சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 26, 2018

இருவேறு உலகம் - 93

தாசிவ நம்பூதிரியின் அதிர்ச்சியை மாஸ்டரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் புன்னகையுடன் சொன்னார். “அவன் எங்க ஜாதகங்களை உங்க கிட்ட கொண்டு வந்து காமிச்சது எங்களோட பலவீனங்களையும், மோசமான நேரங்களையும் சரியா தெரிஞ்சுகிட்டு அதைப் பயன்படுத்திக்கத் தானே ஒழிய எங்களுக்கு எந்த விதத்திலும் உதவற நோக்கம் அவனுக்கில்லை.”

சதாசிவ நம்பூதிரிக்கு நிதானத்திற்கு வர நிறைய நேரம் பிடித்தது. ஒரு குரு தந்த ஜாதங்கள், அந்த இருவரும் யார் என்றே தெரியாது, அவர்கள் மேல் உள்ள அக்கறையால் கேட்கின்றேன் என்று சொன்னதெல்லாம் கட்டுக் கதை!.... அப்படியானால்….. அப்படியானால்…… முந்தின இரவு வந்து வெளியே இருட்டில் கண்காணித்தபடி நின்றிருந்தவன் தான் மறு நாள் காலை மிக நல்லவனாக நடித்து உள்ளே வந்தவன்….. அவருக்கு அதை ஜீரணிக்கவே கஷ்டமாக இருந்தது.

“அவன்…. அவன்….. நீங்களும் அந்தப் பையனும் எதிரிகளானா யார் ஜெய்ப்பாங்கன்னு கேட்டான்…… அப்படியானா ரெண்டு பேரும் அழிஞ்சுடுவீங்கன்னு சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் எதிரியாயிடலயே…”

“கிட்டத்தட்ட ஆயிருப்போம்….. ஆனா அந்தப் பையன் அதுக்கு இடம் தரலை…. என் சிஷ்யனா மாறிட்டான்….. அதுக்கப்பறம் எங்கே எதிரியாகறது?”

சதாசிவ நம்பூதிரி சந்தோஷப்பட்டார். “எல்லாம் தெய்வ சித்தம்….. அவன் ஏன் உங்க ரெண்டு பேரையும் எதிரியாய் நினைக்கிறான்?”

”நீங்க சொன்ன மாதிரி அவன் எமனோட ஏஜண்ட் தான். நாங்க அவன் பாதைல குறுக்கிடுவோம்னு நினைக்கிறானோ என்னவோ. எங்களுக்கு அவன் உத்தேசம் தெளிவாய் தெரியலை. ஆள் யாருன்னும் தெரியலை…. உங்க மூலமாகவும் பேசிகிட்டது தெரிய வந்ததே ஒழிய அவன் உருவம் எனக்குத் தெளிவாய் தெரியலை…. நீங்க அவன் தோற்றத்தை  முடிந்த அளவு விவரியுங்களேன்…..”

அவர் விவரித்தார். மாஸ்டர் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டார். மிகத் துடிப்பானவன், அறிவாளி, நிதானம் தவறாதவன் என்பது தெளிவாகத் தெரிந்ததே ஒழிய மற்றதை எதிரியின் வேடத்திலிருந்து அவரால் யூகிக்க முடியவில்லை. ஆள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சில குழப்பங்கள் இங்கே தீர்ந்து போனதாக மாஸ்டர் உணர்ந்தார். அனந்த பத்மநாப சுவாமியைத் தரிசித்தால் வழி பிறக்கும் என்று குரு சொல்வதாகத் தோன்றி இங்கு வந்தது வீண் போகவில்லை. கோயிலுக்கு உள்ளேயே இந்த நல்ல மனிதரைச் சந்தித்து சில உண்மைகளையும் தெரிந்து கொண்டாயிற்று. மாஸ்டர் பகவானுக்கும் குருவுக்கும் மானசீகமாய் நன்றி சொன்னார்.

சதாசிவ நம்பூதிரியும் சொன்னார். “நான் இதே ஊர்னாலும் இந்தக் கோயிலுக்கு அதிகம் வர்றதில்லை….. காரணம் வீடு ரொம்ப தூரம். எனக்கு முழங்கால் முட்டியும் ரொம்ப வலி. அதனால பக்கத்துல இருக்கற ரெண்டு கோயிலுக்குப் போவேன் அவ்வளவு தான்….. ஆனால் இன்னைக்கு என்னவோ இங்கே வரத் தோணல். இதே ஊர்ல இருந்துட்டே வந்து பார்க்க மாட்டேன்கறியேன்னு அனந்த பத்மநாப சுவாமி கேட்கிறதாய் தோணுச்சு. அதனால தான் வந்தேன். உங்களைப் பார்த்துப் பேச முடிஞ்சதுல சந்தோஷம்…… பகவான்  நல்லவங்களுக்குத் துணையிருப்பான்……”

“ஆனா இப்ப எங்களுக்கு நேரம் சரியில்லைன்னு ஜாதகத்துல நீங்களே பார்த்தீங்களே ஐயா…” உண்மையும், வேடிக்கையும் கலந்து மாஸ்டர் கேட்டார்.

“ஒரு நாளுன்னா காலை, மதியம், சாயங்காலம், ராத்திரின்னு இருக்கறா மாதிரி மனிதர்கள் வாழ்க்கைலயும் கஷ்ட காலம், நல்ல காலம், கண்டம், க்‌ஷேமம்னு எல்லாம் கலந்து தான் இருக்கும். ஒன்னு போய் இன்னொன்னு வரும். அது தான் யதார்த்தம்….. அதை ஞாபகம் வச்சுக்கணும். நல்லதுல அகங்காரப்படவும், கெட்டதுல துவண்டு போகவும் கூடாது. கொடுக்கறதும் பகவான். எடுக்கறதும் பகவான். அவன் சித்தம் என்னவோ அது தான் நடக்கும்……” என்று சொன்னபடி சதாசிவ நம்பூதிரி எழுந்தார்.

ஒரு மிக நல்ல மனிதரைப் பார்த்த மகிழ்ச்சியுடனும், சில குழப்பம் தெளிந்து, சில உண்மைகள் விளங்கக் காரணமாய் இவர் இருந்திருக்கிறார் என்ற நன்றியுணர்வுடனும் அங்கேயே சாஷ்டாங்கமாய் விழுந்து சதாசிவ நம்பூதிரியை மாஸ்டர் வணங்கினார்.

சதாசிவ நம்பூதிரி சுவாமி சன்னிதியை நோக்கிக் கைகூப்பி கண் மூடி “கடவுள் அருளால நல்லதே நடக்கும். அந்தப் பையனுக்கும் என்னோட ஆசிர்வாதத்தைச் சொல்லுங்கோ….” என்று மானசீகமாய் ஆசி வழங்கினார்.

எழுந்த மாஸ்டர் “நன்றி ஐயா உங்க ஆசிர்வாதத்துக்கும், நல்ல மனசுக்கும்” என்றார். இந்த நல்ல மனிதருக்கு என்ன கைம்மாறு செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. அவர் சற்று முன் முழங்கால் முட்டி வலி என்று சொன்னதும், அங்கு வந்த போது அந்த முழங்கால்களைத் தடவிக் கொண்டே அமர்ந்ததும் நினைவுக்கு வந்தது. கண்களை மூடித் தன் சக்திகளைக் குவித்த மாஸ்டர் தீட்சண்யத்துடன் சதாசிவ நம்பூதிரியின் முழங்கால் முட்டிகளைப் பார்த்தார். பின் தன் இரு கைகளாலும் அவருடைய இரு கால் முட்டிகளையும் தொட்டார். இரு முட்டிகளிலும் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்த சதாசிவ நம்பூதிரி ஒரு கணம் நேராக நிற்க முடியாமல் தடுமாறினார். அவரை விழாமல் பிடித்துக் கொண்ட மாஸ்டர் பேரன்புடன் சொன்னார். “ஐயா இனி நீங்க எப்பவுமே அந்த முழங்கால் முட்டி வலியால அவதிப்பட மாட்டீங்க”

மாஸ்டர் புன்னகைத்துத் தலையாட்டிப் போய் விட்டார். சதாசிவ நம்பூதிரிக்கு சில வினாடிகள் ஒன்றுமே புரியவில்லை. முழங்கால்களைத் தொட்டுப் பார்த்தார். இப்போது வலி தெரியவில்லை. அவருக்கு நம்ப முடியவில்லை. அங்கேயே உட்கார்ந்து விட்டு எழுந்தார். எப்போதுமே அப்படி எழும் போது உயிர் போகும் வலியை ஒருசில வினாடிகளாவது அவர் உணர்வார். ஆனால் இப்போது எழும் போதும் அந்த வலியில்லை. பிரமிப்புடன் பார்த்தார். இப்போது தூரத்தில் மாஸ்டர் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. கண்கள் ஈரமாக அங்கிருந்தே சதாசிவ நம்பூதிரி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்…. பின் எழவும் சிரமம் இல்லை. நடக்கையிலும் வலி இல்லை…… கண்களில் பெருக ஆரம்பித்த நீரை அந்த முதியவரால் கட்டுப்படுத்த முடியவில்லை……


ர்ம மனிதனுக்கு சற்று முன் கிடைத்த தகவல் அலட்சியப் படுத்த முடிந்ததாய் இல்லை. “உங்களை இமயமலைப் பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி விசாரித்துக் கொண்டிருக்கிறார்.” அவன் செல்போனில் வந்த குறுந்தகவலைப் படித்தவுடனேயே அந்தப் போலீஸ் அதிகாரி யார் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது. மனோகர் மூலமாக சென்னையில் விசாரித்த போது செந்தில்நாதன் வட இந்தியாவுக்கு யாத்திரை போயிருப்பதாகச் சொல்லவே சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. மர்ம மனிதன் மேலும் இரண்டு மனிதர்களுக்குப் போன் செய்து பேசினான். சரியாக ஒன்றரை மணி நேரத்தில் செந்தில்நாதன் மவுண்ட் அபுவில் சதானந்த கிரியைச் சந்தித்ததும், தார்ப் பாலைவனத்தில் பக்கிரியைச் சந்தித்ததும், இமயமலையில் போதை சாதுவைச் சந்தித்ததும் தெரிய வந்தது. இந்த விசாரணைக்கு க்ரிஷ் தான் காரணம் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. அமானுஷ்ய சக்திகள் எதுவும் இல்லாமலேயே தன் அறிவாலேயே எங்கே எப்படித் தேட வேண்டும் என்று அனுமானித்து இயங்கிய  க்ரிஷுக்கு மர்ம மனிதன் சபாஷ் போட்டான். ஆனால் இந்த விசாரணை வழியில் யாரும் அவனை நெருங்கி விட முடியாது என்பது நிச்சயம். வேலை முடிந்த இடங்களில் அவன் என்றுமே ஒட்டு மொத்தமாக விலகியே வந்திருக்கிறான். எந்த விதத்திலும் சம்பந்தப்பட்ட நபர்களுடன் அவன் தொடர்பில் இருக்கவில்லை. அதனால் இந்த வழியில் அவன் என்ன சக்திகளை எல்லாம் பெற்றிருக்கிறான் என்பது வேண்டுமானால் க்ரிஷுக்குத் தெரிய வரலாமே ஒழிய மற்றபடி அவனை நெருங்க முடியாது. அமானுஷ்ய சக்திகளைப் பெற்றிருக்கும் மாஸ்டருக்கே அவனை நெருங்க முடியாத நிலை இருக்கையில் க்ரிஷ் எந்த மூலை….. ஆனாலும் க்ரிஷ் இந்த அளவு அறிந்து கொள்வதே அவனுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு எண்ணுக்குப் போன் செய்து செந்தில்நாதனை கண்காணிக்கச் சொல்லி விட்டு இந்த மூன்று இடங்களில் அவனைப் பற்றி அவர்கள் என்னவெல்லாம் சொல்லி இருக்கக் கூடும் என்று மர்ம மனிதன் தீவிரமாக யோசித்தான். ஒவ்வொரு இடத்திலும் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் முழுவதுமாக அவன் நினைவில் இருந்தது. அதை எல்லாம் நினைவுபடுத்திப் பார்த்தான். போதை சாதுவிடம் இருந்ததை நினைவுபடுத்திப் பார்க்கையில் ஸ்டீபன் தாம்சன் நினைவுக்கு வந்தார். அந்தப் போதை சாதுவுக்கு ஸ்டீபன் தாம்சன் என்ற பெயர் நினைவில் இருக்க வாய்ப்பேயில்லை……. ஆனால் அவன் அவர் எழுதிய புத்தகத்தை அங்கு இருக்கையில் படித்து முடித்து அதை அங்கேயே விட்டு விட்டு வந்திருப்பது நினைவுக்கு வந்தது. படித்து முடித்த எந்தப் புத்தகத்தையும் அவன் தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை. எனவே அதை அங்கேயே விட்டு விட்டு வந்திருக்கிறான்……. அந்தப் புத்தகம் மூலமாக ஸ்டீபன் தாம்சனை அவன் தொடர்பு கொண்டதையும் அவர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அவன் உணர்ந்த போது சுருக்கென்றது.

மர்ம மனிதன் உஷாரானான்.

(தொடரும்)
என்.கணேசன்


9 comments:

  1. Very very interesting. Both are reaching one another. What is next? Waiting for next Thursday evening.

    ReplyDelete
  2. மாஸ்டர் மற்றும் சதாசிவ நம்பூதிரி இருவருக்கும் இடையே நடந்த நிகழ்வுகள் அருமை...
    மர்ம மனிதன் உஷாராவது எதிர்பார்க்கலை...இதற்கு என்ன பதிலடி கொடுப்பான்?

    ReplyDelete
  3. சரியான இடத்தில் தொடரும் போட்டு வியாழன் வரை பொறுமை இருக்க மாட்டேன் என்கிறது.

    ReplyDelete
  4. Sir, U mentioned, master cure the knee pain to sadasiva namboothiri. Is it possible can practice by normal persons.

    ReplyDelete
  5. மாஸ்டர்-சாஸ்திரிகள் சந்திப்பு......இருவருக்குமே நன்மையே....
    தனக்கும்,,க்ரீஷூக்கும் பொதுவான எதிரி என்பதும்....
    சாஸ்திரிகளின் மூட்டுவலி நீங்கவும் உதவியது....
    இறைவனின் விளையாடல் என்றும் சொல்லலாம்...

    மர்ம மனிதனை எந்த இடத்திலும்,விதத்திலும் குறைத்து கணிக்க முடியவில்லை..
    எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் இவனை....?

    ReplyDelete
  6. Dear Ganeshan

    When I was in Coimbatore recently, I purchased this book and read it in one sitting. Impressive narrative and event sequencing.
    At times, it makes me wonder whether you are following author Dan Brown's style of subject and narratives.
    Regards
    Bala

    ReplyDelete
  7. மர்ம மனிதனுக்கும் பயம் பிடிக்க விஷயம் வந்தது

    ReplyDelete