சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 30, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 18



நிஜம் இன்னும் உயிரோடு இருப்பது தெரியாமல் நிழலை நிஜமாக்க லீ க்யாங் முற்பட்டது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான். புத்தர் சிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை மைத்ரேய புத்தராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு மைத்ரேயர் பற்றிய பேச்சே திபெத்தில் முடிந்து போயிருந்தது. உண்மையான மைத்ரேயர் இறந்து போய் விட்டதால் நிலவும் சோகமாக அந்த மௌனத்தை லீ க்யாங் தவறாக எடுத்துக் கொண்டான். மைத்ரேயர் உயிருக்கு இருக்கும் ஆபத்தை அறிந்து கொண்டு மேற்கொண்ட உஷார் நிலை தான் அந்த அமைதி என்பதை அவன் அறியவில்லை. (அவன் தன் வாழ்க்கையில் போட்ட மிகக்குறைவான தப்புக் கணக்குகளில் அதுவும் ஒன்று.)

சீனத் தலைவர்களிடம் மறைமுக அனுமதி வாங்கிய பின் மைத்ரேய புத்தா திட்டத்தை அவன் மிகுந்த கவனத்துடன் வடிவமைத்தான். முதலில் திபெத்தில் அவன் நன்றாக அறிந்திருந்த புத்த பிக்கு ஒருவரை வரவழைத்தான். அவர் முன்பே சீனர்களிடம் விலை போனவர். திபெத்திய புத்தமத நூல்களை கரைத்துக் குடித்தவர். ஐம்பத்திரண்டு வயதான அந்த பிக்குவின் பெயர் அவன் நினைவில் இல்லை. அவருக்கு ஒரு கண் பார்வை இல்லாததால் ஒற்றைக்கண் பிக்கு என்ற பெயரில் தான் அவரை மனதில் பதிவு செய்திருந்தான்.  

அவரிடம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு திபெத்தில் பிறந்த குழந்தைகளில் இலட்சணமாய், புத்திசாலித்தனமும், சூட்டிப்பும் நிறைந்த குழந்தைகளாக தேர்ந்தெடுத்து தெரிவிக்கச் சொன்னான். அவர் மூன்று நாட்களில் அப்படிப்பட்ட ஏழு குழந்தைகள் பட்டியலைக் கொண்டு வந்து தந்தார்.  அந்த ஏழு குழந்தைகளையும் வரவழைத்து இரண்டு நாட்கள் மறைவில் இருந்து ஆராய்ந்தான்.

மிக வசீகரமான தோற்றம், மலர்ந்த முகம், எதையும் சீக்கிரம் புரிந்து கொள்ளும் அறிவு எல்லாம் சேர்ந்த ஒரு குழந்தை அந்த ஏழில் ஒன்றாக இருந்தது. பார்த்தவுடனேயே மனதில் பதிந்து போகிற தோற்றம் கொண்ட டோர்ஜே என்ற பெயருடைய அந்தக் குழந்தையை மைத்ரேயனாக லீ க்யாங் தேர்ந்தெடுத்தான்.

டோர்ஜேயின் ஏழைக்குடும்பத்துக்கு நல்லதொரு தொகை தரப்பட்டது. ஒரு தனி ரகசிய இடத்திற்கு சிறுவனும், ஒற்றைக்கண் பிக்குவும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவனுக்கு மைத்ரேயன் என்ற பெயர் சூட்டப்பட்டு அப்படியே அங்கு அழைக்கப்பட்டான். அவனுக்கு அடிப்படைக் கல்வியும் அதைத் தொடர்ந்து புத்தமத புனித நூல்களையும் கற்றுத் தரும் வேலை ஒற்றைக்கண் பிக்குவுக்குத் தரப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக எப்படிப் பேச வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி உட்கார வேண்டும், எப்படி ஆசிர்வதிக்க வேண்டும், எப்படி கம்பீரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சொல்லித்தர வேறு ஒரு நபரை லீ க்யாங் ஏற்பாடு செய்தான். மாதம் ஒரு முறை நேரில் சென்று மைத்ரேயன் என்ற கதாபாத்திரத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் செய்தான். உண்மையிலேயே அந்தச் சிறுவனின் முன்னேற்றம் பிரமாதமாக இருந்தது. உண்மையாக மைத்ரேயன் இருந்திருந்தால் கூட இவனளவு கச்சிதமாக மனதில் பதிவானா என்கிற சந்தேகம் லீ க்யாங்குக்கு சென்ற மாதம் தான் வந்திருந்தது.

இப்போதோ உண்மையான மைத்ரேயன் இருக்கிறான் என்பது உறுதியாகி விட்டதால் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் சந்தர்ப்பமும் தனக்கு வாய்த்திருக்கிறது என்று வேடிக்கையாக லீ க்யாங் நினைத்துக் கொண்டான்.

வாங் சாவொவிற்குப் போன் செய்து புத்தகயா நிலவரத்தைக் கேட்டான். டெர்கார், கர்மா தார்ஜே இரண்டு மடாலயங்களுக்கு முன்புறத்திலும் ஆட்கள் நிற்பதாகவும், வெளியாட்களுக்கு இனி மாலை வரை மடாலயங்கள் மூடப்பட்டிருக்கும் என்றாலும் ஆட்கள் கண்காணிப்பைத் தளர்த்தவில்லை என்றும் வாங் சாவொ தெரிவித்தான்.

நல்லதுஎன்று சுருக்கமாக பேச்சை முடித்துக் கொண்ட லீ க்யாங் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். யோசிக்கையில், அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் தலாய் லாமா அசல் மைத்ரேயனை பத்தாண்டுகளாக ஒளித்து வைத்திருப்பது அவனுள் லேசாக கோபத்தை எழுப்பியது. மைத்ரேயனைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்வது உத்தமம் என்று தோன்றியது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்தான்.


பீஜிங்கில் இருக்கும் சீனத் தொல்பொருள் ஆவணக் காப்பகம் மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது. மிகப்பழமையான நாகரிகத்தை உடைய சீனாவில் பழங்கால சுவடிகள் உட்பட பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள்கள் ஏராளமாக இருந்தன.  திபெத்தில் இருக்கும் ஆவணக் காப்பகம் பீஜிங்கின் ஆவணக்காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் சீனத் தொல்பொருள் ஆவணக்காப்பகத்திற்கு லீ க்யாங் திடீரென விஜயம் செய்தான்.

அந்த ஆவணக்காப்பகத்தின் முதன்மை பொறுப்பாளர் சீனப் பிரதமரின் சகோதரியின் கணவர். அதனால் அவர் லீ க்யாங்கின் வரவால் பரபரப்படையவில்லை.  ஐம்பத்தெட்டு வயதான அவர் தோற்றத்தில் எழுபது வயதைக் காட்டினார். அவர் நகர்வதிலும் நடப்பதிலும் மேலும் ஐந்தாறு வயது கூடுதல் நிதானம் இருக்கும். அவர் அறிவு கூர்மை மிக்கவர் என்றாலும் மகா சோம்பேறியான அவரை லீ க்யாங்குக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது. மகா முட்டாள்களைக் கூட அவனால் மன்னிக்க முடியும். ஆனால் சோம்பேறிகளை அவனால் சகிக்க முடிந்ததில்லை. சோம்பேறிகளை அரசு வேலைகளில் இருந்து விடுவித்து விட்டால் மட்டுமே ஒரு நிர்வாகம் உருப்பட முடியும் என்கிற திடமான நம்பிக்கை கொண்ட லீ க்யாங் அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்த போது அவர் சிலை போல் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.

லீ க்யாங்கைப் பார்த்தவுடன் விழிகள் மட்டும் அவன் பக்கம் நகர்ந்தனவே தவிர முகமும் உடலும் இம்மியும் நகரவில்லை. மெல்ல சொன்னார். “வாருங்கள்

இந்த ஆளை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் கழுத்தை நெறித்து விடத்தோன்றும் என்று எண்ணியவனாக லீ க்யாங் நேராக விஷயத்திற்கு வந்தான். “மைத்ரேய புத்தர் பற்றி குறிப்பிடும் பழங்கால ஆவணங்கள் நம்மிடம் சுமார் எத்தனை இருக்கும்

அவனையே யோசனையுடன் சிறிது நேரம் அவர் பார்த்தார். பின் மெல்ல சொன்னார். “சுமார் நூறு இருக்கும்.

“திபெத்தில்?

“திபெத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன். அதுவும் நம் நாட்டின் ஒரு பகுதி தானே?

அதைச் சொல்லும் போது கூட அவருடைய உதடுகள் அதிக அகலத்திற்கு அசையவில்லை. லீ க்யாங் கேட்டான். “அதில் எத்தனை மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன

“கிட்டத்தட்ட எல்லாமே.என்று சொன்னவர் இவன் இன்னும் இதுபற்றி அதிகம் கேட்பான் என்று புரிந்து கொண்டவராக “என் உதவியாளனை அழைக்கிறேன். அவன் உங்களுக்கு உதவுவான்என்று சொல்லி லீ க்யாங்கிடம் பேசி சலிப்பதைத் தவிர்க்கப் பார்த்தார்.

“எனக்கு உங்களிடம் தான் கேட்க வேண்டும்என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி அவரையே லீ க்யாங் ஊடுருவி பனிப்பார்வை பார்த்தான். அவருக்கு ஒரு கணம் வயிற்றை ஏதோ செய்தது.

திடீரென்று லீ க்யாங் புன்னகைக்கு மாறி மிகுந்த மரியாதையுடன் சொன்னான். ஏனென்றால் உங்கள் அறிவார்ந்த கருத்தைக் கேட்கத் தான் நான் வந்திருக்கிறேன். உங்கள் உதவியாளனுக்கு நிறைய தெரிந்திருக்கலாம். ஆனால் உங்கள் அளவு ஆழமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

லீ க்யாங்கைப் போன்ற ஒரு பேரறிவாளன் தன்னுடைய அறிவார்ந்த கருத்தைக் கேட்க வந்திருப்பதாகச் சொன்னது உள்ளூர ஒரு பெருமிதத்தை ஏற்படுத்தியது. அதோடு கேட்க வந்ததைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் அவன் நகர மாட்டான் என்பதும் தெரிந்தது. வேறு வழியில்லாமல் அவர் சிறிதாய் முறுவலித்து விட்டு  “கேளுங்கள். தெரிந்ததைச் சொல்கிறேன்

அந்த நூறு ஆவணங்களில் எத்தனை மைத்ரேய புத்தர் பிறப்பைப் பற்றியும் அவர் தோற்றத்தைப் பற்றியும், அவருடைய செயல்களைப் பற்றியும் தெளிவாகச் சொல்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

“சுமார் ஏழு இருக்கும்

“இப்போதைய காலகட்டத்தையும் மைத்ரேயரையும் சம்பந்தப்படும் ஆவணம் ஏதாவது இருக்கிறதா?

பதிலைத் தெரிந்து கொண்டே அவன் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்தது.  ஆனாலும் அவர் சொன்னார். திபெத்தில் ஒரு குகையில் கிடைத்த பத்மசாம்பவாவின் ஒரு ஓலைச்சுவடி பத்து வருடங்களுக்கு முன் மைத்ரேயர் பிறப்பார் என்று சொன்னது. அந்த ஓலைச்சுவடி விசித்திரமானது. அது இரண்டு பகுதிகளாக இது வரை கிடைத்திருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு ஒரு பகுதியும், பத்து வருடங்களுக்கு முன் ஒரு பகுதியும்.... .  

அந்த ஓலைச்சுவடியின் மொழி பெயர்ப்பு எனக்கு வேண்டுமே

“அதற்கு நம்மிடம் இது வரை 18 மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. யாருடைய மொழிபெயர்ப்பை நீங்கள் கேட்கிறீர்கள்?

அத்தனை மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன என்பதை லீ க்யாங் அறிந்திருக்கவில்லை. “யாருடைய மொழிபெயர்ப்பு சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?என்று அவரிடமே கேட்டான்.

“அதைத் தீர்மானிக்க வழியில்லை

“ஏன்?

“பத்மசாம்பவா மந்திரசித்தியில் பிரசித்தி பெற்றவர். இது ஒன்றைத் தவிர அவருடைய மற்ற எல்லா ஓலைச்சுவடிகளும் மந்திரத்தையும், தந்த்ராவையும் பற்றித் தான். முடிச்சுப் போட்டு எழுதுவதில் வல்லவர். அதனால் மொழிபெயர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. எல்லா மொழி பெயர்ப்புகளும் ஒத்துப் போகும் ஒரே விஷயம் பத்து வருடங்களுக்கு முந்தைய மார்கழி மாத சுக்லபக்‌ஷத்தில் திபெத்தில் மைத்ரேயர் அவதரிப்பார் என்பது வரைக்கும் தான். மற்ற விஷயங்களில் எல்லாம் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறார்கள். எது சரி எது தவறு என்பதை மைத்ரேயரைப் பார்த்த பிறகு தான் ஒருவரால் தீர்மானிக்க முடியுமே ஒழிய அதற்கு முன்பு முடியாது

(தொடரும்)

என்.கணேசன்


Thursday, October 23, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 17



லீ க்யாங்கின் நினைவு வந்து ஒரு கணம் உறைந்து போன ஆசானை அக்‌ஷய் கரிசனத்துடன் பார்த்தான். ஆசானுக்கு உடல்நலப் பிரச்னையோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. அவன் பார்வையில் இருந்தே அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட ஆசான் தன்னை சமாளித்துக் கொண்டு சொன்னார். “ஒன்றுமில்லை நண்பரே. ஒரு மனிதனின் நினைவு எப்போதுமே எனக்கு இது போல் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வளவு தான்

இத்தனை நேரமாய் ஆசானுடன் பேசிக் கொண்டிருந்த்திலேயே அவரை ஒரு உறுதியான மனிதராக அக்‌ஷய் கணித்திருந்தான். என்ன தான் பேச்சில் கனிவாக இருந்த போதிலும் அந்த அப்பாவித் தோற்றத்திற்கும், அன்பான பேச்சுக்கும் பின்னால் ஒரு இரும்புத்தன்மை இருந்ததை அவனால் உணர முடிந்திருந்தது. ஆனால் அவரையே ஒருவனின் நினைவே தடுமாற வைக்கிறது என்றால் அவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது என்பது புரிந்தது.

“அவன் தங்கள் நண்பனா எதிரியா ஆசானே?

“நண்பனல்ல. போதிசத்துவர் காட்டிய அன்பு வழியில் பயணிக்கும் என்னைப் போன்ற ஒரு பிக்கு அவனை எதிரி என்று சொன்னால் அதுவும் சரியாக இருக்காது. இப்போதைக்கு எங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறவன் அவன். சீன உளவுத்துறை MSS ல் உபதலைவனாக இருக்கிறான். பெயர் லீ க்யாங். திபெத் சம்பந்தப்பட்ட உளவுத்துறை விவகாரங்களில் அவன் தான் முடிவெடுப்பவன்....

இங்கே ரகசியமாய் ஆசான் வந்திருப்பதையும், அவரைச் சந்திக்க ஒரு ஆள் வருவான் என்பதையும் முன் கூட்டியே அறிந்திருந்த லீ க்யாங் அதி புத்திசாலி தான் என்பதில் அக்‌ஷய்க்கு சந்தேகமில்லை....

ஆசான் அக்‌ஷயைத் தாண்டி சுவரை வெறித்து பார்த்தபடி சொன்னார். “அந்த மனிதனின் அறிவுக்கு இணையான ஒரு அறிவை நான் இது வரை கண்டதில்லை. என்னுடைய வாழ்க்கை குறுகியதல்ல. மிக நீண்ட காலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் சந்தித்திருக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் குறைவானதல்ல. பல தரப்பட்ட மனிதர்களை ஆழமாகவே அறிந்திருக்கிறேன். ஆனால் லீ க்யாங் போன்ற ஒருவனை நான் சந்தித்ததில்லை. ...

அவர் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட அந்த வெறித்த பார்வை லீ க்யாங் என்ற மனிதனை மனதில் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.  அக்‌ஷய் ஆசானை லேசான புன்னகையுடன் பார்த்தான். பின் தனக்கு எழுந்த முக்கிய சந்தேகத்தைக் கேட்டான். “மைத்ரேய புத்தர் உயிரோடு இருப்பது லீ க்யாங்குக்குத் தெரியுமா?

“சில நாட்கள் முன்பு வரை அவனுக்குக் கண்டிப்பாகத் தெரியாது. இப்போது அவனுக்குத் தெரிந்திருக்கலாம், அல்லது சந்தேகமாவது வந்திருக்கலாம். ஆனால் சீக்கிரமே அவனுக்கு நிச்சயமாய் தெரிந்து விடும்... அது மட்டுமல்ல மைத்ரேய புத்தர் யார் என்பதும் கூட கண்டுபிடித்து விடுவான்....

“எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?

ஆசான் டெல்லி விமான நிலையத்தில் தலாய் லாமாவைச் சந்தித்த வழுக்கைத் தலையரைப் பற்றி விவரமாகச் சொன்னார். அக்‌ஷய் அதைக் கேட்டு விட்டு திகைத்தான். மௌன லாமாவின் எச்சரிக்கையின்படி  மைத்ரேயரை லீ க்யாங்க் நெருங்க நாட்கள் அதிகமாகாது என்பது அவனுக்கு புலனாக ஆரம்பித்தது.

ஆசான் உருக்கமான தொனியில் சொன்னார். “அதனால் தான் அங்கிருந்து மைத்ரேயரைத் தப்பிக்க வைத்து விட உங்கள் உதவியை நாடுகிறோம் அன்பரே.... அது மட்டுமல்ல மைத்ரேயரைக் கொன்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முந்தையதை விட பல மடங்கு உக்கிரமாக அவர்கள் முயற்சிகள் இருக்கும். ஏன் தெரியுமா...

அக்‌ஷய் அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

ஆசான் மெல்ல சொன்னார். “அவர்கள் ஒரு போலி மைத்ரேய புத்தரை உருவாக்கி வைத்திருத்திருக்கிறார்கள் அன்பரே. சீக்கிரத்திலேயே அந்த போலி மைத்ரேயரை பதமசாம்பவா சொல்லி விட்டுப் போயிருக்கிற நிஜ மைத்ரேயராய் உலகத்திற்கு அரங்கேற்றம் செய்யப் போகிறார்கள்.... இந்த நேரத்தில் உண்மையான மைத்ரேயர் இருப்பது அவர்களுக்கு ஆபத்தல்லவா?

அக்‌ஷய் அசந்து போனான்.

லீ க்யாங் அடிக்கடி புத்த கயா நிலவரத்தை விசாரித்து தெரிந்து கொண்டிருந்தான். யோசிக்க யோசிக்க ஆசான் டெர்கார் மடாலயத்திலேயே இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆசானிடமிருந்து ஒரு தாளை வாங்கிக் கொண்டு போன ஆசாமி கயா போய் சேர்ந்து கயாவில் இருந்து லக்னோ போகும் ரயிலில் ஏறி உட்கார்ந்திருக்கிற தகவல் வந்து சேர்ந்தது.

வாங் சாவொ ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் அந்த ஆசாமியின் புகைப்படங்களையும் சின்ன வீடியோக்களையும் அனுப்பி வைத்திருந்தார்கள். அவற்றில் அவன் சட்டைப்பையில் வைத்திருந்த ஆசான் தந்த காகிதத்தை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஏதோ பெரிய புதையல் ரகசியத்தை தன் சட்டைப்பையில் வைத்திருப்பது போன்றதொரு பிரமையை அவன் ஏற்படுத்தினான். பார்க்கவும் திடகாத்திரமாக இருந்தான். ஆனால் அவன் முகத்தில் புத்திசாலித்தனம் என்பது சிறிதும் தெரியவில்லை. உடலின் அளவு அறிவு முதிர்ச்சி இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.

தலாய் லாமாவும் ஆசானும் தேடிக் கண்டுபிடித்து போய் உதவி கேட்கிற அளவு இந்த ஆசாமியிடம் சரக்கு இல்லை என்பதால் இவனல்ல ‘அந்த ஆள்’.  ஒருவேளை அந்த ஆளிடம்  தரச்சொல்லி ஒரு கடிதத்தை ஆசான் இவனிடம் தந்திருக்கலாம். இல்லா விட்டால் கண்காணிப்பவர்களை திசை திருப்ப ஆசான் இவனிடம் ஏதாவது ஒரு காகிதத்தை தந்திருக்கலாம்.

டெர்கார் மடாலயத்தில் என்ன நிலவரம் என்று கேட்ட போது பார்வையாளர்கள் எல்லாரும் வெளியேறி விட்டார்கள் என்று தகவல் கிடைத்தது. ஆசான் உள்ளே இருக்கும் அறிகுறி எதுவும் இல்லை என்று தெரிவித்தார்கள். ஆனாலும் அங்கேயே காவல் இருக்கும்படி லீ க்யாங் கட்டளை இட்டான். அதே போல கர்மா தார்ஜே மடாலயம் முன்பும் ஆள்களை தொடர்ந்து இருக்கும்படி சொன்னான். வினாடி முட்கள் மிக மந்தமாக நகர்ந்தன. ஆனால் லீ க்யாங் பொறுமையாக காத்திருந்தான். அவசரப்பட்டால் நுணுக்கமான எத்தனையோ விஷயங்களை ஒருவன் தவற விட்டு விட நேரிடும். லீ க்யாங் ஒரு பக்குவ நிலையை எட்டிய பிறகு அப்படி ஒரு போதும் முக்கிய நுணுக்கமான தகவல்களைத் தவற விட்டதில்லை.  

தர்மசாலாவில் ஆசான் தலாய் லாமாவிடம் மைத்ரேய புத்தரைப் பற்றிப் பேசிய வேளையில் இருந்து இது வரை நடந்தவைகளை எல்லாம் புள்ளிகளாய் வைத்து இணைத்துப் பார்த்ததில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. மைத்ரேய புத்தர் என்று தலாய் லாமாவும் அவரைப் பின்பற்றுபவர்களும் நம்புகிற சிறுவன் இன்னும் இறந்து விடவில்லை. அது இது வரை லீ க்யாங்க் போட்ட திட்டங்களை தவிடுபொடியாக்க முடிந்த நிஜம். அதை அவன் ரசிக்கவில்லை. அது ஆச்சரியமில்லை. ஏனென்றால் உண்மைகள் என்றுமே ரசிக்கும்படியாக இருந்து விடுவதில்லை....

இத்தனை நாள் அமுக்கமாக இருந்தவர்கள் இப்போது அதைப் பற்றி பேச ஆரம்பித்திருப்பது திரை மறைவில் சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதை தெளிவாகத் தெரிவிக்கிறது. ஏதாவது செய்தாக வேண்டும். அதுவும் விரைந்து செய்தாக வேண்டும்....

தன் முன்னால் உளவுத்துறை சிறிது நேரத்திற்கு முன் வைத்து விட்டுப் போன ரிப்போர்ட்டை லீ க்யாங் மறுபடி படித்தான். வித்தியாசமான பெயர்கள் உள்ள திறமையான இந்திய உளவாளிகள் பெயர்கள் அதில் நிறைய இருந்தன. ஆனால் அந்தப் பெயர்களில் எதுவுமே இந்த மைத்ரேயர் விஷயத்தில் சம்பந்தப்படுத்த முடிந்தவை அல்ல என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. இது வரை அவன் உள்ளுணர்வு பொய்த்ததில்லை. இப்போது ஆசானை சந்திக்கவிருக்கும், அல்லது சந்தித்து முடித்திருக்கும் அந்த நபர் களத்திற்கு புதியவனாக இருக்க வேண்டும் அல்லது அடிக்கடி களத்திற்கு வராத அளவு ரகசியமானவனாக இருக்க வேண்டும் அல்லது உளவாளியே அல்லாத ஒருவனாக இருக்க வேண்டும். கடைசி அபிப்பிராயம் சரியாக இருந்தால் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. உளவாளியே அல்லாத ஒருவனைப் பற்றிய ரகசியங்களை காக்க இந்தியா ஏன் இந்த அளவு சிரத்தை எடுக்க வேண்டும்?...  அப்படிப்பட்டவன் உதவியை தலாய் லாமா ஏன் நாட வேண்டும்? அந்த நபரிடமிருந்து இவர்கள் எந்த விதமான உதவியை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் பெரிய கேள்வியாக இருந்தது.

தலாய் லாமாவை அதிர வைத்த வழுக்கைத் தலையன் பற்றிய விவரங்கள் எதுவும் இன்னமும் கிடைக்கவில்லை. கல்கத்தாவில் எல்லா மருத்துவமனைகளில் முழுவதும் தலை வழுக்கையான டாக்டர்களைத் தேடிப் பார்த்தாகி விட்டது. மொத்தம் நான்கு வழுக்கைத்தலை டாக்டர்கள் கல்கத்தாவில் இருந்த போதும் அந்த டாக்ஸி டிரைவர் சொன்ன அடையாளங்கள் பொருந்துகிற நபராக நான்கு பேரில் ஒருவர் கூட இல்லை.  

லீ க்யாங் வாங் சாவொவைக் கூப்பிட்டுக் கேட்டான். அந்த கிழட்டு டிரைவருக்கு  வழுக்கைத்தலையன் கொடுத்த விசிட்டிங் கார்டில் கல்கத்தா என்று இருந்தது ஞாபகம் சரியாக இருக்கிறதா இல்லை அது வேறெதாவது ஊராக இருக்க வாய்ப்பிருக்கிறதா?

“கிழவன் அது கல்கத்தா தான் என்று சாதிக்கிறான்வாங் சாவொ சொன்னான்.

லீ க்யாங் சொன்னான். “வாங் சாவொ. நாம் போகிற வேகம் போதாது. நாம் முன்பு நினைத்தது போல மைத்ரேய புத்தனாய் பிறந்த சிறுவன் அன்று செத்து விடவில்லை. அவன் உயிரோடு தான் இருக்கிறான்....

லீ க்யாங் முழுவதுமாய் நம்பினால் ஒழிய எதையும் திட்டவட்டமாய் சொல்லும் பழக்கம் இல்லாதவன். அதனால் வாங் சாவொ அதிர்ச்சி அடைந்தான். பின் மெள்ள கேட்டான். “எங்கே திபெத்திலேயேவா?

“அப்படித்தான் தோன்றுகிறது. அது மட்டுமல்ல அவன் சம்பந்தமாய் ஏதோ பிரச்னையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எச்சரிக்கை மௌனலாமாவிடம் இருந்து வந்திருக்கலாம்.

வாங் சாவொ குழப்பத்தோடு கேட்டான். “திபெத்தில் இருக்கும் மைத்ரேயனுக்கு பிரச்னை என்றால் இந்தியாவில் இருக்கும் ஒருவன் உதவியை எதற்கு அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவன்  என்ன செய்ய முடியும்?

“அதை நாம் கண்டுபிடித்தால் பாதி குழப்பம் தீர்ந்து விடும். ஆசான் சந்திக்கிற ஆள் யார் என்று தெரிந்தால் அதை நாம் கண்டுபிடித்து விடலாம்

கயாவில் இருந்து லக்னோ செல்லும் ரயிலில் உட்கார்ந்திருக்கும் அந்த ஆசாமி ஆசான் சந்திக்க இருந்தவன் அல்ல என்பதை வாங் சாவொ இன்னேரம் யூகித்திருந்ததால் அவனும் குழம்பினான்.

போன் இணைப்பைத் துண்டித்த லீ க்யாங் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டான். மைத்ரேய புத்தன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்பதை சீனத்தலைவர்களிடம் சொன்னால் அதை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் இப்போது தெரிவிப்பது உசிதம் அல்ல. அவர்களிடம் அந்த சிறுவனை அப்புறப்படுத்திய பின்பே தெரிவிப்பது தான் நல்லது.

மைத்ரேய புத்தா என்கிற ஒரு ரகசிய திட்டத்தை அவன் ஆரம்பித்ததே திபெத்தியர்கள் நம்பிய அந்த மைத்ரேய புத்தரின் அவதாரம் கற்பனை, அல்லது கொல்லப்பட்டு விட்டது என்ற எண்ணத்தில் தான். அவன் அந்த திட்டத்தை சீனத்தலைவர்கள் முன் வைத்த போது அவர்கள் தயக்கம் காட்டினார்கள். மதம், கடவுள் இரண்டிலுமே எந்த விதத்திலுமே அவர்கள் சம்பந்தப்பட விரும்பவில்லை. ஆனால் லீ க்யாங் ‘இதில் சீனாவுக்கு லாபமே தவிர நஷ்டம் இல்லைஎன்று சுட்டிக் காட்டினான்.

இப்போது தலாய் லாமா நமக்குத் தலைவலியாக இருப்பது தனி நாடு கேட்கும் வெறும் சுதந்திரப் போராளியாக அல்ல. அவலோகிடேஸ்வரர் என்கிற போதிசத்துவரின் மறுபிறவி என்று திபெத்தியர்கள் நம்பி அவர் பின்னால் நிற்பதால் தான். திபெத்தியர்களின் அந்த நம்பிக்கை தான் உலகநாடுகள் பல அவருக்கு ஆதரவு தெரிவிக்க காரணமாய் இருக்கிறது. அப்படி இருக்கையில் புத்தரின் மறு அவதாரமான மைத்ரேய புத்தர் என்ற ஒரு கதாபாத்திரத்தை உண்மையாகவே ஏற்படுத்தி அவரை நமக்கு சாதகமாய் உபயோகப்படுத்திக் கொண்டால் நாம் திபெத் விவகாரத்தில் எத்தனையோ சாதிக்க முடியும்?

சீனத் தலைவர்கள் யோசனையுடன் அதிகார மையமான பொதுச்செயலாளரைப் பார்த்தார்கள். பொதுச்செயலாளர் தன் சோடாபுட்டிக் கண்ணாடி வழியாக லீ க்யாங்கையே சிறிது நேரம் அமைதியாகப் பார்த்து விட்டுக் கேட்டார். நீ ஏற்படுத்தும் அந்தக் கதாபாத்திரத்தை திபெத்தியர்கள் மைத்ரேய புத்தர் தான் என்று நம்புவார்களா?

திபெத்தியர்கள் மட்டுமல்ல. உலகமே நம்புகிற மாதிரி உருவாக்கிக் காட்டுகிறேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். கத்தியின்றி ரத்தமின்றி அமைதியாகவே திபெத்திய பிரச்னையை நாம் முடிவுக்குக் கொண்டு வருவோம்.....

லீ க்யாங்கின் அறிவு மற்றும் செயல் திறமையை பல முறை கண்டிருந்தாலும் பொதுச்செயலாளர் உடனடியாக ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

லீ க்யாங் சொன்னான். “இதில் நமக்கு லாபம் வரா விட்டாலும் கூட  நஷ்டப்பட ஏதுமில்லை....

நல்ல வேளை, இவன் அரசியலுக்குள் நுழையவில்லைஎன்று அருகே இருந்த சகாவிடம் முணுமுணுத்த பொதுச்செயலாளர் கடைசியில் தலை அசைத்தார். ஆனால் எழுத்து மூலமாக எந்த ஒப்புதலும் தரவில்லை. அதன் மூலமாக சீனத்தலைவர்கள் ஒன்றைத் தெளிவுபடுத்தினார்கள். நாளை இதில் ஏதாவது பிரச்னை என்று வந்தால் அரசாங்கம் அவன் பின்னால் நிற்கப் போவதில்லை...

அது பற்றி லீ க்யாங் கவலைப்படவில்லை. மைத்ரேய புத்தா என்கிற திட்டம் ஆரம்பமானது. யாருமே மறுக்க முடியாத, அனைவரையுமே கவரக்கூடிய ஒரு மைத்ரேய புத்தர் லீ க்யாங்கின் அறிவிலிருந்து ஜனனம் எடுத்தான்....

எல்லாமே நன்றாகவே போய்க் கொண்டிருந்தது, அசல் மைத்ரேய புத்தன் இருக்கிறான் என்கிற இந்த செய்தி வரும் வரை!

(தொடரும்)

-என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

Monday, October 20, 2014

நிம்மதிக்கும், முக்திக்கும் யோக வாசிஷ்டம்!

அறிவார்ந்த ஆன்மீகம் -51 

கவத் கீதையைப் பற்றி கேள்விப்படாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிற்குச் செய்த உபதேசம் அது. ஆனால் பகவத் கீதைக்கு இணையான இன்னொரு ஞானப் பொக்கிஷம் இராமாயணத்தில் இருக்கிறது. அது இராமபிரானுக்கு அவருடைய குரு வசிஷ்டர் உபதேசம் செய்தது. யோக வாசிஷ்டம் என்று அழைக்கப்படும் அந்த ஞான உபதேசத்தைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அந்த ஞான உபதேசத்தைக் கேட்டு ஒப்பற்ற ஞானியும், திரிலோக சஞ்சாரியுமான நாரதரே “பிரம்ம லோகத்திலும், சொர்க்கத்திலும், பூமியிலும் இது நாள் வரை கேட்காத மகத்தான உபதேசத்தை இப்போது கேட்டு என் செவிப்புலன் புனிதம் அடைந்ததுஎன்று மெச்சி இருக்கிறார். மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கும் அவரே அந்த மூவுலகிலும் அது வரை கேட்டிராத உபதேசம் என்று சொல்கின்றார் என்றால் யோக வாசிஷ்டத்தின் உயர்வை வேறு வார்த்தைகளில் சொல்லத் தேவை இல்லை அல்லவா?

இனி யோக வாசிஷ்டம் எந்த சந்தர்ப்பத்தில் உபதேசிக்கப்பட்டது என்று பார்ப்போம். குருகுல வாசம் முடிந்து இராமன் தன் சகோதரர்களுடன் தீர்த்த யாத்திரை போய் விட்டு வருகிறார். அந்த சமயத்தில் உலக வாழ்க்கையின் நிலையாமை, அர்த்தமில்லாத வாழ்க்கை ஓட்டம் பற்றி எல்லாம் எண்ணி இராமனுக்கு வாழ்க்கையில் விரக்தியும் வைராக்கியமும் ஏற்பட்டிருந்தது. உற்சாகமில்லாமல் சோர்வாக இருக்கிறார். அந்த நேரத்தில் தான் விசுவாமித்திர முனிவர் இராமனைத் தன்னுடன் காட்டுக்கு அழைத்துப் போக தசரதனின் அனுமதி கேட்டு வந்திருந்தார். ஆரம்பத்தில் தயங்கினாலும் வசிஷ்டரின் அறிவுரையால் தசரதனும் அனுமதி தந்திருந்தார். அந்த சமயத்தில் இராமனின் விரக்தி மனநிலையைக் காண நேர்ந்த விசுவாமித்திரர் வசிஷ்டரிடம் இராமனுக்கு உபதேசித்து மனம் தெளிவடைய வழிகாட்டச் சொல்கிறார். அப்படிப் பிறந்ததே யோக வாசிஷ்டம்.   

பகவத் கீதையில் முதல் அத்தியாயம் முழுவதும் அர்ஜுனனின் புலம்பல் தான். அதே போல யோக வாசிஷ்டத்திலும் முதல் காண்டம் முழுவதும் இராமனின் விரக்திப் பேச்சுகளே.  பிறப்பு, இறப்பென்ற சம்சார வாழ்க்கையில் என்ன சுகம்? மனிதர்கள் இறக்கவே பிறந்து, பிறக்கவே இறக்கிறார்கள்..... என் மனது கிராமத்து நாய் போல் குறிக்கோளில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது. கிடைத்துள்ள மேலான சுகத்தை இழந்து விட்டு மூங்கில் கூடையில் பெய்யப்பட்ட நீர் போல் மனம் வீணாகிக் கொண்டிருக்கிறது.... அலைகடலை அடக்கிக் குடித்து விடலாம். மேரு மலையைப் பெயர்த்து எறிந்து விடலாம். சுட்டெரிக்கும் கனலை விழுங்கி விடலாம். ஆனால் மனத்தை அடக்குவது எளிதாக இல்லை..... காலம் அனைவரையும், அனைத்தையும் விழுங்கி விடுகின்றது...என்றெல்லாம் மன அமைதியற்ற நிலைக்கான கசப்பான உண்மைகள் மேலும் பல சொல்லி விட்டு கடைசியில்  சான்றோர்கள் உலகின் பிறப்பு இறப்புகளின் தன்மையை உணர்ந்து சஞ்சலமற்ற நிலையை எவ்வாறு பெற்றனரோ அதனை எனக்கு உபதேசித்தருள வேண்டும்என்று வசிஷ்டரிடம் இராமன் வேண்டிக் கொள்கிறார். பின் தொடரும் வசிஷ்டரின் உபதேசங்களே யோக வாசிஷ்டம்.

யோக வாசிஷ்டத்தில் சின்னச் சின்ன உதாரணக் கதைகள் உண்டு, அழகான உவமைகள் உண்டு, எளிமையான வார்த்தைகளில் வேதாந்த சாரம் உண்டு, மனதை உறுதியும் அமைதியும் படுத்தும் ஆத்மஞானம் உண்டு. தத்துவ விஷயமாகத் தோன்றும் ஐயங்களுக்கு தெளிவான விளக்கங்கள் தந்து முக்தியைடையத் தேவையான அனைத்து உபதேசங்களும் இதில் உள்ளதால் இதற்கு “மோக்‌ஷோபாயிஅதாவது முக்திக்கு வழிகாட்டும் நூல் என்ற பெயரும் இதற்கு உண்டு.

இனி வசிஷ்டர் இராமனுக்கு மனம் அடங்கி அமைதியடையவும், ஞானத் தெளிவு பெற்று உற்சாகத்தோடும் உறுதியோடும் வாழ்க்கையை நடத்தி முடித்து முக்தி பெறவும் சொல்லும் கருத்துக்களின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

யோக வாசிஷ்டத்தின் ஆரம்பத்திலேயே ஞானிகள் காட்டும் வழியில் மனிதன் முயற்சி செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி வசிஷ்டர் உபதேசிக்கிறார். “வேடனின் வலையில் இருந்து அல்லது பகைவனின் கூண்டிலிருந்து சிங்கம் தன் முயற்சியால் வெளிவருவது போல் உயர்ந்த மனித முயற்சியால் இந்த சம்சாரமென்னும் கிணற்றிலிருந்து வெளிவர வேண்டும். விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டத்தைப் பெற்றதும், பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் அப்படிப் பட்ட தீவிர முயற்சியாலேயே. நிலையற்ற இந்த சம்சாரத்தில் வீழ்ந்து துயரப்படும் மனிதன் உயர்ந்த சாத்திரங்கள், சத்சங்கம் இவற்றின் துணையோடு தனது அறியாமையை நீக்கிக் கொண்டு ஆன்ம நாட்டம் பெற்று அனுபூதி நிலைக்கு உயர்தல் வேண்டும்

காலமெல்லாம் சுகபோகங்களில் தம்மை இழந்து விட்டு, உடல் மற்றும் மன நோய்களால் தள்ளாடும் முதுமையில் எதையும் சாதிக்க முடியாமல் மனிதர்கள் துயரப்படுகிறார்கள். எனவே ஆன்ம வித்தைக்கு ஏற்ற பருவம் பால்யமும், வாலிபமுமே.

“நான் பந்தப்பட்டுள்ளேன். விடுதலையே எனது இயல்புநிலை. அதனை நான் இப்போது இழந்து நிற்கிறேன். இதற்குக் காரணம் புலன்வழிப்பட்ட எனது வாழ்க்கையேஎன்று உணர்ந்து பந்தப்படாமல் தன் இயல்பான சுதந்திரத் தன்மையில் வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்று தெளிந்து அதற்கான முயற்சியில் ஈடுபடும் சாதகன் சான்றோர் உதவியை நாடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

முக்தியின் வாசலில் நான்கு துவாரபாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர். அவை:

1.       சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப்படுத்துதல்

2.       விசாரம்: எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்பதில் தெளிவாயிருத்தல்.

3.       சந்தோஷம்: வேட்கைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் ஓடி சஞ்சலப்பட்டு துயரம் கொள்ளாமல் தான் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து நிறைவாக, சந்தோஷமாய் வாழ்தல்.

4.       சத்சங்கம்: உண்மையான சாதுக்கள் மற்றும் அறநெறியில் உயர்ந்தோரை அணுகி இருத்தல். (அவர்கள் பேசும் சாத்திரங்களுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் இடையே முரண்பாடுகள் இல்லாமல் இருக்கும் என்பதால் அவர்களோடு சேர்ந்திருத்தல் பெரும்பலன் கிடைக்கும்.)

இந்த நான்கு வழிகளில் ஒன்றையேனும் முழுமையாகப் பின்பற்றினால் மீதி மூன்றும் தானாகவே அமையும் என்கிறார் வசிஷ்டர்.

துக்க வடிவான சம்சாரத்திலிருந்து விடுதலையைப் பெற ஒரே வழி மனத்தை வசப்படுத்துதலே என்கிறார் வசிஷ்டர். “அனைத்து சுக துக்கங்களுக்கும் மனமே காரணம். மனம் புலன்களோடு இணைந்து உலக நாடகத்தை நடத்துகிறது. தானே உண்டாக்கிய உலகத்தில் தானே பாத்திரதாரியாகவும் இருந்து ஜீவனை அலைக்கழிக்கிறது.

“இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தால், மலைகளைப் பிளந்தது போல் இந்திரியங்கள் என்ற விஷப் பாம்புகள் தலையெடுக்கும் போதெல்லாம் விவேகம் என்ற தடியால் தொடர்ந்து அடித்து நொறுக்க வேண்டும்

அப்படிச் செய்தால் மனம் அடங்கி வசமாகி விடுமா, முக்தி கிடைத்து விடுமா என்றால் இல்லை என்கிறார் வசிஷ்டர். நீண்ட காலப் பயிற்சி முக்கியம் என்கிறார். “இராமா! ஜனன மரண ரூபமான இந்த சம்சாரம் அநேக பிறவிகளில் சேர்த்த பலனே. எனவே அது குறுகிய காலப் பயிற்சியால் மறைவதில்லை. வெகுகாலம் மிக விழிப்போடு, தொடர்ந்து செய்யும் ஆன்மப் பயிற்சியால் மனமற்ற (அதாவது எண்ணங்களற்ற) நிலை தோன்றும். அப்போது மட்டுமே ஜனன மரண சம்சாரம் நீங்கி முக்தி கிட்டும்

“சீறிப்பாய்கிற நெருப்புக்கு அருகில் உள்ளவன் அந்தத் தீ தன்னைத் தீண்டாதிருக்கக் காட்டும் விழிப்புணர்வும், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கியவன் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு துடுப்பாவது சிக்காதா என தவிக்கின்ற தவிப்பும், மலை உச்சியில் நிற்பவன் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நழுவிப் போகாதிருக்கக் காட்டும் எச்சரிக்கை உணர்வும், ஜனன மரண சமசார பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி பெற விழைபவனிடம் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் கேட்டு இராமன் மனம் தெளிந்து ஞானம் பெற்றார் என்கிறது யோக வாசிஷ்டம். வசிஷ்டர் அறிவுரையை முழுமையாகப் பின்பற்ற முடிந்தால் நம் மனமும் தெளிவடையும், வாழ்க்கை அமைதியடையும், முக்தியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன?

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 4.3.2014 

Thursday, October 16, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 16



க்‌ஷயிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த ஆசான் கனிவாகக் கேட்டார். “என்ன அன்பரே?

அக்‌ஷய் உடனே இயல்பு நிலைக்கு வந்தான். “ஒன்றுமில்லை ஆசானே. நீங்கள் தொடருங்கள்

ஆசான் தொடர்ந்தார். “அந்த ஓலைச்சுவடியில் இருந்த இரண்டாவது முடிச்சை அவிழ்த்ததில் மைத்ரேயரின் பத்து வயது முடிந்த பிறகு மறைவில் இருந்தாலும் பேராபத்து வரும் என்றும் சுமார் ஒரு வருட காலம் நீடிக்கும் அந்த பேராபத்திலிருந்து மைத்ரேயரைக் காக்க நாகசக்தி உள்ள ஒருவன் வருவான் என்றும் இருந்தது.  நாங்கள் சக்தி வாய்ந்த நாகர்களில் ஒருவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம்..... அப்போது தான் மௌன லாமாவின் எச்சரிக்கை வந்தது.... திபெத்தில் சில காலம் வசித்த உங்களுக்கு மௌன லாமாவைத் தெரியும் என்று நினைக்கிறேன்...

அக்‌ஷய் “தெரியும்என்றான். தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பிக்க முக்கிய காரணமானவர் என்பதாலும் பல தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தியவர் என்பதாலும் அக்‌ஷய் திபெத்தில் இருந்த காலத்திலேயே மௌன லாமா பெரும் மதிப்புடன் பேசப்பட்டதைக் கேட்டிருக்கிறான்.

ஆசான் தொடர்ந்தார்.  “இன்னும் சில நாட்களில் மைத்ரேயர் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படும் என்றும் மைத்ரேயர் உடனடியாக திபெத்தில் இருந்து போய் விட வேண்டும் என்றும் எச்சரிக்கையை எழுதினார். மைத்ரேயரைக் காக்க நாகமச்சத்தை முதுகெலும்பின் மேல்பகுதியில் கொண்டிருப்பவன் உதவியை நாட வேண்டும் என்று ஆலோசனையையும் எழுதினார்....

அக்‌ஷய்க்கு அந்த நாகமச்சத்தில் மீண்டும் ஒரு சிலிர்ப்பு வந்து போனது. இத்தனை காலம் ஜடமாய் இருந்த ஏதோ ஒரு சக்தி தன் முதல் துடிப்பை வெளிப்படுத்தினது போல இருந்தது. மீண்டும் அரும்பிய வியர்வையை அக்‌ஷய் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.

அதைப் பார்த்து விட்டு ஆசான் குற்ற உணர்ச்சியுடன் சொன்னார். புழுக்கமான அசௌகரியமான ஒரு இடத்தில் உங்களை உட்கார வைத்திருப்பதற்கு என்னை மன்னியுங்கள் அன்பரே

ஒரு அசௌகரியமும் இல்லை. நீங்கள் தொடருங்கள்என்று அக்‌ஷய் புன்னகைத்தான். ஆசான் தொடர்ந்தார்.

பத்மசாம்பவா நாகசக்தி உள்ள ஒருவன் வருவான் என்று சொல்லி இருந்ததும் மௌன லாமா சொன்னதும் முரணாக இருப்பது எங்களைக் குழப்பியது. பத்மசாம்பவா நாங்கள் வணங்கும் முதல் குரு. மௌன லாமாவோ எங்களுக்கு பல நேரங்களில் சரியான வழியைக் காட்டியவர். மறுபடி அந்த ஓலைச்சுவடியில் எழுதி இருப்பதை மொழிபெயர்த்து தந்தவரிடம் போனோம். அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த வாக்கியத்தை நாக சக்தி இருப்பவன் என்றும் எடுத்துக் கொள்ளலாம் நாக சின்னம் இருப்பவன் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அப்படி எடுத்துக் கொண்டால் இருவர் சொல்வதும் ஒத்துப் போகிறது...

உடனடியாக எங்கள் புத்த மடாலயங்கள் அனைத்திற்கும் ரகசியத் தகவல் அனுப்பி யாருக்காவது அந்த மாதிரி ஒரு மச்சம் இருப்பவரைத் தெரியுமா என்று கேட்ட போது இமயமலையில் உள்ள ஒரு புத்தவிஹாரத்திலிருந்து உங்கள் பற்றிய தகவல் கிடைத்தது. அமானுஷ்யன் என்ற பெயரில் தான் அதிகம் அறியப்படுகிறீர்கள் என்பதும் தெரிந்தது. மேலும் விசாரித்து இப்போது அரசாங்க ஆதரவோடு நீங்கள் மறைவாக இருப்பது தெரிந்து கொண்டு உங்கள் அரசாங்கத்தை அணுகினோம்...

அக்‌ஷய் சொன்னான். “இருவர் சொன்னதும் ஒத்துப் போகிறது என்கிறீர்கள். ஆனால் பத்மசாம்பவா அவன் வருவான் என்றார். மௌன லாமா அவன் உதவியை நாட வேண்டும் என்கிறார். இரண்டும் ஒன்றல்லவே. தானாக வருவதும், தேடி அழைத்து வருவதும் வேறு தானே?

ஆசான் சிறிதும் தாமதிக்காமல் சொன்னார். அவன் அழைக்காமலேயே வருவான் என்று பத்மசாம்பவா சொல்லவில்லையே. வருவான் என்பது நிச்சயமாய் அவர் சொன்ன வார்த்தை. எப்படி என்பதை மௌன லாமா சொல்லிருக்கிறார். இப்படி தான் நான் பார்க்கிறேன். இதில் முரண் இல்லையே அன்பரே

ஆசானின் பேச்சு சாமர்த்தியம் அக்‌ஷய் முகத்தில் புன்னகை வரவழைத்தது.

புன்னகை செய்யும் போதெல்லாம் மிக அழகாகத் தோன்றும் அக்‌ஷயைப் பார்த்து புன்முறுவல் பூத்த ஆசான் அக்‌ஷயின் மற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தலைப்பட்டார்.

“நீங்கள் கேட்டீர்கள். அது உண்மையிலேயே புத்தரின் அவதாரமான மைத்ரேய புத்தர் தானா? ஆம் என்றால் உண்மையிலேயே தெய்வாம்சம் பொருந்திய மைத்ரேயனுக்கு அடுத்தவர் உதவி எதற்கு? தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாதா?”  அன்பரே. பத்மசாம்பவா சொல்லி இருக்கும் அடையாளங்கள், பிறந்த இடம், சூழ்நிலை எல்லாம் அந்தக் குழந்தையையே மைத்ரேயர் என்று காட்டியது. எனவே நாங்கள் பரிபூரணமாக நம்புகிறோம்.

ஒரு வீரியமுள்ள விதையில் மரம் ஒளிந்திருக்கிறது என்றாலும் அது மரமாக சில காலம் தேவைப்படுகிறது அன்பரே. அந்த மரத்தின் பலத்தை அது முளை விடும் போதே நாம் எதிர்பார்க்க முடியுமா. ஒரு குழந்தை கூட அந்த சிறு தளிரைப் பிடுங்கி விட முடியுமல்லவா? மைத்ரேயர் இப்போது தளிராக இருக்கிறார் அன்பரே. தன் தெய்வத்தன்மையை முழுவதுமாக உணரும் வரை அவருக்குப் பாதுகாப்பு தேவை தான் என்று நினைக்கிறோம். உங்கள் இதிகாசத்தையே உங்களுக்கு நினைவுபடுத்த நினைக்கிறேன் அன்பரே. தெய்வ அவதாரமான ராமனுக்கு பக்தனான அனுமனின் உதவி எதற்கு? வானர சேனையின் சேவை எதற்கு? தெய்வ அவதாரங்கள் கூட மாயா ஜாலங்களை நிகழ்த்தி எல்லாவற்றையும் உடனடியாக முடித்து விடுவதில்லை. எல்லாமே படிப்படியாகத் தான் நிகழ்கின்றன...

அக்‌ஷய்க்கு அவர் சொன்னதை மறுக்க முடியவில்லை.

ஆசான் பொறுமையாகத் தொடர்ந்தார். “அவர் உயிருக்கு எதனால் ஆபத்து, அவரைக் கொன்று எதிரிகள் சாதிக்கப் போவதென்ன என்று கேட்டிருந்தீர்கள் அன்பரே. வல்லமை நாடான சீனாவின் கண்களில் நாங்கள் தூசியாகவே உறுத்திக் கொண்டிருக்கிறோம் நண்பரே. அமெரிக்கா போன்ற பெரிய உலக நாடுகள் கூட தார்மீக ஆதரவை எங்களுக்குத் தந்து வருவதை சீனா ரசிக்கவில்லை. எங்களுக்கு எந்த விதத்திலும் பலம் கூடுவதை சீனா விரும்பவில்லை. ஒடுக்கப்பட்ட திபெத்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறோமே தவிர திபெத்திற்குள்ளே நாங்கள் அடங்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலைமையில் எங்களுக்கு மைத்ரேயர் போன்ற தெய்வப்பிறவி வந்து எங்கள் மக்களை எழுச்சி பெறச் செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கிறது. மதமும், கடவுளும் மக்கள் மத்தியில் மிக சக்தி வாய்ந்தவை என்பதால் இரண்டும் கம்யூனிஸ்டுகளுக்கு என்றுமே அலர்ஜி தான் அன்பரே. எனவே ஒரு மைத்ரேயரின் உதயம் அவர்களுக்கு எதிர்காலத் தலைவலியாகலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. இது வரை மூன்று குழந்தைகளை மைத்ரேயராக இருக்கலாம் என்று எண்ணி எங்கள் எதிரிகள் கொன்றிருக்கிறார்கள்..... இப்போது அவர்கள் மைத்ரேயரைக் கொல்ல பெரியதோரு வலுவான காரணம் இருக்கிறது....

அந்த வாசகத்தைச் சொல்லும் போது ஆசான் நினைவில் லீ க்யாங் வந்து புன்னகைத்தான். அவருக்கு ஒரு கணம் ரத்தமே உறைவது போல் இருந்தது. மிகவும் திடமான மனதுடையவரே ஆனாலும் ஆசான் மனதில் லீ க்யாங் என்றும் இது போன்ற உணர்வையே ஏற்படுத்தினான்...

சீன உளவுத்துறையின் வாராந்திரக் கூட்டம் அன்று வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் கூட்டம் முடிகிற வரை அலைபேசியில் வந்த குறுந்தகவல்களைப் பார்க்க முடியவில்லை. வெளியே வந்து பார்த்த போதோ வாங் சாவொ ஏழு தகவல்கள் அனுப்பி இருந்தான். புத்த கயாவில் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் மிகச்சுருக்கமாக அவ்வப்போது தெரிவித்திருந்தான். அந்த தகவல்களைப் படித்து முடித்த அவன் திருப்தி அடையாமல் தனதறைக்குப் போனவுடன் வாங் சாவொவிடம் பேசினான்.

“என்ன நிலவரம்?

டெர்கார் மடாலயத்தில் ஆசான் இருந்ததையும், ஒருவனுடன் சந்திப்பு நிகழ்ந்ததையும், அவனிடம் ஆசான் ஒரு காகிதம் தந்ததையும், பிறகு அங்கிருந்து வெகுவேகமாக ஒரு காரில் கிளம்பியதையும் தெரிவித்த வாங் சாவொ தொடர்ந்து சொன்னான். “அந்தக் கார் புத்த க்யாவில் இருக்கும் இன்னொரு திபெத்திய மடாலயமான கர்மா தார்ஜேவுக்குப் போயிருக்கிறது. அங்கேயும் ஆசான் வேகமாக உள்ளே போய் விட்டார். நம் இரண்டு ஆட்கள் அங்கே வெளியே நிற்கிறார்கள். ஆசான் கடிதம் தந்த ஆள் இப்போது கயா போய் சேர்ந்திருக்கிறான். அவன் பின்னால் நம் ஆள்கள் பட்டாளமே இருக்கிறது....

எனக்கு அந்த ஆளின் புகைப்படங்களை அனுப்பு. அதோடு வீடியோ எடுத்தும் அனுப்பு. எதற்கும் கர்மா தார்ஜே மடாலயத்துக்கு கூடுதல் ஆள்களை அனுப்பு. ஆசானை கண்காணிக்க இரண்டு ஆளெல்லாம் போதவே போதாது.... கர்மா தார்ஜே மடாலயத்துக்குப் போனது ஆசான் தான் என்று நம் ஆட்களுக்கு நிச்சயமாய் தெரியுமா?

கிழவர் கூன் போட்ட பிக்கு போல அங்கே நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் நம் ஆட்கள் ஏமாந்து போகாததால் தான் அந்த ஆளிடம் அவர் ஒரு கடிதம் கொடுப்பதைப் பார்க்க முடிந்தது. அதே கூன் போட்டு தான் கர்மா தார்ஜே மடாலயமும் போய் சேர்ந்திருக்கிறார்....

லீ க்யாங் யோசனையுடன் சொன்னான். டெர்கார் மடாலயத்தில் நம் கண்காணிப்பு அதிகமாய் இருக்கிறதென்று கூட அவர் இடம் மாறி இருக்கலாம். இப்போது கயா போய் சேர்ந்திருக்கிற ஆள் நாம் தேடுகின்ற ஆளாய் இருக்கலாம். ஆசான் நம்மை திசை திருப்ப வைத்த ஆளாயும் இருக்கலாம். உண்மையான சந்திப்பு கர்மா தார்ஜே மடாலயத்தில் நடக்க இருக்கலாம்.... இப்போது டெர்கார் மடாலயத்திற்கு வெளியே நம் ஆள்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?"

“யாரும் இல்லை.

லீ க்யாங் யோசித்தான். பின் மெல்ல கேட்டான். டெர்கார் மடாலயத்தில் இருந்து கர்மா தார்ஜே மடாலயம் போனது ஆசான் தான் என்பதை நம் ஆட்கள் அவர் முகத்தைப் பார்த்து முடிவு செய்தார்களா, இல்லை கூன் முதுகைப் பார்த்துத் தான் முடிவு செய்தார்களா?

வாங் சாவொ “கொஞ்சம் பொறுங்கள் சார்என்று சொல்லி விட்டு சிறிது நேரத்தில் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு லீ க்யாங்குக்கு பதில் சொன்னான். “முகத்தைப் பார்க்கவில்லையாம் சார். ஆசான் முக்காடு போட்டு முகத்தை மறைத்திருந்தாராம்.

முக்காடாஎன்று கேட்ட லீ க்யாங் பிறகு அழுத்தமாகச் சொன்னான். 

“உடனடியாக டெர்கார் மடாலயத்துக்கு நம் ஆட்கள் சிலரை மறுபடியும் அனுப்பு. தொடர்ந்து கண்காணிக்கச் சொல். ஆசான் அங்கேயே இன்னமும் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆசானும் அக்‌ஷயும் உள்ளே பேசிக் கொண்டிருந்த போது மறுபடியும் டெர்கார் மடாலயத்திற்கு வாங் சாவொ அனுப்பிய ஆட்கள் நான்கு பேர் வந்து சேர்ந்தார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

Monday, October 13, 2014

ஆராயப்படும் ஆன்மிகம்!


அறிவார்ந்த ஆன்மிகம் - 50

குத்தறிவு என்பதே ஆன்மிகத்தை எதிர்ப்பது என்ற நிலை ஒரு சாராரிடம் இருக்கிறது. ஆண்டவனையும் ஆன்மிகத்தையும் மறுப்பதே அறிவின் வெளிப்பாடு என்று அவர்கள் கருதுகின்றார்கள். அவர்கள் தங்களை விஞ்ஞான ஆதரவாளர்களாகவும் காட்டிக் கொள்வதுண்டு. எதற்குமே மேலை நாடுகளையும், விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் அவர்கள் மேற்கோள் காட்டிப் பேசுவதுண்டு. ஆனால் இன்றைய நவீனகாலத்தில் விஞ்ஞான ஆராய்ச்சிகளே ஆன்மிகத்தை ஆதரிக்க ஆரம்பித்துள்ளன என்பது அவர்களையும் யோசிக்க வைக்கும் செய்தியாக இருக்கின்றது. அறிவில் மேம்பட்ட விஞ்ஞானிகளும், மருத்துவ அறிஞர்களும் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சிகளையும் அவற்றின் முடிவுகளையும் புத்தகங்களாகவே எழுத முடியும் என்றாலும் சிலவற்றை மட்டும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

டாக்டர் ஆண்ட்ரூ நியூபெர்க் (Dr. Andrew Newberg) என்பவர் உலகின் பிரபல மூளையியல் நிபுணரும் விஞ்ஞானியுமாவார்.  பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் உளவியல் மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார். 15 நாடுகளின் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளில் அடிக்கடி அறிவியல் நிகழ்ச்சிகளைத் தருகிற இவர் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் டைம்ஸ் பத்திரிக்கைகளிலும் அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.  பல ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கும் இவர் கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain)என்ற புத்தகத்தை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.

இந்த புத்தகத்தில் ஆண்ட்ரூ நியூபெர்க் ஆன்மிகம் குறித்த தனது அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்த உண்மைகளை விரிவாக விளக்கியுள்ளார்.  இந்த ஆராய்ச்சிகளில் இவர் பயன்படுத்திய தொழில் நுட்ப உத்தி சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (Single Photon Emission ComputedTomography) என்பதாகும்.  இந்த ஆராய்ச்சியில் ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித வேதிப்பொருள்  ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். பிரான்ஸிஸ்கன் கன்னியாஸ்திரீகள்,  திபெத்திய யோகிகள் உட்பட பல ஆன்மிகப் பயிற்சிகளில் ஆழமாய் ஈடுபடும் பலரை இவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இந்த ஆராய்ச்சிகள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த ஆராய்ச்சிகளின் போது மனிதனின் மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார். அந்த நேரங்களில் மூளையில் விதவிதமான சர்க்யூட்டுகள் என்று சொல்லப்படும் மின்னலை பாதைகள் உருவாகின்றன என்பதையும் கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இறை சிந்தனை, பிரார்த்தனை, தியானம், ஆன்மிகச் சடங்குகள் ஆகிய ஆன்மிகச் செய்கைகளால் மனிதனின் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன என்கிற ஆணித்தரமான முடிவுக்கு அவரால் வர முடிந்தது. இந்த ஆராய்ச்சிகளில் பல மதத்தவரும் பங்கு பெற்றதால் இந்த ஆன்மிகச் செய்கைகளின் விளைவுகள் மதங்களைக் கடந்து ஒரே மாதிரியான நன்மைகளை விளைவிக்கின்றன என்பதை அவரால் அறிய முடிந்தது.

முக்கியமாக நீண்ட கால தியானப் பயிற்சிகள் மூளையின் அமைப்பையே கூட ஓரளவு மாற்றி விடுகின்றன என்றும் அவர்களது சமூகப் பிரக்ஞையும், மற்ற உயிர்களிடத்தில் அன்பும், கருணையும் மற்றவர்களை விட மிகவும் மேம்பட்டதாகவே இருக்கின்றன என்றும் அவர் கண்டறிந்தார். உடல் மற்றும் மன நலனும் மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டிருப்பது அவரது ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரிச்சர்டு ஜே.டேவிட்சன் (Richard J. Davidson) ஸ்பெயின் மற்றும் ஃப்ரான்ஸ் தேச ஆராய்ச்சி மையங்களின் ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து செய்த ஆராய்ச்சிகள் மனித உடலின் ஜீன்களில் (genes) கூட அதிக நேர தியானங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டுபிடித்திருக்கின்றன. பிரச்சினைகள் நிறைந்த சிக்கலான சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டாலும் கூட தியானப் ப்யிற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள் சீக்கிரமே மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்கள் என்று இந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ரிச்சர்டு டேவிட்சன் கூறுகின்றார். “தியானத்தினால் மனிதனுடைய மனம் அமைதியடைவதால் அவனது ஜீன்களின் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்படுவதை உறுதிப்படுத்தி இருக்கும் முதல் ஆராய்ச்சி இது தான். நமது ஜீன்கள் நம்முடைய மனதின் மாற்றத்திற்கேற்ப மாறி செயல்படுவது வியக்கத்தக்க செய்தியே”  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பெர்லா கலிமான் (Perla Kaliman) இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த ஜீன்களின் மாற்றங்கள் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் கட்டுப்படுத்துவதைக் கண்டு பிடித்திருக்கிறோம். இது மேற்கொண்டு கிடைக்கக் கூடிய பலன்களை ஆராய ஆரம்ப முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறோம்என்று கூறுகிறார்.


இங்கிலாந்தில் ஆன்மிகம் மற்றும் உளவியல் சிறப்பு ஆர்வக்குழு (The Spirituality and Psychiatry Special Interest Group (SPSIG)) 1999 ஆம் ஆண்டு உளவியல் அறிஞர்களின் ராயல் கல்லூரி ( Royal College of Psychiatrists )யால் ஆரம்பிக்கப்பட்டது. இக்குழு ஆன்மிகம் உளவியலில் ஏற்படுத்த முடிந்த மாற்றங்களைக் கண்டறியும் நோக்கத்தில் துவக்கப்பட்டது. தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உளவியல் அறிஞர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.

இவர்கள் ஆன்மிகச் செயல்களாக தியானம், யோகா, சீன டாய்சீ (Taichi), பிரார்த்தனை, கூட்டுப் பிரார்த்தனை, புனித நூல்கள் வாசிப்பு மற்றும் கேட்டல், யாத்திரைகள், பூஜைகள், ஆன்மிக இசை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஆராய்ச்சிகள் இந்த ஆன்மிகச் செயல்களால் மனிதர்களின் மன அமைதி வாழ்வின் மோசமான நிகழ்வுகளாலும் பெருமளவு பாதிக்கப்படாமல் பாதுகாக்கப் படுகின்றது என்றும் நோய்வாய்ப்பட்டாலும் அந்த நோய்களில் இருந்து சீக்கிரமே மீள முடிகின்றது என்றும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. எனவே இந்த ஆராய்ச்சிக்குழு தங்கள் சிகிச்சை முறைகளிலும் இந்த ஆன்மிகச் செயல்களில் ஓரிரண்டைப் புகுத்தி குணமாக்குதலில் நல்ல வெற்றி விகிதத்தைக் கண்டிருக்கிறார்கள்.

டி.ஸ்மித் (Smith T), எம். மெக்கலோக் (McCullough M), மற்றும் ஜே.போல்  (Poll J) என்ற மூன்று உளவியலறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியில் ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபடுபவர்கள் மற்றவர்களை விடக் குறைந்த அளவிலேயே மன உளைச்சலால் அவதிப்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்து உள்ளார்கள். அதே போல் அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹெரால்டு ஜி.கோனிக் ( Harold G. Koenig ) இறை நம்பிக்கையும், ஆன்மிக ஈடுபாடும் கொண்ட 65 வயதிற்கு மேற்பட்ட வயதினர்களை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். இதய நோய், கான்சர், நோய்க்கிருமி தாக்குதல் ஆகிய மூன்றிலுமே மற்றவர்களை விட ஆன்மிகவாதிகள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்படுகின்றார்கள் என்று தன் ஆராய்ச்சிகளின் முடிவில் அவர் தெரிவித்து உள்ளார்.  அவரது ஆராய்ச்சிகளின் விவரங்கள் மதம் உங்கள் உடல்நலத்திற்கு நல்லதா? (Is religion good for your health? The effects of religion on physical and mental health) என்ற நூலில் 1997 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளன.

 இது போல் எத்தனையோ ஆராய்ச்சிகள் ஆன்மிகத்தின் நற்பலன்களை உறுதிப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. ஆனால் அந்த நற்பலன்களை நாம் முழுமையாக அடைய நமது ஆன்மிக சிந்தனைகள் ஆழமாகவும், செயல்கள் ஆத்மார்த்தமாகவும் இருக்க வேண்டும். மேற்போக்காக இருந்தால் பலன்களும் அப்படியே பலவீனமாகத் தான் இருக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோமாக!

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 25.02.2014