சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 14, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 81


க்‌ஷய்க்கு மைத்ரேயன் புதிராய் பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியது. மைத்ரேயனின் வலது பாதத்தில் பொன்னிறத்தில் ஒளிர்ந்து சுழன்றதை சம்யே மடாலயத்தில் கண்கூடாகப் பார்த்தவன் அவன். அவன் புத்தரின் அவதாரமாகவே இருக்க வேண்டும் என்பதை அக்‌ஷயின் உள்மனம் இப்போது நம்ப ஆரம்பித்திருந்தது. அப்படிப்பட்ட மைத்ரேயன் ஒரு சாதாரண சிறுவன் போல உங்கள் மகனுடன் விளையாட வேண்டும் என்று சொல்வது பொருத்தமாகத் தோன்றவில்லை.... ‘இந்தச் சிறுவன் ஏன் திடீர் திடீர் என்று நேர் எதிர்மாறாக மாறுகிறான். ஏன் முரணாக நடந்து கொள்கிறான்’ என்று நினைத்தவனாய் அக்‌ஷய் மைத்ரேயனையே கூர்ந்து பார்த்தான்.

“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று மைத்ரேயன் புன்னகையுடன் கேட்டான்.

அக்‌ஷய் புன்னகைத்தபடி சொன்னான். “உன்னை ஆசானும், தலாய் லாமாவும் புத்தரின் அவதாரம் என்கிறார்கள். அப்படிப்பட்ட நீ என் மகனுடன் விளையாட வேண்டும் என்கிறாய். முரண்பாடாக இருக்கிறதே”


“என்னை யார் என்னவாக நினைக்கிறார்கள் என்பது எனக்கு அனாவசியம். என் வயதுப் பையன் விளையாட நினைப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது...”

அக்‌ஷய்க்கு அதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் சொல்வது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும் தான். ஆனால் அவதார புருஷர்கள், தெய்வீகப்பிறவிகள்.....! இது போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளைக் கடந்தவர்கள் அல்லவா அவர்கள்?

அக்‌ஷயின் மனதில் ஓடிய எண்ணங்களுக்குப் பதில் சொல்வது போல் மைத்ரேயன் புன்னகை மாறாமல் சொன்னான். “இந்த உலகத்திற்குள் நுழையும் போது எதையும் எடுத்து வர நமக்கு அனுமதியில்லை. இங்கிருந்து போகும் போது எதையும் எடுத்துச் செல்லவும் கூட நமக்கு அனுமதியில்லை. இப்படி எல்லாக்கணக்குமே பூஜ்ஜியமாகத் தான் முடியும் என்கிற போது இங்கு இருக்கிற காலத்தில் எல்லாவற்றையுமே விளையாட்டாய் எடுத்துக் கொள்வதல்லவா புத்திசாலித்தனம்”

அக்‌ஷய் அசந்து போனான். அவன் மனம் மைத்ரேயன் சொன்னதை அசைபோட்டது. இவ்வளவு ஆழமாகப் போக முடிந்தவன் சமயங்களில் மந்தமான சிறுவனைப் போன்ற முகமூடியைப் போட்டுக் கொள்வது தன்னை மற்றவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ளத் தான் போலிருக்கிறது.... அக்‌ஷய்க்கு அவனை சீண்டத் தோன்றியது. மெல்லக் கேட்டான். “நம் உயிருக்கே எந்த நேரமும் ஆபத்து இப்போது காத்திருக்கிறதே. இதை எப்படி விளையாட்டாய் எடுத்துக் கொள்வது?”

“வாழ்க்கை விளையாட்டு எந்த நேரமும் முடியலாம் என்று நன்றாகத் தெரிந்திருக்கும் போது, அதற்கு நாம் எப்போதுமே தயாராகவும் இருக்கிற போது கவலைப்பட என்ன இருக்கிறது. நீங்களே என்னைக் காப்பாற்ற ஒத்துக் கொண்டது அந்த மனநிலையுடன் தானே....”

”அது எப்படி உனக்குத் தெரியும்?” அக்‌ஷய் உடனடியாகக் கேட்டான்.

“யூகம் தான்” என்று மைத்ரேயன் அமைதியாகச் சொன்ன போது வாய் விட்டுச் சிரித்த அக்‌ஷய் அவனைச் செல்லமாய் அடிக்க கை ஓங்க, மைத்ரேயன் சற்று பின்னுக்கு நகர்ந்து புன்னகைத்தான்.

அக்‌ஷய் மறுபடி பைனாகுலரில் தன் கண்காணிப்பைத் தொடர ஆரம்பிக்க, மைத்ரேயனும் உறங்க ஆரம்பித்தான். குளிர் கடுமையாக மாற ஆரம்பித்தைப் பொருட்படுத்தாமல் அக்‌ஷய் எதிர் மலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்திரத்தனமான துல்லியத்துடன் நடப்பதை கவனித்தான். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இரவு நேரத்தில் நேபாள எல்லை வீரர்கள், அக்‌ஷய் பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து போனார்கள். முதல் முறை வந்தவன் மறுபடி நான்காவது முறை வந்தான். இரண்டாவது முறை வந்தவன் ஐந்தாவது முறை வந்தான். இப்படி மூன்று ஆட்கள் மாறி மாறி வந்தார்கள். இந்தக் கண்காணிப்பு இரவு பத்து மணி வரை இருபது நிமிட இடைவெளி- நான்கு வீரர்கள் என்கிற அளவில் இருந்தது. இந்த அளவீடுகள் சில சமயங்களில் அதிக பட்சமாய் இரண்டு நிமிட அளவுக்குள் வித்தியாசப்பட்டன.  பெரும்பாலான சமயங்களில் எதிர் மலை வீரர்களின் கவனம் இந்த மலையின் உச்சியிலேயே இருந்தன. அங்கே நடமாடிக் கொண்டிருந்த நீலக்கரடிகளை அவர்கள் சுவாரசியத்துடன் கவனித்தது தெரிந்தது. அவர்கள் இந்த மலையில் ஆட்களை எதிர்பார்க்கவும் இல்லை. ஒருவேளை ஆட்கள் இருந்தால் கூட அவர்கள் இந்த மலையைத் தாண்டி அந்த மலைக்கு வர வாய்ப்பிருப்பதாய் அந்த வீரர்கள் நினைக்கவில்லை என்பது அவர்கள் கண்காணிக்கும் விதத்திலேயே தெரிந்தது....

சுமார் நான்கு மணிக்கு மைத்ரேயன் விழித்துக் கொண்டான். எழுந்து அமர்ந்தவன் அந்தக் கடுங்குளிரில் நடுங்கியபடியே அக்‌ஷயிடம் சொன்னான். “இனி நீங்கள் சிறிது தூங்குங்கள். நான் பார்க்கிறேன்....”

அக்‌ஷய் தயங்கினான். மைத்ரேயன் நிறுத்தி நிதானமாகச் சொன்னான். “என்ன பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும், எதையெல்லாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள். நான் கவனமாகவே கண்காணிப்பேன்....” சொல்லி விட்டு பைனாகுலருக்காக கையை நீட்டினான்.

அக்‌ஷய்க்கு உறக்கம் தேவையாக இருந்தது. இன்னொரு தடித்த கம்பளியை மைத்ரேயனுக்கு போர்த்தி விட்டு, பைனாகுலரை அவனிடம் தந்த அக்‌ஷய் எப்படிக் கண்காணிக்க வேண்டும் என்பதை விளக்கினான். கடைசியில் சொன்னான். “ஏதாவது ஆபத்து என்று தோன்றினால் வாய் விட்டு சத்தமாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. என்னை நீ லேசாகத் தொட்டால் போதும். நான் எழுந்து கொள்வேன்.....”

மைத்ரேயன் புன்னகையுடன் தலையசைத்தான். மைத்ரேயன் இரவு நேரக் கண்காணிப்பைத் தொடர அக்‌ஷய் உறங்க ஆரம்பித்தான்.



ந்த நேரத்தில் தான் லீ க்யாங் விழித்தான். அவன் உறங்கி மூன்று மணி நேரம் தான் ஆகி இருந்தது. 
இந்த மைத்ரேயன் விஷயம் சுமுகமாகக் கையாளப்பட்டு முடியும் வரை நிம்மதியான முழு உறக்கம் முடியாத காரியம் என்றே அவனுக்கு ஆகி இருந்தது. மைத்ரேயன் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த ஒற்றர்கள், அதிகாரிகளின் அலைபேசி அழைப்புகள் வரும் போதெல்லாம் மைத்ரேயனும், அவனது பாதுகாவலனும் பிடிபட்டார்கள் என்ற செய்தியை அவன் எதிர்பார்த்தான். அப்படி எதுவும் நடந்து விடவில்லை. சந்தேகத்தின் பேரில் சிக்கிம் அருகே நாதுலா கணவாயிலும், நேபாள நட்பு நெடுஞ்சாலையிலும் பிடிபட்டிருந்த இரண்டிரண்டு நபர்களும் தந்தை-மகன் யாத்திரீகர்கள் ஆக இருந்தது பின்பு தான் தெரிந்தது.....

லீ க்யாங் மறுபடி திபெத் இந்திய நேபாள எல்லைப் பகுதிகளை ஆராய்ந்தான். கடைசியாக அவன் பார்வை வாங் சாவொ சொன்ன சைத்தான் மலையில் நிலைத்தது. இந்த மலையில் இது வரை அவர்கள் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தவில்லை. மலை அமைப்பும், நீலக்கரடிகளுமே அவர்கள் வேலையைச் செய்வதால் அதற்கான அவசியமும் இது வரை வந்ததில்லை...

ஆனாலும் எந்த அஜாக்கிரதையும் எதிலும் இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வால் உந்தப்பட்டவனாய் லீ க்யாங் நேபாள உளவுத்துறைத் தலைவனை உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

நல்ல உறக்கத்தில் இருந்த நேபாள உளவுத்துறைத் தலைவன் எரிச்சலோடு அலைபேசியைப் பார்த்தான். லீ க்யாங்கின் அலைபேசி எண் என்பதைக் கண்டவன் மனதில் அங்கலாய்த்தான். ‘இந்த ஆளுக்குத் தூக்கமே கிடையாதா? நேபாளம் போன்ற மிகச்சிறிய நாட்டின் உளவுத்துறை தலைவனான அவன் அண்டையில் இருக்கும் பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவின் உளவுத்துறைகளிடம் பல விஷயங்களுக்கு உதவி கேட்க வேண்டி இருப்பதால் அந்தப் பக்கங்களில் இருந்து வரும் அபூர்வமான ஓரிரு உதவிகளை உடனடியாகச் செய்து அவர்கள் நல்லபிப்பிராயத்தில் இருக்க வேண்டி வருகிறது. அதனால் பலவந்தமாக குரலில் இனிமையையும் மரியாதையையும் வரவழைத்துக் கொண்டு பேசினான். “ஹலோ

லீ க்யாங் திபெத்தில் இருக்கும் அந்த சைத்தான் மலையைத் தாண்டி யார் நேபாள எல்லைக்குள் நுழைந்தாலும் அவர்களைக் கைது செய்து பிடித்து வைக்கும்படியும், தன் அனுமதி இல்லாமல் அவர்களை விடுவிக்கக் கூடாதென்றும் சொன்னான். நுழையும் ஆட்கள் குறித்த தோற்றக்குறிப்புகள் கூட அவன் எடுத்துரைக்கவில்லை. எவன் அந்த வழியாக நுழைந்தாலும் அவன் மைத்ரேயன் சம்பந்தப்பட்டவனாகத் தான் இருக்க வேண்டும் என்று லீ க்யாங் நினைத்தான்.

சைத்தான் மலையைத் தாண்டி ஒருவன் நேபாள எல்லைக்கு வந்தால் என்றதற்கே நேபாள உளவுத்துறைத் தலைவன் வாய் விட்டுச் சிரித்தான். “என் இத்தனை கால அனுபவத்தில் அந்த மலையைத் தாண்டி அபூர்வமாய் ஓரிரு நீலக்கரடிகளும், ஆடுகளும் வந்திருக்கின்றனவே தவிர மனிதர்கள் யாரும் வந்ததில்லை.... எங்கள் எல்லை வீரர்கள் அங்கு நிற்பதே மற்ற பகுதிகளில் இருந்து மலை அடிவாரம் வந்து எங்கள் எல்லைக்குள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும், நீலக்கரடிகள் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான்.

“தெரியும். ஆனாலும் கூட எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது தானே?

அது சரி தான். ஆனால் அந்த மலை தாண்டி யாரும் அமானுஷ்யர்களாக இருந்தால் மட்டுமே வரமுடியும்....

ஆங்கிலத்தில் பேசிய நேபாள உளவுத்துறைத் தலைவன் அமானுஷ்யர்கள் என்ற சொல்லை மட்டும் அப்படியே சொன்னது லீ க்யாங்கின் மூளையில் பொறிதட்ட வைத்தது. என்ன வார்த்தை சொன்னீர்கள்?

“அமானுஷ்யர்கள்

“அப்படி என்றால் என்ன அர்த்தம்?

“மனித சக்திக்கு மீறிய சக்தி உடையவர்கள் என்று அர்த்தம்.... அது சம்ஸ்கிருதச் சொல்....

“சரி நான் சொன்னது நினைவிருக்கட்டும். அந்த எல்லைப்பகுதியில் கூட அலட்சியம் வேண்டாம்.என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்ட லீ க்யாங் சிந்தனையில் ஆழ்ந்தான். வித்தியாசமான பெயருடைய ஒருவன் உதவியைத் தான் தலாய்லாமா இந்தியாவில் கேட்டிருந்தார். அந்த வித்தியாசமான பெயர் அமானுஷ்யர் என்பதாக இருக்கலாமோ?

லீ க்யாங் உடனடியாக இன்னொரு எண்ணைத் தொடர்பு கொண்டான்....

(தொடரும்)

என்.கணேசன்

வாசக அன்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

10 comments:

  1. Going Excellently sir. Pongal Greetings.

    ReplyDelete
  2. கனகசுப்புரத்தினம்.January 14, 2016 at 6:12 PM

    தங்கள் நீ நான் தாமிரபரணி நாவல் இன்று காலை தான் முடித்தேன். மனதில் நின்ற அற்புதமான கதையும், கதாபாத்திரங்களும். காவ்யாவின் தந்தை கதாபாத்திரம் போல் சின்ன பாத்திரம் கூட மிக யதார்த்தம். பரமன், அமானுஷ்யன் இரண்டும் மாஸ்டர்பீஸ் என்றே சொல்ல வேண்டும். புத்தம் சரணமும் அருமையாக போகிறது. லீக்யாங் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி.

    ReplyDelete
  3. நன்றி அண்ணா. . .
    இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கதை மிகவும் மந்த கதியில் போகிறது.

    ReplyDelete
  5. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. அக்‌ஷய் எப்படி தப்பிப்பான் என்று தெரிந்து கொள்ளும் வரை இருப்பு கொள்ள மாட்டேன்கிறது.

    ReplyDelete
  7. பொங்கல் வாழ்த்துக்கள்.

    Excellent narrative. Can't wait to read the next episode.

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அண்ணா நல்ல கதை கோர்ப்பு வாழ்த்துக்கள் ஒரு சின்ன திருத்தம் தவறாக இருந்தால் மண்ணிக்கவும் நான்காவது பத்தியில் "என் வயது பையனுடன் " என்றல்லவா வரவேண்டும்.
    /குமார்

    ReplyDelete