சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 10, 2019

இல்லுமினாட்டி 17


னோகர் மீண்டும் தன் தனிச்சிறைக்குத் திரும்பிய போது அவன் மனம் பல கவலைகளில் மூழ்க ஆரம்பித்தது. செந்தில்நாதன்  “எங்களுக்கு க்ளோஸ் பண்ண முடியாத நிறைய மத்த கேஸ்கள் இருக்கு. உன்னை வெச்சு அத க்ளோஸ் பண்ணிப்போம்.” என்று சொன்னது அவனுடைய கவலைகளுக்குக் காரணமாக இருந்தது. என்னென்ன கேஸ்களோ, எதையெல்லாம் அவன் தலையில் திணிப்பார்களோ, அதற்கு என்னவெல்லாம் தண்டனைகளோ என்ற பயங்கள் அவன் மனதை அரிக்க ஆரம்பித்து விட்டன. ஆனாலும் விஸ்வத்தைப் பற்றித் தெரிந்ததை எல்லாம் செந்தில்நாதனிடம் சொல்லித் தப்பிக்கலாம் என்ற முடிவை எடுக்க அவன் மனம் தயங்கியது. எப்போதுமே விஸ்வத்தின் எதிரியாவதை விட மற்றதெல்லாம் தேவலை என்று அவனுக்கு இப்போதும் தோன்றியது.

யோசிக்க யோசிக்க செந்தில்நாதன் சொன்னது போல விஸ்வம் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று அவனுடைய உள்மனம் உறுதியாகச் சொன்னது. தான் நினைத்ததைச் சாதிக்காமல் விஸ்வம் இறந்து போக மாட்டான் என்று மனோகர் தீவிரமாக நம்பினான். விஸ்வம் ஒதுங்கி இருக்கலாம் அல்லது பதுங்கி இருக்கலாம். ஆனால் அவனை யாராலும் கொல்ல முடியாது. இயற்கையாக மரணம் வருவதற்கு விஸ்வம் உடல்நிலை ஒன்றும் மோசமில்லை. சொல்லப் போனால் விஸ்வத்தைப் போல் உடம்பைக் கச்சிதமாக வைத்துக் கொள்ளும் ஒரு மனிதனை மனோகர் பார்த்ததில்லை. பின் ஏன் அவன் தொடர்பு கொள்ளவில்லை என்று ஆழமாக யோசித்த போது விஸ்வம் எதாவது புதிய சக்தியைப் பெறுவதில் மும்முரமாக இருக்கலாம் என்று மனோகருக்குத் தோன்றியது. அப்படி எதையாவது பெறுவதில் விஸ்வம் ஈடுபட்டு விட்டால் பின் அதில் சிகரத்தை அடையும் வரை விஸ்வம் வேறெதிலும் கவனம் செலுத்த மாட்டான். அப்படித்தான் ஏதாவது ஆகியிருக்க வேண்டும். அவன் கண்டிப்பாக வருவான், அவன் வரும் வரை தாக்குப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனோகர் மனதில் வலுப்பெற ஆரம்பித்தது. செந்தில்நாதன் அவன் மீது திணிக்கப் போகிற கேஸ்கள் பற்றிய பயம் மெல்லக் குறைந்தது. என்ன தான் ஆகிறது என்று பார்ப்போம் என்று மனோகர் நினைக்க ஆரம்பித்தான்.

இப்படி ஓரளவு அவன் தன் தைரியத்தை மீட்டு எடுத்த போது அவன் அறைக்குப் புதியதொரு கைதி வந்து சேர்ந்தான்…

ம்யூனிக் நகர மருத்துவமனையில் நடந்த வினோத நிகழ்வு இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டது. டேனியல் என்ற போதை மனிதன் செத்துப் பிழைத்த நேரம், ஸ்கேன் ரிப்போர்ட்கள், வூடூ சடங்கில் ஆவிகளை வரவழைக்கும் இசை கிதாரில் கேட்டது, டேனியல் உயிர்பிழைத்த பின் ரகசியமாய் வெளியேறியது எல்லாம் சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் விஸ்வத்தின் பெயர் உபயோகப்படுத்தப்படவில்லை. ஆனால் டேனியலின் மூளையில் அமானுஷ்ய சக்திகள் சம்பந்தப்பட்ட பகுதியில் தெரிந்த தீவிரச் செயல்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. ஜான் ஸ்மித் திபெத் போய் அறிந்து வந்த விஷயங்கள் தெரியப்படுத்தப்படவில்லை. அந்த விவரங்கள் இல்லுமினாட்டியின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஐவருக்கு மட்டுமே அனுப்பப்பட்டது. தலைமைக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பியதில் கூட விஸ்வத்தின் பெயர் பயன்படுத்தப்படவில்லை. இல்லுமினாட்டியின் உறுப்பினர்கள் அறிவாளிகள் என்பதால் பெயர் பயன்படுத்தப்படா விட்டாலும் கூட அவர்கள் விஸ்வத்தின் திருவிளையாடல் தான் அது என்பதை உணர்ந்தார்கள்.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த உலகப் பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஜப்பானிய பொருளாதார நிபுணர் அகிடோ அரிமா மாநாட்டில் தன்னுடைய பேச்சை முடித்து விட்டுத் தன் இருக்கையில் அமர்ந்த போது தான் ரகசிய அலைபேசியில் வந்திருந்த அந்தச் செய்தியைப் படித்தார். இல்லுமினாட்டியின் தலைமையிலிருந்து வந்த செய்தியாக அது இருக்கா விட்டால் அவர் அந்தச் செய்தியை மாயா ஜாலக் கதைகளில் வரும் அதீதக் கற்பனையாக நினைத்துச் சிரித்திருப்பார். ஆனால் எர்னெஸ்டோவின் ஒப்புதலுக்குப் பிறகு வரும் செய்தி என்பதால் அதில் சந்தேகிக்க ஏதுமில்லை…

அவர் அலைபேசி அடித்தது. பார்த்தார். அவருடைய நெருங்கிய நண்பரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி வாய்ந்த ஒரு தலைவருமான  வாங் வேயின் பெயரைப் பார்த்ததும் அவர் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. அலை பேசியில் பேசினார். “ஹலோ”

“உன் பேச்சு முடிந்ததா?”

“முடிந்தது”

“செய்தியைப் படித்தாயா?”

“படித்தேன். பிரமிப்பாக இருக்கிறது….” என்று சொன்ன அகிடோ அரிமா தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஐவரில் ஒருவரான வாங் வேக்கு கூடுதல் தகவல்கள் வந்திருக்கலாம் என்பதை யூகித்தார். அதை அலைபேசியில் அவர் கேட்க விரும்பவில்லை. சில விஷயங்களை அலைபேசியில் பேசுவது ஆபத்து.

”மாநாடு முடிந்தவுடன் வீட்டுக்கு வருகிறாயா?” வாங் வே கேட்டார். அவருக்கு ஒரு பெரிய வீடு ஷாங்காய் நகரத்தில் இருந்தது.

அகிடோ அரிமா சரியென்றார். நன்றியுரை என்ற பெயரில் விழா அமைப்பாளர் ஒருவர் வளவளவென்று எதோ சொல்லிக் கொண்டிருந்தது அவர் மனதில் பதியவில்லை. ம்யூனிக் நகர நிகழ்வும், விஸ்வத்தின் நினைவுகளுமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தன…

முக்கால் மணி நேரம் கழித்து வாங் வேயை அவர் சந்தித்த போது வாங் வே கேட்ட முதல் கேள்வி ”நீ என்ன நினைக்கிறாய்?”

“உங்களுக்கு வந்திருக்கும் கூடுதல் தகவல்களும் தெரிந்தால் தான் சரியாகச் சொல்ல முடியும்” என்று அகிடோ அரிமா சொன்ன போது வாங் வேயின் முகத்தில் அரிதான புன்னகை ஒன்று வந்து போனது. அவர் ஜான் ஸ்மித்தின் திபெத்தியப் பயணம் பற்றியும் அவரின் அனுமானங்கள் பற்றியும் தன் நண்பரிடம் தெரிவித்தார். எல்லாம் கேட்டு விட்டு அகிடோ அரிமா சொன்னார். “விஸ்வத்தைச் சந்தித்த பிறகு இல்லுமினாட்டியின் அனு[பவங்கள் எதுவும் இயல்பாக இல்லை. அதனால் இனி நடக்க இருப்பதும் சாதாரணமாக இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது

தான் நினைத்ததையே தன் நெருங்கிய நண்பனும் சொன்னது வாங் வேக்கு ஆச்சரியமாக இல்லை. அவர்கள் இருவர் சிந்தனையும் எப்போதும் ஒன்று போலவே இருக்கும். இந்த சமயத்திலும் அது மாறிவிடவில்லை. அவரும் அதையே தான் நினைத்திருந்தார். ஆனாலும் கேட்டார். “எப்படிச் சொல்கிறாய்?” நண்பனின் சிந்தனைகளில் சில கூடுதலாகவும் இருப்பதுண்டு. அதனால் கூடுதல் தெளிவும் கிடைப்பதுண்டு…

அகிடோ அரிமா சொன்னார். “அவனைப் போல ஒருவன் இல்லுமினாட்டியில் இதுவரை சேர்ந்ததில்லை. நம் கவனத்திற்கு வந்த பின் இவ்வளவு விரைவாகவும் நாம் யாரையும் சேர்த்துக் கொண்டதுமில்லை. குறுகிய காலத்தில் அவன் அளவுக்குப் பிரபலமானவர்களும் யாரும் இல்லை. அவன் நம்மிடம் சேர்ந்திருக்கா விட்டால் எர்னெஸ்டோ கண்டிப்பாக க்ரிஷை நம் கூட்டத்தில் பேச அழைத்திருக்கப்போவதில்லை. அதுவும் நடந்தது. எனக்குத் தெரிந்து கிழவர் இது வரை தானாக எந்த ஆளையும் இல்லுமினாட்டியில் சேர்த்ததில்லை. தகுதி இருந்து சேர விரும்பின ஆளை அலசி ஆராய்ந்து உங்கள் குழு சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தாலும் நிதானமாக யோசித்துத் தான் அவர் முடிவு செய்வார். அப்படிப்பட்டவர் க்ரிஷைத் தானாகவே இல்லுமினாட்டியில் சேர அழைத்தார். க்ரிஷ் இந்தியாவில் ஒரு மாநில முதலமைச்சர் மகனாக இருந்தாலும் அங்கே அரசியலில் கூடச் சேராதவன். அப்படிப்பட்டவன் அதிசயமாய் எர்னெஸ்டோ அழைத்த உடனே சேர்ந்து விட்டான். நம் இல்லுமினாட்டி கூட்டத்தில் இதுவரை மர்மமாய் யாரும் இறந்ததும் இல்லை. விஸ்வம் தான் அப்படி இறந்த முதல் ஆள். எல்லாவற்றுக்கும் உச்சமாய், இறந்தவர் ஆவி இன்னொரு உடலில் புகுந்திருக்கிறது. இது நாம் இதுநாள் வரை கேள்விப்பட்டிருக்காத நம்பக் கஷ்டமான விஷயம் என்றாலும் நடந்திருப்பதை மறுக்கவும் முடியாது. இனி என்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை. ஆனால் இல்லுமினாட்டி ஆரகிள் சொன்ன மாதிரி ஒரு விபரீத காலகட்டத்தில் நுழைந்து விட்டது மட்டும் உறுதி.”   

வாங் வே யோசனையுடன் தலையசைத்தார். நண்பன் சொன்னதைப் போல நடந்ததெல்லாம் ஆச்சரியமே. நண்பன் சொல்லாமல் விட்டதை அவரே சொன்னார். “விஸ்வம் தனி ஆள் என்று நினைத்திருந்தோம். இப்போது அவனுக்கு ஒரு கூட்டாளியோ, பல கூட்டாளிகளோ இருக்கிறார்கள் என்பது உறுதியாகி விட்டது. அவர்களையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது விஸ்வம் எங்கிருக்கிறான் என்றும் நமக்குத் தெரியவில்லை….”

அவர் நிறுத்திய போது அகிடோ அரிமா சொன்னார். “முக்கியமாய் அவன் இனி என்ன செய்வான் என்றும் தெரியவில்லை… அவன் கண்டிப்பாக ஒதுங்கி இருப்பான் என்று தோன்றவில்லை. எர்னெஸ்டோவும் அப்படி நினைப்பதால் தான் எச்சரிக்கை செய்வது போல் நம் எல்லோருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். விஸ்வம் இனி என்ன செய்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?...”

வாங் வே யோசனையுடன் சொன்னார். “தெரியவில்லை. சாதாரணமாகவே அவன் சுலபமாக அனுமானிக்க முடிந்த ஆள் அல்ல… இப்போது அவனுக்கு கூட்டாளிகளும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் உத்தேசம் என்ன என்பதும் தெரியாததால் எல்லாம் குழப்பமாகத்தான் இருக்கிறது…”


சொல்லி விட்டு வாங் வே எதையோ தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்ததை அகிடோ அரிமா கவனித்தார். அவர் சிந்தனையின் தீவிரத்தைப் பார்க்கும் போது ஏதோ விதத்தில் மறைமுகமாக இயங்க நண்பர் தயாராகி விட்டதாகவே அகிடோ அரிமாவுக்குத் தோன்றியது. மறைவான இடத்தில் விஸ்வம், மறைமுகமாக வாங் வே என இல்லுமினாட்டியில் ஆட்டம் களைகட்டப் போகிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்


(தொடரும்)
என்.கணேசன்

10 comments:

  1. sir super putham saranam kachami mix panna poringala wowww waiting januvary

    ReplyDelete
  2. மனோகர் சிறைக்குள் வந்த ஆள் விஸ்வம் அனுப்பிய ஆளாய் இருப்பானோ? வாங் வே ஆள் எப்படி? என்ன செய்ய போகிறார்? இப்படி வாரா வாரம் முடிச்சு போட்டுகிட்டே போனால் எப்படி கணேசன் சார்?

    ReplyDelete
    Replies
    1. அது செந்தில்நாதன் அனுப்பிய ஆள் ஆக இருக்க வேண்டும்.

      Delete
    2. புதுசா வந்த ஆளே நம்ம விஸ்வம்தன தான். சுஜாதா அவர்களே,17 episodes தானே வந்திருக்கு. கொஞ்சம் பொறுங்க ஜி. முடுச்சு நல்லா பலமா போட்டாதான், அது நல்லா பதியும்.

      Delete
  3. விஸ்வம் பத்தி மனோகர் நல்லாவே புரிஞ்சு வச்சு இருக்கான்.
    புதுசா வந்த ஆள் மனோகரை போட்டு தள்ளுவதற்கு விஸ்வம் ஆள் அனுப்பி இருப்பானோ?
    வாங் வே இதுக்கு முன்னாடி வந்த கதைகளில் வந்துள்ள கதாபாத்திரமா?

    ReplyDelete
  4. Eppo amanushiyan vara porar anna

    ReplyDelete
  5. பல விதங்களில் பலர் நினைக்கிறார்கள்....
    அவர்கள் நினைப்பது இருக்கட்டும்... விஸ்வம் எப்போது களமிறங்கி கலக்குவான்...? என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு மிக அதிமாக உள்ளது....

    ReplyDelete