சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, November 1, 2019

போட்டித் தேர்வுகளில் வெல்வதெப்படி?




க்காலத்தில் போட்டித் தேர்வுகளில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைவது எளிதான காரியமல்ல. UPSC (IAS, IPS), CAT, IIT-JEE, GATE போன்ற தேர்வுகளில் இலட்சக்கணக்கானவர்கள் பங்கு கொண்டால் அதிகபட்சமாக சில நூறு பேர் மட்டுமே முடிவில் வெற்றி காண முடிகிறது. உதாரணத்திற்கு, கடந்த மூன்று வருடங்களாக ஐ..எஸ் தேர்வுக்கு சுமார் நாலரை லட்சத்திற்கும் மேல் முதல்நிலைத் தேர்வு எழுதுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களோ சுமார் ஆயிரம் பேர்கள் தான். அதாவது சுமார் நானூற்றி ஐம்பது பேரில் ஒருவர் தான் தெர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல் என்னவென்றால் தேர்வு எழுதுபவர்களில் பாதிக்கும் மேல் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மிக நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தவர்கள் என்பது தான். எல்லோரும் வெற்றியடைய வேண்டும் என்ற இலக்கோடு தேர்வு எழுதுபவர்கள் தான். அதில் பெரும்பாலானோர் நல்ல திறமையுடையவர்கள் தான்.  

இந்த அளவில் கடுமையான போட்டி இருக்கையில் அதில் வெகுசிலராக வெற்றியடைவது எப்படி என்ற கேள்வி எழுவது இயற்கை. இது போன்ற உயர்ந்த போட்டித் தேர்வுகள் எதுவானாலும் அதில்  வெற்றி பெறுவதற்கான அதிமுக்கிய ஏழு வழிகளை ஆராய்வோம்.

1.   தேர்வுமுறையை முழுமையாக அறிந்திருங்கள்:
ஒரு தேர்வு எழுதப் போகிறீர்கள் என்றால் பாடங்கள் என்ன, கேள்வித்தாள் என்ன மாதிரியில் அமைந்திருக்கும், மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை என்ன, ’நெகடிவ்மதிப்பெண்கள் இருக்கின்றனவா, தேர்வு எழுத தரப்படும் காலம் எவ்வளவு, பதில் அளிக்கும் முறைகளில் எதாவது நிபந்தனைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பெரியதும், சிறியதுமாகிய எல்லா விவரங்களும் குழப்பமில்லாதபடி தெளிவாக நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே குழப்பம் இருந்து தோற்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் இருந்து விடக்கூடாது.

2.   தெளிவான உறுதியான திட்டத்தோடு ஆரம்பியுங்கள்:
திட்டமிட்டு செயல்படாதவர்கள் சராசரியாகவே இருந்து விடுகிறார்கள். எந்த மேலான இலக்கிலும் தேவைப்படுபவை அனைத்தையும் ஒரு கால வரையறையோடு திட்டமிட்டுச் செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அந்தத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமாகவும் இருக்க வேண்டும். திட்டத்தில் வெற்றிக்குத் தேவையான எதுவுமே விடுபட்டிருக்கக் கூடாது. அந்தத் திட்டத்தில் படிக்க மட்டுமல்லாமல், படித்து முடித்து நினைவூட்டிக் கொள்ளவும், எதிர்பாராத தடங்கல்களுக்கும் கூட காலம் ஒதுக்கினால் மட்டுமே திட்டம் வெற்றிகரமான முழுமையான திட்டமாக இருக்க முடியும்.

உதாரணத்திற்கு படிக்க நான்கு பாடங்கள் இருக்கின்றன என்றும், தேர்வுக்கு ஆறு மாதங்கள் இருக்கின்றன என்றும் வைத்துக் கொள்வோம். நான்கு மாத காலங்களில் நான்கு பாடங்கள் முடிக்கின்றபடி திட்டமிட வேண்டும். படித்ததை நினைவூட்டிக் கொள்ள நான்கு வாரங்கள் ஒதுக்க வேண்டும். நமக்கோ, வீட்டில் உள்ளவர்களுக்கோ உடல்நிலை சரியில்லாமல் போவது, விருந்தாளிகள் வருவது, எதிர்பாராத நிகழ்வுகளுக்குச் செல்ல வேண்டி வருவது போன்றவற்றிற்கு பதினைந்து நாட்களும்,  மாதிரித் தேர்வுகள் எழுதப் பதினைந்து நாட்களும் ஒதுக்க வேண்டும். இப்படித் திட்டமிடுவது மட்டுமே அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வெற்றிகரமான திட்டமாக இருக்க முடியும்.

3.   முழுமுயற்சி கண்டிப்பாக வேண்டும்:
100 சதவீத முயற்சிகள், உழைப்பு இருந்தால் தான் இது போன்ற கடினமான தேர்வுகளில் வெற்றி தேடித்தரும். அப்படி இருக்கையில் 80 சதவீதம், 90 சதவீதம் முயற்சிகளும் உழைப்பும் இருந்தாலும் தோல்வி நிச்சயமே. பலர் இதைப் புரிந்து கொள்வதில்லை. ”நானும் கஷ்டப்பட்டுப் படிக்கிறேன்” என்று 80 சதவீதம் முயற்சி ஒரு வருடம் செய்வது, அடுத்த வருடம் 90 சதவீதம் முயற்சி செய்வது, அதற்கும் அடுத்த வருடம்  95  சதவீதம் முயற்சிகள் செய்வது கடைசியில் அதிர்ஷ்டமில்லை என்று தேர்வு எழுதுவதையே நிறுத்திக் கொள்வது என்று இந்த வகையில் தான் பலருடைய கடினமான உழைப்பு இருக்கிறது. இப்படி மூன்று வருடங்கள் 80+90+95=265 சதவீதம் மூன்று வருடங்கள் உழைப்பதை விட முதல் வருடமே 100 சதவீதம் முழுமையாகத் தந்து வெற்றி பெற்று விடுவது குறைந்த உழைப்பும் புத்திசாலித்தனமும் அல்லவா?

4.   பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுங்கள்:
ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் அதற்கேற்ற நிபுணர்களைக் கொண்டு பயிற்சி தரும் பயிற்சி மையங்கள் இப்போது பெருநகரங்கள் அனைத்திலும் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திற்கும் அதில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை வைத்து, சிறப்பான பாடத்திட்டங்கள் வைத்து பயிற்சி வகுப்புகள் அங்கே நடத்தப்படும்.  அங்கே சென்று தேர்வுக்கு முறையான பயிற்சிகள் எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணத்திற்கு ஐஏஎஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் சென்னையில் சிறந்த ஐஏஎஸ் அகாடமி யில் சேர்ந்து கொள்ளலாம்


5.   கால விரயக் காரணிகளைப் புறக்கணியுங்கள்:
தேர்வு எழுத வேண்டும் என்று தீர்மானித்தவுடனேயே முதலில் செய்ய வேண்டிய காரியம் டிவி, முகநூல், மொபைல், வாட்சப் போன்றவற்றிற்கு விடை கொடுத்து விட வேண்டும். அதையும் பார்த்து இது போன்ற தேர்வில் மிக நல்ல வெற்றியும் பெறுவேன் என்று சொல்கிறவர்கள் தங்களைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள். மெயில், மற்றும் முக்கியத் தகவல்கள் இருந்தால் பார்க்க மட்டும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாய் காலை ஒரு முறை, மதியம் ஒரு முறை, இரவு ஒரு முறை என்று மூன்று முறை பத்து, பத்து நிமிடங்கள் என அரை மணி நேரம் செலவழிக்கலாம். அதற்கு மேல் அதில் பொழுதைக் கழிப்பது தோல்விக்குப் போடும் அஸ்திவாரமாகவே இருக்கும்.

6.   உடல்நலத்தில் கவனமாய் இருங்கள்:
எந்த முயற்சியுமே வெற்றி பெறுவதற்கு பூரண உடல்நலம் வேண்டும். அதை அலட்சியப்படுத்தினால் வெற்றி கிடைக்க வழியில்லை. தேர்வு சமயத்தில் முழு சக்தியும், தெளிவும், வேகமும் நமக்கு அத்தியாவசியத் தேவை. அது உடல் நலம் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே நமக்குச் சாத்தியமாகும். அதனால் தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி முதலானவற்றில் ஈடுபடுவது மிக முக்கியம். சிலர் அந்த நேரங்களிலும் படித்து காலத்தை முழுவதுமாகப் பயன்படுத்துவதாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு அவர்கள் தரும் விலை வெற்றி வாய்ப்பைத் தவற விடுவதாகவே இருக்கும்.

மேலும் உண்ணும் உணவு வகைகளிலும் கவனமாயிருங்கள். சில உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எதிரானவையாக இருக்கும். அவற்றைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், கனிகள், கீரை வகைகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அளவுக்கு அதிகமாக உண்பது தூக்கத்தையும் சோம்பலையும் வரவழைக்கும் என்பதால் அதையும் தவிர்க்க வேண்டும்.

7.   உற்சாகத்தைத் தினமும் புதுப்பித்துக் கொள்ளுங்கள்:
மனம் எல்லா நாட்களிலும் ஒரே போல் இருப்பதில்லை. ஒரு நாள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கும் மனம் இன்னொரு நாள் எதிலும் ஆர்வமில்லாமல் படிப்பதற்கு மறுக்கும். அது மனதின் இயல்பான சுபாவம். அது போன்ற நாட்களுக்கும் நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளைப் பார்ப்போம் -


·         தினமும் தன்னம்பிக்கை நூல்களையும், கட்டுரைகளையும் படிப்பதும், இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் பெறும் சிறப்புகள் என்ன என்று யோசித்துப் பார்ப்பதும், தோல்வி அடைந்தால் எப்படி இருக்க நேரிடும் என்று நினைத்துப் பார்ப்பதும் நம் சோம்பலையும் ஆர்வமின்மையையும் போக்க உதவும்.

·         அந்தத் தேர்வு எழுதத் தீவிரமாகப் படிக்கும் நண்பர்களுடன் கூட்டாகப் படிப்பதும் உற்சாக மனநிலையை மீட்டுத் தரும்.

·         ஒரேயடியாக அதிக பட்சமாய் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் படிப்பது உற்சாகத்தை வடித்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் இரண்டு மணி நேரம் படித்தால் சுமார் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள்   ஓய்வு இடைவெளி கொடுங்கள். பின் படிப்பதைத் தொடருங்கள்.

·         முன்பே வெற்றி பெற்றவர்களின் வெற்றிக் கதைகளையும் அவர்களது  ஆலோசனைகளையும் கேளுங்கள். அவை உங்களுக்கு உற்சாகத்தைத் தருவதோடு நல்ல ஆலோசனைகளையும் தரும்.

·         ஒரு கஷ்டமான பாடத்தைப் படித்து முடித்தவுடனேயே இன்னொரு கஷ்டமான பாடத்தைப் படிக்க ஆரம்பித்து விடாதீர்கள். அது சோர்வைத் தந்து விடும். இடையில் வேறு பாடத்தைப் படித்து சிறிது நேரம் கழித்தோ, மறுநாளோ அடுத்த கஷ்டமான பாடத்தைப் படித்தால் உற்சாகத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாம்.

எதற்கும் ஒரு விலை உண்டு. வெற்றிக்கு ஆசைப்படுபவர்கள் அதற்கான விலையைத் தராமல் வெற்றி பெற்று விட முடியாது. விருப்பப்பட்ட நேரங்களில் சிறு நடைகள் நடந்து யாரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட முடியாது. திட்டமிட்ட சீரான, தொடர்ச்சியான அறிவார்ந்த முயற்சிகள் மற்றும் உழைப்பு இருந்தால் மட்டுமே பலத்த போட்டிகளில் நாம் வெற்றி அடைய முடியும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 


என்.கணேசன்

9 comments:

  1. Nice and crisp write up covering all necessary factors.

    ReplyDelete
  2. அரவிந்த் சுவாமிநாதன்November 2, 2019 at 9:17 AM

    இளைஞர்களுக்கு மிக அருமையாக வழிகாட்டுகிறது இந்தக் கட்டுரை. இது போல் மேலும் பல கட்டுரைகள் தரவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. அருமையான வழிகாட்டல், நன்றி ஐயா...

    ReplyDelete
  4. மிகவும் அருமை. வாழ்க்கையில் வெல்லவும் வழிகாட்டிகிறது

    ReplyDelete
  5. Sir, I practiced whatever you said for six months and wrote a bank exam. I was selected for a public sector bank. Thanks for your guidance.

    ReplyDelete
  6. The blog is really good. Thank you so much for this valuable information about IAS exam . If you have any plan of joining Upsc Coaching In Bangalore make it fast and start your preparation.

    ReplyDelete
  7. Thank You for sharing this informatiom. I really Like your content. Choose the best academy for your studies.
    best ias academy in chennai.

    ReplyDelete