சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 11, 2016

சுட்டெரிப்பது எதற்காக?


ரு இளைஞன் ஒரு வெள்ளிக்கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான். அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்கவும் ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கு அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான்.

அதையே பார்த்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது.  அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன.

இதை எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும்?இளைஞன் கேட்டான்.

இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும். வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும்என்று அதிலிருந்து பார்வையை எடுக்காமல் கொல்லன் சொன்னான்.

ஓ இந்த வேலையில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதாஎன்று எண்ணிய அந்த இளைஞனுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்தது. “அது சுத்தமாகி விட்டது, சூடு செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?

எப்போது என் முகம் தெளிவாக வெள்ளியில் பிரதிபலிக்கிறதோ அப்போது வெள்ளி முழுமையாகத் தூய்மையாகி விட்டது என்று தெரிந்து விடும். உடனடியாக நிறுத்தி விடுவேன்என்றான் கொல்லன்.

இறைவனாகிய கொல்லனிடம் நம் வாழ்க்கையை மிக அழகான நிலைமைக்கு மாற்றச் சொல்லி நாம் ஒப்படைக்கிறோம்.  நம் வாழ்வின் பொருளே அது தான். இந்த உலகில் நாம் ஜென்மம் எடுப்பதே ஒரு உயர்வான நிலைக்கு மாறத் தான். வந்த படியே உலகில் இருந்து விடை பெற்றால் அப்படிப்பட்ட வாழ்வில் என்ன அர்த்தம் இருக்கிறது?

ஆனால் எந்தப் பெரிய மாற்றமும் சுகமானதல்ல. சுலபமானதும் அல்ல.  இறைவன் நம் வாழ்க்கையை அழகானதொரு ஆபரணமாக்கி ஒளிரச் செய்ய சுட்டெரிக்க வேண்டி இருக்கிறது. வாழ்க்கையின் சூடு நம்மிடமுள்ள தவறுகளையும், குறைகளையும் போக்குவதற்காகவே. எத்தனையோ குறைகளையும் பாவங்களையும் நம்மிடம்  ஜென்ம ஜென்மங்களாக நாம் சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறோம். அவற்றை எல்லாம் போக்கிக் கொள்ளாமல் நம்மால் ஜொலிக்கும் ஆபரணமாக மாற முடியாது.

இன்று ஒரு நிலைமையில் இருக்கின்றோம் என்றால் இதற்கான அத்தனை முயற்சிகளையும், அத்தனை வேலைகளையும் அறிந்தோ அறியாமலோ நாம் முன்பே செய்திருக்கிறோம் என்று பொருள். காரணமில்லாமல் காரியமில்லை. இதிலிருந்து மாற வேண்டுமென்றால், மேலானதொரு நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால், இந்த நிலைமைக்கு நம்மைக் கொண்டு வந்த காரணங்களை முதலில் நீக்க வேண்டும். நாம் விரும்பும் புதிய நிலைமைக்கு ஒவ்வாத விஷயங்கள் நம்மிடம் இருக்குமானால் அவற்றைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

சேர்த்து வைத்திருக்கும் குற்றங்களையும் குறைபாடுகலையும் போக்குவது சுகமான விஷயம் அல்ல. அவை நம்மில் ஒரு பகுதியாகவே மாறி விட்டிருக்கும் போது நம்மை வருத்தாமல் அவற்றைக் களைய முடியாது. நம்மில் பெரும்பாலானோரிடம் உள்ள மிகப் பெரிய அறியாமை இந்த யதார்த்த உண்மையை உணராமல் இருப்பதே.

நாம் நம்மை எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ளாமல் நம்மை உயர்ந்த நிலைக்கு இறைவன் மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சிறிது சிறிதாக, காலம் காலமாக, ஜென்ம ஜென்மங்களாக சேர்த்து வைத்துக் கொண்டவற்றை நாம் நோகாமல் இறைவன் ஒரே கணத்தில் நீக்கி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். உயர்ந்த மாறுதலுக்கு ஆசைப்படும் நாம் அதே நேரத்தில் அந்த மாறுதலுக்குத் தேவையான சஞ்சரிப்பில் சலித்துக் கொள்கிறோம். இதில் நம் ஆசையும், நம் எதிர்பார்ப்பும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே அல்லவா இருக்கிறது?

ஆனால் இறைவனாகிய கொல்லன் அனைத்தும் அறிந்தவன். நம் வேண்டுகோளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு நன்றாகத் தெரியும். சுட்டெரிக்காமல் எந்த உலோகத்தையும் ஆபரணமாக்க முடியாது என்பதை நன்கு அறிவான். அவன் சுட்டெரிப்பது நம்மை தண்டிப்பதற்காக அல்ல. அவன் சுட்டெரிப்பது நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே.

மேலும் இறைவன் எப்பொழுதும் கவனக் குறைவாக இருப்பதில்லை. நாம் தூய்மையாகி இறைவனை நம்மில் பிரதிபலிக்கும் வரை சுட்டெரிப்பவன் தொடர்ந்து அதற்கு மேலும் சுட்டெரித்து நாம் அழிந்து போக எக்காலத்திலும் அனுமதிப்பதில்லை. பக்குவப்பட்டு தூய்மையாகி அவனை நம்மில் நாம் பிரதிபலிக்க ஆரம்பித்தவுடன் நாம் விரும்பிய மாற்றத்திற்கு ஏற்றபடி நம்மை உருவகப்படுத்த ஆரம்பித்து விடுகிறான். எனவே இந்த சோதனைகளிலும், கஷ்டங்களிலும் நாம் அழிந்து போய் விடுவோமோ என்ற அச்சம் நமக்குத் தேவையே இல்லை.

இதையே அல்லவா திருவள்ளுவரும் ஒரு குறளில் அழகாகச் சொல்கிறார்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
(நெருப்பிலே இட்டுச் சுடச் சுடத் தங்கம் ஒளி விடுவது போல துன்பம் வருத்த வருத்த தவம் செய்பவரின் மெய்யறிவு மிகும்)

எனவே வாழ்க்கையின் வெப்பம் தாளாமல் வருத்தப்படும் போதெல்லாம் இந்த உவமையை நீங்கள் நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கணமும் நம் வாழ்க்கை இறைவன் கண்காணிப்பில் இருக்கிறது. இந்த வெப்பம் நம் வாழ்க்கையை அழிப்பதற்காக அல்ல, ஒரு அழகான ஆபரணமாக்குவதற்காகத் தான். இது புரியும் போது வெப்பத்தில் சுருண்டு விட மாட்டோம். நாம் ஆபரணமாகிக் கொண்டிருக்கிறோம் என்று புரிதலுடனும், நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக் கொள்வோம்.

-       -   என்.கணேசன்


6 comments:

  1. தம்மிடம் இருக்கும் குறைகளை நியாயம் எனக்கருதுவதாலேயே பலரும் தங்களின் உண்மை நிலையை உள்ளபடி உணர்வதில்லை. எதிர்பார்ப்புகளை அதிகம் வளர்த்துக்கொள்வதாலும் யதார்த்த நிலையை உணராததாலும் கஷ்டம்
    வந்த நேரம் வருந்துகிறார்கள்.
    அருமையான பதிவு நன்றி
    விபுலானந்தன்

    ReplyDelete
  2. Nanri Ganeshan sir,
    Miga Arumaiyana padhivu...

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  4. உண்மை. எனக்கும் அப்படி ஒரு அனுபவம் கிடைத்தது.

    ReplyDelete