சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 22, 2016

காலமாகிய பின்னும் கலெக்டரிடம் பேசிய யோகி!


மகாசக்தி மனிதர்கள்-51.


தென்னிந்திய யாத்திரையை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தொடர்ந்த போது வழியில் ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் அவரால் ஈர்க்கப்பட்டு வணங்கினான். வெங்கண்ணா என்ற பெயருடைய அவனை ஆசிர்வதித்த சுவாமிகள் எப்போதாவது பெரும் துன்பம் வரும் காலத்தில் அவரை நினைத்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்றார்.

சில காலம் கழித்து அந்தப் பகுதியில் ஆதோனி பகுதியை ஆண்டு வந்த நவாப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தூதன் பக்கத்து தேச ராஜா உள்ளூர் மொழியில் எழுதிய கடிதத்தைக் கொண்டு வந்து தந்தான். நவாபிற்குப் பாரசீக மொழி தான் தெரியுமே ஒழிய உள்ளூர் மொழி தெரியாது. தூதனும் அரபு நாட்டவன் தான். அதனால் அவனுக்கும் உள்ளூர் மொழி தெரியாது. அந்த கடிதத்தை அரசவைக்குப் போய் படித்துக் கொள்ளும் அவகாசம் இல்லாததால் நவாப் அதை அப்போதே படித்துத் தெரிந்து கொள்ள அவசரப்பட்டார். அப்போது அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த வெங்கண்ணா அவர் கண்ணில் பட்டான்.

அவனை அழைத்து அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்ட நவாப் ஆணை இட்டார். வெங்கண்ணா தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொன்னான். மொழி தெரியாததால் அவன் சொன்னதன் பொருளைப் புரிந்து கொள்ளாத நவாப் அவன் தன் ஆணைக்குக் கட்டுப்பட மறுப்பதாக எண்ணி அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டா விட்டால் கடும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று மிரட்டினார். கலங்கிப் போன வெங்கண்ணாவுக்கு அப்போது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சொல்லி விட்டுப் போனது நினைவுக்கு வந்தது. அவரை மனதில் எண்ணி வணங்கினான். உடனடியாக அவனால் அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டவும் பொருள் கூறவும் முடிந்தது.

வெங்கண்ணா படித்துக் காட்டிய தகவல் நவாபுக்கு அனுகூலமானதாக இருந்ததால் அவனை உடனடியாக ஆதோனியின் திவானாக நவாப் நியமித்தார். கல்வியறிவே இல்லாமல் இருந்த அந்த ஆட்டிடையன் கல்வியறிவை ஒரு கணத்தில் பெற்றதுடன் திவானாகவும் ஆக முடிந்தது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அருளால் தான் என்று உணர்ந்து அவருடைய பரம பக்தனாக மாறினான்.

ஆண்டுகள் பல கழிந்தன. மறுபடி ஆதோனி பகுதிக்கு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் வரவே வெங்கண்ணா நவாபிடம் சுவாமிகளின் மகாசக்தி தன் விஷயத்தில் எப்படி செயல்பட்டது என்று கூறி அவர் இந்தப்பகுதிக்குத் தற்போது வந்திருக்கிறார் என்பதைத் தெரிவித்தான்.

வெங்கண்ணா சொன்னதை நவாபால் நம்ப முடியவில்லை. அந்த மகானைச் சோதிக்க எண்ணினார். ஒரு வெள்ளித்தட்டில் மாமிசங்களை வைத்து அதைப் பட்டுத் துணியால் மூடி எடுத்துக் கொண்டு போய் அவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளைச் சந்தித்தார். அந்தத் தட்டினைப் பழங்கள் என்று சொல்லி சுவாமிகளிடம் தந்தார். அந்த பட்டுத்துணி மேல் தன் கமண்டலத் தீர்த்தத்தைத் தெளித்து விட்டு சுவாமிகள் அந்தப்பட்டுத் துணியை விலக்கிய போது அந்த வெள்ளித் தட்டில் பலவிதமான கனிகள் இருந்தன.

நவாப் திகைத்துப் போனார். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஒரு மகானே என்பதை உணர்ந்து கொண்ட அவர் சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக ஏதாவது தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். ”பொன்னோ, பொருளோ, நிலமோ எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று நவாப் சொல்ல சுவாமிகள் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மன்சாலி என்ற கிராமத்தைக் கேட்டார். அது ஒரு வறட்சியான கிராமம். அதை ஒரு ஹாஜியாரிடம் ஏற்கெனவே தானமாக நவாப் தந்திருந்தார். எனவே வேறு செழிப்பான இடத்தைக் கேட்குமாறு நவாப் கூறினார்.

ஆனால் அந்த மன்சாலி கிராமப்பகுதி துவாபர யுகத்தில் ஸ்ரீராமனை வணங்கி பிரகலாதன் யாகம் செய்த இடமாக அறிந்திருந்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், தருவதானால் அந்தக் கிராமத்தையே தரும்படி சொன்னார். ஹாஜியாருக்கு மன்சாலி கிராமத்திற்குப் பதிலாக வேறு ஒரு கிராமத்தைத் தந்து விட்டு நவாப் மன்சாலி பகுதியை சுவாமிகளுக்குத் தானமாகத் தந்தார். அங்கு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மடம் அமைத்துத் தங்கினார். அதுவே இன்று மந்திராலயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

1671 ஆம் ஆண்டு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவசமாதி அடையத் தீர்மானிக்கிறார். அவர் சீடர்களில் முக்கியமானவரான அப்பண்ண ஆச்சாரியர் சுவாமிகள் மீது பேரன்பும் பெரும் பக்தியும் வைத்திருந்தவர். அவர் இருக்கையில் ஜீவ சமாதி அடைய விட மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டு சுவாமிகள் அவருக்குத் துங்கபத்திரை நதியைக் கடந்த ஒரு இடத்தில் ஒரு வேலையைத் தந்து அனுப்பி விடுகிறார்.

பின் பிரணவ மந்திரத்தை உச்சரித்து கையில் ஜபமாலையை உருட்டியபடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு கடைசியில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சமாதி நிலையை அடைகிறார். அவர் தியானத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே அவரைச் சுற்றி சமாதி எழுப்பி வந்த அவருடைய சீடர்கள் கடைசியில் அவர் கையிலிருந்து ஜபமாலை நழுவிக் கீழே விழுந்தவுடன் கடைசி கல்லையும் வைத்து சமாதியை மூடுகிறார்கள்.

அப்பண்ண ஆச்சாரியருக்கு ஜீவசமாதி நடக்கும் விஷயம் துங்கபத்திரையின் மறு கரையில் இருக்கும் போது தெரிய வருகிறது. உடனே ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளைப் போற்றி சம்ஸ்கிருதத்தில் “ஸ்ரீ பூர்ண போதா...” என்று துவங்கும் 32 சுலோகங்கள் கொண்ட ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம் இயற்றிக் கொண்டே கிளம்புகிறார். துங்கபத்திரையில் வெள்ளம் ஏற்பட்டு அவர் அதைக் கடந்து வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர் ஸ்தோத்திரம் சொல்லச் சொல்ல துங்கபத்திரையில் வெள்ளம் வடிந்து அவர் வர வழி ஏற்பட்டது என்று கூறுகிறார்கள். எப்படியோ 32வது சுலோகத்தின் நிறைவுக்குக் கடைசி ஏழு எழுத்துக்கள் இருக்கையில் அவர் வந்து சேர்கிறார். அந்த நேரத்தில் ஜீவசமாதியின் கடைசி கல்லும் வைக்கப்பட்டு விடுகிறது.

பெரும் துக்கத்தில் ஆழ்ந்து போன அப்பண்ண ஆச்சரியரால் அந்தக் கடைசி ஏழு எழுத்துக்களைக் கூற முடியவில்லை. அந்தச் சுலோகத்தை நிறைவு செய்ய வேண்டிய கடைசி எழுத்துக்கள் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியில் இருந்து சுவாமிகளின் குரலில் தெளிவாக வந்தன. ”ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்ற அந்த கடைசி சொற்கள் சுவாமிகளின் அன்பின் அடையாளமாகவும் ஆசிர்வாதமாகவும் எண்ணி அப்பண்ண ஆச்சாரியர் மனம் நெகிழ்ந்தார். இன்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம் மிகவும் பவித்திரமானதாகவும், தங்கள் துயர் தீர்க்கும் சக்தி வாய்ந்ததாகவும் அவருடைய பக்தர்கள் நம்புகிறார்கள்.

ஜீவசமாதி அடைந்த பின்னரும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இன்றும் அவரைப் பூஜிக்கும் பக்தர்கள் தங்கள் வாழ்வில் அற்புதங்களை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் 1800 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி ஆவணமாக்கப்பட்டு இருக்கிறது என்பதால் அதை மட்டும் பார்ப்போம்.

அப்போது சர் தாமஸ் மன்ரோ பெல்லாரி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தார். மெட்ராஸைத் தலைமையகமாக்க் கொண்டு இயங்கி வந்த அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் மந்திராலயத்தில் இருந்து வர வேண்டிய வரிகள் சரியாக வசூலிக்கப்படுவதில்லை என்று தெரிவித்து அது குறித்து விசாரிக்க சர் தாமஸ் மன்ரோவையே அனுப்பியது. சர் தாமஸ் மன்ரோ நேரடியாக மந்திராலயம் சென்றார். அப்போது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ஜீவசமாதியிலிருந்து வெளி வந்து சர் தாமஸ் மன்ரோவிடம் உரையாடினார் என்று கூறுகிறார்கள். ஆங்கிலம் மட்டுமே அறிந்த சர் தாமஸ் மன்ரோவுக்கு மட்டுமே சுவாமிகள் தெரிந்திருக்கிறார். அவருக்கு மட்டுமே சுவாமிகளின் குரல் கேட்டிருக்கிறது. அவருக்கு சுவாமிகளின் மந்த்ராட்சதம் என்ற குங்குமம் கலந்த அரிசியும் கிடைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அங்கிருந்து திரும்பிய சர் தாமஸ் மன்ரோ மந்திராலயத்தில் இருந்து வரி வசூல் செய்வதற்கு விலக்கு தெரிவித்து பிறப்பித்த ஆணை ’மன்சாலி ஆதோனி தாலுகா’ என்ற தலைப்பில் (Madras Government Gazette in Chapter XI and page 213) இன்றும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் மந்திராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வரி வசூலித்தே ஆக வேண்டும் என்கிற உறுதியோடு மந்திராலயம் நுழைந்த அந்தக் கலெக்டர் மனம் மாறி அந்த மடத்திற்கு வரி வசூலில் இருந்து விலக்கு அளித்தது ஒரு அற்புதமே அல்லவா? சர் தாமஸ் மன்ரோ பின்னர் மெட்ராஸ் கவர்னராகவும் உயர்ந்தவர். அதற்கும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அருளே காரணமாக இருந்திருக்குமோ?


அடுத்த வாரம் இன்னொரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போம்.

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 7.8.2015

5 comments:

  1. arputhamana padaippu!! nandrigal!!

    ReplyDelete
  2. I have an in-depth understanding of Guru Raghavendra. The author has narrated His life history in an interesting and succinct manner. A narrative well done, given the constraints of blog.

    ReplyDelete
  3. Sir, thanks a lot for telling us this wonderful information of Sree Raghavendra Swamigal. Sir, all your articles are very useful and should be kept in everyone's house. These articles will really be very useful for our generations too.

    ReplyDelete
  4. The experience and vibrations in his Sannathi is difficult to explain. Everyone must experience atleast once in their life time. Thanks Mr Ganeshan for your contribution for spreading wonderful spiritual experience.

    ReplyDelete