சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 28, 2019

இல்லுமினாட்டி 25


ல்லுமினாட்டியின் உளவுத்துறையில் அனைத்து வகையான பேரறிவாளர்கள் இருந்தார்கள். நவீன அறிவியல் நுட்பங்களின் உச்சத்தைப் பயன்படுத்தும் போக்கும் இயல்பாகவே இருந்தது. உளவுத்துறை இல்லுமினாட்டியின் தலைவருக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இருந்தது. அவர் இல்லாத பட்சத்தில், அவரை அணுக முடியாதபடி அவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, ஆபத்திலிருந்தாலோ அடுத்தபடியாக உபதலைவருக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது. மற்ற இல்லுமினாட்டி உறுப்பினர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற இந்த உளவுத்துறையை அணுக முடியாது. அவர்கள் மற்ற தனிப்பட்ட அல்லது அரசாங்க உளவு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களையே அணுகுவார்கள். அப்படி இல்லுமினாட்டி உறுப்பினர்கள் கூடத் தொடர்பில் இருக்க முடியாத வலிமையான உளவுத்துறை தலைமையோடு மட்டும் இணைந்ததாக இருந்தது தலைமையின் உச்சப் பலத்தை அதிகப்படுத்துவதாக  இருந்தது. அந்த உளவுத்துறை எல்லாத் தகவல்களையும் இல்லுமினாட்டியின் தலைவரிடமே சமர்ப்பிக்கும். அவர் அந்தத் தகவல்களைப் படித்து விட்டு தலைமைக்குழுவுக்கு மட்டும் அனுப்ப வேண்டுமா, எல்லா உறுப்பினர்களுக்கும் அனுப்ப வேண்டுமா என்று முடிவு செய்து பின் அனுப்புவார். சில மிக ரகசிய ரிப்போர்ட்களை அவர் தன்னிடமே கூட வைத்துக் கொள்ள முடியும். அப்படி முதல் முறையாக ஒரே சமயத்தில் வந்த இரண்டு ரிப்போர்ட்களை எர்னெஸ்டோ தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார்.

முதல் ரிப்போர்ட்விஸ்வம்என்ற பெயரில் இருந்தது. அதில் விஸ்வம் என்ற சக்தி வாய்ந்த மனிதன் அடுத்ததாக என்ன செய்யப் போகிறான் என்பதை அவனது பழைய சரித்திரத்தை வைத்து உளவுத்துறையின் துப்பறியும் நிபுணர்களும், மூன்று மனோதத்துவ மேதைகளும் சேர்ந்து கணித்திருந்தார்கள். விஸ்வத்தைப் பற்றிய சின்னச் சின்னத் தகவல்களையும் வைத்துக் கொண்டு மேலும் பல புதிய தகவல்களைப் பெற்றிருந்த துப்பறியும் நிபுணர்கள் அந்தத் தகவல்களை மனோதத்துவ மேதைகளுக்குத் தந்து விஸ்வத்தின் எதிர்கால நடவடிக்கைகளை அனுமானித்திருந்தார்கள். மனிதன் தன் இயல்பான குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களின்படியே இயங்குபவன் என்பதால் அந்தக் கணிப்பு பொய்த்துப் போக வழியில்லை

விஸ்வம் தனக்கு எதிரான நிலையை எடுக்கக் கூடியவர்களையும், தன் நோக்கத்திற்குத் தடையாக இருக்கக்கூடியவர்களையும் தன் அமானுஷ்ய சக்திகளைப் பயன்படுத்திக் கொல்லத் தயங்காதவன் என்பது இந்தியாவின் ரகசிய ஆன்மீகத்தின் முந்தைய குருவின் மரணத்திலிருந்தும், தமிழ்நாட்டு முந்தைய முதலமைச்சர் ராஜகுருவின் மரணத்திலிருந்தும் தெரிவதால் கண்டிப்பாக இல்லுமினாட்டியில் அவனை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், எதிர்த்தாலும் அதே பாணியைக் கையாள்வதற்கு சாத்தியமிருக்கிறது. அதைச் செய்யுமளவு அவன் புதிய உடல் பலம் பெற்ற பின் அவன் முதல் வேலை இல்லுமினாட்டி தலைவரைக் கொல்வதாக இருக்கலாம்என்று அந்த ரிப்போர்ட் தெரிவித்திருந்தது. விஸ்வத்தின் கடந்த காலச் சரித்திரத்தை, தெரிந்த வரை ஆழமாக ஆராய்ந்த பின்பும் விஸ்வத்தை அழைத்துச் சென்ற கூட்டாளிகளை உளவுத்துறையால் யூகிக்கவும் முடியவில்லை. ஆனால் பெரும்பாலும் ஒருவனாக அல்லது அதிகபட்சமாக இருவராக இருக்கலாம் என்றும் அவனுடைய பழைய வாழ்க்கையில் அந்தக் கூட்டாளி/கள் அதிகமாக அவனுடன் தொடர்பில் இருந்திருக்க வழியில்லை என்று மட்டும் யூகித்திருந்தது.

கிதார் இசையில் வூடு சடங்கு ட்யூனை ஒலிக்க விட்டதைப் பார்க்கும் போது அந்தக் கூட்டாளி/கள் இந்த அமானுஷ்ய சக்திகளின் சம்பந்தம் பெற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்றாலும் அவர்கள் அந்தச் சக்திகளை இதுவரை அதிகம் வெளிப்படுத்தியிருக்காத, யாருக்கும் சக்தியாளர்களாக அறிமுகம் ஆகியிருக்காதவர்களாகவே இருக்கக்கூடும்என்று ரிப்போர்ட் சொன்னது. அப்படி ஒலிக்க வைக்க நுழைந்த ஆள் அல்லது ஆட்களை மருத்துவமனைக் கண்காணிப்புக் காமிராப்பதிவுகளைப் பல முறை நுட்பமாகப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.  அதனால் அந்தக் கூட்டாளிகளும் வலிமையும், ரகசியமும், செயல்திறனும் வாய்ந்த ஆட்களாய் இருக்க வாய்ப்பிருப்பதாகவே உளவுத்துறை சந்தேகப்பட்டது. அதனால் எர்னெஸ்டோ உயிருக்குப் பேராபத்து இருக்கின்றது என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது

விஸ்வத்தின் கூட்டாளி/கள் வெளிப்படையாக முன்னுக்கு வருவதில் தயக்கமிருப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று மனோதத்துவ நிபுணர்கள் நம்பினார்கள். சக்திகள் இருந்தும் இது வரை வெளிப்படுத்தாத கூட்டாளிகள் முன்பு போலவே இனியும் ரகசியமாக பின்னால் இருந்து இயங்கவே வாய்ப்புகள் அதிகம் என்று அவர்கள் கணித்திருந்தார்கள்.

விஸ்வத்தின் உடல் வலிமை தேறுவதற்கு ஆகும் கால அளவை மூளை விஞ்ஞானிகளும், நரம்பியல் நிபுணர்களும் சேர்ந்து ஓரளவு அனுமானிக்க முடியும் என்று அந்த ரிப்போர்ட் சுட்டிக்காட்டியது. மூளை விஞ்ஞானி என்றால் ஜான் ஸ்மித்துக்கு மிஞ்சிய நபர் இல்லை. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் அவர் ஈடுபட்டு விட்டதால் அவரும் தலைசிறந்த நரம்பியல் நிபுணர் யாராவதும் சேர்ந்து அந்தக் கால அளவை நிர்ணயிப்பது நல்லது என்றும் அதை உடனடியாகச் செய்வது அதிமுக்கியம் என்றும் அவசரம் என்றும் ரிப்போர்ட் கூறியிருந்தது.

எர்னெஸ்டோ தன் உயிருக்கு என்றுமே பயப்பட்டவரல்ல. எப்போது மரணம் வந்தாலும் மறு உலகம் எப்படியிருக்கும் என்று சென்று பார்க்கிற ஆர்வமுடையவராக அவர் தயார்நிலையிலேயே இருந்தார். ஆனால் அவர் தலைமை வகிக்கும் இல்லுமினாட்டி அழிவை நோக்கிச் செல்வதை அவர் ஏற்றுக் கொள்ள முடியாதவராகவே இருந்தார். அதனால் இல்லுமினாட்டியை ஒரு சரியான தலைமையில் ஒப்படைப்பதற்கு முன் முட்டாள்தனமாக இப்போது உயிரை விடுவதற்கு அவர் விரும்பவில்லை.

அந்த முதல் ரிப்போர்ட்டை அவர் படித்து முடிகையில் இரவு மணி பத்தரை ஆகியிருந்தது. ஜான் ஸ்மித்தை உடனடியாக இந்த நேரத்தில் அழைப்பது அவசியமில்லை என்று நினைத்த அவர் நாளை வந்து சந்திக்கும்படி ஜான் ஸ்மித்துக்குத் தகவல் அனுப்பி விட்டு அந்த இரண்டாவது ரிப்போர்ட்டை எடுத்தார்.

இரண்டாவது ரிப்போர்ட் அமானுஷ்யன்என்ற பெயரில் இருந்தது. தூங்கச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது. பிதோவன் இசையைக் கேட்டபடி ஒயினை அருந்தி விட்டு உறங்கச் செல்ல அதிக நேரமில்லை. என்றாலும் மேலோட்டமாக அந்த ரிப்போர்ட்டைப் படித்து விடலாம் என்று எண்ணியவராக அந்த ரிப்போர்ட்டைப் படிக்க ஆரம்பித்தவர் காலத்தை மறந்தார். இரண்டு மணியளவில் கண்கள் தானாக மூட ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் உறங்கியவர் மறுநாள் அதிகாலை ஐந்து மணியளவில் தானாக முழித்துக் கொண்டு மறுபடி எழுந்து அந்த ரிப்போர்ட்டைப் படித்தார். காலம் மறுபடி மறக்கப்பட்டது. முடிவில் அவருக்கு பிரமிப்பே மிஞ்சியது.

ஜான் ஸ்மித் அவரைச் சந்திக்க வந்த போது அவரிடம் ஏதோ ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது போல் உணர்ந்தார். ஆனால் அது என்ன மாற்றம் என்பதை நிச்சயமாகக் குறிப்பிட்டு அவரால் சொல்ல முடியவில்லை.

எர்னெஸ்டோ அவரிடம் கேட்டார். “ஜான், விஸ்வம் திரும்பவும் அவனுடைய சக்திகள் எல்லாம் உபயோகப்படுத்த அவன் உடல்நிலை எந்த அளவிற்கு சரியாக வேண்டும்?”

ஜான் ஸ்மித் சொன்னார். “அவன் உடம்பின் முக்கியமான எல்லா பாகங்களும் பிரச்சினை கொடுக்காத அளவுக்காவது தேற வேண்டும். முக்கியமாக அவன் நரம்புகள் வலிமையாக மாற வேண்டும்.”

மூளை?”

மருத்துவச் சொற்கள் இல்லாமல் அவருக்குப் புரிய வைப்பது எப்படி என்று ஜான் ஸ்மித் யோசித்தார். பின் சொன்னார்அதில் அவன் டேட்டாவை நிரப்பி வைத்திருக்கிறான். ஆனால் தகவல்கள் நரம்பு மண்டலத்திற்குப் போவதும், திரும்பப் பெறுவதுமான வழிகள் தடங்கல் இல்லாமல் போய் வர வைக்க வேண்டும்.”

எர்னெஸ்டோ கேட்டார்இதை எல்லாம் இந்த உடம்பில் அவனால் செய்ய முடியுமா? எந்த அளவு செய்ய முடியும், அதற்கு எவ்வளவு காலம் அவனுக்குத் தேவைப்படும்?”

ஜான் ஸ்மித் சொன்னார். “உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இருப்பவை. ஒட்டு மொத்தமாய் எல்லாம் சேர்ந்து இயங்க ஆகிற காலத்தை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தான் ஓரளவு அனுமானிக்க முடியும்

எர்னெஸ்டோ கேட்டார். “மூளைக்கு நீ இருக்கிறாய். மற்றதெல்லாம் தெரிந்து கொள்ள எத்தனை நிபுணர்கள் வேண்டும்?”

ஜான் ஸ்மித் சொன்னார். “முக்கியமாய் நரம்பியல் நிபுணர் ஆலோசனை வேண்டும். மற்ற பாகங்கள் இருக்கிற நிலைமை ம்யூனிக் ஆஸ்பத்திரி ரிப்போர்ட்களில் இருக்கிறது. அதை வைத்து நாங்களே முடிவு செய்து விடலாம்…”

இதையே உளவுத்துறை ரிப்போர்ட்டும் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்து திருப்தியடைந்த எர்னெஸ்டோ சொன்னார். “அதை உடனே செய்து எனக்கு அவன் எல்லா முயற்சிகளையும் கச்சிதமாகச் செய்தாலும் அவன் உடம்பு அதிகபட்சமாய் எந்த அளவு தேறும், அதற்கு குறைந்த பட்சம் எத்தனை காலம் தேவைப்படும் என்று கண்டு பிடித்துச் சொல். எனக்கு நாளைக்கே தெரிய வேண்டும்.”

(தொடரும்)

என்.கணேசன்

25 comments:

  1. விஸ்வத்தை டெக்னிகலாகவே அலசி ஆராய்வது வித்தியாசமாய் இருக்கிறது. இல்லுமினாட்டி போன்ற அறிவுஜீவிகள் பார்க்கும் விதம் மாதிரியே கொண்டு போவது அருமை. ஹைய்யா அமானுஷ்யன் வரப் போகிறான்.

    ReplyDelete
  2. Very interesting. The way the illuminati report arrives at the conclusion is convincing. Waiting for next Thursday.

    ReplyDelete
  3. Welcome to Akshay. Novel going like a chess play.

    ReplyDelete
  4. எர்னெஸ்டோ அமானுஷ்யனைப் பற்றி மேலோட்டமாக படிக்க ஆரம்பிக்கும் போதே கணித்துவிட்டேன்.... "அவர் காலத்தை மறந்து மூழ்கிவிடுவார்" என்று....

    இலுமினாட்டி உளவுத்துறை விஸ்வத்தை பற்றி துல்லியமாக கணிக்கும் விதம் அருமை..‌‌‌

    ReplyDelete
  5. சென்ற வாரம் தான் இதைப் பற்றி நினைத்தேன், தங்களின் கதை போகும் விதத்தில் அடுத்து அடுத்து என்ன என்ற எதிர்ப்பார்ப்பில் எங்களின் அமானுஷ்யனையே மறக்க செய்து விட்டீர்கள் என்று உங்களிடம் புகார் கூற இருந்தேன் மேலும் எப்பொழுது அவன் வருவான் என்று உங்களிடம் கேட்க நினைத்தேன் ஆனால் சற்று வேலை பழு காரணமாக கேட்க முடியவில்லை. இன்று அமானுஷ்யன் அத்தியாயம் ஆரம்பம் ஆனதும் இதை சொல்லிய தீர வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது.பொதுவாக நான் என் எண்ணங்களின் ஆற்றலை போற்றுவேன் , இப்பொழுது எண்ணங்களின் சக்தியை இன்னும் அதிகம் நம்புகிறேன்.

    ReplyDelete
  6. அமானுஷ்யன் நாவல் மலிவு விலை பதிப்பகம் இருக்கீறதா ? 500ரூ விலை எனக்கு கஷ்டம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் என்.கணேசன்அய்யா,அமானுஷ்யன்,பரம(ன்) ரகசியம்,புத்தம் சரணம் கச்சாமி,இரு வேறு உலகம் இந்த புத்தகங்கள் என்னிடம் உள்ளன.எல்லாவற்றையும் மூன்று முறைக்கு மேல் படித்து விட்டு பத்திரமாக வைத்துள்ளேன்.இந்த வாசகருக்கு படிப்பதற்கு தரலாம்.பிறகு நூல் நிலையத்திற்கோ அல்லது அவரிடமே இருக்கட்டும்.தங்களுக்கு அனுப்புகிறேன் அல்லது அவரது முகவரி தெரிந்தால் நேரடியாக அனுப்பி விடுகிறேன்.மிக்க நன்றி.
      -சரவணகுமார்
      skykumars@yahoo.com

      Delete
    2. நன்றி திரு.சரவணகுமார். Unknown வாசக நண்பர் திரு சரவணகுமார் அவர்களை அவர் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.

      Delete
  7. அப்பாடா.... இத்தனை எபிசொட்s கடந்து தான் அமானுஷ்யன் என்ற வார்த்தையே வருகிறது....
    அமானுஷ்யனும் கிரிஷும் சேர்ந்து படைக்கும் புதிய சகாப்தத்துக்கு இப்போவே எதிர்பார்ப்பு அதிகமாகிறது.

    ReplyDelete
  8. அமானுஷ்யன் வரவை எதிர் நோக்கிய
    எங்களுக்கு இந்த அத்தியாயம்!!!
    வாவ் சூப்பர் சார்

    ReplyDelete
  9. அமானுஷ்யனை வரவேற்க காத்திருக்கிறேன்!!!

    ReplyDelete
  10. wow... Amanushyan is back 👍💐

    ReplyDelete
  11. Wowwwww amanushyan is back.....same. krish oru episode dhan vanthan....krish amanushyan master Elam onna serntha viswam ah thukidalam .. awesome sir...

    ReplyDelete
  12. கலை, வலங்கைNovember 29, 2019 at 3:39 PM

    Sir, இலுமினாட்டி என்ற அமைப்பு உண்மையாகவே இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் இருந்தது உண்மை. இப்போது அது பல மடங்கு வலுவாகி எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போதும் இருக்கிறதா, அனைத்தையும் தீர்மானிக்கிறதா என்பது தெரியவில்லை.

      Delete
  13. Sir illumanti கதையில் krish"s master வருவாரா???? அந்த ஏலியன் வருமா ???? ஆவல் தாங்க முடியவில்லையே....

    ReplyDelete
  14. Interesting Amanushyan Entry...Vishwam and Amanushyan both are equal and opposite ultimate power..

    ReplyDelete
  15. januvaryla illuminatiy book vanthuduma

    ReplyDelete
    Replies
    1. வந்து விடும். சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

      Delete
  16. அமானுஷ்யன் பஞ்ச் டயலாக்
    "I'm Back !"

    ReplyDelete
  17. அமனுஷ்யன் வர போறார்...அப்படியே ஏலியனையும் வர வச்சுருங்க sir...

    ReplyDelete
  18. சென்னை புத்தகக் கண்காட்சி எப்போது,எங்கு ஆரம்பம்?

    ReplyDelete
  19. இன்னும் அறிவிக்கவில்லை.

    ReplyDelete