சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 1, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 114

க்‌ஷயும் ஆசானும் நேபாள நட்பு நெடுஞ்சாலையில் சிறுவியாபாரிகள் வேடத்தில் திபெத்திய எல்லையைக் கடக்க காத்திருந்தார்கள். காத்மண்டுவில் இருந்து வந்திருக்கும் சுற்றுலா வாகனங்களில் இருக்கும் பயணிகளைத் தான் எல்லைப் பகுதி அதிகாரிகள் மிக அதிகமாக சோதனையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலரின் தாடியைக் கூட இழுத்து உண்மையான தாடி தானா என்று பார்த்ததாக வெளியே பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். புதிய விசாக்களுடன் வரும் புதிய பயணிகள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அந்த அளவு வாடிக்கையாகச் செல்லும் வியாபாரிகள் சோதனைக்கு ஆளாகவில்லை. பழைய நைந்து போன, அதிகமாக அவர்களது முத்திரைகள் முன்பே குத்தியிருந்த, கடவுச்சீட்டுகள், அனுமதிச்சீட்டுகள் சாதாரணமாகத் தான் சோதனைக்குள்ளாயின. 

வாடிக்கையாகச் செல்லும் வியாபாரிகள் மூவரை முன்பே அக்‌ஷயும் ஆசானும் நட்பாக்கிக் கொண்டு அவர்களுடனேயே ஒரு பழைய ஜீப்பில் பயணித்து வந்திருந்தனர். அதிகாரிகள் அவர்களுடைய அனுமதிச்சீட்டுகளைப் பரிசோதித்த போது கூட வாடிக்கையாக வருபவர்கள் காட்டும் அசிரத்தையைக் காட்டியபடியே மற்ற வியாபாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கொட்டாவியை அடக்கியபடி அவர்களை திபெத்திற்குள்  நுழைய விட்டு, அடுத்த வாகனத்தை அருகே வர அந்த அதிகாரி சைகை காட்டினான். அவசரமில்லாமல் ஜீப் திபெத்தினுள் நுழைந்தது.



லீ க்யாங்குக்கு மைத்ரேயன் என்ற பெயரிட்ட கோப்பு வாசிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டவர் தகவல் அழிக்கப்பட்டிருக்கிறது என்ற எச்சரிக்கை வந்து சேர்ந்தது. அந்த எச்சரிக்கையுடன் அதைச் செய்த ஆளின் பெயரும், நேரமும் கூட வந்து சேர்ந்தன. கோபம் வேகமாய் ஆட்கொள்ள யாரந்த துரோகி என்று பார்த்தான். உளவுத்துறையில் அவனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஒரு உயரதிகாரி.... இது வரை எந்த கெட்ட பெயரையும் வாங்காதவர். திறமைசாலி. ஆனால் தேசபக்தியும் நாணயமும் தான் குறைச்சலாகப் போய் விட்டது. உண்ணும் வீட்டுக்கே இரண்டகம் செய்யும் இது போன்ற ஆட்களைத் தூக்கில் தான் போட வேண்டும் என்று ஆத்திரத்தோடு நினைத்தான். இந்தத் தகவல் உளவுத்துறைக்கும் போயிருக்கும் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று காத்திருந்தான்.

வாங் சாவொ இன்னும் அந்தப் பதினாறு பயணிகள் திபெத்தில் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. சுற்றுலா நிறுவனம் அவர்களை அழைத்துச் செல்வதாய் ஒப்புக் கொண்டிருந்த அத்தனை இடங்களுக்கும் அவன் ஆட்கள் அனுப்பிப் பார்த்திருக்கிறான். ஆனால் எங்கேயும் அவர்கள் இல்லை என்பது ஒரு தலைவலியாக இருந்தது. அவர்கள் பயணிகள் அல்ல என்பது இப்போது தெளிவாகி விட்டது.....


காபோதி மரத்தடியில் குனிந்து மைத்ரேயன் என்ன எடுத்தான்.....திபெத்தியக் கிழவர் கேட்டார். அவர்களுடைய தெய்வமான மாரா தாழ்ந்த குரலில் “தெரியவில்லைஎன்றது. “அடுத்தவன் மனதைப் படிக்க முடிந்த அவன் தன் மனதில் உள்ளதை மறைக்கவும் முடிந்தவன். அதில் மிகவும் கெட்டிக்காரன். அவன் மனதை ஊடுருவ முடியவில்லை. சம்யே மடாலயத்தில் நம் சக்தி பலமாக நிலைபெற்ற பின் தான் என் சக்திகளைத் திரும்பப் பெற்றேன். பத்மசாம்பவாவின் தில்லுமுல்லை நான் உணர்ந்தேன்..... இப்போது ஒருவன் மேல் மனதில் உள்ளதை என்னால் காண முடியும். எதுவானாலும் இரண்டாவது ஆள் அறிந்தால் அதையும் என்னாலும் அறிய முடியும். இரண்டாவது ஆள் விழித்த நிலையில் மட்டுமல்ல, அரைகுறையாய் உணர்ந்தாலும் அதைத் தெளிவாக்கி நான் காண முடியும். ஆனால் மகாபோதியின் அடியில் அவன் செய்தான் என்பது மைத்ரேயன் மேல்மனதிலும் இல்லை. அவனுடன் போனவனும் பார்க்கவில்லை.....

இப்போது அவர்களுக்குப் புரிந்தது. இரண்டு காட்சிகளும் அமானுஷயனின் மேல் மனமும், ஆழ்மனமும் அறிந்தவை. அதில் அவனுக்குத் தெளிவில்லாமல் இருந்த பகுதிகளையும் மாரா தெளிவாக்கி காட்டி விட்டது.

அடுத்ததாக மூன்றாவது காட்சி மாரா சிலை முன் விரிந்தது. மைத்ரேயன், கௌதம் டோர்ஜே மூவரும் பாம்பு, ஏணி விளையாடிக் கொண்டிருந்தார்கள். பகடையை உருட்டி, வந்த எண்ணுக்கு காயை நகர்த்தி, ஒரு பெரிய ஏணியில் ஏறி வைத்த பின் கௌதம் எழுந்து நின்று ஆரவாரம் செய்ய டோர்ஜேயும், மைத்ரேயனும் அவனைப் புன்னகையுடன் பார்த்தார்கள்.   

திடீரென்று மைத்ரேயன் திரும்பிப் பார்த்தான். அவன் அவர்களையே பார்ப்பது போல் இருந்தது. அமைதியாக சில வினாடிகள் கூர்ந்து பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான். அதன் பின் திரும்பவேயில்லை. ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல அவன் தொடர்ந்து ஆட ஆரம்பித்தான்.  அவர்கள் அனைவருமே அவன் தங்களைப் பார்த்ததை உணர்ந்தார்கள்.

அந்தக் காட்சி மறைந்தது. கிரீச் குரல் உச்சத்தில் அலறியது. “பார்.... அவனுக்கு பயமே இல்லை..... கவலையும் இல்லை..... அதை உடையுங்கள்.... அவனை பயம் உணர வையுங்கள்.... துக்கம் உணர வையுங்கள்.... பின் அழியுங்கள்...... இனி ஒரு அவதாரம் கூடாது.....

“அவனை எப்படி அழிப்பது உத்தமம் என்று மாரா அறிய விரும்பினான்...திபெத்தியக் கிழவர் சொன்னார்.

சில வினாடிகள் சத்தமே இல்லை. யோசிப்பது போலத் தெரிந்தது. பின் அந்த அமானுஷ்யக் குரல் ஒலித்தது. மைத்ரேயனோடு இரண்டு சிறுவர்களையும் சிறை பிடியுங்கள்..... இந்திய சிறுவனைக் கொல்லுங்கள்..... கண்டிப்பாக மைத்ரேயன் அவனைக் காப்பாற்ற தன்னிடம் மறைத்து வைத்திருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே தீர்வான்.... ஒரு முறை அவன் பயன்படுத்திய பின் அந்த சக்தியையும் அதன் தீவிரத்தையும் மாரா புரிந்து கொள்வான். அந்த சக்திக்கு எதிர்சக்தி என்ன, அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதை மாராவுக்குக் கண்டுபிடிக்க முடியும். இந்த சில நாட்களில் என் அனைத்து சக்திகளையும் அவனுக்குத் தந்திருக்கிறேன். எல்லாவற்றையும் பயன்படுத்தி அவனை அழிக்கச் சொல்.

அமெரிக்க செனெட்டர் பெண்மணி கேட்டாள். ”அந்த சக்தியை மைத்ரேயன் முதலிலேயே மாரா மீது பயன்படுத்தி மாராவை அழிக்க முற்பட்டால் என்ன செய்வது?”

“மைத்ரேயன் எந்த சக்தியையும் தானாக முதலில் பயன்படுத்த மாட்டான்....” கிரீச் குரலில் மாரா ஆணித்தரமாகச் சொன்னது. “தன்னையோ, மற்றவர்களையோ காக்க வேண்டிய நேரத்தில் மட்டும் தான் சக்தியைப் பயன்படுத்துவான். அதில் சந்தேகம் வேண்டாம்....”

ஜப்பானில் இருந்து வந்தவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “மாராவிடம் பல சக்திகள் இருப்பது போல் மைத்ரேயனும் மறைத்து வைத்திருப்பது ஒரு சக்தியாக இல்லாமல் பல சக்திகளாக இருந்தால் என்ன செய்வது? அவன் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தலாமல்லவா?

“அவன் பல சக்திகள் ஒளித்து வைக்கவில்லை. ஒரே அஸ்திரம் தான் வைத்திருக்கிறான். அதை என் சக்தியால் உணர்கிறேன். அந்த ஒன்றில் அவன் பலத்த நம்பிக்கை வைத்திருக்கிறான்.... அதையும் அறிவேன்.....
ஒரு நிமிடம் அங்கே நிசப்தம் குடிகொண்டது. ஒருவர் கேட்டார். “மாரா தவிர்த்து மற்ற நம் ஆட்கள் என்ன செய்ய வேண்டும்....?

உங்கள் இடங்களுக்கு திரும்பிப் போங்கள். இந்த மூன்று நாட்களும் வேறு எதையும் செய்வது தவிர்த்து உங்கள் சக்திகளைக் குவித்து இங்கே அனுப்புங்கள். இந்த இடம் நம் சக்தி மையமாகட்டும். மைத்ரேயன் அழிந்தான் என்று அறிந்த பிறகே உங்கள் கவனம் வேறு பக்கம் நகரட்டும்....

இனி கேட்க எதுவுமே இல்லை என்று அவர்கள் நினைத்த போது மிக மென்மையாக அவர்கள் தெய்வத்தின் குரல் ஒலித்தது. “மாராவிடம் சொல்லுங்கள்.... அவன் இப்போது எல்லா சக்திகளையும் பெற்றிருக்கிறான்.... மைத்ரேயனை அழிப்பது ஒன்றே அவன் செய்ய வேண்டியது..... அதற்காகத் தான் அவன் பிறந்திருக்கிறான் என்பதை ஞாபகப் படுத்துங்கள்... விடை பெறுகிறேன்

மாராவின் உடல் தொய்ந்து போனது. நீல நிற ஒளிவெள்ளத்தில் அவன் அப்படியே அசைவில்லாமல் சரிந்திருந்தான்.

திபெத்தியக் கிழவர் “அமேசான் காடுகள்என்று சொல்ல மாராவைச் சூழ்ந்திருந்த நீல ஒளி மங்க ஆரம்பித்தது. கோரமான மாற்றத்திலிருந்து மாரா இயல்பான அழகான வடிவுக்கு மெல்ல மெல்ல வர ஆரம்பித்தான். அவன் கட்டுகளை அவிழ்த்தார்கள்.

அவனுடைய முழு சக்தியும் உறிஞ்சப்பட்டிருந்த போதும் மாரா தன் மனபலத்தைத் திரட்டிக் கொண்டு நிமிர்ந்தான். “சொல்லுங்கள்என்றான்.

திபெத்தியக் கிழவர் சொல்ல ஆரம்பித்தார். முழுவதும் கேட்டு விட்டு மாரா சொன்னான். “எல்லாரும் போகலாம்”. அவர்கள் எழுவதற்கு முன் அவன் உறங்கி விட்டிருந்தான். ஒரு மணி நேர உறக்கத்திற்குப் பின் அவன் விழித்த போது அனைவரும் போயிருந்தார்கள். தீபங்கள் மட்டும் அந்த குகைக் கோயிலில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

எழுந்து கோயில் சிலை முன் மண்டியிட்ட மாரா சொன்னான். “மைத்ரேயன் நாளை இங்கிருப்பான். மூன்றாவது நாள் இங்கேயே முடிவான். மகாசக்தியே, இது நான் தங்களுக்குத் தரும் வாக்கு!

(தொடரும்)
என்.கணேசன்  


(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)
                                


10 comments:

  1. வரைமுறையே இல்லாத பரபரப்புடன் செல்கிறது

    முக்கியமான நேரத்தில் தொடரும் போட்டுவிடுகிறீர்களே.

    எக்ஸல்லன்ட் எக்ஸல்லன்ட் எக்ஸல்லன்ட்

    ReplyDelete
  2. அர்ஜுன்September 1, 2016 at 6:51 PM

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. கண் முன் விரிகின்றன காட்சிகள். பிரமாதம் சார். தேர்ந்தெடுக்கும் படங்களும் அருமை.

    ReplyDelete
  3. This spiritual thriller is going great. Nowadays these type of lengthy novels (especially the interesting ones) are becoming rarer and rarer. You are maintaining the tempo well sir. Hats off!

    ReplyDelete
  4. வித்யஸ்ரீSeptember 2, 2016 at 7:20 AM

    கோவை புத்தக திருவிழாவில் இந்த நாவலை வாங்கிப் படித்தேன். முடிவு மனதைத் தொட்டது. க்ளைமேக்ஸ் அட்டகாசம்.

    ReplyDelete
  5. Superb. You are maintaining tempo very well.

    ReplyDelete
  6. முதல் பாகம் மற்றும் பிற பாகங்கள் எங்கே உள்ளது?

    ReplyDelete