சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 14, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 107


 க்‌ஷய் அதிகாலையில் வாசற்கதவைத் திறந்த போது ஒரு காகித உறை படியில் கிடந்தது. அக்‌ஷய் எடுத்து அந்த உறையைப் பிரித்தான். உள்ளே தட்டச்சு செய்யப்பட்டிருந்த ஒரு கடிதம் இருந்தது.

“நீங்களோ, உங்கள் மகனோ எங்களுக்கு எதிரிகள் அல்ல. உங்கள் மகனுக்கு எதாவது தீங்கு விளைவித்து நாங்கள் எந்த லாபமும் அடையப்போவதும் இல்லை. அதனால் நீங்கள் முட்டாள்தனமாக எதாவது செய்யாமல் இருக்கும் வரை உங்கள் மகனுக்கு எந்தக் கெடுதலும் வராது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் மகன் நிச்சயமாக சில நாட்கள் கழித்து பத்திரமாக உங்கள் வீடு வந்து சேர்வான். உங்கள் மகனையோ, மற்றவனையோ கண்டுபிடிப்பதற்காக ஏதாவது சாகசம் புரிய நீங்கள் நினைத்தால் உங்கள் சாகசத்தில் நீங்கள் வெற்றி பெறவும் கூடும். ஆனால் அழைத்துக் கொண்டு போக கண்டிப்பாக உங்கள் மகன் உயிரோடு இருக்க மாட்டான். இது வெறும் மிரட்டல் அல்ல என்பது உங்கள் உள்மனதிற்குத் தெரியும் என்று நம்புகிறோம்.”

அந்தக் கடிதத்தில் கையெழுத்தில்லை. அக்‌ஷய் படித்து முடித்து விட்டு அதை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தான். நேற்று தான் கராச்சியில் எடுக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தில் மகன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து சஹானா சிறிது நிம்மதி அடைந்திருக்கிறாள். அந்த நிம்மதியைக் குலைக்க அவன் விரும்பவில்லை.



லாஸாவுக்குப் போகும் தனிவிமானத்தில் அமர்வதற்கு முன்பே சேகர் பற்றிய தகவல் தேவுக்கு வந்து சேர்ந்தது. “முட்டாள்.... படுமுட்டாள்” என்று மனதினுள் தேவ் சேகரைத் திட்டினான். வேலை முடிந்தவுடன் அந்தப் பகுதியிலேயே தங்காமல் தூரமாகப் போய் விடும்படி அவன் முன்பே தெரிவித்திருக்கிறான். வருணை விடுவித்து விடும்படி ஒரு ஆள் மூலம் தெரிவித்த போதும் சீக்கிரம் ஊரை விட்டே போய் விடும்படி மறுபடி சொல்லி இருக்கிறான். அப்படிச் சொல்லியும் சேகர் கேட்கவில்லை. அல்பன்.... முட்டாள்.... மூர்க்கன்..... அவன் மூலம் இன்னேரம் தன்னைப் பற்றியும் அக்‌ஷயும், உளவுத்துறையும் அறிந்திருப்பார்கள் என்பதில் தேவுக்கு சந்தேகமில்லை. அந்த முட்டாளை வேலைக்கு எடுத்துக் கொண்டதற்காக தேவ் நிஜமாகவே வருத்தப்பட்டான்.

விமானத்தில் செல்லும் போது கௌதமின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் முதலில் கப்பலில் பிரயாணம் செய்தாகி விட்டது. இப்போது விமானத்திலும் பயணம் செய்கிறான். நண்பன் மைத்ரேயன் சொன்னது போல எல்லாவற்றிலும் ஏதோ நல்லது இருக்கத்தான் செய்கிறது.....

லாஸா விமான நிலையத்தில் லீ க்யாங் அவர்களுக்காகக் காத்திருந்தான். மைத்ரேயன் விமானத்தில் அமைதியாக இறங்குவதைப் பார்த்தான். பின்னாலே அமானுஷ்யனின் மகன் விரிந்த கண்களுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே இறங்குவதைப் பார்த்தான். அவர்களுக்கும் பின்னால் தேவ் இறங்கினான். லீ க்யாங்கின் கண்கள் மறுபடியும் மைத்ரேயனையே கூர்ந்து கவனித்தன. இப்படிப் பல முறை விமானங்களில் பயணித்திருந்தவன் போல அவன் பரபரப்பில்லாமல் இருந்தான். பின்னால் வந்த சிறுவனின் ஆச்சரியமோ, பரவசமோ, புதிய இடம் என்கிற தயக்கமோ எதுவும் இல்லாமல் அவன் இருந்தது லீ க்யாங்குக்கு மைத்ரேயனின் முதல் நேரடி அறிமுகமாக இருந்தது.

லீ க்யாங் தன் அருகே இருந்த ஒரு அதிகாரியின் காதில் ஏதோ சொல்லி விட்டு விமான நிலையத்தில் இருந்த தனியறைக்குப் போய் விட்டான். அந்த அதிகாரி சிறுவர்கள் இருவரையும் அந்த தனியறையின் வெளி இருக்கைகளில் அமர வைத்து விட்டு தேவை அறைக்குள் அனுப்பி வைத்தான்.

அறையில் லீ க்யாங் ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருப்பதை தேவ் கண்டான். தேவைப் பார்த்தவுடன் “வாழ்த்துக்கள் தேவ்” என்று லீ க்யாங் சொன்னபடி எதிர் நாற்காலியில் உட்காரக் கைகாட்டினான்.

உட்கார்ந்தபடியே “நன்றி சார்” என்றான் தேவ்.

“பிரயாணம் எப்படி இருந்தது?”

”நன்றாக இருந்தது சார்”

”பையன்கள் பிரச்னை எதுவும் செய்யவில்லையே?” கேட்டு விட்டு லீ க்யாங் தேவை கூர்மையாகப் பார்த்தான்.

எல்லாவற்றையும் இன்னேரம் லீ க்யாங் அறிந்திருப்பான் என்று தேவுக்குத் தெரியும். தேவ் புன்னகையுடன் சொன்னான். “இது வரை எந்தக் கடத்தல்காரனுக்கும் இப்படிப்பட்ட ஒத்துழைப்பு கிடைத்திருக்காது சார்.”

லீ க்யாங் முகத்தில் கேள்விக்குறி எழுந்தது. தேவ் சொன்னான். “கப்பலுக்கு வந்த பிறகு மயக்கமருந்து பயன்படுத்த வேண்டியிருக்கவில்லை. மைத்ரேயன் மயக்க மருந்து வேண்டாம், நாங்கள் தப்பிக்க முயற்சி செய்ய மாட்டோம். சமர்த்தாய் நீங்கள் சொல்கிறபடி கேட்கிறோம் என்றான். அப்படியே இருந்தான். அமானுஷ்யனின் பையனையும் அப்படியே இருக்க வைத்தான். அவர்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் பிரச்னை இருக்கவில்லை....”

சொல்லி விட்டு தேவ் லீ க்யாங்கின் எதிர்வினை என்ன என்று பார்த்தான். லீ க்யாங் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை....

“மைத்ரேயனிடம் ஏதாவது பிரத்யேக சக்தி இருப்பதாக நினைக்கிறாயா?” என்று லீ க்யாங் கேட்டான்.

“அவன் அப்படி பிரத்யேக சக்தி எதுவும் காட்டவில்லை” என்று தேவ் சொன்னான். லீ க்யாங் இந்த தகவல்களுக்கு விலை பேசி இருக்கவில்லை. அதனால் சொல்லத் தேவை இல்லை என்று தேவ் அபிப்பிராயப்பட்டான். அவன் அந்த கூடுதல் தகவல்களுக்கு இன்னொரு இடத்தில் முன்பே விலைபேசி விட்டிருந்தான்....

லீ க்யாங் அதற்கு மேல் அதுபற்றிக் கேட்கவில்லை. “உன் பணத்தை உன் கணக்கில் போட ஐந்து நிமிடங்களுக்கு முன் சொல்லி இருக்கிறேன்.... இன்னேரம் வரவு வந்திருக்கும்....”

தேவின் அலைபேசியில் அதற்கான தகவல் அப்போது வந்து சேர்ந்தது. அலைபேசியை எடுத்து அந்தக் குறுந்தகவலைப் படித்துப் பார்த்து தேவ் “வந்து விட்டது. நன்றி சார்” என்றான்.

தலையசைத்த லீ க்யாங் கேட்டான். “திரும்பவும் இந்தியா போகிறாயா?”

தேவ் சிரித்து விட்டான். “எனக்கென்ன பைத்தியமா? அமானுஷ்யனின் பையன் வீடு போய் சேரும் வரை இந்தியா அல்ல ஆசியாவிலேயே இருக்க மாட்டேன். இங்கிருந்து நேராக அமெரிக்கா தான் போகிறேன்.... உங்களுக்கு மைத்ரேயனின் புகைப்படம் அனுப்பி எனக்கும் உதவி செய்தவன் இப்போது மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் பிணம் மாதிரி தான் இருக்கிறான் என்ற செய்தி வந்தது.”

”அவன் முட்டாள்” என்ற லீ க்யாங் முகத்தில் இகழ்ச்சி படர்ந்தது. “வேலை வேலையாகத் தான் இருக்க வேண்டும். தனி விருப்பு வெறுப்புகளை எல்லாம் இது போன்ற வேலையில் சேர்த்துக் கொண்டால் இப்படித் தான் முடியும்...”

தேவ் தலையாட்டி ஆமோதித்தான். சில வினாடிகள் கழித்து மெல்ல எழுந்தான். “நான் கிளம்பட்டுமா?”

லீ க்யாங் தலையசைத்தான். தேவ் அங்கிருந்து வெளியேறினான். வெளியேறியவன் இரண்டு சிறுவர்களையும் கடந்து சில அடிகள் தாண்டியபிறகு திரும்பி இருவரையும் பார்த்து கையசைத்தான். இருவரும் கையசைத்தார்கள். தேவ் போய் விட்டான்.

கௌதம் மெல்ல மைத்ரேயனைக் கேட்டான். “என்ன அந்த ஆள் நம்மை விட்டு விட்டே போய் விட்டார்....”

மைத்ரேயன் சொன்னான். “அவர் வேலை முடிந்து விட்டது.”

“அப்படியானால் இங்கிருந்து நாம் எங்கே போவது?”

“அதை வேறு ஆட்கள் முடிவு செய்வார்கள்...”

கௌதமுக்குக் குழப்பமாய் இருந்தது. ஆனால் நண்பன் மைத்ரேயன் கூட இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைத்தவனாக பேசாமல் விமான நிலையத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு ஆள் வந்து மைத்ரேயனை மட்டும் அறைக்குள் அனுப்பினான்.

மைத்ரேயனையே கூர்ந்து பார்த்தபடி லீ க்யாங் அமர்ந்திருந்தான். மைத்ரேயன் அவனையே பார்த்தபடி அருகில் சென்றான். லீ க்யாங் உட்காரச் சொல்லவில்லை. மைத்ரேயன் உட்கார முயற்சிக்கவும் இல்லை. நிறைய நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

லீ க்யாங்கின் பார்வையை முழுமையாக சந்திக்க முடிந்தவர்கள் குறைவு. மைத்ரேயன் பயம் சிறிதும் இல்லாமல் பார்வையை விலக்காமல் பார்த்ததை லீ க்யாங் ரசிக்கவில்லை.

லீ க்யாங் கடுமையான குரலில் கேட்டான். “நான் யார் என்று தெரியுமா?”

மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “தெரியாது”

“நீ எப்போது எங்கே எப்படிச் சாக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவன் நான். புரிகிறதா?” கடுமை குறையாமல் லீ க்யாங் கேட்டான். இந்தச் சிறுவனுக்குப் பயத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவன் நினைத்தான்.

“புரிகிறது. உங்களை ஒன்று கேட்கலாமா?” மைத்ரேயன் தயக்கமில்லாமல் அமைதியாகக் கேட்டான்.

“கேள்”

“நீங்கள் எப்போது எங்கே எப்படிச் சாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களால் தீர்மானிக்க முடியுமா?”

மேலேயிருந்து செங்கல் ஒன்று தலையில் நச்சென்று விழுந்தது போல் அதிர்ச்சியை லீ க்யாங் உணர்ந்தான்.

மைத்ரேயனின் குரலில் கேலியோ, எகத்தாளமோ லேசாகத் தெரிந்திருந்தாலும் லீ க்யாங் அவனைக் கோபத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்திருப்பான். ஆனால் ஒரு முக்கிய கேள்விக்குப் பதில் அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே மைத்ரேயனிடம் தெரிந்தது.

லீ க்யாங் பதில் சொல்லாமல் போகவே மைத்ரேயன் அன்பாகக் கேட்டான். “அடுத்தவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதை விட அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதல்லவா ஒருவருக்கு சிறப்பு?”


(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

9 comments:

  1. “அடுத்தவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதை விட அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதல்லவா ஒருவருக்கு சிறப்பு?”
    Really amazed....

    ReplyDelete
  2. MITHREYAN'S QUESTION AND ANSWER - SIMPLY SUPERB

    ReplyDelete
  3. எஸ்.பாண்டியன்July 14, 2016 at 8:18 PM

    என்னமா எழுதறீங்க சார். பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  4. சரோஜினிJuly 14, 2016 at 8:49 PM

    அன்பு கணேசன், உங்கள் நாவலை நேற்று படித்து முடித்தேன். அசத்தலான க்ளைமேக்ஸ். பரமன் ரகசியத்தில் முடிவை ஊகிக்க முடியாதது போலவே இதிலும் முடிவை கடைசி வரை ஊகிக்க முடியவில்லை. அருமையிலும் அருமை. நிதானமாக இன்னொரு முறை ஆரம்பத்தில் இருந்து படிக்க உத்தேசம். ஆனால் புத்தகம் மற்றவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. பாவின் ஊடே நெய்யப்பட்ட நூலால் துணி உருவாகி எப்படி அழகான ஆடையாக அழகுசெய்கிறதோ அதுமாதிரியே தங்கள் பதிவின் ஊடே தாங்கள் அளிக்கும் வாழ்க்கையின் நடைமுறை உண்மைகளும்
    யதார்த்தமும் மிகவும் இயல்பாக பொருந்தி அழகு செய்கிறது.படிப்பவர்களுக்கு மன நிறைவையும் தங்களின் மீதான மதிப்பை அது உயர்த்துவதாகவும் அமைகிறது.

    ReplyDelete
  6. NOW IM FAN OF MITHRAYAN

    ReplyDelete
  7. every week padikkumbodhum appadi oru satisfaction ganeshan sir.. simply super

    ReplyDelete
  8. Your writing is wonderful. Gives a great experience and feel as if i am viewing the scenes of the story from my eyes. Thanks.

    ReplyDelete