சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 15, 2013

பரம(ன்) ரகசியம் – 57



ஸ்வர் வீட்டுக்கு வந்த போது இரவாகி இருந்தது. அவன் வந்தவுடன் மீனாட்சி சொன்னாள். “ஈஸ்வர், தாத்தா உன் கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னார்ப்பா

ஈஸ்வருக்கு பரமேஸ்வரன் என்ன பேச அழைக்கிறார் என்பதை யூகிக்க முடிந்தது. ஏன் சிக்கிரமே போகிறாய் என்று அவர் கேட்கக் கூடும். அவர் மனம் நோகாத பதிலைச் சொல்லி விட்டுப் போக ஈஸ்வர் நினைத்தான். அவன் தாயிடம் அவர் பேசியது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. கனகதுர்கா மகனிற்குப் போன் செய்து பரமேஸ்வரன் பேசியதைத் தெரிவிக்க முயன்றும் அவன் செல்போனில் சார்ஜ் சுத்தமாக இல்லாமல் போனதால் அவளால் அவனிடம் பேச முடிந்திருக்கவில்லை.

இப்போது அவனைப் பொருத்த வரை அவன் தந்தை கடைசி வரை நேசித்த மனிதர் அவர். அவனை நேசிக்க ஆரம்பித்திருக்கும் மனிதர் அவர். சிலவற்றை அவனால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதென்றாலும் கூட அவர் மேல் இருந்த கோபம் வடிந்து போய் இருந்தது. அதனால் அவரைக் காயப்படுத்தாமல் அங்கிருந்து போய் விட அவன் நினைத்தான். என்ன சொல்வது என்று மனதில் ஒத்திகை பார்த்து விட்டு அவர் அறைக்குச் சென்றான்.

பரமேஸ்வரனும் பேரன் வரவுக்குக் காத்துக் கொண்டிருந்தார். ஆனந்தவல்லி ‘மகனை இழந்தது போல பேரனையும் இழந்து விட வேண்டாம்என்று கூறிய அறிவுரை அவர் மனதில் ஆழம் வரை சென்று பாதித்திருந்தது. தன்னுடைய வாழ்க்கையையே இழக்கும் நிலை வரை போய் திரும்பி வந்த அவருக்கு இனி அவனை இழப்பைத் தாங்கும் பலம் இல்லை....! மகன் மரணத்தையே இன்னும் முழுமையாக அவரால் ஜீரணிக்க முடியவில்லை.....! மகன் நினைவுகள் தொடர்ச்சியாக மனதில் வர ஆரம்பிக்க அவர் கண்களை மூடிக் கொண்டார்... அவர் நினைவுகளைப் பேரன் கலைத்தான்.

“தாத்தா

பரமேஸ்வரன் கண்களைத் திறந்தார். “வா ஈஸ்வர். உட்கார்

ஈஸ்வர் அவர் அருகில் அமர்ந்தான். “ஏதோ பேசணும்னு சொன்னீங்கன்னு அத்தை சொன்னாங்க

“ஆமா... நீ சீக்கிரமே அமெரிக்காவுக்குப் போகப் போகிறாய்னு மீனாட்சி சொன்னா....

“ஆமா தாத்தா. ஒரு அவசர வேலை வந்திருக்கு... யூனிவர்சிட்டில இருந்து கூப்பிட்டிருக்காங்க... அதான்

“போய்ட்டு எப்ப வர்றதா உத்தேசம்?

ஈஸ்வர் பதில் சொல்ல தடுமாறினான். “பார்க்கணும் தாத்தா

பரமேஸ்வரன் கண்கள் பனிக்க பேரனிடம் கேட்டார். “உண்மைல திரும்பி வர்ற உத்தேசம் உனக்கு இல்லை இல்லையா? ஒரு தடவை உங்கப்பா என்னை விட்டுட்டு போனான். அவனை நான் அப்புறமா பார்க்கவே இல்லை. இனி உன்னையும் நான் பார்க்க முடியாதில்லையா?

ஈஸ்வர் இந்த நேரடிக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. அவராகவே அவன் அப்பாவைப் பற்றிப் பேசுவார் என்றும் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் குரலில் இருந்த வலி அவனை என்னவோ செய்தது. அப்படி எல்லாம் இல்லை தாத்தாஎன்று பலவீனமாகச் சொன்னான்.

ஹால்ல நீயே மாட்டின ஃபோட்டோவைக் கூட கழட்டிட்டே

ஈஸ்வர் பாதி உண்மையும், பாதி வாக்குசாதுர்யமும் கலந்து சொன்னான். “தாத்தா! உங்களுக்குத் தேவை இல்லாமல் பழைய ஞாபகம் எல்லாம் வந்து நீங்க மனசு கஷ்டப்பட வேண்டாம்னு நினைச்சு தான் கழட்டிட்டேன். பழசை நாம மாத்த முடியாது. அப்படி இருக்கிறப்ப அதையே திரும்பத் திரும்ப நினைக்க வைக்கற விஷயங்களை சுற்றிலும் வச்சிருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க. ஏதோ ஒரு அசட்டுத்தனத்துல நான் அந்த ஃபோட்டோவை அன்னைக்கு மாட்டிட்டேன். பின்னாடி யோசிச்சுப் பார்த்தப்ப முட்டாள்தனம்னு தோணிச்சு. அதான் கழட்டிட்டேன்...

பரமேஸ்வரன் எழுந்து சென்று பீரோவைத் திறந்து அதனுள் இருந்த சேஃப் லாக்கரைத் திறந்து ஒரு தடிமனான புகைப்பட ஆல்பத்தையும் ஒரு பழைய அலுமினியப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வந்து பேரனிடம் தந்தார்.

ஈஸ்வர் அவற்றைத் திகைப்புடன் வாங்கினான். அந்த ஆல்பத்தை முதலில் திறந்தான். அவனுடைய அப்பாவின் புகைப்படங்கள் அதில் இருந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலிருந்து அவர் திருமணம் செய்து கொண்டதற்கு முந்தின வாரம் வரை உள்ள புகைப்படங்கள் வரிசைப்படி இருந்தன. சிலவற்றில் அவர் தனியாக இருந்தார். சிலவற்றில் அவர் மீனாட்சியுடனும், சிலவற்றில் பரமேஸ்வரனுடன் இருந்தார். சிலவற்றில் மூன்று பேருமாகச் சேர்ந்து இருந்தார்கள். ஆனால் ஒவ்வொரு புகைப்படத்திலும் அவன் தந்தை இருந்தார். தந்தை நினைவுகளில் உணர்ச்சிவசப்பட்டவனாக அவன் ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்துக் கொண்டு வந்தான். அதை அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போது பரமேஸ்வரன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவன் தந்தை அவனிடம் என்றோ சொல்லி இருந்தது இப்போது அவன் காதில் ஒலிக்க ஆரம்பித்தது. இந்தப் புகைப்படங்களில் இருந்து அவரே மீண்டும் அவனிடம் சொல்வது போல.....!

எனக்கு எங்கம்மாவைப் பார்த்த ஞாபகமே இல்லை ஈஸ்வர். அம்மா இறந்தப்ப எனக்கு வயசு அஞ்சு. மீனாட்சிக்கு வயசு மூணு. ஆனாலும் எங்களுக்கு அம்மா இல்லாத குறை தெரியல ஈஸ்வர். எங்கப்பா எங்களுக்குத் தெரிய விடல. வீட்டுலயே பாட்டி இருந்தாங்கன்னாலும் அவங்க எங்களைப் பார்த்துகிட்டது இல்லை. அப்பா எங்க ரெண்டு பேருக்கு அடுத்தபடி தான் எல்லாம்னு நினைச்சார். அவர் தன்னைப் பத்திக்கூட நினைச்சுகிட்டதில்லை. எங்கம்மா இறந்தப்ப எங்கப்பாவுக்கு இளம் வயசு தான். பாட்டி உட்பட எல்லாரும் அவரை ரெண்டாம் கல்யாணம் செய்துக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. அவர் கேட்கல. காரணம் நாங்க தான் ஈஸ்வர்....

“நாங்க எதுவும் அவர் கிட்ட கேட்க வேண்டி இருக்கல. சொல்ல வேண்டி இருக்கல. அவரா பார்த்து பார்த்து எல்லாம் செய்வார். எதுலயுமே உயர்ந்தது மட்டும் தான் எங்களுக்குக் கிடைக்கணும்னு நினைப்பார். வியாபாரத்துல யோசிச்சதை விட அதிகமா எங்களுக்கு என்ன வேண்டி இருக்கும்னு அவர் யோசிச்சது அதிகம் ஈஸ்வர். அதுலயும் மீனாட்சியையும் விட என்னை அவர் ஒருபடி அதிகமா நேசிச்சார்னு தான் சொல்லணும். உலகத்துல அவர் என்னை நேசிச்ச மாதிரி எந்தத் தகப்பனும் தன் மகனை நேசிச்சிருக்க முடியாது....

(இப்படி சங்கர் சொன்ன போது ஈஸ்வர் குறும்பாக தந்தையிடம் கேட்டான். “அப்படின்னா நீங்க கூட என்னை அந்த அளவு நேசிக்கலைன்னு எடுத்துக்கலாமா?

சங்கர் தயங்காமல் சொன்னார். “எடுத்துக்கலாம் ஈஸ்வர். அவர் எனக்காகச் செஞ்சிருக்கிற தியாகத்தை எல்லாம் யோசிக்கறப்ப நான் உனக்காக எந்த தியாகத்தையும் செஞ்சதில்லை”)

ஆல்பத்தில் இருந்த அப்பாவின் கடைசி புகைப்படத்தைப் பார்த்து முடித்த போது ஈஸ்வரின் மனம் லேசாக இருந்தது.

இந்த அலுமினிய டப்பாவில் என்ன இருக்கிறது?என்று அவன் யோசித்த போது பரமேஸ்வரன் கரகரத்த குரலில் சொன்னார். “இது உங்கப்பா சின்னவனா இருந்தப்ப வச்சுகிட்டிருந்த டப்பா. அவனுக்கு எதெல்லாம் ரொம்ப பிடிக்குமோ அதை எல்லாம் நிரப்பி வச்சிட்டிருந்த டப்பா. இப்ப நான் அதை வச்சிட்டிருக்கேன்...

ஒரு பெருந்துக்கம் உடைய ஆரம்பிக்கிறது என்பதை அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஈஸ்வர் புரிந்து கொண்டான். கண்களில் நீர் வழிய அதைத் திறந்தவர் ஒரு துணியாலான ஷூவை எடுத்துக் காண்பித்தார். “இது அவன் அம்மா அவனுக்கு தைச்ச ஷூ. தோலிலானது அவன் பாதத்தை அதிகமா உறுத்திடுமோன்னு பயந்து அவனுக்காக அவ தைச்சது. அவன் போட்டு நடந்த முதல் ஷூ இது தான்....இன்னொரு காகிதத்தை எடுத்து அவனிடம் தந்தார். அதில் “I love you daddy” என்று குழந்தைக் கையெழுத்தில் எழுதி இருந்தது. “இது அவன் ரெண்டாம் வகுப்புல படிக்கிறப்ப எழுதி என் கைல தந்தது....

அவர் அழுது கொண்டே இன்னும் பலவற்றை ஒவ்வொன்றாகக் காட்ட ஈஸ்வரும் கண்கலங்கியபடி அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பரமேஸ்வரன் சொன்னார். “என் மகனுக்கு ஒவ்வொன்னும் இருக்கிறதுலயே சிறந்ததாய் பார்த்து நான் வாங்கித் தருவேன். அவனா எதுவும் கேட்க மாட்டான். நானா தான் பார்த்து பார்த்து வாங்கித் தருவேன். அதனாலேயே தானோ என்னவோ அவனுக்கு மனைவியும் கூட நானாய் தான் பார்த்து தேர்ந்தெடுத்துத் தரணும்னு நம்பிட்டு இருந்துட்டேன்.... அவனாய் பார்த்து உன் அம்மாவை தேர்ந்தெடுத்ததை என்னால நம்ப முடியல.... தாங்க முடியல.... கடைசில உனக்கு நான் வேணுமா அவள் வேணுமான்னு தீர்மானிச்சுக்கோன்னு அவன் கிட்ட சொன்னேன். சொல்றப்ப எனக்கு ஒரு சதவீதம் கூட சந்தேகம் இருக்கல. என் மகன் என்னை விட வேற யாரையும் முக்கியம்னு நினைக்க மாட்டான். அவனால் நினைக்க முடியாதுன்னு உறுதியா நம்பினேன். ஏன்னா இது வரைக்கும் அந்த மாதிரி நடந்ததே கிடையாது.... ஆனால் அது நடந்துடுச்சு. அவன் உன் அம்மாவைக் கல்யாணம் செய்துகிட்டான். அவன் என்னை விட உன் அம்மா முக்கியம்னு நினைச்சுட்டாங்கிறதை என்னால தாங்க முடியல ஈஸ்வர்.... நான் அன்னைக்கே ஒரு தடவை செத்துட்டேன்....

சொல்லி விட்டு பேரனைப் பிடித்துக் கொண்டு அவர் குமுறி அழுதார். மனோதத்துவ உதவிப்பேராசிரியரான அவனுக்கு அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அவர் தொடர்ந்தார். “நான் அன்னைக்கு முடிவு செய்துட்டேன். என்னைப் பொருத்த வரைக்கும் அவன் இறந்துட்டான்னு.... அவனுக்கு நான் வேண்டாம்னா எனக்கும் அவன் வேண்டாம்னு நினைச்சுகிட்டேன்.... அவனைப் பத்தி யாரும் என்கிட்ட பேச வேண்டாம்னு சொல்லிட்டேன். மீனாட்சி கிட்ட அவன் முகத்துல கூட நான் முழிக்க விரும்பலன்னு சொல்லிட்டேன். அப்பா வேணும்னா அவனைப் பத்திப் பேசக் கூடாதுன்னு கறாரா சொல்லிட்டேன். என் அண்ணன் கிட்ட நான் மனசு விட்டுப் பேசாத ஒரு விஷயம் இருக்குன்னா அது என் மகன் பத்தின இந்த துக்கம் தான்.... வெளியுலகத்துல அவனை மறந்துட்ட ஒரு கல்நெஞ்சனாய் காட்டிகிட்டேன். ஆனா எனக்குள்ள இருந்த அந்த தகப்பன்கிற பாத்திரத்துக்கு அது முடியல ஈஸ்வர். ராத்திரி என் மகன் கிட்ட கால் மணி நேரமாவது ஏதாவது பேசிகிட்டிருந்தா தான் எனக்கு தூக்கம் வரும். அவனில்லாமல் எனக்கு தூக்கம் வரலை. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருந்துச்சு. ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி யாருக்கும் தெரியாமல் இந்த ஃபோட்டோவை எல்லாம் எடுத்துப் பார்க்க ஆரம்பிச்சேன். இந்தப் பொருள்களை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சேன். அவன் என் கூட இருக்கற மாதிரி ஒரு உணர்வு. “I love you daddy”ன்னு சொல்ற அந்த கடிதத்தை படிப்பேன்.. அவன் கூட இருந்த நாளை எல்லாம் நினைச்சுகிட்டு இருப்பேன்.. பிறகு தான் தூக்கமே வரும். இப்ப வரைக்கும் இப்படித் தான் தூங்கறேன். இதை நான் இது வரைக்கும் மீனாட்சி கிட்ட கூடச் சொன்னதில்லை...

ஈஸ்வர் கண்கள் குளமாக பிரமிப்புடன் அவரைப் பார்த்தான். அவன் தந்தை அவரைக் கடைசி வரை நேசித்தது இந்த அன்பை உள்ளூர உணர்ந்ததால் தான் என்பது இப்போது புரிந்தது.

அவன் இங்கிருந்து போன பிறகும் கொஞ்ச நாள் ஒரு நம்பிக்கை எனக்கு மிச்சம் இருந்துச்சு. அப்பா நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா. என்னை மன்னிச்சுடுங்கன்னு அவன் சொல்லிகிட்டு உன் அம்மாவை விட்டுட்டு வருவான்னு எதிர்பார்த்தேன். அவன் வரலை. நீ பிறந்த செய்தி கேட்டதுக்கப்புறம் அந்த எதிர்பார்ப்பு போயிடுச்சு. வெளியில நீ பிறந்ததைப் பத்தி நான் லட்சியம் செய்யலைன்னு காண்பிச்சுகிட்டேன். அவனைப் பத்தியே நான் யோசிக்கலைங்கற மாதிரியும் காண்பிச்சுகிட்டேன். அதுக்கப்புறமா உள்ளூர வேற ஒரு எதிர்பார்ப்பு எனக்குள்ளே வர ஆரம்பிச்சுது.  அவன் உன்னை எடுத்துகிட்டு பொண்டாட்டியோட வந்து என்னைப் பார்க்க வருவான். நான் உடனடியா அவனை ஒத்துக்க கூடாது. கொஞ்சம் பிகு காண்பிச்சுகிட்டு அப்புறமா ஏத்துக்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். சொல்லப்போனா காத்துகிட்டு இருந்தேன். வருஷங்கள் நகர்ந்துட்டே போச்சு. ஆனா என் குழந்தை, நான் உயிருக்கு உயிரா நேசிச்ச என் ஒரே மகன் வரவே இல்லை... கடைசியா ஒரு நாள் அவன் செத்துட்ட செய்தி தான் வந்தது.....

பரமேஸ்வரன் ஓவென்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார். அவர் இத்தனை காலமாய் சேர்த்து வைத்திருந்த துக்கம் ஒரேயடியாக அணை உடைந்த வெள்ளம் போல பீறிக் கொண்டு வந்தது.

அவர் மகன் இப்போது தான் இறந்தது போல தாள முடியாமல் பேரன் தோளில் சாய்ந்து கொண்டு அவர் கதறி அழுதார். கண்களில் அருவியாக நீர்வழிய தாத்தாவை மெல்லத் தட்டிக்கொடுத்து ஈஸ்வர் ஆறுதல் அளிக்க முயன்று கொண்டிருந்தான்.

அவர் அழும் சத்தம் கேட்டு பதறிப் போய் ஆனந்தவல்லியும், மீனாட்சியும் ஓடி வந்தார்கள்.  பரமேஸ்வரன் அவர்கள் இருவரையும் பார்க்கவில்லை. இது வரை அவர் அப்படி அழுது அவர்கள் பார்த்திருக்கவில்லை.

“என் குழந்தை என்னைப் பார்க்காமயே செத்துப் போயிட்டான்.... ஈஸ்வர்! என் குழந்தை என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமயே என்னை தண்டிச்சுட்டு போயிட்டான்..... எனக்கு எதிர்பார்க்கக் கூட எதையும் விட்டு வைக்காமயே போயிட்டான்...”  பரமேஸ்வரன் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

தாங்க முடியாமல் மீனாட்சி தந்தையை சமாதானப்படுத்தச் செல்ல முற்பட்ட போது ஆனந்தவல்லி பேத்தியை பின்னுக்கு இழுத்தாள். அழுது தீர வேண்டிய துக்கத்தை அழுது தாண்டி தீர்க்கணும். எத்தனையோ வருஷத்து துக்கம், நம்ம கிட்ட எல்லாம் காட்டாமல் வச்சிட்டிருந்த துக்கம், பேரன் கிட்டயாவது சொல்லி அழுது தீர்க்கட்டும். பொறுஎன்று காதில் முணுமுணுத்தாள்.

ஈஸ்வருக்கு அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. அந்த மனிதரின் சொல்லுக்கடங்காத துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் எந்த மொழியிலும் இருக்ககூடும் என்று அவனுக்குத் தோன்றவுமில்லை. அவரை அழ அனுமதித்தான்....


ணபதியிடம் இரண்டு நாளில் புதிய இடத்திற்கு சிவலிங்கத்துடன் புறப்படத் தயாராக இருக்கும்படி குருஜி சொல்லி இருந்தார். அந்தப் புதிய இடத்தைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கணபதிக்கு இருந்தும் அதைப் பற்றி குருஜியிடம் கேட்பது அதிகப்பிரசங்கித் தனமாகப் பட்டது. அதனால் அவன் கேட்கவில்லை. போய்ச் சேரும் போது தானாய் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டான். இந்த வேத பாடசாலை போல நிறைய பூச்செடிகளும், துளசிச் செடிகளும், வில்வமரங்களும் நிறைந்ததாய் அந்தப் புதிய இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். சிவனுக்கு நன்றாக அலங்காரம் செய்யலாம்....

இப்போதெல்லாம் அவன் தனியாக இருக்க முடிவதில்லை. என்னேரமும் யாராவது அவனுடன் கூடவே இருக்கிறார்கள். அவனுக்கு உதவத் தயாராக இருப்பவர்கள் போல் அவர்கள் காட்டிக் கொண்டார்கள்.  பூப்பறிக்கப் போனால் கூடவே வந்து பூப்பறிக்கிறார்கள். ஆனால் அவர்கள் பூக்களை வெடுக் வெடுக்கென்று பிடுங்குவது கணபதிக்குப் பிடிக்கவில்லை. கடவுளுக்காகப் பிடுங்கும் போது ஒரு பக்தி வேண்டாமா? ஆனால் அவன் அதைப் பற்றி அவர்களிடம் கேட்கத் துணியவில்லை. அவர்கள் எங்களை மாதிரி மந்திரம் சொல் பார்க்கலாம் என்றால் என்ன செய்வது என்று பயந்தான்.

அதே போல் பூஜை செய்யும் போதும் அவர்கள் கூடவே இருந்தார்கள். ஜபம் செய்வதாகக் காட்டிக் கொண்டு எதிரில் உட்கார்ந்து கொண்டார்கள். சதா சர்வகாலம் அவர்களில் யாராவது ஒருவர் அவனுடனேயே இருப்பதால் அவனுக்கு மனம் விட்டு சிவனிடம் பேசக் கூட முடியவில்லை.

பரமேஸ்வரன் ஈஸ்வரிடம் அழுது கொண்டிருந்த அதே வேளையில் கணபதி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி குருஜியின் ஆள் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அதனால் மெல்ல கணபதி எழுந்து வந்து சிவலிங்கத்தருகே உட்கார்ந்தான். பின் சிவனுக்கு மட்டுமே கேட்கும் படி மிகத் தாழ்ந்த குரலில் பேச ஆரம்பித்தான்.

“ரெண்டு நாள்ல புது இடத்துக்குப் போறோம். உன்னை நான் தான் தூக்கிட்டு வரணும்னு குருஜி சொல்லிட்டார். எனக்கு எத்தனை கவுரவம் தர்றார் பார்த்தியா? இப்ப எல்லாம் எனக்கு உதவறதுக்கு யாராவது ஒரு ஆள் தயாராய் பக்கத்திலேயே இருக்கற மாதிரி அவர் ஏற்பாடு செஞ்சிருக்கார். அத்தனை மரியாதைக்கு எனக்கு யோக்கியதை இருக்கற மாதிரி எனக்குத் தெரியலை.... எனக்கு அப்படி யாராவது இருக்கறப்ப உன் கிட்ட பேசக் கூச்சமா இருக்கு... அதான் இப்ப அந்த ஆள் தூங்கறப்ப மெல்ல எழுந்து வந்துட்டேன். உனக்கு ஒன்னும் தூக்கம் வரலையே? பேசினா தொந்தரவு ஆகாது தானே?

சொல்லி விட்டு தூங்கும் ஆளை கணபதி ஒரு பார்வை பார்த்தான். அந்த ஆள் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்ததை திருப்தியுடன் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான்.

“உன்னை வச்சு என்னவோ ஆராய்ச்சி செய்யப் போறாங்கலாம். நீ வெளிநாட்டுக்குப் போறப்ப உன் புகழ் வெளிநாடு எல்லாம் பரவிடும் போலத் தோணுது. அங்கே அவங்க இங்க்லீஷ்ல பேசினா உனக்குப் புரியும் தானே. எனக்கு என்னவோ இங்க்லீஷ்ல மொத்தமாவே நாலஞ்சு வார்த்தைக்கு மேல தெரிய மாட்டேங்குது.... எங்கே போனாலும் என்னை மறந்துடாதே. உனக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கேன். உன்னால தான் எனக்கு தினமும் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சுருக்கு.  உன் பிள்ளை கிட்ட என் மேல கோவிச்சுக்க வேண்டாம்னு சொல்லு. பணம் அதிகமா கிடைக்குதுங்கறதால என்னை மறந்துட்டியான்னு உன் பிள்ளை கேட்கற மாதிரி நேத்து கனவு வந்துச்சு.... காலைல இருந்து மனசே சரியில்லை... என் குடும்ப நிலைமை உனக்கும் தான் தெரியும். உன் பிள்ளைக்கும் தெரியும். நான் இது வரைக்கும் பொறுப்பா நல்லா சம்பாதிச்சு எங்கம்மா கைல தந்ததே இல்லை. இது ஒரு சந்தர்ப்பம்னு நினைச்சு தான் ஒத்துகிட்டு இங்கே இருக்கேன். அதை நீயே பக்குவமா உன் பிள்ளை கிட்ட சொல்லி புரிய வை. இனிமே கனவுல எல்லாம் வந்து இப்படி தர்மசங்கடமான கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம்னு சொல்லு.. இன்னொரு தடவை பிள்ளையார் அப்படிக் கேட்டால் நான் அழுதுடுவேன்....சொல்லிட்டேன்...

சொல்லி விட்டு சிவலிங்கத்தை மிகுந்த பக்தியுடன் கணபதி பார்த்தான். அவனுடைய பிள்ளையார் அவனிடம் கோபித்துக் கொண்டால், தப்பாக நினைத்துக் கொண்டால், சரி செய்து வைக்க வேண்டிய பொறுப்பை அவன் ஒப்படைத்துள்ள தெய்வம் அல்லவா இது!

திடீர் என்று சிவலிங்கம் மீது ஒரு பேரொளி தோன்றி மறைந்தது.

“லைட்டை யார் இது மேல அடிக்கிறாங்க என்று நினைத்து கணபதி சுற்றியும் பார்த்தான். தூங்குகிற ஆள் குறட்டை விட்டுக் கொண்டு இருந்தான். வேறு யாரும் இல்லை. கணபதிக்குக் குழப்பமாக இருந்தது.

அவன் சிவலிங்கத்தை இன்னும் நெருங்கி ரகசியமாய் கேட்டான். “இப்ப ஏதோ லைட் அடிச்ச மாதிரி இருந்ததே. கவனிச்சியா?

(தொடரும்)

-          என்.கணேசன்


34 comments:

  1. enna Ganesan sir every week azha vaikiringa.

    kanla irunthu thanni kotratha ennala thadukavae mudiyala..

    I also asked this question many times. Why Sankar did not try to come and see his dad?
    you will give a explanation I believe.

    Mini

    ReplyDelete
    Replies
    1. The answer will be given by Eswar next week.

      Delete
    2. Yes I agree with mini. I couldnt control my tears when parameshwar briefs his feelings about his son.

      Delete
  2. அவன் தந்தை அவரைக் கடைசி வரை நேசித்தது இந்த அன்பை உள்ளூர உணர்ந்ததால் தான் என்பது இப்போது புரிந்தது.//

    அவன் சிவலிங்கத்தை இன்னும் நெருங்கி ரகசியமாய் கேட்டான். “இப்ப ஏதோ லைட் அடிச்ச மாதிரி இருந்ததே. கவனிச்சியா?”

    இதையும் வீடியோ காமிரா பதிவு செய்திருக்குமோ..!!??

    ReplyDelete
  3. சுவாமிநாதன்August 15, 2013 at 5:54 PM

    ஒரு மர்ம நாவலின் விறுவிறுப்பு, குடும்ப நாவலின் உணர்ச்சி போராட்டம், இடையிடையே ஆன்மிகம், விஞ்ஞானம், ஆழ்மனசக்தி என்று இப்படி ஒரு சிறப்பான கலவை தமிழ் நாவல்களில் புதிது தான். நான் படித்த வரையில் ஒன்றிருந்தால் மற்றது இருப்பதில்லை. வாரா வாரம் வாசகர்களை கட்டி இழுக்கிற சிறப்பான நாவல் தொடர் தருவதற்கு நன்றி. ஒரு காலத்தில் குமுதம் விகடனில் சில நல்ல தொடர்களை வாரா வாரம் காத்திருந்து படித்தது நினைவு வருகிறது. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. This episode explains what's blind love & its expectations...Really great...

    ReplyDelete
  5. அழுதது பரமேஸ்வரன் மட்டுமல்ல நாங்களும் தான். கணபதி கேட்கும் கடைசி லைன் சூப்பர்.

    ReplyDelete
  6. very emotional chapter. couldn't control my tears. parameshwaran's feelings are natural. ganapathi's character is amazing. i loved his last line with lord shiva. such an innocent character.

    ReplyDelete
  7. arputhamaana eluthukkal ...manam niraintha paaratukkal sir..!

    ReplyDelete
  8. unmaiyileya unkaludaiyathu valimai mikka eluthukkal.manathai kattip podukindrana...valukkal ayyaa..thodarunkal...

    ReplyDelete
  9. அமானுஷ்யனை இந்த ரகசியம் மிஞ்சிடிச்சுங்க கணேசன் சார்......

    முன்பாதி படிக்கும் போது......கல் நெஞ்சும் கரையும் என்பதை உணர்ந்தேன்.....

    கண்ணீர் நிறுத்த முடியவில்லை....

    இனி கதை சிவலிங்கம்,கணபதி,சித்தர்,ஈஷ்வர்,இன்ஷ்பெக்டர்...சுற்றி போகும் என்று எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  10. பரமேஸ்வரனுடன் சேர்ந்து எங்களையும் அழ வைத்து விட்டீர்கள்... கடைசியில் முடித்த விதம் அருமை... அடுத்த பதிவுக்கு காக்க வைத்து விட்டீர்களே...

    ReplyDelete
  11. கதை வாசிக்கும் போதே என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டேன்..தங்களை நேரில் வாழ்வில் ஒரு முறையேனும் சந்திக்க ஆவல்

    ReplyDelete
  12. வரதராஜன்August 15, 2013 at 10:06 PM

    மிக பிரமாதமாகப் போகிறது. பரமேஸ்வரனையும் கணபதியையும் எங்கள் கண் முன் நிற்க வைத்து பேச வைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  13. Very Interesting, You so blessed, ஒரு காலத்தில் குமுதம் விகடனில் சில நல்ல தொடர்களை வாரா வாரம் காத்திருந்து படித்தது நினைவு வருகிறது. Thanks

    ReplyDelete
  14. அனுபவித்தவர் கூட இவ்வளவு தத்ரூபமாக எழுதுபது கடினம்.வாழ்த்துகள்

    ReplyDelete
  15. கண் கலங்க வைத்த பகுதி. கணபதி, ச்சோ ச்வீட்! :)

    ReplyDelete

  16. I don't have word to explain.
    Really awesome.. Great work sir...

    ReplyDelete
  17. Kathai miga arumaiyaga pogirathu.....i love that ganapathi.........

    ReplyDelete
  18. I never read a novel like this, really wonderful. I too cried with Parameshwaran. Nijamaka nadappathu polave irukkirathu, ovvoru sambavamum.

    ReplyDelete
  19. உங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டே வருகிறேன். பாராட்ட வார்த்தைகளே இல்லை. இந்திராசெளந்திரராஜன் போல் நாவல்கள் எழுதலாமே???????????? அதுவல்லாமல் மற்ற ஆன்மீகத்தகவல்கள், சாமூகசிந்தனைகள் மற்றும் பல அனனைத்துமே மிகவும் சிறப்பே! வாழ்க வளமுடன்! தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  20. Sivalingathil light nu sonathum...pull arithu vitathu 2 to 3 times... enna oru anubavam adhu....very nice and interesting...do you have any other articles other than this? It's not just words ...its mind relaxing...

    ReplyDelete
  21. Well-emoted writing and let the heart to shed tears with Parameshweran...

    Awesome NG !!

    /PK Pillai

    ReplyDelete
  22. உண்மையில் மிக சிறந்த பாச உணர்வுகள் எங்கள் கண்முன் தெரிகிறது. ... .
    உண்மையில் பரமேஸ்வரன் போல அன்பை கொண்ட தந்தை யாரும் இருக்க முடியாது. ... .
    எங்களையும் அழவைத்துவிட்டீர்கள். ... . மிக சிறந்த கையாடல் ஐயா. ... .

    அன்பர் கூறியது போல தங்களை நேரில் ஒரு முறையேனும் சந்திக்க விழைகிறேன். ... .

    ReplyDelete
  23. அழகு அழகு கொள்ளை அழகு அய்யா. நீங்கள் கதை நகர்த்தும் விதம். எளிமை அதே சமயம் வலிமை.
    அழுத்தமான ஆனந்தவல்லி, வெள்ளந்தியாய் கணபதி, அறிவும் ஆற்றலும் கர்வமும் உள்ள குருஜி, கடமை தவறா பார்த்தசாரதி, ஹீரோ போன்ற ஈஸ்வர், உள்ளடி வேலை செய்வது தென்னரசா, மகேஷா மீனாட்சியா என்று தெரியாதபடி ஒரு நேர்த்தியான நெசவு. அட அட ஒரு அற்புதமான நாவல் அய்யா இது
    இதை இணைய தளத்தில் இலவசமாக தர உங்களுக்கு மிகவும் நல்ல மனது அய்யா. உங்கள் இனையவரைதளம்(bLOG) ஒரு இனிய தளம்.மிக்க நன்றி

    ReplyDelete
  24. மிகவும் அருமை. All the very best for all your future efforts. God Bless.

    ReplyDelete
  25. மிகவும் அருமையான நாவல். அந்த பரமனும், குருஜியும், சித்தரும், ஈஷ்வரும், கணபதியும், என்ன செய்ய போகிரறார்கள் என்று மிகவும் ஆவலாக உள்ளது.
    மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  26. sir ennala azhugaiya control panna mudiyala

    ReplyDelete
  27. உங்கள் பரம ரகசியம் எல்லா episod ம் சூப்பர். எல்லா episod யும் ஒரே நாளில் படித்தேன். அடுத்த வாரம் எப்போது என்று ஒரே ஆவலாக உள்ளது. அமனுஷ்யன் போல் விறுவிறுப்பாக உள்ளது.
    Mala

    ReplyDelete
  28. I think you made every one eyes clear (I mean tears) this episode!

    ReplyDelete
  29. உங்களுடைய எழுத்துக்களை படித்தோம் அல்லது வாசித்தோம் என்று சொல்வதை விட உணர்ந்தோம் என்ற சொல்லே பொருத்தமாய் உள்ளது.
    https://www.facebook.com/groups/nganeshanfans

    ReplyDelete
  30. கணபதி கதாபாத்திரத்தை யாரையாவது முன் உதாரணமாக கொண்டு படைத்தீர்களா ? கலக்கல் கணபதி !

    ReplyDelete