சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 25, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 51



க்‌ஷய் பயந்தது போல் டார்ச் வெளிச்சம் அவர்கள் இருந்த பக்கம் உடனடியாக நகரவில்லை.  டார்ச்சை வைத்திருந்தவன் திடீரென்று தன் சகாவிடம் கேட்டான். “யார் அவன்?

“எவன்?

“நாம் தேடுபவன்...

“ஏதோ தீவிரவாதி என்று சொன்னார்கள்

“அப்படியானால் அந்தப் பையன்?

“தெரியவில்லை. இரண்டு பேரும் முக்கியமானவர்களாகத் தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் லீ க்யாங்கின் வலது கையான வாங் சாவொ இங்கு வரை நேரடியாக வந்திருக்க மாட்டான்

ஏதோ யோசனையுடன் டார்ச்சை கீழ் இறக்கியவன் அறையின் மறுபக்கம் வரை டார்ச் விளக்கை ஒளிர விட்டுக் கொண்டே வந்தான். அவனுடைய சகாவும் அவனைப் பின் தொடர்ந்தான். துப்பாக்கியை இருவரும் தயார் நிலையிலேயே வைத்திருந்தார்கள். இப்போது இருவரும் நேரடியாக அக்‌ஷய்க்கு கீழே நின்றிருந்தார்கள்.  டார்ச் விளக்கு மட்டும் நான்கு பக்கமும் சுழன்றது. டார்ச் விளக்கை வைத்திருந்தவன் ஏதோ யோசனையுடன் டார்ச்சை மறுபடி ஒருமுறை மேலே திருப்ப யத்தனிக்கையில் வெளியே வராந்தாவில் தடால் என்று சத்தம் கேட்டது.

இருவரும் அடுத்த கணம் வராந்தாவில் இருந்தார்கள். அங்கே புத்த பிக்குவின் பிரதான சீடன் கை நிறைய எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்திருந்த புத்தகங்களைக் கீழே போட்டு விட்டு நின்றிருந்தான். அவர்கள் இருவரும் துப்பாக்கியை நீட்டிய போது கைகளை மேலே உயர்த்தி விட்டு பேந்தப் பேந்த முழித்தான். “என்னைச் சுட்டு விடாதீர்கள்.... சுட்டு விடாதீர்கள்

அவனையும் கீழே விழுந்திருந்த புத்தகங்களையும் இருவரும் மாறி மாறி பார்த்தார்கள். ஒருவன் கேட்டான். “என்ன இது?

சீடன் நடுநடுங்கிக் கொண்டே “புத்....தகங்கள்என்றான்.

“அது தெரிகிறது. ஏன் கீழே போட்டாய்?

“கை... தவறி .....விழுந்து விட்டன  

அவர்கள் அவனை முறைத்து விட்டு பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் டார்ச் வைத்திருந்தவன் மறுபடி அறைக்குள் நுழையத் திரும்பினான். ஆனால் அவன் சகா அவன் தோளைத் தொட்டு நிறுத்தினான். “எல்லாம் தான் பார்த்தாகி விட்டது. திரும்பப் பார்க்க என்ன இருக்கிறது?

அவன் ஒரு கணம் யோசித்தான். பின் தலையசைத்து விட்டு அறையைப் பூட்டி விட்டு அவன் சகாவுடன் கிளம்பி விட்டான்.   

அவர்கள் வருவதைப் பார்த்த புத்தபிக்குவுக்கு மாரடைப்பே வந்து விடும் போல இருந்தது. அவர்கள் வாங் சாவொவிடம் சாவியை நீட்டினார்கள்.

வாங் சாவொ கேட்டான். “அறைக்குள் நன்றாகத் தேடினீர்கள் அல்லவா? அவர்கள் இல்லையே

“இல்லை

புத்த பிக்குவுக்குத் தன் காதுகள் பழுதாகி விட்டனவோ என்ற சந்தேகம் வந்தது. திகைப்புடன் அவர்களையே பார்த்தார். வாங் சாவொ சாவியை வாங்கி விட்டுத் தலையசைக்க அவர்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள். வாங் சாவொ சாவியை புத்த பிக்குவிடம் வீசினான். அந்த இருவர் தான் மைத்ரேயனும், அவனுடைய பாதுகாவலனும் கிடைக்கவில்லை என்று அவனிடம் தெரிவித்த கடைசி ஆட்கள். இந்தக் கால் மணி நேரத்திற்குள் மற்றவர்களும் வந்து தெரிவித்து விட்டுப் போயிருந்தார்கள். சம்யே பிரதான மடாலயத்திற்குள் இருவரும் இல்லை.....! பின்னால் இருக்கும் அரைகுறை கட்டிடங்களுக்குள் மறைந்திருக்கலாம்..... இல்லை என்றால் முன்பே இங்கிருந்து போயுமிருக்கலாம்.....

வாங் சாவொவின் உள்ளுணர்வில் ஏதோ ஒரு நெருடல் வந்து தங்கியது. கண்களை மூடிக் கொண்டு சிறிது யோசித்தான்.  உள்ளே நுழைகையில் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி ஏதோ சொல்ல முயன்றவன் நினைவுக்கு வந்தான். அந்த முட்டாள் கோங்காங் மண்டபத்தில் துஷ்ட சக்தியால் தாக்கப்பட்டவன் என்று அவனைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் சொன்னதும் நினைவுக்கு வந்தது. அதற்கும் மைத்ரேயனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை தான். ஆனாலும் அந்த சம்பவத்தில் ஏதோ ஒன்று நெருடியது.

திடீரென்று வாங் சாவொ எழுந்தான். “கோங்காங் மண்டபத்தை நான் பார்க்க விரும்புகிறேன்என்றான்.

புத்தபிக்கு உடனே அவனைக் கூட்டிக் கொண்டு போனார். வாங் சாவொ அந்த மண்டபத்தில் இருந்த துஷ்டசக்தி சிலைகளை சந்தேகக்கண்களோடு பார்த்தான். அவை வெறும் சிலைகள் தானா இல்லை அதனுள்ளே அல்லது அதன் பின்னால் யாராவது ஒளிந்து கொண்டிருக்கக்கூடுமா என்றெல்லாம் அவன் சந்தேகப்பட்டது தெரிந்தது.

“சிலைகளைத் தொடாதீர்கள்என்றிருந்த அறிவிப்புப் பலகையை லட்சியம் செய்யாமல் இரண்டு சிலைகளைத் தொட்டும் ஆட்டியும் பார்த்து வெறும் சிலைகள் தான் அவை என்பதை அவன் உறுதி செய்து கொண்டான்.  பின் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து மெல்ல வெளியேறினான்.



றைக்கதவு பூட்டப்பட்டவுடனே கீழே இறங்கி விடாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டுப் பின் அக்‌ஷய் மைத்ரேயனைப் பிடித்துக் கொண்டே கீழே குதித்தான். இப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. மயிரிழையில் ஆபத்தில் இருந்து தப்பித்தது பேராச்சரியமே. அவன் மைத்ரேயனைப் பார்த்துப் புன்னகைக்க மைத்ரேயனும் புன்னகைத்தான். அக்‌ஷய்க்கு மைத்ரேயனைப் பார்த்து மீண்டும் ஒரு முறை பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

மரப்பலகையில் மைத்ரேயனைப் பிடித்துக் கொண்டு அவன் படுத்திருந்த போது அவனுடைய ஒரு கை அந்தச் சிறுவனின் நெஞ்சில் தான் இருந்தது. அதனால் மைத்ரேயனுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பையும் அவன் கை உணர்ந்து கொண்டு தான் இருந்தது. அவர்கள் மரப்பலகையில் ஏறிய கணத்தில் இருந்து அங்கிருந்து இறங்கி விட்ட இந்தக் கணம் வரை அந்த இதயத்துடிப்பு ஒரே சீராகத் தான் இருந்தது.

முதல் முறை அந்தத் துப்பாக்கி வீரன் டார்ச் விளக்கை அறையின் முன்பக்கத்தில் மேலே காட்டிய போதும் சரி அவர்களுக்கு நேர் கீழே அந்த துப்பாக்கி வீரர்கள் நின்று கொண்டிருந்த போதும் சரி அக்‌ஷய் இதயம் மாரத்தான் ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் அமைதி இழக்காதவன் என்று பெயரெடுத்தவன் அக்‌ஷய். ஆனால் அந்த அமைதி கட்டுப்பாட்டினால் வரும் அமைதி. பதட்டம், படபடப்பு அனைத்தும் ஏற்பட்டாலும், அதைக் கட்டுப்படுத்தி ஏற்படுத்திக் கொள்ளும் அமைதி. ஆனால் இந்தச் சிறுவனின் அமைதி இயல்பானது. பதட்டம், பரபரப்பு என்று எதையுமே அவன் உணரவேயில்லை என்பதை அவனுடைய சீரான இதயத்துடிப்பே பறைசாற்றி விட்டிருக்கிறது.  

அக்‌ஷய் ஒரு பெருமூச்சு விட்டு கட்டிலில் அமர்ந்தான். மைத்ரேயன் வந்து அவன் அருகே ஒட்டி அமர்ந்து கொண்டான். இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் புத்தபிக்குவும் அவரது சீடனும் வராந்தாவில் பேசிக் கொள்வது கேட்டது. அதன் பின் புத்தபிக்கு கதவைத் திறந்து கொண்டு சீடனுடன் உள்ளே வந்தார்.

அவர் கண்களில் பக்திப்பரவசம். பேரானந்தத்துடன் குரல் தழுதழுக்கச் சொன்னார். “மைத்ரேயரே அவர்களிடம் சிக்காமல் இருந்து பெரும் அற்புதத்தை நிகழ்த்தி விட்டீர்கள்

மைத்ரேயன் உடனடியாக எந்த ஒளிவு மறைவுமில்லாமல் அக்‌ஷயைக் காட்டிச் சொன்னான். “நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லாம் இவர் தான்.....

புத்தபிக்கு அக்‌ஷயைப் பார்த்துக் கைகூப்பினார். “உங்களுக்கு நாங்கள் நிறையவே கடன்பட்டிருக்கிறோம் அன்பரே...... நீங்கள் எப்படித் தப்பித்தீர்கள்?

அக்‌ஷய் சுருக்கமாகச் சொன்னான். பின் சொன்னான். “கடைசியில் காப்பாற்றியது உங்கள் சீடன் தான்...

சீடன் அக்‌ஷயையும் மைத்ரேயனையும் பார்த்து கைகூப்பினான். மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்த புத்தபிக்கு பிறகு வருத்தத்துடன் அக்‌ஷயிடம் சொன்னார். அவர்கள் உங்கள் இருவரின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருக்கிறார்கள் அன்பரே

அக்‌ஷய் அவரிடம் மெல்லக் கேட்டான். “என்னுடைய எந்தப் புகைப்படம் அவர்களிடம் இருக்கிறது?

தாங்கள் இப்போதிருக்கும் கோலம் தான் அன்பரே

அக்‌ஷய் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சிறிது மௌனம் சாதித்து விட்டுக் கேட்டான். “மைத்ரேயனின் புகைப்படம்?

“அவர் அதில் பள்ளிச் சீருடையில் இருக்கிறார் அன்பரே”

அவனுடைய திட்டத்தையும், உண்மையான மைத்ரேயன் யார் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்பது அக்‌ஷய்க்கு உறுதியாகியது. எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது விளங்கவில்லை. ஆனால் இனி பழைய பாஸ்போர்ட்டுடன் திபெத்தை விட்டுத் தப்பித்தல் இயலாத காரியம் என்பது மட்டும் சந்தேகத்திற்கிடமில்லாமல் விளங்கியது....!



வாங் சாவொ லீ க்யாங்கைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தான். சம்யே மடாலயத்தில் மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் கிடைக்காமல் இருந்தது அவனுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது. சம்யே மடாலயத்தின் பின்பக்கப் பரந்த வெளியிலும் அவர்கள் கிடைக்கவில்லை... சம்யே மடாலயத்தில் இருந்து அவர்கள் கிளம்பி எங்கேயோ போயிருந்திருக்க வேண்டும்.... இதைத் தன் தலைவனிடம் சொல்லப் போவதில் அவன் சிறிது அவமானத்தை உணர்ந்தான். தொடர்பு கொள்ள முயன்ற போதெல்லாம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருடனான ஒரு சந்திப்பில் லீ க்யாங் இருக்கிறான் என்ற தகவல் தான் அலுவலகத்தில் இருந்து அவனுக்குக் கிடைத்து வந்தது.

ஆறாவது முயற்சியின் போது லீ க்யாங் பேசக் கிடைத்தான். வாங் சாவொ மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் சம்யே மடாலயப்பகுதியில் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்கிற தகவலை வருத்தத்துடன் தெரிவித்தான்.  பின் தொடர்ந்து சொன்னான். “சம்யே மடாலயம் நோக்கி அவர்கள் இருவரும் ஒரு ஜீப்பில் வந்ததைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சம்யே மடாலயத்திலிருந்து அவர்கள் போனதை யாரும் பார்த்தவர்கள் இல்லை. ஒரு வேளை அவர்கள் அங்கிருந்து கிளம்பி இருட்டில் போயிருக்கலாம். அதனால் அவர்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்திருக்கலாம்.....

லீ க்யாங் அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டாலும் தன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

சம்யே மடாலயத்தில் கண்சிமிட்டி மனிதனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் மெல்ல அவனிடம் வாங் சாவொ தெரிவித்தான். ”....அந்த கோங்காங் மண்டபமும் போய் பார்த்தேன். ஆனால் அங்கே பயங்கரமான சிலைகள் இருந்ததே ஒழிய சந்தேகப்படும்படியாக வேறு எதுவும் இருக்கவில்லை...... அந்த ஆளுக்கும் மைத்ரேயனுக்கும் சம்பந்தம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவன் நடவடிக்கை விசித்திரமாய் பட்டதால் உங்களுக்குத் தெரிவித்தேன்....

வாங் சாவொ சொன்னதை மனதில் அசை போட்ட லீ க்யாங் உஷாரானான். சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “நீ மருத்துவர் என்று அந்த ஆள் நினைக்க ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா?

“இல்லை.... என் கூட இருந்தவர்களும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள்..... அப்படி இருக்கையில் அந்த ஆள் அப்படி நினைக்க வாய்ப்பே இல்லை

பின் ஏன் நீ மருத்துவர் என்று நினைத்து அவன் குணப்படுத்த உதவச் சொல்வதாய் அந்த பிக்கு சொல்கிறார். மேலும் நீ சொல்வதைப் பார்த்தால் அவனை ஆம்புலன்ஸில் ஏற்றத் தான் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குப் போய்க்கொண்டிருக்கிறவன் வழியில் கிடைக்கும் எவனோ ஒருவனிடம் தன்னைக் குணப்படுத்தச் சொல்வானா?

வாங் சாவொவுக்கு லீ க்யாங்கின் வாதம் சரியாகவே பட்டது. இது தன் சிற்றறிவுக்கு எட்டவில்லையே என்று அவன் தன் மேலேயே கோபம் கொண்டான். பின் ஏன் அந்த புத்தபிக்கு அப்படிச் சொன்னார்? உண்மையில் அந்த கண்சிமிட்டி மனிதன் சொல்ல வந்ததென்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அறிவது முக்கியம் என்று வாங் சாவொ உணர ஆரம்பித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்


7 comments:

  1. Thursday brings joy and thrill because of your novel. I wait eagerly till 5.45 and each minute I visit your blog for reading your update. That much interest you created sir. Very interesting and beautiful.

    ReplyDelete
  2. அர்ஜுன்June 25, 2015 at 7:08 PM

    லீ க்யாங்கின் புத்திசாலித்தனம் சூப்பர். அடுத்த வியாழனுக்காக வெய்ட்டிங்

    ReplyDelete
  3. வணக்கம் சார்,

    பரமன் ரகசியத்திலிருந்து தொடர்ந்து படித்து கொண்டிருக்கிறேன்.அமானுஷ்யனையும் பின்னர் படித்தேன்.

    போன பதிவிலிருந்து இந்த பதிவு வரை திக் திக் தான்.

    மிகவும் விறுவிறுப்பாகவும் நிறைய தகவல்களுடனும் கதை அருமையாக நகர்கிறது.

    நன்றி .

    ReplyDelete
  4. Dear Sir, if it possible can you update weekly twice Plz.... suspense thanga mudiyala...

    ReplyDelete
  5. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்திருக்கிறேன்...
    வாசிக்கிறேன் ஐயா...

    ReplyDelete