சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 25, 2016

சமாதி நிலையும் சதாசிவ பிரம்மேந்திரரும்!

48. மகாசக்தி மனிதர்கள்

மாதி நிலை என்பது யோக நிலைகளில் உச்ச நிலை. இறையுணர்வோடு இரண்டறக் கலந்து இவ்வுலகைப் பூரணமாக மறந்து லயிக்கக்கூடிய நிலை. அது சாதாரண மனிதர்களுக்கு எட்ட முடியாத உன்னத நிலை. உடலாகவே தன்னைப் பாவித்து வாழும் அடிமட்ட நிலையிலிருந்து, அந்த உடலையே மறந்து தன் ஆத்மாவின் இயல்பு நிலையான இறையுணர்வோடு சிறிது காலமாகவாவது கலந்து இருக்க ஒரு யோகியால் மட்டும் முடியும். அப்படி சமாதி நிலையில் மிக நீண்ட காலங்களில் இருந்த ஒரு மகத்தான யோகி தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவ பிரம்மேந்திரர் அல்லது சதாசிவப் பிரம்மம்.

கி.பி.1680 ஆம் ஆண்டு திருவிசைநல்லூரில் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த மோக்‌ஷம் சோமசுந்தர அவதானி-பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர் சிவராம கிருஷ்ணன். அவர் பிறவியில் இருந்தே மெய்ஞானத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருந்த அவர் இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாமல் இருந்தார். தாயார் மகனுக்குத் திருமணம் செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்.

திருமண வாழ்வைத் துவங்குவதற்கு முன் ஒரு நாள் மாமியார் வீட்டுக்குச் சென்ற சிவராம கிருஷ்ணனுக்குக் கடுமையான பசி. சமையலறைக்கு வெளியே நின்று கொண்டு ”எனக்குப் பசிக்கிறது. உணவு பரிமாறுகிறீர்களா?” என்று கேட்டார்.

மாமியார் “கொஞ்சம் பொறு” என்றார்.

”எனக்குக் கடுமையாய் பசிக்கிறது. தயாரானதைத் தாருங்கள்” என்றார் சிவராமகிருஷ்ணன். “நிறைய காக்க வேண்டி இருக்காது. அங்கேயே இரு. உள்ளே வராதே” என்றார் மாமியார்.

சாதாரண வார்த்தைகள் தான். ஆனால் துறவுக்குத் தயாராக இருந்த மனநிலையில் அவருக்கு அந்த வார்த்தைகள் திடீரென்று வேறு அர்த்தம் தந்தன. ”சம்சாரத்திற்குள் நுழையாதே. அங்கேயே இரு. நீ அடைய வேண்டிய நிலைக்கு இனி நிறைய காக்க வேண்டி இராது” என்ற உபதேசம் வந்ததாக அவர் உள்ளுணர்வில் உணர்ந்தார். அங்கிருந்து அந்தக் கணமே வேகமாக வெளியேறிய சிவராம கிருஷ்ணன் பின் இல்வாழ்க்கைக்குத் திரும்பவில்லை.

துறவியாக நதிக்கரைகளிலும், காடுகளிலும் சுற்றிக் கொண்டிருந்த சிவராம கிருஷணன் அக்காலத்தில் இறைவனையே சிந்தித்து பல ராகங்களில் பல கீர்த்தனைகள் பாடினார். அந்தப் பாடல்கள் பலவும் இன்றும் கர்னாடக சங்கீதத்தில் பாடப்பட்டு வருகின்றன. அவரது பாடல்களில் பக்தி ரசமும், தத்துவ ஞானக் கருத்துகளும் நிறைந்திருக்கும். உதாரணத்திற்கு ’சிவமானசீக பூஜா’ என்ற கீர்த்தனையில் பாடுகிறார். “ஹே மகாதேவனே. எங்கெங்கும் நிறைந்திருக்கும் உன்னை நான் எங்கென்று தொழுவேன். உன் கரங்களும், பாதங்களும் உலகமெல்லாம் விரிந்திருக்கையில் நான் எப்படி உனக்குப் பாத பூஜை செய்வேன். ஆகாயமே உனக்கு ஆடையாக இருக்கையில் நான் எப்படி உனக்கு ஆடை அணிவிப்பேன். நீயே ஒரு ஒப்பில்லாத நடனக்கலைஞனாக இருக்கையில் நான் எப்படி உன் முன்னால் ஆடுவேன். என்னால் உன்னை மானசீகமாக மனதில் இருத்தி அங்கேயே பூஜிக்க மட்டுமே அல்லவா முடியும்!” மானச சஞ்சரரே என்ற பிரபல கீர்த்தனையும் அவரால் பாடப்பட்டது தான்.

இப்படி இறைவனைப் பாடித் திரிந்து கொண்டிருந்த சிவராம கிருஷ்ணனுக்கு காஞ்சி காமகோடி பீடத்தின் பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் குருவாக வாய்த்தார். அவர் சிவராம கிருஷ்ணனுக்கு “சதாசிவ பிரம்மேந்திரர்” என்ற பெயரைச் சூட்டினார். அவரிடம் கற்றுத் தேர்ந்த சதாசிவ பிரம்மேந்திரர் பல அத்வைத நூல்களை இயற்றினார். பிரம்ம சூத்திரம், பதஞ்சலியின் யோக சூத்திரங்கள், பகவத் கீதை ஆகியவற்றிற்கு அருமையான உரைகளும் எழுதினார்.

எல்லா ஞானமும் பெற்று தர்க்கங்களிலும் வல்லுனராக இருந்த அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. பலர் அவரிடம் தோற்றுப் போய் அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அவர் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டார்கள். குரு சதாசிவ பிரம்மேந்திரரை அழைத்து “பேசாமல் இருக்க மாட்டாயா?” என்று கடிந்து கொண்டார். அந்த வார்த்தையையே தனக்கு உபதேசிக்கப்பட்ட மகா மந்திரமாக எடுத்துக் கொண்ட சதாசிவ பிரம்மேந்திரர் அன்றிலிருந்து மௌன விரதம் இருக்க ஆரம்பித்தார். இறக்கும் வரை ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

வாய்ப்பேச்சு குறைய ஆரம்பிக்கும் போது மனதின் உள்ளே ஓடும் சிந்தனைகள் ஆழப்படுகின்றன. அவை உயர்ந்த சிந்தனைகளாக இருக்கும் போது வாழ்க்கையே மாற ஆரம்பிக்கின்றது. சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கையும் அப்படி மாற ஆரம்பித்தது. ஆத்ம ஞானத்திலேயே மூழ்கி இருந்த அவர் நீண்ட காலம் சமாதி நிலைகளில் லயிக்க ஆரம்பித்தார். அவருக்கு அதன் மூலம் பல உயர்ந்த யோக சக்திகள் கிடைக்க ஆரம்பித்தன. சில சம்பவங்களைப் பார்ப்போம்.

ஒரு நாள் காவேரிக்கரையில் அவர் நடந்து கொண்டிருந்த போது சில சிறுவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவர்களுக்கு மதுரையில் அந்த சமயத்தில் நடந்து கொண்டிருந்த திருவிழாவுக்குப் போக ஆசையாக இருந்தது. சதாசிவ பிரம்மேந்திரரைப் பார்த்த சிறுவர்கள் “நீங்கள் மதுரைக்கா போய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்களையும் அழைத்துப் போவீர்களா” என்று மன்றாடிக் கேட்டார்கள். அடுத்த கணம் அந்தச் சிறுவர்கள் மதுரையில் திருவிழாவின் நடுவில் இருந்தார்கள். அந்தத் திருவிழாவைக் கண்டு களித்து விளையாடி அவர்கள் திருப்தி அடைந்த பின் அடுத்த கணம் பழைய இடத்திற்கே வந்து சேர்ந்தார்கள். சிறுவர்கள் தங்கள் அனுபவத்தை பிரமிப்புடன் வீட்டாரிடம் சொல்ல காவிரிக்கரை கிராமங்களில் அவர் பற்றிய பேச்சாகவே இருந்தது. நூறு மைல் தொலைவில் இருந்த மதுரைக்கு அவர் யோகசக்தியாலேயே அந்தச் சிறுவர்களை அழைத்துச் சென்றது அனைவருக்கும் பிரமிப்பாக இருந்தது இயல்பேயல்லவா?

அந்தக் கதையைக் கேட்ட ஒரு அதிகப்பிரசங்கிக்கு அதில் நம்பிக்கை இருக்கவில்லை. இது என்ன கட்டுக்கதை என்று நினைத்த அவன் சதாசிவ பிரம்மேந்திரரைப் பரிசோதித்து அவர் பொய்யர் என்று நிரூபிக்க எண்ணினான். அவரிடம் போய் தன்னையும் மதுரையில் நடக்கும் திருவிழாவிற்கு அழைத்துப் போக முடியுமா என்று கேட்டான். அடுத்த கணம் அவன் தொலைவிலிருக்கும் வேறெதோ ஊரில் இருந்தான். அது மதுரையும் அல்ல. சதாசிவ பிரம்மேந்திரர் அவர் கண்ணுக்குக் காணப்படவேயில்லை. அங்கிருந்து அவன் மிகுந்த சிரமத்துடன் நடந்தே தன் ஊருக்குத் திரும்பி வர வேண்டி இருந்தது.

ஒரு நாள் அவர் காவிரிக்கரையில் தியானத்தில் அமர்ந்தவர் சீக்கிரமாகவே சமாதி நிலையை அடைந்தார். புற உலகை மறந்தார். திடீரென்று பெருமழை பெய்ய ஆரம்பித்தது. வெள்ளம் ஏற்படும் அபாய நிலையும் தெரிந்ததால் தங்கள் வீடுகளுக்கு விரைய ஆரம்பித்த மக்கள் சதாசிவ பிரம்மேந்திரரையும் அங்கிருந்து போய் விடச் சொல்லிக் கத்தினார்கள். ஆனால் அவர்கள் கத்தியதும், பெருமழை பெய்ய ஆரம்பித்ததும், அவர் காதுகளை எட்டவில்லை. வெள்ளம் வந்து அவர் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளம் வடிந்த பின் அவரைக் காணவில்லை. அவர் இறந்து விட்டார் என்று எண்ணிய ஊர் மக்கள் வருத்தம் அடைந்தனர்.

சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஆற்று மணலை வண்டியில் அள்ளிச் செல்ல ஒரு குடியானவன் வந்தான். அவன் மண்வெட்டியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கையில் அவன் மணலிலும், மண்வெட்டியிலும் ரத்தக் கறை தெரியவே அவன் பயந்து போனான். அவன் மிகவும் கவனமாகக் கையால் மணலைத் தள்ளிப் பார்த்த போது சதாசிவ பிரம்மேந்திரரின் தலை தெரிந்தது. அதிர்ந்து போன அவன் ஓடிப்போய் ஊர்ப் பெரியவர்களை அழைத்து வந்தான். எல்லோரும் மண்ணை அப்புறப்படுத்தி சதாசிவ பிரம்மேந்திரரின் உடலை வெளியே எடுத்தார்கள். அப்போதும் அவர் உயிர்த்துடிப்பு இருந்தது அவர்களுக்குப் பேரதிசயமாக இருந்தது.


சதாசிவ பிரம்மேந்திரர் கண்விழித்துப் பார்த்தார். குடியானவன் அவர் காலில் விழுந்து அவரைக் காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டான். ஆனால் அவர் கோபமோ, வருத்தமோ இல்லாமல் உறக்கத்தில் விழித்துக் கொண்டு கிளம்புபவர் போல எழுந்து போய் விட்டார். இதுவல்லவா யோக சக்தி, இதுவல்லவா அலட்டலோ, பகட்டோ இல்லாத மெய்ஞான நிலை?


(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி: 17.07.2015


4 comments:

  1. Feeling blessed to read about this great yogi.

    ReplyDelete
  2. No words ganeshan sir..superb...

    ReplyDelete
  3. What a beautiful story. Wonderful Sir!

    According to me, whatever be the story when it comes to the hands of N Ganesan Sir it brings a live experience to the readers.

    ReplyDelete
  4. still in his samathi at nerur any one can feel the his spiritual power by means of normal/ simple meditation.

    Seshan

    ReplyDelete