சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 4, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 84


க்‌ஷய் மின்னல் வேகத்தில் இயங்கினான். தன் தோள்பையில் வைத்திருந்த கடைசி புல்கட்டை வேகமாக வேலிப்பக்கம் வீசினான். அந்த வேலியைத் தாண்டிப் போய் புல்கட்டு விழுந்தது. பெரிய ஆடு பெரும் தாவலுடன் அந்தப் புல்கட்டை நோக்கி ஓடியது. பின்னாலேயே குட்டியும் ஓடியது.

மைத்ரேயனைப் பார்த்து ரகசிய சமிக்ஞை செய்த அக்‌ஷய் நேபாள மொழியில் “பிடி... பிடி.... ஆட்டைப் பிடி” என்று கத்திக் கொண்டே ஓட மைத்ரேயனும் அவன் பின்னால் ஓடினான். திடீரென்று எதிர்பாராமல் வந்த சத்தமும் களேபரமும் அந்த துப்பாக்கி வீரனை அதிரச் செய்து விட்டது.

துப்பாக்கியை அக்‌ஷயை நோக்கிக் குறிபார்த்தபடியே அந்த துப்பாக்கி வீரன் ஆணையிட்டான். ”அப்படியே நில். கைகளை மேலே உயர்த்து. நகர்ந்தால் சுட்டு விடுவேன்....”

அக்‌ஷய் கைகளை மேலே உயர்த்தி திரும்பியபடி நேபாள மொழியில் சொன்னான். “என் ஆட்டைப் பிடியுங்கள்.... ஆட்டைப் பிடியுங்கள்.....”

தன்னிடமே ஆட்டைப் பிடிக்கச் சொல்லும் அந்தப் படிப்பறிவில்லா ஆட்டிடையனை எரிச்சலோடு பார்த்துக் கொண்டே துப்பாக்கி வீரன் நெருங்கினான். அவர்களிடமிருந்து குமட்டும் ஒரு நெடி வந்தது. குளித்து எத்தனை நாள் ஆயிற்றோ?

அக்‌ஷய் ஆடுகள் வேலி நோக்கி ஓடுவதை முகத்தில் சகல கவலையையும் தேக்கிப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மைத்ரேயனை நோக்கிக் கத்தினான். “டேய் நீயாவது ஓடிப் போய்ப் பிடி. ஆடு வேலி தாண்டி விடப்போகின்றது”

மைத்ரேயன் இரண்டடி எடுத்து வைத்திருப்பான். துப்பாக்கி வீரன் அவனிடமும் ஆணையிட்டான். “நில் சிறுவனே. நகர்ந்தால் உன்னையும் சுட்டு விடுவேன்...”

மைத்ரேயன் அப்படியே நின்று விட்டான். அக்‌ஷய் அந்தத் துப்பாக்கி வீரனைக் கோபித்துக் கொண்டான். “நீங்களும் எங்கள் ஆட்டைப் பிடிக்க மாட்டேன்கிறீர்கள். எங்களையும் பிடிக்க விட மாட்டேன் என்கிறீர்கள். என்ன ஆள் நீங்கள்?”

படிப்பறிவில்லாத அறிவிலியால் மட்டுமே இப்படிப் படைவீரனிடம் ஆட்டைப் பிடிக்கச் சொல்லிக் கோபித்துக் கொள்ளவும் முடியும். அந்த வீரனுக்கு ஒரே நேரத்தில் கோபமும், சிரிப்பும் வந்தன.

அந்த நேரத்தில் பெரிய ஆடு பெரும் தாவலில் வேலியைத் தாண்டியது. தாண்டிப் போய் அந்த புல்கட்டைச் சாப்பிட ஆரம்பித்தது. குட்டியும் அதே போல் தாவித் தாயைச் சேர்ந்து கொண்டது. உள்ளே நுழையும் போது அவை இரண்டையும் கஷ்டப்பட்டு உள்ளே எடுத்து வைத்ததை அக்‌ஷய் நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

துப்பாக்கி வீரன் அக்‌ஷயிடம் கடுமையான குரலில் கேட்டான். “இது தடை செய்யப்பட்ட பகுதி. எப்படி நீங்கள் இங்கு வந்தீர்கள்?”

“எங்கள் கிராமத்தில் இருந்து ஆடு மேய்த்துக் கொண்டு வந்தோம். திடீரென்று அந்தப் பெரிய ஆடு இந்தப்பக்கமாய் ஓடி வர ஆரம்பித்து விட்டது. அதைப் பிடிக்க பின்னால் ஓடி வந்தோம்.....”

“எது உங்கள் கிராமம்?”

எல்லையில் இருக்கும் கிராமத்தின் பெயரை அக்‌ஷய் சரியாகச் சொன்னான். அவன் பேசிய நேபாள மொழியும் அந்த எல்லைப் பகுதி மக்களின் சொல்லாடலிலேயே இருந்தது. அந்த வீரன் யோசித்தான். அவனுக்கு சில மணி நேரங்கள் முன்பு தான் இந்த எல்லை வழியாகவும் திபெத்தில் இருந்து ஊடுருவல் நிகழலாம் என்கிற சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, நுழைபவர்களைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் எல்லையில் இருந்து உள்ளே வரவில்லை. உள்ளே இருந்து வந்து எல்லை வேலியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.....

அவன் யோசிப்பது அக்‌ஷய்க்கு ஆபத்தை உணர்த்தியது. “கொஞ்சம் அனுமதித்தால் என் ஆடுகளைப் பிடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்... “

“வேலி தாண்டியா?” படைவீரன் அந்த முட்டாளை திகைப்புடன் பார்த்து விட்டுக் கடுமையான குரலில் சொன்னான். ”உன்னைப் பார்த்தவுடனே சுட்டுத் தள்ளி இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிக்கு வந்தது மட்டுமல்லாமல் எல்லை தாண்டிப் போகிறேன் என்று வேறு சொல்கிறாயா?”

“சரி நான் போகவில்லை. நீங்களே ஆடுகளைப் பிடித்துக் கொடுங்கள்” என்று அக்‌ஷய் சொல்ல அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

“நாட்டைக் காப்பாற்ற நிற்கிற வீரனிடம் ஆட்டைப் பிடிக்கச் சொல்கிறாயா அல்பனே” என்று அவன் கோபத்துடன் கேட்டான். அவன் பார்வை அவர்கள் இருவரின் தோள்களில் இருந்த பைகள் மீது தங்கியது. “ஆடு மேய்க்கிறவர்கள் ஏன் பைகளை சுமந்து வந்திருக்கிறீர்கள்...”

அக்‌ஷய் உடனடியாகச் சொன்னான். “நாங்கள் ஆடுகளை பக்கத்து கிராமங்களில் விற்கக் கிளம்பினோம். அதனால் தான் பைகள் எடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கிறோம்....”

“பின் ஏன் இந்தப்பக்கம் வந்தீர்கள்”

“இப்போதெல்லாம் ஆடுகளையும் எடை போட்டு தான் வாங்குகிறார்கள். இந்த செழிப்பான மலைப்பகுதியில் நன்றாக மேய்ந்தால் ஆடுகளின் எடை கூடும், கிடைக்கின்ற பணமும் அதிகமாக கிடைக்கும் என்கிற ஆசையில் தான் மலையின் கீழ்பகுதிக்கு வந்தோம். ஆனால் அந்த ஆடுகள் திடீரென்று இந்தப்பக்கம் ஓடி வர ஆரம்பித்து விட்டன....”

எல்லை வீரன் முகத்தில் இருந்து அதை அவன் நம்பினானா இல்லையா என்பது தெரியவில்லை.

அக்‌ஷய் பரிதாபமாய் அந்த ஆடுகளை ஒருமுறை பார்த்து விட்டு மைத்ரேயனைக் கோபத்துடன் பார்த்துச் சொன்னான். “எல்லாவற்றுக்கும் உன் அலட்சியம் தான் காரணம். மந்தபுத்திக்காரனே. அந்தப் பெரிய ஆட்டை உன் பொறுப்பில் தானே விட்டிருந்தேன்.”

மைத்ரேயன் இப்போது கச்சிதமாக மந்தபுத்திப் பார்வையுடனேயே நின்றிருந்தான். படைவீரன் அவனை ஒருவித வாத்சல்யோடு பார்த்தான். ஆனால் கூடவே சின்ன சந்தேகத்தோடே அவர்களைப் பார்ப்பதை அக்‌ஷய் கவனித்தான். இவனை அதிகம் யோசிக்க விடுவது ஆபத்து என்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. வேறு விதமாக அவனை சிந்திக்க விடாமல் ஏதாவது செய்தாக வேண்டும்....

அக்‌ஷய் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மைத்ரேயனை ஓங்கி ஒரு அறை அறைந்தான். அவனது அறையால் மைத்ரேயன் இரண்டடி பின்னால் போனான். அவன் கன்னம் சிவந்து விட்டது. அக்‌ஷயின் கைவிரல்களின் அச்சு அந்தக் கன்னத்தில் நன்றாகத் தெரிந்தது.

அந்தப் படைவீரனுக்கு மைத்ரேயன் வயதில் ஒரு மகன் இருந்தான். அவனும் இந்த சிறுவனைப் போலவே மூளை வளர்ச்சி சற்று குன்றியவன் தான். எதுவும் உடனடியாக அவனுக்கு விளங்காது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அந்தச் சிறுவன் பரிதாபமாக நின்றது அவன் மனதை உருக்கியே விட்டது. மீண்டும் கையை ஓங்கிய அக்‌ஷயை அவன் முறைத்துப் பார்த்தபடி சொன்னான். “மூர்க்கனே. விளையாட்டுப் பையனை இந்த அதிகாலை நேரத்தில் ஆடு மேய்க்க வைத்து விட்டு இப்படிக் காட்டுத்தனமாகவும் அடிக்கவும் செய்கிறாயே. இன்னும் அவனை அடித்தால் உன்னை சுட்டே விடுவேன்...”

மைத்ரேயனை முகம் பார்க்கிற தைரியம் கூட அக்‌ஷய்க்கு வரவில்லை. அவன் வேலி தாண்டி புல்கட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆடுகளையே கவலையோடு பார்த்தான். அந்தச் சிறுவனை விட ஆடுகளையே முக்கியமாய் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் முட்டாள் கிராமவாசியை இகழ்ச்சியோடு பார்த்த படைவீரன் கேட்டான். “நீங்கள் இந்தப் பக்கம் வந்ததை வழியில் எந்தக் காவல் வீரரும் பார்க்கவில்லையா?”

“அவர்கள் எங்களைப் பார்த்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆடுகள் பின்னாலேயே வந்து கொண்டிருந்த நான் யாரையும் பார்க்கவில்லை.....”

அவன் அப்போதும் அந்த ஆடுகளையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த படைவீரன் எரிச்சலோடு சொன்னான். ”நீ ஆடுகளைத் தவிர யாரையும் பார்க்க மாட்டாய் முட்டாளே. மற்ற காவல் வீரர்கள் உங்களைப் பார்த்திருந்தால் சுட்டிருந்தாலும் சுட்டிருப்பார்கள். எங்கள். எல்லை வீரர்களின் வேலை மாற்ற நேரம் இது, இந்த இடைவெளி நேரத்தில் நீ வந்ததால் தப்பித்தாய்...”

அந்த கிராமத்தான் காதில் அவன் சொன்னது விழுந்த மாதிரியே தெரியவில்லை. இவன் இப்போது திரும்பப் போகையில் மற்ற வீரர்கள் பார்த்தால் எதிரிகள் என்று நினைத்து சுட்டாலும் சுட்டு விடுவார்கள்.... அந்த காட்டான் சாவதில் அந்த எல்லை வீரனுக்கு எள் அளவும் வருத்தமில்லை. ஆனால் அவன் மகனைப் போன்ற மந்தமான அந்த சிறுவன் பலியாவதை மனம் ஏற்கவில்லை. முதலிலேயே கன்னம் வீங்க பரிதாபமாய் நிற்கும் சிறுவனை இப்போது பார்க்கவே பாவமாய் இருக்கிறது. திடீர் என்று அந்த வீரனுக்கு ஒரு ஆலோசனை தோன்றியது. வீரர்களை இந்த வேலை மாற்ற நேரத்தில் எல்லையின் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்த இராணுவ வாகனம் இன்னும் போயிருக்க வாய்ப்பில்லை. அந்த டிரைவர் வாகனத்தில் இருந்து இறங்கி புகைபிடித்துக் கொண்டு இருந்ததை சற்று முன் தான் அவன் பார்த்தான்.... அந்த டிரைவர் அவனுடைய நண்பனும் கூட....

உடனடியாக தன் அலைபேசி மூலமாக அவனைத் தொடர்பு கொண்டான். ”கிளம்பி விட்டாயா? .... நம் எல்லைக் கிராமத்து ஆட்டிடையர்கள் இரண்டு பேர் ஆடுகளோடு இந்த வேலி வரை வந்து விட்டார்கள்..... அவர்களை நம் காவல் எல்லை தாண்டி விட்டு விடுகிறாயா..... இல்லையில்லை.... ஆடுகள் வேலி தாண்டிப் போய் விட்டன..... ஆட்களைக் கொண்டு போய் விட்டால் போதும்.... சரி வா”

இரண்டே நிமிடங்களில் இராணுவ வாகனம் வந்தது. அந்த எல்லைப்படைவீரன் அக்‌ஷயையும், மைத்ரேயனையும் அந்த வாகனத்தில் ஏறச் சொன்னான். அக்‌ஷய் “ஆடு....” என்று பரிதாபமாகச் சொன்னான்.

துப்பாக்கியை அவன் முன் நீட்டியபடி அந்த வீரன் சொன்னான். “உடனடியாக வண்டி ஏறுகிறாயா இல்லை., உன் கால் பாதத்தில் சுட்டு உன்னை உள்ளே தூக்கிப் போடட்டுமா?”

அக்‌ஷய் பயந்து போனது போல் நடித்துக் கொண்டே வண்டி ஏறினான். மைத்ரேயன் வண்டி ஏறும் முன் அவனிடம் தாழ்ந்த குரலில் நேபாள மொழியில் அந்த வீரன் கேட்டான். ”யார் இந்த ஆள்”

அக்‌ஷய் உடனே ஆபத்தை உணர்ந்தான். நேபாள மொழியில் அந்த வீரன் என்ன கேட்கிறான் என்பதாவது மைத்ரேயனுக்குத் தெரியுமா?



லீ க்யாங் அலை பேசி இசைத்தது. எடுத்துப் பேசிய லீ க்யாங் கேட்டான். “என்ன?”

“அமானுஷ்யன் என்ற பெயரில் இந்தியாவில் ஒரு சுவாரசியமானவன் இருந்திருக்கிறான். அவன் அரசாங்க ஒற்றனாக இல்லா விட்டாலும் அரசாங்கத்திற்கு தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க பல வருடங்களுக்கு முன் உதவியாக இருந்திருக்கிறான். அந்தத் தகவல்கள் நம் நாட்டின் காஷ்மீர் தரப்பு ரகசிய ஃபைல்களில் அதிரகசியப் பிரிவில் இருக்கின்றன.......”

லீ க்யாங் பரபரப்புடன் சொன்னான். “உடனடியாக அவனைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அனுப்பு”

“இதோ அனுப்புகிறேன்.... அப்புறம் இன்னொரு தகவல்”

“என்ன?”

“நான்கு நாட்களுக்கு முன்பு தான் அந்த ரகசிய ஃபைலை வேறு யாரோ பார்வையிட்டிருக்கிறார்கள். ஆனால் பார்வையிட்டவர் தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன”

லீ க்யாங் அதிர்ந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்

12 comments:

  1. அர்ஜுன்February 4, 2016 at 6:14 PM

    அக்‌ஷய் அட்டகாசம். பரபரப்பு தொடர்கிறது.

    ReplyDelete
  2. Crossing border is awesome.......

    ReplyDelete
  3. Wonderful.. I'm very proud of you sir

    ReplyDelete
  4. ஆ.ஸ்ரீகாந்த்February 4, 2016 at 7:07 PM

    ப்ரமாதம் கணேஷன் சார். நாவலில் ஒன்றி விட வைத்து விட்டீர்கள். நான் என் நண்பர்கள் பலரிடம் அமானுஷ்யன் நாவலை படித்து விட்டு இந்த நாவலைப் படிக்கச் சொல்லி வருகிறேன். எல்லாரும் உங்கள் விசிறிகளாகி வருகிறார்கள். தொடருங்கள். நாங்களும் தொடர்கிறோம்.

    ReplyDelete
  5. Fantastic. super. brilliant. simply great.

    ReplyDelete
  6. அண்ணா. .
    சூப்பர்ப். .

    ReplyDelete
  7. எங்களையும் நேபாள எல்லைக்கே அழைத்து சென்று விட்டீர்கள். நேரில் பார்ப்பது போல், கண் முன்னே காட்சிகள் விரிகின்றது.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. வாராவாரம் திக் திக் என்றே காத்திருக்கின்றோம் கணேசன் சார்! அடுடுடுத்த்த்த வியாழன் எப்பவரும் என்று இப்போதிருந்தே எண்ண ஆரம்பித்துவிட்டோம்!

    ReplyDelete
  9. மாரா, லீ க்யாங்கின் ட்ரான்ஸ்பாமரிலேயே கை வைத்து விட்டானா?

    ReplyDelete
  10. I never traveled to Nepal... But by reading this chapter... I feld I was in Nepal before....

    ReplyDelete