சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 18, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 86


சீன உளவுத்துறையில் லீ க்யாங் உபதலைவனாக இருக்கும் போது அவர்களது ரகசியக் கோப்பு ஒன்று திருட்டுத்தனமாகப் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதும், அதைப் பார்வை இட்டவர்கள் தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் சகிக்க முடியாத அவமானமாகவே அவனுக்குத் தோன்றியது. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட லீ க்யாங் அந்த கோப்பின் வரலாறைத் தனக்கு அனுப்பி வைக்கச் சொன்னான்.

உளவுத்துறையில் ஒரு அதிரகசியமான கோப்பு உருவாக்கப்பட்ட பின் அதைப் பார்வையிடும் ஒவ்வொரு நபரின் தகவலும் தானாக அந்தக் கோப்போடு சேர்ந்து விடும். மிக மேல்மட்ட அதிகாரிகளே தங்கள் பணியாளர் எண்ணும், ரகசியக் கடவுச்சொல்லையும் போட்டு அந்தக் கோப்பைத் திறந்து படிக்க முடியும். அப்படிப் படிக்கும் போதே அது பற்றிய குறிப்பு  அந்தக் கோப்போடு சேர்ந்து பதிவாகி விடும். இந்த ஆள் இந்த தேதியில் இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை இந்தக் கோப்பைப் படித்துக் கொண்டிருந்தார் என்பது பின் எப்போது அதன் வரலாற்றைப் பார்த்தாலும் தெரிந்து விடும். யாருமே அதை அழிக்க முடியாது. அந்த அளவுக்கு மிக உயர்ந்த தொழில் நுட்பத்துடன் உருவாக்கி இருந்தார்கள். அதை யாரோ ஊடுருவி இருக்கிறார்கள். தடயத்தை அழித்தும் இருக்கிறார்கள். அதன் மூலம் சீன உளவுத் துறையையே பரிகசித்திருக்கிறார்கள். 

கண்களை மூடி சிறிது நேரம் யோசித்து முடித்த லீ க்யாங் ஒரு எண்ணுக்குப் போன் செய்தான். “உன்னிடம் பேச வேண்டும். உடனே வா

“இப்போது நான் வெளியே போய்க் கொண்டிருக்கிறேன். நாளை வந்தால் பரவாயில்லையா?

“நாளை வெளியே போய்க் கொள். இப்போது இங்கே வா.

லீ க்யாங் இணைப்பைத் துண்டித்தான். அப்போது அமானுஷ்யனின் கோப்பும், அந்தக் கோப்பின் வரலாறும் அவனுக்கு ஃபேக்ஸில் வந்து சேர்ந்தன.

அந்தக் கோப்பின் வரலாற்றுப் பக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு அமானுஷ்யனை லீ க்யாங் படிக்க ஆரம்பித்தான். படிக்கும் போது அவன் தன்னை மறந்து போனான். முடிக்கும் போது இப்படியும் ஒரு மனிதனா என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. என் தேசத்தில் இவன் பிறக்காமல் போனானே என்று மனதிற்குள் அங்கலாய்க்காமல் இருக்க அவனால் முடியவில்லை. தலிபான் தீவிரவாதிகளைத் தனியொருவனாக அவன் சமாளித்த விதம் அவனை பிரமிக்கவே வைத்தது. மைத்ரேயனுக்கு இவனை விட மேலான ஒரு பாதுகாவலன் கிடைக்க முடியாது என்றே அவனுக்குத் தோன்றியது.

லீ க்யாங் தீவிரவாதிகளை தன் முதல் எதிரிகள் பட்டியலிலேயே தான் வைத்திருந்தான். அழிக்க மட்டுமே முடிந்த கோழைகளை அவனால் எப்போதுமே ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அவர்கள் தங்களையே மாய்த்துக் கொள்ளத் துணிவதைக் கூட அவனால் வீரமாகக் கருத முடியவில்லை. சாவது வீரமல்ல. வாழ்வது தான் வீரம். யாரையும் அழிப்பது சாக்சம் அல்ல. நல்லதாக எதையாவது உருவாக்குவதும் பாதுகாப்பதும் தான் சாகசம். இது அவனது ஆணித்தரமான கருத்து. அதனாலேயே தீவிரவாதிகளை எந்த நாட்டுக்கு எதிராகவும் ஊக்குவிப்பதை அவன் ஆதரித்ததில்லை. அந்த நாட்டை முடித்து விட்டு இந்த நாட்டுக்கும் அந்தத் தீவிரவாதிகள் வரத்தான் செய்வார்கள் என்பது நிச்சயம் என்று அவன் நினைத்தான்..... அந்த அழிக்கும் சக்தியால் எதையும் அழிக்காமல் சும்மா இருக்கவே முடியாது..... வேறெதற்காவது கோபப்படும்... வீறுகொண்டு எழும்.... காரணம் நியாயமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை....

அவன் அறையில் ஒரு வித்தியாச தோற்றம் கொண்ட இளைஞன் எட்டிப் பார்த்தான். தலை முடியில் நான்கைந்து சாயங்களைப் பூசி இருந்தான். குறுந்தாடி வைத்திருந்தான். வெளிறி சற்று கிழிந்து போன நீல நிற ஜீன்ஸையும் “நான் வாழப் பிறந்தவன்என்ற வாசகம் பதித்த ஒரு பனியனையும் அவன் அணிந்திருந்தான். நவீன நாகரிகத்தின் பல மாறுதல்களை லீ க்யாங் அவனைப் பார்த்தே அறிந்திருக்கிறான். ஆனால் அவனிடம் மாறாத ஒன்று அவன் கணினி, இணையம் இரண்டின் பயன்பாட்டிலும் கொண்டிருந்த மேதைமை. அதில் ஏதாவது யாராவது கண்டுபிடித்தார்கள் என்றால் உடனடியாக அவன் கவனத்திற்கு வராமல் போகாது. அதை ஆழமாகப் படித்து முழுமையாகப் பயன்படுத்திப் பார்க்காமல் அவன் ஓய மாட்டான்.

மற்ற நேரங்களில் கேளிக்கைகளிலும், விதவிதமான பைக்குகளை வேகமாக ஓட்டுவதிலும் கழிக்கும் அவன் லீ க்யாங்கின் கவனத்திற்கு வந்த பின் அவனிடம் உளவுத்துறைக்கே தெரிவிக்காத சில ரகசியப் பணிகளை லீ க்யாங் ஒப்படைத்து வந்தான். அந்தப் பணிகளை அவன் மிகக் கச்சிதமாக முடித்தும் தந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக ரகசியத்தைக் காப்பதில் லீ க்யாங்குக்கே திருப்தி ஏற்படுத்தினான். பல முறை பல விதங்களில் பரிசோதித்து விட்டுத் தான் அவனை லீ க்யாங் பயன்படுத்த ஆரம்பித்தான். அவன் செய்து கொடுத்த வேலைகளுக்கு லீ க்யாங் தாராளமாக பணமும் தந்து வந்தான்.

அந்த இளைஞனின் நடை உடை பாவனை எல்லாமே அவன் அறிவுக்குச் சம்பந்தமில்லாமல் கோமாளித்தனமாக இருந்ததால் அவனை லீ க்யாங் கோமாளி என்றே அழைத்தான். அந்தப் பட்டப்பெயர் அவனை பாதித்ததில்லை. அதை விட மோசமான பட்டப்பெயர்களில் சிலர் அழைத்திருக்கிறார்கள். எதையும் லட்சியம் செய்யாத நவநாகரிக இளைஞனாக அவன் இருந்தான்.

“வா கோமாளிஎன்று லீ க்யாங் உள்ளே அழைத்தான்.

“உங்களால் என்னுடைய முக்கிய வேலை ஒன்றை முடிக்க முடியாமல் போய் விட்டதுஎன்று சொன்னபடியே வந்து எதிரே அமர்ந்தான்.  லீ க்யாங்கைப் பார்த்து பயக்காத வெகுசிலரில் அவன் ஒருவன்.

“நாட்டை விட வேறெதுவும் அவ்வளவு முக்கியமில்லை. உன்னைப் போன்ற இளைஞர்கள் கேளிக்கைகளில் காட்டும் ஈடுபாட்டில் கால் பாகத்தைத் தேசத்தின் மீது காண்பித்தால் நம் நாடு இன்னும் எவ்வளவோ உய்ர்ந்திருக்கும்....

“என் அப்பா மாதிரியே பேசுகிறீர்கள். அவர் வீடு என்கிறார். நீங்கள் நாடு என்கிறீர்கள். அது தான் வித்தியாசம். சரி எதற்காகக் கூப்பிட்டீர்கள். அதைச் சொல்லுங்கள்

லீ க்யாங் சொன்னான். அந்தக் கோப்பின் வரலாற்றுப் பக்கங்களையும் தந்தான். கோமாளி மேலோட்டமாகப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்து கடைசி பக்கத்தில் கடைசி பதிவை மட்டும் கவனமாகப் பார்த்தான். நான்கு நாட்களுக்கு முந்தைய தேதி மட்டுமே இருந்ததே தவிர யார் அதைத் திறந்து பார்த்தார்கள் என்ற தகவலோ எந்த நேரத்தில் இருந்து எந்த நேரம் வரை பார்த்தார்கள் என்ற தகவலோ இல்லை.

லீ க்யாங் சொன்னான். “கம்ப்யூட்டரில் பார்த்தால் கூடுதல் தெளிவு உனக்கு கிடைக்கும் என்றால் அதற்கும் ஏற்பாடு செய்கிறேன்

கோமாளி யோசிக்காமல் சொன்னான். “தேவையில்லை. உங்களுக்கு என்னால் என்ன ஆக வேண்டும் என்று சொல்லுங்கள்.

எனக்கு இதைத் திறந்து பார்த்தது எங்கள் ஆட்கள் தானா இல்லை வெளியாளா என்பது தெரிய வேண்டும். அடுத்ததாக யார் இதைச் செய்தார்கள் என்று கண்டுபிடிப்பதெப்படி என்று தெரிய வேண்டும். சென்ற வருடம் தான் எங்கள் பாதுகாப்பு முறையை புதிய தொழில் நுட்பத்தை வைத்துப் புதுப்பித்தோம்.....

விஞ்ஞான வளர்ச்சியில் போன வாரம் என்பதே பழையது தான்.... ஆனால் இதை வெளியாள் திறந்து பார்க்க முடிகிற அளவில் நாம் பலவீனமாக இல்லை. இதைத் திறந்து பார்க்கும் அதிகாரமுள்ள உங்கள் உளவுத்துறை ஆள் யாரோ தான் இதைத் திறந்து பார்த்திருக்கிறார். ஆனால் அதை அவர் பார்த்தது தெரிய வேண்டாம் என்று நினைத்து அழித்திருக்கிறார். அதற்கு அவருக்கு யாராவது நிபுணர்கள் உதவி இருக்கலாம். வந்த சுவட்டை அழித்து விடுவது இப்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் கஷ்டமானதல்ல்.....
  
வெளியாள்தங்கள் இரகசியக்கோப்பை திறந்திருக்க முடியாது என்பது ஒரு பக்கத்தில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், அதிகாரம் இருந்து உபயோகித்த நபர் அந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைத்து அதை அழித்திருப்பது இன்னொரு பக்கத்தில் பேராபத்தை லீ க்யாங்குக்கு உணர்த்தியது. கிடைத்த தகவலைத் தவறாகப் பயன்படுத்துகிறவன் மட்டுமே அதை மறைக்க முயற்சிக்க முடியும்.....

“அந்த ஆள் யார் என்று தெரிந்து கொள்ள என்ன வழி?

“இப்போதைக்கு வழி இல்லை. எதிர்காலத்தில் அப்படி அந்த ஆள் இன்னொரு விஷயத்தில் முயற்சி செய்தால் வேண்டுமானால் கையும் களவுமாகப் பிடிக்கலாம்.

“எப்படி?

“யாராவது அப்படி தகவல்களை அழிக்க முயன்றால் அது வெற்றிகரமாக முடிந்தாலும், உடனேயே அந்தப் பயனாளி குறித்த தகவல் உங்களுக்கும், உங்கள் தலைவருக்கும் வந்து சேரும்படி புதிய “ப்ரோகிராமைரகசியமாய் இணைக்கலாம்.....

“அப்படி ஒரு “ப்ரோகிராமைஉருவாக்க உனக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

“வெளிப்பார்வைக்கு எந்த மாறுதலும் தெரியாதபடி இணைக்கிற ப்ரோகிராமை உருவாக்க எனக்கு குறைந்த பட்சம் 15 நாள் வேண்டும்

“இன்றே அந்த வேலையை ஆரம்பி


சான் சர்வ ஜாக்கிரதையாக ஹலோ சொன்னார். அந்த எண் அவருக்குத் தெரிந்த எண் அல்ல.

அக்‌ஷய் ஒரு கணம் தாமதித்து விட்டுச் சொன்னான். “ஐயா தாங்கள் கேட்ட பூஜைப் பொருளைக் கொண்டு வந்திருக்கிறேன்....

ஆசான் அவன் குரலை அறிவார். ஆனால் அவன் மிக ஜாக்கிரதையாக அந்தத் தகவலை சங்கேத மொழியில் சொல்லக் காரணம் அவன் பக்கம் இருந்த சூழ்நிலையா, அவர் பக்கம் அவன் சந்தேகிக்கும் சூழ்நிலையா என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

“மகிழ்ச்சி அன்பரேஅவர் மனம் உண்மையாகவே நிறைந்து போயிருந்தது.

“தங்களிடம் எப்படிச் சேர்ப்பது?

அவரை ஆட்கள் வெளியே கண்காணிப்பதை இரண்டு நாளாக அவர் அறிவார். எச்சரிக்கையுடன் சொன்னார். “தாங்களே தங்களிடம் வைத்திருங்கள் அன்பரே., நானே நேரில் வந்து பெற்றுக் கொள்கிறேன்

அவன் மறுபடி சற்று தாமதித்து விட்டு “சரி ஐயாஎன்றான். இணைப்பு துண்டிக்கப்பட்டது.


லீ க்யாங்குக்கு இந்தப் பேச்சின் நகல் உடனடியாகப் போய் சேர்ந்தது. அமானுஷ்யனின் சரித்திரத்தைப் படித்திருந்த அவனுக்கு அவன் மைத்ரேயனைக் கொண்டு போய் சேர்த்தது இப்போது பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. யாரும் யோசித்துப் பார்க்காத ஏதோ ஒன்றை அவன் செய்திருக்க வெண்டும்.... அவன் அதை எப்படி சாதித்திருப்பான் என்கிற தகவல் தெரிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே லீ க்யாங்கிடம் பெரிதாகத் தங்கியது.

லீ க்யாங் அமைதியாக ஆணையிட்டான். “ஆசானை உங்கள் பார்வையில் இருந்து ஒரு கணமும் நழுவ விடாதீர்கள். அந்த ஆளைக் குறைத்து எடைபோட்டு விடாதீர்கள். அடுத்ததாக ஆசானிற்கு வந்த போன் எண் உங்களிடம் இருக்கிறதல்லவா? அந்த போன் எண்ணில் இருந்து வேறெந்த எண்களுக்கு எல்லாம் அழைப்பு போகிறது என்பதைக் கண்காணித்து உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள்

(தொடரும்)
என்.கணேசன்
  


7 comments:

  1. Superb Narration Anna. . .
    Thanks for sharing. . .

    ReplyDelete
  2. "அழிக்கும் சக்தியால் எதையும் அழிக்காமல் சும்மா இருக்கவே முடியாது...

    வேறெதற்காவது கோபப்படும்...
    வீறுகொண்டு எழும்....

    காரணம் நியாயமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை...."

    மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா. . .

    ReplyDelete
  3. லக்‌ஷ்மிFebruary 18, 2016 at 7:57 PM

    அருமையான கதைக்களத்தை சிறப்பாக நகர்த்துகிறீர்கள் கணேசன். தீவிரவாதிகள் பற்றிய கருத்துகள். கூர்மை.

    ReplyDelete
  4. கனகசுப்புரத்தினம்February 18, 2016 at 8:22 PM

    லீ க்யாங் கேரக்டர் சூப்பர். நல்லவனா கெட்டவனா என்று சொல்ல முடியாதபடி கலந்தே காண்பிப்பது கவர்கிறது.

    ReplyDelete
  5. சீனா நம் நாட்டில் மாவோயிச தீவிரவாதத்தை ஆதரித்தே வந்திருக்கிறது. அந்நாட்டின் தலைமை உளவு அதிகாரி தீவிரவாதத்தை ஆதரிக்காதவனாக காண் பித்திருப்பது சற்று முரணாக இருந்தாலும் இது கற்பனை என்பதாலும் அவனுடைய சொந்தக் கருத்தாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  6. Fantastic concept & Excellent writing style. .

    ReplyDelete