சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 29, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 118

லீ க்யாங் சொன்னதை ஆசான் அக்‌ஷயிடம் தெரிவித்தார். கேட்ட பின் அக்‌ஷய் அப்படியே சிலை போல நின்றான். சொன்னது சரியாகக் கேட்கவில்லையா, இல்லை கேட்டு அதிர்ச்சியில் அப்படி நிற்கிறானா என்று திகைப்புடன் ஆசான் அவனைப் பார்த்தார். உடனே முதல் சந்திப்பில் புத்தகயாவில் அவன் இப்படி ஒரு நிலைக்குப் போனது அவருக்கு நினைவுக்கு வந்தது. ’வாழ்வா சாவா என்பது போன்ற சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும் போது நிறைய நேரம் யோசிப்பதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. உடனடியாகத் தீர்மானம் எடுத்து அதைச் செயல்படுத்தினால் தான் நாம் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும். அந்த மாதிரி சமயங்களில் என் அந்தராத்மாவின் குரலைக் கேட்க பயன்படுத்தும் வித்தை இது’ என்று சொல்லி இருந்தான். இப்போது இரண்டு உயிர்களின் வாழ்வா சாவா என்கிற நிலை. அதில் ஒரு உயிர் அவன் மகனுடையது.... ஆசான் கலக்கத்துடன் அவனைப் பார்த்தார்.

சிலையாய் நின்றிருந்த அக்‌ஷயின் அந்தராத்மாவில் ஒரு குரல் ஒலித்தது. ’இந்த உலகில் எதுவும் காரணமில்லாமல் நடப்பதில்லை’. அடுத்த கணம் சைத்தான் மலையில் மைத்ரேயன் பார்வை வழியில் கண்ட ரகசியக் குகை தெரிந்தது. ஒரு காலத்தில் தியானம் செய்ய வந்த இடத்தில் ஆடு சுரங்கப்பாதையில் தவறி விழுந்து வழுக்கிச் சென்று அடுத்த மலையில் ஏறியதைப் பார்த்தது மைத்ரேயனோடு நேபாள எல்லைக்குள் நுழைய உதவியது. அன்று மைத்ரேயன் பார்வையோடு பார்த்த ரகசியக்குகை இன்றைய சூழ்நிலைக்கு உதவுவதற்காக இருக்குமோ? மைத்ரேயனைச் சிறை வைக்க மாராவுக்கு அந்த ரகசியக்குகையை விடச் சிறந்த இடம் திபெத்தில் கிடைக்க முடியாது....

அக்‌ஷய் ஆசானிடம் சொன்ன போது அவர் கவலைப்பட்டார். “சைத்தான் மலை இங்கிருந்து வெகு தொலைவில் அல்லவா இருக்கிறது!...”


மாரா கண்களைத் திறக்காததால் கௌதம் மெல்ல அந்தக் குகையை ஆராய ஆரம்பித்தான். சில மேடான பகுதிகளில் ஏறி தாவிக் கீழே குதித்தான். இப்போதைக்கு அதுவே ஒரு விளையாட்டாகத் தான் அவனுக்குத் தோன்றியது. டோர்ஜேவையும் தன்னுடன் வர சைகை செய்தான். டோர்ஜேக்கு தற்போதையத் தங்கள் நிலையை யோசித்துப் பைத்தியம் பிடிப்பது போலவே ஆகி இருந்தது. அதனால் பயத்தில் இருந்து மனத்தைத் திருப்ப அவனும் கௌதமுடன் சேர்ந்து கொண்டான்...

மாராவுக்கு மைத்ரேயன் எந்த பாதிப்புமே இல்லாமல் தியானத்தில் ஆழ்ந்து போயிருந்தது ஆத்திரத்தை எழுப்பியது. மைத்ரேயன் ஏதோ பெரிய அஸ்திரமோ சக்தியோ வைத்திருக்கிறான் என்ற தகவல் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் இப்போதே அவன் மைத்ரேயனைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம்..... அந்த அஸ்திரத்தை அவன் அத்தனை ரகசியமாய் வைத்திருக்க முடிந்தது ஆச்சரியமாகத் தான் இருந்தது. நன்றாக யோசித்துப் பார்த்தால் எல்லாமே திட்டமிட்டு தான் அவன் செயல்பட்டிருக்கிறான். அவன் சம்யே மடாலயம் போய் அவர்கள் முன்பே பலப்படுத்தி இருந்த சக்தி மையத்தைக் கலைத்து பலவீனப்படுத்தாமல் இருந்திருந்தால், திபெத்திலிருந்து அவன் போகும் முன்பே அவனை மாராவால் கொன்றிருக்க முடியும். அப்படி கலைத்ததால் தான் அவர்களது மகாசக்தி அந்த சக்தி மையத்தை நிலை நிறுத்தாமல் அவனை நெருங்க வேண்டாம் என்று அறிவுரை சொன்னது. அவன் திபெத்திலிருந்து இந்தியா போனதும் முதல் வேலையாக புத்த கயாவுக்குச் சென்று ஏதோ அபூர்வசக்தி பெற்று விட்டான். போன ஜென்மத்தில் அதை அங்கு புதைத்தோ மறைத்தோ வைத்திருப்பான் போல இருக்கிறது. அதை எடுப்பதற்காகவே இந்தியா போனது போலவும், அது முடிந்ததும் திரும்பி வந்தது போலவும் தானிருக்கிறது. அதனால் தான் அவன் கடத்தப்படும் போது கூட அமைதியாக வந்திருக்கிறான். அந்த அஸ்திரத்தைப் பெற்று விட்டபடியால் தான் சம்யேவில் மாரா தன் சக்தி மையத்தை உருவாக்கி அலைகளால் அவனுக்கு அறிவித்த போதும் அலட்டாமல் இருந்திருக்கிறான். யோசித்துப் பார்த்தால் எல்லாமே கோர்வையாக கச்சிதமாகப் புரிகிறது. ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு கவனமாகவே வைத்திருக்கிறான் இந்த அழுத்தக்காரன்.

அவன் அமைதியை முதலில் குலைக்க வேண்டும். அப்படியானால் தான் நிதானம் இழப்பான். அவன் மனதில் மறைத்திருக்கும் ரகசியங்கள் மெள்ள வெளிவரும். அமைதியாக தியானம் செய்து மனதைப் பலப்படுத்தி வைத்துக் கொண்டே இருக்க அவனை விடக்கூடாது....

மாரா கணகளைத் திறந்து கேட்டான். ”நான் யார் தெரியுமா மைத்ரேயா?”

மைத்ரேயனும் கண்களைத் திறந்தான். “அதை நீ தெரிந்து கொண்டாகி விட்டதா?”

அவன் கேட்ட தொனியில் கிண்டல் இருக்கவில்லை என்றாலும் மாரா கிண்டலை உணர்ந்தான். ஆனாலும் த்த்துவ விசாரணைக்குள் நுழைந்து விடாமல் புன்னகையுடன் சொன்னான். “நான் என்னை எப்போதும் தெரிந்தே வைத்திருக்கிறேன் மைத்ரேயா. நான் இன்று உலகப்பணக்காரர்களில் முதல் பத்து பேர்களில் ஒருவன். மீதி ஒன்பது பேரில் இரண்டு பேர் என்னுடைய ஆட்கள். பல உலக நாடுகளில் என் ஆதிக்கம் இருக்கிறது. நீங்கள் கண்டு நடுங்கும் சீனாவே என்னைப் பகைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் பிடித்து வந்த உன்னை லீ க்யாங் எனக்கு விட்டுக் கொடுத்திருக்கிறான். உலகம் முழுவதும் எத்தனையோ தொலைக்காட்சிகள், எத்தனையோ பத்திரிக்கைகள், எத்தனையோ நிறுவனங்கள், எத்தனையோ லட்சம் ஊழியர்கள் என் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். உலக மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்று தீர்மானிப்பவன் நான்... நான் தீர்மானிக்கும்படியே செய்திகள் திரிக்கப்பட்டு வெளியாகின்றன. அதை வைத்தே பொதுஜன அபிப்பிராயம் உருவாகிறது...”

கவனமாகக் கேட்டு விட்டு மைத்ரேயன் தலையசைத்தான். ஆச்சரியம் இல்லை. பிரமிப்பு இல்லை. அவன் ஏதோ நான்கு எருமைகள், இரண்டு ஆடுகள் வைத்திருப்பதாகச் சொன்னது போல இருந்தது அவன் எதிர்வினை.

பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட மாரா சொன்னான். “என் தனிப்பட்ட சக்திகளின் பரிச்சயம் உனக்குக் கண்டிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சம்யே மடாலயத்தில் இருந்து கொண்டு நீ இருக்குமிடத்தையும் உன்னையும் பார்த்தேன். நீயும் என்னைக் கவனித்தாய்”

மைத்ரேயன் எதுவுமே சொல்லாமல் அவனையே பார்த்தான்.

மாரா சொன்னான். “அன்றைய சக்திகளை விடக் கூடுதலாக பல சக்திகளை நான் இந்த சில நாட்களில் பெற்றிருக்கிறேன் மைத்ரேயா? ஏன் தெரியுமா?

“சொல்”

”உன்னை அழிக்கத்தான்”

அதற்கும் அமைதி மாறாமல் மைத்ரேயன் சரியென்று தலையசைத்ததை மாராவால் தாங்க முடியவில்லை. என்ன சொன்னால் இந்த அழுத்தக்காரன் அதிர்வான் என்று யோசித்து விட்டு மாரா கேட்டான். “உன் கடைசி ஆசை என்ன மைத்ரேயா?”

மைத்ரேயன் புன்னகைத்தபடி கௌதமைக் கண்களால் காட்டி சொன்னான். “இவனுடன் விளையாட ஆசைப்பட்டது தான்”

தான் கேட்ட கேள்விக்கு புத்தனின் அவதாரமாக ‘ஆசையே எனக்கில்லை’ என்கிற பதிலையோ, இல்லை சாதாரண ஒருவனாக ஏதாவது வருங்கால ஆசையையோ தான் மைத்ரேயனிடமிருந்து மாரா எதிர்பார்த்திருந்தான். கடைசி ஆசையாக கடந்த கால ஆசை ஒன்றைச் சொல்லி விட முடிந்த முதல் மனிதன் இவனாகத் தான் இருப்பான் என்று தோன்றியது. சாகும் நாளில் கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டால் ஒரு ஆசையைச் சொல்லி, அது முடிந்து விட்டால் உடனே இன்னொரு ஆசை எழுந்து அத்துடன் சாகும் பிறவி அல்லவா மனிதன்!

”பாவம் அவன் நாளைக்குள் சாகப்போகிறான்” என்று மாரா கௌதமைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

அவன் திபெத்திய மொழியில் பேசியதால் விளையாடிக் கொண்டிருந்த கௌதமுக்குப் புரியவில்லை. ஆனால் விளையாட்டை நிறுத்தி விட்டு அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த டோர்ஜே அதிர்ச்சி அடைந்தான்.

மைத்ரேயன் அமைதி மாறாமல் மாராவையே பார்த்தானே ஒழிய எதுவும் சொல்லவில்லை. அவன் எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்து சிறிது தாமதித்து பின் மாரா தானாகவே சொன்னான். “நீ நினைத்தால் அவனைக் காப்பாற்ற முடியும்”

“எப்படி?”

“நீயாக தற்கொலை செய்து கொண்டால் அவனை நான் கொல்லாமல் விட்டு விடுவேன்”

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

10 comments:

  1. பரபரப்பின் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது

    இனியாவது வாரமிருமுறை தரலாமே

    ReplyDelete
  2. சுந்தரம்September 29, 2016 at 6:38 PM

    மைத்ரேயன் அசத்துகிறான். மாரா அதிர வைக்கிறான். என்ன ஆகும் இனி என்று திக் திக்.

    ReplyDelete
  3. Mythreyan and Mara interactions are super sir.

    ReplyDelete
  4. அருமை
    சிறந்த பதிவு

    ReplyDelete
  5. சாகும் நாளில்கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டால் ஒரு ஆசையைச் சொல்லி, அது முடிந்து விட்டால் உடனே இன்னொரு ஆசை எழுந்து அத்துடன் சாகும் பிறவி அல்லவா மனிதன்!
    எத்தனை உண்மைகள்!!! வைர வரிகள்.
    கதை பிரமாதம்! இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்கிறேன் (கதையிலுள்ள) கௌமத புத்தரின் பரிணாமத்திற்காக... தவிப்புடன்...

    ReplyDelete
  6. Yes, pl give two times

    ReplyDelete
  7. Varam irumurai thara venam, 4 weeks updatea two weeksla kuduthudunga

    ReplyDelete
    Replies
    1. Your way of asking is nice. Same meaning but words are different. I read it two times then only I got the meaning

      Delete