சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, November 25, 2008

தனி மனிதனால் என்ன செய்ய முடியும்?


ன்னைப் போன்ற தனி மனிதனால் என்ன செய்து விட முடியும் என்று பலரும் பல சமயங்களில் நினைப்பதுண்டு. எதையும் மாற்றி அமைக்கும் சக்தி தனக்கு இல்லை என்பதே பல தனி மனிதர்களின் வாதம். சமீபத்தில் நான் இணையத்தில் படித்த குட்டிக் கதையில் இதற்கு பதில் இருந்ததாக எனக்குப் பட்டது.

ஒரு சிறு பறவை காட்டுப் புறாவிடம் கேட்டது. "ஒரு பனித் துகளின் எடை என்ன?"

யோசித்து விட்டு புறா சொன்னது. "இல்லவே இல்லை என்றே சொல்லக் கூடிய அளவு எடை தான் அதற்கு"

"அப்படியானால் நான் சொல்லும் இந்த சம்பவத்தைக் கேள். நான் ஒரு பனி விழும் இரவில் ஒரு மரத்தருகே ஒதுங்கி இருந்தேன். பனி பலமாக விழாமல் லேசாக விழுந்து கொண்டிருந்ததது. எனக்கு பொழுது போகாததால் நான் அந்த மரத்தின் கிளை ஒன்றில் விழும் பனித்துகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். சரியாக 37,41,952 பனித்துகள்கள் விழும் வரை அந்தக் கிளை அவற்றைத் தாங்கிக் கொண்டிருந்தது. அடுத்த ஒரு துகள், நீ சொன்னாயே இல்லவே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு எடை உள்ள ஒரு துகள், விழுந்தவுடன் அந்த மரக்கிளை பாரம் தாங்காமல் முறிந்து கிழே விழுந்து விட்டது."

பழங்காலத்தில் இருந்து அமைதிக்கும், மாற்றத்திற்கும் அடையாளமாகக் கருதப்பட்ட புறாவை சிந்திக்க வைத்து விட்டு அந்த சிறிய பறவை பறந்து சென்று விட்டது. நிறைய நேரம் சிந்தித்த புறா தனக்குள் சொல்லிக் கொண்டது. "அதே போல் உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படக்கூட ஒரு தனி மனிதனின் முயற்சி மட்டும் தேவையாய் இருக்க வாய்ப்புண்டு."

இந்தக் குட்டிக் கதை சொல்வது போல உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படத் தயாராக இருக்கலாம். ஒரு தனி மனிதனின் முயற்சி அந்த மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் கடைசி உந்துதலாக இருக்கலாம். அதே போல எல்லா மாற்றங்களும் முதலில் மனித மனதிலேயே கருவாக ஆரம்பிக்கின்றன. இப்படி ஆரம்பக் கருவானாலும் சரி கடைசி விளைவானாலும் சரி தனி மனிதர்களால் தான் நிகழ்கின்றன. எத்தனையோ எண்ணற்ற தனிமனிதர்களின் பங்கு எல்லா மாற்றத்திலும் உண்டு. அதில் எந்தத் தனி மனிதனின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஒரு மரக்கிளையை வெட்டி முறிக்க நூறு சம்மட்டி அடிகள் தேவைப்படலாம். கடைசி அடியில் தான் கிளை முறிகிறது என்றாலும் அந்த நூறாவது அடியைப் போல் முதல் 99 அடிகளும் கூட சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

எனவே இனி எப்போதும் என்னைப் போன்ற தனி மனிதன் என்ன செய்து விட முடியும் என்று எப்போதும் எண்ணி விடாதீர்கள். மாற்றத்தின் ஆரம்பமானாலும், முடிவிலானாலும், இடைப்பட்ட நிலையில் ஆனாலும் தனி மனிதனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.

-என்.கணேசன்

Tuesday, November 18, 2008

சிக்கனம் Vs கஞ்சத்தனம்

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். சம்பவம் நடந்த இடம் அமெரிக்காவா இங்கிலாந்தா என்று சரியாக நினைவில்லை. ஒரு நகரத்தில் வயதான மகாகஞ்சன் ஒருவன் வீட்டில் இறந்து போனான். அவன் இறந்து போனதையே வீட்டில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த பின்பு தான் கண்டுபிடித்தார்கள். கதவை உடைத்துக் கொண்டு போய் பிணத்தை எடுத்திருக்கிறார்கள். போஸ்ட் மார்ட்டத்தில் அவன் குளிர்தாங்காமல் இறந்து போயிருக்கிறான் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவனுடைய வீட்டில் ஹீட்டர் இருந்திருக்கிறது. ஆனால் அவன் அதை மிகக்குறைவாகவே உபயோகித்திருக்கிறான். வேடிக்கை என்னவென்றால் அவன் படுக்கைக்கு கீழ் லட்சக்கணக்கான பணம் இருந்திருக்கிறது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு அவன் ஒரு பணக்காரன் என்பதை நம்பவே முடியவில்லையாம். தெருக்களில் பலரும் வீசி விட்டுப் போயிருந்த பொருட்களை அவன் சேகரித்து வருவதைக் கண்டிருந்த அவர்கள் பாவம் ஏழை என்றே நினைத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை படுக்கையின் கீழ் வைத்திருக்கும் அவனுக்கு உயிர் வாழத் தேவைக்கான அளவு கூட ஹீட்டர் உபயோகிக்க மனம் வரவில்லை. இவன் ஏழையா, பணக்காரனா?

சிக்கனம் மிக முக்கியமானது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கை சீரான முறையில் செல்ல சிக்கனம் மிக அவசியம். அது இல்லா விட்டால் எத்தனையோ தேவையானவற்றை அவர்கள் இழந்து விட நேரிடும். "ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை போகாறு அகலாக்கடை" என்றார் திருவள்ளுவர். வருமானம் அளவானதாக இருந்தாலும் பரவாயில்லை செலவுகள் அதை மீறி போய் விடாத பட்சத்தில் என்கிறார். இன்னொரு இடத்தில் அளவறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி திடீரென்று இல்லாமல் போய் விடும் என்று எச்சரிக்கிறார்.

தேவையில்லாததற்கெல்லாம் செலவு செய்பவர்கள் அவசியமானதற்குக் கூட செலவு செய்யப் பணமில்லாமல் அவதிப்படுவதை நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். க்ரெடிட் கார்டுகளை வைத்துக் கொண்டு இப்போதே பணம் தர வேண்டியதில்லையே என்ற அலட்சியத்தில் ஆடம்பரப் பொருள்களை வாங்கி விட்டு பின் மாதாந்திர செலவுக்கும் மருத்துவச் செலவுக்கும் பிறரிடம் கையேந்தி நிற்பதையும் நாம் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதை அழகாக பாமா விஜயம் திரைப்படத்தில் "வரவு எட்டணா செலவு பத்தணா" பாட்டில் கவிஞர் கூறுவார். எனவே சிக்கனத்தின் தேவை பற்றி இன்னொரு கருத்து இருக்க முடியாது.

ஆனால் சிக்கனமாக இருப்பதாக நினைத்து கஞ்சனாக இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல? ஆரம்பத்தில் நாம் கண்ட கஞ்சனைப் போல ஒரு முட்டாள் யாராவது இருக்க முடியுமா? தேவைக்கான செலவையும் செய்ய மறுப்பவன் சிக்கனம் என்ற நல்ல பண்பிலிருந்து நழுவி கஞ்சத்தனம் என்ற முட்டாள்தனத்திற்கு தள்ளப் படுகிறான்.

ஏராளமாக சொத்து சேர்த்தும் ஒரு டீ வேறு யாராவது வாங்கித் தரமாட்டார்களா என்று தேடும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ செல்வம் இருந்தும் வீட்டில் உணவுக்குக் கூட சரிவர செலவு செய்யாமல் மற்றவர்கள் தரும் விருந்தில் இனி இப்படியொரு சந்தர்ப்பம் வருமோ வராதோ என்ற சந்தேகத்தில் எல்லா பதார்த்தங்களையும் அள்ளி அள்ளி விழுங்கும் பரிதாபத்திற்குரிய கஞ்சர்களையும் பார்த்திருக்கிறேன். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று பட்டினத்தார் பாடினார். இப்படி இருக்கையில், இருக்கும் செல்வத்தை இவர்கள் எதற்காக இப்படி கஷ்டப்பட்டு அடைகாக்கிறார்கள்?

ஒரு செல்வநிலையில் இருப்பவனுக்கு சிக்கனமாக இருப்பது இன்னொரு மேல்மட்ட செல்வநிலையில் இருப்பவனுக்கு கஞ்சத்தனமாக ஆவதுண்டு. அடிமட்ட நிலையில் இருந்து கஷ்டப்பட்டு மேலுக்கு வந்தவர்கள் ஆரம்ப கஷ்டகாலத்தில் சிக்கனமாக இருந்தது போலவே செல்வச் செழிப்பிலும் நடந்து கொள்ளும் போது கஞ்சன் என்ற பட்டத்தை அடைவதுண்டு. ஆனால் தெளிவாகச் சொல்வதென்றால் பணம் இருந்தும் அவசியமானதற்கும் செலவு செய்ய மறுப்பது தான் கஞ்சத்தனம். பணம் இருந்தும் ஆடம்பர அனாவசிய செலவுகளைச் செய்யாமல் இருப்பது தான் சிக்கனம். இந்த வரைமுறையின் படி சிக்கனமாக இருங்கள்;கஞ்சத்தனமாக இருந்து விடாதீர்கள்.

-என்.கணேசன்

Tuesday, November 11, 2008

இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே!



இளமை ஒரு கற்பூரப்பருவம். நல்லதும் சரி, கெட்டதும் சரி இந்தப் பருவத்தில் விரைவாக பற்றிக் கொள்ளும். ஒரு வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை இந்த இளமை எளிதில் அடையாளம் காட்டிவிடும். அந்த இளமைப் பருவத்தில் மூன்று விஷயங்கள் ஒருசேர அமையப் பெற்றால் ஒரு வாழ்க்கை நாசமே அடைகிறது என்பதை நான் பலர் அனுபவங்களில் இருந்து கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அவை என்ன?

1) நிறைய ஓய்வு நேரம்
2) நிறைய பணம்
3) தீய நட்பு

முதலாகக் குறிப்பிட்ட ஓய்வு நேரம் பல கலைகளின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அந்த நேரம் நூலகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், ஏதாவது நல்ல பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படும் போது மனநலம், உடல்நலம், சாதனைகள் என நல்ல விளைவுகளையே தரும். ஆனால் எத்தனையோ தீமைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகக் கூட இந்த ஓய்வு நேரம் ஆவதுண்டு.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படும் போது வாழ்வின் ஆதாரமாக இருக்கக் கூடியது. அப்படிப் பயன்படுத்தத் தவறுகையில் பணம் பெரும்பாலும் தேவையற்ற வழிகளிலோ, தீய வழிகளிலோ செலவாவது இயல்பே. பணம் கஷ்டப்பட்டு கிடைக்காத போது, அதன் அருமை அறியப்படுவதில்லை. அருமை அறியப்படாத போது அலட்சியமாகவே அது கையாளப்படுகிறது.

முதல் இரண்டும் சேர்ந்தாற் போல இருக்கும் இடங்களை, மூன்றாவதாகக் குறிப்பிட்ட தீய நட்பு வேகமாகத் தேடி வந்து விடுகிறது. சர்க்கரை இருக்கும் இடத்தை எறும்புக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? எனக்குத் தெரிந்த போதைப் பழக்கமுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இப்படி மூன்றும் சேர்ந்தாற் போல கிடைக்கப் பெற்றவர்களே.

இந்த மூன்றில் இரண்டு இருந்தாலும் வழி தவறிப் போகும் அபாயம் நிறையவே இருக்கிறது.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. சம வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருந்தார்கள். வழி தவற வாய்ப்புகள் குறைவு. ஒரு குழந்தை அப்படித் தவற ஆரம்பித்தாலும் மற்ற குழந்தைகள் மூலம் உடனடியாக வீட்டுப் பெரியவர்களுக்குத் தகவல் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்றோ தங்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்களைக் கடைசியாக அறிவதே பெற்றோர்கள் என்ற நிலை தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது.

எனவே இளமைப் பருவத்தில் உங்கள் சகோதர சகோதரிகளோ, உங்கள் குழந்தைகளோ இருப்பார்களேயானால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களது ஓய்வு நேரமும், பணமும் எப்படி செலவாகிறது என்பதைக் கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் நண்பர்களைப் பற்றி நன்றாக அறிந்திருங்கள்.

'நான் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது' என்று சொல்லி உங்கள் குழந்தைகளைப் பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க முற்படாதீர்கள். நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தை பட வேண்டியதில்லை. உண்மை தான். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டுத் தான் சம்பாதிக்கிறீர்கள் என்ற விஷயமே தெரியாதபடி உங்கள் குழந்தையை வளர்த்து விடாதீர்கள்.

பயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்துங்கள். பணத்தின் அருமையையும், காலத்தின் அருமையையும் உணர்ந்தவர்களை எந்த தீய சக்தியும் நெருங்குவதில்லை.

- என்.கணேசன்

Thursday, November 6, 2008

படித்ததில் பிடித்தது - 6 As of SUCCESS



எது வெற்றி? வெற்றியை நிர்ணயிக்கும் அம்சங்கள் என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலை மிக எளிமையாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் சுவாமி தேஜோமயானந்தா விளக்கி இருக்கிறார். உண்மையான வெற்றியடைய தேவையென அவர் கூறும் ஆறு அம்சங்கள் மனிதனுக்கு உள்ளே தான் இருக்கின்றன, வெளியில் இல்லை என்று கூறும் இக்கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். நீங்களும் படியுங்களேன்.

என்.கணேசன்


6 As of SUCCESS

The subject can be explained in many ways. The common definition of Success is - to gain what one seeks. E.g. in cricket, if a bowler gets a wicket, he is successful; if a batsman scores a century, he is successful. However, such success is not always admirable - pickpockets, terrorists - they may be successful, but such success is not considered good.

In the Ramayana, Ravana kidnapped Sita and had a fight with Jatayu on his way to Lanka. Even though Jatayu failed in his attempt to save Sita, his failure is considered a success as compared to Ravana's success in taking away Sita. Though Ravana achieved temporary success in kidnapping Sita, in reality he failed because he was unable to make Sita his wife.

True success depends more on inner means than outer means. The six A:s of success are:

1. Aptitude
Natural interest in a particular field. Somebody has an aptitude for music; somebody for arts; another for business; yet another for sports, etc. Some have an aptitude for aptitude tests! If you have the aptitude for something, concentration is natural in that field.

2. Aspiration
Enthusiasm in the mind. One-may have the aptitude, but one may not feel like doing the work at hand.

3 . Ability
One may have the enthusiasm to sing, but if there is no ability, it is torture for the listeners.

4. Application
One should be able to apply one's mind at any piece of work. Being focussed is a very important ingredient of success, whatever the field.

5 . Attitude
When the going gets tough, it is the tough who keeps going. Never get demoralised. Attitude determines the altitude - the heights to which you can go. Such a person sees an opportunity even in difficulty.

6. Altar of dedication
In life, if you have an altar, your life will alter. e.g. Mahatma Gandhi - an ordinary person underwent a complete transformation because of just one goal- the nation's independence. Generally, people work for filling up the stomach; some for money; others for power; there are others who serve the nation; devotees do everything for the Lord.

Success is not the final destination. Life is a journey - keep moving ahead. Sometimes, in life I don't get what I like. At such times I must like what I get. If you apply your mind, you will enjoy. Put in more effort in that which you find boring; cultivate a taste for it. Ultimately, understand that 'to act alone is in our hands'.

- Swami Tejomayananda

Monday, November 3, 2008

தீவிரவாதம் யாருக்கு எதிராக?


ஒரு காலத்தில் ஊழல் உலகளாவியது என்று சொல்வார்கள். இன்று தீவிரவாதமும் அந்த இடத்தைப் பிடித்து விட்டது. தீவிரவாதம் தினந்தோறும் நாம் காணும் அன்றாட நிகழ்ச்சி ஆகி விட்டது.

தங்கள் மதத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும், உரிமைகளின் பெயராலும், கோரிக்கைகளின் பெயராலும், இழைக்கப்படும் அநீதியின் பெயராலும் இன்று தீவிரவாதம் ராஜநடை போடுகிறது. உண்மையில் யாருக்கு எதிராக தீவிரவாதம் நடைபெறுகிறதோ அவர்கள் பெரிதாக பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ அப்பாவி ஜனங்கள் பல்லாயிரம் மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் போது இறக்கும் அப்பாவி ஜனங்கள் எத்தனை பேர்? படுகாயம் அடையும் பரிதாபத்திற்குரிய நபர்கள் எத்தனை பேர்? இந்த எண்ணிக்கையைப் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். இதன் காரணாமாக வாழ்க்கையே திசைமாறி சீர்குலைந்து போகும் குடும்பத்தினர் பற்றி யார் சொல்கிறார்கள்? யார் கவலைப்படுகிறார்கள்?

அரசியல்வாதிகள் மரணத்திற்கு இவ்வளவு, படுகாயத்திற்கு இவ்வளவு என்று ஒரு தொகை நிர்ணயித்து தந்து கைகழுவி விடுகிறார்கள். அந்தப் பணம் இறந்த உறவுக்கு ஈடாகுமா? அந்த மனிதர்கள் இருந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யுமா? இழந்த உறுப்புக்கும், ஊனத்துடன் தொடர்ந்து வாழும் வாழ்க்கைக்கும் ஈடாகுமா? அந்த மனிதர்களைச் சார்ந்திருந்த குடும்பத்தாரின் துக்கத்தையும், இழப்புகளையும் தீவிரவாதிகள் முழுமையாக அறிவார்களா? அவர்கள் மனசாட்சி ஏற்றுக் கொள்ளுமா?

(இந்தக் கருத்தை வலியுறுத்தி 'சிறைவாசம்' என்ற சிறுகதை ஒன்றை முன்பு எழுதியுள்ளேன்.)
http://enganeshan.blogspot.com/2008/01/blog-post_15.html


பெரும்பாலான தீவிரவாத நடவடிக்கைகள் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தான் நடக்கின்றன. ஆனால் பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அந்த அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவது அபூர்வம். அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் அப்பாவி மக்கள் தான் உண்மையில் அதிகம் பலியாகிறார்கள். அந்த அப்பாவி மக்களும் அவர்கள் குடும்பங்களும் செய்த தவறு தான் என்ன? தீவிரவாதிகளின் எந்த சித்தாந்தத்திற்கு அவர்கள் எதிராக இருந்திருக்கிறார்கள்? தங்கள் தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியல்லாது வேறு சிந்தனைக்கே நேரமில்லாத அந்த அப்பாவிகளைப் பலி வாங்குவது என்ன நியாயம்.

எல்லா மதங்களும் ஏழை எளிய மக்களுக்குத் தீங்கு செய்வதை மிகப்பெரிய பாவமாகவே கூறுகின்றன. எனவே மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்திற்கு எந்த மதமும் அங்கீகாரம் அளிப்பதாகக் கூற முடியாது. உரிமை, நீதி, கோரிக்கைகளின் அடிப்படையில் தீவிரவாதம் செய்யப்படுவதானால் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களுக்கு இழைக்கும் இந்த மிகப் பெரிய அநீதியை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது.

மனிதன் முதலில் மனிதன் என்ற அந்தஸ்திற்குத் தகுந்தவனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பின்பு தான் அவன் மதம், மொழி, ஜாதி, சமூகம் போன்ற அடைமொழிகளுக்கு ஏற்றவனாகிறான். அதை யாரும் எந்த காலத்திலும் மறந்து விடலாகாது.

உண்மையிலேயே ஒருவருக்கு சார்ந்திருக்கும் மதம், சமூகம், மொழி, ஜாதி ஆகியவற்றில் அக்கறை இருக்குமானால் அந்தந்த மக்களுக்காக ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வது தான் சிறந்தது. அவர்கள் வாழ்க்கை மேம்பட உழைப்பது அவசியம். அதற்குத் தான் மன உறுதி அதிகம் தேவை. உழைப்பும், சக்தியும் அதிகம் தேவை. அப்படி செய்யும் போது தான் ஒருவர் அக்கறை காட்டும் மனிதர்களின் நிரந்தர வளர்ச்சிக்கு பாதை வகுத்தது போல ஆகும்.

அதை விட்டு விட்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டால் பல அப்பாவிகளுக்கு ஒருவன் துன்பம் தரலாமே ஒழிய அவன் அக்கறை காட்டுவதாக நினைக்கும் மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்த முடியாது. மேலும் அழிப்பது என்றுமே சுலபமான விஷயம். அதற்கு மேம்பட்ட குணங்களோ, திறமையோ தேவையில்லை. ஆக்குவது தான் கஷ்டம். அதற்குத் தான் திறமையும் உழைப்பும் தேவை.

உயிரை எடுப்பதும், உயிரை விடுவதும் பிரமாதமான விஷயமல்ல. சமூகத்திற்கு உபயோகமாக வாழ்வதும், உபயோகமாக இருப்பதுமே சிறப்பு.

எந்த தீவிரவாதியும் அன்பினால் உருவாவதில்லை. வெறுப்பினாலேயே உருவாகிறான். வெறுப்பு தான் அவன் சக்திகளையும், அறிவையும் இயக்கும் சக்தியாக இருக்கிறது. தான் சார்ந்திருக்கும் சாரார் மீதுள்ள அன்பினால் அவன் உந்தப்படுவதற்குப் பதிலாக எதிர் சாரார் மேலுள்ள வெறுப்பினாலேயே உந்தப்படுகிறான். தான் சார்ந்த மக்களுக்கு நல்லது செய்வதற்குப் பதிலாக எதிரணிக்கு தீங்கு விளைவிக்கவே முற்படுகிறான்.வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட எந்த செயலும் எவருக்கும் நன்மையை ஏற்படுத்தி விட முடியாது. அவனுடைய செயலை வைத்து அவன் சார்ந்த மக்களையே குற்றப்படுத்த முனையும் முட்டாள்தனத்தை உலகம் செய்வதால் அவன் தான் சார்ந்த மக்களுக்கும் தீங்கே செய்தவனாகிறான்.

எனவே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களும், அதை ஆதரிப்பவர்களும், நியாயப்படுத்த முனைபவர்களும் இந்தத் தீவிரவாதம் யாருக்கு எதிராக? இதனால் உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்ற கேள்வியை ஆறறிவு படைத்த மனிதர்கள் என்ற அடிப்படையில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வது தர்மமாகும்.

- என்.கணேசன்