சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 22, 2019

இல்லுமினாட்டி 10


க்ரிஷ் அடுத்ததாகப் பேசினான். அவன் பேசும் போது அவன் குரு மாஸ்டர் தலைவராக இருந்த ரகசிய ஆன்மீக இயக்கத்திலும் உலகத்தின் அழிவு காலம் பற்றிய குறிப்பு இக்காலத்தையே குறிப்பிட்டுச் சொல்லி இருந்ததாகவும் அழிவிலிருந்து காப்பாற்ற அந்த இயக்கத்தின் முந்தைய தலைவர்கள் ஒரு வரைபடத்தை விட்டுப் போயிருந்ததாகவும் சொல்லி ஆரம்பித்தான். அந்த வரைபடத்தில் ஒரு பனிமலை, மேலே திரிசூலம், அதற்கும் மேலே ஒரு பறவையின் படம் இருந்ததாகவும், அதை அந்த இயக்கத்தில் இருந்த விஸ்வம் திருடிச் சென்று தான் இமயத்தில் அந்தத் திரிசூலத்திற்குக் கீழே இருந்த குகையைக் கண்டுபிடித்திருக்கிறான் என்பதையும் சுட்டிக் காட்டினான். அந்தக் குகையில் தான் இல்லுமினாட்டியின் தவசி அகஸ்டின் தவம் செய்து கொண்டிருந்ததாகவும் அவரிடமிருந்து தான் விஸ்வம் அந்த  இல்லுமினாட்டி சின்னத்தை வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தான். அகஸ்டின் தவசி அவர்களது இயக்கத்தில் சேர்ந்து தான் யோகக்கலையைக் கற்றிருந்தார், பின் தான் தவம் செய்ய இமயம் சென்றார் என்றும் சொல்லி அந்த வகையில் இல்லுமினாட்டிக்கும் அந்த இந்திய ரகசிய ஆன்மீக இயக்கத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையையும் சுட்டிக் காட்டினான். 

விஸ்வம் கையில் இருந்த போது அவ்வப்போது ஒளிர்ந்த இல்லுமினாட்டி சின்னத்தை விஸ்வம் அந்தப் பேச்சு மேடையிலேயே விட்டு வந்திருந்தான். கண்கள் கட்டப்பட்டிருந்த க்ரிஷ் அந்தச் சின்னத்தைத் தொட்டுக் கையில் எடுக்க அவன் கையில் இருக்கையில் இல்லுமினாட்டி சின்னம் தொடர்ந்து ஒளிர ஆரம்பித்தது.

விஸ்வம் இருந்த இயக்கத்தில் விசுவாசமாக இருக்கவில்லை என்பதையும், அந்தச் சின்னத்தைக் கொடுத்து விட்டு இறந்த அகஸ்டின் தவசியின் உடலைக் கூட மரியாதையோடு புதைக்க முற்படவில்லை என்பதையும் க்ரிஷ் தன் பேச்சில் சுட்டிக் காட்டினான். விஸ்வத்திற்குப் பிறகு அந்தக் குகையைக் கண்டுபிடித்துப் போன மாஸ்டர் தான் அகஸ்டின் உடலை மரியாதையோடு புதைத்து விட்டு வந்தார் என்பதையும், விஸ்வம் எடுத்து வந்த இல்லுமினாட்டி சின்னம் அந்தக் குகையில் இருந்த சிவன் சிலையின் நெற்றிக்கண்ணாக இருந்ததென்றும், அவன் எடுத்துக் கொண்டு வந்த பின் அதே போன்ற ஒரு சின்னத்தை ஒரு பறவை கொண்டு வந்து தவசி அகஸ்டின் சமாதியில் கொண்டு வந்து வைத்தது என்றும், அதை மாஸ்டர் அந்தச் சிவன் நெற்றியில் பொருத்த அது சரியாகப் பொருந்தியது என்பதையும் சொன்னான். அப்போது ஏற்பட்ட ஆன்மீகப் பேரானந்த அனுபவத்தால் மாஸ்டர் அகஸ்டின் தவம் செய்த இடத்தில் உலக நன்மைக்காக இப்போது தவம் செய்து வருகிறார் என்றும் சொன்னான்.

அப்படிப்பட்ட மாஸ்டரின் ஆன்மிக இயக்கத்தின் பணத்தைக் கையாடல் செய்து விஸ்வம் தீவிரவாத இயக்கங்களுக்கும், இல்லுமினாட்டிக்கும் அனுப்பி இருப்பதைக் குற்றம் சாட்டிய க்ரிஷ், அகஸ்டின் உடலைப் புதைக்கும் மரியாதை கூடச் செய்யாமல் விஸ்வம் அலட்சியப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி இப்படிப்பட்டவன் இல்லுமினாட்டியையும் ஒரு காலத்தில் ஏமாற்ற மாட்டான் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வியை எழுப்பினான். தீவிரவாத இயக்கங்களை எக்காலத்திலும் திருப்திப்படுத்த முடியாது என்றும் அவை சம்பந்தப்பட்டவர்களை அழித்தே தீரும் என்றும் சொல்லி விஸ்வம் தீவிரவாத இயக்கங்களுடன் நட்பில் இருப்பது முட்டாள்தனம் என்றும் குறிப்பாகத் தெரிவித்தான்.

இந்த உலகம் நல்ல முறையில் மாற வேண்டும், உயர வேண்டும், அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையில் ஏலியன் அக்கறையோடு தன்னிடம் சொன்னதை க்ரிஷ் அந்த மேடையில் சொன்னான்

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும் அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது.  நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது...

“உண்மையான எதிரி ஒரு தனிமனிதன் அல்ல. உங்கள் சமூகத்தில் புறையோடியிருக்கும் சுயநலம், பேராசை, வெறுப்பு, அலட்சியம் எல்லாம் தான்.

தனிமனித மதிப்பீடுகள் தரம் குறையும் போது அவன் வாழும் சமுதாயத்தின் தரமும் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது தான் அழிவிற்கான விதைகள் விதைக்கப் படுகின்றன. பொதுநலம் மறக்கப்பட்டு, தன் உண்மையான நலமும் எதுவெனத் தெரியாமல் மனிதன் மயங்கும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்து, அந்தச் சூழ்நிலையில் தீமைகள் வேகமாக விளைய ஆரம்பிக்கின்றன. அப்போது தன் நிலைமைக்குத் தானே பொறுப்பேற்க மனிதன் மறக்கிறான். அடுத்தபடியாக உடனடிக் கிளர்ச்சிகளுக்காகவும் அற்ப சந்தோஷங்களுக்காகவும், நீண்டகால நன்மைகளையும், உயர்வுகளையும் மனிதன் அலட்சியம் செய்ய ஆரம்பித்து, தன்னை அழித்துக் கொள்ளத் தயாராகிறான். அவன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவது குறைய ஆரம்பிக்கிறது. அழிவின் வேகம் அதிகரிக்கிறது…..

அவன் சொன்ன போது அவன் சொன்னது சத்தியம் என்று ஆமோதிப்பது போல அந்தச் சின்னம் வைரம் போல் ஜொலிக்க ஆரம்பித்தது. இருட்டில் இருந்த அரங்கம் அந்த ஜொலிப்பில் பௌர்ணமி நிலவொளியில் வெட்டவெளியில் இருப்பது போல ஒளி வெள்ளத்தில் மிதந்தது. எல்லோர் முகத்திலும் பிரமிப்பு தெரிய ஆரம்பித்தது. அந்தச் சின்னத்தின் ஜொலிப்பில் க்ரிஷும் தேஜஸுடன் தெரிந்தான். ஒவ்வொருவரின் அந்தராத்மாவுடனும் பேசுவது போல் க்ரிஷ் உலகம் காப்பாற்ற வேண்டுமானால், உலகத்தோடு சேர்ந்து இல்லுமினாட்டியும் காப்பாற்ற வேண்டுமானால் இல்லுமினாட்டி இந்த ஆபத்தான காலக்கட்டத்தில் தன் பொறுப்பை உணர்ந்து நன்மைக்கு மாற வேண்டும் என்று நினைவுபடுத்தினான். கடைசியில் சொன்னான்.

”எண்ணங்களிலும் நோக்கங்களிலும் இருக்கிறது எல்லாச் சூட்சுமமும். யோகிகள் தங்கள் ஞான அலைகளை பரவச் செய்து பலன் பெறத் தகுதியான அலைவரிசைகளில் இருப்பவர்களை உயர வைப்பது போல, ஆளுமை உள்ள மனிதர்களும் தங்கள் எண்ணங்களாலும், செய்கைகளாலும் எத்தனையோ நுட்பமான மாற்றங்களை உருவாக்கி விட முடியும். அந்த வகையில் தலைவர்கள் முடிந்த வரை உதாரண புருஷர்களாய் இருக்க வேண்டும். நன்மைக்கு மதிப்பும் மரியாதையும் தர வேண்டும். நன்மை போற்றப்படுகிறது, அதுவே கௌரவம், அதற்கே மதிப்பு என்ற நம்பிக்கையான சூழலை நாம் உருவாக்கினால் ஒழிய  பெரும்பான்மையான மனிதர்களை நாம் நன்மையின் போக்கிற்கு மாற்றி விட முடியாது.”

“அப்படி மனிதர்களை மாற்றி அவர்களை மேலுக்கு உயர்த்தி அவர்களுக்குத் தலைமை தாங்குவது  தான் உண்மையில் தலைமைக்குப் பெருமை. முட்டாள்களையும், தற்குறிகளையும், கேடிகளையும், போக்கிரிகளையும், கொள்ளையர்களையும், தீவிரவாதிகளையும் சமாளித்து அதிலும் சுய சம்பாத்தியம் பார்ப்பதைத் தலைமை என்று பெருமையாகச் சொல்ல முடியுமா? இல்லுமினாட்டி எந்த மாதிரியான மனிதர்களுக்குத் தலைமை தாங்க நினைக்கிறது? எந்த விதமான தலைமையை அது பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்…. அறிவும் ஞானமும் படைத்த நீங்கள் யோசித்துப் பாருங்கள்.  நல்ல மனிதர்களைப் போற்றுங்கள். திறமைக்கு ஆதரவு கொடுங்கள். எது எல்லாம் உயர உதவுமோ அதை எல்லாம் சிலாகியுங்கள். உண்மைக்கு உரிய கவுரவம் கொடுங்கள். இந்த இடைப்பட்ட மனிதர்கள் கண்டிப்பாக நன்மையின் பக்கம் திரும்புவார்கள். உயர ஆரம்பிப்பார்கள்…. இதுவே உலகம் காப்பாற்றப்படும் வழி. அதைவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று இன்றைய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்வதைப் போல எல்லா இடங்களில் இருந்தும் சுருட்டிக் கொண்டே போனால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இப்படி ஒருவன் சேர்த்ததை அவனுக்கு மேல் வலிமையானவன் பிடுங்கி, அவன் பிடுங்கியதை அதற்கு மேல் வலிமையானவன் பிடுங்கி வலிமை என்றாலே ஏமாற்றிப் பிடுங்குவது என்றாகி கடைசியில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தான் சாக வேண்டும்…. அழிப்பதற்கு எந்தத் தனித்திறமையும் தேவையில்லை. பலவீனமானவர்களை ஏமாற்றியும், பயமுறுத்தியும் கொள்ளையடிப்பது பெருமையும் அல்ல.”

இல்லுமினாட்டி சின்னம் தொடர்ந்து ஒளிர்ந்ததும், கண்களைக் கட்டி இருந்த போதும் க்ரிஷ் ஜொலித்ததும், அவன் பேச்சில் இருந்த ஆத்மார்த்தமும், சத்தியமும் எல்லாமே சேர்ந்து அவனையே ஆரகிள் சொன்ன ‘உயர்சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட’வனாக அடையாளம் காட்டுவதாய் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் உணர்ந்தார்கள். எர்னெஸ்டோ க்ரிஷை இல்லுமினாட்டியில் சேர அப்போதே அழைப்பு விடுத்தார்.

அவன் தயங்கிய போது எர்னெஸ்டோ சொன்னார். “இளைஞனே நீ இன்று சொன்ன வார்த்தைகளை இல்லுமினாட்டி என்றும் நினைவு வைத்திருக்கும். இந்தக் கணத்தில் எங்கள் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் உன் மூலம் சொன்னதாக நாங்கள் உணரும் இந்த உயர்ந்த உணர்வுகள் நாளைக் காலை எத்தனை பேருக்கு எத்தனை சதவீதம் தங்கும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது. இன்னும் சில நாட்கள் போன பின் கண்டிப்பாக இதே உணர்வுகளை இதே அளவிலும் இதே உறுதியிலும் உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது. மனித இயல்பை நீண்ட காலம் கவனித்து வந்ததால் தான் இதை வருத்தத்துடன் கூறுகிறேன். இந்த உயர்ந்த உணர்வுகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் உன்னைப் போன்றவன் எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.”

”இல்லுமினாட்டி என்ற இந்த இயக்கம் உலக நிகழ்வுகளின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த ஒரு இயக்கமாக இருக்கிறது. அதில் சேர வாய்ப்பு கிடைத்த போதும் நீ சேரத் தயங்கினால் அறிவுரை சொல்ல மட்டுமே நீ, அதைக் களத்தில் இறங்கி செய்து காட்டக் கிடைக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாய் என்றாகி விடாதா? உன் ஏலியன் நண்பனுக்கும், உன் மனசாட்சிக்கும் நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

கடைசியில் க்ரிஷ் மனம் மாறி இல்லுமினாட்டியில் இணைந்தான். ஆனால் அந்தக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாய் விஸ்வம் உடல்கருகி இறந்திருந்தான். என்ன ஆனது எப்படி ஆனது என்று அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. க்ரிஷையே எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்ததால் அவன் கருகி விழுந்திருந்ததைப் பிறகு தான் கவனித்திருந்தார்கள். விஸ்வத்தின் பிணம் ம்யூனிக் மின்மயானத்தில் எரிக்கப்பட்டது.

எல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு இல்லுமினாட்டி திரும்பியதாக அவர் நினைத்திருக்கும் போது ஜான் ஸ்மித், விஸ்வம் இறந்த அதே நேரத்தில் உயிர் பிழைத்த டேனியல் என்ற போதை மனிதனைப் பற்றிச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார். அமானுஷ்ய சக்திகள் பெற்றிராத, யோகசக்திகள் கற்றிராத அவனுடைய மூளையில் அது சம்பந்தமான பகுதிகள் திடீரென்று செயலாக்கம் பெற்றிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். கூடு விட்டுக் கூடு பாய்வதைப் பற்றி பழங்கதைகளில் படித்திருக்கும் எர்னெஸ்டோ இக்காலத்தில் உண்மையில் அதெல்லாம் சாத்தியம் என்று நம்புபவர் அல்ல. ஆனால் நடந்திருப்பதை வேறெப்படி எடுத்துக் கொள்வது என்றும் அவருக்கு விளங்கவில்லை. என்ன நடக்கிறது? போதை மனிதன் பிழைக்கையில் கிதார் இசையை இசைக்க விட்டதும், அவனை அதிகாலை நேரத்தில் காரில் அழைத்துச் சென்றதும் யார்?

(தொடரும்)
என்.கணேசன்


5 comments:

  1. Very interesting and eagerly waiting for next episodes.

    ReplyDelete
  2. சீக்கிரம் புத்தகம் வெளியிடுங்க சார். எல்லா வேலையும் ஒதுக்கி வெச்சுட்டு ஒரே முட்டா இந்த நாவலைப் படிச்சு முடிக்க ஆவலா இருக்கு.

    ReplyDelete
  3. Aduthadutha pathivukalai padippadharku மிகவும் aavalaaka irukkirom .

    ReplyDelete
  4. கிரிஷினின் பேச்சு அருமை... எப்போதும் கேட்கலாம்....இ
    தான் நாவல் சூடு பிடிக்கப் போகிறது...காத்திருக்கிறேன்

    ReplyDelete