கம்ப்யூட்டரில் இருந்து பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடிகளின் நகல்கள் வேண்டி இது வரை விண்ணப்பித்தவர்களின் விவரங்களை வேக வேகமாக எடுக்க, பொறுப்பாளர் அந்த ஓலைச்சுவடிகளின் மொழிபெயர்ப்புகளை அவசர அவசரமாக பிரதிகள் எடுக்க ஆரம்பித்தார். அடுத்த ஒன்பதாவது நிமிடம் லீ க்யாங்கின் கையில் அவன் கேட்டிருந்தவை இருந்தன. பொறுப்பாளர் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தார். உதவியாளன் பதற்றத்தில் இருந்தான்.

வாங்கிக் கொண்டு ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசாமல் லீ க்யாங் அங்கிருந்து வெளியேறினான். பொறுப்பாளர் உதவியாளனிடம் சொன்னார். “கடவுள் எப்படிப்பட்டவனை எல்லாம் சிருஷ்டி செய்திருக்கிறார் பார்த்தாயா!

உதவியாளன் சொன்னான். “சிருஷ்டி செய்தது தப்பில்லை சார். நம்மிடம் அனுப்பி வைப்பது தான் கஷ்டமாய் இருக்கிறது

தன் இருக்கையில் பொத்தென்று சாய்ந்த பொறுப்பாளர் அந்த சிருஷ்டியை கடவுள் இனி அடிக்கடி இங்கே அனுப்பாமல் இருக்கிற அளவுக்கு கருணை காட்டினால் தேவலை என்று நினைத்தார்....
                                   

லீ க்யாங் தன் அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடிகளின் நகல்கள் வேண்டி இது வரை விண்ணப்பித்தவர்களின் விவரங்களைக் கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் 73 பேர் இது வரை விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் பல நாட்டுக்காரர்கள் இருந்தார்கள். விண்ணப்பித்த தேதி, விண்ணப்பித்தவர் பெயர், விலாசம், தொலைபேசி எண், தொழில், விண்ணப்பிப்பதன் நோக்கம், மற்ற விவரங்கள் போன்ற விவரங்கள் அதில் இருந்தன. ஒவ்வொருவரைப் பற்றியும் படித்துக் கொண்டே வந்தான்.

எல்லாரைப் பற்றியும் படித்து முடித்த பின் கண்களை மூடிக்கொண்டு அந்த விவரங்களை மனதில் ஊறப்போட்ட லீ க்யாங் மறுபடியும் கண்களைத் திறந்து அந்த பட்டியலில் இரண்டு பெயர்களை பேனாவால் வட்டமிட்டான். ஒன்று திபெத்தியப் பெயர். டோக்கியோவில் வசிப்பதாக விலாசம் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொன்று இந்தியப்பெயர். பெயர் டாக்டர் சந்திரகாந்த் முகர்ஜி என்றிருந்தது. கல்கத்தாவில் வசிப்பதாக விலாசம் இருந்தது. சரித்திர எழுத்தாளர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டையுமே லீ க்யாங் உற்றுப் பார்த்தான். டாக்டர் என்பதும், கல்கத்தா என்பதும் அவனை யோசிக்க வைத்தது.

தலாய் லாமாவை புதுடெல்லி விமான நிலையத்தில் சந்தித்த அந்த வழுக்கைத் தலையனை அங்கு கொண்டு வந்த டாக்சி டிரைவர் அந்த ஆள் டாக்டர் என்றும் கல்கத்தாக்காரன் என்று சொல்லியிருந்ததை லீ க்யாங் யோசித்தான். டாக்டர் என்றால் மருத்துவத்தொழில் பார்ப்பவர் என்று தேடி தான் கிடைக்கவில்லை. ஏன் டாக்டரேட் வாங்கிய ஆசாமியாக இருக்கக்கூடாது....

உடனடியாக கூகுளில் டாக்டர் சந்திரகாந்த் முகர்ஜி, கல்கத்தா என்று தேடினான். கடைசியில் ஒரு முகநூல் முகவரி கிடைத்தது.   

முகநூல் போய் பார்த்தபோது அதில் அந்த வழுக்கைத்தலையர் நான் தான் அந்த ஆசாமி என்பது போல் புன்னகையுடன் தெரிந்தார்.

பதிலுக்கு லீ க்யாங் புன்னகைத்தான். அவனுடைய உள்ளுணர்வு பொய்க்கவில்லை....

(தொடரும்)
என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)