சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, September 25, 2019

உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள எளிய வழி!


ல்லோருக்குமே அவர்கள் விதியையும், எதிர்காலத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு. சிலர் அதே யோசனையில் தீவிரமாக இருப்பதும் உண்டு. யாராவது நல்ல ஜோதிடர் இருக்கிறார் என்றால், அவர் சொன்னது நூறு சதம் யாருக்காவது பலித்திருக்கிறது என்றால் நம் ஜாதகத்தையும் அந்த ஜோதிடரிடம் எடுத்துச் சென்று காட்டலாமே என்று தோன்றாதவர்கள் மிகவும் குறைவு. எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் போது, குழப்பங்கள் நம்மை ஆட்கொள்ளும் போது விதியில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆர்வம் மேலிடுவது இயற்கை.

உண்மையில் விதியை அறிய ஜோதிடத்தை ஒருவர் நாடிப் போக வேண்டியதில்லை. நம் எண்ணப் போக்கிலேயே நாம் என்னவாகப் போகிறோம், எப்படி இருக்கப் போகிறோம் என்பது தெரிந்து விடும். சொல்லப் போனால் எந்த ஜோதிட சாஸ்திரத்தையும் மிஞ்சி மிகத் துல்லியமாக அது சொல்லி விடும். அதைத் தான் பகவத் கீதையின் பதினாறாவது அத்தியாயமான தெய்வாசுர சம்பத் விபாக யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஆரம்பத்திலேயே தெரிவிக்கிறார்.

பயமின்மை, மனத்தூய்மை, ஞான யோகத்தில் நிலையாக நிற்றல், தானம், வெளியிலுள்ள புலன்களை அடக்குதல், வேள்வி, வேதம் ஓதுதல், தவம், நேர்மை;

அஹிம்சை, சத்தியம், கோபமின்மை, தியாகம், புலனடக்கம், கோள் சொல்லாமல் இருத்தல், பிராணிகள் மீது கருணை, பேராசையின்மை, மென்மை, வெட்கம், வீணான செயல்களைச் செய்யாமல் இருத்தல்

தேஜஸ், பொறுமை, தைரியம், உடல் தூய்மை, வஞ்சகமின்மை, தற்பெருமையில்லாமை, இவையெல்லாம் தெய்வீக மனப்பான்மையுடன் பிறந்தவர்களின் இலக்கணங்களாகும்.

டாம்பீகம், கர்வம், தற்புகழ்ச்சி, கோபம், கடுஞ்சொல், ஞானமின்மை ஆகியவை அசுர மனப்பான்மையுடன் பிறந்தவனின் பிறவிக் குணங்கள் ஆகும்.

தெய்வீகக் குணங்கள் மோட்சத்தை அடைய உதவும். அசுர மனப்பான்மை சம்சார பந்தத்தை அளிக்கும். பாண்டவா, வருத்தப்படாதே. நீ தெய்வீகக் குணங்களுடன் பிறந்திருக்கிறாய்.

தெய்வீகக் குணங்களில் முதல் குணமாக பயமின்மையை பகவான் கூறுவதைக் கவனிக்க வேண்டும். பயத்தைப் போல் நம்மைக் கட்டிப் போட்டுப் பின்னுக்குத் தள்ளக்கூடியது வேறொன்றுமில்லை. பெரும்பாலான நேரங்களில் பயம் அஞ்ஞானத்தின் விளைவாகவே இருக்கிறது. அது நம் திறமைகளை மழுங்கடிக்கிறது. முயற்சிகளை முடக்கி விடுகிறது. மற்ற எத்தனையோ நல்ல தன்மைகள் இருந்த போதும் கோழைத்தனத்தால் பிரகாசிக்க முடியாமல் போனோர் ஏராளம்.

மனத்தூய்மையும், ஞான வழியில் நிற்பதும் தவறான பாதையில் சென்று பின் கஷ்டப்படும்படியான சூழ்நிலையை முன்கூட்டியே தடுக்கின்றது. புலன் அடக்கமும் நம் சக்திகளை விரயமாக்காமல் உயர்ந்த விஷயங்களுக்குப் பயன்படுத்தும்படியாக நம்மை ஊக்குவிக்கிறது.

அடுத்தது வேள்வி இந்தக் காலத்தில் செய்ய முடிந்த விஷயம் தானா என்ற கேள்வி எழுகிறது. வேள்வி என்பது ஒரு தினசரி காரியமாக இருந்த காலக்கட்டத்தில் கூறப்பட்டது பகவத் கீதை. இன்று முறையாகச் செய்பவர்களும் இல்லை, செய்யும் சூழலும் இல்லை என்பதால் இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதே போல் வேதம் ஓதுதல். அக்காலத்தில் வேதம் ஓதுதல் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. படிப்பது புரியும், வாழ்வின் மேலான உண்மைகளை உணர்த்தி வழி காட்டும் என்கிற நிலை இருந்தது. இன்று அந்த நிலை எல்லோருக்கும் இல்லை என்பதால் உயர்ந்த ஞானத்தை உணர்த்தும் நூல்கள் படித்தல் என்றுகூட நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இங்கே குறிப்பிட்ட தவமும் பழைய காலத்திற்குப் பொருந்துவது என்று நினைக்க வேண்டாம். மன ஒருமைப்பாட்டுடன் எந்த உயர்ந்த செயலைச் செய்தாலும் அது தவம் தான். அந்தத் தவநிலை கைகூடாததால் தான் நாம் அடிக்கடி சறுக்குகிறோம். எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்து விட்டுச் சும்மா இருக்கும் கலை நமக்கு வசமாவதில்லை. சில சமயங்களில் அப்படி இருந்தால் கூடப் பல சமயங்களில் தேவையில்லாததையும் செய்து நம் சக்தியை வீணடிக்கிறோம்.  அதனால் தவம் என்ற சொல் மலையுச்சியில் தனிமையில் முனிவர்கள் செய்யும் சமாச்சாரம் என்ற நினைவை ஒழித்து நம் வழியில் நாமும் தவ வாழ்க்கை வாழ முடியும் என்ற புரிதலுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்ய வேண்டியதைச் சிறப்பாகச் செய்யும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதே போல் அஹிம்சையும் பல முறை வற்புறுத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு ஹிம்சையும் அதற்கான விளைவுகளை அதற்குரிய காலத்தில் கொண்டு வருவதால் தேவையில்லாத விரும்பத்தகாத விளைவுகளை வரவழைத்துக் கொள்ளாமல் இருக்கவாவது அஹிம்சையை நாம் பின்பற்ற வேண்டும்.

இங்கே வெட்கம் என்பது தவறான செய்கைகள் செய்வதில் இருக்க வேண்டிய கூச்சத்தையும், நாணத்தையும் சொல்கிறது. அதே போல் வீணான செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது மிக முக்கியமானது. தேவையில்லாமல் கைகால்களை ஆட்டுவது, அர்த்தமில்லாமல் பேசுவது, பயனில்லாத விஷயங்களைச் சிந்திப்பது எல்லாம் அந்த வகையில் சேர்ந்தவை. அவை பெரிய குற்றங்கள் அல்ல என்றாலும் அவை நாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கான சக்தியிலிருந்து பெருமளவு திருடிக் கொள்கிறது என்பதால் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

மற்றவை எல்லாம் முன்பு விவரித்த விஷயங்களே. இந்த நல்ல தன்மைகளை தெய்வீகத் தன்மைகளாக பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இந்தத் தெய்வீகத் தன்மைகளால் வாழ்க்கை சுபிட்சம் அடையும், நிறைய சாதனைகள் செய்ய முடியும், முன்னேற முடியும் என்பது நிதர்சனம். இந்தத் தன்மைகளுக்கு எதிரான தன்மைகளையும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

அவற்றில் முதலில் வருவது டாம்பீகம். உண்மையில் சொல்லிக் கொள்ளச் சிறப்பாக எதுவுமில்லாத மனிதர்களே டாம்பீகத்தில் ஈடுபடுகிறார்கள். உள்ளே இருக்கும் குறைப்பாட்டை மறைக்க அவர்களுக்கு டாம்பீகம் தேவைப்படுகிறது. அதே போல் கர்வமும் அவனவன் மட்டுமே உண்மை என்று நம்பும் கற்பனை உயர்வு நவிற்சியே. அந்த இல்லாத உயர்வுகளை அடுத்தவர்கள் பார்ப்பதில்லை. அழிவு வரும் வரை முட்டாள்கள் தங்கும் மனோ நிலையாகத் தான் டாம்பீகமும், கர்வமும் கருதப்படுகிறது. கோபம், கடுஞ்சொல், ஞானமின்மைக்கு முன்பே நிறைய விளக்கங்கள் கொடுத்து இருக்கிறோம். ஒட்டு மொத்தத்தில் அழிவை ஏற்படுத்துகிற அசுர குணங்கள் இவை.

இவை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து முடிவுக்கு வரச் சொல்லப்பட்டு இருக்கின்றன. அர்ஜுனனுக்குத் தெய்வீகக் குணங்களுடன் பிறந்திருப்பதாக ஸ்ரீகிருஷ்ணரே சர்ட்டிபிகேட் தந்து விட்டார்.  நாம் எப்படி இருக்கிறோம் என்று இந்தப் பட்டியலை வைத்து சிந்திப்போம். நம் விதி அதன்படியே அமையப்போகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வோம்!

பாதை நீளும்...

என்.கணேசன்

4 comments:

  1. This is a topic that is close to my heart... Cheers! Where are your contact details though?

    ReplyDelete
  2. fear is the main culprit most of us.what are the ways to get rid of it

    ReplyDelete
    Replies
    1. See my youtube video
      https://youtu.be/Y58ecy32ddc

      Delete
  3. விதியை தெரிந்து கொள்ளும் விதமும்...
    ஒவ்வொரு குணங்களின் விளக்கமும் அருமை...
    குறிப்பாக தவம் பற்றி கூறிய விளக்கம் மிக அருமை...

    ReplyDelete