சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 6, 2024

யோகி 48

 னித உணர்ச்சிகளில் பயம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது எப்படிப்பட்ட அறிவாளியையும், தைரியசாலியையும் கூடச் செயலிழக்க வைக்கும். பாதி எரிந்திருந்த அந்தக் காவித்துணியைப் பார்க்கையில் சுகுமாரனுக்குள் இதுவரை அறிந்திராத ஒரு அமானுஷ்ய பயம் பரவ ஆரம்பித்தது. சைத்ராவின் உருவம் கூர்க்காவின் கண்களுக்குத் தெரியவில்லை. அது அவரும் டாமியும் மட்டுமே பார்க்க முடிந்ததாய் இருந்தது. ஆனால் காவித்துணி அமானுஷ்யமாய் அவருடைய தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்ததை அவனும் பார்த்து ஓடி வந்து அணைத்து அதை எடுத்து விரித்தும் காட்டுகிறான். அதனால் இப்போது நடப்பது அவரது பிரமையோ, அவருக்கும், டாமிக்கும் மட்டுமே தெரியும் காட்சியோ அல்ல.

 

மிகவும் கஷ்டப்பட்டு பயத்தை வெளிக்காட்டாமல் கூர்க்காவிடம் கேட்டார். “நீ வெளியாள் யாரையாவது இங்கே பார்த்தாயா?”

 

கூர்க்கா குழப்பத்துடன் சொன்னான். “இல்லையே சார்.  நீங்க உள்ளே வந்தவுடனே மூடின கேட்டை இப்ப தான் நானே திறக்கிறேன்.”

 

அப்படின்னா வெளில இருந்து யாராவது இந்தத் துணிக்குத் தீ வெச்சு தூக்கி எறிஞ்சிருப்பாங்களா?”

 

கூர்க்கா குழப்பத்துடன் யோசித்தான். அவன் கண்ணயர்ந்திருந்த போது யாராவது அதைச் செய்திருக்கலாம். அவன் கண்விழித்த போது ஒரு பைக், கடந்து சென்றதை உணர்ந்தது அவனுடைய நினைவுக்கு வந்தது.  ஆனால் யார் இந்த முட்டாள்தனத்தைச் செய்வார்கள்? இதில் அவர்களுக்கு என்ன லாபம்? மேலும், பைக்கில் போகிறவன் அப்படித் தூக்கி எறிந்து விட்டுப் போயிருக்கலாம் என்ற அனுமானத்தைச் சொன்னால், அப்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய், உனக்குத் தூங்குவதற்கா சம்பளம் தருகிறேன் என்ற கேள்விகள் எல்லாம் எழும். எனவே அவன் உறுதியான குரலில் சொன்னான். “இல்லை சார். அப்படி எதுவும் நடக்கலையே?”

 

அப்படின்னா இந்தத் துணி எப்படி இங்கே வந்துச்சு? யார் இதைக் கொளுத்தினாங்க?”

 

தெரியலயே சார். ஒட்டு மொத்தமாய் இன்னைக்கு நேரமே சரியில்லைன்னு நினைக்கறேன். டாமியும் பத்து மணில இருந்தே குரைக்குது....”

 

ஒன்றும் சொல்லாமல் சுகுமாரன் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தார். டாமியும் உடன் இருக்கிறது, கூர்க்காவும் இருக்கிறான். இப்போது சைத்ராவின் ஆவி தெரியவும் இல்லை. உள்ளே ஒரு மூலையில் சிறு பயம் இருந்தாலும் வீட்டைச் சுற்றி வந்து, யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் அவருக்குச் சற்று பயம் தெளிந்தது.  ஒருவேளை அந்தக் காவித்துணி எரிந்த போது, ஆவியும் எரிந்து போய் விட்டிருக்கலாம் என்று நினைத்த போது அவருக்கு நிம்மதி ஏற்பட்டது. எல்லாம் அந்த ஹோம சாம்பலை நெற்றியில் பூசிக் கொண்டதன் விளைவா?  மூட நம்பிக்கை என்று உடனடியாகத் தோன்றினாலும் இல்லவே இல்லை என்று சொல்லவும் அவருக்கு முடியவில்லை. ஆனாலும் இந்தக் காவித்துணி எப்படி இங்கு வந்தது? தானாக எப்படி எரிந்தது? என்ற கேள்விகள் அவர் மனதைக் குடைய ஆரம்பித்தன.

 

கூர்க்காவும் அவர் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு பக்திப்பழமாய் இருப்பதை அப்போது தான் கவனித்தான். அவன் அங்கே வேலையில் சேர்ந்து பத்து வருடங்கள் முடியப் போகின்றன. ஒரு முறை கூட முதலாளி இப்படி திருநீறு பூசிக் கொண்டதை அவன் பார்த்திருக்கவில்லை. முதலாளியம்மா தான் சில நாட்களில் அப்படி இருப்பார்கள்

 

சுகுமாரன் ஒரு பெருமூச்சு விட்டபடி வீட்டுக்குள் போனார். மிகவும் கவனமாகக் கதவைத் தாளித்துக் கொண்டார்.  தனதறைக்குள் நுழைந்து அறைக் கதவையும் தாளிட்டுக் கொண்டு விட்டுப் படுக்கையில் சாய்ந்தார்.  கண்களை மூடினாலும் உறக்கம் வர மறுத்தது. மறுபடி எழுந்து உட்கார்ந்து கைபேசியில் ஆவிகள் பற்றிய தகவல்களைத் தேட ஆரம்பித்தார்.

ஆவிகள் உலகம் என்ற ஒரு பிரபலமான யூட்யூப் சேனல் சுகுமாரனின் கண்களில் பட்டது. ஒவ்வொரு யூட்யூப் வீடியோவையும் பல லட்சம் பேர் பார்த்திருந்தார்கள். பலரும் அந்த வீடியோக்களைப் பாராட்டியும் இருந்தார்கள். அந்த வீடியோக்களில் ஒன்றின் தலைப்பு அவரை கவனத்தைக் கவர்ந்தது. “இறைசக்தி ஆவியைத் துரத்துமா?”

 

சுகுமாரன் பரபரப்புடன் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தார். அதில் பேசிய ஆள் தன் கருத்துக்களை ஆணித்தரமாய் சொன்னார். “இறைசக்தி இருக்கிற இடத்துல ஆவிகள் இருக்குமா, ஆவிகள் உலாவ முடியுமான்னு என் கிட்ட பல பேர் கேட்கறாங்க. இதுக்கு இருக்கும், இருக்காதுன்னோ, முடியும், முடியாதுன்னோ மொட்டையாய் சொல்றது சரியான பதிலாயிருக்காது. விளக்கமாய் சொன்னா தான் உங்களுக்குப் புரியும். மனுஷங்கள்ல நல்லவன், கெட்டவன்னு இருக்கிறாங்க இல்லையா? இவங்க இறந்தவுடனே நல்ல ஆவி, கெட்ட ஆவியாயிடறாங்க. அதாவது வாழ்றப்ப எந்த மாதிரியான சம்ஸ்காரங்கள் ஒரு மனுஷன் கிட்ட இருக்கோ, அது தான் அவன் செத்தவுடனயும் அவனைப் பின் தொடர்ந்து வரும். நல்லவனோட நல்ல சம்ஸ்காரங்கள் அவனோட ஆவியில கலந்திருக்கும். கெட்டவனோட கெட்ட சம்ஸ்காரங்கள் அவனோட ஆவியில கலந்திருக்கும். ஏன்னா செத்ததுக்கப்பறம் புதுசா அது வேற மாதிரி மாறிட முடியாது இல்லையா? எதுவாய் மாறுவதாய் இருந்தாலும் வாழும் போதே மாறினால் தான் உண்டு. அதனால தான்அரிது அரிது மானிடராதல் அரிதுன்னு ஔவையார் பாடினாங்ககெட்ட மனுஷங்க கெட்ட ஆவிகளாய் தான் உலாவ முடியும். அந்த ஆவிகளுக்கு இறைசக்திகள் நெருப்பாய் சுடும். அதனால கெட்ட ஆவிகள் இறைசக்திகள் நிறைஞ்சிருக்கற இடத்துல இருக்க முடியாது. ஆனால் நல்ல மனுஷங்க தங்களோட நல்ல சம்ஸ்காரங்கள், நல்ல கர்மாக்கள் தொடர்றது மூலமாய் நல்ல ஆவிகளாய் மாறி உலாவறப்ப அவங்களுக்கு இறைசக்தி உறுதுணையாய் தான் இருக்கும். அதனால அந்த ஆவிகள் கூடுதல் சக்தி படைச்சதாய் மாறிடும்….”

 

சுகுமாரன் அந்த யூட்யூபைத் தொடர்ந்து பார்க்கவில்லை. ”முட்டாள்முட்டாள்…. நீ யாருடா? செத்துப் போன ஆவிகளோட ஏஜெண்டா? உனக்கெப்படிடா தெரியும்? இஷ்டத்துக்கு இவன் உளர்றான். இதை லட்சக்கணக்கான ஆளுக பார்க்கறானுக…” என்று அவர் திட்டினார். அவருக்கு ஆவிகளும், இறைவனும் கூட்டு சேர்வதும், ஆவிகள் கூடுதல் சக்தி பெறுவதும் சிறிதும் பிடிக்கவில்லை. ’தேவையில்லாததை எல்லாம் சொல்லி வெறுப்பேத்தறான்கள்!’

 

திடீரென்று டாமி அவருடைய ஜன்னல் அருகே நின்று ஆக்ரோஷமாய் குரைக்க ஆரம்பித்தது.  திகைப்போடு அவர் நிமிர்ந்த போது சைத்ரா அவரது அறையின் மூலையில் புன்னகையுடன் தெரிந்தாள்.

 

சுகுமாரன் ஒரு கணம் சப்தநாடியும் ஒடுங்கிப் போனார். அடுத்த கணம் அவர் மின்னல் வேகத்தில் அறையை விட்டு வெளியே வந்து வேகமாய் அறைக்கதவைச் சாத்தி வெளியே தாளிட்டார். பின் மூச்சு வாங்க திரும்பிய போது எதிர் சுவரிலிருந்த கண்ணாடியில் அவர் உருவம் தெரிந்தது. நெற்றி நிறைய சாம்பலுடன் இருந்த அவரைப் பார்க்கையில் அவருக்கே ஆத்திரம் வந்தது. இதைச் செய்தும் அந்த ஆவி போய்விடவில்லையே. கோபத்துடன் அவசர அவசரமாய் அவர் நெற்றி சாம்பலைத் துடைத்துக் கொண்டார்.

 

திடீரென்று சுகுமாரனுக்கு ஆங்கிலப் பேய்ப்படங்களை பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.  அந்த சினிமாக்களிலெல்லாம் சிலுவையை வைத்திருந்தால் பேய்கள் நெருங்காமல் பின்வாங்கியது நினைவுக்கு வந்தது. அவர் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. இரண்டாண்டுகளுக்கு முன் அவருடைய கிறிஸ்துவ நண்பர் ஒருவர் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஏசுவின் மரச் சிற்பம் ஒன்றை பரிசளித்திருந்தார்.  எந்தக் கடவுள் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அந்தச் சிற்ப வேலைப்பாட்டுக்காக அதை அவர் வைத்திருந்தார்.

 

சுகுமாரன் அவசர அவசரமாக ஹாலில் ஷோகேஸில் இருந்த அந்தச் சிற்பத்தை எடுத்தார். அவர் பார்த்த திரைப்படங்களில் வெறும் சிலுவை தான் ஆவிகளைத் துரத்தியிருக்கிறது. ஏசுவோடு இருந்த சிலுவை எந்தத் திரைப்படத்திலும் ஆவியைத் துரத்தியதில்லை. அவர் வேகமாக சிலுவையை இழுத்து தனியாகப் பெயர்த்தார். ஏசுவை ஷோகேஸிலேயே வைத்து விட்டு சிலுவையைக் கையில் வைத்துக் கொண்டபடி ஹாலிலிருந்த சோபாவில் உட்கார்ந்து களைப்புடன் கண்களை மூடினார். அவர் மூச்சு இயல்பான நிலைக்கு வர இரண்டு நிமிடங்கள் ஆகின.

 

திடீரென்று வாசற்கதவருகே நின்று டாமி குரைக்க ஆரம்பித்தது. ’ஏன் டாமி இடம் மாறி வந்து குரைக்கிறான்?’ என்று திகைப்புடன் அவர் கண்களைத் திறந்த போது அவர் அறைக் கதவில் சைத்ரா சாய்ந்து நின்றிருந்தாள். அவள் புன்னகை விரிந்திருந்தது.


(தொடரும்)

என்.கணேசன்

 

No comments:

Post a Comment