சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 30, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 56


லீ க்யாங் ராணுவ மிடுக்குடன் வேகமாகப் படியேறி வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஒற்றைக்கண் பிக்குவுக்கு மனம் திக் திக் என்றது. என்ன கேட்பானோ? என்ன சொல்வானோ? பின்னால் திரும்பி டோர்ஜேயைப் பார்த்தார். டோர்ஜே தன் இருக்கையில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தான். லீ க்யாங் அவனை மைத்ரேயனாகவே, அதாவது - கம்பீரமாக, புன்முறுவல் பூத்த முகம் கொண்டவனாக, யாருக்கும் தலை வணங்காதவனாக, தியானம், ஆன்மிகம், புத்தரின் போதனைகள் ஆகியவற்றில் பாண்டித்தியம் உள்ளவனாக- வாழச் சொல்லிக் கட்டாயப்படுத்தி இருந்தான். தன்னிடமே கூட அப்படியே நடந்து காட்டி அசத்த வேண்டும் என்று சென்ற முறை சொல்லி இருந்தான். அதனால் ஒற்றைக் கண் பிக்கு நேற்று பல முறை ஒத்திகை செய்து டோர்ஜேயை தயார்ப்படுத்தி இருந்தார். பின்னால் திரும்பியவர் டோர்ஜேயை தயார் தானேஎன்று பார்வையால் கேட்டார். டோர்ஜே தலையசைத்தான்.

லீ க்யாங் ஒற்றைக்கண் பிக்குவிடம் வாசலிலேயே கேட்டான். “எல்லாம் எப்படிப் போகிறது?

“நன்றாகப் போகிறதுஎன்று ஒற்றைக்கண் பிக்கு பதில் அளித்தார்.

லீ க்யாங் உள்ளே நுழைந்தான். இருக்கையில் அமர்ந்திருந்த டோர்ஜேயைப் பார்த்து தலை வணங்கினான். “வணங்குகிறேன் மைத்ரேயரே!

லீ க்யாங்கைப் பார்த்தவுடனே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனாலும் பின் டோர்ஜே சமாளித்துக் கொண்டு புன்முறுவலுடன் வலது கையை ஆசி வழங்கும் பாவனையில் உயர்த்தி “நலம் உண்டாகட்டும்என்று சொன்னான். கண்களில் தெரிந்த பயத்தைத் தவிர வேறெந்த குறையையும் லீ க்யாங்கால் காண முடியவில்லை. அவனுக்கு அந்தப் பயம் பிடித்திருந்தது. உலக அரங்கில் இவனை மைத்ரேயனாக அறிமுகப்படுத்தி பிரபலமாக்கினாலும் என்றும் அடங்கி இருப்பான் என்று தோன்றியது. தோற்றத்திலும் டோர்ஜே மெருகு ஏறி இருந்தான். நேரா நேரத்திற்குக் கிடைக்கும் சத்தான உயர் வகை உணவு நன்றாகவே வேலை செய்திருக்கிறது....

டோர்ஜேவுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த லீ க்யாங் அவனிடம் பணிவான குரலில் சொன்னான். “மைத்ரேயரே, மனதுக்கு இதம் அளிக்கும் ஆன்மீக ஞானத்தை எனக்கு சில நிமிடங்கள் சொல்லி அருள்வீர்களா?

டோர்ஜே ஒற்றைக்கண் பிக்குவைப் பார்த்தான். கற்றுத் தந்தவைகளில் எதைச் சொல்வது என்கிற கேள்வி அவன் பார்வையில் தெரிந்தது. எதாவது சொல் என்பது போல் ஒற்றைக்கண் பிக்கு பார்த்தார். டோர்ஜே லீ க்யாங் பக்கம்  திரும்பி தம்மபதத்தில் இருந்தும், புத்த மத பிரதான சூத்திரங்களில் இருந்தும் மேற்கோள்கள் சொல்லி விளக்கம் சொல்ல ஆரம்பித்தான். சுமார் பத்து நிமிடங்கள் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வந்த லீ க்யாங்குக்கு நிறுத்தி நிதானமாக நல்ல குரல் வளத்துடனும் உச்சரிப்புடனும் டோர்ஜே சொன்ன விதம் திருப்தியாக இருந்தது. மனப்பாடம் செய்து தான் சொல்கின்றான் என்ற போதும் கேட்பவர்கள் அதைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாது. எல்லாம் புரிந்து சொல்வது போல் இருந்தது அவனது முகபாவனை. ஆனால் அவனுக்கு உண்மையில் எத்தனை புரிந்திருக்கும் என்று லீ க்யாங்குக்கு சந்தேகமாக இருந்தது.

லீ க்யாங் முகத்தையே ஒற்றைக்கண் பிக்கு கவனித்துக் கொண்டிருந்தார். லீ க்யாங் ஓரளவு புத்த மத நூல்களையும் கற்றுத் தேர்ந்தவன் என்று அவர் முன்பே கேள்விப்பட்டிருந்தார். அதை அவர் டோர்ஜேயிடமும் சொல்லி இருந்தார். தவறாகவோ, முரண்பாடாகவோ அவன் ஏதாவது சொல்லி விட்டால் லீ க்யாங் கண்டுபிடித்து விடுவான் என்று எச்சரித்து இருந்தார். நல்ல வேளையாக டோர்ஜே தவறிழைக்கவில்லை. லீ க்யாங் முகத்தில் திருப்தி தெரிந்ததைப் பார்த்த பிறகு தான் அவருக்கு நிம்மதி வந்தது. 

லீ க்யாங்கால் உண்மையான மைத்ரேயனை இந்தக் கணத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவன் ஒரு சூத்திரமாவது சொல்லி அதற்கு விளக்கம் சொல்வானா? இப்படி கம்பீரமாய் அமர்ந்திருப்பானா? அழகாய் புன்னகை செய்வானா? என்றெல்லாம் கேள்விகள் மனதில் எழுந்தன. இதெல்லாம் அவனால் முடியாது என்ற பதிலும் திருப்திகரமாக மனதில் கிடைத்தது. ஆனால் அந்தத் திருப்தியைக் குலைக்கும்படியாக வாங் சாவொ அனுப்பி இருந்த ஒரு தகவலும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. உண்மையான மைத்ரேயன் மணிக்கணக்கில் ஓரிடத்தில் தியானத்தில் உட்கார்ந்திருப்பானாம். அந்த நேரத்தில் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரியாதாம். ஆனால் இந்தச் சிறுவன் தியானம் என்ன என்பதைப் பல சூத்திரங்களில் விளக்க முடிந்தாலும் இன்னமும் அதை அனுபவத்தில் அறியாதவன்....
   
லீ க்யாங் முகத்தில் ஒரு சுருக்கம் வந்து போனது. ஒற்றைக்கண் பிக்கு  ஒரு கணம் பயந்தார். ஆனால் லீ க்யாங் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான். உண்மையில் தியானம் செய்வதாய்ச் சொல்பவர்களில் 99 சதவீதம் தியானத்தை அறியாதவர்களே. சொல்லிக் கொடுத்த ஏதோ ஒரு மனப்பயிற்சியைச் செய்தபடி ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருப்பதையே அவர்கள் தியானம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தியானம் என்பதைத் தாங்களே அனுபவித்திராதவர்கள் இவனை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

தன் சிந்தனைகளில் இருந்து மீண்டு டோர்ஜேயின் சூத்திரங்களைச் சிறிது கேட்டுக் கொண்டிருந்து விட்டு லீ க்யாங் திடீரென்று சைகையால்  டோர்ஜேயை நிறுத்தினான். டோர்ஜே மனதில் கலவரம் படர லீ க்யாங்கைப் பார்த்தான். லீ க்யாங் சொன்னான். “தங்கள் நேரத்தை நான் அதிகம் எடுத்துக் கொண்டு விட்டேன். தாங்கள் செல்லலாம். நான் தங்கள் ஆசிரியரிடம் சிறிது பேச வேண்டி இருக்கிறது...

டோர்ஜே தலையசைத்து விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டான். லீ க்யாங்  ஒற்றைக்கண் பிக்குவை அமரச் சொன்னான். அவர் அடக்க ஒடுக்கமாக அவன் அதிரில் அமர்ந்தார்.

“சாதாரண ஆள்களின் பார்வைக்கு இந்த அளவு முன்னேற்றம் போதும் என்றாலும் புத்தரின் மறு அவதாரம் என்ற நோக்கில் பார்க்கிறவர்களுக்கு இது போதாது பிக்குவேலீ க்யாங் சொன்ன போது ஒற்றைக்கண் பிக்கு தயக்கத்துடன் சொன்னார். இவன் வயதிற்கு இவன் அடைந்திருக்கும் முன்னேற்றம் மிக அதிகம் தான் சார்

லீ க்யாங் ஒற்றைக்கண் பிக்குவைக் கூர்மையாகப் பார்த்தபடி சொன்னான். “ஆசிரியர் திருப்தி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு மாணவன் முன்னேறுவதில்லை பிக்குவே

ஒற்றைக்கண் பிக்கு தாழ்ந்த குரலில் சொன்னார். “என் திருப்தியை நான் அவனுக்குத் தெரியப்படுத்துவதில்லை சார். நான் என் அனுபவத்தில் ஏராளமான மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவு சூட்டிப்பான, புத்திசாலி மாணவனை இது வரை நான் பார்த்ததில்லை. அதைத் தான் சொன்னேன்

“நீங்கள் அவதார புருஷர்களைப் பார்த்திருக்கிறீர்களா பிக்குவே?

ஒற்றைக்கண் பிக்கு விழித்தார். லீ க்யாங் கடுமையாகச் சொன்னான். சமுத்திரத்தைப் பற்றி நான் சொல்கிறேன். நீங்கள் ஏரியைப் பற்றிப் பேசுகிறீர்கள். மைத்ரேயனாக இவனை அறிவித்தவுடன் வேலை முடிந்து விடப் போவதில்லை. உலக நாடுகளும், புத்த மத மேதைகளும் இவனை மைத்ரேயன் என்று நம்ப வேண்டும். யாருடைய கருத்துக்கெல்லாம் உலகில் மதிப்பிருக்கிறதோ அவர்கள் பார்வையில் இவன் தேற வேண்டும். அதற்கு இது போதாது என்று சொன்னேன்....

அவன் சொல்வது அவருக்குப் புரிந்தது. புரியாதது ஒன்றே ஒன்று தான். சற்று முன் இவன் முகத்தில் திருப்தி தெரிந்தது போல் இருந்ததே அது என் பார்வைக் கோளாறோ? அவனைப் பார்த்து அவர் தலை அசைத்தார்.

லீ க்யாங் மெல்ல சொன்னான். “இன்னொருவனும் மைத்ரேயன் என்று கிளம்பி இருக்கிறான். அதனால் தான் இவன் எல்லாவற்றிலும் அவனை முந்தி இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்

ஒற்றைக்கண் பிக்குவின் பலத்த சந்தேகம் உறுதியாகி விட்டது. அவர் அதிர்ச்சியுடன் லீ க்யாங்கைப் பார்த்தார். அந்த இன்னொருவன் உண்மையான மைத்ரேயனாகவே இருக்க வேண்டும். போலி என்றால் லீ க்யாங் அதை முளையிலேயே கிள்ளி வீசி எறிந்திருப்பான்.

லீ க்யாங் மைத்ரேயனின் ஒரு புகைப்படத்தை ஒற்றைக்கண் பிக்குவிடம் நீட்டினான். “இவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கை நடுங்க ஒற்றைக்கண் பிக்கு அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தார். அந்தப் புகைப்படத்தில் ஒரு கிராமத்து மந்த புத்திச் சிறுவன் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒற்றைக்கண் பிக்கு ஆச்சரியத்துடன் லீ க்யாங்கைப் பார்த்தார். இவன் தன்னை மைத்ரேயன் என்று சொல்லிக் கொள்கிறானா என்ன?

“இவன் அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லைஉங்கள் குருவான ஆசான் தான் அப்படிச் சொல்கிறார்

ஆசான் அவனை மைத்ரேயன் என்கிறார் என்றால் அவன் மைத்ரேயனாகத் தான் இருக்க வேண்டும். ஒற்றைக்கண் பிக்குவுக்குச் சந்தேகமே இல்லை. ஆசான் கணிப்பு பொய்க்காது....

லீ க்யாங் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவரது எண்ண ஓட்டத்தை அவனால் படிக்க முடிந்தது. ஆரம்பத்தில் அவன் மைத்ரேயனாக இருக்கவே முடியாது என்று நினைத்த மனிதர் பிறகு ஆசான் சொன்னால் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தது ஆசானின் மேல் அவர் சீடன் வைத்திருந்த அசாத்திய நம்பிக்கையை அவனுக்கு உணர்த்தியது.

ஒற்றைக்கண் பிக்கு அந்தப் புகைப்படத்தைக் கூர்மையாகப் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். லீ க்யாங் அவரிடம் மறுபடியும் கேட்டான். “இவனைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

ஆசான் கணிப்பில் தவறு இருக்க வாய்ப்பில்லைஎன்று பலவீனமான குரலில் ஒற்றைக்கண் பிக்கு சொன்னார். சில வினாடிகள் யோசனைக்குப் பின் அதே பலவீனமான குரலில் மெல்ல லீ க்யாங்கைக் கேட்டார். “இவன்... இவன்.... பத்மசாம்பவாவின் ஓலையில் குறிப்பிட்ட காலத்திலேயே ...தான் பிறந்திருக்கிறானா?

லீ க்யாங் ஆமென்று தலையசைத்தான். ஒற்றைக்கண் பிக்குவின் சந்தேகம் முற்றிலுமாகத் தீர்ந்தது. அவர் திகைப்புடன் லீ க்யாங்கைக் கேட்டார். நிஜ மைத்ரேயன் இருக்கிறான் என்றால் நாம் எப்படி டோர்ஜேயை மைத்ரேயனாக அரங்கேற்ற முடியும்?

“நிஜத்தை மக்கள் எந்தக் காலத்தில் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்பட்டிருக்கிறார்கள் பிக்குவே. தோற்றத்தில் எப்படி, பேசுவதில் எப்படி, தெரிந்தவர்களும், வேண்டியவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை எல்லாம் வைத்துத் தானே எதையும் நம்புகிறார்கள் அல்லது நம்ப மறுக்கிறார்கள். அவன் புகைப்படத்தைப் பார்த்தவுடனே உங்களுக்கே என்ன தோன்றியது. ஆசான் சொன்னதையும், பத்மசாம்பவா சொன்னதையும் வைத்துத் தானே நீங்களே அவன் மைத்ரேயன் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்?

ஒற்றைக்கண் பிக்குவுக்கு அவன் வாதத்தில் தவறு காணத் தோன்றவில்லை. ஆனால்.... ஆனால்.... கடைசியில் வாய் விட்டே அவர் சொல்லியே விட்டார். “அசல் இருக்கிற வரை நகல் நிம்மதியாக இருக்க முடியாது அல்லவா?

லீ க்யாங் மெலிதான புன்னகையுடன் கேட்டான். “அப்படியானால் அசலை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்று சொல்கிறீர்களா பிக்குவே?

ஒற்றைக்கண் பிக்கு அதற்கு நேரடியாகப் பதில் சொல்லத் தயங்கினார். பின் சாதுர்யமாகச் சொன்னார். “பத்மசாம்பவாவின் ஓலைக்குறிப்புகளில் மைத்ரேயனுக்கு பத்தாண்டுகளுக்குப் பின் ஒரு ஆண்டு காலம் கண்டம் என்றும் எழுதி இருந்ததாக ரகசியமாய் சிலர் பேசிக்கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. கண்டம் என்று பத்மசாம்பவாவே எழுதி வைத்திருக்கிறார் என்றால் மைத்ரேயன் மரணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். அப்படி ஆகி விட்டால் நமக்குப் பிரச்னை இல்லை.....

சில சமயங்களில் ஆன்மீகவாதிகள் அரசியல்வாதிகளை மிஞ்சி விடுகிறார்கள் என்று எண்ணிய லீ க்யாங் புன்னகைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

(1.8.2015 முதல் 11.8.2015 வரை ஈரோட்டில் வ.உ.சி மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 41 எண் அரங்கில் என்னுடைய நூல்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். புத்தகக் கண்காட்சிக்குச் செல்பவர்களும், அருகில் உள்ளவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

அன்புடன்
என்.கணேசன்)

Monday, July 27, 2015

எல்லாம் இழந்த போதும் முயற்சி இழக்காதவர்!

சிகரம் தொட்ட அகரம்-3
வெற்றியின் உச்சத்தை அடைய வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும், விதி ஒத்துழைக்க வேண்டும் என்றெல்லாம் அபிப்பிராயம் கிட்டத்தட்ட எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பாராத உயரங்களுக்குச் சென்ற மனிதர்களில் பெரும்பாலானோர் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தவர்களே என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதிர்ஷ்டம் வருவதற்கு முன் துரதிர்ஷ்டத்தின் விடாத துரத்தல், விதி ஒத்துழைப்பதற்கு முன் அது செய்யும் சதி- இதில் எல்லாம் நிலைகுலைந்து விடாதவர்களையே பிற்காலத்தில் அதிர்ஷ்டம் வரவேற்று உதவுகிறது, விதி ஒத்துழைக்கிறது. ஒரு நல்ல உதாரணத்தைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம் என்கிற கிராமத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் 1973ல் பிறந்தவர் பிரேம் கணபதி.  ஏழு குழந்தைகளில் ஒருவர் அவர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த அவருக்கு பிரத்தியேகத் திறமைகள் எதுவும் கூட இருக்கவில்லை.  வறுமை அந்தக் கிராமத்தில் இருந்து அவரைச் சென்னைக்குத் துரத்தியது. மாத வருமானம் சுமார் ரூ 250/- மட்டுமே கிடைக்க முடிந்த சில்லறை எடுபிடி வேலைகள் செய்து பிழைத்து வந்தார். அதையும் முடிந்த வரை சேமித்து கிராமத்தில் இருக்கும் தன் பெற்றோருக்கு அனுப்பி வைப்பார்.

அப்போது பழக்கமான ஒருவன் மும்பையில் ரூ1200/- மாத வருமானத்தில் வேலை தயாராக இருக்கிறது என்று சொல்ல வீட்டுக்குக் கூடத் தெரிவிக்காமல் அந்த ஆளுடன் ப்ரேம் கணபதி 1990ல் மும்பைக்கு ரயிலில் பயணமானார். மும்பையில் பாந்த்ரா ரயில்நிலையத்தில் அவருடைய சட்டைப்பையில் இருந்த முழு சேமிப்பான ரூ 200/-ஐ திருடிக் கொண்டு கூட வந்தவன் மாயமாய் மறைந்து விட்டான். அப்போது தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற உண்மையை ப்ரேம் கணபதி உணர்ந்தார். 17 வயதில் கையில் நயாபைசா இல்லாமல், பாஷையும் தெரியாமல், தெரிந்தவர்களும் யாருமில்லாமல் ஆனாதரவாய் நிற்பது கடுமையான துர்ப்பாக்கியம் அல்லவா?

ப்ரேம் கணபதி மேல் பரிதாபப்பட்ட ஒருவர் திரும்பி சென்னைக்குப் போக டிக்கெட் வாங்கிக் கொடுக்க முன் வந்தார். ஆனால் தோற்ற மனிதனாய் சென்னைக்குத் திரும்ப ப்ரேம் கணபதிக்கு மனம் வரவில்லை. மும்பையில் மாஹிம் பகுதியில் ஒரு பேக்கரியில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது.  மாதம் ரூ150/- தான் சம்பளம் என்றாலும் இரவு அந்தப் பேக்கரியிலேயே தூங்க இடம் கொடுத்ததால் அந்த வேலைக்குச் சேர்ந்து கொண்டார் ப்ரேம் கணபதி.

சில மாதங்களில் டீக்கடையில் டீ விற்கிற பையனாய் முன்னேறினார். சுறுசுறுப்பும், முகமலர்ச்சியுடன் பழகுகிற தன்மையும் கொண்ட ப்ரேம் மற்ற டீ விற்கும் பையன்களை விட மூன்று மடங்கு அதிகமாக டீ விற்று வியாபாரத்தைப் பெருக்கினார். நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அளவு தான் ஒருவரே டீக்கடைக்குச் சம்பாதித்துக் கொடுத்தார். ஒரு வாடிக்கையாளர் அதைப் பார்த்து விட்டு ஒரு டீக்கடைக்குத் தான் முதல் போடத் தயார் என்றும் ப்ரேம் கணபதி டீக்கடையை நடத்தினால் வரும் இலாபத்தில் பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார். ப்ரேம் கணபதி ஒத்துக் கொள்ளவே புதிய டீக்கடையைத் துவக்கினார்கள். ப்ரேமின் திறமையால் வியாபாரம் மிக நன்றாக நடந்தது. இலாபம் அதிகமாகிக் கொண்டு வருவதைப் பார்த்தவுடன் இத்தனை பணத்தை இவனுக்குத் தர வேண்டுமா என்று முதல் போட்டவருக்கு பொறாமை ஏற்பட்டது. அவர் ப்ரேம் கணபதியை டீக்கடையில் இருந்து விலக்கி விட்டு சம்பளத்துக்கு இன்னொருவரை வைத்துக் கொண்டார்.  

மறுபடியும் ஏமாற்றப்பட்டாலும் மனம் தளராத ப்ரேம் கணபதி ஒரு கைவண்டியை நாள் ஒன்றுக்கு ரூ150/- வாடகைக்கு எடுத்து அது வரை சேர்த்திருந்த ரூ 1000/-ல் ஸ்டவ்வும், பாத்திரங்களும் வாங்கி வாஷி ரயில் நிலையம் எதிரில் இட்லி தோசை விற்க ஆரம்பித்தார்.  மிக சுத்தமாக இடத்தை வைத்துக் கொண்டு மிக ருசியாக இட்லி தோசைகளை சமைத்துக் கொடுத்த அவருடைய அந்த சிறிய கைவண்டி தோசைக்கடை நாளடைவில் பிரபலமாகியது. பிறகு கைவண்டியை விட்டு ஒரு கடையையே வாடகைக்கு ப்ரேம் எடுத்துக் கொண்டார். அதற்கு தோசா ப்ளாசா என்று பெயரிட்டார். அவருடையை தோசா ப்ளாசாவைத் தேடி நாளடைவில் தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களும் வர ஆரம்பித்தார்கள். மிக நல்ல வருமானம் வர ஆரம்பிக்கவே சைனீஷ் உணவு வகைகள் செய்யும் கடை ஒன்றையும் பக்கத்தில் வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அது தோல்வி அடைந்தது. அதனால் அதை விட்டு விட்டு தோசையிலேயே பல பல வகைகளை அறிமுகப்படுத்தி கடையை விரிவுபடுத்தினார்.  அவருடைய மெனுவில் 108 வகை தோசைகள் இருந்தன.

வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் ருசி, சேவை, விதவிதமான தோசை வகைகள், சுத்தம் இருந்ததாலும் தரத்தை எப்போதும் உயர்வாகவே தக்க வைத்திருந்ததாலும் அவர் வியாபாரம் செழிக்க ஆரம்பித்தது.

இன்று இந்தியாவில் 45க்கும் மேலான தோசா ப்ளாசாக்கள் ப்ரேம் கணபதிக்கு உள்ளன. அதுமட்டுமல்லாமல் துபாய், நியூசிலாந்து முதலான பத்து வெளி நாடுகளில் கூட கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முப்பது கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகவும் ப்ரேம் கணபதி இருக்கிறார் என்ற செய்தியைப் படிக்கையில் முயற்சி திருவினை ஆக்கும் என்ற வள்ளுவன் சொன்னது முற்றிலும் உண்மை என்று தோன்றுகிறதல்லவா?

ப்ரேம் கணபதிக்கு துரதிர்ஷ்டம் ஆரம்பத்தில் குடும்ப வறுமையில் வந்தது. அடுத்தது மும்பைக்கு அழைத்துப் போனவனால் வந்தது. அடுத்தது லாபத்தில் பாதி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய ஒரு வியாபாரியால் வந்தது. ஒவ்வொரு முறையும் எல்லாம் இழந்து போக நேர்ந்தது. ஏமாற்றப் பட்டதையே வருவோர் போவோரிடம் சொல்லி அனுதாபம் தேடிக் கொண்டு நிற்காமல், புலம்பாமல், அடுத்ததாக என்ன செய்து மீள்வது என்று சிந்தித்து, அதற்கு ஏற்றபடி புத்திசாலித்தனத்தோடு சலிக்காமல் உழைத்து அதிர்ஷ்டத்தைப் பெரிய அளவில் ஏற்படுத்திக் கொண்ட ப்ரேம் கணபதியின் வாழ்க்கை பல பேருக்குப் படிப்பினை!

விதி கூடத் தன் சதியால் கதிகலங்கிப் போகாதவனை ஒரு கட்டத்திற்குப் பின் சிலாகித்து உயர்த்தியே விடுகிறது. அதனால் விதி சதி செய்யும் போது தளராமல் தாக்குப்பிடியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். ஒன்று சரிப்படா விட்டால் பாடம் படித்துக் கொண்டு வேறு விதமாக முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள். ஒரு நாள் விதியும் உங்கள் விசுவாசியாக மாறும். எல்லாம் உயர்வாய் அமையும்!

-       என்.கணேசன்


Thursday, July 23, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 55


லீ க்யாங் லாஸா விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது வாங் சாவொ அங்கு அவனுக்காகத் காத்திருந்தான். அவனிடம் பேசுவதற்கு முன் லீ க்யாங் விமான நிலையத்தில் இருந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் தன் பார்வையால் அளந்தான். எந்த நேரத்திலும் மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் அங்கு வந்து சேரலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் சுறுசுறுப்பிலேயே அவனுடைய ஆட்கள் இருந்ததை ஒரு சுற்றுப் பார்வையிலேயே அவனால் காண முடிந்தது. திருப்தியடைந்தவனாய் அவன் வாங் சாவொவை நெருங்கினான். “என்ன செய்தி?

“மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் சம்யே மடாலயத்தை விட்டு எப்படி எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை சார். அதைத் தாண்டிய பிரதேசங்களில் அவர்களைப் பார்த்தவர்கள் யாருமில்லை....

“இருட்டிய பிறகு தங்கள் பயணத்தை அவர்கள் தொடர்ந்திருக்கலாம். பின் எங்கேயாவது ஒளிந்து கொண்டிருக்கலாம். நாம் அவர்களைத் தேடிக் கொண்டிருப்பது தெரிய வந்திருந்தால் அவர்கள் வேறு வேடத்திற்கும் மாறி இருக்கலாம்...உடனடியாக வந்தது பதில்.

வாங் சாவொவுக்கு வழக்கம் போல் பிரமிப்பு தான் ஏற்பட்டது. முடிவுகளை எட்ட லீ க்யாங்குக்கு எப்போதுமே அதிக நேரம் தேவைப்பட்டதில்லை. மற்றவர்கள் மணிக்கணக்கில் யோசித்து எட்டும் முடிவுகளை லீ க்யாங் சில நிமிடங்களிலோ, நொடிகளிலோ எட்டி விடுவான்.

வாங் சாவொ மரியாதையுடன் தலையசைத்து விட்டுச் சொன்னான். சம்யே மடாலயம் மறுபடியும் போய் அந்தக் கண்சிமிட்டி மனிதன் சேர்ந்த போதே கூட வேறு யாராவது சேர்ந்திருக்கிறார்களா என்பதை மடாலயக் குறிப்பேடுகளில் பார்த்தேன். ஒரே ஒருவன் ஒரு வாரம் கழித்துச் சேர்ந்தவன். அவன் தந்திருக்கும் விலாசம் உண்மையானது. அவனுக்கு இவனுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது விசாரிக்கையில் தெரிந்து விட்டது. கண்சிமிட்டி மனிதன் அங்கு வேலை பார்த்த போது யாருடன் நெருக்கமாய் இருந்திருக்கிறான் என்று விசாரித்துப் பார்த்தேன். யாரிடமும் நெருக்கமாய் இருந்ததாய் தெரியவில்லை. அதனால் அவன் கூட்டாளிகள் யாராவது அங்கு இருந்தாலும் மற்றவர்களுக்குத் தெரியாதபடி தான் இருந்திருக்கிறார்கள். அவன் சில சமயங்களில் அலைபேசியில் பேசுவதை சிலர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த அலைபேசி நம் கையில் சிக்கவில்லை. அந்த எண்ணாவது கிடைக்குமா என்று பார்த்தேன். அவன் யாருடன் எல்லாம் பேசி இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாமே என்று நினைத்தேன். அந்த எண்ணும் கிடைக்கவில்லை

“சம்யே மடாலயக் குறிப்பேட்டில் விலாசத்துடன் அலைபேசி, தொலைபேசி எண்களைக் குறித்துக் கொள்ளும் வழக்கம் இல்லையா?”

“அந்த மடாலயத் தலைமை பிக்கு குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு வந்து சேரும் தற்காலிக வேலையாட்கள் பெரும்பாலானவர்களிடம் அலைபேசி இருப்பதில்லை என்றும் அதனால் அவர்களாகத் தந்தால் ஒழிய அவர்களிடம் இருந்து அந்த எண்களை வாங்கிக் குறித்து வைத்துக் கொள்வதில்லை என்றும் சொல்கிறார். அவன் கழுத்து திருகி விழுந்த போது அவனிடம் அந்த அலைபேசி இருந்ததா என்பது தெரியவில்லை. இருந்து அதுவும் கீழே விழுந்து யாராவது எடுத்து வைத்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை

வாங் சாவொ எல்லா கோணங்களிலும் சிந்தித்து செயல்பட்டிருக்கிறான் என்று லீ க்யாங் திருப்தியுடன் நினைத்துக் கொண்டான்.

வாங் சாவொ சொன்னான். “அவனைப் பற்றி விசாரித்ததில் ஒரு தகவல் விசித்திரமாகப் பட்டது. அவன் சில சமயங்களில் நள்ளிரவு நேரங்களில் கோங்காங் மண்டப வாயிலில் நின்று கொண்டிருப்பதைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். ஏன் நின்றான் என்பது தெரியவில்லை. பார்த்தவர்களும் அவனிடம் அதுபற்றிக் கேட்டதில்லை என்கிறார்கள். அப்படிக் கேட்கிற அளவு யாரும் அவனுடன் நெருக்கமாய் இருந்ததில்லை. அவன் அப்படி நிற்கக் காரணம் இருக்கிறதா என்று தலைமை பிக்குவிடம் கேட்டேன். இல்லை என்று அவர் சொன்னார். ஆனால் அந்த விஷயம் அவருக்கே அப்போது தான் தெரிகிறது என்று முகபாவனையை வைத்துப் புரிந்து கொண்டேன். அந்தத் தகவல் அவரைச் சங்கடப்படுத்தியதாகத் தோன்றியது. 

லீ க்யாங் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “நீ கோங்காங் மண்டபத்திற்குப் போய் நன்றாகச் சோதனை செய்ததாய் சொன்னாயே. அங்கே வேறு எதாவது விசித்திரமாய் உனக்குத் தோன்றியதா

“அந்த கோங்காங் மண்டபத்தில் துஷ்ட சக்திகளின் சிலைகளே சற்று விசித்திரமாகத் தான் பார்வைக்குத் தோன்றுகின்றன. மற்றபடி எதுவும் சந்தேகப்படுகிற மாதிரி இருக்கவில்லை

லீ க்யாங் மெல்லக் கேட்டான். “அந்தக் கண்சிமிட்டி மனிதனை கோங்காங் மண்டப வாயிலில் நிற்பதைப் பார்த்ததாய் சொன்னவர்கள் அவன் அதன் உள்ளே போவதையோ, உள்ளே இருந்து வெளியே வருவதையோ எப்போதாவது பார்த்திருக்கிறார்களா?

வாங் சாவொ திகைத்தான். அந்தக் கேள்வியை அவனுக்குக் கேட்கத் தோன்றி இருக்கவில்லை. லீ க்யாங் அமைதியாகச் சொன்னான். “அதைக் கேட்டு எனக்குப் போனில் தெரிவி.

லீ க்யாங் அதற்கு மேல் தாமதிக்காமல் ஒற்றைக்கண் பிக்குவையும் டோர்ஜேயையும் சந்திக்கக் கிளம்பி விட்டான்.


ற்றைக்கண் பிக்கு லீ க்யாங் காரில் இருந்து இறங்குவதை ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவருடைய இதயம் அதிகப்படியாய் படபடக்க ஆரம்பித்தது.

“லீ க்யாங் வந்து விட்டார்என்று சத்தமாகச் சொன்னார். டோர்ஜே நிலைமையும் அவருடையதாகத் தான் இருந்தது. சமையல்காரன் விழுந்தடித்துக் கொண்டு லீ க்யாங்கை வரவேற்க வெளியே ஓடினான்.

லீ க்யாங் விமானநிலையத்தில் பார்த்தது போலவே அங்கும் சுற்றும் முற்றும் பார்த்தான். சந்தேகப்படும்படியான சூழ்நிலைகள் ஏதாவது தென்படுகின்றனவா என்று பார்த்தவனுக்கு அப்படி எதுவும் தென்படவில்லை. தூரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மட்டும் அவனை சிந்திக்க வைத்தனர். மேலே இருந்து படிகளில் ஓடி வரும் சமையல்காரன் அருகில் வரும் வரைக் காத்திருந்து விட்டு பின் கேட்டான். “அந்தப் பையன்கள் இந்தப்பக்கம் வந்து விளையாடுவதில்லை அல்லவா?

“சில சமயங்களில் வருவதுண்டு. பார்த்தால் நான் துரத்தி விடுவேன்....ஆனால் போதையில் இருக்கையில் எதுவும் என் கண்களுக்குத் தெரியாது, அந்த நேரங்களில் கண்டு கொள்ள மாட்டேன் என்று அவன் சொல்லவில்லை.

லீ க்யாங்குக்கு அவன் சொன்ன அந்த சில சமயங்களே அதிருப்தியை ஏற்படுத்தின. “எதுவும் ஒரு தடவையிலேயே முடித்து விட வேண்டும். அடிக்கடி அது நிகழ்கிற மாதிரி வைத்துக் கொள்ளக்கூடாது. உனக்கு அவர்கள் இந்தப்பக்கம் வருவதைத் தடுக்க முடியாமல் போனால் என்னிடம் சொல்ல வேண்டியது தானேஎன்று கடுமையான குரலில் சொன்னான். அந்தச் சிறுவர்கள் இங்கே விளையாடுவதை டோர்ஜே பார்த்து அவன் மனமும் விளையாட்டில் திரும்புவதை லீ க்யாங் விரும்பவில்லை.

சமையல்காரன் அவசரமாகச் சொன்னான். “இல்லை சார். நான் போன மாதம் திட்டிய திட்டில் அவர்கள் இப்போது எல்லாம் இந்தப் பக்கம் வருவதில்லை. அவர்கள் அதற்கு முன்பு வந்ததைத் தான் சொன்னேன்...

அதற்கு லீ க்யாங் பதில் எதுவும் சொல்லவில்லை. அந்தச் சிறுவர்களைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான். அந்தத் தொலைவில் அவர்கள் விளையாடினால் அது டோர்ஜே பார்வையில் விழ வாய்ப்பில்லை. இந்தப் பக்கம் வந்து விளையாடினால் தான் பிரச்னை.... விளையாடும் சிறுவர்களைப் பார்க்கையில் ஆசானும் அவன் நினைவில் வந்து போனார். அவன் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை தோன்றி வந்த வேகத்தில் போனது. கிழவர் இப்போது எங்கே இருக்கிறாரோ?

லீ க்யாங் படியேற ஆரம்பிக்கையில் வாங் சாவொவின் போன் வந்தது. “சார். நள்ளிரவில் கண்சிமிட்டி மனிதனை கோங்காங் மண்டப வாயிலில் பார்த்தவர்களை விசாரித்தேன். அவர்கள் ஒவ்வொரு தடவையும் அவன் வாசலில் நிற்பதைத் தான் பார்த்திருக்கிறார்கள். அவன் அதன் உள்ளே போவதையோ உள்ளே இருந்து வெளியே வருவதையோ பார்த்ததில்லை என்று சொல்கிறார்கள்.....

லீ க்யாங் சந்தேகப்பட்டது உறுதியாகி விட்டது. சிந்தனையுடன் படியேறினான். 


மாராவுக்கு அந்த அவசர அழைப்பு வந்த போது உறங்கி விட்டிருந்தான். தூக்கம் முழுவதும் கலையாமலேயே அலைபேசியை எடுத்துப் பேசினான். “ஹலோ...

திபெத்தில் இருந்த ஒடிசல் இளைஞன் தான் அவனுக்குப் போன் செய்திருந்தான். இந்த நேரத்தில் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும்.....

மாரா தன் தனிப்பட்ட சௌகரிய அசௌகரியங்களுக்கு என்றுமே அதிக முக்கியத்துவம் கொடுத்தவன் அல்ல. தலைவன் என்பவன் எல்லா முக்கிய சமயங்களிலும் தொடர்பு கொள்ளக்கூடியவனாக இருக்க வேண்டும் என்பது அவனுடைய உறுதியான கொள்கை. கிடைக்கின்ற தகவல்களை வைத்து மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியவன், அந்தத் தகவல்கள் சொல்பவர்களுக்கு அந்த நேரத்தில் கிடைக்கா விட்டால் எல்லாமே தாமதப்படும். சில நேரங்களில் அந்தத் தாமதமே ஒரு வீழ்ச்சிக்குக் காரணமாகி விடலாம். எனவே சிறிதும் முகம் சுளிக்காமல் முழுமையாக விழித்துக் கொண்டவனாக மாரா சொன்னான். “பரவாயில்லை சொல்

வாங் சாவொ சம்யே மடாலயம் வந்து சிலரிடம் கேட்ட அந்த விசித்திரக் கேள்வியைத் தெரிவித்து விட்டுச் சொன்னான். “நம் ஆட்கள் இதை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்....

மாராவுக்கு அந்தக் கேள்விக்குப் பின்னணியில் லீ க்யாங் தெரிந்தான். லீ க்யாங்கின் கவனத்துக்கு வந்தாகி விட்டது என்பது நல்ல செய்தி அல்ல. கழுத்து திருகிய முட்டாளின் முட்டாள்தனமான கோபத்திற்கு கிடைத்திருக்கும் பரிசு இது.... மாரா அமைதியாகச் சொன்னான். “இன்னும் சில நாட்களுக்கு கோங்காங் மண்டபத்திற்கு நடுநிசி பூஜைக்குப் போக வேண்டாம் என்பதை நம் ஆட்களிடம் தெரிவித்து விடு.

“சரி

மைத்ரேயன் சம்யே மடாலயத்தில் இருந்து கிளம்பியாகி விட்டதா?

“இன்னும் இல்லை. நான் வெளியே மறைவில் இருந்து கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறேன்....

மாரா தெளிவாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். “இனி மைத்ரேயனை வைத்துக் கொண்டு அந்த ஆள் அங்கேயே இருக்க மாட்டான். அது அவனுக்கு ஆபத்து என்று புரிந்திருப்பான். அதனால் அவன் இன்றைக்கு இரவே அங்கிருந்து தப்பித்துப் போகும் வாய்ப்பு அதிகம். அதனால் தயாராக இரு. அவனைப் பின் தொடர்ந்து போ. ஆனால் ஒரு இடைவெளியை எப்போதும் வைத்துக் கொள். இப்போதைக்கு அவர்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு ஒவ்வொரு கணமும் தெரிந்து கொண்டிருந்தால் போதும்....

“சரிஎன்றான் ஒடிசல் இளைஞன். மாரா அனாவசியமான யூகங்களைச் சொல்பவன் அல்ல. மிக உறுதியாகத் தெரிந்தால் ஒழிய இன்றே அவர்கள் தப்பித்துச் செல்ல முயல்வார்கள் என்று சொல்ல மாட்டான். அதனால் இன்று அவர்கள் தப்பிப்பது உறுதி என்று நம்பிய ஒடிசல் இளைஞன் அன்றைய இரவுக்காகக் காத்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

  

Monday, July 20, 2015

மற்றவர் எண்ணங்களையும் அறியமுடிந்த யோகி!


மகாசக்தி மனிதர்கள் 31.

ஒரு சீடன் தன் குருவிடம் இருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியும் என்பதும், எதை எல்லாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதும் அவன் ஆர்வத்தின் தன்மையையும் விழிப்புணர்வையும் பொருத்தது. அவை இரண்டும் இருப்பின் சின்னச் சின்ன சம்பவங்களிலும் தெளிவான பாடங்களை ஒரு சீடனால் படிக்க முடியும். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் அப்படி பரமஹம்ச யோகானந்தர் கற்றுக் கொண்டது ஏராளம்.

கொசுக்களின் தொந்தரவு கூட யோகிகளை அணுகுவதில்லை என்று யோகானந்தர் புரிந்து கொண்டதைப் பார்த்தோம். அதே போல் ஒரு கொசுக்கடி மூலமாகவே இன்னொரு பாடமும் யோகானந்தர் தன் குருவிடம் இருந்து கற்றுக் கொண்டார். அதைப் பார்ப்போம்.

ஒரு நாள் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி புனிதநூல்களில் ஒன்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் காலடியில் அமர்ந்து கொண்டு யோகானந்தர் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரமாகப் பார்த்து ஒரு பெரிய கொசு யோகானந்தர் தொடையில் உட்கார்ந்து அவர் இரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. அதை அடிக்க யோகானந்தர் கையை உயர்த்தினார். ஆனால் பதஞ்சலியின் யோகசூத்திரங்களில் கூறியிருந்த அஹிம்சை நினைவுக்கு வந்தது. கொசுவைக் கொன்றால் அதுவும் ஒரு உயிருக்கு இழைக்கும் தீங்கே அல்லவா? அந்த நினைவு வந்தவுடன் பரமஹம்ச யோகானந்தர் அந்தக் கொசுவை அடித்து நசுக்காமல் விட்டு விட்டார்.  

அதைக் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி “ஏன் நிறுத்தி விட்டாய்?என்று கேட்டார்.

“ஒரு உயிரைப் பறிப்பது பாவமல்லவா குருதேவா?

“ஆனால் நீ கையை உயர்த்தும் போதே எண்ணத்தால் அந்த உயிரைக் கொன்று விட்டாய். பதஞ்சலியின் யோகசூத்திரத்தில் அஹிம்சை என்று சொல்லி இருப்பது எண்ணத்தினாலும் ஒரு உயிரைக் கொல்லாமல் இருப்பதே. எண்ணங்கள் மிக முக்கியம். எண்ணத்தினால் கூட ஒரு உயிருக்குத் தீங்கு இழைக்காமல் இருப்பது முக்கியம். சில நேரங்களில் சில கொடிய விலங்குகளை நாம் கொல்ல வேண்டி வரலாம். அப்படி அவசியமான போது அழிக்க நேர்ந்தாலும் வெறுப்போ, கோபமோ இல்லாமல் அதைச் செய்ய வேண்டும்.

யோகானந்தருக்கு சந்தேகம் வந்தது. “கொடிய விலங்கானாலும் அதன் உயிரைப் பறிப்பதை விட நாமே அதற்குப் பலியாவது சாலச் சிறந்தது அல்லவா குருதேவா?

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். “மனித உயிர் மற்ற எல்லா உயிரினங்களை விட உயர்ந்தது. பரிணாம வளர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் கண்டிருக்கும் மனித இனம் இறையுணர்வுக்கு நெருக்கமானது. தன்னை அழிவில் இருந்து காத்துக் கொள்ளும் மனிதன் அந்த இறையுணர்வின் துணை கொண்டு நடந்தால் உலகத்திற்கு எத்தனையோ நன்மைகளைச் செய்ய முடியும். அதனால் மனிதன் தன் உடலையும் உயிரையும் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியம். நீ சொன்னது போல அந்தக் கொடிய விலங்கின் உயிரைப் பறிப்பதும் சிறிய அளவில் பாவமே. ஆனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாமல் உயிரை மாய்த்துக் கொள்வது நம் சாஸ்திரங்களின்படி மகாபாவம்

யோகானந்தர் தெளிவடைந்தார். இந்த நிகழ்ச்சியில் கொசுவை அடிக்கப் போகும் முன் பதஞ்சலியின் யோகசூத்திரங்களில் சொல்லப்பட்ட அஹிம்சை பற்றிய நினைவு உட்பட அவர் சொல்லாமலேயே அறிந்து கொண்டு அதற்கும் சேர்த்து விளக்கத்தை அளித்தது யோகானந்தருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள அவசியமான சமயங்களில் கொடிய விலங்கினங்களைக் கொல்வது நியாயமே என்று காரணத்தோடு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி விளக்கினாலும் அதைப் பொதுவாகச் சொன்னாரே ஒழிய தன் வாழ்க்கையில் கொடிய விலங்கினத்தையும் நேசத்தோடே அணுகினார் என்பதை அவரது பூரி ஆசிரமத்தில் சீடராக இருந்த ப்ரபுல்லா என்பவர் நினைவுகூறுகிறார்.

ஒரு முறை பூரி ஆசிரமத்திற்கு வெளியே தன் சீடர்களுடன் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அமர்ந்திருந்த போது ஒரு கொடிய நாகம் அங்கே வந்தது. நாகம் சுமார் நான்கு அடி நீளம் இருந்தது. அது தன் விஷ நாக்கை வெளிப்படுத்திக் கொண்டு வேகமாக வந்தது. அதைக் கண்டு உடனே சீடர்கள் அலறினார்கள். ஆனால் சிறிதும் அமைதி இழக்காத ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சிரித்துக் கொண்டே, இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன் கைகள் இரண்டையும் ஒருவித தாளலயத்துடன் தட்ட ஆரம்பித்தார். அவரை மிக அருகில் நெருங்கிய அந்த கொடிய நாகம் அப்படியே அவர் அருகில் சிறிது நேரம் அசைவற்று நின்றது. பின் தன் நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு அவருடைய பாதங்களைக் கடந்து  பக்கத்தில் இருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டது.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியுடன் இருக்கும் தருணங்களில் யாருமே அவர் அறியாமல் எதையும் நினைத்து விடக் கூட முடியாது. அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் ஒரு சீடன் கவனம் வேறெங்காவது இருந்து அதைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்தால் அதை அவர் சொல்லிக் காட்டுவதுண்டு. 

ஒரு முறை அவர் ஏதோ விளக்கிக் கொண்டிருக்கையில் யோகானந்தர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் மனம் எதிர்காலத்தில் எங்கெங்கு ஆசிரமங்கள் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கற்பனையும் செய்து கொண்டு இருந்தது.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி நான் பாடம் நடத்துகின்ற பாடத்தில் உன் முழு கவனம் இல்லைஎன்றார்.

யோகானந்தர் “கவனமாய் தான் இருக்கிறேன். வேண்டுமானால் நான் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்ததை அப்படியே திருப்பிச் சொல்லவாஎன்று கேட்டார். சூட்டிப்பான மாணவர்களுக்கே இருக்கக்கூடிய இயல்பான குணமல்லவா?

“தேவையில்லை. நான் சொன்னதை நீ ஒத்துக் கொள்ளாததால் நான் உன் எண்ணத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. பாடத்தோடு, நீ சமவெளியில் ஒரு ஆசிரமமும், மலைமுகட்டில் ஒரு ஆசிரமமும், சமுத்திரக்கரையில் ஒரு ஆசிரமமும் அமைப்பது பற்றிக் கூட யோசித்துக் கொண்டிருந்தாய். மூன்றுமே கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும். இப்போது நீ பாடத்தை முழுமனதோடு கவனிஎன்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னது யோகானந்தருக்கு பிரமிப்பாக இருந்தது. தன் குருவின் முன்னால் தனிப்பட்ட எண்ணங்களையும் அவர் அறியாமல் வைத்துக் கொள்ள முடிவதில்லையே என்று வியந்தார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னது போலவே யோகானந்தர் பிற்காலத்தில் இந்தியாவில் சமவெளியான ராஞ்சியில் ஒரு ஆசிரமமும்,  லாஸ் ஏஞ்சல்ஸ் மலைமுகட்டில் அமெரிக்க ஆசிரமங்களின் தலைமையகமும், கலிபோர்னியா அருகில் பசிபிக் சமுத்திரத்தின் அருகில் ஒரு ஆசிரமமும் அமைத்தது வரலாறு. ஒருவரின் எண்ணங்களைப் படிக்க முடிவது மட்டுமல்லாமல் அந்த எண்ணங்கள் நிறைவேறுமா இல்லையா என்று கூடச் சொல்ல முடிவது யோகசக்தியால் மட்டுமே முடிந்த ஒன்றல்லவா?

யோகானந்தர் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியுடன் இருந்த ஆரம்ப நாட்களில் மிகவும் ஒல்லியாக  இருந்தார். அவருக்கு வயிற்றுக் கோளாறும் இருந்தது. நிறைய மருந்துகளும், டானிக்குகளும் அவர் சாப்பிட்டு வந்தார்.

ஒரு முறை ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி யோகானந்தரிடம் “முகுந்தா (யோகானந்தரின் பூர்வாசிரமப் பெயர்) நீ மிகவும் ஒல்லியாக இருக்கிறாய்என்று சொன்னார்.

யோகானந்தருக்கு அக்காலத்தில் அவர் உடல்நிலை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருந்தது. தன் உடல் பிரச்னைகளைச் சொல்லி எத்தனையோ மருந்தும் டானிக்குகளும் சாப்பிட்டும் கூட பயனில்லாமல் இருந்ததை வருத்தத்துடன் குருவிடம் சொன்னார்.

“மருத்துவத்தில் எப்போதுமே எல்லைகள் உண்டு. எல்லைகள் இல்லாதது எதையும் உருவாக்க முடிந்த இறைசக்தியே. அந்த சக்தியால் நோய்கள் குணமாக முடியும் என்றும் நீ நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் என்பதையும் உறுதியாக நம்பு. அப்படியே நடக்கும்என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார்.

அப்படிப்பட்ட குருவிடம் இருந்து வந்த வார்த்தைகள் யோகானந்தர் மனதில் ஆழமாகப் பதிந்தன. குரு சொன்னபடியே செய்தார். இரண்டே வாரங்களில் அவர் உடல் எடை கணிசமாகக் கூடியது. வயிற்று பிரச்னைகள் நிரந்தரமாக அவரை விட்டு நீங்கியது. பல வருடங்களாக மருத்துவத்தால் முடியாதது குருவருளாலும், நம்பிக்கையான எண்ணங்களாலும் முடிந்தது!
 
-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 18-03-2015              
  

Thursday, July 16, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 54


திபெத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் இடையே ஒரு பிசிறில்லாத தொடர்பு இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த பின் லீ க்யாங் அந்தத் தொடர்பு என்னவாக இருக்கும் என்று மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தான். ஆனால் அவனால் அது குறித்து மட்டும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. நடந்து முடிந்தவைகளில் அந்த சுற்றுலா வழிகாட்டியின் மரணம் அவனை நீண்ட ஆலோசனையில் ஆழ்த்தியது.

வாங் சாவொ சம்யே மடாலயத்திற்கு இரண்டாவது நாள் விசாரிக்கப் போய் சில மணி நேரங்களில் அந்தச் சுற்றுலா வழிகாட்டி மரணத்தைத் தழுவி இருக்கிறான். வாங் சாவொ நான்கு சுற்றுலா வழிகாட்டிகளையும் அழைத்து வாருங்கள் என்று சொன்ன பிறகு சரியாக ஒன்றரை மணி நேரத்தில் அந்தச் சுற்றுலா வழிகாட்டியைப் பாம்பு கடித்திருக்கிறது. அந்தப் பாம்பும் பொதுவாக அந்தப் பகுதியில் காணப்படும் பாம்பல்ல. அந்த புத்தபிக்கு தான் மைத்ரேயனின் பாதுகாவலன் என்று தெரிவித்து விடுவானோ என்று பயந்தோ, இல்லை அந்த சமயத்தில் நடந்த வேறெதோ ஒரு சம்பவத்தை அவன் வெளியே தெரிவித்து விடுவானோ என்று பயந்தோ அவனைக் கொன்றிருக்கிறார்கள். அது கொலை என்று தெரிந்து விடாமல் இருக்க மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெளிவாக விளங்கியது.

இதில் லீ க்யாங்கிற்கு நெருடலாக இருந்த விஷயம் என்னவென்றால் அந்த சுற்றுலா வழிகாட்டியைக் கொல்ல அவர்கள் எடுத்துக் கொண்ட குறைவான நேரம் தான். முதலில் கொன்றது மைத்ரேயனின் பாதுகாவலனாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் இத்தனை வேகமாக தனியொரு மனிதன் செயல்பட்டிருக்க முடியுமா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது. ஒன்றுக்கு மேல்பட்ட ஆள்கள் இதில் சேர்ந்திருந்தாலும் தகவல் கிடைத்து, தயார்ப்படுத்திக் கொண்டு அந்த ஆள் தனியாக வெளியே வரும் வரைக் காத்திருந்து, அபூர்வ பாம்பை வைத்துக் கொல்வது என்பது அந்தக் குறுகிய காலத்தில் சாதாரண மனிதர்களுக்கு சாத்தியம் அல்ல என்றும் தோன்றியது. இந்த அளவு சாமர்த்தியசாலிகள் அவன் அதிகாரத்திற்குட்பட்ட திபெத்தில் அவனுக்கே தெரியாமல் இருப்பது நல்லதல்ல. யாரவர்கள் என்பது தெரிந்தேயாக வேண்டும்......

மைத்ரேயனுக்கு ஏதாவது விதத்தில் சம்பந்தம் உள்ள ஆட்கள் என்றால் ஆசானுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆசானைக் கண்டுபிடித்து விசாரித்தாலும் அவர் வாயில் இருந்து எதையும் சுலபமாக வரவழைக்க முடியாது. அதற்குப் பதிலாக அவருக்கு நெருங்கி இருந்தவர்களிடம் விசாரிப்பது நல்லது என்று தோன்றியது.

உடனே லீ க்யாங் ஒரு தீர்மானத்திற்கு வந்து திபெத்தில் இருக்கும் ஒற்றைக்கண் பிக்குவுக்குப் போன் செய்தான். ஒற்றைக் கண் பிக்குவின் குரல் லேசான நடுக்கத்துடன் கேட்டது. “ஹலோ

“மைத்ரேயன் எப்படி இருக்கிறான்?என்று வழக்கம் போல் முதல் கேள்வியை லீ க்யாங் கேட்டான்.   ஒற்றைக்கண் பிக்கு லேசான நடுக்கத்துடன் தன் அருகே நின்றிருந்த டோர்ஜேயைப் பார்த்தார். அவர் போனில் பேசுவதே லீ க்யாங்கிடம் தான் என்பதைப் புரிந்திருந்த டோர்ஜே அவர் நடுக்கத்தைப் பார்த்துத் தானும் நடுங்கினான். அந்தச் சிறுவனின் நடுக்கத்தைப் பார்த்த ஒற்றைக்கண் பிக்குவுக்கு மனம் பதறியது.

“நலமாகத்தான் இருக்கிறான் சார்என்று சொன்னார்.

“நல்லது. நான் நாளை அங்கு வருகிறேன். அவனையும் பார்க்க வேண்டும். உங்களிடமும் கொஞ்சம் பேச வேண்டும்

லீ க்யாங் அதற்கு மேல் பேச்சை வளர்த்தவில்லை.  இணைப்பைத் துண்டித்து விட்டான்.

“என்ன ஆசிரியரே?டோர்ஜே பயத்துடன் கேட்டான்.

“லீ க்யாங் நாளைக்கு வருகிறான் டோர்ஜே

டோர்ஜேயின் முகம் அனல் பட்ட பூவாய் வாடியது. அவர் காலை அவன் அணைத்துக் கொண்டான். “எதற்கு ஆசிரியரே?

அவனை இறுக்கப் பிடித்துக் கொண்டபடியே ஒற்றைக்கண் பிக்கு சொன்னார். “அவனிடம் அதை நான் கேட்க முடியுமா டோர்ஜே. அவனாகச் சொன்னான். உன்னைப் பார்க்க வேண்டுமாம். என்னிடம் பேச வேண்டுமாம்.....

சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். பின் ஒற்றைக்கண் பிக்கு அவனிடம் சொன்னார். “அவன் உன்னிடம் என்னவெல்லாம் படித்திருக்கிறாய் என்று கேட்பான்.  நான் சொல்லிக் கொடுத்த சூத்திரங்களை எல்லாம் சரியான உச்சரிப்புடன் நீ அவனிடம் சொல்லிக் காட்ட வேண்டும்.....

டோர்ஜே பரிதாபமாகத் தலையசைத்தான். ஒற்றைக்கண் பிக்கு தனக்குள் சொல்வது போல் சொன்னார். “அவன் முன்னால் நானும் உன்னை மைத்ரேயன் என்று தான் அழைக்க வேண்டும்...பின் அவனைப் பார்த்துச் சொன்னார். “தேவைப்பட்டால் நான் அவன் முன் உன்னிடம் கண்டிப்பு காட்டுவேன். நீ தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. நீ அவன் முன் கம்பீரமாக நடந்து கொள்ள வேண்டும். பயத்தை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. சரியா?

டோர்ஜே மறுபடியும் தலையசைத்தான். ஆனால் அவன் முகத்தில் இப்போதும் பயம் நிறைந்திருந்தது. அவரால் அவனிடம் பயப்படாதே என்று சொல்லி தைரியப்படுத்த முடியவில்லை. அவருக்கே நடுக்கமாய் இருந்த போது என்ன சொல்லி அவர் அவனைத் தைரியப்படுத்துவார்?

திடீர் என்று நினைவு வந்தவராக அவர் சொன்னார். “நீ அன்றைக்கு விளையாடப் போய் ஆசானைப் பார்த்ததை எக்காரணத்தைக் கொண்டும் உன் வாய் தவறியும் சொல்லி விடக்கூடாது. மறந்து விடாதே?

டோர்ஜே குழப்பத்துடன் கேட்டான். “ஆசான் யார் ஆசிரியரே?

“அன்று நீ தெருவில் விளையாடப்போன போது ஒரு தாத்தாவும் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாரே, பிறகு உன் பெயர் கூடக் கேட்டாரே அவர் தான்

ஓ. அவர் தான் ஆசானா? அவர் உங்களுக்குத் தெரிந்தவரா ஆசிரியரே

அவர் எனக்குத் தெரிந்தவர் மட்டுமல்ல. என் குருநாதரும் கூடஎன்று வாய்விட்டு அவரால் அவனிடம் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் தெரியும்....என்று அவர் சமாளித்தார்.

டோர்ஜே அவன் வயதுக்கே உரிய வெகுளித்தனத்தோடு கேள்வியைக் கேட்டான். “ஒரு வேளை லீ க்யாங்குக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வார் ஆசிரியரே   

ஒற்றைக்கண் பிக்குவின் உடம்பு அவரை அறியாமல் நடுங்கியது. “அவன் எதுவும் செய்வான் டோர்ஜே. ஏனென்றால் அவன் இதயம் இல்லாதவன். பிரச்னை என்ன என்றால் இதயம் இருக்க வேண்டிய இடத்திலும் அதற்குப் பதிலாக கடவுள் அவனுக்கு மூளையையே வைத்து விட்டிருக்கிறார்.


ருணும் வந்தனாவும் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸுக்குப் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகிக்கு இருவருக்கும் நல்ல ஜோடிப் பொருத்தம் இருப்பதாகத் தோன்றியது. இருவருக்கும் இடையே மலர்ந்திருக்கும் காதலை அவர்கள் இருவரும் வாய்விட்டுச் சொல்லவில்லையே தவிர பார்ப்பவர்கள் அத்தனை பேருக்கும் அந்தக் காதல் அப்பட்டமாகவே தெரிந்தது. அந்த அளவில் இருந்தது அவர்கள் சேர்ந்து இருக்கையில் தெரிந்த முகமலர்ச்சியும், நடவடிக்கைகளும்....

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகி மாடியில் குடி இருக்கும் மனிதன் தலையைக் குனிந்து கொண்டே தெருவில் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டாள். இருட்டானால் தான் அவன் வெளியேவே செல்கிறான், இல்லா விட்டால் அதிகாலையிலேயே சென்று இருட்டிய பின்பு தான் வருகிறான். இப்போதும் கூட இருட்டி விட்டிருக்கிறது. எப்போது வெளியே சென்றானோ தெரியவில்லை. இன்றைக்கு இந்த ஆளிடம் பேசாமல் விடுவதில்லை என்ற முடிவை ஜானகி எடுத்து விட்டாள். வெளி கேட்டில் இருந்து அவன் உள்ளே நுழையும் போதே வீட்டுக்கு அழைத்து அவனிடம் பேசலாமா, இல்லை அவன் மேலே போன பிறகு கதவைத் தட்டி அங்கேயே போய்ப் பேசலாமா என்று ஆலோசித்தவள் அவன் இருப்பிடத்திலேயே போய்ப் பேசுவது நல்லது என்கிற தீர்மானத்திற்கு வந்தாள். அப்போது தான் அவனைப் பற்றி கூடுதல் தகவல்கள் கிடைக்கும். ஒரு சினிமா கதாசிரியன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி எழுதுகிறான் என்பதை நேரடியாய் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும் என்று கணித்தாள். பின் வீட்டுக்குள் வந்து அமர்ந்தவள் அவன் மாடி ஏறிப் போகும் வரை அமர்ந்திருந்து விட்டு, அவன் உடை மாற்ற ஒரு கால் மணி நேரம் அவகாசம் தந்து விட்டு போய் மாடிக்கதவைத் தட்டினாள்.

ஒரு கணம் திடுக்கிட்டாலும் வந்திருப்பது யாராய் இருக்கும் என்று யூகிக்க மாடி வீட்டு ஆசாமிக்கு அதிக நேரம் ஆகவில்லை. ஆனாலும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து விட்டு உறுதிப்படுத்திக் கொண்டான். கீழ்வீட்டு அம்மாளை அவன் இதற்கு முன்பே எதிர்பார்த்தான். அந்த அம்மாளுக்குப் பேசுவது என்பது மூச்சு விடுவது போல் இயல்பானது மட்டுமல்ல முக்கியமானதும் கூட என்பது அவனுக்கு இந்த சில நாட்களில் உறுதியாய் தெரிந்திருந்தது. அதனால் கண்டிப்பாக ஒரு நாள் அவனிடம் பேசி அறுத்துத் தள்ளாமல் விட மாட்டாள் என்று முன்பே கணித்திருந்தான். எதிர் வீட்டு ஆட்களுடன் வராமல் தனியாக வந்திருக்கும் வேளையிலேயே அவளிடம் பேசி முடித்து அனுப்பி விடுவது உத்தமம் என்று தோன்றியது. கதவைத் திறந்தான்.

“தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். நான் ஜானகி. கீழ் வீட்டில் தான் குடி இருக்கிறேன். சினிமா என்றால் உயிர். மாடியிலேயே ஒரு சினிமா கதாசிரியர் குடியிருக்கிறார் என்று தெரிந்த பிறகும் பேசாமல் இருந்தால் என் தலையே வெடித்து விடும். அதனால் தான் வந்தேன். உள்ளே வரலாமா?....”  கடகடவென்று பேசிய ஜானகியைப் பார்த்துப் புன்னகைக்கவே அவன் படாத பாடு பட்டான். அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை.

ஆனால் வேறு வழி இல்லாமல் உள்ளே வாருங்கள்என்று வரவேற்று உட்கார வைத்தான். ஜானகி உள்ளே நுழைந்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். உட்கார்ந்தபடியே நாலா பக்கமும் நோட்டமிட்டாள். உள்ளே அதிகமாய் பொருள்கள் இல்லாமல் வெற்றிடமாய் தான் இருந்தது. அவள் பார்வையில் பேனா பேப்பர் கூடத் தென்படவில்லை. இக்காலத்தில் பேப்பரில் யார் எழுதுகிறார்கள், எல்லாரும் கம்ப்யூட்டரில் தான் எழுதுகிறார்கள் என்று அவளாகவே நினைத்துக் கொண்டாள். அலமாரியில் ஒரு பைனாகுலரைத் தவிர வேறு பொருள் இருக்கவில்லை. அவள் கண்கள் பைனாகுலரில் தங்கிய போது அவனுக்கு திக்கென்றது. ஆனால் அவள் அதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை.

“நீங்கள் எத்தனை படங்களுக்குக் கதைவசனம் எழுதி இருக்கிறீர்கள்?

“இப்போது எழுதுவது தான் முதல் படம். இதற்கு முன் நான்கைந்து நாடகங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறேன்.

“இப்போது எழுதுவது என்ன மாதிரியான கதை...

“எல்லாம் கலந்த கலவை....

அவள் கேட்டுக் கொண்டே போனாள். அவன் பொய்யான பதில்களைக் கூசாமல் சொல்லிக் கொண்டே வந்தான். ஆனால் பதில் சொல்லியே அவனுக்கு வாய் வலித்தது. ஒரு கட்டத்தில் அவளே பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசியதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் அவளை ஏமாற்றுவது பெரிய விஷயமல்ல என்று அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. எதிர் வீட்டாருடன் நெருக்கமாகி விட்டிருக்கும் அவளைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டால் வேண்டியபடி உபயோகித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

அவனையும் மீறி அவன் புன்னகைத்தான். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரியாத ஜானகி “அப்பாடா இப்போது தான் புன்னகை செய்கிறான் இந்த ஆள். இவ்வளவு தூரம் பேசிய பிறகு தான் இறுக்கம் தளர்ந்திருக்கிறதுஎன்று மனதிற்குள் சந்தோஷப்பட்டாள்.

அவளுடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவன் மனதினுள் புதியதோர் திட்டம் வடிவம் பெற ஆரம்பித்தது. மறுபடியும் புன்னகைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்