சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 12, 2018

இருவேறு உலகம் – 91


மெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த கணத்திலிருந்து க்ரிஷை உதயின் நண்பன் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு நிறுவனம் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. கிட்டத்தட்ட ஆறேகால் அடி உயரத்தில்  ஆஜானுபாகுகளாக இருந்த இரண்டு தனியார் காவலர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவனைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் செல்லும் போது இருவர் பார்வையும் சுற்றும் முற்றும் வர முடிந்த ஆபத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் அதற்கு அவசியம் இருக்கவில்லை. போக்குவரத்துக்கும் அவர்களுடைய வாகனமே வந்திருந்தது. அட்லாண்டாவில் ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துப் போய் அவனைச் சிறிது இளைப்பாற வைத்து பின்னர் அவர்களே ஸ்டீபன் தாம்சன் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.

ஸ்டீபன் தாம்சனின் வீடு அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது. அழகான தோட்டத்தின் நடுவே கலைநயத்துடன் அவர் வீட்டைக் கட்டியிருந்தார். சுமார் அறுபது வயதை எட்டியிருந்தாலும் தொப்பை விழாமல் மெலிதான உடல்வாகைக் கொண்டவராய் சதா புன்னகை தவழ்ந்த முகமுடையவராக இருந்தார். பல நாள் பழகியவர் போல் க்ரிஷை அன்பாக வரவேற்றார். அவன் பயணம் சுகமாக இருந்ததா என்று விசாரித்தார்.

சில நிமிடங்கள் பரஸ்பர விசாரிப்புகளில் கழிந்தன.  பின் நிஜமாகவே அவர் எழுத்துக்களைப் படித்ததில் தனக்கு எழுந்திருந்த சந்தேகங்களை க்ரிஷ் நிவர்த்தி செய்து கொண்டான். ஸ்டீபன் தாம்சன் பொறுமையாகப் பதில் சொன்னார். அவர் கஷ்டமான பதில்களைச் சொன்ன போதும் அதைக் கூர்ந்து கேட்டு சிரமம் இல்லாமல் புரிந்து கொண்ட அந்த இளைஞனின் புத்திசாலித்தனம் அவருக்குப் பிடித்திருந்தது. அவருக்கு அவன் இந்தியாவில் அவர் பார்த்த இன்னொரு மனிதனை நினைவுறுத்தினான்…..   

மெல்ல க்ரிஷ் அவரிடம் சொன்னான். “எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் சகோதரர் ஒருவரும் உங்கள் தீவிர ரசிகர்….. நீங்கள் இந்தியா வந்திருந்த சமயத்தில் சொந்த ஊரிலிருந்து உங்களைப் பார்க்க வந்த அவர் நீங்கள் திரும்பிப் போகும் வரை வரவில்லை……”

அவர் முகம் பெரிதாக மலர்ந்தது. “நீங்கள் சார்லஸைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்….. உங்களிடம் பேசும் போது சற்று முன் தான் நானும் அவரை நினைவுகூர்ந்தேன்…… சார்லஸ் உங்கள் குடும்ப நண்பரா?” என்று ஆர்வத்துடன் ஸ்டீபன் தாம்சன் கேட்டார்.

எதிரி அவரிடம் தந்திருந்த பெயர் சார்லஸ் என்பது தெரிந்ததும் க்ரிஷும் அதே பெயரைப் பயன்படுத்தினான். “சார்லஸின் சகோதரர் தான் எங்கள் குடும்ப நண்பர். அவர் தான் இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவர் சகோதரர் உங்களைச் சந்திக்கப் போனதைப் பற்றி எங்களிடம் சொன்னார். ஊர் திரும்பி வந்த பிறகு கூட உங்கள் Mind Programming புத்தகத்தை ஆழமாகப் படித்துக் கொண்டிருந்தாராம்….”

ஸ்டீபன் தாம்சன் புன்னகைத்தார். “நான் அந்த மாதிரி ஒரு கூர்மையான புத்திசாலியை இது வரை பார்த்ததில்லை. மிக நல்ல மனிதரும் கூட. நல்ல அறிவு தாகம் அவருக்கு.  நான் இந்தியாவில் சுற்றுலா போகிற ஊர்களுக்கெல்லாம் வந்தார். பகலில் நான் சுற்றிப் பார்க்கப் போய் விடுவேன். மாலை நேரத்திலிருந்து நள்ளிரவு வரை நாங்கள் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம்…. நான் இந்தியாவிலிருந்து கிளம்பும் போது தொடர்பில் இருப்போம் என்றெல்லாம் உறுதியாகச் சொன்னார்….. ஆனால் பின் அவர் தொடர்பு கொள்ளவேயில்லை. நான் தொடர்பு கொண்ட போது கூட அவர் போன் நம்பர் உபயோகத்தில் இல்லை என்ற தகவல் தான் எனக்கு வந்தது…. அவர் இப்போது எப்படி இருக்கிறார்….? எங்கே இருக்கிறார்?.....”

க்ரிஷ் சொன்னான். ”உங்களைச் சந்தித்து விட்டு வந்து இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் வீட்டை விட்டுப் போனவர் பிறகு திரும்பி வரவேயில்லை. அவர் எப்படி இருக்கிறார், எங்கே இருக்கிறார் என்று அவர் குடும்பத்திற்கே தெரியாமல் இருக்கிறது. அவரிடமிருந்து அவர்களுக்கும் எந்தத் தகவலும் இல்லை. நான் அமெரிக்கா வந்து உங்களைச் சந்திக்கிறேன் என்று தெரிந்தவுடன் உங்களுடனாவது தொடர்பில் இருக்கிறாரா என்று கேட்டுச் சொல்லச் சொன்னார்கள்……. ஆனால் எனக்குத் தான் கேட்கத் தயக்கமாய் இருந்தது. எத்தனையோ பேரைப் பார்க்கிறீர்கள், இத்தனை வருடங்கள் கழித்து அவரை நீங்கள் நினைவு வைத்திருப்பீர்களோ மாட்டீர்களோ என்று எனக்குச் சந்தேகம்……”

“சார்லஸை ஒரு முறை சந்தித்தவர்கள் அவரை மறக்க முடியாது. பைபிளை வரிக்கு வரி மேற்கோள் காட்டுவார். ஏசு கிறிஸ்து மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்…… “ சொல்லும் போதே ஸ்டீபன் தாம்சனுக்கு குரல் கரகரத்தது.

க்ரிஷுக்குத் தலைசுற்றியது. இது என்ன புதுக்கதை. ஏசு பக்தனா? பைபிளை வரிக்கு வரி மேற்கோள் காட்டுவானா?.... தன் உணர்வுகளை முகம் வரைக் கொண்டு வராமல் லேசான வருத்தத்தை மட்டும் கொண்டு வந்து க்ரிஷ் சொன்னான். “அப்படிப்பட்ட அறிவுஜீவியான, நல்லதொரு ஆள் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானால் அந்தக் குடும்பத்தினருக்கு எப்படி இருக்கும்னு நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை…… அவர்களுக்கு அவர் கடைசி கடைசியாக உங்கள் எழுத்துக்களில் ஆர்வம் வைத்திருந்தது தான் ஞாபகம் இருக்கிறது. வேறெதுவும் ஞாபகம் இல்லை. வேறு எதில் எல்லாம் அவர் ஆர்வம் வைத்திருந்தார் என்று தெரிந்தால் அது சம்பந்தமான இடங்களில் அவரைத் தேடலாமே என்று நினைக்கிறார்கள்…..”

ஸ்டீபன் தாம்சன் சொன்னார். “சார்லஸ் ஏசுகிறிஸ்துவின் கருணையிலும், மன்னித்தலிலும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். மனிதர்கள் அன்பாகவும், அமைதியாகவும், வாழ வேண்டும் என்று நினைத்தார். அப்படி வாழ விடாமல் அவர்களைத் தடுப்பது எது என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். மனித மனம் எப்படியெல்லாம் ப்ரோகிராம் செய்து கொண்டு அதன்படியே இயங்குகிறது என்று நான் எழுதியதை வைத்து நிறைய பேசினார். விவாதம் செய்தார். தனிமனித மனப் ப்ரோகிராம்கள் போலவே குழுக்கள், கூட்டங்கள் இவற்றிற்கும் நம்பிக்கைகள், கொள்கைகள் என்கிற பெயர்களில் பல ப்ரோகிராம்கள் இருக்கின்றன என்று நான் சொன்னதை பிரமிப்புடன் கவனமாகக் கேட்டார். தனிமனிதனின் மனசாட்சி கூட்டமாக இயங்கும் போது எப்படிக் காணாமல் போகிறது என்பதைப் பற்றி ஒரு நாள்  பேசியிருக்கிறோம்….. இறைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டு எப்படி எல்லாம் இறைவன் சொன்ன வழிக்கெதிராகவே ஒரு சமுதாயம் போகிறது, அப்போதும் கூட சரியான வழியில் போவதாகவே நம்புகிறது என்பதைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறோம். வருத்தப்பட்டிருக்கிறோம்…….”

திகைப்புடன் க்ரிஷ் கேட்டுக் கொண்டிருந்தான். இது என்ன புதிய அவதாரம்…? மெல்லக் கேட்டான். “உங்களிடம் அமானுஷ்ய சக்திகள் பற்றி அவன் பேசி இருக்கிறானா?”

“இல்லையே” என்று அவர் சொன்னது க்ரிஷுக்கு எதிரியின் புதிய பரிமாணத்தைக் காட்டியது. ஒரே கால கட்டத்தில் ஒரு இடத்தில் நோக்கு வர்மம் படித்தவன் இன்னொரு பக்கம் அதன் சாயலைக் கூடக் காட்டாமல் மனித மனப்போக்கை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது அந்த எதிரிக்கு மட்டுமே முடிந்த வித்தை….
க்ரிஷ் மெல்லச் சொன்னான். “அவருக்கு நோக்கு வர்மம், அமானுஷ்ய சக்திகள் போன்ற விஷயங்களிலும் ஆர்வம் இருந்ததென்று அவருடைய குடும்பத்தினருக்குத் தெரிய வந்திருக்கிறது. அதனால் உங்களிடம் ஏதாவது அவர் அதைப் பற்றிப் பேசியிருக்கலாம் என்று நான் நினைத்தேன்……..”

“இல்லையே…” என்று சொல்லி இழுத்த ஸ்டீபன் தாம்சன் பின் மெல்லச் சொன்னார். “ஆனால் அவர் கூட நான் இருந்த சந்தர்ப்பங்களில் எதையாவது நான் பாதி அவரிடம் சொல்லி மீதியைச் சொல்ல விருப்பமில்லாமல் தவிர்த்தாலும் அவர் என் மனதைப் படித்து விடுகிற உணர்வு எனக்கு ஒருசில நேரங்களில் ஏற்பட்டிருக்கிறது….. அதை அவரிடம் ஒருமுறை தெரிவித்தும் இருக்கிறேன்……”

“அதற்கு அவர் என்ன சொன்னார்?” க்ரிஷ் ஆர்வத்துடன் கேட்டான்.

“நான் சாதாரண மனிதன்….. எனக்கு அன்பும், கருணையும், இறை நம்பிக்கையும் நிறைந்ததாய் மனித மனம் இருக்க வேண்டும், இந்த உலகம் சமாதான பூமியாகத் திகழ வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர வேறு எதிலும் ஆர்வமும் இல்லை….. அடுத்தவர் மனத்தைப் படிக்கிற சக்தியெல்லாம் என்னைப் போன்ற எளியவனுக்கு எப்படி வரும் என்று அவர் மறுத்திருக்கிறார்…”

க்ரிஷ் அங்கு மேலும் ஒரு மணி நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தான். தனிமனிதமன ப்ரோகிராம், கூட்டுமனித மன ப்ரோகிராம் பற்றி தான் எதிரி அவரிடம் அதிகம் பேசிக் கொண்டிருந்தான் என்பதால் அது குறித்து அவன் கேட்ட கேள்விகள் என்ன அவர் சொன்ன பதில்கள் என்ன என்பதை விரிவாக அவன் தெரிந்து கொண்டான். ஸ்டீபன் தாம்சன் அந்தப் பேச்சுக்களைக் கூடுமான அளவு அப்படியே சொன்னார். அவன் கேட்ட சில கேள்விகள் போல் யாரும் அவரிடம் கேட்டதில்லை. நல்ல கேள்விகள் வராமல் நல்ல பதில்களும் வருவதில்லை என்பதால் தன்னைப் புதிய புதிய சிந்தனை ஓட்டத்தில் செல்ல வைத்த அவன் கேட்ட வித்தியாசமான கேள்விகளை அவரால் மறக்க முடிந்ததில்லை….. அவற்றை எல்லாம் அப்படியே  சொன்னார். தன் பதில்களையும் சொன்னார்.

க்ரிஷுக்கு சிறிது சிறிதாக திரை விலகுவது போல் இருந்தது. திரை விலகித் தெரிந்ததோ பேராபத்தாய் இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன் 

4 comments:

  1. மர்ம மனிதன் இயேசு பக்தனா???
    ஏற்கனவே பாவ மன்னிப்பு கூண்டிற்க்கு வந்ததாக கூறியது நினைவுக்கு வருகிறது.

    கதாநாயகன் கூட 40 episodeக்கு அப்புறம் வெளிய வந்துட்டான்...
    ஆனால் இந்த வில்லன் 91 episode முடிந்தும் வெளிய வராம... மர்மமாகவே செயல்படுகிறான்...பரஞ்சோதி முனிவர் சொன்னது இவனைத் தானோ???

    தாம்சனின்...தனிமனித program மற்றும் கூட்டத்தினர் program பற்றி கருத்து சூப்பர்...
    பலமுறை உணர்ந்த விசயத்தை அருமையாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள்...

    ReplyDelete
  2. ungalidam amaanushya sakthigal pattri avan pesi irukiraanaa ?
    ungalidam amaanushya sakthigal pattri avar pesi irukiraaraa ?

    ReplyDelete
  3. கூட்டமாக இயங்கும் போது தனிமனித மனசாட்சி காணாமல் போய்விடுகிறது ....

    மர்மமனிதனின் நோக்கம், கூட்டமாக இயங்கும் மக்களோ...
    அவர்களின் ஆழ்மன சக்தி, ஒரே எண்ணத்தை கொண்டு இருப்பதால் ,
    அவனால் அவர்களை ஈஸியாக அணுக முடியும் என்னும், எதிர்பார்ப்போ....

    ReplyDelete