சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 21, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 108


மைத்ரேயனின் இரண்டாவது கேள்வி லீ க்யாங்கை கேலி செய்வது போல இருந்தது. உன் வாழ்க்கையையே நீ தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக உன்னால் சொல்ல முடியவில்லை. அப்படி இருக்கையில் என் வாழ்க்கையை தீர்மானிப்பவன் என்று என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது என்று நாசுக்காகக் கேட்கிறானோ?

குரலில் கடுமையைக் கொண்டு வந்து லீ க்யாங் சொன்னான். “என் வாழ்க்கையை நான் தீர்மானிக்க முடியுமோ முடியாதோ ஆனால் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறேன். அது சிறப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் சிறப்பில்லாத காரியங்களைச் செய்வதில் எந்த சங்கடமும் படாதவன். புரிகிறதா?”

மைத்ரேயன் புன்னகையுடன் சொன்னான். “புரிகிறது ஐயா”

லீ க்யாங்குக்கும் புன்னகைக்கத் தோன்றியது. ஆனால் வரவிருந்த புன்னகையை அப்படியே நிறுத்தி விட்டு கடுமையாகச் சொன்னான். “இங்கே நான் சொல்கிறபடி நடக்கிற வரை என்னால் எந்தப் பிரச்னையும் வராது. அப்படி நடக்கா விட்டால் உனக்கு மட்டுமல்ல, வெளியே ஒரு பொடியன் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே அவன், உன் அம்மா, உன் இரண்டு அண்ணன்கள் அத்தனை பேருக்கும் நரக வாழ்க்கையை ஏற்படுத்தி விடுவேன். மரணமே பரவாயில்லை என்று நீங்கள் நினைக்கும்படி செய்து விடுவேன். இதில் உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?”

“இல்லை ஐயா. நான் இது வரை மற்றவர்களை அனுசரித்தே வாழ்ந்தவன். நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான்.

“இது வரை அனுசரித்து வாழ்ந்திருந்தால் திபெத்தை விட்டுப் போயிருக்க மாட்டாயே” லீ க்யாங் சந்தேகத்தோடு கேட்டான்.

“ஒரு அன்பர் ஒரு நாள் இரவு எங்கள் வீட்டுக்கு வந்து என்னை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு போனார். அவரிடம் நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அங்கிருந்து ஒருவர் என்னைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கு வரை திரும்பக்கூட்டிக் கொண்டு வந்து விட்டார். அவரிடமும் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது நீங்கள் சொல்வதற்கும் நான் மறுக்கப் போவதில்லை. இதில் அனுசரணைக் குறைவு எங்காவது இருக்கிறதா ஐயா”

லீ க்யாங் மெல்லப் புன்னகைத்தான். “நீ முன்பு அதிகம் பேசாதவனாயிற்றே. இப்போது இவ்வளவு பேசுகிறாயே”

“நான் எப்போதும் அதிகம் பேசாதவன் தான். ஆனால் நீங்கள் கேட்டதற்கு நான் பதில் சொல்லாமல் இருந்தால் அதை நீங்கள் அனுசரணைக்குறைவாக நினைத்து விடுவீர்களோ என்று தான் விளக்கினேன் ஐயா”

லீ க்யாங் மீண்டும் முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டான். “நீ தான் புத்தரின் அவதாரமான மைத்ரேயனா?”

“எனக்கு இந்தப் பிறவி தவிர வேறு பிறவி நினைவு எதுவும் இல்லை ஐயா” உடனே வந்தது பதில்.

“நல்லது. புத்தரின் அவதாரமான மைத்ரேயன் என் பாதுகாப்பில் தான் இருக்கிறான். அவன் தான் உலகம் அறியப்போகும் மைத்ரேயன். புரிகிறதா?” என்று கேட்டு கூர்ந்து பார்த்தான் லீ க்யாங்.

“அப்படியே ஆகட்டும் ஐயா” என்று சிறிதும் வருத்தமோ, தயக்கமோ இல்லாமல் மைத்ரேயன் சொன்னான்.

“நீ அவனுக்கு தியானம் எல்லாம் சொல்லித் தர வேண்டும். சரியா?”

“சரி ஐயா”

லீ க்யாங் இப்படிப்பட்ட ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. புத்தரின் அவதாரத்திற்கு நான் சொல்லித் தர என்ன இருக்கிறது ஐயா என்று கிண்டலாகக் கேட்டாலும் கேட்பான் என்று நினைத்திருந்தான்.... ஆனாலும் திருப்தியை வெளிக்காட்டாமல் கடுமையாக சொன்னான். “இப்படி ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஐயா போட்டுப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை”

“சரி”



தேவ் லீ க்யாங்கிடம் சொன்னபடி அமெரிக்காவுக்குத் தான் சென்றான். நியூயார்க் நகர விமான நிலையத்தில் இறங்கியவன் உடனடியாக மாராவைச் சந்தித்தான்.

மைத்ரேயனைக் கடத்தி வரும் வேலையை லீ க்யாங் ஒப்படைத்த மறு நாளே மாரா அவனைத் தொடர்பு கொண்டிருந்தான். ஆரம்பத்தில் இருந்து லீ க்யாங்கிடம் ஒப்படைக்கும் கணம் வரை மைத்ரேயன் குறித்த சின்னச் சின்ன தகவல்களையும் ஒன்று விடாமல் தெரிவிக்க வேண்டும் என்பது தான் அவன் கொடுத்த வேலை.

தேவுக்கு இதற்கு முன்பும் மாரா சில வேலைகளைத் தந்திருக்கிறான். அதற்கு தாராளமாகவே பணமும் தந்திருக்கிறான். மாராவை ஒரு உலகப்பணக்காரன் என்று மட்டுமே அறிந்திருந்த தேவுக்கு அவன் மைத்ரேயன் விஷயத்தில் காட்டும் இந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்து மாரா மத ஆதரவாளனோ, மத எதிர்ப்பாளனோ அல்ல. வியாபாரம், பணம் தவிர வேறு எதிலும் ஆர்வம் இருப்பவன் அல்ல. அப்படிப்பட்டவன் புத்தரின் அவதாரம் என்று சிலரால் நினைக்கப்படும் ஒருவனைப் பற்றி சின்னச் சின்ன தகவல்கள் கூட ஒன்று விடாமல் தெரிந்து கொள்வது ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதைக் குறித்து அவன் அதிகம் குழப்பிக் கொள்ளவும் இல்லை. ஒரு வேலையில் இரண்டு இடங்களில் பணம் வருகிறதென்றால் சரி தான் என்று நினைத்தான்.

மாராவிடம் ஆரம்பத்தில் இருந்து கடைசியில் லீ க்யாங்கிடம் ஒப்படைத்து பேசி விட்டு வந்தது வரை எல்லாவற்றையும் சொன்னான். மாரா இடைமறிக்காமல் மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே வந்தான். மயக்க மருந்து கொடுத்து கூட மயங்காமல் விழித்துக் கொண்டே வந்ததைச் சொல்லும் போது ஆச்சரியத்தை எதிர்பார்த்தான். ஆனால் மாரா ஆச்சரியத்தை அதில் மட்டுமல்ல அவன் சொன்ன எதிலுமே காட்டவில்லை. கடைசியில் கேட்க ஆரம்பித்தான்.

“மயக்கமில்லாமல் விழித்திருந்தும் ஏன் அவன் கத்தவில்லை, நீ கடத்துவதைத் தடுக்கவில்லை என்று நினைக்கிறாய்”

“நான் அது பற்றி தான் நிறைய யோசித்தேன். கடைசியில் அவனும் திபெத் வருவதைத் தான் விரும்புகிறானோ என்று கூட சந்தேகம் வந்தது.....”

“திபெத்திற்குத் தான் அழைத்துப் போகிறாய் என்று அவனுக்கு எப்படித் தெரியும்”

“அவனுக்கு நம் மனதில் இருப்பதெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறதால் அதுவும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.... நான் மயக்க ஊசி போடலாம் என்று நினைத்தவுடனே அது வேண்டாம் என்று நேரடியாகப் பேசியவன், என் சூட்கேஸில் இரண்டு பாட்டில் மயக்க மருந்து இருப்பதைத் தெரிந்து கொண்டவனுக்கு மற்றதெல்லாம் கூடத் தெரியாதா என்ன?”

”அந்த சக்தி இருப்பதால் அவன் புத்தரின் அவதாரமாகவே இருப்பான் என்று நம்புகிறாயா?” மாரா மைத்ரேயன் பற்றி அதிகமாய் எதுவும் தெரியாதவன் போலவும், ஏதோ ஒரு விஷயத்திற்காக இப்போது தெரிந்து கொள்ள விரும்புபவன் போலவும் கேட்டான்.

“அந்த விளையாட்டு ஆர்வத்தைப் பார்த்தால் புத்தராக நினைக்க முடியவில்லை. திறமையான விளையாட்டுப் பையனாகத் தான் தெரிகிறது. ஆனால் விளையாட்டில் அடுத்தவனுக்கு விட்டுக் கொடுப்பதைப் பார்த்தால், ஜெயித்து வரும் விளையாட்டை தடால் என்று முடித்து விட்டு தியானம் செய்ய உட்கார்வதைப் பார்த்தால் இதெல்லாம் சாதாரணமானவர்கள் செய்யக்கூடிய காரியம் அல்ல என்றும் தோன்றுகிறது. அவன் புத்தரின் அவதாரமோ இல்லையோ சாதாரணமானவன் அல்ல என்பது மட்டும் நிச்சயம்....”

இன்னும் நிறைய கேள்விகள் மாரா கேட்டான். எவ்வளவு நேரம் தியானம் செய்தான், அப்போது அவன் முகம் எப்படி இருந்தது, நீ எப்படி உணர்ந்தாய், அவன் என்னவெல்லாம் சாப்பிட்டான், எவ்வளவு சாப்பிட்டான், வாய் விட்டு சிரிப்பதுண்டா, உணர்ச்சி வசப்பட்டதுண்டா, அவனாகப் பேசிய போதெல்லாம் எதைப் பற்றிப் பேசினான், என்பது போல் ஏராளமான கேள்விகள்..... சில கேள்விகளுக்கு தேவ் நினைவுபடுத்தி யோசித்துச் சொல்ல வேண்டி இருந்தது.... சில கேள்விகள் இதையெல்லாம் கூட கேட்பார்களா என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின. ஆனால் மாரா கேட்டான். எல்லாவற்றிற்கும் தேவும் பதில் சொன்னான்.

”அவன் யாரிடமாவது நெருங்கிப் பழகினானா?”

“அந்தப் பையன் கௌதமிடம் நெருக்கமாகப் பழகினான். மற்றவர்களுடன் ஒரு தூரத்தை எப்போதுமே தக்க வைத்துக் கொண்டான்....”

“உன்னிடமும், கௌதமிடமும் என்ன மொழியில் பேசினான்....”

“தமிழில் தான். தமிழில் நன்றாகவே பேசுகிறான்.... அவனுக்கு முன்பே தமிழ் நன்றாக வரும் போல....”

“நீ அவனுடன் இரவு கப்பலின் மேல் தளத்திற்குப் போன போது அற்புதமான அமைதியை அனுபவித்தேன் என்றாய். அந்த அனுபவத்தை விவரித்துச் சொல்லேன்...”

தேவுக்கு அதை உடனே விவரிக்கத் தெரியவில்லை. யோசித்து விட்டுச் சொன்னான். ” சொந்த ஊர் கடலூர், வாழும் ஊர் மும்பை என்பதால் சமுத்திரம் எனக்குப் புதியதில்லை. நிலா, நட்சத்திரம், காற்று, இருட்டு இதையும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவனுடன் அங்கே உட்கார்ந்திருந்த போது அதெல்லாமே புதிதாய் அழகாய் பிரம்மாண்டமாய் தெரிந்தது. கேட்ட சின்னச்சின்ன சத்தம் கூட தேவ லோக சங்கீதம் மாதிரி இருந்தது. அவனாய் கூப்பிட்டிருக்காவிட்டால் நான் மணிக்கணக்கில் அந்த அமைதியையும் அழகையும் அனுபவித்திருப்பேன்.... எனக்கு.... எனக்கு அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை..... ஆனால் பத்து லட்ச ரூபாய் கொடு. அந்த அனுபவத்தை இன்னொரு முறை தருகிறேன் என்று சொன்னால் சந்தோஷமாக பத்து லட்சம் கொடுக்கத் தயங்க மாட்டேன்....”

மேலும் நிறைய கேள்விகள் கேட்டு மாரா அவனை அனுப்பி விட்டான். இப்போது மைத்ரேயனைக் கடத்திய கணத்திலிருந்து லீ க்யாங்கிடம் சேர்த்த கணம் வரை கூடவே தான் இருந்த ஒரு உணர்வை மாரா பெற்று விட்டான். தன் ஆள் அனுப்பி இருந்த கராச்சி துறைமுகப் புகைப்படத்தையும் நீண்ட நேரம் பார்த்தான். மாலுமிகள், கேப்டன் கையசைப்பு, முக பாவம் எல்லாம் பார்த்து விட்டுக் கண்களை மூடிக் கொண்டான்.

கடைசியில் ஒரு கேள்வி மேலோங்கி நின்றது. “திபெத்திற்கு மைத்ரேயன் திரும்புவது லீ க்யாங்கின் திட்டமா? மைத்ரேயனின் திட்டமா?”

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

7 comments:

  1. excellent characterization and flow of the novel.

    ReplyDelete
  2. சுந்தர்July 21, 2016 at 5:47 PM

    கணேசன் சார். நான் ஆரம்பத்தில் இருந்தே அமானுஷ்யன் ரசிகன். இப்போது மைத்ரேயனின் ரசிகனாகவும் மாறிட்டேன். மைத்ரேயன் கேரக்டர் அருமையாக மெருகேறி வருகிறது.

    ReplyDelete
  3. கதை தொய்வே இல்லாமல் படு சுவாரசியமாக செல்கிறது.கதை எப்படிச்செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி கொண்டு செல்லும் விதம் மிக அருமை.மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  4. விஷ்ணுJuly 21, 2016 at 6:20 PM

    இது வரைக்கும் புக் வாங்கறதை தள்ளி போட்டேன். இன்னும் முடியாது போலருக்கு. சஸ்பென்ஸ் தாங்கலண்ணே.

    ReplyDelete
  5. We want more of Maithreyan talking...it is giving the kind of peace what Dev is telling when I am reading this...Thank you sir for yet another superb experience...

    ReplyDelete
  6. looks mythreyan plan....

    ReplyDelete