சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 16, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 103


யங்கிக் கிடக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் விழித்துக் கொண்டது எப்போது என்று தெரியவில்லை. அவனிடமிருந்து ஒரு சத்தமும் இல்லை.... இப்போது பார்த்தால் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தேவின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்தது. ஸ்தம்பித்த இதயம் இப்போது ஒலிம்பிக்கில் ஓடியது.... தேவ் காட்சிப்பிழையோ என்று நினைத்து மைத்ரேயனைக் கூர்ந்து பார்த்தான். இப்போது மைத்ரேயன் கண்மூடியிருந்தான். மறுபடி வெளிச்சம் போய் விட்டது. இப்போது இருட்டில் இருந்து கொண்டே மைத்ரேயன் பார்ப்பது போன்ற பிரமை தேவுக்கு ஏற்பட்டது.

நகரப் பகுதியை நெருங்கும் போது அவன் கத்த ஆரம்பிக்கலாம். நாலு பேர் கவனத்தைக் கவர முயற்சிக்கலாம்....என்றெல்லாம் தோன்ற ஆரம்பிக்க தேவ் ஆபத்தை உணர்ந்தான். கடத்திய பின் ஏற்றியிருந்த மயக்க ஊசி மருந்து இன்னும் பல மணி நேரம் வேலை செய்யக்கூடியது. அவன் எத்தனையோ முறை பயன்படுத்தியிருப்பதால் அதில் அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால் இந்தச் சிறுவனிடம் அது சரியாக வேலை செய்யவில்லையோ? இன்னொரு முறை அந்த மயக்க மருந்தைப் பயன்படுத்த வேண்டி இருக்குமோ? எதற்கும் பொறுத்திருந்து பார்த்து தேவையானால் பயன்படுத்தலாம்..... அதிகமாய் அதை பயன்படுத்தினால் உயிருக்கும் ஆபத்து.... உயிரோடு ஒப்படைப்பதாக லீ க்யாங்கிடம் வாக்கு தந்திருக்கிறான்.

கார் கொச்சினை நெருங்கியது. ஆட்கள், சிக்னல்கள் என கார் கடக்க ஆரம்பித்த போது தேவ் இறுக்கத்தை உணர்ந்தான். மைத்ரேயன் எப்போது வேண்டுமானாலும் கத்த ஆரம்பிக்கலாம் என்று பயந்தான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படியானால் அவன் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது போல் தோன்றியது பிரமையோ?



சான் ஆஸ்பத்திரி வராந்தாவில் அக்‌ஷயைச் சந்தித்தார். அவரைப் பார்த்தவுடன் அக்‌ஷய் வாழ்க்கையில் முதல் முறையாகக் கூனிக்குறுகினான். அவர் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டு வேதனையுடன் சொன்னான். “என்னை மன்னித்து விடுங்கள் ஆசானே. ஒத்துக் கொண்டபடி மைத்ரேயனை உங்களிடம் என்னால் ஒப்படைக்க முடியவில்லை. எதிர்பாராமல் என்னென்னவோ நடந்து விட்டது....”

ஆசான் அவன் இரண்டு கைகளையும் தன் கண்களில் ஒத்திக் கொண்டு கண்கள் ஈரமாகச் சொன்னார். “உங்கள் உயிரைப் பணயம் வைத்து மைத்ரேயரை அழைத்து வந்ததற்கு நானும், என்னைச் சேர்ந்தவர்களும் பல பிறவிகள் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம் அன்பரே. இந்தியா வந்ததும் எங்களிடம் ஒப்படைக்க நான் சம்மதித்திருந்தால் உங்கள் பங்கு முடிந்திருக்கும். இங்கு வரை மைத்ரேயரை அழைத்து வர வைத்ததால் தான் அவரும், அவரோடு சேர்ந்து உங்கள் மகனும் கடத்தப்படும்படி ஆகி விட்டது. நான் தான் உங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் அன்பரே. என்னை மன்னித்து விடுங்கள்.....”

“எல்லாவற்றிற்கும் தயாராக நான் இருந்திருக்க வேண்டும் ஆசானே” அக்‌ஷய் குற்ற உணர்ச்சி குறையாமல் சொன்னான்.

“தங்கள் மீது தவறில்லை அன்பரே. விதி ஒத்துழைத்தால் ஒழிய மனிதன் எதற்கும் தயார் நிலையில் இருக்க முடிவதில்லை என்பதை என் இத்தனை நீண்ட வாழ்க்கையில் அனுபவப்பட்டிருக்கிறேன் அன்பரே. அதைப் பின்பு பேசுவோம். உங்கள் மூத்த மகன் இப்போது எப்படி இருக்கிறார்?”

“நலமாக இருக்கிறான். வீட்டுக்கு அழைத்துப் போய்க் கொள்ளும்படி இப்போது தான் டாக்டர் சொன்னார்.....”


வீட்டுக்குப் போகும் போது ஆசான் கூடவே வந்தார். மரகதம், சஹானா, வருண் மூவருக்கும் மைத்ரேயனைப் பார்த்துக் கொண்டதற்காக ஹிந்தியில் நன்றி தெரிவித்தார். கௌதம் கடத்தப்பட்டதற்கு அவர்களிடமும் வருத்தம் தெரிவித்தார். மகன் நினைவில் உடைந்து போய் கண்கலங்கிய சஹானாவிடம் “போதிசத்துவர் அருளால் உங்கள் மகனுக்கு எந்தக் கெடுதலும் நேராது.... சீக்கிரமே வந்து விடுவான்” என்று தைரியம் சொன்னார்.

தனியாக அவரிடம் பேசும் போது அக்‌ஷய் சொன்னான். “எல்லா இடங்களிலும் தேடுதல் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கிறது. இது வரை எந்தத் தகவலும் இல்லை.... பிரதமர் கூட நிலவரத்தை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று உளவுத்துறை ஆட்கள் சொன்னார்கள்....”

தலையசைத்து விட்டு ஒரு கணம் அமைதியாகக் கண்மூடி பிரார்த்தனை செய்த அவர் பின் அவனிடம் ஆவலுடன் கேட்டார். “எனக்கு மைத்ரேயரைப் பற்றிச் சொல்லுங்கள் அன்பரே. இத்தனை நாட்கள் அவருடன் இருக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள். என்னவெல்லாம் நடந்தது... அவர் அந்த நேரங்களில் எப்படி நடந்து கொண்டார்...?”

அக்‌ஷய் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னான். மிகவும் பரவசத்துடன் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். மைத்ரேயனின் விளையாட்டு ஆர்வத்தை அவன் சொன்ன போது சின்னக்குழந்தை போல் மனதார சிரித்தார். பின் சின்ன வருத்தத்துடன் சொன்னார். “எனக்கு தான் அவருடன் விளையாடக் கொடுத்து வைக்கவில்லை.....”

அக்‌ஷய் பிரமிப்பு கலந்த புன்முறுவலுடன் அவரைப் பார்த்து விட்டு மற்றவற்றைச் சொன்னான். மைத்ரேயனை அடிக்க வேண்டி வந்ததை அவன் சொன்ன போது தானே அடிபட்டது போல ஆசான் துடித்தார். அக்‌ஷய் மறுபடி ஒருமுறை குற்ற உணர்ச்சியை உணர்ந்தான். ஆசான் பின் சமாளித்துக் கொண்டு தொடரச் சொன்னார். கடைசியில் புத்தகயா அனுபவத்தையும், கடத்தபடுவதற்கு முந்தைய நாளிரவு கண்ட கனவு அனுபவத்தையும் அக்‌ஷய் சொன்ன போது அவர் சிந்தனையில் மூழ்கினார்.



தேவ் கொச்சியைச் சென்றடைந்த போது இரவு மணி பதினொன்று. மீனவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் காரை நிறுத்திய போது அங்கு அவன் ஆட்கள் காத்திருந்தார்கள். கூட ஒரு மீனவனும் இருந்தான். கோவையிலிருந்து கூட வந்த பெண் காரிலிருந்து இறங்கி தன் மூதாட்டி வேடத்தைக் கலைக்க ஆரம்பித்தாள். தேவின் ஆட்கள் காரிலிருந்து மைத்ரேயனையும் கௌதமையும் இறக்கி இரண்டு சாக்குகளுக்குள் புகுத்திக் கட்டினார்கள். தேவ் கூர்மையாக மைத்ரேயனைக் கவனித்தான். உண்மையில் விழிப்பிருந்தால் இங்காவது கத்தவோ, திமிறவோ, சாக்குக்குள் புக மறுக்கவோ செய்வான் என்று எதிர்பார்த்தான். அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படியானால் காரில் அவன் விழித்துக் கொண்டிருந்தது போல தான் கண்டது பிரமையாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் சற்று நிம்மதியடைந்தான்.

பின் தேவ் மின்னல் வேகத்தில் மீனவ வேடத்திற்கு மாறினான். அவன் ஒரு கையில் தன் சூட்கேஸையும் மறு கையில் மைத்ரேயன் இருக்கும் சாக்கு மூட்டையை எடுத்துக் கொள்ள அங்கிருந்த மீனவன் கௌதம் இருக்கும் சாக்கு மூட்டையை எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரும் சாக்குமூட்டைகளை சுமந்து கொண்டு முன் செல்ல அவன் ஆட்கள் கலைந்து போனார்கள். அந்தப் பெண் சிவப்பு ஸ்கார்ப்பியோ காரைக் கிளப்பிக் கொண்டு போனாள். யாரும் ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை.

தேவும், அந்த மீனவனும் ஒரு பெரிய படகை அடைந்தார்கள். அப்போது தான் தேவ் வாயைத் திறந்தான். “ரோந்துப் படகுகள் வரும் நேரம் உனக்குச் சரியாகத் தெரியும் தானே?”

“நான் பல வருடங்களாய் இந்தக் கடலில் போய் வந்துகொண்டிருக்கிறேன்... எனக்கு ரோந்து படகுகள் வரும் நேரங்கள் அத்துபடி....”

“ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் அல்லவா ரோந்து வருவார்கள்....”

“அவை ஆட்களைப் பொறுத்து மாறும்.... இன்று ட்யூட்டியில் இருக்கும் ஆட்கள் யார் என்று தெரியும். அவர்கள் எப்படி எங்கே வருவார்கள் என்பதும் தெரியும்....” அந்த மீனவன் உறுதியாகச் சொன்னான். இந்த வேலைக்கு அவனை சிபாரிசு செய்தவன் அந்த மீனவனைப் பற்றி பிரமாதமாகச் சொல்லி இருந்தான். பணத்தை தாராளமாகக் கொடுத்தீர்கள் என்றால் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுவான். வேகமானவன் மட்டுமல்ல விவரமானவன் கூட.....”

இந்த ஒரு வேலைக்கு அவனுக்கு ஒரு லட்சம் தருவதாக பேசி முடிக்கப்பட்டு இருந்தது. படகில் இரண்டு மூட்டைகளையும் ஏற்றினார்கள். படகு கிளம்பியது. அந்த மீனவன் அதிகம் பேசாதவனாக இருந்தான். அது தேவுக்குப் பிடித்திருந்தது. படகை அவன் செலுத்திய விதமும் மிக லாவகமாகவும், வேகமாகவும் இருந்தது.

தேவுக்கு கிடைத்த தகவலின்படி எல்லா விமானநிலையங்களும், துறைமுகங்களும் கடுமையான சோதனைக்குள்ளாகி இருந்தன. கோவைக்கு அருகிலேயே கொச்சி இருப்பதால் அந்தத் துறைமுகத்தில் கெடுபிடி அதிகம் இருப்பதாகச் சொன்னார்கள். அதே போல எல்லா சோதனைச்சாவடிகள் கூட கடுமையாக சோதிக்கப்பட்டுக் கொண்டு இருந்தன. அவர்கள் சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கையிலேயே தேவ் அந்த சிறுவர்களோடு இந்திய எல்லைப் பகுதியைக் கடந்து போய்க் கொண்டே இருப்பான்.

திடீரென்று ஒரு பாறையின் பின்னால் மீனவன் படகை மறைத்து நிறுத்தினான். தேவ் ஏன் என்று கேட்கவில்லை. ஒரு வேலையில் திறமையானவன் என்று கண்டுபிடித்து அந்த வேலையை ஒப்படைத்த பின் அனாவசியமாய் கேள்வி கேட்பதோ, இடையில் மூக்கை நுழைப்பதோ அவனுக்கு பிடிப்பதில்லை. நான்கு நிமிடங்கள் கழிந்து ஒரு ரோந்துப் படகு தூரத்தில் தெரிந்தது.

ரோந்துப்படகு கண்பார்வையிலிருந்து மறையும் வரைக் காத்திருந்து விட்டு வேகமாக படகை மீனவன் செலுத்த ஆரம்பித்தான். சிறிதும் சலிக்காமல், ஓய்வெடுக்காமல் துடுப்புகளை அவன் இயக்கியது தேவை வியக்க வைத்தது. இரண்டு மணி நேரம் கழித்து தொலை தூரத்தில் ஒரு கப்பல் தெரிய ஆரம்பித்தது.

மீனவன் அவனிடம் கேட்டான். “இது தானா நீங்கள் சொன்ன கப்பல்?”

பைனாகுலரில் தேவ் பார்த்தான். கப்பலின் மேல் சீனக்கொடி தெரிந்தது. “அது தான்...” என்று தேவ் சொன்னான். மேலும் வேகமாக மீனவன் துடுப்புகளை இயக்கினான்.

இந்திய கடல் எல்லைக்கு அப்பால் சென்று கொண்டிருந்த அந்த சீனக்கப்பல் சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு வாடிக்கையாய் செல்லும் கப்பல். அது எப்போதுமே இந்திய எல்லைக்குள் நுழைவதில்லை. அதனால் அந்தக் கப்பலில் மைத்ரேயன் கடத்தப்படலாம் என்கிற சந்தேகமே யாருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை.

படகு அந்தக் கப்பலை அடைந்தவுடன் தேவ் திருப்தியுடன் புன்னகைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்

9 comments:

  1. Unexpected super plan sir. Very neat. I felt like watching breathtaking a thriller movie scene.

    ReplyDelete
  2. சுஜாதாJune 16, 2016 at 5:55 PM

    என்ன மாதிரி எல்லாம் யோசிக்கிறீங்க சார். சூப்பர். விரைவில் புத்தகமாக வருகிறது என்று போட்டிருந்தீர்கள். எப்போது வரும். ஒரே மூச்சில் படித்து விட ஆவலாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஓரிரு நாளில் வெளியாகி விடும்.

      Delete
  3. Ganeshan sir Very Happy to get it as a book ... in my home all are fans of amanushyan. its 2nd part Amanushyan they are very eager to get it.
    please tell me how to get it in online.

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் வெளியானவுடன் பதிப்பாளரை 9600123146 எண் அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். நன்றி.

      Delete
    2. You can try this link also (Marina Books)
      http://www.marinabooks.com/category?authorid=5257

      Delete
  4. செம சார். ஹீரோ மட்டும் தான் புத்திசாலித்தனமாய் ப்ளான் போடுவான்னு இல்லாம வில்லனும் அப்படி ப்ளான் போட்டு வின் ஆகிறத நீங்க காமிச்சிருக்கறது சூப்பர். விதி ஒத்துழச்சால் ஒழிய யாரும் தயாரா இருக்க முடியாதுன்னு ஆசான் சொல்ற டயலாக் க்ளாசிக். பத்து நாளுக்கு முன்னாடி தான் முதல்ல இருந்து படிக்க ஆரம்பிச்சேன். அருமையா இருக்கு. - ப்ரசாந்த்

    ReplyDelete
  5. ungalin muthal irandu naavalgalil originality illai. aenenil amanushyan bourne identity in thazhuvalil irunthathu.. paraman ragasiyamum nagavin navapaasaana lingam pattriya tv thodaraiyai pondru irunthathu. Aanal buththam saran kachamiyil ungal originality and uniqueness is there.

    ReplyDelete