சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 30, 2013

மத்வர் உபதேசித்த த்வைதம்


அறிவார்ந்த ஆன்மிகம் - 21

ல்லாமே பிரம்மம் என்னும் அத்வைத சாரம் பலருக்கும் அறிவுக்கு எட்டும் அளவுக்கு அனுபவத்தில் உணர சாத்தியப்படுவது கஷ்டம். பலவீனங்களும், குறைபாடுகளும், தேவைகளும், பிரச்சினைகளும் நிறைந்திருக்கிற நான் எங்கே? இவை எதுவுமே இல்லாமல் இருக்கும் மகாசக்தி வாய்ந்த இறைவன் எங்கே? எப்படி இரண்டையும் ஒன்று என்று சொல்ல முடியும்?என்று சாதாரண மனிதன் குழம்புவது தவிர்க்க முடியாத யதார்த்தமாக இருக்கிறது.

எல்லாமே கற்பனை, மாயை என்று சொல்லித் தேற்றிக் கொள்ள அவனால் முடிவதில்லை. நான் இருக்கிறேன், இந்த உலகம் இருக்கிறது, உலகத்தில் எத்தனையோ உயிர்களும் பொருள்களும் இருக்கின்றன, அந்தப் பொருள்களைத் தொட முடிகிறது, ஐம்புலன்களாலும் உணர முடிகிறது. பல வகைகளில் வித்தியாசப்படுகிற இதெல்லாமே ஒன்று என்றால் என்னால் ஒத்துக் கொள்ள முடிவதில்லையே. எல்லாவற்றிற்கும் மேலாக நானும், இறைவனும் எப்படி ஒன்றாக முடியும்? இறைவனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிற மகாசக்திகள் எதுவுமே என்னிடம் இல்லையே.என்கிறான்.

மேலும் நானும் இறைவனும் ஒன்று என்றால் இறைவனை வணங்குவது என்னையே வணங்கிக் கொள்வது போல் அல்லவா? வணங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?என்று அவனுக்குக் கேட்கத் தோன்றுகிறது.

சாதாரண மனிதனின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலாகவே த்வைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டும் தோன்றியது. முதலில் த்வைதம் பார்ப்போம். 'த்வி' என்ற சொல்லுக்குப் பொருள் இரண்டு' என்பதாகும். த்வைதம் என்றால் இரண்டாக விளங்குவது என்று பொருள் சொல்லலாம். இரண்டாக விளங்குவது என்றால் என்ன? ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டைத்தான் அது குறிக்கிறது. பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது கடவுளால் படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதே த்வைதம் சொல்லும் உண்மை. இந்தக் கோட்பாட்டை உபதேசித்தவர் மத்வாச்சாரியார் என்ற மகான். இவர் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

'மத்வர்' என்றால் 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று பொருள். அவருக்கு இருந்த ஆன்மிக ஞான ஆழமும், அதை வார்த்தைகளில் கொண்டு வந்து வாதிக்கும் திற்மையும் அவருக்கு அந்தப் பட்டத்தை ஏற்படுத்தித் தந்தன.

மத்வர் பரமாத்மா, ஜீவாத்மா, ஜடப் பொருள் என்ற மூன்றும் வெவ்வேறானவை என்று சொன்னார். இவர் ஐந்து வித வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார்.

1.தனி ஜீவாத்மாக்களிலிருந்து பரமாத்மாவான கடவுள் வேறுபட்டவர்.
2. ஜடப்பொருளிலிருந்தும் பரமாத்மாவான கடவுள் வித்தியாசமானவர். ஜடப்பொருள் என்பது அறிவோ உயிரோ இல்லாதது.
3. ஒரு ஜீவாத்மாவிலிருந்து இன்னொரு ஜீவாத்மாவிற்கு வேறுபாடு உள்ளது.
4. ஜீவாத்மாக்கள் ஜடப்பொருளான பிரகிருதியிலிருந்து வேறுபட்டு உள்ளவை.
5.ஜடப்பொருளான  பிரகிருதியும் அது பகுக்கப்பட்டு  பல பகுதிகளாகின்ற சமயத்தில் ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் வேறுபாடு இருக்கிறது.

இப்படி இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் (இருமை) என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

அறிவோனும், அறியப்படும் பொருளும் இன்றி எப்படிப்பட்ட அறிவும் சாத்தியமில்லை என்பது மத்வரின் வாதமாக இருந்தது. ஆகவே அவர் ஐம்புலன்களாலும் உணரப்படும் இந்த உலகம் உண்மை என்றார்.  நம்மைச் சுற்றி உலகிலுள்ள பொருள் மாறுவதாகவோ, மாறாததாகவோ அறியப்படலாம். ஒருபொருள் மாறக்கூடியது என்பதாலும் நிரந்தரமற்றது என்பதாலுமே அது உண்மையில்லாததாகக் கருதச் செய்ய முடியாது. இருக்கும் வரை அது உண்மை தானே!

இறைவன் சிருஷ்டி செய்வது போல ஜீவன்களும் தங்கள் அறிவிற்கேற்பவும் இறைவனால் அருளப்பட்ட சக்திக்கேற்பவும்,  தங்கள் குணத்தால் எழும் விருப்பங்களுக்கு ஏற்பவும் தம்மால் முடிந்த அளவில் சிருஷ்டி செய்கின்றனர். இந்த ஜீவன்களின் சிருஷ்டியே செயற்கை எனப்படுகிறது. ஜீவன்கள் உலக பந்தங்களிலிருந்தும்,  துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைய இறைவனை பக்தி செய்ய வேண்டும். தங்களை கடவுளிடம் அர்ப்பணித்துக் கொண்டு  சரணாகதி செய்துவிட வேண்டும் என்று மத்வர் உபதேசிக்கிறார்.

மொத்தத்தில் இவரது கருத்துப்படி ஜீவர்கள், உலகம், கடவுள் என்ற மூன்று தத்துவங்களும் உண்மையாகும். இந்த மூன்றிற்குமிடையே உள்ள வேறுபாடும் உண்மையாக இருக்கின்றது.  நிரந்தரமான உண்மையான பிரபஞ்சத்தை ஆளும் இறைவன் மட்டுமே சுதந்திரமானவர். ஜீவன்களும், பிரகிருதியும் அவருக்குக் கட்டுப்பட்டவை. இறைவன் எங்கும் இருப்பவராக, எல்லாம் அறிபவராக, எப்போதும் இருப்பவராக விளங்குகிறார் என்கிறார்.

கடவுளே மேலான உண்மை. உலகம் இறைவனின் படைப்பு. அனைத்து ஜீவராசிகளிலும் இறைவன் பிரகாசிக்கிறார் என்றாலும் அதை வைத்து அந்த ஜீவராசிகளையும் கடவுள் என்று கூறுதல் தவறு என்கிறார். நீர் நிரம்பிய பாத்திரங்களில் எல்லாம் சூரியன் பிரதிபலிப்பதால் அந்தப் பாத்திரங்களை எல்லாம் சூரியனாகச் சொல்ல முடியுமா என்ன?

அவருடைய கூற்றுப்படி இயற்கையில் ஜீவன்கள் ஞானமுடையவர்களே. ஆனால் அவர்கள் ஞானம் எல்லைகள் உள்ள ஞானம். அவர்கள் தங்களை விட மேலான கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐம்புலன்களுடன் ஓர் உடலைப் பெற்று உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் பந்தப்பட்டவனே. கட்டுப்பட்டவனே. இந்த பந்தத்திலிருந்து மோட்சம், விடுதலை பெறப் பற்பல பிறவிகளிலும் ஜீவன் உழைத்துப் போராடி கடைசியில் இறைவன் அருள் பெற்று அந்த விடுதலையைப் பெறுகிறான்.

ஒரு ஜீவன் ஞான அறிவு பெறும் வழிகள் மூன்று என்று மத்வர் கூறுகிறார். அவை
1. பிரத்யட்சம் - நேரடியனுபவமாகக் கண்டறிதல்.
2. அனுமானம் - ஒன்றை வைத்து ஒன்றை ஊகித்து உணர்ந்து அறிதல்.
3. ஆகமம் - சான்றோர்களின் அனுபவமாகிய என்றும் உள்ள வேத நூல்கள் படித்து அறிதல்.
இந்த மூன்று வழிகளாலும் உயர் ஞானம் பெற முடிகின்றது என்று மத்வர் கூறுகிறார்.

மத்வர் பகவத்கீதை, உபநிஷத்துகள், பிரும்ம சூத்திரம் ஆகிய மூன்றிற்கும் விளக்கமெழுதி அந்த விளக்கங்களிலும் த்வைத தத்துவத்தை நிலை நாட்டியுள்ளார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் முதலான 37  நூல்களை எழுதியிருக்கிறார். உடுபி கிருஷ்ணர் கோயிலைக் கட்டியவர் இவரே. இன்றும் அவர் ஏற்படுத்திய அஷ்ட மடங்களின் குருமார்களே அங்குள்ள கிருஷ்ணர் விக்கிரகத்திற்குப் பூஜை செய்து வருகிறார்கள்.

இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

மத்வருக்குப் பின் வந்தவர்களில் அன்னாரின் கொள்கையைப் பரப்பி புகழ்பெற்று நிறுத்தியவர் ராகவேந்திர சுவாமிகள் ஆவார். அவரும் த்வைதக் கொள்கையை விளக்கி நூல்கள் இயற்றியுள்ளார். தனது திறமையான வாதங்களால் மாறான கருத்துக்கள் கொண்ட அறிஞர்கள் பலரை வென்றுள்ளார்.

அத்வைத சிந்தனைகள் பாமர மனிதனின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எட்டாத போது அவனுக்குப் புரிகிற விதமாய் த்வைதம் என்ற ஆன்மிக தத்துவத்தை உபதேசித்து பாரத தேசத்தில் ஆன்மிக ஞானம் நீடிக்க வழிவகுத்த பெருமை மத்வருக்கு என்றும் உண்டு.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் -30-07-2013


Thursday, September 26, 2013

பரம(ன்) ரகசியம் – 63



விஷாலியை குற்ற உணர்ச்சி சிறிது சிறிதாக அரித்து சித்திரவதை செய்து கொண்டு இருந்தது. ஒரு நல்லவனைத் தவறாக நினைத்து கேவலமாக நடத்தி விட்டோமே என்று அவள் மிகவும் வருத்தப்பட்டாள். ஈஸ்வரின் வீட்டிற்குச் சென்ற போது அவன் அவள் ஒருத்தி இருப்பதாகவே நினைக்காதபடி தான் கடைசி வரை இருந்தான்.  அவளைப் பார்த்தவுடன் ஆரம்பத்தில் அவனை அறியாமலேயே தெரிந்த ஓரிரு வினாடி மலர்ச்சி பின் அவளிடம் காட்டப்படவில்லை. அவள் கிளம்பும் போது அவன் அவள் பக்கம் பார்க்கவே இல்லை. வெறுப்புடன் நான்கு வார்த்தையாவது அவன் பேசி இருந்தாலும் கூட அவளுக்கு அதை சகிக்க முடிந்திருக்கும். ஆனால் அவன் பாராமுகத்தை மட்டும் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஆனாலும் அவளால் அவனைக் குற்றம் சொல்ல முடியவில்லை. அவளுக்கு அது தேவை தான்  என்று தோன்றியது. அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று தோன்றியது. அவள் அவன் மீது கோபித்துக் கொண்ட போது அவனிடம் ஏன் கோபித்துக் கொண்டாள் என்பதைக் கூட தெரிவிக்கவில்லை. அவனைப் பேசக் கூட விட்டதில்லை.  அன்று அவனை அவள் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கச் சொன்னாள். அவன் விலகி இருக்கிறான். அவனிடம் எந்தத் தவறும் இல்லை. அவன் அவள் சொன்னபடி தான் செய்கிறான்.
                       
ஈஸ்வரின் நண்பன் பாலாஜியிடம் பேசிய போது ஈஸ்வரைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயம் சொன்னான். கண்ணியம், நாணயம் என்கிற விஷயத்தில் எல்லாம் ஈஸ்வரை மாதிரி ஒருவனைப் பார்க்க முடிவது கஷ்டம் என்று சொன்னான். அவள் ஈஸ்வரின் நண்பர்களின் ஃபேஸ்புக் எல்லாம் போய் பார்த்தாள். பெண் நண்பர்கள் உட்பட எல்லோரும் அவன் மேல் மிகுந்த மரியாதை கலந்த அன்பு வைத்திருந்தார்கள் என்பது அவர்கள் தகவல் பரிமாற்றங்களின் மூலம் தெரிந்தது. சில பெண்கள் அவன் மீது மையல் கொண்டிருந்தார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்தது. ஆனால் அவர்கள் எல்லாம் அவன் எட்டாத தூரத்தில் இருக்கிறான்  என்பது போல் கருத்து தெரிவித்தார்களே தவிர யாரும் அவன் பற்றித் தரக்குறைவாகச் சொல்லவில்லை. எல்லோரையும் ஈஸ்வர் ஏமாற்றி இருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் ஏமாந்திருக்கவும் வாய்ப்பில்லை. அதனால் மகேஷ் பொய் சொல்லி இருக்கிறான் என்பதில் அவளுக்கு இப்போது சந்தேகம் இல்லை. ஆனால் அவளால் மகேஷ் ஏன் பொய் சொன்னான் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவளுக்கு மகேஷ் நல்ல நண்பனாக இருந்தான். அதை அவள் இப்போதும் மறுக்க முடியாது. அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவன் நண்பன் தான். சின்ன வயதில் இருந்து அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். அவள் கேட்டால், அவன் வைத்திருக்கும் விளையாட்டுப் பொருளானாலும் சரி, தின்பண்டமானாலும் சரி, உடனே சிறிது கூடத் தயங்காமல் தந்து விடுவான். என்ன வேலை எந்த நேரத்தில் சொன்னாலும் அதைச் செய்வதில் அவன் சங்கடப்பட்டதில்லை.

இந்த ஒரு பொய்யைத் தவிர இது நாள் வரை அவளால் அவன் மீது ஒரு குற்றம் சொல்ல முடிந்ததில்லை. ஆனால் இந்த ஒரு பொய்யால் அவள் வாழ்க்கையில் உன்னதமான ஒரு உணர்வையே அவன் சுக்கு நூறாக்கி விட்டான். அதிலும் அவன் அன்று நடித்த நடிப்பு இப்போதும் அவள் கண்முன் நிற்கிறது. அவள் இதயம் உடைந்த கணமல்லவா அது.  அதை அவள் எப்படி மறக்க முடியும்?

பரமேஸ்வரனுக்குப் பயந்து மகேஷ் தன் காதலை என்றுமே அவளிடம் சொல்லி இருக்கவில்லை என்பதால் அவளுக்கு அவன் ஈஸ்வரைத் தன் காதலுக்கு எதிரியாக நினைத்து தான் இப்படிப் பொய் சொன்னான் என்பதை ஊகிக்க முடிந்திருக்கவில்லை. தன் தாத்தாவிடம் ஈஸ்வர் முன்பு கோபமாகப் பழகியதால் அவனை மகேஷிற்குப் பிடிக்கவில்லை, அதனால் தன் தோழியான விஷாலியும் அவனுடன் நெருங்கிப் பழகுவது பிடிக்கவில்லை, அதனால் தான் பொய் சொல்லி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கு கடைசியாக விஷாலி வந்தாள்.

மகேஷ் மீது அவளுக்கு ஆத்திரமாக வந்தது. உன்னால் எப்படி என்னிடம் நீ இப்படிப் பொய் சொல்ல முடிந்தது என்று கேட்க அவள் மனம் துடித்தது. ஆனால் அதற்கு பதிலாக மகேஷ் வேறு கற்பனைப் பொய்களை அவிழ்த்து விடுவானே ஒழிய தன் தவறை ஒப்புக் கொள்வான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. இனியொரு தடவை இந்தப் பொய்களைக் கேட்க நேர்ந்தால் அவனை நிஜமாகவே வெறுக்க வேண்டி இருக்கும். அதற்கு ஏனோ விஷாலியின் நல்ல மனது இடம் தரவில்லை.

மகேஷ் சொன்ன பொய் மகாபாதகமே ஆனாலும் இது வரை அவன் அவளுக்காக செய்ததை எல்லாம் அவளால் மறக்க முடியவில்லை. அதனால் ஒரேயடியாக அவன் நட்பை அறுத்து விடவும் அவளால் முடியவில்லை. அதே நேரத்தில் முன்பு போல அவளால் பழகவும் முடியவில்லை. இந்த திரிசங்கு நிலையில் அவள் அவனிடம் அளவாகப் பேசுவதையும் பழகுவதையும் வைத்துக் கொள்ள முடிவெடுத்திருந்தாள்.

அவன் இப்போதெல்லாம் அவர்கள் வீட்டுக்கு முன்பு போல் வருவதில்லை என்பது அவளுக்கு பெரிய ஆசுவாசத்தைத் தந்தது. ஆனால் அவ்வப்போது போனில் அவளுடன் அவன் பேசினான். விஷாலி தந்தி வாசகங்களில் பதில் சொல்லி வேறு முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லி போனை வைக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.

கடைசியில் ஒரு தடவை மகேஷ் கேட்டே விட்டான். “என்ன விஷாலி. நீ என் கிட்ட சரியா பேசவே மாட்டேன்கிறாய்?

பதிலை என் கிட்டே கேட்காதே. உன்னையே நீ கேட்டுக்கோஎன்று அவளுக்குச் சொல்லத் தோன்றியது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னாள். “அப்படி ஒன்னும் இல்லை... சரி வைக்கட்டுமா. இன்னொரு கால் வருது”.

அவள் அதிகம் தனிமையை விரும்பி தனிமையிலேயே இருந்தாள். அப்படித்  தனிமையில் இருக்கும் போதெல்லாம் ஈஸ்வருடன் நன்றாகப் பழகிய அந்த இரண்டு நாட்களைத் திருமபத் திரும்ப மனம் திரையிட்டுப் பார்த்து மகிழ்ந்தது. யாரோ இவன் பாடல் அடிக்கடி ஒலித்தது. அவள்-அவன்-அந்தப் பாடல் கலந்த ஒரு அழகிய தருணம் மனதை வருடிப் போனது. எல்லா நினைவுகளும் முடிவில் வலியையே தந்தாலும் அந்த அழகிய நினைவுகளை மறக்க முடியவில்லை...

தென்னரசு மகள் ஏதோ எண்ணங்களில் சோகமாய் ஆழ்ந்து போய் இருந்ததைக் கவனித்தார். அவளுக்கு அவர் அறை வாசலில் வந்து நிற்பது கூடத் தெரியவில்லை. கனத்த மனத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவர் தன் பழைய மகளைப் பார்க்க ஏங்கினார். என்னேரமும் சுறுசுறுப்பாய், சந்தோஷமாய், மலர்ந்த முகத்துடன் ஏதோ ஒரு வேலையை ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கும் அந்த மகளை அவர் இனி எப்போது காணப் போகிறார்?

“என்ன யோசிச்சுட்டு இருக்கே விஷாலி?

“ஒன்னும் இல்லைப்பாசொல்லி விட்டு விஷாலி ஒரு புன்னகையைப் பலவந்தமாய் உதட்டிற்குக் கொண்டு வந்தாள். அதைப் பார்த்து அந்தத் தந்தையின் மனம் மேலும் வேதனைப் பட்டது.  சிறு வயது முதல் மகளின் நிஜப்புன்னகையில் அகம் மகிழ்ந்து வந்த தந்தைக்கு மகள் போலிப் புன்னகை பூக்கும் நிலைமைக்கு வந்து விட்டதைத் தாங்க முடியவில்லை.

அவர் இனி எதுவும் கேட்டு விடுவாரோ என்று அவள் பயந்து எழுந்து தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். அரை மணி நேரத்தில் அவள் ஒரு ஓவியக் கண்காட்சிக்குக் கிளம்பிப் போனாள். “நான் போயிட்டு வரேன்ப்பா....

போகும் மகளையே பார்த்துக் கொண்டு தென்னரசு வாசலில் நின்றார். அவள் நடையில் ஒரு ஜீவனே இல்லை....

அந்த நேரத்தில் இளைஞன் ஒருவன் சைக்கிளில் அவர் வீட்டு வாசலில் வந்து நின்றான். “சாரி சார். புக்ஸ் கொண்டு வர லேட்டாயிடுச்சு.....என்று சத்தமாகச் சொன்னான்.

தென்னரசுக்கு அவன் பரிச்சயமானவன் அல்ல.  அதனால் அவனை சந்தேகத்துடன் பார்த்தார். இடம் மாறி வந்து விட்டானோ?

அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் சைக்கிளை நிறுத்தி விட்டு இரண்டு புத்தகங்களுடன் அருகில் வந்த அவன் அவரிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். ‘குருஜி பேசணும்னார்

புரிந்து கொண்ட தென்னரசு தானும் சத்தமாகவே “பரவாயில்லை. உள்ளே வாப்பாஎன்று உள்ளே அவனை அழைத்துக் கொண்டு போனார். வெளியே இருந்து பார்க்கும் யாருக்கும் அந்த இளைஞன் அவரது மாணவன், தெரிந்தவன் என்று தான் நினைக்கத் தோன்றும்.

உள்ளே நுழைந்தவுடன் அந்த இளைஞன் தன் செல்போனை எடுத்து அவரிடம் தந்து ஒரு புதிய செல்போன் எண் எழுதிய சீட்டையும் தந்தான். “இந்த நம்பருக்கு இந்த செல்போன்ல பேசுங்க

தென்னரசு திகைப்படைந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அந்த எண்களை அழுத்த, குருஜி பேசினார்.  “தென்னரசு உன் வீட்டுக்கு வெளியே இன்னமும் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான்னு பாபுஜியோட ஆள்கள் சொல்றாங்க. ஆனால் போன் டேப்பிங் இருக்கற மாதிரி தெரியலை. ஆனாலும் ஜாக்கிரதையாய் இருக்கறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன். அதனால தான் இந்த ஏற்பாடு. நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் வேதபாடசாலை பக்கம் வந்துடாதே. இங்கே பலமான போலீஸ் கண்காணிப்பு இருக்கு.

தென்னரசுவால் கேள்விப்பட்டதை நம்ப முடியவில்லை. பார்த்தசாரதி அவரைப் பார்த்துப் பேசி விட்டுப் போனது முதல் தான் கண்காணிக்கப்படுவது தென்னரசுக்குத் தெரிந்தே இருந்தது. அதனால் தான் அவர் அன்றிலிருந்து கல்லூரியைத் தவிர வேறு எங்கேயும் அதிகம் போகவில்லை. ஆனால் கண்காணிப்பு குருஜி வரைக்கும் நீளும் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. முதலாவதாக குருஜி மேல் யாருக்காவது சந்தேகம் வரும் வாய்ப்பு இருப்பதாகவே அவருக்குத் தோன்றவில்லை. அப்படி வந்தால் கூட குருஜி இருக்கும் இடத்தைக் கண்காணிக்க போலீஸ் இலாகா துணியும் என்பதைத் துளியும் நம்ப முடியவில்லை. எங்கே என்ன தவறு நடந்தது?.

தென்னரசுவின் அதிர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிந்தது போல் குருஜி சொன்னார். “எல்லாம் ஈஸ்வரோட அனுமானம் தான்னு நினைக்கிறேன். ஆனாலும் பயப்பட ஒன்னும் இல்லை. நம் திட்டப்படி நாளைக்கு காலைல ஆறு மணிக்கு இங்கிருந்து சிவலிங்கத்தோட கிளம்பறோம்... அதுக்கான ஏற்பாடு செஞ்சாச்சு. நீ ஆராய்ச்சி இடத்துக்கே நேரா வந்துடு. வீட்டுல வெளியூர் போறதா சொல்லிட்டு கிளம்பு. காலைல சரியா அஞ்சரை மணிக்கு கால்டாக்ஸி உன் வீட்டு முன்னால் வந்து நிற்கும். அது பாபுஜி ஆள்கள் ஏற்பாடு செய்தது. மீதியை அவங்க பார்த்துக்குவாங்க. உன் வீட்டுக்கு வெளியில் இருக்கற போலீஸ்காரன் அரை கிலோமீட்டருக்கு மேல பின் உன்னைப் பின் தொடர முடியாது. அதை பாபுஜி ஆள்கள் பார்த்துக்குவாங்க

தென்னரசு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். குருஜி தொடர்ந்தார்.


மகேஷ் கிட்ட நான் இன்னைக்கே சாயங்காலத்துக்கு மேல அங்கே வரச் சொல்லி இருக்கேன். நீயும் அவனும் ஒரே நேரத்துல கிளம்பி வந்தால்  அனாவசியமா அவன் மேலேயும் போலீஸுக்கு சந்தேகம் வரலாம். இது வரைக்கும் அவன் மேல போலீஸுக்கு சந்தேகம் இல்லை... அதனால அவன் அவங்க கண்காணிப்பில இல்லை. அந்த மெஷின்களோட ப்ரவுச்சர்ஸ் எல்லாம் அவனுக்கு நேத்தே அனுப்பி நல்லா படிச்சு வச்சுக்க சொல்லி இருக்கேன்....  சரி நாளைக்கு காலைல பார்க்கலாம்

தென்னரசு சொன்னார். “சரி குருஜி

அந்த இளைஞன் கொண்டு வந்திருந்த புத்தகங்களை வைத்து விட்டு அவரிடம் இருந்து செல்போனைத் திரும்ப வாங்கிக் கொண்டு போய் விட்டான்.

அந்த இளைஞன் போய் அரை மணி நேரத்தில் மகேஷ் வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை. இன்னொரு விஷாலியாய் தெரிந்தான். வந்தவுடன் கேட்டான். “விஷாலி இல்லையா?

“இல்லை. வெளியே போயிருக்கா

மகேஷின் முகம் மேலும் சோகமானது. விஷாலி அவனிடம் சரியாகப் பேசாமல் இருக்க ஆரம்பித்ததில் இருந்து ஆரம்பித்தது அவன் சோகம். பரமேஸ்வரன் உயிர் பிழைத்து ஈஸ்வரும், அவரும் நெருக்கமானவுடன் சோகம் பல மடங்காக ஆகி இருந்தது.

தென்னரசு சொன்னார். “நான் உன்னை அதிகம் வர வேண்டாம்னு சொல்லி இருந்தேனே மகேஷ். போலீஸ் கண்காணிப்பு இன்னும் இங்கே இருந்துகிட்டு தான் இருக்கு

“நான் அதிகம் வரலையே. வந்து நாலைந்து நாளுக்கு மேல ஆச்சு.... நாம ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ்னு போலீசுக்கும் தெரியும். அதனால நான் எப்பவாவது வர்றது எந்த சந்தேகத்தையும் கிளப்பாது.... சீக்கிரமே கிளம்பிடறேன்உண்மையில் ஆராய்ச்சிக் கூடத்திற்குப் போனால் இனி சில நாட்கள் விஷாலியைப் பார்க்க முடியாது என்பதால் அவளைப் பார்த்து விட்டுப் போகத் தான் மகேஷ் வந்திருந்தான். அவளைப் பார்க்க முடியாதது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

தென்னரசு சொன்னார். “வேதபாடசாலையையும் கண்காணிச்சுட்டு இருக்காங்கன்னு குருஜி சொன்னார். பலமான கண்காணிப்பாம்.....

“என்ன?மகேஷ் வாயைப் பிளந்தான். அவனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தென்னரசு தெரிவித்தவுடன் அவனுக்குக் கோபம் வந்தது. “அந்த அளவுக்கு யாருக்குத் தைரியம் வந்திருக்கு. குருஜி ஒரு போன்கால் செய்தால் போதுமே?  

மகேஷின் அறிவு கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் ப்ரோகிராம்கள், நவீன சாதனங்கள் ஆகியவற்றில் வேலை செய்வது போல வேண்டாத சில விஷயங்களிலும் அபாரமாக வேலை செய்யுமே ஒழிய மற்ற விஷயங்களில் வேலை செய்யாது என்பது தென்னரசுவிற்குத் தெரியும். பொறுமையாகச் சொன்னார். ரகசியமாய் கண்காணிக்கிறது அவருக்கு எப்படித் தெரியும்னு கேள்வி வரும். தப்பு செய்யாத ஆளை போலீஸ் கண்காணிச்சா என்ன, மடியில கனம் இருந்தாத்தானே வழியில பயம்னு அறிவிருக்கிறவன் நினைப்பான். இப்போதைக்கு கண்காணிக்கிறவங்களுக்கு சந்தேகம் மட்டும் தான் இருக்கு. அதை உறுதிப்படுத்திட வேண்டாம் இல்லையா?.....

“அப்படின்னா நாளைக்கு சிவலிங்கத்தை எப்படி அங்கே இருந்து எடுத்துட்டு போவாங்க?

 ஏதோ ஏற்பாடு செய்திருக்கிறதா குருஜி சொன்னார்

மகேஷ் தலையசைத்தான். குருஜி, சிவலிங்கம் யோசனைகள் போய் அவன் பழையபடி சொந்த சோகத்தில் மூழ்கினான். அங்கிள் நான் ஒரு பெரிய முட்டாள் தனம் செய்துட்டேனோன்னு எனக்கு இப்ப தோண ஆரம்பிக்குது...

என்ன?

குருஜியே அந்த சிவலிங்கத்திற்கு எத்தனையோ அடி தூரம் தள்ளியே நிற்கறப்ப நான் அன்னைக்கு அது கார் பின் சீட்டுல இருக்கறப்ப காரை ஓட்டிகிட்டு வந்திருக்கக் கூடாதுன்னு தோணுது. அதை எடுத்துகிட்டு வந்தவன் இன்னும் பழைய நிலைக்கு வரலை. சீர்காழில இருந்து அவனைக் கூட்டிகிட்டு வந்து எத்தனை நாளாச்சு. இன்னும் அவன் பேய் அடிச்சவன் மாதிரி தான் இருக்கான்.... எனக்கும் அந்த சிவலிங்கத்துக்கும் இடைவெளி கார்ல வெறும் ரெண்டடி தான் இருந்திருக்கும். முக்கால் மணி நேரம் அந்த தூரத்துல சிவலிங்கம் கூட இருந்த அந்த நாளுக்குப் பிறகு நானும் நிம்மதியாய் இல்லை... அது வரைக்கும் இந்தியா வர்ற யோசனையே இல்லாத ஈஸ்வர் வந்தான்.... அதுல ஆரம்பிச்சு எனக்கு ஒன்னு மேல ஒன்னு பிரச்சினை இருந்துகிட்டே தான் இருக்கு. என் மேல உயிரே வச்சிருந்த என் தாத்தாவுக்கு இப்ப நான் இருக்கேன்கிறதே மறந்துட்ட மாதிரி தான் இருக்கு. இப்ப அவருக்கு அவன் தான் உயிர். எங்கம்மாவுக்கும் மருமகன் வந்த பிறகு மகன் பத்தின யோசனையே இல்லை... விஷாலி கூட இப்ப என் கிட்ட சரியா பேசறதே இல்லை...

மகேஷ் குரல் அழுகையை எட்டி இருந்தது. ‘நீங்கள் கூட விவரமாய் இன்னொரு காரில் வந்து விட்டீர்கள்என்று அவன் வாய் சொல்லா விட்டாலும் பார்வை சொன்னது. தென்னரசு ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார். அவரும் நிம்மதியாய் இல்லை. எப்போது மகள் மறுபடி சிரிக்கிறாளோ அப்போது தான் அவர் நிம்மதி அடைய முடியும். ஆனால் அதை எல்லாம் சிவலிங்கத்துடன் முடிச்சு போட அவர் விரும்பவில்லை. இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் எல்லாம் சரியாகும்... அதில் அவருக்கு சந்தேகமில்லை.

தென்னரசு கனிவாக அவனைப் பார்த்துச் சொன்னார். “மகேஷ். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதே. சிவலிங்கம் பக்கத்துலயே நீ போகாமல் இருந்திருந்தால் கூட ஈஸ்வர் இந்தியாவுக்கு வந்திருப்பான். உன் தாத்தா கிட்ட அவர் அண்ணா முதல்லயே அவனுக்குத் தெரிவிக்கச் சொல்லி இருந்தார்ங்கறதை மறந்துட்டியா என்ன? இந்த ஆராய்ச்சிகள் முடியறப்ப நம்ம எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சிருக்கும். சரி நீ கிளம்பு... நாளைக்கு அங்கே சந்திக்கலாம்...

மகேஷ் ஓரளவு நம்பிக்கை வந்தவனாக கிளம்பினான்.


பாபுஜி தந்தைக்குப் போன் செய்து வேதபாடசாலை கண்காணிக்கப்படும் செய்தி கிடைத்ததில் இருந்து ஆரம்பித்து நடந்ததை எல்லாம் சொன்னார். சிவலிங்கம் ஒளிர்ந்ததைப் பார்த்த காட்சியை விவரிக்கையில் அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது.  குருஜி உதயனிடம் இந்த ஆராய்ச்சிகள் பற்றி அபிப்பிராயம் கேட்ட போது இப்போதைக்கு இந்தப்பக்கம் தான் அனுகூல நிலைமை இருப்பதாக அவர் சொன்னார் என்பதைத் தந்தையிடம் விவரமாகத் தெரிவித்து விட்டு பாபுஜி சொன்னார். “எல்லாம் இப்ப எங்க கட்டுப்பாட்டுல தான் இருக்குப்பா

முழுவதும் கேட்டு விட்டு பாபுஜியின் தந்தை பிரதாப்ஜி சொன்னார். “எனக்கு அப்படித் தோணலை 

“ஏன்ப்பாபாபுஜி உற்சாகம் வடியக் கேட்டார்.

“சிவலிங்கம் இருக்கிற இடம் மட்டும் தான் உங்க கட்டுப்பாட்டில் இருக்கு பாபு. சிவலிங்கம் இல்லை. இப்பவும் சிவலிங்கத்தைத் தொட முடிஞ்சது அந்தப் பையன் கணபதிக்குத் தான். உங்களுக்கல்ல. இப்பவும்  நீங்க பல அடி தள்ளித் தான் நிற்கிறீங்க. உன்னோட குருஜியையும் சேர்த்து தான் சொல்றேன். தொடக்கூட முடியாத நீங்க அதை உங்க கட்டுப்பாட்டுல வச்சிருக்கறதா சொல்றது தமாஷா இருக்கு

பாபுஜி காற்றுப் போன பலூன் போல ஆனார்.

(தொடரும்)

என்.கணேசன்         



Monday, September 23, 2013

ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதம்!



அறிவார்ந்த ஆன்மிகம்-20


வேதாந்த தத்துவ விளக்கங்கள் எல்லாம் மெத்தப் படித்த பண்டிதர்களுக்குத் தான் விளங்கும் என்ற அபிப்பிராயம் பல ஆன்மிகவாதிகளுக்கு இருக்கிறது. ஆனால் அந்த தத்துவங்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளும் போது தான் ஆன்மிகம் அறிவார்ந்ததாக அமைகிறது. அவை புரியாத வரை ஆன்மிகம் கண்மூடித்தனமான பின்பற்றுதலாகவே மாறி விடுகிறது என்பதே உண்மை.

நம் பாரத நாட்டைப் பொருத்த வரை மற்ற பல நாடுகள் உருவாகும் முன்பே நம் முன்னோர்களின் ஆன்மிக அறிவு சிகரங்களை எட்டி விட்டது என்றே சொல்ல வேண்டும். அந்தந்த காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர்ந்த ஆன்மிக தத்துவ சிந்தனைகள் பெரியோர்களால் சிந்திக்கப்பட்டும் உபதேசிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. 

அப்படிப்பட்ட மிக முக்கிய வேதாந்த தத்துவங்களையும், அவற்றை உபதேசித்த மகான்களையும், உபதேசிக்கப்பட்ட காலத்தின் தன்மையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அப்படிப் பார்த்தால் மட்டுமே அந்த தத்துவங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். முதலில் ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதம் பார்ப்போம்.

த்வைதம் என்றால் சம்ஸ்கிருதத்தில் இரண்டு என்று பொருள். அத்வைதம் என்றால் அ+த்வைதம், அதாவது இரண்டில்லாதது என்று பொருள். அத்வைதம் நம் உபநிடதங்களின் ஞான சாராம்சம் என்று சொல்லலாம். அந்த சாராம்சத்தை மறந்து விட்டு ஒரு கால கட்டத்தில் பாரத மக்கள் உலக வாழ்க்கை சுகங்களுக்காகவும், செல்வங்களிற்காகவும் வேண்டி சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். அவற்றை மறுத்து கௌதம புத்தர் உபதேசித்த கருத்துகள் பிரபலமாகி பாரதத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் பின்பற்றப்பட ஆரம்பித்தன. அப்படிப்பட்ட காலத்தில், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வேதாந்தக் கொள்கையை நிலை நாட்ட வந்தவர் ஆதிசங்கரர்.

கௌதம புத்தரின் கருத்துகள் பலவும் உபநிடதங்களில் சொல்லப்பட்டவையே. அதனால் ஆதிசங்கரர் உபதேசித்தவற்றில் பல அம்சங்களில் கௌதம புத்தரின் கருத்துக்களின் சாயல் இருந்தன.  அதனால் அவரை “கௌதம புத்தரின் இன்னொரு நகல்என்று வைதீகர்கள் கடுமையாக விமரிசித்தனர். ஆனால் கண்மூடித்தனமான சடங்குகள், சம்பிரதாயங்களை கௌதம புத்தரைப் போலவே ஆதிசங்கரரும் எதிர்த்தாரே ஒழிய மற்றபடி கௌதம புத்தரைப் போல அல்லாமல் கடவுள் ஒன்றே என்ற வேதாந்தப் பேருண்மையைப் போதித்து இந்திய ஞான மார்க்கத்தை மீட்டு நெறிப்படுத்தியவர் ஆதிசங்கரர்.

இனி அவர் உபதேசித்த அத்வைத சாராம்சத்தைப் பார்ப்போம்.

அத்வைதம் இந்த உலகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறல்ல என்று சொல்கிறது. உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது. அத்வைதத்தின் படி நான்,  நீ,  இன்னொருவன், ஜீவாத்மா  போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. உண்மையில் எல்லாமே பிரம்மம் தான். நாம் காண்கின்ற எல்லா  வேறுபாடுகளும் அறியாமை ஏற்படுத்தும் தோற்றப் பிழைகள் மட்டுமே.

இதை சில உதாரணங்கள் மூலம் சொன்னால் நன்றாக விளங்கும்.

திரைப்படம் பார்க்கையில் திரையில் பலவிதமான காட்சிகள் பார்க்கிறோம். வீடு, நகரம், மனிதர்கள், விலங்குகள் இயற்கைக் காட்சிகள் என வித விதமாய் காட்சிகள் தெளிவாக நம் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் உண்மையா? திரையில் தெரியும் நீரில் போய் நனைய முடியுமா? திரையில் தெரியும் வீட்டில் சென்று அமர முடியுமா? முடியாது அல்லவா?

எத்தனை தெளிவாகக் காட்சிகள் தெரிந்தாலும் அந்தக் காட்சிகளில் எத்தனை விதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உண்மையாக அங்கே இருப்பது ஒரு வெள்ளைத் திரை மட்டுமே அல்லவா? அந்த வெள்ளைத் திரை தான் பிரம்மம். பல விதமான காட்சிகள் தெரிவதும், செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவதும் வெறும் தோற்றமே அல்லவா? அப்படித் தோற்றத்தை ஏற்படுத்துவது மாயை. எப்போதும் நிலைத்து இருப்பது பிரம்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது. பயத்தினால் இதயம் படபடக்கிறது. வியர்க்கிறது. இன்னும் என்னென்னவோ உணர்வுகள் ஏற்படுகின்றன. பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது. உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது. பயத்தின் மூலமாய் ஏற்பட்ட உணர்வுகளும் மறைந்து விடுகின்றன.

அது போல நாமும் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு நம் ஆத்மாவின் நிலையான தன்மையை மறந்து விட்டு நிலையற்ற கதாபாத்திரமாக நம்மைக் கண்டு படாதபாடு படுகிறோம். அந்தப் பாத்திரத்திற்கு பாதிப்பு என்றால் ஆத்மாவுக்கே பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக நினைக்கிறோம். அந்த நினைவாலேயே கஷ்டப்படுகிறோம். ஞானம் என்கிற வெளிச்சம் வரும் வரை நம் கஷ்டங்கள் தொடர்கின்றன. ஞான ஒளி வந்து விட்டாலோ உண்மை தெளிவாகிறது. மாயையை உண்மை என்று நம்பி ஏற்படும் அறியாமையினால் விளையும் துன்பங்கள் தாமாக நீங்கி விடுகின்றன.

ஒரு காலிப்  பானையை குளத்தில் மூழ்க வைத்தால்  பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் பானைத் தண்ணீர், வெளியே இருக்கும் தண்ணீர் குளத்துத் தண்ணீர் என்று சொல்லலாம் என்றாலும் உண்மையில் இரண்டும் ஒன்றே அல்லவா? பானை உடைந்தால் முன்பு கண்ட வேறுபாடும் இல்லாமல் போகிறது அல்லவா? பானைத் தண்ணீர் ஜீவாத்மா. குளத்துத் தண்ணீர் பரமாத்மாவாகிய பிரம்மம். உடல் என்ற கதாபாத்திரம் உடையும் போது மிஞ்சுவது நிலைத்திருக்கும் ஒன்றேயான பிரம்மம் தான்.

அத்வைத சாரத்தை ஈஸ்வரனே ஆதிசங்கரருக்குப் போதித்ததாய் ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் ஒரு சமயம் கங்கையில் குளித்து விட்டு சீடர்களுடன் காசி விஸ்வநாதனைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார். அப்போது நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக் கொண்டு ஒரு புலையன் எதிரில் வழிமறித்தபடி வந்து கொண்டிருந்தான். சடைத்தலையுடனும், அழுக்கு உடைகளுடனும், துர்நாற்றத்துடனும், கோரத் தோற்றத்துடனும் இருந்த அந்தப் புலையன், நாய்களுடன் நெருங்கிய போது ஆதிசங்கரர் அருவருப்புடன் “விலகி நில். எங்களுக்குப் போக வழிவிடுஎன்று சொன்னார்.

புலையன் கேட்டான். “யார் விலக வேண்டும்? இந்த உடலைச் சொல்கிறீர்களா? உடலுக்குள் இருக்கும் என்னைச் சொல்கிறீர்களா? உள்ளே உள்ள உயிர்ப் பொருள் இல்லா விட்டால் இந்த உடல் ஜடத்தன்மை வாயந்ததே. அது தானாக நகர முடியாதது. உள்ளே உள்ள உயிர்ப்பொருளைச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலினுள் உள்ள உயிர்ப் பொருளும், என் உடலின் உள்ளே இருக்கும் உயிர்ப்பொருளும் ஒன்று தான். ஒன்றாக இருக்கும் உயிர்ப் பொருள் தன்னையே விட்டு எப்படி விலக முடியும்?

அந்த வாசகங்களில் இருந்த உண்மை ஆதிசங்கரரை உடனே இருகரம் கூப்பி மண்டியிட்டு அந்தப் புலையனை வணங்க வைத்தது. தாங்களே என் குரு. உங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

உடனே புலையனின் உருவம் சிவபெருமானாகவும், நாய்கள் நான்கும் அவர் கையில் வேதங்களாகவும் மாறிக் காட்சியளிக்க ஆதிசங்கரர் பரவசத்துடன் மணீஷ பஞ்சகம் என்ற அற்புதமான ஐந்து சுலோகங்களில் புலையனாக வந்து இறைவன் சொன்ன அத்வைத தத்துவத்தைப் பாடினார்.

இந்த அத்வைத சாரத்தை உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் காண முடிகிறது. விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார். சுஃபியிசம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகப் பிரிவிலும் நிறைய அத்வைத சிந்தனைகள் உண்டு. ரமண மகரிஷி மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோரும் அத்வைத மார்க்கத்தில் பயணித்தவர்களே. அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மம்), தத்வமஸி (நீயே அது) என்ற மகாவாக்கியங்கள் அத்வைத ஞானத்தைப் பிரதிபலிப்பவை!

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் -26-07-2013



Saturday, September 21, 2013

தினமலரில் “சங்கீத மும்மூர்த்திகள்” விமர்சனம்

சங்கீத மும்மூர்த்திகள்


சங்கீத மும்மூர்த்திகள் என போற்றப்படும் சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் இசைக்கே வாழ்க்கையை அர்ப்பணித்த மகான்கள். இவர்கள் அருளிய சில முக்கியப் பாடல்களின் பின்னணியை அறிமுகப்படுத்தும் இந்த நூல் எழுத்து வடிவக் கச்சேரியாக இருக்கிறது.

ரசனை நிறைந்த இந்த நூலில் இருந்து சில அரிய தகவல்கள்............->


நன்றி: தினமலர் (திருச்சி) 17-09-2013

நூலில் இருந்து சில சுவையான தகவல்கள்

ஒரு சமயம் தஞ்சை சமஸ்தானத்தில் பூலோக சாப கட்டி பொப்பிலி கேசவையாஎன்ற வித்வானுடன் சியாமா சாஸ்திரி ஒரு சங்கீதப் போட்டியில் ஈடுபட நேர்ந்தது. தாள சாஸ்திரத்தில் மிக வல்லவரான பொப்பிலி கேசவையா தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வத்துடன் அறிவிக்க தஞ்சையின் மானம் காக்கும் பொறுப்பு சியாமா சாஸ்திரிகள் மீது விழுந்தது. கோயிலிற்குச் சென்று பங்காரு காமாட்சி அம்மன் முன் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்த அவர் பின் மனமுருக சிந்தாமணி ராகத்தில் “தேவி ப்ரோவா சமயமிதே (தேவி என்னை நீ காக்க வேண்டிய நேரம் இது) என்று பாடினார். பின் தைரியம் வந்தவராகப் போட்டியில் கலந்து கொண்டார். பொப்பிலி கேசவையா கடினமான நீளமான  ஸிம்ஹநந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார். சாஸ்திரிகள் அதைக் கிரகித்து உடனே திரும்பப் பாடி, இன்னொரு கடினமான சரபநந்தன தாளத்தில் புதிதாக ஒரு பல்லவியை பாடி அந்தப் போட்டியில் வெற்றி கண்டார்.

அக்காலத்தில் புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பாடி மகிழ்விப்பது புதிதல்ல. எனவே தியாகராஜரைத் தமது சபைக்கு அழைத்து தம்மைப் பற்றியும் பாடச் செய்ய வேண்டுமென சரபோஜி விரும்பினார். பட்டு, பீதாம்பரம், பொற்காசுகள் எல்லாம் கொடுத்தனுப்பி அரசவைக்கு வந்து தன்னைப் பாட மன்னர் தியாகராஜருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து ‘நிதிசால சுகமாஎன்ற கிருதியைக் கல்யாண இராகத்தில் பாடினார்.
(நிதியும் செல்வமும் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா, அல்லது ஸ்ரீராமனின் சன்னிதியில் சேவை புரிவது அதிக சுகம் தருமா? மனமே, இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவை தருமா, அல்லது தசரத குமாரன் இராமனைத் தியானித்துப் பாடல் அதிக சுவை தருமா? அடக்கம், சாந்த குணங்கள் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா அல்லது நல்ல மனம் படைத்த தியாகராஜன் வணங்கு தெய்வத்தைத் துதித்தல் சுகமா?)
தியாகையர் மனதிற்கு புத்தி சொல்லியும், நியாயம் சொல்லியும் பாடி இருக்கும் பாடல்கள் பலவும் நமக்காகவும், நம் மனதிற்காகவும் பாடப்பட்டது போலத் தோன்றும் அளவு இயல்பானவை. சில பாடல்களை இங்கே உதாரணத்திற்குப் பார்ப்போம்.
ஓ மனசா! ஸ்ரீ ஸாகேத ராமுனி பக்தியனே
சக்கனி ராஜ மார்க்கமுலு உண்டக சந்துல தூரனேல?
ஏ மனமே! ஸ்ரீராமபக்தி என்னும் அகலமான ராஜபாட்டை ஒன்று கடைத்தேறுவதற்கு இருக்கும் போது தீயவழிகளான சந்து பொந்துகளில் ஏன் நுழைந்து கொள்கிறாய் என்கிறார். கரஹரப்ரியா ராகத்தில் அமைந்தது இந்த அற்புதமான கிருதி. 

*முத்துசாமி தீட்சிதர் சாதி மத இன வேறுபாடுகளைப் பார்க்காதவர் என்பதற்கு சான்றாக அவருடைய சீடர்களில் பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். கமலம் என்ற தேவதாசியும் அவருடைய சிஷ்யையாக இருந்தாள். முத்துசாமி தீட்சிதரிடம் இசை கற்றுக் கொண்டிருந்த ஒரு சமயம் ஏதோ வேலையாக வீட்டினுள் சென்ற கமலம் முத்துசாமி தீட்சிதரின் மனைவி வறுமையின் காரணமாக அன்று சமைக்க ஏதும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மிகுந்த மனவருத்தம் அடைந்தார். உடனே தன் கையில் இருந்த தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். 

விஷயம் அறிந்த முத்துசாமி தீட்சிதர் கமலத்தின் தங்க வளையல்களைத் திருப்பிக் கொடுத்து விட்டுச் சொன்னார். “கமலம். இன்று நீ எங்களுக்கு உதவலாம். ஆனால் எத்தனை நாட்களுக்கு நீ எங்களுக்கு உதவ முடியும்? எங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நான் வணங்கும் இறைவன் தியாகராஜனுக்கு மட்டுமே உரியது. அவன் மீது நான் வைத்திருக்கும் பக்தி உண்மையானால் அவன் கண்டிப்பாக உதவுவான்என்று கூறிவிட்டு திருவாரூர் கோயிலில் இறைவன் தியாகராஜனைப் பார்த்து யதுகுல காம்போதி ராகத்தில் “தியாகராஜம் பஜரேகிருதியை மனமுருகப் பாடினார்.

அவர் வீடு திரும்பிய போது ஒரு வண்டி நிறைய உணவு தானியங்களும், சமையலுக்குத் தேவையான மற்ற பொருள்களும் இருந்தனவாம். வியப்பு மேலிட விசாரித்த போது தஞ்சாவூர் மன்னரின் மந்திரியார் ஒருவர் திருவாரூர் வந்து தங்க இருந்ததால் அரண்மனையில் இருந்து அந்த தானியங்களும், மற்ற பொருள்களும் முன்பே அனுப்பப்பட்டதாகவும் திடீரென்று அவர் வருகை ரத்தானதால் அந்த வண்டிப் பொருள்களை நல்ல வழியில் செலவிட திருவாரூரில் இருந்த அரசு அதிகாரி முத்துசாமி தீட்சிதருக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிந்தது. முத்துசாமி தீட்சிதர் தன் நம்பிக்கைக்கு உடனடியாகப் பதில் சொன்ன இறைவனின் அருளில் மனம் நெகிழ்ந்து போனார். 

இது போல் சுவாரசியமான பல தகவல்கள் கொண்ட இந்த நூலைப் பெற விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க  9600123146

Thursday, September 19, 2013

பரம(ன்) ரகசியம் – 62



டனடியாக குருஜி  ரிஷிகேசத்திற்கு அழைத்துப் போயிருந்த இளைஞனுக்குப் போன் செய்தார். அவன் தற்போது டில்லியில் இருந்தான். அது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவன் சில மணி நேரங்களில் உதயனை சந்திக்க முடியும். அவனிடம் போன் செய்து உடனே உதயனிடம் போகச் சொன்னார். போய் அவனுடைய செல்போனை உதயனிடம் கொடுத்து அவரிடம் பேசச் சொல்லச் சொன்னார்.

அந்த இளைஞனுக்கு அந்த ஒற்றையடி மலைப்பாதையில் கால் வலிக்க நடந்தது நினைவுக்கு வர, சிறிது தயங்கினான். பின் ஒப்புக் கொண்டான். அதற்கு குருஜியிடம் யாரும் எதையும் முடியாது என்று சொல்ல முடியாது என்பது ஒரு காரணம். பின் கூலியை அவர் அளவுக்குத் தாராளமாகத் தருபவர் கிடையாது என்பது இன்னொரு காரணம்.

அவன் குருஜியுடன் போனதற்குப் பின் மீண்டும் ஒரு முறை உதயன் இருக்குமிடம் போய் இருக்கிறான். ஆராய்ச்சிக் கூடத்தைச் சுற்றி நாலா பக்கத்திலும் உள்ள மண்ணை எடுத்து அவன் மூலமாகத் தான் குருஜி உதயனுக்கு அனுப்பினார். அப்போது  குகை வரை போக வேண்டி இருக்கவில்லை. வழியில் ஒரு பாறை மீது உதயன் அமர்ந்து கொண்டிருந்தார். அவன் தந்ததை வாங்கிக் கொண்டு தலையை மட்டும் அசைத்தார். அப்போதும் தனியாக நடந்த தூரம் அவனுக்கு சலிப்பைத் தந்தது...

குருஜியுடன் போன போதும் பிறகு தனியாக மண்ணைக் கொண்டு போன போதும் போல் அவன் இப்போது ஹெலிகாப்டரில் போக முடியாது. அந்த வசதியை செய்து தருவதாய் இருந்தால் குருஜி சொல்லி இருப்பார். ரிஷிகேசத்தில் விமான நிலையம் இல்லை. மிக அருகில் உள்ள விமான நிலையம் டெஹ்ராடூன் விமான நிலையம் தான். விசாரித்ததில் ஒரு மணி நேரத்தில் டெஹ்ராடூனிற்கு விமானம் இருப்பதாகச் சொன்னார்கள். டிக்கெட்டை புக் செய்து விட்டு அவசரமாக அவன் கிளம்பினான்.

பார்த்தசாரதி நியமித்திருந்த ரகசிய போலீஸ்காரர்கள் அவருக்குப் போன் செய்து, வேவு பார்த்துக் கொண்டிருப்பது தாங்கள் மட்டுமல்ல வேறு சிலரும் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்தார்கள்.

அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி கேட்டார். “நம் மாநில போலீஸ்காரர்களா, வெளி மாநில போலீஸ்காரர்களா, சி.பி.ஐயா?

“சரியாய் தெரியல சார்

“உங்க யூகத்தைச் சொல்லுங்க

அவர் நியமித்திருந்த நபர்கள் மிக புத்திசாலிகள். அவர்கள் யூகமே கிட்டத்தட்ட சரியாக இருக்கும்.

“ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் போலத் தெரியுது

“நீங்க அவங்களைக் கண்டுபிடிச்ச மாதிரி அவங்களும் உங்களைக் கண்டுபிடிச்சிருப்பாங்களோ?

“கண்டு பிடிச்சிருப்பாங்க சார் தயக்கமில்லாமல் வந்தது பதில்.

பார்த்தசாரதி வேதபாடசாலையை வேவு பார்க்கும் இன்னொரு தரப்பு யாரால் நியமிக்கப்பட்டதாய் இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.


குருஜி அமைதியாக பாபுஜியிடம் சொன்னார். “கவலைப்படாதே. எதுவும் நம் கையை மீறிப் போயிடலை

குருஜியின் இத்தனை நம்பிக்கைக்குக் காரணம் அவர் நண்பன் உதயன் தான் என்பது அவர் போனில் பேசியதில் இருந்து பாபுஜி புரிந்து கொண்டார். குருஜி முன்பு உதயனைப் பார்க்க ஹெலிகாப்டரில் போக ஏற்பாடு செய்தவர் பாபுஜி தான். அதனால் அவர் உடனடியாகச் சொன்னார். “அவரை இங்கே கூட்டிகிட்டு வர ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்துடட்டுமா குருஜி?

குருஜி சொன்னார். “அவன் இங்கே வரப் போகிறான்னு யார் சொன்னது?

“அவர் இங்கே வராமல் எப்படி இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகிறார்?

“அதை அவன் அங்கே இருந்தே சரி செய்வான்குருஜி சொல்ல பாபுஜி சந்தேகத்தோடும் குழப்பத்தோடும் ஜான்சனைப் பார்த்தார். ஜான்சன், குருஜி கவலைப்படா விட்டால் நாமும் கவலைப்பட எதுவுமில்லை என்பது போல இருந்தார்.

பாபுஜி இனி இது சம்பந்தமாக மறுபடியும் கேட்டு விடப் போகிறார் என்று பயந்தது போல குருஜி பேச்சை மாற்றினார். ‘நம்ம ஆராய்ச்சி ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு பாபுஜி?

எல்லாம் பிரமாதமாய் இருக்கு. ஆனால் ஆழமனசக்திகளை அளக்கற மாதிரி எத்தனையோ மெஷின்கள் இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். உதாரணத்துக்கு ஒவ்வொரு சக்ராவில் இருந்தும் எத்தனை சக்தி வெளிப்படுதுன்னு அளக்கக் கூட மெஷின்கள் இருக்கறதா  சொன்னாங்க. அதெல்லாம் இங்கே இல்லையே. ஏன்?

குருஜி இதற்கு என்ன பதில் என்பது போல ஜான்சனைப் பார்த்தார். சக்திகளைப் பற்றித் தெரிந்த அளவு அவருக்கு எந்திரங்களைப் பற்றித் தெரியாது.

ஜான்சன் சொன்னார். “மார்க்கெட்டில் எத்தனையோ மெஷின்கள் என்னென்னவோ அளந்து காண்பிக்கறதா சொல்லி விளம்பரம் செய்யறாங்க. அந்த மெஷின்கள் எல்லாம் சரியாத் தான் அளக்குதா, காண்பிக்கற ரிசல்டுகள் எல்லாம் சரிதானான்னு உறுதியா நம்பக்கூடிய அளவுக்கு தரமான ஆராய்ச்சி மையங்களால ஆராயப்படலை... உறுதியாய் தெரியாத எந்த மெஷினையும் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்த வேண்டாம்னு குருஜி சொன்னதால நான் நிரூபிக்கப்படாத எந்த மெஷினையும் தருவிக்கலை

எதையும் தவறில்லாமல் கச்சிதமாய் செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்படுகிற குருஜியின் சிந்தனை பாபுஜிக்குப் பிடித்திருந்தது. ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக இருக்கக் கூடிய அந்த மனிதர் இத்தனை ஞானத்தைப் பெற்றிருக்கிறார் என்றால் எதையும் சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்து வைத்திருப்பதால் தான் என்று தோன்றியது. விசேஷ மானஸ லிங்கத்தையும் அப்படியே அல்லவா தெரிந்து வைத்திருக்கிறார்....

விசேஷ மானஸ லிங்கம் பற்றி நினைவுக்கு வந்தவுடன் பாபுஜி குருஜியிடம் கேட்டார். “குருஜி எப்ப எனக்கு அந்த சிவலிங்கத்தைக் காட்டப் போறீங்க?

குருஜி புன்னகையுடன் சொன்னார். “இன்னமும் ஜான்சன் கூட அந்த சிவலிங்கத்தைப் பார்க்கலை.... சரி வாங்க ரெண்டு பேரும் போய் பார்க்கலாம்.. ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க. நான் எந்த இடம் வரைக்கும் போகிறேனோ அது தான் எல்லைன்னு தெரிஞ்சுக்கோங்க. அதைத் தாண்டி ஒரு அடி கூட முன்னால் நகர வேண்டாம்...

சரிஎன்று பாபுஜியும் ஜான்சனும் தலையாட்டினார்கள் என்றாலும் பாபுஜிக்கு ஒரு சந்தேகத்தை குருஜியிடம் கேட்க வேண்டி இருந்தது. “ஒன்னு ரெண்டு அடி அதிகமாய் நெருங்கினால் என்ன ஆகும்? அந்தக் கொலைகாரனுக்கு ஆன மாதிரி ஏதாவது ஆயிடுமா?

குருஜி புன்னகைத்தார். “அப்படி எல்லாம் ஆயிடாது. அவன் முட்டாள். அதற்குப் பக்கத்திலே போறதே அபாயம். அப்படி இருக்கையில் அவன் அதைத் தொட்டே விட்டான் போல இருக்கு. அதனால் தான் அப்படி ஆச்சு. நாம் பாதுகாப்பான ஒரு எல்லையைத் தாண்டி நெருங்கினால் அது ஏதாவது ஒரு விதத்தில் நம் கிட்டே பாதிப்பை ஏற்படுத்திட வாய்ப்பு இருக்கு. அந்தப் பாதிப்போட விளைவுகள் உடனடியாய் தெரியா விட்டாலும் பிற்பாடு புரியும்...

பாபுஜி தலையாட்டினார். குருஜி அவர்கள் இருவரையும் விசேஷ மானஸ லிங்கத்தைக் காட்ட அழைத்துச் சென்றார். அவர்கள் போன போது கணபதி சிவலிங்கத்திற்குப் பூக்கள் வைத்த விதம் திருப்தி இல்லாததால் அதை வேறு விதமாக வைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தான்.

குருஜியைப் பார்த்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனுக்கு அவர் இது வரை இந்த சிவனைத் தரிசிக்க வராததில் மனத்தாங்கல் இருந்தது. அவனை ஆஞ்சனேயர் கோயிலிற்கு அனுப்பி விட்டு அவர் வந்து சிவலிங்கத்தைப் பார்த்து பேசி விட்டுப் போனது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால் மெல்ல சிவலிங்கத்திடம் “குருஜி வந்திருக்கார்என்று தெரிவித்து விட்டு ஓடி வந்து வரவேற்றான்.    

வாங்க குருஜி

“எப்படி இருக்கே கணபதி?

“உங்க தயவுல நல்லா இருக்கேன் குருஜி

“கணபதி டாக்டர் ஜான்சனை உனக்கு முதல்லயே தெரியும் இல்லையா. இவர் பாபுஜி. பெரிய தொழிலதிபர். பத்திரிக்கைல எல்லாம் இவர் பத்தி படிச்சிருப்பே

அவரைப் பார்த்ததும் கணபதி குட்மார்னிங் என்று கைகூப்பி வணக்கம் சொன்னான். மாலை நேரத்தில் குட்மார்னிங் சொன்ன கணபதியை பாபுஜி சுவாரசியமாகப் பார்த்தார். ஆனாலும் தானும் கைகூப்பி குட்மார்னிங் என்று சொன்னார்.

குருஜி மேலும் சொன்னார். “...இந்த ஆராய்ச்சிகளை ஜான்சன் செய்யறார்னு சொன்னேனில்லையா. அதற்கான செலவு எல்லாத்தையும் பாபுஜி தான் பார்த்துக்கறார்

எத்தனை பெரிய மனது இவருக்குஎன்று நினைத்த கணபதி அதற்காக அவரைப் பார்த்து இன்னொரு தடவை கைகூப்பினான்.

பாபுஜி தலையசைத்தார். இவனுக்கு என்ன கைகூப்புவதே வேலையோ? என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டார்.

அவர் பார்வை விசேஷ மானஸ லிங்கத்தின் மீது நிலைத்தது. தோற்றத்தில் பெயருக்கேற்ற விசேஷம் இல்லை என்றே பாபுஜிக்குத் தோன்றியது. சாதாரணமாய் கோயில்களில் பார்க்க முடிந்த சிவலிங்கம் போல் இருந்தது. பாபுஜி கூர்ந்து பார்த்தார். ஏதாவது ஒளி தெரிகிறதா என்று பார்த்தார். கணபதி ஏற்றி வைத்திருந்த தீபங்களின் ஒளி சிவலிங்கத்தின் மீது படர்ந்திருந்ததே தவிர அவர் கேள்விப்பட்ட ஒளி சிவலிங்கத்தில் இல்லை.

ஜான்சனும் கூர்ந்து சிவலிங்கத்தைப் பார்த்தார். ஆயிரக்கணக்கான வருடங்கள் சித்தர்களால் ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த அந்த சிவலிங்கத்தில் இருந்து ஏதாவது சக்தி அலைகள் வருகின்றனவா, உணர முடிகின்றனவா என்று கண்களை மூடி உணர்வுகளைக் கூர்மையாக்கியும் பார்த்தார். ஆனால் எதையும் உணர முடியவில்லை.

கணபதி அவர்கள் மூவரும் எட்டவே நிற்பதைப் பார்த்தான். அதிலும் குருஜிக்கு ஒரு அடி பின்னாலேயே மற்ற இருவரும் நின்றிருந்தனர்.

“பக்கத்துல வாங்க. நான் சாமிக்கு ஆரத்தி எடுக்கிறேன்என்ற கணபதி அவசர அவசரமாகச் சென்று சிவலிங்கத்திற்கு தீப ஆரத்தி எடுத்தான். அவன் சொன்னதைக் கேட்டு அவர்கள் முன்னுக்கு வந்து விடவில்லை. கணபதி ஆரத்தித் தட்டை அவர்கள் அருகே கொண்டு வந்த போது மற்ற இருவரும் குருஜி என்ன செய்கிறார் என்பதை முதலில் கவனித்தார்கள். குருஜி ஆரத்தியை கண்களில் ஒற்றிக் கொண்டதும் அப்படியே செய்தார்கள். கணபதி நீட்டிய திருநீறை குருஜி எடுத்துக் கொண்ட பின் எடுத்துக் கொண்டார்கள்.

‘இதென்ன இவர்கள் ரெண்டு பேரும் குருஜியைப் பார்த்தே ஒவ்வொன்னும் செய்யறாங்க. இந்த வெளிநாட்டு விஞ்ஞானிக்கு இதெல்லாம் புதுசா இருக்கலாம். இந்த உள்நாட்டு முதலாளியும் இது வரைக்கும் கோயிலுக்குப் போனதே இல்லையோஎன்று கணபதி நினைத்துக் கொண்டான்.

சரி கணபதி கிளம்பறோம்என்று சொன்ன குருஜி கிளம்பினார். மற்ற இருவரும் பின் தொடர்ந்தார்கள். வாசல் வரைக்கும் போன குருஜி திரும்பி கணபதிக்கு நினைவுபடுத்தினார். “என்ன கணபதி நினைவு இருக்கில்ல. நாளைக்கு காலையில் சீக்கிரமே பூஜையை முடிச்சுடு. ஆறு மணிக்கு இங்கிருந்து கிளம்பலாம். நீ தயார் தானே?

பாபுஜியும், ஜான்சனும் திரும்பி கணபதி என்ன சொல்கிறான் என்று பார்த்தார்கள்.  கணபதி தலையசைத்தான். அந்த நேரமாகப் பார்த்து ஒரு வினாடி நேரம் சிவலிங்கம் ஒளிர்ந்தது. நானும் தயார் என்று சொல்வதைப் போல.....!

மூவரும் சிலையாக நிற்க கணபதி மட்டும் பேசினான். “யாரோ பசங்க சும்மா டார்ச் அடிச்சு அடிக்கடி விளையாடறாங்க....

டெஹ்ராடூன் விமானநிலையத்தில் இருந்தே அந்த இளைஞன் ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ரிஷிகேசத்திற்கு வந்தான். பின் மலைப்பாதையில் பயணித்து ஜீப்பை நிறுத்தி பின் ஒற்றையடிப் பாதையில் நடந்து நடந்து அவனுக்குக் களைத்து விட்டது. அந்த இடத்தில் மனித சத்தங்களே இல்லை.  காற்றின் இரைச்சல் தான் பலமாக இருந்து ஒரு அமானுஷ்ய பீதியைக் கிளப்பியது.   இந்தக் காலத்திலும் குகையில் வாழும் குருஜியின் நண்பர் மேல் அவனுக்கு எரிச்சல் வந்தது.
அவன் இதற்கு முன் இங்கு வந்த போது உதயன் உட்கார்ந்திருந்த பாறையில் இப்போது ஒரு கழுகு உட்கார்ந்திருந்தது. ஏமாற்றத்துடன் முன்னேறினான். சிறிது தூரம் போன பிறகு முதலில் அவன் உட்கார்ந்து களைப்பாறிய பாறையும் வந்தது. இன்று அந்த ஆளை குகையில் தான் சந்திக்க வேண்டும் போல இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டான். குகையில் அந்த ஆள் தனியாக இருப்பாரா இல்லை வேறெதாவது மிருகமும் இருக்குமா?...

திடீரென்று அவன் முன்னால் உதயன் வந்து நின்றார். அவனுக்கு இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. எங்கிருந்து வந்தார். வந்ததையே பார்க்கவில்லையே!

“என்ன?என்று கேட்டார்.

“குருஜி உங்க கிட்ட பேசணும்னு சொன்னார்...”  என்ற அந்த இளைஞன் செல் போனை எடுத்தான். டவர் இருக்கவில்லை. இந்த மலைக்காட்டுப் பகுதியில் டவர் கிடைக்காதது அவனுக்கு ஆச்சர்யமாக இல்லை. என்ன செய்வது என்று யோசித்தான்.

“என்ன ஆச்சு?உதயன் கேட்டார்.

“டவர் இல்லை

பரவாயில்லை. நம்பர் போட்டுக் கொடு. பேசறேன்

இந்தக் குகை வாழ் மனிதனுக்கு டவர் விஷயம் எல்லாம் புரியாது என்று பொறுமையாக அந்த இளைஞன் “டவர்... டவர் இல்லை... டவர் இல்லைன்னா பேச முடியாது

“பரவாயில்லை. சொன்ன மாதிரி செய்

பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு ‘சொன்னால் புரியாது. அனுபவத்துல தான் புரியும்என்று நினைத்தவனாக டவர் கிடைக்காத செல்லில் குருஜியின் நம்பரை அழுத்தி விட்டு உதயனிடம் தந்தான்.

குருஜியின் ரகசிய செல்போன் மந்திரம் சொன்னது. குருஜி உடனே எடுத்துப் பேசினார். ஹலோ

“ராமா உதயன் பேசறேன்  

“உதயா எனக்கு உன்னால் இன்னொரு உதவி ஆகணும்

“என்ன சொல்லு

குருஜி தற்போதைய நிலவரத்தைச் சொன்னார். “.... இந்த ஆராய்ச்சி நடக்கிற இடம் ரகசியமாய் இருக்கிறது முக்கியம் உதயா. இப்ப கண்காணிக்கிற ஆள்கள் எங்கள் பின்னால் வந்து அந்த இடத்தைக் கண்டு பிடிச்சுட்டா பிரச்சினை ஆயிடும். அதிகாரத்துல இருக்கிற ஆள்களைப் பிடிச்சு இதை வாபஸ் வாங்க வைக்கிறது பெரிய விஷயமில்லை.. ஆனால் இதுல ஏதோ ஒன்னு இருக்குன்னு நானே சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தற மாதிரி ஆயிடும். அதான் உன் கிட்ட உதவி கேட்கறேன்

உதயன் உடனடியாக ஒன்றும் சொல்லவில்லை.

குருஜி சொன்னார். “... இனி கண்டிப்பா உன் கிட்ட உதவி எதுவும் கேட்டு தர்மசங்கடப்படுத்த மாட்டேன் உதயா. இதுவே கடைசி

உதயன் அன்புடன் சொன்னார். “என்ன ராமா நண்பன் கிட்ட போய் பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு... நாளைக்கு காலைல எத்தனை மணிக்கு கிளம்பறீங்க?

“காலைல ஆறு மணிக்கு

“நீங்க பாட்டுக்குப் போங்க. யாரும் உங்களைப் பின் தொடர முடியாமல் நான் பார்த்துக்கறேன்

குருஜி நண்பனுக்கு மனதார நன்றி சொன்னார். உதயன் சொல்லி விட்ட பின் கவலைப்பட  எதுவுமில்லை. குருஜி பின்பு கேட்டார். “உதயா, என் வாழ்க்கைல மிகப் பெரிய விஷயமா இந்த ஆராய்ச்சியைத் தான் நினைச்சுகிட்டு இருக்கேன். எல்லாம் எப்படிப் போகும்னு அன்னைக்கு கேட்டப்ப சுவாரசியமாய் இருக்கும்னு சொல்லி முடிச்சுட்டே. நான் எல்லார் அபிப்பிராயத்தையும் விட அதிகமா உன் அபிப்பிராயத்தை மதிக்கிறேன். வெளிப்படையா தயக்கமில்லாமல் சொல்லு. நான் இப்ப இருக்கற நிலை என்னன்னு நீ நினைக்கிறே?...

உதயன் யோசித்து விட்டுச் சொன்னார். “ராமா. இப்போதைக்கு நீ அனுகூலமான நிலையில் தான் இருக்கிறாய்னு நினைக்கிறேன். நம் குரு உன் ஆராய்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்காதபடி நான் ஏற்பாடு செய்துட்டேன். அந்தப் பையன் கணபதி உன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான். சிவலிங்கமும் உன் கிட்ட தான் இருக்கு. நாம நினைச்சுகிட்டிருக்கிற மூவர் குழுவில் மீதி இருக்கிறது ஈஸ்வர் தான். அவன் தனி ஆள்...

குருஜிக்கு நிம்மதியாய் இருந்தது.

உதயன் தொடர்ந்து சொன்னார். “ஆனால் அவனைக் குறைச்சு நினைச்சுட வேண்டாம் ராமா. பசுபதி அவன் பேரைச் சொல்லிட்டு போயிருக்கார்னா அது பிரத்தியேக காரணம் இல்லாமல் இருக்காது. அதனால அவன் கிட்ட ஜாக்கிரதையாய் இரு

“எதிரியைக் குறைச்சு மதிப்பிடறது தோற்கறதுக்கான அஸ்திவாரம்னு எனக்குத் தெரியும் உதயா. கண்டிப்பா ஜாக்கிரதையாய் இருப்பேன்.... நன்றி நண்பா

தயன் பேசிக் கொண்டிருந்த போதே அந்த இளைஞன் மலைப்புடன் பார்த்தான். அவர் பேசி முடித்து அவனிடம் செல் போனைத் திருப்பித் தந்த போது அதே மலைப்புடன் செல் போனை வாங்கிப் பார்த்தான். இப்போதும் டவர் இல்லை. அவரைப் பார்த்தான். அவர் போயிருந்தார்.

அந்த இளைஞனுக்கு அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்றாகி விட்டது. ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்