சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 13, 2024

யோகி 49

 

மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்த சுகுமாரன் மின்னல் வேகத்தில் ஓடி வாசற்கதவைத் திறந்து வெளியே வந்து அவசரமாய் கதவைச் சாத்தி தாளிட்டார்

 

தடாலென்று முன் வாசற்கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டு கூர்க்கா எழுந்து நின்று கேட் கம்பிகளுக்கு மேல் தலையை நீட்டிப் பார்த்தான். அவன் முதலாளியும் நாய் குரைக்கும் சத்தம் தாங்காமல் கோபமாய் கதவைத் திறந்து வெளியே வந்திருப்பார் என்று நினைத்தான். ஆனால் அவன் பார்த்த காட்சியோ அவனை ஆச்சரியமூட்டியது. அவன் முதலாளி கையில் ஒரு சிலுவையை வைத்துக் கொண்டு, மூச்சு வாங்கியபடி கதவில் சாய்ந்து நின்றது வேடிக்கையாகவும் இருந்தது. சற்று முன் பார்க்கையில் நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்த ஆள் இப்போது திருநீறை அழித்து விட்டு கையில் சிலுவையுடன் இந்த நடுநிசி நேரத்தில் இப்படி நிற்பது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் அவர் ஆன்மீகவாதி அல்ல... ஒருவேளை எதையாவது பார்த்து பயந்து தான் இப்படியெல்லாம் செய்கிறாரோ? அவர் பயப்படுவதற்குத் தகுந்த மாதிரி தான் இங்கே என்ன என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது. டாமி விடாமல் குரைப்பதும், ஒரு காவித் துணி, தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்ததும் அமானுஷ்யமாகத் தான் இருக்கிறது. இல்லை, முதலாளிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ? 

 

மூச்சு வாங்க, கண்களை மூடி, வாசற்கதவில் சாய்ந்து நின்ற சுகுமாரன் ஓரளவு நிதானத்துக்கு வந்து கண்களைத் திறந்த போது, கூர்க்கா அவரையே பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அவன் வினோதமாகப் பார்ப்பதைக் கவனித்த பிறகு தான் அவர் இன்னமும் தன் கையில் சிலுவையைப் பிடித்து நிற்பதை உணர்ந்தார். அவன் என்ன நினைத்திருப்பானோ? யோசிக்கையில் அவருக்கு அவமானமாக இருந்தது. மருத்துவமனையிலும் சரி, வீட்டிலும் சரி,  வேலைக்காரர்கள் முன் கம்பீரமாக இருந்து பழகிய அவருக்கு, இப்போது இப்படி கதிகலங்கி காட்சியளிக்க வேண்டிய நிலைமை வந்ததைத் தாங்க முடியவில்லை.    

 

டாமி இப்போதும் கதவைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. அவருக்குத் தலைவலி அதிகமாகியது. வயிற்றில் எரிச்சல் உணர்வும் அதிகமாகியது. காதில் கேட்டுக் கொண்டிருந்த ரீங்காரத்தின் நிலைமை என்ன என்பது, டாமி குரைக்கும் சத்தத்தில் தெரியவில்லை. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்த அவருக்கு அந்த வீட்டில் இருப்பது இப்போதைக்குப் பாதுகாப்பல்ல என்று தோன்றியது.   கையிலிருந்த சிலுவையை நழுவவிட்டு, வேகமாகச் சென்று காரில் ஏறினார். உடை மாற்றி இருக்காததால், நல்ல வேளையாக அவருடைய கார் சாவி இப்போதும் பாக்கெட்டிலேயே இருந்தது.

 

அவர் காரில் ஏறியதைப் பார்த்து கூர்க்கா அவருக்குப் பைத்தியம் முற்றி விட்டதோ என்று பயப்பட்டான். இந்த நேரத்தில் இவர் எங்கே போகிறார், இந்த நாயை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பது என்ற கவலைகள் அவன் மனதில் எழுந்தன. அவசர அவசரமாக கேட்டைத் திறந்தான். நல்ல வேளையாக நாயும் அவரைப் பின் தொடர்ந்து காரில் ஏறி உட்கார்ந்து கொண்டது. சுகுமாரன் வேகமாகக் காரைக் கிளப்பினார்.

 

நாய் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி வீட்டைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருக்க, கார் வெளியேறியது. சுகுமாரன் தாங்க முடியாமல் நொந்து போய் டாமியிடம் சொன்னார். “டேய் நிறுத்துடா. தலை வலிக்குதுடா”. டாமி கருணை காட்டி அமைதியாகி அவரைப் பரிதாபமாகப் பார்த்தது.

 

நடப்பது எதுவும் புரியா விட்டாலும் டாமியின் சத்தத்திலிருந்து விடுபட்டதில் நிம்மதி அடைந்தவனாய் கூர்க்கா கேட்டைச் சாத்தினான். ’போகும் ஆள் எப்போது திரும்பி வருவார் என்று தெரியவில்லை. அவர் வரும் வரை தூங்கவும் முடியாது. ஒட்டு மொத்தத்தில் இன்றைக்கு நேரம் சரியில்லை.’

 

ங்களது வீதியைக் கடந்தபின் சுகுமாரனுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. ஒரு ஆவிக்குப் பயந்து வீட்டை விட்டு நடுநிசியில் வெளியே வருவது அவமானமாகத் தான் இருந்தது. ’நியாயமாக அந்த ஆவி யோகாலயத்திற்கு அல்லவா போயிருக்க வேண்டும். என் வீட்டுக்கு வந்து ஏன் இம்சை செய்கிறது? டாக்டர் வாசுதேவன் ஆவி வந்திருந்தாலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது...’ 

 

காரை ஒரு தெருவில் நிறுத்திய சுகுமாரன் இனி அடுத்ததாய் என்ன செய்வது என்று யோசித்தார். நேற்று வரை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத துர்ப்பாக்கிய நிலை இன்று வந்து விட்டதே என்று மனம் நொந்தார். உடம்புக்கு எதாவது பிரச்சினை வந்தால் நடுநிசியானாலும், போய்ச் சரிசெய்து கொள்வதற்கு ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. ஆனால் ஆவிகளால் பிரச்சினை இப்படி நள்ளிரவில் வந்தால் எங்கே போவது, என்ன செய்வது? போவதென்றால் யோகாலயத்துக்குத் தான் போக வேண்டும். என்ன செய்வதென்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். அவர்களுக்காவது தெரிகிறதோ, இல்லையோ? அங்கே கூட இந்த நள்ளிரவில் பயந்து போய் நிற்பது அவமானமாய்த் தெரிய, அதிகாலையில் அங்கு போய்க் கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்து, காரிலேயே களைப்புடன் கண்மூடினார்.

 

யாரோ கார்க்கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டு சுகுமாரன் கண்விழித்தார். தட்டியது ஒரு போலீஸ்காரர். டாமியும் கண்விழித்து அந்தப் போலீஸ்காரரைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தான். இடது கையால் அவனைத் தட்டிக் கொடுத்து சாந்தப்படுத்தியபடி, சுகுமாரன் போலீஸ்காரரை, ‘என்ன?’ என்பது போல் பார்த்தார்.

 

ஏன் இங்கே காரை நிறுத்தித் தூங்கறீங்க? என்ன பிரச்சினை?”

 

சுகுமாரனுக்கு ஆத்திரம் வந்தது. ’மனிதன் எங்கேயாவது காரை நிறுத்தி உறங்கவும் நாட்டில்  சுதந்திரம் இல்லையா? பிரச்சினையைச் சொன்னால் இந்தப் போலீஸ்காரன் வீட்டுக்கு வந்து ஆவியைப் பிடித்துக் கொண்டு போவானா? ஏனடா ஏற்கெனவே பிரச்சினையில் இருக்கும் மனிதனை நீங்களும் சித்திரவதை செய்கிறீர்கள்?’

 

ஆனால் அப்படி வாய்விட்டுக் கேட்க வழியில்லை. கண்டவனெல்லாம் வந்து விசாரிக்கும் நிலை வந்து விட்டதே என்று மனதிற்குள் புலம்பினாலும், சுதாரித்துக் கொண்டு சொன்னார். ”ட்ரைவிங் பண்ணிட்டு இருந்தப்ப ரொம்ப தூக்கம் வந்துச்சு. வண்டி ஓட்டறதும் சிரமமாய் இருந்துச்சு. அதான்...”

 

அந்தப் போலீஸ்காரர் அவரையே லேசான சந்தேகத்துடன் பார்த்து நின்றார். சுகுமாரனுக்குக் கோபம் வந்தது. ஒன்றும் பேசாமல் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து அந்தப் போலீஸ்காரரிடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்த போலீஸ்காரர் ஒரு சல்யூட் அடித்து விட்டு நகர்ந்தார். ஆனால் சுகுமாரனுக்கு அதற்கும் மேல் அங்கே இருப்பது உசிதமாகப் படவில்லை. எரிச்சலுடன் கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் 3.25 என்று காட்டியது.  விடிவதற்கு முன்பு வீட்டுக்குப் போக அவர் விரும்பவில்லை. இனி இன்னொரு தெருவுக்குப் போய் காரை நிறுத்தி விட்டுத் தூங்க அவருக்கு, தன்மானம் இடம் தரவில்லை.

 

அவர் இப்படி வீட்டில் இருக்க முடியாமல் இரவு முதல் காரில் நகர்வலம் வந்து கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் நிம்மதியாக ஏ.சி ரூமில் படுத்துக் கொண்டிருப்பது என்ன நியாயம் என்று தோன்றியது. இனி நேரம் காலம் பார்ப்பதில் அர்த்தமில்லை. அவர் கைபேசியை எடுத்து ஒரு எண்ணை அழைத்தார். ஏழு முறை அடித்த பின் தான் மறுபக்கத்தில் கைபேசி எடுக்கப்பட்டது. தூக்கக் கலக்கத்தில் ஒரு குரல் கேட்டது. “ஹலோ

 

நான் டாக்டர் சுகுமாரன் பேசறேன்.”

 

தெரிஞ்சுது. டாக்டர் இப்ப நேரம் என்ன தெரியுமா?” ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டதன் எரிச்சல் வெளிப்பட்டது.

 

தெரியல. ஆனா நேரம் சரியில்லைன்னு மட்டும் தெரியுதுஎன்று சுகுமாரன் தானும் எரிச்சலுடன் சொன்னார்.

 

என்ன ஆச்சு? நீங்க எதுக்கும் அசர்ற ஆளில்லையே.”

 

சில சமயங்கள்ல எப்படிப்பட்டவனையும் அசர வைக்கிற மாதிரி சம்பவங்கள் நடந்துடுது…”

 

என்ன ஆச்சு?”

 

போன்ல பேச முடியாது. நேர்ல தான் சொல்ல முடியும்.”

 

சரி. அப்படின்னா பத்து மணிக்கு வாங்களேன்.”

 

சுகுமாரனுக்குக் கோபம் வந்தது. ”அது வரைக்கும் நான் என்ன பண்றது? இப்ப நான் வீட்டுல இல்லை. ரோட்டுல இருக்கேன். நான் இப்பவே அங்கே வர்றேன். யோகிஜி இருக்காரா?”

 

இல்லை. அவர் மதுரை போயிருக்கார்.”

 

பரவாயில்லை. நீங்க இருக்கீங்கல்லயா? உங்க கேட்கீப்பர் கிட்ட நான் வர்றதை முதல்லயே சொல்லி வைங்க. அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்

 

(தொடரும்)

என்.கணேசன்





2 comments:

  1. Episodes are very short sir. Could have little more content please.

    ReplyDelete
  2. கடந்த சில அத்தியாயங்களில் சுகுமாரன் பயப்படும் சம்பவங்களே இடம்பெற்றுள்ளன.... முக்கிய நிகழ்வுகள் ஏதும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது....

    ReplyDelete