சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 7, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 106


ராச்சி சென்று சேர்வதற்குள் மாலுமிகளும், சிறுவர்கள் இருவரும் மிக நெருக்கமாகி விட்டிருந்தனர். பொதுவாக சரக்குக் கப்பலில் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் அவர்கள் வேலை சுவாரசியமானதல்ல. மந்தகதியில் நகரும் காலத்தை ஓட்டுவது இன்னொரு துறைமுகத்தைச் சேரும் வரை அவர்களுக்கு கஷ்டமாகவே இருக்கும். ஆனால் இந்த சிறுவர்களின் வரவு அவர்களுக்கு காலத்தை மறக்க வைத்தது.


கப்பலில் இரண்டு சிறுவர்கள் கடத்தப்படுவார்கள், அந்த ரகசியத்தை எங்கேயும் எந்தக் காரணத்தைக் கொண்டும் கசிய விடக்கூடாது, கசிய விட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அடைத்து வைக்கப்படும் அந்தச் சிறுவர்களைக் கண்டும் காணாதது போல் இருந்து விட வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால் சிறுவர்கள் எந்தப் பிரச்னையும் செய்யாமல் இருந்த போது, கப்பலில் இருந்து அவர்கள் தப்பிக்கவும் முடியாது என்ற நிலை இருந்த போது அவர்களை அடைத்து வைப்பதில் அர்த்தமில்லை என்றே தேவ் வெளியே விட்டான். அப்படி வெளியே வந்து விளையாடிய அந்தச் சிறுவர்களின் உற்சாகம் அந்த மாலுமிகளையும் தொற்றிக் கொண்டது.


தொடர்ந்த இரண்டு நாட்களும் என்னென்னவோ விளையாட்டுகளைக் கண்டுபிடித்து விளையாடினார்கள். தூரத்தில் வேறு ஏதாவது படகோ, கப்பலோ வரும் போது மட்டும் தேவ் சிறுவர்கள் கப்பலின் மேல் தளத்தில் இல்லாமல் பார்த்துக் கொண்டான். தூரத்தில் இருந்து பைனாகுலரில் பார்த்தாலும் சிறுவர்கள் தெரிவதை அவன் விரும்பவில்லை. மற்றபடி சுதந்திரமாகச் சிறுவர்களை விட்டு, அவர்களைக் கண்காணிப்பதில் மட்டும் அலட்சியம் செய்யாமல் இருந்தான்.


செஸ் விளையாட்டு மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது விளையாடப்பட்டது. தேவ் அதில் ஆர்வம் கொண்டவன் என்பதால் பெரும்பாலும் ஆட்டத்தைக் கவனித்தான். மைத்ரேயன் ஒரு ஆட்டத்தை தான் வென்றால் மறு ஆட்டத்தை அந்த மாலுமியை ஜெயிக்க வைத்தான். அதற்காக வேண்டும் என்றே சில தவறுகள் செய்கிறான் என்பதை தேவால் கண்டுபிடிக்க முடிந்தது. வெல்வது கூட கௌதமுக்காக, அவனுடைய உற்சாகத்துக்காக அவன் செய்வது போல இருந்தது. அதனால் ஒரு முறை வெற்றி ஆர்ப்பாட்டம் கௌதமுடையதாகவும், இன்னொரு முறை மாலுமிகளுடையதாகவும் தினம் இருந்தது. இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்ளாத மைத்ரேயன் முகத்தில் அந்த நேரங்களில் புன்னகை மட்டுமே பூத்திருக்கும்...


இரவு நேரமும் அதிகாலை நேரமும் மைத்ரேயனின் தியானம் தவறாமல் நடந்தது. ஒவ்வொரு நளையும் தியானத்தில் ஆரம்பித்து தியானத்தில் முடிப்பது அவன் தவறாத வழக்கமாக இருந்தது. இரவு நேரங்களில் தூங்கப் போகும் முன் கௌதம் வீட்டு நினைவு வந்து வாட்டத்துடன் இருப்பான். கப்பலில் கடைசி நாள் இரவு “என் அம்மா நான் அங்கே இல்லை என்று அழுது கொண்டிருப்பார்களா?” என்று கௌதம் மைத்ரேயனிடம் கேட்டான்.

மைத்ரேயன் சொன்னான். “வருத்தப்படுவார்கள். ஆனால் உன் அப்பா எப்படியாவது உன்னைக் காப்பாற்றி விடுவார் என்பது தெரியும். அதனால் சிறிது தைரியமாகவும் இருப்பார்கள்

கௌதம் சிறிது நேரம் கழித்துக் கேட்டான். “என் அப்பா காப்பாற்ற எப்போது வருவார்

“அவர் எப்போது வருவதானாலும் வரட்டும். அது வரை நாம் ஜாலியாக இருப்போம். நம்மைக் கடத்தி இருக்கவில்லை என்றால் நம்மால் இப்படி கப்பலில் எல்லாம் வந்து ஆடி இருக்க முடியுமா? எல்லாவற்றிலும் ஒரு நல்லது இருக்கும். அந்த நல்லதை நாம் முழுவதுமாய் பயன்படுத்திக் கொள்வோம்...

“சரிஎன்று சொன்ன கௌதமுக்கு மைத்ரேயன் சொல்வது  புத்திசாலித்தனமாகவே பட்டது. பின் சீக்கிரமே உறங்கி விட்டான்.

சிறிது நேரம் கழித்து மைத்ரேயன் தேவிடம் கேட்டான். “நாம் கப்பலின் மேல் தளத்திற்குப் போய் சிறிது நேரம் இருப்போமா? இரவு நேரத்தில் சமுத்திரம் பிரத்தியேக அழகு...

தேவ் தயங்கினான். தனியாக இந்த இரவில் அவனை கப்பலின் மேல் தளத்திற்கு அழைத்துப் போவது உசிதம் தானா என்று எண்ணினான். மைத்ரேயன் சொன்னான். “நான் கண்டிப்பாக தப்பிக்கவோ கடலில் குதித்து விடவோ மாட்டேன்....

தேவ் அவனுடன் கடலின் மேல் தளத்திற்குப் போனான். இரவு நேர சமுத்திரம் அன்று நிலவொளியில் தனி அழகுடன் இருந்தது. காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள். அவனைத் தூரத்தில் தனியாக விட தேவ் விரும்பவில்லை. மைத்ரேயன் அமைதியாக அந்த சமுத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தேவும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். சிறிது சிறிதாக பேரமைதியை தேவின் மனம் உணர ஆரம்பித்தது.  மனம் மிக லேசானது. பார்க்கும் எல்லாமே தனி அழகுடன் மின்னியது. ஆகாய நட்சத்திரங்கள், நிலா, சமுத்திரம், தூரத்தில் தெரிந்த ஒரு கப்பலின் விளக்குகள்... சின்னச் சின்ன சத்தங்களும் சங்கீதமாயின.... காலம் மறந்து தேவ் நிறைய நேரம் அமர்ந்திருந்தான்.

“போகலாமாஎன்று மைத்ரேயன் கேட்ட போது தான் நிகழ்காலத்துக்கு தேவ் வந்தான். இருவரும் அறையை நோக்கி நடந்தனர். தேவ் தன் வாழ்நாளில் இப்படியொரு அற்புதமான அனுபவத்தை அனுபவித்திருந்ததில்லை. கோடிக்கணக்கில் சம்பாதிப்பவன் என்பதால் செலவையும் அவன் தாராளமாகவே செய்பவன். உலகத்தில் பல இடங்களுக்குப் போயிருக்கிறான். பணத்தை நீராக இறைத்து பல வித களிப்புகளைப் பெற்றிருக்கிறான். ஆனால் இது போன்றதொரு அமைதியையும், அழகையும் அவன் எங்குமே உணர்ந்து அனுபவித்தது இல்லை. 
    
நிறைந்த மனதுடன் மைத்ரேயனிடம் அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “நன்றிஎன்றான்.

மைத்ரேயன் புன்னகைத்தான்.


று நாள் மதியம் கப்பல் கராச்சி துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் இருந்து சிறுவர்கள் இறங்கிய போது மாலுமிகள் பிரியாவிடை அளித்தார்கள். செஸ் ஆடிய மாலுமி மைத்ரேயனிடம் சொன்னான். “நீ மிக நன்றாய் செஸ் விளையாடுகிறாய். இந்த வயதிலேயே இப்படி ஆடுகிறவன் இன்னும் பயிற்சி செய்தால் கண்டிப்பாக சர்வதேச போட்டிகளில் கூடக் கலந்து கொள்ளலாம்.

சொன்ன பிறகு தான் இந்தச் சிறுவன் கடத்தப்பட்டவன், இவனை அவர்கள் என்ன செய்வார்கள், இவன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே தெரியாதே, இவனிடம் போய் இதைச் சொல்கிறோமே என்று அவனுக்கு உறைத்தது.... மைத்ரேயன் அவனைப் பார்த்து புன்னகைத்தான். இறங்கும் சிறுவர்களைப் பார்த்து மாலுமிகள் கையசைத்தார்கள். சிறுவர்களும் கையசைத்துக் கொண்டே போனார்கள். கடைசியில் கையசைப்பில் அந்தக் கேப்டனும் கலந்து கொண்டது தேவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்தக் காட்சியை இரு மனிதர்கள் தனித்தனியாக ரகசியமாய் புகைப்படம் எடுத்தார்கள். 

கராச்சி துறைமுகத்தில் ஒரு அதிகாரி தேவை வரவேற்றார். சிறுவர்கள் மயக்க மருந்து தரப்பட்டு மயக்கமாய் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தள்ளுவண்டி தயாராக இருந்தது. சிறுவர்கள் நடந்து வருவதைப் பார்த்து கண்களை விரித்த அவர் வெளியே தயாராக நிற்க வைக்கப்பட்டிருந்த கார் வரை அழைத்துச் சென்றார். தேவ் சிறுவர்களுடன் அமர்ந்து கொள்ள கார் அங்கிருந்து நேராக கராச்சி விமான நிலையத்திற்குச் சென்றது. கராச்சியில் தயாராக இருந்த ஒரு தனி விமானம் அவர்களை லாஸாவுக்கு அழைத்துச் சென்றது. அவர்களுக்காக லாஸா விமான நிலையத்தில் லீ க்யாங் காத்திருந்தான்.


கராச்சி துறைமுகத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களில் ஒன்று இந்திய உளவுத்துறைக்கு அனுப்பப்பட்டது. இன்னொன்று மாராவுக்கு அனுப்பப்பட்டது.    
  

க்‌ஷய் கையில் அந்தப் புகைப்படம் கிடைத்த போது அவனுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. படத்தைப் பெரிதாக்கி மிக உன்னிப்பாகப் பார்த்தான். அவன் மகனும், மைத்ரேயனும் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்கள். மைத்ரேயன் முகத்தில் வழக்கமான அமைதி, கௌதம் முகத்தில் மகிழ்ச்சி, கப்பல் மேல்தளத்தில் கையசைத்துக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஆத்மார்த்த அன்பு, நிறைந்திருந்தது... அவர்களுடைய குடும்பக்குழந்தைகளை வழியனுப்புவது போல் இருந்தது.
அவனிடம் அந்தப் புகைப்படத்தைத் தந்த உளவுத்துறை அதிகாரி சொன்னார். “இந்தப் படத்தைப் பார்த்தால் பையன்கள் கடத்தப்பட்ட மாதிரியே இல்லை. நாம் தான் அவர்களைச் சுற்றுலாப் பயணத்திற்கு அனுப்பி வைத்த மாதிரியும் அவர்கள் தங்கள் பயணத்தை சந்தோஷமாக அனுபவிக்கிற மாதிரியும் இருக்கிறது

மகன் அழாமல் சந்தோஷமாய் தான் இருக்கிறான் என்பதை அறிந்த அக்‌ஷய் கண்கள் நிம்மதியுடன் ஈரமாயின. அவன் ஆசானிடம் சொன்னான். “காரணம் மைத்ரேயனாகத் தான் இருக்க வேண்டும்

ஆசான் அந்தப் படத்தில் மைத்ரேயனின் முகத்தில் தெரிந்த நிறைந்த அமைதியைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த அமைதியைப் பார்த்து திருப்தி அடைய முடியவில்லை. அந்த அமைதிக்கு ஆபத்தில்லை என்று அர்த்தமல்ல என்பதை அவர் அறிவார்......

அந்த அதிகாரி வந்திருந்த அடுத்த தகவலைச் சொன்னார் கராச்சியில் இருந்து லாஸா போகிறார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. லீ க்யாங் முன்பே அங்கு போய் விட்டான் என்று பீஜிங்கில் இருந்தும் நமக்குத் தகவல் வந்திருக்கிறது....

ஆசான் முகத்தில் கவலை படர்ந்தது.

(தொடரும்)
என்.கணேசன்
 
(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

7 comments:

  1. Your portrayal of characters amazes me sir. you make even villain like Dev likable.

    ReplyDelete
  2. வரதராஜன்July 7, 2016 at 4:30 PM

    எல்லாவற்றிலும் ஒரு நல்லது இருக்கும் என்று மைத்ரேயன் மூலம் சொல்லும் நீங்கள் கட்டுரைகளில் மட்டுமல்ல, கதைகளிலும் நல்ல மெசேஜ் சொல்கிறீர்கள். வாழ்க உங்கள் தொண்டு.

    ReplyDelete
  3. வணக்கம் சார். கண் முன் பாத்திரங்கள் உலவுகிறார்கள், நாமும் அவர்களுடன் தான் உள்ளது போல் ஓர் எண்ணம்.Super Sir.என்ன ஓர் நடை .sirஎங்களை உங்கள் எழுத்தால் கட்டி போடுகிறீர்கள் / அருமை

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் என் கணேசன் N அவர்களே!

    ReplyDelete
  5. விஜய பாஸ்கர்July 9, 2016 at 4:14 AM

    பசங்களோடு நாங்களும் அந்த கப்பல்ல இருந்தோம். மாலுமிகளோடு நாங்களும் மைத்ரேயனை வியந்தோம். லீ க்யாங் பசங்களை என்ன செய்ய போகிறானோ என்று ஆசானோடு நாங்களும் பயப்படுகிறோம். அருமை உங்களோடு செய்யும் இந்த பரபரப்பு பயணம்.

    ReplyDelete
  6. Today I have completed my second attempt to gain something from paraman ragashiyam. It had also inspired my uncle and he demanded that book,,I had left it at home for him. After 2 years, it gives a new meaning in its word's. Thanks for the wonderful experience I had from this book. Thank you sir:-)))

    ReplyDelete